Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Thursday, March 26, 2015

மினசோட்டா பனிப்பூக்கள்



வட அமெரிக்கத் தமிழர்களுக்கு தென்றல் பத்திரிக்கையைப் பற்றி தெரிந்திருக்கும். வட அமெரிக்க தமிழர்களுக்கான இந்த மாத இதழ், கலிபோர்னியாவில் இருந்து வெளியாகிறது. இலவசமாக அமெரிக்காவில் இருக்கும் இந்தியக்கடைகளில் கிடைக்கும். ஆன்லைனிலும் இருக்கிறது. விளம்பரங்களின் மூலம் இலவசம் சாத்தியமாகிறது. அதே சமயம், பக்கத்திற்கு பக்கம் விளம்பரங்களாய் இருக்கும். இந்திய ஹோட்டல்கள், மளிகைக்கடைகள், ஜோசியர்கள், டாக்டர்கள், அர்ச்சகர்கள் வகை விளம்பரங்களைக் காணலாம். தவிர, கதை, கவிதை, பேட்டிகளும் இருக்கும்.

மினசோட்டா வந்தப்பிறகு, பனிப்பூக்களின் அறிமுகம் கிடைத்தது. இது ஒரு காலாண்டிதழ்.  வருடத்திற்கு நான்கு முறை, அந்தந்த காலத்தின் பெயரில் வெளிவருகிறது. இம்மாதம் பனிக்கால இதழ் வெளிவந்துள்ளது.

விலை நான்கு டாலர்கள். வருட சந்தா என்றால் பனிரெண்டு டாலர்கள். சென்ற முறை, தமிழ் சங்க விழாவிற்கு சென்ற பொழுது, சந்தா கட்டிவிட்டு வந்தேன்.

ஆன்லைனிலும் இருக்கிறது. ஆனால் அது வேறு. இது வேறு. அதில் வரும் படைப்புகள் இதில் இருக்காது, இதில் வரும் படைப்புகள் அதில் இருக்காது.



மொத்தத்தில் ஆன்லைனோ, தாளோ - வேறெதிலும் வரும் படைப்புக்கள் இதில் வருவதில்லை. அதாவது, பனிப்பூக்களுக்கென எழுதப்பட்ட பிரத்யேக படைப்புகள் மட்டுமே இதில் வரும்.

இதன் மற்றொரு சிறப்பம்சம் - இதில் வரும் படைப்புகள் அனைத்தும் மின்னசொட்டா தமிழர்களுக்கு நெருக்கமானதாக இருப்பது. அதாவது, மின்னசொட்டா நிகழ்வுகள், இடங்கள் பற்றிய கட்டுரைகள், மினசோட்டாவில் இருக்கும் பிரபலங்கள் அல்லது மினசொட்டாவிற்கு வருகை தந்த பிரபலங்களின் பேட்டிகள், மினசோட்டா சார்ந்த கதைகள் நிறைந்திருக்கும்.

அதே சமயம், இதனால், மற்ற ஊர் தமிழர்களுக்கு இதை வாசிக்க எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. மற்ற ஊர் தமிழர்கள், தங்கள் ஊரில் வரும் இது போன்ற தமிழ் பத்திரிக்கைகளைப் பற்றி சொல்லலாம். இணைப்புகள் இருந்தால் கொடுக்கவும்.

கடந்த இரு வருடங்களாக வெளிவரும் இந்த சஞ்சிகை, சமீபத்தில் தனது இரண்டாம் வயதைக் கொண்டாடியது. வாழ்த்துக்கள்!!!

பனிக்கால ஆன்லைன் சஞ்சிகையில், தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் விழா பற்றிய எனது கட்டுரை வெளிவந்துள்ளது.

படிக்க இங்கே செல்லவும்.

.

Monday, February 2, 2015

ரஜினியை பேட்டி கண்ட சுஜாதா

(முன்குறிப்பு - 2010 முற்பகுதியில் எழுதிய பதிவு இது. இன்று எதேச்சையாக பார்க்க, அப்படியே பொது நலன் கருதி, உங்கள் பார்வைக்கு...)


சுஜாதா: ரஜினி, நீங்க ரொம்ப பெருசா ஜெயிச்சிருக்கீங்க. இப்போ திரும்பி பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோணுது? உங்க வெற்றிக்கு என்ன காரணம்? ஆண்டவன் அருளா, திறமையா, அதிர்ஷ்டமா, இல்ல உழைப்பா?

ரஜினி: சத்தியமா ஆண்டவன் அனுகிரகம்தான். அவன் கருணை இல்லாம நான் வளர்ந்திருக்க முடியாது.

ஆனா, எங்கேயோ பெங்களூரில் ஒரு பஸ் கண்டக்டரா இருந்த சிவாஜிராவ், இங்கே மெட்ராஸில் ஒவ்வொரு ஸ்டுடியோவா ஏறி வாசல் கதவைத் தட்டினான் பாருங்க, அது அவனோட முயற்சி!

அப்படிக் கிடைச்ச வாய்ப்பை நிரூபிக்கணும்னு முடிஞ்சதெல்லாம் செஞ்சு போராடினான் பாரு, அது அவனோட உழைப்பு.

நாம நிச்சயம் ஒரு நாள் ஜெயிப்போம்னு கனவு கண்டானே... அது அவனோட நம்பிக்கை.

