Sunday, August 11, 2013

தலைவா

இயக்குனர் விஜய் படங்களில் ஒரு கிளாஸ் இருக்கும். அந்த க்ளாஸை பெருமளவு கொண்டுவருவது, நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு. ஜி.வி.பிரகாஷும் நல்லா மியூசிக் பண்ணியிருப்பார். அஜயன் பாலா போன்றவர்கள் பங்களிப்பு இருக்கும். வசனங்களும் கொஞ்சமா இருக்க, காட்சிபூர்வமா நிறைய கன்வே பண்ணுவார், இயக்குனர் விஜய். இதுக்கு மேலே, இவரு இன்ஸ்பயர் (!) ஆகுற படங்கள், நல்ல படங்களா இருக்கும். அதுக்காகவே, இவருடைய படங்களைப் பார்க்க ஒரு ஆர்வம் இருக்கும்.



இந்த படமும் அப்படிப்பட்ட ஒரு ஆர்வத்தில் இருக்க, இந்த படம் இங்கு ரிலீஸ் ஆகியிருப்பது, எங்கள் வீட்டில் இருந்து 15 மைல் தொலைவில் உள்ள திரையரங்கில். வியாழக்கிழமையே ரிலீஸ் ஆனாலும், 15 டாலர் என்பதால், ஒருநாள் கழித்து பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன். வெள்ளிக்கிழமை மழை. அதனால், இன்று தான் போக முடிந்தது. இதற்குள் பாசிடிவ், நெகடிவ் விமர்சனங்கள் கவனத்திற்கு வந்து சேர்ந்தன.

போகும் வழியில், ஒரு இந்திய மளிகை கடைக்கு, முறுக்கு, சிப்ஸ், சமோசா வாங்கி வர சென்றேன். (என்ன தான், அமெரிக்காவில் படம் பார்த்தாலும், பார்க்குறது தமிழ் படமில்லையா? நம்மூர் பீலிங் வேண்டாம்?) சமோசா கொள்ளை விலை சொன்னதால், அதை மட்டும் வாங்கவில்லை. அந்த கடையில் ஒரு தமிழ் பையன் வேலை பார்க்கிறான். பார்த்து ரொம்ப நாள் ஆனதால், கொஞ்ச நேரம் பேசினோம். தலைவா போகிறேன் என்றதும் ‘வேண்டாம்’ண்ணா’ என்று எச்சரித்தான். ’கிளம்பியாச்சு, ஒரு டைம் பாஸ்’ என்று சொல்லிக்கிளம்பினேன்.

இன்று காலையில் ஜீன்ஸ் படத்து ‘அதிசயம்’ பாடலைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஒன்று தோன்றியது. அந்த படம் வந்த புதிதில், அந்த பாடலின் ஒளிப்பதிவு நன்றாகத்தான் இருந்தது. ஆனால், இன்று ஏனோ அப்படி தோன்றவில்லை. அசோக்குமார் பெரிய ஒளிப்பதிவாளர் தான். இருந்தாலும், இன்றைய ஒளிப்பதிவாளர்கள் வைக்கிற கோணங்களும், வண்ணங்களும், கண்ணில் ஒத்திக்கொள்வது போல் இருக்கும். குறிப்பாக, நீரவ்ஷாவை சொல்லலாம். ஒவ்வொரு ஷாட்டும் அருமையான புகைப்படத்தரத்தில் இருக்கும். அதற்கு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியையும் காரணமாக சொல்லலாம். என்னவோ, எனக்கு உலக அதிசயங்களை காட்டும் அந்த ஜீன்ஸ் பாடல், இப்போது முழுமையாக ஒளிப்பதிவு தரத்தில் இல்லை என்று தோன்றியது. உடனே, நீரவ்ஷாவின் ஒளிப்பதிவை பெரிய திரையில் காண வேண்டும் என்ற ஆசையும் தோன்றியது. ’தலைவா’ - நான் காண இதுவும் ஒரு காரணம். (விஜய் படம் பார்க்குறதுக்கு என்னலாம் காரணம் சொல்ல வேண்டி இருக்குது??!!!)

