Thursday, April 24, 2008

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்...



இந்த வார அரசு பதில்கள்....


--------------------------------------------


நயன்தாராவின் முகத்தில் ஒரு சோகம் இருப்பதைக் கவனித்தீர்களா?
‘டாம்ஸல் இன் டிஸ்ட்ரஸ்’ என்பார்கள். அவர் அந்த வகை., சோனியா அகர்வால் மாதிரி.


--------------------------------------------

பழைய போட்டோல அந்த சோகம் இருந்த மாதிரி இல்லையே!!!


நன்றி: ரெடிப், குமுதம்

Wednesday, April 23, 2008

திருவள்ளுவர் கதை கலைஞருக்கு தெரியுமா?

போன வாரம் கன்னியாகுமரி போயிருந்தேன். விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை எல்லாம் பார்த்தேன். அங்கு பணிபுரியும் ஒரு ஊழியர் (அங்கு பணிபுரிபவர்கள் எல்லாம் அரசு ஊழியர்கள்தானே???) திருவள்ளுவர், திருக்குறள் சம்பந்தமான புத்தகங்களை விற்றுகொண்டிருந்தார். சரி, நம்ம தெய்வ புலவரை பத்தி தெரிஞ்சிகலாமுன்னு ஒரு சின்ன புத்தகத்தை வாங்கினேன். அதுல போட்டுயிருந்த கதை (!) இதுதான்.

திருவள்ளுவர் வழங்கிய திருக்குறள் தமிழர்களால் தமிழ் வேதம் என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக (300 AD - 600 AD) வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

அவர் சென்னை மயிலாபூரில் பிறந்தார். வள்ளுவர் என்பது அவரின் முன்னோர்களின் சாதி பெயராகும். அவரின் உண்மையான பெயர் தெரியாதலால், அவர் இப்பெயரிலே அழைக்கப்பட்டார்.

அவரின் அப்பா ஒரு பிராமணர். பெயர் பகவான். அவரின் அம்மா ஆதி, ஒரு கீழ் சாதி பெண்மணி. வள்ளுவர் பிறந்தவுடன் பெற்றோர்களை பிரிந்து வள்ளுவ சாதியை சார்ந்த மர்கசகாயன் என்பவரால் வளர்க்கப்பட்டார். அவருடைய மகள் வாசுகி வள்ளுவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். வாசுகியே, தனது அன்பு, பதிபக்தியால் வள்ளுவருக்கு அடையாளம் கிடைக்க காரணமாயிருந்தார். வள்ளுவர் திருமணத்திற்கு முன்பு வாசுகியை சோதிக்க விரும்பினார். வாசுகிக்கு சிறிது மண்ணை கொடுத்து சமைக்க சொன்னார். வாசுகி சமைத்த உடன் அந்த மண் சாதமானது. இதனால் வள்ளுவர் மகிழ்ச்சியடைந்து வாசுகியை திருமணம் செய்தார். அவர்களது மணவாழ்வு மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணம். வாசுகி, வள்ளுவரின் உத்தரவுக்கும் தேவைகளுக்கும் எந்தவிதமான கேள்விகளும் கேட்காமல் முணுமுணுப்பு இல்லாமல் சேவையாற்றினார். அப்படிப்பட்ட பெண் இறந்தபொழுது வள்ளுவர் இவ்வாறு இரங்கல் பாடலை இயற்றினார்.

"ஒ! எனதருமை அன்பே! அருமையாக சமைத்து, கணவனின் கட்டளைகளுக்கு எவ்வித மறுப்பின்றி கீழ்படிந்து, எப்பொழுதும் கணவன் உறங்கிய பின்பே உறங்கி, எழும் முன்பே எழுவாயே, நீயில்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்?"