அதோட, ஜனங்களைத் தன்னாலயும் எண்டர்டெயின் பண்ண முடியும்னு கெடந்து பல்டி அடிச்சான் பாருங்க, அது அவனோட திறமை.

அதுக்கு இந்த மக்களோட அன்பு கிடைச்சதே, அது அவன் செஞ்ச பாக்யம்!

---

பொத்திவெச்ச உள்ளங்கை மாதிரி இருக்கு வாழ்க்கை. ‘கண்டக்டர் டு சூப்பர் ஸ்டார்’னு என் கிராஃபை ஒரு கதையாச் சொன்னா யாராவது நம்புவாங்களா? நான் பஸ் கண்டக்டரா இருந்தேன். ரொம்ப சின்ன வேலை. சின்ன சம்பளம். ஆனால் அப்பவும் நான் சந்தோஷமா இருந்தேன். பெங்களூரிலேயே ஸ்டைலான கண்டக்டர் நான் தான். என் விசிலுக்கே அவ்வளவு ரசிகர்கள் இருப்பாங்க. நான் வர்ற பஸ்ஸுக்காக ரெண்டு பஸ்ஸை மிஸ் பண்ணிட்டுக் காத்திருந்த பாசஞ்சர்ஸ்லாம் உண்டு. இப்போ நினைச்சுப் பார்த்தா, என்னையறியாம அப்பவும் நான் ஒரு எண்டர்டெயினராத்தான் இருந்திருக்கேன்னு தெரியுது.

---

விகடன் நிருபர்: நமக்கு பையன் இல்லையேன்னு எப்பவாவது யோசிச்சதுண்டா?

ரஜினி: நெவர்! ஆண் பிள்ளை இல்லியேனு யோசிச்சதே இல்லை. ரெண்டும் பெண் குழந்தைகள்னு சந்தோஷப்பட்ட நேரங்களே அதிகம். ஐஸ்வர்யா-சௌந்தர்யானு நான் ரெண்டு பெண்களுக்குத் தகப்பன். காலையில் எந்திரிச்சு வரும்போது, வீட்டில் ரெண்டு மகள்களும் கலகலனு நடமாடுறதைப் பார்த்தாலே ஒரு தனி சந்தோஷம் வரும். ஆமா, ஒரே ஒரு பொண்ணு இருந்தாக்கூட போதும்... அந்த வீட்டுக்கே உயிர் வந்துடும். ஏன்னா... பெண் தான் சக்தி... தாய்!


இது ஆண்டவன் கட்டளை.
விகடன்.

Friday, April 13, 2012

என்ன செய்ய போகிறார் கலாநிதி மாறன்?

சுபாஷ் சந்திராவின் ஜீ டிவி தான், இந்தியாவின் முதல் சாட்டிலைட் சானல். ஆரம்பத்தில் அவருடைய சானல் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது, ஸ்டாரின் சாட்டிலைட்டில். ஸ்டார், அப்பொழுது ’மீடியா சாம்ராட்’ முர்டாக் வசம் இல்லை. முர்டாக் வசம் வந்த பின்பும், ஜீயும் ஸ்டாரும் ஒன்றாகவே சில காலம் இருந்தது.



ஹிந்திக்கு ஜீ, ஆங்கிலத்திற்கு ஸ்டார் என்ற ஒப்பந்தத்தை ஸ்டார் மீறிய காரணத்தால், இரு நிறுவனமும் பிரிந்தது. முட்டல் ஆரம்பித்தது, அதன் பின்பு தான்.

ஸ்டார் ஹிந்தி நிகழ்ச்சிகள் ஆரம்பித்து பல காலம் ஆகியும், ஜீ டிவியை விட பின் தங்கியே இருந்தது. ஜீ டிவியின் நிகழ்ச்சிகளே, டாப் டென் வரிசையில் வரிசை கட்டி நின்றது. எல்லா இடங்களிலும் முன்னணியில் இருக்கும் முர்டாக்கிற்கு இந்திய நிலையைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆத்திர ஆத்திரமாக வந்தது.

அச்சமயம் ஒருமுறை அவர் இந்தியா வந்திருந்த போது, இந்திய ஸ்டாரில் பணிபுரிந்துக்கொண்டிருந்த சமீர் நாயரும், பீட்டர் முக்ரஜா தயார் செய்திருந்த ஒரு நிகழ்ச்சிக்கான விளம்பரத்தை முர்டாக்கிடம் போட்டு காட்டினார்கள்.

“Who wants to be a millionaire?" என்ற பெயரில் பிரிட்டன் போன்ற நாடுகளில் பிரபலமான நிகழ்ச்சியின் ஹிந்தி வடிவம் அது. ‘கௌன் பனேகா லக்பதி’ என்று பெயர் வைத்திருந்தார்கள்.

விளம்பரத்தை அமைதியாக பார்த்துவிட்டு, முர்டாக் கேட்டார்.

“ஒரு லட்சம் என்றால் எவ்வளவு?”

டாலரில் சொன்னார்கள்.

“கம்மியா இருக்குதே!”

“இல்லை... இந்தியாவில் ஒரு லட்சம் என்றால் பெருசுதான்” தயங்கிய படி சொன்னார்கள்.

