Tuesday, February 26, 2013

ஒரு உடலின் கதை


நான் பள்ளியில் படித்தக்காலத்தில், தனுஷ் போல ஒல்லியாக இருந்தேன். எடையைக் கூட்ட என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த காலம் அது. அசைவ உணவின் மீது பெரிய ஈடுபாடில்லாத அந்த காலத்தில், உடலில் கொஞ்சம் சதை வர ஆசைப்பட்டு, அசைவ உணவு ஒரு ஆர்வத்துடன் உண்ண ஆரம்பித்தேன். இருந்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை.

கல்லூரியில் சேர்ந்தபிறகும் அதே நிலை. முட்டை தோசை சாப்பிட்டால், உடல் பருக்கும் என்று கூட இருந்த ஒரு விஞ்ஞானி கூற, ஹோட்டல் செல்லும்போதெல்லாம் நான் உண்ணும் உணவானது, முட்டை தோசை.

கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் சிறிதாக முன்னேற்றம் ஏற்பட தொடங்கியது. பிறகு, வேலைக்கு சேர்ந்த பிறகு, இன்னும் கொஞ்சம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நிறைய ’கொஞ்சம்’கள் சேர்ந்தால் என்ன ஆகும்? குண்டாகும்.

அதற்காக நான் குண்டு என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. 5’10’’ உயரத்திற்கு 70-72 கிலோக்கள் என்பது BMI தத்துவத்தின்படி நல்ல எடை என்பதால், அதற்கு மேல் செல்லக்கூடாது என்பது நோக்கமானது. இந்த காலக்கட்டத்தில் எடையைக் கூட்ட வேண்டும் என்ற எண்ணம், கட்டுப்படுத்த வேண்டும் என்று எண்ணத்திற்கு மாறியது.

70 இல் இருந்து 72 ற்கு ஊசலாடிய எடையை, அவ்வப்போது சைக்கிளிங், ரோப் எக்சசைஸ் என்று கட்டுக்குள் வைத்திருந்தேன். பொதுவாக, கல்யாணம் ஆவதற்கு முன்பு இளைஞர்கள் எடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே அது இருந்தது.

கல்யாணம் ஆனது. இம்மாதிரியான நடவடிக்கைகள், எம்மாதிரியான உடன்படிக்கைகளும் இல்லாமல் நின்று போனது. அமெரிக்க உணவு பழக்கமும் சேர்ந்துக்கொள்ள, சீஸ்ஸை பீட்ஸாவில் அள்ளிப்போட்டால், கேள்விக்கேட்காமல் தின்ன தொடங்க, எடை சைலண்டாக கூடியது. 75 வரை ஒகே என்று இருந்த மனம், 76 தொட்டபோது ஆலாரம் அடித்தது. முதல் முறையாக, எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வர தொடங்கியது.

எண்ணம் தான் வந்ததே ஒழிய, எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. குழந்தை பிறந்த பிறகு, மனைவிக்கும் எடை ஒரு பிரச்சினையாக, அவர் சில பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். விரதமிருந்துக்கொண்டு சமைத்தாலும், நான் வக்கனையாக சாப்பிட்டுக்கொண்டு வந்தேன்.

சில வாரங்களுக்கு முன்பு, யாரோ நல்ல ரிசல்ட் தருகிறது என்று  சொன்னார்கள் என்று ஜிஎம் வெயிட் லாஸ் டயட் பற்றி சொன்னார். நான் இந்த பெயரைக் கேள்விப்பட்டதில்லை என்றாலும், நான் முதலில் பணியாற்றிய அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிந்தவர், இந்த முறையை பின்பற்றி வந்தது, இன்னமும் நினைவில் இருந்தது.



இணையத்தில் இதை பற்றி நிறைய இருந்தாலும், சுருக்கமாக சில வரிகள் இங்கே. இது ஒரு ஏழு நாட்கள் டயட் ப்ரோகிராம். முதல் நாள், பழங்கள் மட்டும். இரண்டாம் நாள், காய்கறிகள் மட்டும். மூன்றாம் நாள், பழமும் காய்கறியும். பிறகு, பாலும், வாழைப்பழமும் என்று இப்படி செல்லும். இதை கடைப்பிடித்தால், ஒரு வாரத்தில் நாலைந்து கிலோக்கள் குறையும் என்று பலபேர் வாக்குறுதி கொடுத்திருந்தார்கள்.