இயக்குனர் விஜய், இப்ப இன்ஸ்பயர் ஆகியிருப்பது, நாயகன், தேவர் மகன், ஹிந்தி ராம் கோபால் வர்மாவின் டான் படங்களைப் பார்த்து. அதற்காக, முதலிலேயே மணிரத்னம், ராம் கோபால் வர்மா, ப்ரியதர்ஷன் போன்றோர்களுக்கு நன்றி சொல்லிவிடுகிறார். ரொம்ப நல்லவராம்!!!

மும்பைக்கே போகாமல், தமிழில் வந்த மும்பையில் எடுக்கப்பட்ட படங்களை மட்டும் பார்த்தால், என்ன தோன்றும்? மும்பை போலீஸ் வேஸ்ட். எதுவென்றாலும், அங்குள்ள தாதாவிடம் சென்று தான் முறையிட வேண்டும். நல்லவர்கள் நல்ல டானிடமும். கெட்டவர்கள் கெட்ட டானிடமும். மாதமொருமுறை மத கலவரம் நடக்கும். தெருக்கொரு தீவிரவாதி இருப்பான். இந்த படமும் அப்படிப்பட்ட தோற்றத்தைதான் அளிக்கிறது. புதிதாக, மொழி சார்ந்த பிரச்சினைகள் வேறு சேர்ந்திருக்கிறது.

விஜய் அரசியலுக்கு வந்தால், இப்பட கிளிப்பிங்ஸ், சாங்ஸ் ரொம்பவே உதவும். இருவர் பட பாணி, மக்கள் ஆதரவு கரகோஷ காட்சிகள் இருக்கிறது. எனக்கென்னவோ, விஜய் சீரியஸாக சமூக வசனங்கள் பேசுவது, எடுபடுவதாக தெரியவில்லை. ‘வாங்கண்ணா வணக்கங்கணா’ பாடலில் மட்டும், அதற்கு முந்தைய, பிந்தைய பாடி லேங்குவேஜ் போய், வழக்கமான ஸ்டைலில் ஆடுகிறார்.

அமலா பாலை மாடர்ன் ட்ரெஸ்ஸில் பார்த்தால், ஏதோவொரு கவுண்டமணியிடம் சேர்ந்து நடித்த படத்தில், லலிதாகுமாரி டீச்சர் வேஷம் போட்டுக்கொண்டு பள்ளிக்கு செல்வாரே, அது தான் நினைவுக்கு வருகிறது. சும்மா சொல்லக்கூடாது. அம்மணிக்கு வெயிட்டான, ட்விஸ்ட்டான வேஷம் தான். கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் காம்பையர் சுரேஷ்க்கு முதல் பாதியில் பொருத்தமாக ஹோட்டல் முதலாளி வேஷம் கொடுத்திருக்கிறார்கள். அதைப்போல், டிவியில் ரியாலிட்டி டான்ஸ் போட்டியில் ஆடியவர்களுக்கெல்லாம், பொருத்தமாக டான்ஸர்ஸ் ரோல் கொடுத்திருக்கிறார்கள். ஏன், ஹீரோ விஜய்க்கு கூட முதல் பாதி ரோல் தான் பொருத்தமாக இருக்கிறது!!!

சத்யராஜ் மேக்கப் நன்றாக இருந்தது. அவர் சொல்லி தொடங்கிய ‘கத்தியை தொட்ட’ டயலாக்கை ஹீரோ விஜய் முதல் காமெடியன் சந்தானம் வரை நாலைந்து முறை சொல்லி ஏதோ தத்துவம் போல் ஆக்கப்பார்த்திருக்கிறார்கள்.

ஏற்கனவே பார்த்த கதையை, விஜய் அண்ட் டீம், அவர்கள் பாணியில் சொல்லலாம் என்று பார்த்திருக்கிறார்கள். புத்திசாலித்தனமான காட்சிகள், ரொம்பவும் குறைவு. க்ளாஸாக சொல்ல நினைத்ததால், ஸ்லோவாகவும் செல்கிறது. இதனால், ஆங்காங்கே போர் அடிக்கிறது. தவிர, சிங்கம் மாதிரி பாஸ்ட் பார்வேர்ட் படங்களை பார்த்துவிட்டு, இதை பார்த்தால் இன்னும் ஸ்லோவாக தெரிகிறது.