“இருந்துட்டு போகட்டும். இன்னும் பெருசா... கேட்டா வாயை பொளக்குற மாதிரி அமௌண்ட கூட்டுங்க!”

“பத்து லட்சம்’ன்னு மாத்திரலாமா, சார்?” டவுட்டுடன் கேட்டார்கள்.

“பத்தாது. நூறு லட்சம். ஒரு கோடியா ஆக்கிடுங்க”

ஒரு கோடியா?!!!

கேட்டவர்கள் வாயை பிளந்தார்கள்.

“இது தான் வேண்டும். இது பற்றி கேள்விபடுகிறவர்கள், அனைவரும் இப்படிதான் ஆச்சரியத்தில் வாயை பிளக்கவேண்டும்” என்று திருப்தியுடன் சொல்லிவிட்டு கிளம்பினார் முர்டாக்.

ஹிந்தியில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான தினம் முதல், ஸ்டாருக்கு ஏறுமுகம்.ஜீ டிவிக்கு இறங்கு முகம்.  பட படவென்று ஸ்டார் டிவி முன்னணிக்கு சென்றது. ஜீ படு பாதாளத்திற்கு சென்றது. இந்த ஒரு நிகழ்ச்சியை வைத்தே, அதன் இடைவெளியில் விளம்பரப்படுத்தப்பட்டு, பல ஸ்டார் டிவி நிகழ்ச்சிகள் பிரபலமானது.

பிறகு, ரொம்ப காலத்திற்கு பிறகு, பல வகை முயற்சிகளுக்கு பிறகு,பல நிறுவன மாற்றங்களுக்கு பிறகு, ஜீ தலை தூக்க ஆரம்பித்தது. அது என்ன, தற்போதைய நிலை என்ன என்பதையெல்லாம் தெரிந்துக்கொள்ள ஆர்வமிருந்தால் தேடி தெரிந்துக்கொள்ளவும். சுபாஷ் சந்திராவைப் பற்றி தெரிந்துக்கொள்ள, சொக்கன் எழுதிய “சுபாஷ் சந்திரா - ஜீரோவிலிருந்து ஜீ டிவி வரை” வாசித்து தெரிந்துக்கொள்ளவும்.

இதே போன்ற நிலை தான், தற்சமயம் தமிழ் சாட்டிலைட் சேனல் உலகிலும். கலாநிதி என்ன செய்ய போகிறார்?

.

Tuesday, January 24, 2012

புத்தகங்கள் - ஜனவரி 2012



என் வாழ்க்கையில் புத்தகங்களுக்கு ஒரு முக்கிய இடத்தை கொடுத்திருந்தேன். அலுவலக வேலை, உணவு, உறக்கம் - இவற்றுக்கு பிறகு, புத்தகங்களே முக்கிய இடத்தை ஆக்ரமித்து இருந்தன. இப்போது, நிலைமை மாறிவிட்டது. அலுவலக வேலை, சமையல், உணவு, உறக்கம், இணையம், தொலைபேசி போன்றவற்றுக்கு பிறகு, ஏதோ ஊறுகாய் போல் வாசித்து வருகிறேன்.

இந்தியாவில் இருந்து வரும்போது, மூன்று-நான்கு புத்தகங்கள் எடுத்து வந்திருந்தேன். சென்ற வருட ஆரம்பத்தில் சென்றிருந்த புத்தக கண்காட்சிகளிலும், அவ்வப்போது சென்னை சென்றிருந்த போதும், எக்கச்சக்க புத்தகங்கள் வாங்கியிருந்தேன். எல்லாம் ஊரில் பரணில் தூங்கிக்கொண்டிருக்கிறது.

லக்கேஜ் எடைக்கு இருக்கும் 23 கிலோ என்னும் லிமிட்டால், ஆசையிருந்தும் ஒவ்வொரு முறையும் புத்தகங்களை எடுத்து வரமுடியாமல் போகிறது. கடைசியாக வந்த பொழுது, ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கிய ‘வெட்டு புலி’யை, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் வீடு வந்து சேரும் வரை வாசித்து வந்தேன்.

புத்தக வாசிப்பு தான் குறைவே தவிர உருப்படாத பல விஷயங்களை இணையத்தில் வாசித்து தான் வருகிறேன். இருந்தாலும், புத்தக வாசிப்பு போல் வருமா? இணையத்தில் குமுதம், ஆனந்த விகடன் என பல புத்தகங்கள் கிடைத்தாலும், ஒன்றிரண்டு நிமிடத்திற்கு மேல் வாசிக்க முடிவதில்லை. ஒருவேளை, கிண்டில், ஐபேட் போன்றவை மூலம் வாசித்தால் நன்றாக இருக்குமோ என்னவோ? அனுபவசாலிகள் சொல்லலாம்.

இங்கு தென்றல் என்றொரு தமிழிதழ் வருகிறது. இந்திய மளிகை கடைகளில் வைத்திருப்பார்கள். இலவசம் தான். இதழ் முழுக்க இந்திய உணவகங்கள், டாக்டர்கள், அர்ச்சகர்கள், வித்வான்கள் விளம்பரங்கள் இருக்கும். நடுவே, கதை, பேட்டி, போட்டி, துணுக்குகள் என ஒரு மாதிரி ஜனரஞ்சகமான புத்தகம். பாராட்டுக்குரிய முயற்சி எனலாம். அதை வாசிப்பதுண்டு.