அவ்வையாரே, வள்ளுவரை தமிழ் சங்கத்தை சேர்ந்த புலவர்களுடன் அறிமுகப்படுத்தி வைத்தார். முதலில், அவர்கள் வள்ளுவரை தங்களுடன் சேர்த்து கொள்ள தயங்கினர். அக்காலத்தில் சங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றியே பாடல்களை, செய்யுள்களை அங்கீகரித்துவந்தனர். அதனால் திருக்குறளை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திருக்குறளை சோதிக்க விரும்பினார்கள். அதனால் அவர்கள் வள்ளுவரை சங்க பலகையில் அமர சொன்னார்கள். சங்க பலகை என்பது மரத்திலானது. இலக்கியங்களை, புலவர்களை சோதித்து, அங்கீகரிக்க உதவுவது. வள்ளுவர் அமைதியாக திருக்குறளை அப்பலகையில் மற்ற புலவர்களுடன் வைத்தார். அப்பொழுது சங்க பலகை, அமர்ந்திருந்த புலவர்களை அருகிலிருந்த ஏரியில் தூக்கி எறிந்தது. திருக்குறள் எவ்வித பாதிப்பில்லாமல் இருந்தது. அதன் பின்பு திருக்குறள் அனைவராலும் அங்கீகரிக்க பட்டு புகழ் அடைந்தது.

கதை எப்படி?

இந்த கதை திருவள்ளுவர் புகழ் பாடி, வள்ளுவர் கோட்டம் அமைத்து, குமரி முனையில் வானுயர சிலை அமைக்க பாடுபட்ட நம்ம பகுத்தறிவு முதல்வருக்கு தெரியுமா? ஏதும் விளக்கம் சொல்லியிருக்காரா?

திருவள்ளுவரை பற்றிய வரலாறு தெரியவில்லை என்றால் விட்டுடலாமே? ஏன் இந்த ஸ்க்ரின் ப்ளே?

சரி, சொன்ன விஷயம் ஒழுக்கத்தை கற்று தருது... அதனாலே பகுத்தறிவு பார்க்க வேண்டாம் என்றால், ராமாயணத்துல மட்டும் ஏன் பகுத்தறிவு புகுந்து விளையாடுது?

Tuesday, April 8, 2008

யாரடி நீ மோகினி...

ஏற்கனவே வெங்கடேஷ், திரிஷா நடிப்பில் செல்வராகவன் தெலுங்கில் இயக்கி இருந்த ‘ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலே வேருலே’ (பெண்களின் வார்த்தைகளுக்கு அர்த்தம் வேறு) படத்தை தமிழில் செல்வராகவனின் நண்பரும், அவரிடம் உதவியாளராக இருந்த ஜவஹர் இயக்கியிருக்கிறார். (ரீமேக் பண்ணியிருக்கார்).

படம் முழுக்க செல்வராகவனின் டச்'க்கள் இருந்தாலும் அவர் மத்த படங்களில் ஏற்படுத்துகிற பாதிப்பு இதில் இல்லை. ஒருவேளை தெலுங்கு ஆடியன்சுகளுக்காக எடுத்ததினால் இருக்குமோ?

ரகுவரனின் பையன் தனுஷ். ஆரம்பத்துல வேல தேடி அலையுறாரு. அப்பா திட்டுறாரு. ரெண்டு பெரும் ஜாலியா சண்டை போடுறாங்க. இது தெலுங்குல வெங்கடேஷ் ஒரு சீனியர் ஆர்டிஸ்ட்'ங்கற தால ரொம்ப காலம் வேல தேடுற மாதிரி வரும். அது கொஞ்சம் வித்தியாசமா தெரியும். இங்க தமிழுல தனுஷ் எல்லா படத்துலயும் (திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன்) இத தான் செய்யுறாரு.

அப்புறம் இவருக்கு நயன்தாரா (படத்துல வெயிட் இவுங்கதான்) தயவுல ஒரு சாப்ட்வர் கம்பெனியில வேல கெடைக்குது. அங்க நயன்தாரா ப்ராஜக்ட் மேனஜராம். அங்க இவருக்கு மேடம் மேல லவ்ஸ் வருது. சண்டை வருது. அப்பாவை இழக்குராரு. நயன்தாரா தனுஷோட பிரண்ட (அலைபாயுதே கார்த்திக்) லவ் பண்றது தெரிய வருது. கொஞ்சம் ரீல் ஹீரோ பீலிங்கோட அலையுறாரு. அப்புறம் மூணு பேரும் (தனுஷ், நயன்தாரா, கார்த்திக்) சேர்ந்து சொந்த ஊர் போறாங்க. அங்க உள்ள சூழ்நிலையால் இவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை கலகலப்பாய் சொல்லி ஒரு மாதிரி சொதப்பி முடிக்கிறார்கள்.

