Monday, September 16, 2013

மங்கோலியன் க்ரில்

மங்கோலியன் சமையல், சைனீஸ் வகையை சேர்ந்தது தான். ஆனால், கடையின் அமைப்பும், சமைக்கும் முறையும் தான் வித்தியாசமானது, சுவாரஸ்யமானது.

டென்வரில் இருக்கும் மங்கோலிய உணவகங்களில் ஒன்றின் பெயர் - செஞ்சிஸ் க்ரில். மற்றொன்றின் பெயர் - யுவான் பார்பேக்யூ. இன்னும் ஆங்காங்கே இப்படிப்பட்ட வரலாற்றில் கேள்விப்பட்ட பெயர்களை நினைவுப்படுத்தும் பல உணவகங்கள் இருக்கின்றன. யாராச்சும் குப்ளாகான் என்று கடை திறக்கலாம்.

சரி, இந்த உணவகங்களில் அப்படி என்ன சுவாரஸ்யம்?

உள்ளே நுழைந்ததும், திருவோடு போல ஒரு பவுல் கொடுப்பார்கள். சில கடைகளில் எல்லாம் ஒரே சைஸில் இருக்கும். சில கடைகளில் ஸ்மால், மீடியம், லார்ஜ் என அவரவர் கொள்ளளவுக்கு ஏற்றாற் போல கொடுப்பார்கள். ஒரு டாலர் வித்தியாசம் இருக்கும்.



அதை வாங்கிக்கொண்டு வரிசையில் நிற்க வேண்டும். முதலில் புரதங்கள். சிக்கன், டர்கி, மட்டன், பீப், மீன், இறால், டோஃபு போன்ற வகையறாக்கள் இருக்கும். பிறகு, காய்கறிகள். காளான், சோளம், வெங்காயம், தக்காளி, கீரை போன்றவை. அனைத்தும் சமைக்காதவை. பிறகு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், இஞ்சி, பூண்டு, உப்பு போன்ற பொடி வகைகள். கடைசியில் விதவிதமான சாஸ்கள். ஒவ்வொரு கடையிலும், இவற்றில் சில மாறுதல்கள் இருக்கும். இவையெல்லாவற்றையும் நமது விருப்பத்திற்கேற்ப, பாத்திரத்தில் அள்ளிப்போட்டுக்கொண்டு செல்ல வேண்டும். சரியாக திட்டமிடாவிட்டால் பாதியிலேயே பாத்திரம் நிறைந்து விடும்.

இதனுடன் நூடுல்ஸோ, சாதமோ சேர்த்துக்கொள்ளலாம். முடிவில் இதை சமையல்காரரிடம் ஒப்படைக்கவேண்டும். அவர் நமக்கு நம்பரை கொடுப்பார். அதை எடுத்துக்கொண்டு, ஒரு டேபிளில் போய் உட்கார்ந்துக்கொள்ளலாம். இல்லாவிட்டாலும், அங்கேயே நின்று வேடிக்கையும் பார்க்கலாம்.

நாம் கொடுத்தவற்றை அங்கிருக்கும் பெரிய தோசை கல்லில் கொட்டி, கையில் இருக்கும் பெரிய குச்சியில், அப்படி இப்படி இழுத்துவிடுவார். இதுபோல், பல பேரின் சட்டிகள் அங்கே கவிழ்க்கப்படும். ஒரே கல் சமத்துவம்.



அதிக நேரம் எடுக்க மாட்டார்கள். ஒன்றிரண்டு நிமிடங்கள் தான். அந்த சமைக்காத மாமிசங்கள் எப்படி ஒன்றிரண்டு நிமிடங்களில் வேகுகிறதோ? சந்தேகமாக தான் இருந்தது. ஆனால், நன்றாகவே வெந்திருந்தது.

சுவை சைனீஸ் வகை போல் தான். ஆனால் வாணலியில் போடாமல், கல்லில் வாட்டுவதால், பார்பேக்யூ சுவை வருகிறது. ஆனால், சுவை நன்றாக இல்லை என்று இக்கடைகளில் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் நாம் தானே எல்லாவற்றையும் எடுத்துக்கொடுக்கிறோம்? உப்பு உட்பட!!! (சில கடைகளில் அவர்களே உப்பு தண்ணீர் தெளித்து சமைப்பார்கள்.)

மங்கோலியர்களின் சாப்பாட்டை விட சமைக்கும் முறை தான் இண்ட்ரஸ்டிங். இதற்காகவே, செங்கிஸ்கான் போல் விடாமல் படையெடுக்கலாம்.

.

Sunday, September 8, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

டென்வரில் பெரிய நடிகர்கள் படங்கள் தான் வெளிவரும். கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் தவிர சில ஹை ஹைப், ஹை பட்ஜெட் படங்கள் வந்து பார்த்திருக்கிறேன். இந்த வாரம் ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ வந்திருக்கிறது. சிவகார்த்திக்கேயன், அதற்குள் அந்த லீகில் சேர்ந்துவிட்டாரா?