எங்காவது தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களை சந்திக்கும் போது, மிக மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாக இருக்கும். வீட்டிற்கு கூப்பிட்டு, புத்தகங்களை பரிமாறிக்கொள்வோம்.

சமீபத்தில், அப்படி ஒருவர் வீட்டிற்கு சென்று, நான் கொண்டு வந்த புத்தகங்கள் சிலவற்றை கொடுத்து வந்தேன். அவர் பதிலுக்கு ரமணிசந்திரன் நாவல்களை காட்டினார். டெம்ப்ளேட் தெரியும் என்பதாலும், பெரிதாக ஆர்வம் இல்லை என்பதாலும், எப்படியும் கொண்டுவந்தால் சும்மா தான் இருக்கும் என்பதால் எடுத்து வரவில்லை. ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் எழுதிய ‘அந்த பறவைகளிடம் சொல்லுங்கள்’ என்ற ’கதை பொஸ்தக’த்தை மட்டும் எடுத்து வந்தேன்.

வந்த புதிதில், ஆர்வத்தில், ஆங்கில புத்தகங்களை மலிவான விலையில் பார்க்கும் போது வாங்கிவிடுவேன். அது என்னமோ, தெரியவில்லை. ஆங்கிலத்தில் வாசிக்க வேண்டும் என்றாலே கசக்கிறது. முயற்சிக்க வேண்டும்.

நல்ல, எனக்கு பிடித்தமான புத்தகங்களுடனான தொடர்பு கிட்டும்வரை, இதே கதிதான். என்னுடைய இந்த தளத்தில் நான் முன்பு எழுதியதை அவ்வப்போது வாசிப்பேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்? நான் எவ்வளவு காய்ந்து கிடைக்கிறேன் என்று!

.

Sunday, November 6, 2011

நூலகம் போகத்தான் வேண்டுமா?

நூலகம் செல்வது எனக்கு பிடித்த விஷயம். என்னை பொறுத்தவரை, அது மலரும் நினைவுகளாகிப் போன விஷயம். நூலக அனுபவங்களை ஏற்கனவே இங்கு பதிந்திருக்கிறேன்.

டென்வரில் சந்திந்த சில இந்திய நண்பர்கள், என்னிடம் இங்கிருக்கும் லைப்ரரிக்கு போய் வர சொல்வதுண்டு. நான் ஆர்வம் காட்டாமல் இருந்தேன். சில காரணங்கள் - பஸ் பிடித்து சென்று வர வேண்டும். ஆங்கில புத்தகங்களாவே இருக்கும். அது கொஞ்சம் நமக்கு கசப்பான விஷயம். ஏற்கனவே சீப்பாக கிடைத்ததே என்று வாங்கிய சில ஆங்கில புத்தகங்கள் அலமாரியில் உறங்கிக்கொண்டிருக்கிறது.

ஆனால் எனக்கு தெரிந்த சில இந்திய குடும்பங்களை, குடும்பத்தலைவர்களை பாராட்ட வேண்டும். விடுமுறை தினங்களில் அவர்களது குழந்தைகளை கூட்டிக்கொண்டு, லைப்ரரி சென்றுவிடுவார்கள். கை நிறைய புத்தகங்கள் எடுத்து வந்து, பிறகு சில வாரங்கள் கழித்து திரும்ப கொடுப்பார்கள்.

இங்குள்ள அரசாங்க அமைப்புக்கள் நூலகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம். நான் பொதுவாக நகரத்தின் மையப்பகுதிகளுக்கும், சில பெரிய கடைகளுக்கும் சென்று வர, அரசு பேருந்துகளில் சென்று வருவேன். ஒன்றிரண்டு வழித்தடங்கள் தான் இருக்கும். அதில் சென்று வரும் போதே, நான் மூன்று நூலகங்களைப் பார்த்திருக்கிறேன்.

ஆனாலும், புத்தகங்களை எடுக்க இருமுறை பேருந்துகளிலும், திரும்ப கொடுக்க இருமுறை பேருந்துகளிலும் செல்ல வேண்டுமே! என்று சோம்பல் பட்டுக்கொண்டு, அங்கு செல்ல முயற்சி எடுத்ததே இல்லை.

---

சில தினங்களுக்கு முன்பு, என்னிடம் ஒரு பேச்சிலர் நண்பர், வாரயிறுதியில் லைப்ரரி சென்று வந்ததாக கூறினார். ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அவருடைய பற்றி எனக்கு தெரியும்.

“போயி?” ஆச்சரியத்துடனேயே கேட்டேன்.

“நாலைஞ்சு டிவிடி எடுத்துட்டு வந்தேன்.”

“டிவிடியா? என்ன டிவிடி?”

“படம் தான். சில இங்கிலீஷ் படங்கள்.”

அதானே பார்த்தேன்?!!!

இருந்தாலும், ‘அதான், எல்லாம் இண்டர்நெட்டில் கிடைக்கிறதே?’ என்று கூறிவிட்டு வந்தேன்.

---

நேற்று டென்வர் ஆர்ட் மியூசியம் சென்று வந்தேன். கலையில் அவ்வளவு ஆர்வமா? என்று கேட்காதீர்கள். மற்ற நாட்களில் பதிமூன்று டாலர்கள். நேற்று இலவசம். கொஞ்சம் நேரம் சுற்றிவிட்டு வெளியே வந்தப்போது, பக்கத்தில் நகரின் தலைமை நூலகம் இருந்தது.