இதன் நம்பகத்தன்மை பற்றி நிலையான தகவல் எங்கும் இல்லை. இது, சும்மா புரளி என்றும் உடலுக்கு நல்லதில்லை எனவும் இணையத்தில் பலதரப்பட்ட பக்கங்கள் இருக்கின்றன. இப்படி சாப்பிடுவதால், ஒரு வாரத்தில் எடை குறைந்தாலும், பிறகு ரெகுலராக சாப்பிட ஆரம்பிக்கும்போது, வழக்கம்போல் எடை கூடி விடும் என்று பலர் கூறியிருந்தனர். இதனால், எனக்கும் இதன் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், மனைவி கடைப்பிடிக்க போவதாக கூறியதும் எதற்கு அவநம்பிக்கையைத் தெளிக்கவேண்டும் என்று ஒன்றும் சொல்லவில்லை. நான் மட்டும் நேரா நேரத்திற்கு நன்றாக சாப்பிட்டு வந்தேன்.

நடுவில் ஒருநாள் Papa Johns நடத்திய ஒரு போட்டியில் வென்று, ஒரு பீட்சா ப்ரீயாக வீட்டுக்கு வந்தது. மனைவிக்கு பீட்சாவை கண்டதும், கட்டுப்பாடு தவிடுபொடியானது. ஐந்தாம் நாளில் கைவிட்டுவிட்டார். பெரிதாக எடைகுறைவு ஒன்றுமில்லை.

அதற்கு பிறகு, இரண்டு வாரங்கள் கழித்து திரும்பவும் ஒரு வாரம் இதை ஃபாலோ செய்ய போவதாக கூறினார். இதை கூறிய சமயம், எனக்கு வயிறு புடைப்பாக இருக்க, நான் சேர்ந்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டேன். கம்பெனி கொடுத்தால் சிறப்பாக செல்லும் என்பதும் அதற்கு ஒரு காரணம். ஆனால், எடை குறையும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. வயிறும், உடலும் சுத்தமாகும் என்பதில் நம்பிக்கை இருந்தது.

சென்ற திங்கள் கிழமை, சோதனை தொடங்கியது. அதற்கு முந்தைய வாரயிறுதியில் நிறைய பழங்கள், காய்கறிகள், ப்ரௌன் ரைஸ் போன்றவை வாங்கி ரெடியாக இருந்தோம்.

முதல் நாள், பழங்கள். அன்று விடுமுறை நாள். ஆப்பிள், தர்பூசணி, அன்னாசி சாப்பிட்டோம். இரவுக்குள் எனக்கு வெறுத்துப்போனது. இரவு படுக்கும்போது, தலை கொஞ்ச பாரமாக இருந்தது போலவும் இருந்தது. மாலை சிறிது தூங்கியிருந்ததால், இரவு படுத்தவுடன் உறக்கம் வரவில்லை. வயிறு காலியாக இருந்ததும் ஒரு காரணம். புரண்டு புரண்டு படுத்து, ஒரு வழியாக தூங்கினேன்.

காலையில் இது நமக்கு தேவையா என்றொரு நினைப்பு வந்தாலும், எடை பார்க்கும்போது கொஞ்சம் குறைந்திருந்தது ஆறுதலளித்தது. ஒரு உருளைக்கிழங்கை அவித்து, உப்பும் மிளகும் போட்டு சாப்பிட்டு விட்டு அலுவலகம் சென்றேன். அலுவலக வேலையில், இந்த நினைப்பு அதிகம் இல்லை. மதியம், சாலட். ஆடு மாதிரி மென்றுவிட்டு, திரும்ப வேலையில் மூழ்கினேன். வயிற்றில் என்னமோ மிஸ்ஸிங் என்பது போலவே இருந்தது. மாலையில், கொஞ்சம் கொண்டைகடலை அவித்து சாலடில் போட்டு சாப்பிட்ட பிறகு, ஒரு திருப்தி வந்தது. இப்படி சாப்பிட கூடாது என்றாலும், ஒரு ஆறுதல் தேவைப்பட்டது.