படத்துல ரகுவரன் இறந்து போற மாதிரி ஒரு சீன் வருது. நிஜமாகவே நமக்கு கண்ணுல கண்ணீர் வருது. அவரும், தனுஷும் போடும் சண்டைகள் படத்தின் முன்பாதியை கலகலப்பா வைக்குது. நயன்தாராவின் தங்கை தனுஷை காதலிக்கும் காட்சிகள் பின் பாதியை சோர்வில்லாமல் ஓட்டுகிறது. ஒரு பாடலில் தனுஷும் நயனும் நடனமாடும் போதும் இறுதியில் ஒரு காட்சியிலும் "மின்சார கனவு" பிரபுதேவாவும் காஜோலும் நினைவுக்கு வருகிறார்கள். பெருசா யாரோட பெர்பாமன்சும் இல்ல.

தொப்புள் இல்லாத பொண்ண பார்த்துருக்கீங்களா? இதுல ஒரு பாட்டுல ரகசியான்னு நினைக்கிறேன், அந்த பொண்ணு பாட்டு கடைசில ஒரு நிமிஷம் இடுப்ப ஆட்டுது. அப்ப அந்த பொண்ணோட தொப்புள கிராபிக்ஸ்ல அழிச்சு காட்டுறாங்க. தொப்புள் காட்டுறது ஆபாசமா இருக்கும்னோ? எப்படியெல்லாம் யோசிக்குறாங்க? எதுக்கெல்லாம் கிராபிக்ஸ் யூஸ் பண்ணுறாங்க?

படத்தோட பெரிய மைனஸ் கிளைமாக்ஸ். என்ன சொல்லவாரங்கன்னே புரியல்ல. செகண்ட் ஷோ போனதுனால எனக்குத்தான் புரியலயோ என்னமோ?

பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. செல்வராகவன்- யுவன் காம்பினேஷனின் கடைசி பட பாடல்கள். ஏதோ சண்டையாமுல? சீக்கிரம் சேர்ந்தா சரி. வழக்கம் போல ஒரு ரீமிக்ஸ் இருக்கு. அதுக்கு இசை இமான்னு நினைக்கிறேன். டைட்டில நன்றி சொல்றாங்க.

மொத்தத்தில படம் பார்க்கலாம். (அட்லீஸ் நயனோட தங்கையா வர்ற அந்த சின்ன பொண்ணோட நடிப்புக்காக...). ஆனா சீக்கிரம் கிளம்பி வந்துரனும்.

Friday, April 4, 2008

சேப்பாக்கத்தில் ஒரு கிறுக்கு கும்பல்

இன்னிக்கி சேப்பாக்கத்தில் ஒரு கோஷ்டி உக்கார்ந்துட்டு உண்ணாவிரதம் பண்ணுறாங்க. அங்க எதுக்குயா ஒரு மைக்? மைக் கிடைச்ச போதுமே... உடனே வாய்க்கு வந்தது எல்லாம் பேச ஆரம்பிச்சுடாங்க. அத உலகமெல்லாம் ஒளிபரப்ப இருக்கவே இருக்கு சன் டிவி.

என்ன பேசுறோம்னு தெரியாம பேசிட்டு இருக்கானுங்க. வன்முறைய எதிர்க்க உண்ணாவிரதம்னு வன்முறைய தூண்டுற மாதிரி பேசிட்டு இருக்காங்க. எந்த விதமான தணிக்கையும் இல்லாம அத லைவ ஒளிபரப்பிட்டு இருக்காங்க.

சுந்தர் சி ... இனிக்க இனிக்க காமெடி படம் எடுக்குற டைரக்டர்... ஆனா பேச்சுல என்னா காரம். அவர் என்ன சொல்ராருனா "நல்ல படம் எடுக்க வக்கு இல்லாதவன் நம்ம படத்த தடை பண்ணுறான்"ன்னு கன்னட காரன பார்த்து சொல்லுறாரு. வேறொரு இனத்தவனோட தகுதி பத்தி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கு?

பேசுற எல்லோரும் அடிப்போம் பிடிப்போம் ங்கற மாதிரிதான் பேசுறாங்க. ஒரு பழுத்த அரசியல்வாதியின் பக்குவமான பேச்சுக்கே ஊர் பத்தி எரியும் போது, இவனுங்க பேச்சா வன்முறைய அடக்க போகுது?

ஒன்னு, உடனே அந்த மைக்க புடுங்கனும். இல்ல அமைதியா உண்ணாவிரதம் மட்டும் பண்ணிட்டு போகணும். சொந்த ஊர் ரசிகர்கள் மத்தில போலிஸ் பாதுகாப்புல இருக்குற இவனுங்க தங்கள் உயிரை கொடுத்தாவது கர்நாடக தமிழர்கள் உயிரை காப்பாத்த போறாங்களாம்...