சுந்தர்.சி, பூபதிபாண்டியன் கூட்டணி கற்பனை சங்கத்தை வைத்து ஒரு படத்தையே ராஜேஷ்-பொன்ராம் கூட்டணி எடுத்திருக்கிறது. (பூபதி பாண்டியன், வெற்றி இயக்குனராக தொடர்வார் என்று நினைத்திருந்தேன். அவருடைய எந்த முடிவு, அவரை இந்நிலைக்கு கொண்டு சென்றதோ?)

சும்மா இந்த டைட்டிலை வைத்தே ஒரு கதையை ரெடி செய்து படமெடுத்திருக்கிறார்கள். துப்பாக்கி திருட்டு போல சில மொக்கை தருணங்கள் இருந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனை, முதல் முறையாக பெரிய திரையில் இப்போது தான் பார்த்தேன். நகைச்சுவை, நடனம் பற்றி சொல்ல தேவையில்லை. அவருக்கேற்ற லைட்டான கேரக்டர். கோடிகளில் சம்பளம் கூடும் போது வரும் செய்தியை கேட்டு, சிலருக்கு பொறாமை வரும். மற்றபடி, பெரும்பாலோருக்கு பிடித்த நடிகராக இருப்பார்.

சத்யராஜ் நடிக்க மறுத்த படங்கள் லிஸ்டை கேட்டவர்களுக்கு, அவர் இப்போது நடித்து வரும் படங்களையும், கேரக்டர்களையும் பார்த்தால், அதற்கான உளவியல் பின்னணி புரிகிறதோ இல்லையோ, அவருடைய மார்க்கெட் நிலவரம் புரியும். மற்றவர்களெல்லாம் கேஷுவலாக வந்து போன மாதிரியும், இவர் மட்டும் நடித்தது போலவும் எனக்கு தெரிந்தது.

ஹீரோயின் அம்சமாக இருக்கிறார். முக எக்ஸ்பிரெஷனில் கவர்கிறார். ரவுண்ட் வருவாரா தெரியாது. ஆகலாம். (கல்யாண பெண்ணுக்கு தோழியாக வரும் காட்சியில், அவர் கட்டியிருக்கும் பட்டுபுடவையை பார்த்து ஒரு டிமாண்ட் வந்திருக்கிறது!!!)

சூரியிடம் ஒரு பேட்டியில் ‘நீங்கதான் செகண்ட் ஹீரோவாமே?’ என்று கேட்டதற்கு, ‘அப்படியெல்லாம் இல்லை, சிவா தான்’ என்று கூச்சப்பட்டுக்கொண்டு சொன்னார். தாராளமாக, ‘ஆமா’ என்று சொல்லியிருக்கலாம். துப்பாக்கி ஆரம்பித்தபோது ஒரு பேட்டியில் சத்யன், ‘கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோ அளவுக்கு’ என்று பேட்டி கொடுத்திருந்தார்.

இந்த படத்தை தியேட்டர் சென்று பார்க்க வைத்ததற்கு முதல் காரணம் - இமான் தான். சிலமுறை கேட்டபோது சலிப்பாக ஒரு டைப்பாக இருந்தாலும், தற்போதைக்கு தொடர்ந்து கேட்கும் ஆல்பம் இதுதான். திரும்பவும் சொல்கிறேன். இளையராஜா பாடல்களை கேட்டு ரசித்த எனக்கு, இமானுடைய சில பாடல்கள், இளையராஜா பாடல்களை நவீன தொழில்நுட்பத்தில் கேட்பதை போல இருக்கிறது.

லோ பட்ஜெட் படமென்றாலும், பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தை ரிச்சாக காட்டியிருக்கிறது. கலர்ஃபுல்.

காமெடி, காதல், பாடல்கள் எல்லாம் தூக்கலாக படத்தை தூக்கி நிறுத்தினாலும், மாட்டை கிணற்றில் இருந்து மேலே தூக்கும் காட்சி, படத்தை செண்டிமெண்டலாகவும் தூக்கிவிட்டிருக்கிறது. படத்தில் ‘காதல்’ தண்டபாணி வரை சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு சில காட்சிகளை தவிர, மற்றவை அனைத்தும் நன்றாகவே ஒர்க் அவுட்டாகியிருக்கிறது. நல்ல டைம் பாஸ். தியேட்டரில் படம் பார்த்தவர்கள், கடைசியில் வரும் மேக்கிங் டைட்டில் காட்சி வரை பார்த்து, முடிவில் கைத்தட்டி சென்றார்கள்.

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி ட்ரெண்டை திட்டி எழுதுபவர்களும், ஒருமுறை குடும்பத்துடன் சென்று படம் பார்த்துவிட்டு டென்ஷனை குறைக்கலாம்.

.