நான் பார்த்த தியேட்டரில், இண்டர்வெல் விடவில்லை. கோகோகோலாவுடன் உட்கார்ந்து படம் பார்க்க தொடங்கிய காரணத்தில், ஒருகட்டத்தில் அது வேறு முட்ட தொடங்கியதால், எப்படா விடுவார்கள்? என்று தோன்றிவிட்டது. உட்கார்ந்து பார்க்க வைத்தவர்கள் - சந்தானமும், நீரவ்ஷாவும் தான்.

நாம் பார்க்காத மலையாள, ஹிந்தி, இங்கிலிஷ் படங்களை இதுவரை பார்த்து இன்ஸ்பயர் ஆகி படமெடுத்த இயக்குனர் விஜய், இப்ப நாம் பார்த்த தமிழ் படங்களையே பார்த்து இன்ஸ்பயர் ஆகி எடுத்த படம் இதுவென்பதால், முந்தைய படங்களில் இருந்த இண்ட்ரஸ்ட், இந்த படத்தில் நமக்கு இல்லை. அதனால், இயக்குனர் விஜய் அவர்களே, நீங்கள் நாங்கள் பார்க்காத வேறு மொழி படங்களைப் பார்த்தே இன்ஸ்பயர் ஆகி படமெடுங்கள்!!!

.

911

டென்வர், அமெரிக்கா.

திங்கள்கிழமை.

இரவு சீக்கிரமே சாப்பிட்டு விட்டு, டிவியில் யூ-ட்யூப் மூலமாக அதற்கு முந்தைய நாளைய ‘நீயா நானா’ பார்த்துக்கொண்டிருந்தேன். மனைவியும் கிச்சன் வேலைகளை முடித்துவிட்டு, ஹாலுக்கு வந்தாள். பெட் ரூமில், மகள் தூங்கிக்கொண்டிருந்தாள்.

திடீரென கிச்சனில் ஏதோ தண்ணீர் சத்தம். ஓடி சென்று பார்த்தேன்.

கிச்சனில் இருக்கும் வாஷ்பேசினில் இரு குழாய்கள் இணைப்பு இருக்கும். ஒன்றில், குளிர்ந்த நீரும், மற்றொன்றில் வெந்நீரும் வரும். எவ்வளவு சூடாக வரும் என்றால், அதை மட்டும் திறந்து வைத்து, கையை கிட்டே கொண்டு செல்ல முடியாது. குளிர்ந்த நீருடன் சேர்த்தே உபயோகிக்க முடியும்.


அந்த வாஷ்பேசினின் கீழ்புறம் ஒரு கப்போர்ட் உண்டு. அதற்குள்ளாக இருந்து, தண்ணீர் பீச்சியடித்துக்கொண்டிருந்தது. அருகே சென்று பார்த்தால், சூடான நீர். தள்ளி வந்து விட்டேன். வாஷ்பேசின் கீழே இருக்கும் குழாயில் ஏதோ பிரச்சினை. என்ன செய்ய? சிறிது நேரத்தில், கிச்சன் தரைபுறம் முழுவதும் தண்ணீர். அடுத்து வெளியே இருந்த ஹார்பட்டை நெருங்கிவிடும்.

அபார்ட்மெண்ட் அவசர பராமரிப்பிற்கு போன் செய்யலாம். நம்பர் கைவசம் இல்லை. உள்ளே எங்கோ வைத்திருந்தேன். தண்ணீர் வேகமாக சிந்திக்கொண்டிருந்தது. இந்த வேகத்தில் போனால் என்னாவது? 911க்கு போன் செய்தேன்.

911. வட அமெரிக்காவிற்கான அவசர நேர தொலைபேசி எண். தீயணைப்பு உதவியோ, போலீஸ் உதவியோ, மருத்துவ உதவியோ தேவையென்றால், இந்த எண்ணிற்கு போன் செய்யலாம். சும்மானாச்சுக்கும் போன் செய்தால் ஆப்பு. பெருசா அபராதம் விதிப்பார்கள்.