Wednesday, April 2, 2008

ஒகேனக்கல் பிரச்சினையின் காரணம்

இன்று ஒகேனக்கல் பிரச்சினையானதற்கு எடியுரப்பாவும் கன்னட அமைப்புகளின் போராட்டங்கள் தான் மூல காரணம் என்றாலும், அதை ஊதி பெரிய பிரச்சினையாக்குவதற்கு நம் நாட்டு மீடியாக்கள் பெரும் பாடு பட்டு வருகிறது. இந்த பிரச்சினை மட்டுமல்ல, நம் நாட்டின் பல பிரச்சினைகளுக்கு மீடியாக்களே முக்கிய காரணம்.

இவனுகளுக்கு இருபத்தி நாலு மணி நேரமும் பரபரப்பான நியுஸ் தேவை. அதுக்கு கிடைக்கிற சின்ன சின்ன செய்திகள எல்லாம் சேர்த்து, கோர்த்து பரபரப்பு தோரணம் ஆக்கிடுறாங்க.

ஒருத்தன் கருணாநிதி ஆவேசம், சுளுரைன்னு சொல்றான். அப்படி என்ன அவர் சொன்னார்ன்னு பார்த்தா அவர் ஒண்ணும் அப்படி ஆவேசமா எதுவும் சொல்லல. பஸ்ஸை எரித்தாலும் எலும்பை உடைத்தாலும் திட்டத்தை நிறைவேற்றுவோம் ன்னு சொல்லி இருக்காரு. அவர் ஏதோ பஸ்ஸை எரிப்போம், எலும்பை உடைப்போம்னு சொன்ன ரேஞ்சுக்கு, கர்நாடகாவுல போராட்டம் பண்ண ஆரம்பிச்சுடானுங்க. இதுல கர்நாடகாவை சேர்ந்த கட்சி தலைவர்கள் "என்ன இருந்தாலும் கலைஞர் மாதிரியான ஒரு மூத்த அரசியல் தலைவர் இப்படி சொல்ல கூடாது"ன்னு அறிக்கை விடுறாங்க. அப்படி என்னய்யா அவர் சொல்லிட்டார்?

அடுத்த நாள் பேப்பருல கர்நாடகாவுல கலவரம், தமிழ் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அடித்து உடைக்க பட்டதுன்னு நியுஸ். கன்னட அமைப்பு தலைவர், "எங்க எதிர்ப்ப தெரிவிக்க தியேட்டர் நிர்வாகிகள் கிட்ட படங்களை நிறுத்த சொன்னோம். அவர்களும் சம்மதித்தார்கள்."ன்னு சொல்றாரு. இதுல எது உண்மை? (ஆமாம், எதிர்ப்ப தெரிவிக்க தமிழ் திரைப்படங்களுக்கு தடை, தமிழ் சேனல்களுக்கு தடை ன்னு போறிங்களே, எங்கள என்ன அவ்ளோ சினிமா பைத்தியங்கள் ன்னு நினைச்சிடிங்கள? இப்படி கேவல படுத்துனதுக்கே ஒரு போராட்டம் பண்ணலாம் :-)).

இத பார்த்துட்டு தமிழ்நாட்டுல உங்களுக்கு தான் போராட்டம் பண்ண தெரியுமா? நாங்களும் பண்ணுவோம்லன்னு பஸ் சிறை பிடிப்பு, பஸ் நிர்வாகி அறையில் அடைப்பு, திரையுலகினர் உண்ணாவிரதம் ன்னு ஆரம்பிச்சுடாங்க. அதுக்கு உடனே கர்நாடகாவுல பேரணி, பந்த் பதிலுக்கு கிளம்பிடாங்க.

என்ன தான் மீடியாக்கள் செய்திகளை உடனுக்குடன் வழங்குனாலும் அது ஆக்கபூர்வமாகவும் இருக்கணும். வெறும் பரபரப்புக்காகவும் விற்பனைக்காகவும் மட்டுமே செய்திகளை வெளியிட்டு கொண்டு இருந்தால் அதனால் எந்த உபயோகமமும் இல்லை. அதனால் சமூகத்துக்கு தொல்லைகள் மட்டுமே.