அடுத்த நாள் எடை, 74 க்கு வந்தது. கொஞ்சம் மகிழ்ச்சியுடன், மூன்றாம் நாளை தொடங்கினேன். காலையில் ஆப்பிளும், கிவியும். மதியம், கொண்டைகடலை, மாங்காயுடன் சாலட். நம்மூர் பீச் சுண்டல் பீலிங். திரும்பவும் வயலேஷன். இரவு, உப்பு கார பொடியுடன் சோளம். இதையும் சாப்பிட யாரும் சொல்லவில்லை. சுவைக்காக இதை உண்டேன்.

எடை 73 சொச்சத்திற்கு வந்தது. அடுத்த நாள், பாலும், வாழைப்பழமும். மதியம், மனைவி ஒரு சூப் வைத்துக்கொடுத்தார். அதற்கு பெயர், வொண்டர் சூப்பாம். மூன்று நாட்களுக்கு, பிறகு ஒரு சமைத்த உணவு. நல்லாவே இருந்தது.  எடை 73க்கு வந்தது. ஐந்தாம் நாள், காய்கறிகளை ப்ரவுன் ரைஸுடன் போட்டு, எண்ணெய் இல்லாமல், எந்த வதக்குதலும் இல்லாமல், ஒரு உணவு வகை. நான்கு நாட்களுக்கு பிறகு அரிசி என்பதால், நன்றாக உள்ளே இறங்கியது. 72 சில்லறைக்கு எடை சென்றது. அடுத்த நாளும், இது போன்ற அரிசி உணவு, பழங்களுடன் உள்ளே சென்றது. தொடர்ந்து, அரிசி என்பதாலோ என்னவோ, அதற்கு பிறகு எடையில் பெரிய இறக்கம் இல்லை.

எடை 72.2 செல்ல, ஏழாம் நாளில் எனக்கு இதற்கு மேல் இதை கடைப்பிடிக்க தோன்றவில்லை. நன்றாக சாப்பிடவேண்டும் என்று ரெகுலர் உணவை ஆரம்பித்தால், அதையும் நன்றாக சாப்பிட முடியவில்லை. அடுத்த நாளும், அதே எடையில் நின்றது.

 
அவ்வளவுதான். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாலும், அதை முழுமையாக கடைப்பிடிக்க முடியவில்லை. எல்லா நாட்களிலும், தொடர்ச்சியாக எப்போதும்போல் ஜிம் சென்று லைட்டாக வாக்கிங் போய் வந்தேன். ஒவ்வொரு நாளும், அடுத்த நாள் நிறுத்திவிட வேண்டும் என்று தோன்றினாலும், குறைந்து வந்த எடை, இன்னொரு பக்கம் மோடிவ்வேட் செய்துவந்தது. உடலை லைட்டாக உணர்கிறேன்.

எப்படியும் சில நாட்களில் பழையபடி சாப்பாட்டை ஒரு கட்டு கட்டி, பழைய எடைக்கு வந்துவிடுவேன் என்றாலும், இந்த ஒரு வார பரிசோதனை, உடல் எடை கட்டுப்பாட்டின் மீதான நம்பிக்கையை கொடுத்தது.

இது சரியான வழிமுறையா, இல்லையா என்பதும் எனக்கும் தெரியாது. ஆனால், பட்டினி கிடக்காமல், வயிறு முட்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடலாம் என்பதால், பெரிதாக கெடுதல் இருக்காது என்பது என் நினைப்பு. எண்ணெய் சேர்க்காமல், எதையும் பொறிக்காமல் ஒரு வாரம் உண்பது என்பது நல்லதே என்று நினைக்கிறேன்.