உடன் வந்த நண்பர், இந்த ஊரில் இருந்த சாட்சிக்காக, லைப்ரரி கார்டு வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்றார். காசா, பணமா - வாங்கிக்கொள்ளலாம் என்று சென்று வாங்கிக்கொண்டோம்.



பெரிய லைப்ரரி. முழுக்க கணிணிமையமாக்கப்பட்டது. முன்னால் இருந்த கணிணிகளில் எங்கள் தகவல்களைப் பதிந்துக்கொள்ள, அங்கிருந்த அலுவலகர் லைப்ரரி கார்டு கொடுத்தார். கணிசமான மக்கள் கூட்டம் இருந்தது. வகைக்கேற்ப நிறைய ஹால்கள். ஒவ்வொரு ஹாலிலும் வகைக்கேறப நிறைய பிரிவுகள்.

நாம் முதலில் எங்கு செல்வோம்? டிவிடிகள் இருக்கும் ஹாலுக்குள் நுழைந்தோம். நிறைய ஆங்கில படங்கள். வேறு என்ன மொழிகள் இருக்கிறது என்று பார்வையை ஓட்டினேன். ஹிந்தி கண்ணில் பட்டது. சீனி கம், சாந்தினி சவுக்... கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. பிறகு ஆட்டோமேட்டிக்காக தமிழை தேடி கண்கள் ஓடியது. தெலுங்கு கண்ணில் பட்டது. ஸ்டாலின்... அடுத்தது, தமிழ் இருந்தது! கன்னத்தில் முத்தமிட்டால்...

ஒன்றிரண்டு படங்கள் தான் இருந்தாலும் எனக்கு அது வியப்பு தான். டென்வர் எங்கோ இருக்கிறது. தமிழ்நாடு எங்கோ இருக்கிறது. இது தமிழ் மொழியின், தமிழ் சினிமாவின் வீச்சா? அல்லது, இங்கிருக்கும் நூலக அமைப்பின் ஆர்வ தேடலா? தெரியவில்லை.

பிறகு மற்ற பகுதிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். மறக்காமல், எந்த புத்தகத்தையும் எடுக்காமல் வந்தோம்.

சுலபமாக சென்று வர ஒரு வழி செய்துவிட்டு, பிறகு தான் இந்த பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்.

.

Thursday, December 23, 2010

நன்றி தமிழ்மகன்

கொஞ்ச நாட்களுக்கு முன்பு, எழுத்தாளர் தமிழ்மகன் எழுதி உயிர்மை பதிப்பகத்தின் வெளியிட்டில் வந்திருந்த ”செல்லுலாயிட் சித்திரங்கள்” என்ற புத்தகத்தை வாங்கியிருந்தேன். தமிழ்மகன், தனது திரையுலக அனுபவங்களைப் பற்றி சுவையாக எழுதிய புத்தகம் இது. உயிரோசையில் தொடராக வந்தது. அவருடைய வலைத்தளத்தில் வருவதை வாசித்திருக்கிறேன். பின்னூட்டங்களும் இட்டிருக்கிறேன்.



இன்று அந்த புத்தகத்தை எடுத்து புரட்ட ஆரம்பித்தேன்.

முதல் பக்கத்தில் நன்றி சொல்லியிருந்தார், ஒரு கூட்டத்திற்கே. இப்படி.

நன்றி

என். சொக்கன், பாஸ்டன் பாலா, உண்மைத்தமிழன், ஆயில்யன், ராஜம் ரஞ்சனி, கே. பாலமுருகன், வா.மணிகண்டன். ஜோ, வண்ணத்துப்பூச்சியார், ஆதவன், இலா, நிலோபர் அன்பரசு, வெங்கடரமணன், ஏ.மாரீஸ்வரன், வினோத் கௌதம், முரளிகண்ணன், ராமசுப்ரமணிய சர்மா, தமிழ் ஸ்டூடியோ.காம் அருண், கேபிள் ஷங்கர், ராஜா, சரவணகுமரன், தமிழ் சினிமா, கோவை ரகுநாதன் என ஊக்கமளித்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி எழுதிய வலைவாசி நண்பர்களுக்கு பிரத்யேகமாக.


தெரிந்த பெயர்களாக இருக்கிறதே? என்று வாசித்ததில் என் பெயரும் வந்தது. அது நானாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

எதிர்ப்பார்க்காமல் கண்ணில் பட்ட விஷயம், ரொம்ப மகிழ்வை கொடுத்தது. பின்னூட்டத்திற்கு இப்படி ஒரு நன்றியா?

உங்க நன்றிக்கு ரொம்ப நன்றி சார்.

.

Sunday, November 21, 2010

பெங்களூர் புத்தகத்திருவிழா 2010

இந்த வருடம், புத்தகங்கள் வாங்கி நெடுநாளாகிவிட்டது. ஆனால், தினமும் ஏதேனும் புத்தகம் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். புத்தகங்கள் கடைவில் வாங்கவில்லையே தவிர, இரவலாக வாங்கி சில புத்தகங்கள் வாசித்தேன். இரவலாக வாங்கி வாசிக்கும் போது, ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. தவிர, சீக்கிரம் வாசித்துக்கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ‘ஒரு வேலையை முடிப்போம்’ என்ற கணக்கிலேயே வாசிக்க வேண்டி இருக்கும். அதனால், அடுத்ததாக எப்போது புத்தகம் வாங்குவோம் என்ற ஆர்வத்தில் இருந்தேன்.