இங்கு அபார்ட்மெண்டில் லைட்டாக புகை வந்தாலே, பத்து நிமிடத்தில் வீட்டு வாசலில் பயர் இஞ்சின் நிற்கும். நம்மவர்கள் வீட்டில் சாம்பிராணி போட்டு, அடுப்பில் சாம்பார் வைத்து மறந்து போவது, தந்தூரி சிக்கனை ஓவனில் வைத்துவிட்டு தம்மடிக்க போவது என பல சந்தர்ப்பங்களில் அவர்களை அறியாமலேயே ஃபயர் இஞ்சினை வரவழைப்பார்கள். வீட்டிலிருக்கும் ஆலாரம் அலறும். அபார்ட்மெண்டில் இருக்கும் அனைத்து குடித்தனவாசிக்களும், இரவு பனிரெண்டு மணி என்றாலும், வெளியே பனிக்கொட்டுகிறது என்றாலும், வெளியே வந்து நிற்க வேண்டும்.

911க்கு போன் செய்து விபரத்தை சொல்கிறேன். நிதானமாக அட்ரஸ், பிரச்சினை எல்லாவற்றையும் கேட்டார்கள். இங்கே தண்ணீர் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. நான் பேச்சில் படபடக்கிறேன். அந்த பக்கம் ஸ்லோமோஷனில் பேசுவது போல் எனக்கு தோன்றுகிறது. 911 ஆபரேட்டர், தீயணைப்பு நிலையத்தில் தொடர்பை ஏற்படுத்திக்கொடுக்க, அங்கும் அட்ரஸ் போன்றவற்றை கேட்க, சொன்னேன்.

வெந்நீர் கொட்டுவதில் புகை கிளம்ப, அபார்ட்மெண்ட் முழுக்க ஆலாரம் அடிக்கிறது.

மனைவியை பாப்பாவைத் தூக்கிக்கொண்டு கீழே போகச் சொன்னேன். எனக்கும் என்ன செய்ய என்று தெரியவில்லை. தரைவிரிப்பில் நீர் பரவ, கால்கள் சுட, செருப்பு போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் நடந்தேன். தூரத்தில் ஃபயர் இஞ்சின் சத்தம் கேட்டது. எப்போதும் உடனே வருவது போல் தோன்றுவது, இன்று சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருக்கும் போது, மெதுவாக வருவது போல் தோன்றியது.

தீ என்றால் பாதிப்பு இருக்கும். தண்ணீர் தானே என்பதால் பெரிய பயம் இல்லை. நானும் கீழே போய் நின்றேன். பக்கத்தில் நின்ற பக்கத்து வீட்டு பெண்மணி, முக்கியமானவைகளை எடுத்து வந்துவிட்டீர்களா? என வினவினார். பொதுவாக, தீ போன்ற பிரச்சினைகள் வரும் போது, நம்மாட்கள் பாஸ்போர்ட், விசா போன்றவைகளை கையோடு எடுத்து வருவார்கள். எனக்கு அதெல்லாம் உள்ளே இருப்பதால், ஒன்றும் ஆகாது என நம்பிக்கை இருந்தது. இருந்தாலும், ஹாலில் தரையில் ஏதேனும் இருந்தால், நனையுமே என்று திரும்ப வீட்டிற்கு வந்தேன். எனது ஆபிஸ் பை இருந்தது. அதை எடுத்து சோபாவில் போட்டுவிட்டு, திரும்ப கீழே வர, தீயணைப்பு வீரர்கள் வந்துவிட்டார்கள்.

ஒரு பைப் பிரச்சினைக்கு இந்த அக்கப்போரா? என்று தோன்றினாலும், என்ன செய்ய? வெந்நீர், இப்படி ஒரு பிரச்சினையை கிளப்பும் என்று நினைத்தேயில்லையே?