இந்த முறையை கடைப்பிடிக்கும் போது, அந்த வாரத்தில் எந்த விசேஷமும் இல்லாமல் இருப்பது போல் பார்த்துக்கொள்வது அவசியம். இல்லாவிட்டால், அதனால் ஏற்படும் மனக்குழப்பங்கள், பெரிய தொல்லை. இப்படிதான் போன வாரம் ஒருநாள் அலுவலகத்தில் ஒரு மீட்டிங் வைக்க, அதில் எனக்கு முன்பு நிறைய சமோசாக்கள் அடுக்கி வைக்க, ரொம்ப கஷ்டப்பட்டு போனேன். என் நண்பர்கள் எல்லாம் ஆளுக்கு ரெண்டு மூன்று என்று எடுத்த உண்ண, எனக்கு நானே உள்ளூக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டேன். (குமரா, சமோசாதானே? அடுத்த வாரம், கடைக்கு போய் நாலு சமோசா வாங்கி சாப்பிடுறோம்!!)

பழையபடி, ஒரு நல்ல BMI  இடைவெளிக்குள் வந்துவிட்டேன். இன்னும் சில வாரங்களோ, மாதங்களோ கழித்து ஒரு வாரம் மீண்டும் இருக்க வேண்டும். எடைக்காக இல்லாவிட்டாலும், ஒரு சுத்திகரிப்புக்காக. அப்ப, மனம் என்ன சொல்கிறதோ, தெரியவில்லை!!!

.

Sunday, February 10, 2013

மாண்புமிகு திருட்டு பயலே!!!

நம்மூரில் ஜூன் ஜூலை வாக்கில் வரும் டாக்ஸ் ரிடன்ஸ் வேலைகள், அமெரிக்காவில் தற்சமயம் நடந்துவருகிறது. ஏப்ரலுக்குள் முடித்துவிட வேண்டும்.

இந்தியாவிற்கு வரும் ஐடியா இருப்பதால், நான் இப்பொழுதே இந்த வேலையை முடித்துவிடலாம் என்று சீக்கிரமே ஆரம்பித்தேன். அதற்கான படிவத்தில் மனைவி, குழந்தை பெயரை இணைத்து, அவர்களுக்கும் ஒரு அடையாள எண் வாங்க வேண்டும். மனைவிக்கு சென்ற வருடமே அந்த எண் கிடைத்துவிட்டது. மகளுக்கு இந்த வருடம் விண்ணப்பிக்க வேண்டும்.

சென்ற வருடம் வரை, இதற்கான நடைமுறை சுலபமாக இருந்தது. பக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் வருமான வரி சேவை நிறுவனத்திற்கு சென்றால் போதுமானதாக இருந்தது. அவர்கள் சனி, ஞாயிறு என்று நமது விடுமுறை நாட்களிலும் கடையை திறந்து வைத்திருப்பார்கள். இந்த வருடம் முதல், இதற்கான வழிமுறைகளை மாற்றிவிட்டார்கள்.

நகருக்குள் இருக்கும் அரசாங்க அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டுமாம். அவர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே வேலை பார்ப்பார்கள். ஸோ, லீவு போட வேண்டும். ஒரு ரெண்டு மணி நேரம் பெர்மிஷன் வாங்கியும் வேலையை முடிக்கலாம். இருந்தாலும், இதை லீவு போட ஒரு சாக்காக எடுத்து லீவு போட்டேன்.

போடுறது தான் போடுறோம், உருப்படியா ஏதாச்சும் செய்யலாம் என்று யோசித்தப்போது, டென்வர் மிண்ட் நினைவுக்கு வந்தது.


டென்வரில் பார்க்கவேண்டிய இடம் என்று ரொம்ப நாட்களாக நினைத்துவருவது, டென்வர் மிண்ட். இங்கு அமெரிக்காவிற்கு தேவையான நாணயங்களை உருவாக்கிவருகிறார்கள். உள்ளே அழைத்து சென்று, சுற்றிக்காட்டும் டூரும் நடத்துகிறார்கள். ஆனால், திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும். இதனாலேயே, இதை பார்க்க முடியாமல் இருந்தது. இப்போது, சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டேன்.