பெங்களூர் புத்தகக்கண்காட்சி, இந்த வருடமும் அதே பேலஸ் க்ரவுண்டில் தான். ஆனால், உள்ளூக்குள் வேறொரு இடம். வழக்கம்போல், பைக்கிற்கு 10 ரூபாயும், அனுமதி சீட்டுக்கு 20 ரூபாயும். புத்தகங்களை நெருங்குவதற்கே 30 ரூபாய் செலவாகிறது. உள்ளே புத்தகங்களை கண்டபோது, அவையும் விலை உயர்ந்து இருந்தன. இருந்தாலும், புத்தகங்களுக்கு என்று ஒரு மதிப்பு இருப்பதால், இந்த மதிப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஸ்டால் வாடகை, பதினைந்தாயிரம் என்றார்கள். யப்பா! சில ஸ்டால்களை கண்டபோது, பாவமாக இருந்தது.

ஒருமுறை ஒரு முழு ரவுண்ட் சென்றுவிட்டு, வாங்க நினைத்த புத்தகங்களை பார்த்து வைத்துவிட்டு, திரும்ப வந்து வாங்கிக்கொண்டேன். எப்போதும் இருப்பதை விட, இந்த முறை கன்னட புத்தகங்கள் அதிகம் இருப்பதாக தோன்றியது. ஆனாலும், இந்த முறையும் அதிகம் இருந்தது, ஆங்கில புத்தகங்களே. தமிழ் வழக்கம் போல. வானதி, அல்லயன்ஸ், கண்ணதாசன், விகடன், கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு பதிப்பக புத்தகங்கள் கிடைத்தன.

நான் சென்றதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்திருக்கும் போல. அந்த மேக்கப்பில் சில பெண்கள் வெளியே சென்றுக்கொண்டு இருந்தார்கள். புத்தக அரங்கை விட்டு, வெளியே வரும் வழியில் ஊறுகாய், ஊதுபத்தி கடைகளும் வழக்கம்போல இருந்தன.

கண்காட்சி என்றாலே டெல்லி அப்பளம், பஜ்ஜி, பேல் பூரி, பானி பூரி, ப்ரெட் ஆம்லெட், பஞ்சு மிட்டாய், ரோஸ் மில்க், சோடா இல்லாமலா? இருந்தது, ரொம்பவும் காஸ்ட்லியாக.

---

இந்த முறை நித்தியானந்தாவின் புத்தகங்கள் கிடைக்கவில்லை. இரண்டு புது சாமியார்களை தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய இஸ்லாமிய புத்தக ஸ்டால்கள் இருந்தன.

மத்தியில் ஒரு பெரிய இடத்தில், குரானை இலவசமாக கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் கொடுத்து தள்ளினார்கள்.

பகவத் கீதை தள்ளுபடி விலையில் கிடைத்தது. 1000 ரூபாய் மதிப்புள்ளது, 120 ரூபாய்க்கே என்று விற்றார்கள்.

குரான் இலவசமாகவும், பகவத் கீதை தள்ளுபடியில் கிடைக்க, பைபிள் நிலை என்னவென்று தெரியவில்லை.

---

பெரிதாக எதுவும் திட்டமிட்டு வாங்கவில்லை. வாசிக்க வேண்டும் என்று அந்த நேரத்தில் தோன்றிய புத்தகங்களை எல்லாம் கையில் எடுத்தேன். பெரும்பாலும், ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த புத்தகங்களையே என் கைகள் தேர்வு செய்தன. அனைத்துமே, இணையத்தில் ஏதோ ஒருவகையில் அறிமுகம் கிடைத்தவை.

இன்னொரு விஷயம், கொஞ்சம் பிரபலமான ஆசிரியர்களையே வாங்கினேன். எதுவுமே திட்டமிடவில்லை. மனநிலை அப்படி இருந்தது.

வாங்கிய புத்தகங்களை, ஒரு சின்ன அனாலிஸிஸ் செய்து பார்த்த போது, இப்படி வந்தது.



இன்னும் ஒரு லெவல் உள்ளே சென்றபோது, இப்படி வந்தது.



பெரும்பாலானவை, வாழ்க்கை வரலாறும், கட்டுரை வடிவிலான புத்தகங்களும். அதுவும், எப்படிப்பட்ட புத்தகங்கள் என்று பார்த்த போது, திரைத்துறையும் அரசியலுமே முன்னிலை வகித்தன. பயணமும், வணிகமும் சின்ன இடத்தை பிடித்ததே ஆறுதலான விஷயம். இதன் மூலம், எனது வாசிப்பு விருப்பங்கள் எனக்கே தெரிகிறது.

இனி அடுத்த முறை எப்படி வருகிறது என்று பார்ப்போம். சென்ற வருட வரலாறு, இங்கே.

என்னென்ன புத்தகங்கள் என்பதை இனிவரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

.