அவர்கள் மெதுவாக வந்து, சைரன் ஆப் செய்து விட்டு, அவர்கள் விதிமுறைகளை எல்லாம் கடைபிடித்து, மேலே வீட்டிற்குள் வந்தார்கள். நான் தான் போன் செய்தேன் என்று சொல்லி அறிமுகம் செய்துக்கொண்டேன். விபரத்தை சொன்னேன். எந்த ரியாக்‌ஷனும் இல்லை.  ஒருவித அமைதி, அவர்கள் அனைவரது முகத்திலும் காணக்கிடைத்தது.

உடல் முழுக்க கவசமாக உடையணிந்து இருந்தாலும், கைகளில் க்ளவுஸ் இல்லை. அவராலும், பைப்பை நெருங்க முடியவில்லை. பிறகு, கையுறையை அணிந்து வந்தார்கள். என்னன்னமோ செய்து பார்த்தார்கள். சுலபத்தில் பிரச்சினை முடியவில்லை. பிறகு, பைப் கனெக்‌ஷனை நிறுத்தினார்கள். அதற்குள் பாதி ஹால் முழுக்க தண்ணீர்.

அவர்கள் கொண்டு வந்திருந்த உபகரணங்கள் கொண்டு, முடிந்த வரை தண்ணீரை உறிஞ்சி எடுத்தார்கள். அதற்கு மேல், அபார்ட்மெண்ட் பராமரிப்பு குழுவிடம் சொல்லிவிட்டு சென்றார்கள். எதற்கு எங்களுக்கு போன் செய்தீர்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. வேறு எதுவும் கேட்கவில்லை. தரைவிரிப்பிற்கு கீழே தண்ணீர் சென்று இருப்பதால், முழுவதுமாக ட்ரை ஆக வேண்டும். இல்லாவிட்டால், பல நோய்கள் வரும் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார்கள்.

நான் எங்கள் வீட்டு வாசலிலேயே நின்றுக்கொண்டிருந்தேன். கீழே இருந்த மற்ற வீட்டுக்காரர்கள் எல்லாம் மேலே வந்துவிட்டார்கள். நான் வாசலில் இருப்பதை பார்த்த, பக்கத்து வீட்டு பெண்மணி ‘உட்கார சேர் எடுத்து வரவா?’ என்று கேட்டார். நானென்ன கோலம் போடுவதையா பார்த்துக்கொண்டிருக்கிறேன்?

பிறகு, அபார்ட்மெண்ட்காரன் ஒரு கார்பட் க்ளினீங் நிறுவனத்திற்கு போன் செய்து வர வைத்தான். அவன், அவனுடைய வேனில் இருக்கும் மோட்டார் மூலமாக பைப் போட்டு, விதவிதமான உபகரணங்களால் வீட்டிலிருந்த தண்ணீர் முழுவதையும் எடுத்தான். தண்ணீர் நன்றாக உறிஞ்சப்பட்டிருந்தாலும், ஈரபதம் இருந்ததால், நாலு பெரிய டர்போ ஃபேன்களையும், ஒரு de-h
umidifierயும் வைத்துவிட்டு சென்றான். நைட் முழுவதும் இது ஓட வேண்டுமா? என்று கேட்டதற்கு, 48 முதல் 72 மணி நேரம் வரை ஓட வேண்டும் என்று பயம் காட்டி சென்றான்.

இந்த மெஷின்களையும் சத்தம் ரொம்ப பெரிதாக இல்லாவிட்டாலும், தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால், மனநிலை கெட்டுப்போகும் வாய்ப்பை உருவாக்குவதாக தெரிந்தது. அடுத்த நாள், அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு, மனைவியும், குழந்தையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றேன். அதற்கு அடுத்த நாளும் ஓடியது. திரும்ப விடுமுறை கஷ்டம் என்பதால், நான் அலுவலகம் செல்ல, மனைவியும், குழந்தையும் பக்கத்துவிட்டிற்கு சென்றார்கள்.

சொன்ன மாதிரியே கிட்டத்தட்ட 72 மணி நேரத்திற்கு 3 நாட்களுக்கு இந்த மின் விசிறிகளை ஓட்டியே எடுத்து சென்றான். இப்போது எல்லாம் சரி. அமெரிக்க 911, ஃபயர் இன்ஜின் அனுபவமும் கிடைத்து விட்டது.

.