---

சென்ற புதன்கிழமை காலை, சாவகாசமாக கிளம்பி சென்றோம். நகருக்குள் பார்க் செய்வது பெரும்பாடு. அதுவும், வேலை நாட்கள் என்றால் மெகா பெரும்பாடு. நல்லவேளை, நாங்கள் சென்ற அலுவலகத்திற்கு பக்கத்திலேயே ஒரு பார்க்கிங் கட்டிடம் இருந்து, அங்கு எங்களுக்கு இடமும் கிடைத்தது. அந்த கட்டிடத்தில் ஒரு மனித தலையையும் பார்க்க முடியவில்லை. எல்லாம் தானியங்கி இயந்திரங்கள்.

அந்த அரசாங்க வருமான வரி அலுவலகம் இருந்த கட்டிடம் நல்ல உயரம். நாங்கள் செல்ல வேண்டி இருந்த அலுவலகமே, 17வது மாடியில் இருந்தது. இம்மாதிரி கட்டிடங்களில் லிப்ட் கண்டிப்பாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம். அந்த லிப்ட்களில் நாம் செல்ல வேண்டிய தளத்தை தேர்ந்தெடுப்பதற்கான எண் பொத்தான்கள் எப்படி இருக்கும்? இங்கு எப்படி இருந்தது என்றால், டெலிபோன் நம்பர் பேட்டில் இருப்பதை போன்ற ஒழுங்கில் இருந்த பொத்தானில், நாம் செல்ல தளத்தை உள்ளீட்டால், அது நமக்கான லிப்ட்டை காட்ட, நாம் அதில் ஏறி செல்ல வேண்டியது தான்.

அங்கு சென்று தான் அப்பாயிண்ட்மெண்ட் எடுக்க முடியும். எடுத்தோம். காத்திருந்தோம். முக்கால் மணி நேரத்தில் கூப்பிட்டார்கள். எங்களை அழைத்த அலுவலகர், ஒரு கறுப்பின பெண். அவருடைய அறை முழுக்க புகைப்படங்கள். அவருடைய அம்மா, பெண் என்று அவருடைய குடும்ப ஆல்பத்தை பார்த்தது போல இருந்தது.  அம்மணி, ஒபாமாவின் தீவிர தொண்டர் போல. பிரசிடெண்ட் ஒபாமா என்று அவருடைய நிறைய படங்கள் இருந்தது. ஒபாமா குடும்ப புகைப்படங்கள் இரண்டும் கண்டேன், முதல் குடும்பம் என்ற வாசகத்துடன்.

எனக்கு எந்த வேலையும் வைக்கவில்லை. பாப்பாவின் பாஸ்போர்ட்டைப் பார்த்து, எல்லா வேலைகளையும் அவரே முடித்துவிட்டார். பத்து நிமிஷத்தில் விடைபெற்று வந்தோம்.

இனி, டென்வர் மிண்ட். இவ்வளவு நாள், மிண்ட் என்றால் ’புதினா’ என்று தான் நினைத்துவந்தேன். இங்கு வந்த பிறகு தான், மிண்ட் என்றால் ’புதிய அணா’ என்றொரு அர்த்தமும் இருப்பது தெரிய வந்தது. (ஹி ஹி) நாணயங்கள் உற்பத்தி செய்யப்படும் இடமும் மிண்ட் என்றழைக்கப்படுகிறது.

அமெரிக்காவில் நான்கு இடங்களில் நாணயங்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், இரண்டில் தான் மக்கள் புழக்கத்திற்கான நாணயங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் ஒன்று, டென்வர் மிண்ட். ஒரு நொடியில் எட்டு நாணயங்கள் என, உலகில் அதிகம் உற்பத்தி செய்யும் இடமாம் இது. நகரின் மையத்திலேயே இருக்கிறது. ரொம்ப பெரிய கட்டிடம் கிடையாது. சிறியது தான்.

பாதுகாப்பு காவலர்கள் கூட அதிகம் தெரியவில்லை. இந்த டூருக்கு வரும் ஆட்களை உள்ளே விடும் வழியில் மட்டும் இரண்டு - மூன்று காவலர்கள் இருந்தார்கள். ஏர்போர்ட்டில் செக் செய்வதை போல, எல்லாவற்றையும் செக் செய்தார்கள். பெரிதாக எதையும் உள்ளே அனுமதிப்பதில்லை.