Sunday, September 19, 2010

2 ஸ்டேட்ஸ்

அலுவலகத்தில் எனக்கு தெரிந்த பலர் கொஞ்ச காலத்திற்கு முன்பு இந்த புத்தகத்தைத்தான் வாசித்துக்கொண்டிருந்தார்கள். சிவப்பு அட்டை. தூரத்தில் இருந்தே கண்டுபிடித்துவிடலாம். எனக்கு அப்போது வாசிக்கும் ஆர்வமே ஏற்படவில்லை. சமீபத்தில் கைவசம் வேறு எதுவும் இல்லாததால், ஒரு நண்பர் தூண்ட, வாங்கி வாசித்தேன்.



சேத்தன் பகத்திற்கு இது நாலாவது நாவல். அதற்குள் பெரும் புகழுக்கு சொந்தக்காராகிவிட்டார். டைம்ஸ் வெளியிட்ட ‘2010இன் நூறு செல்வாக்கான மனிதர்கள்’ பட்டியலிலும் இடம்பிடித்துவிட்டார்.

இவருடைய புத்தகங்களின் இப்படியான விற்பனைக்கு நான் காரணமாக நினைப்பது.

* எளிமையான ஆங்கிலம்.
* எள்ளலும் நக்கலும்.
* மலிவான விலை. (95 ரூபாய்)

சென்ற வாரம் லேண்ட்மார்க் சென்றபோது, பகத்தின் புத்தகங்கள் நான்கையும் ஒவ்வொன்றும் ரூபாய் 50 என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். ப்ளாட்பாரத்தில் கூட இப்படி விற்க மாட்டார்கள்.

---

இந்த புத்தகத்தின் கதையை பார்ப்போம். உலகமெங்கும் காதலென்றால் ஆண்-பெண் என்று இருவருக்கிடையே வருவது. ஆனால், இந்தியாவில் காதலுக்கு பல லெவல்கள் இருக்கிறது. பையன் - பொண்ணு, பையன் - பொண்ணோட குடும்பம், பொண்ணு - பையனோட குடும்பம், பையனோட குடும்பம் - பொண்ணொட குடும்பம் என இவ்வளவுக்கு பிறகும் பையனுக்கும் பெண்ணுக்குமான காதல் நீடிக்க வேண்டும். இது தான் கதை சுருக்கம். கதை புரிந்திருக்குமோ?

நாம் பல தமிழ் படங்களில் பார்த்ததுதான்.

கதையின் பலம் - ஆசிரியரின் நகைச்சுவை உணர்வுதான். கல்லூரி பற்றி, பெண்கள் பற்றி, தமிழர்கள் பற்றி, பஞ்சாபிகள் பற்றி, அம்மாக்கள் பற்றி, அப்பாக்கள் பற்றி, வங்கிகள் பற்றி என எல்லாவற்றை பற்றியும் நக்கல் விட்டுக்கொண்டே இருக்கிறார். பெரும்பாலும், இவை இவர் மனதிற்குள் நினைப்பதாக வருகிறது.

பலவீனம் - முடிவு எப்படி, அடுத்தது என்ன நடக்கும் என எல்லாம் முன்பே தெரிந்துவிடுவது தான். இருப்பினும், சேத்தன் பகத்தின் நடை கதையோட்டத்திற்கு கைக்கொடுக்கிறது. இவருடைய கதைகள் தொடர்ந்து படமாக்கப்படுவதாலோ என்னவோ, கதை சில இடங்களில் சினிமாத்தனமாக இருக்கிறது.

---

கதையை படித்த இளசுகள், அகமதாபாத் ஐஐஎம்மில் சேர துடிப்பாக கேட் எக்ஸாமிற்கு படித்தாலும் படிப்பார்கள். பின்ன, கதையின் நாயகி, நாயகனின் ஹாஸ்டல் அறையில் தான் போர்வை போர்த்திக்கொண்டு பரீட்சைக்கு படிக்கிறாள்.

இப்படி ஓவரான விஷயங்கள் இருந்தாலும், ஆசிரியர் தான் கண்ட பலவற்றை கண்முன் நிறுத்துகிறார். சென்னை ஆட்டோ டிரைவர்களின் கெட்ட வார்த்தையை கூட அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கிடைக்கிற கேப்பில் எல்லாம் தமிழர்கள் கேவலப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். பஞ்சாபிகளும் கிண்டல் செய்யப்பட்டு இருப்பதால், மன்னித்துவிட வேண்டி இருக்கிறது. சரிசமமாக கேவலப்பட்டு இருக்கிறார்களா என்று அளந்துப்பார்க்க வேண்டும். உண்மையில், ஐஐஎம், சிட்டி பேங்க் போன்றவர்கள் தாங்கள் கேவலப்பட்டதற்கு ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். உண்மைதானே என்று அவர்களே விட்டுவிட்டார்கள் போலும்.

சிரித்துக்கொண்டே பொழுதை போக்க உதவும் புத்தகம். உடனே யாரையாவது காதலித்துவிட வேண்டும் என்றும் நினைக்க வைக்கும். ஜாக்கிரதை!

.