உள்ளே சென்றோம். முதலில் மியூசியம் போல, விதவிதமான நாணயங்களைப் பார்வைக்கு வைத்திருந்தார்கள். நாணயங்களின் வரலாற்றை காட்டும் விதமாக சிலவற்றை காட்டினார்கள். பிறகு, டிவியில் இந்த பேக்டரியின் மேனேஜர் (!) பேசி எங்களை வரவேற்று, உள்ளே விட்டார்.

இந்த உற்பத்தி தளத்தில் ஆங்காங்கே சில மெஷின்கள் இருந்தன. ஒரு பக்கம் இருந்து, அச்சிடப்படாத நாணயங்கள் விழ, இன்னொரு பக்கம் நாணயத்தில் அச்சு பொறிக்கப்பட்டு வந்தது. இப்படி, ஆங்காங்கே நாணயங்கள் விழுந்துக்கொண்டு இருந்தன. அந்த பக்கம், நாணயங்கள் கன்வேயரில் எங்கோ சென்றுக்கொண்டு இருந்தது.  பிறகு, ஒரு பேக்கிங் மெஷினைக் காட்டினார்கள். அவ்வளவுதான், பேக்டரியில் எங்களுக்கு காட்டப்பட்ட மெஷின்கள். காயின்களை அப்படியே கொஞ்சம் கையில் அள்ளி, எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்றால் முடியாதாம்!!!

பெரிய பெரிய சாக்கு பைகளைக் காட்டினார்கள். அதில் தான் அள்ளி முடிந்து செண்ட்ரல் பேங்கிற்கு எடுத்து செல்வார்களாம். ரொம்ப பழைய டெக்னிக்காக இருந்தது.

ஒரு பெண்மணி எங்களுக்கு இதையெல்லாம் விளக்கி சொல்லிக்கொண்டு வந்தார். முடிவில், ஒரு ஆளுயர கட்-அவுட்டை காட்டி பேசினார். அது ஒரு தொப்பி வைத்த ஜென்டில்மேனின் கட்-அவுட். நான் கூட யாரோ பெரிய மனுஷன், இந்த கட்டிடத்தை கட்டியவர், அல்லது திறந்து வைத்தவராக இருக்குமோ என்று நினைத்தேன். பார்த்தால், அவர் இங்கு வேலைப்பார்த்து களவாடிய ஜென்டில்மேனாம்.

ஜென்டில்மேன் பெயர் - ஓர்வில் ஹெரிங்டன். 1920இல் இங்கு நைட் ஷிப்டில் வேலைபார்த்து வந்தவர், டெய்லி வீட்டிற்கு செல்லும் போது, ஒரே ஒரு தங்கக்கட்டி எடுத்து சென்றாராம். அது எப்படி அவ்வளவு சுலபமாக? இவருக்கு ஒரு கால் கிடையாது. மர கால் செய்து வைத்திருக்கிறார். அந்த மர காலில் கொஞ்சம் தங்கம் வைக்கவும் இட வசதி செய்திருக்கிறார். அப்புறமென்ன, தினமும் சம்பளத்துடன் கொஞ்சம் தங்கம் எடுத்து சென்றிருக்கிறார். மொத்தத்தில், அந்த காலத்தில் 80000 டாலர் மதிப்பாம்.

தங்கம் குறையுதே என்று டவுட் வர, இவரை துப்பறிந்திருக்கார்கள். ஒருநாள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இவர் தங்கக்கட்டி புதைத்து வைத்ததை பார்த்து, காலும் களவுமாக பிடித்திருக்கிறார்கள். பத்து வருஷம் ஜெயில் தண்டனை கிடைத்தாலும், நன்னடத்தை காரணமாக மூன்றரை வருடத்திலேயே வெளியே வந்துவிட்டார்.

என்ன காரணமோ தெரியவில்லை, வரலாற்றில் இருந்து இவரை யாரும் மறந்துவிட கூடாது என்று ஒரு கட்-அவுட் வைத்து இந்த மாண்புமிகு களவாணியின் புகழை இன்னமும் இங்கு பரப்பிவருகிறார்கள்.

.