Tuesday, September 7, 2010

மார்க்கெட்டிங் யுத்தங்கள்

யாராவது சண்டை போட்டுக்கொண்டிருந்தால், அதை பார்ப்பதில் ஒரு ஆர்வம். கலைஞரும் ஜெயலலிதாவும் திட்டி கொண்டால் தலைப்பு செய்தி, அசினை த்ரிஷா வாரினால் கோலிவுட் டிட்பிட், சாரு - ஜெயமோகன் லடாயே இணைய இலக்கியம் என்று நமது பொழுதுபோகிறது. அட, ரோட்டுல போகும் போது தெரியாத யாரோ ரெண்டு பேர் சண்டைப்போட்டுக்கிட்டா கூட, நின்னு பார்த்துட்டு போக ஒரு கூட்டமே உண்டு.

அரசியல், சினிமா, இலக்கியம் என்றில்லாமல் கோட்டு சூட்டு போட்டுக்கொண்ட வணிக உலகிலும் சண்டை சச்சரவுகள் உண்டு. அவ்வப்போது விளம்பரங்கள் மூலம் இது வெளிவரும். வெளியே தெரியாத உள்ளடி பைட்களும் இவ்வுலகில் உண்டு.

இப்படியான உலகளாவிய வணிக போட்டி சண்டைகளை பற்றிய தொகுப்பு - கிழக்கு பதிப்பகத்தின் ‘மார்க்கெட்டிங் யுத்தங்கள்’.

---



கோகோ கோலா - பெப்ஸி பற்றி சொல்லாமல் மார்க்கெட்டிங் பற்றி சொல்ல முடியுமா? விளம்பரங்களால் இயங்கும் நிறுவனங்கள். விளம்பரங்களால் மாற்றி மாற்றி அடித்துக்கொள்ளும் நிறுவனங்கள். நூறு வருடங்களுக்கு மேலாக போட்டிப்போடும் நிறுவனங்கள். இவர்களுடைய ஒவ்வொரு விளம்பர யுக்தியும், மார்க்கெட்டிங் மாணவர்களுக்காக பாடங்கள். பெப்ஸியின் அதிரடி மார்க்கெட்டிங்கை தாங்க முடியாமல், 1985இல் கோகோ கோலா தன்னுடைய சுவையை கூட பெப்ஸி போல் மாற்றியிருக்கிறது. வெறும் 78 நாட்கள். ஆனால், இன்னமும் அமெரிக்காவில் கோகோ கோலா எப்படி நம்பர் 1 என்பது புரியவில்லை.

நிர்மாவை தயாரித்த கஸன்பாய் ஆரம்பத்தில் அதை சைக்கிளில் கடை கடையாக கொண்டு சென்று, வாங்குவதற்கு பயந்த கடைகாரர்களிடம் “விற்பது இருக்கட்டும். நீங்க வீட்டுல யூஸ் பண்ணி பாருங்க.” என்று சொல்லி சும்மா கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அடுத்த முறை சென்றபோது, இவருக்காக கடைக்காரர்கள் காத்திருக்கிறார்கள். வியாபாரம் சூடு பிடிக்க, “வாஷிங் பவுடர் நிர்மா... பாலை போல வெண்மை, நிர்மாவாலே வருமே...” விளம்பரம், இங்கிலாந்தின் யூனிலீவருக்கே சிறிது காலம் ஆட்டம் காட்டியது.

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மருந்தொன்றில் ஏதோ போட்டி நிறுவனம் சயனைட் தடவி, அதில் ஏழு பேர் இறக்க, ஜே அண்ட் ஜே நிறுவனத்தின் வியாபாரத்தையே ஸ்தம்பிக்க வைத்தார்கள். இவர்களும் விட்டுவிடவில்லை. இவர்களது மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று இவர்களே விளம்பரம் கொடுத்து, மருந்து ஸ்டாக் எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக்கொண்டு, வேறு பாதுகாப்பான பேக்கேஜிங் வடிவமைத்து, திரும்பவும் மருந்தை மார்க்கெட்டிங் செய்து, வியாபாரத்தில் ஜெயித்தார்கள்.

நெட்ஸ்கேப் நிறுவனம் தனது ப்ரவுசர்களை இலவசமாக கொடுத்து 85 சதவித மார்க்கெட் ஷேர் வைத்திருந்தது. பில்கேட்ஸ் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ப்ரவுசரை பொட்டலம் கட்டி கொடுக்க, நெட்ஸ்கேப் ஊத்திக்கொண்டது.

இப்படி பல துறைகளில் நடைபெற்றுள்ள மார்க்கெட்டிங் யுத்தங்கள் பற்றி ஆசிரியர் எஸ்.எல்.வி. மூர்த்தி, இந்த புத்தகத்தில் சுவைப்பட குறிப்பிட்டுள்ளார். ‘பாம்பே டையிங்’ நூடியா மேலான ரிலையன்ஸ் அதிகாரியின் கொலை முயற்சி போன்ற அதிர்ச்சி தகவல்களும் உண்டு. லேட்டஸ்ட் பன்றி காய்ச்சல் மருந்து வியாபாரம் வரை சொல்லியிருக்கிறார். சமீபத்திய ஹார்லிக்ஸ் - காம்ப்ளான், கூகிள் - மைக்ரோசாப்ட் சண்டை பற்றி ஏதும் இல்லை.

---

வெறும் சண்டைகளை பற்றி மட்டும் சொல்லாமல், ஆங்காங்கே மார்க்கெட்டிங் பாடங்களும் எடுத்திருக்கிறார் ஆசிரியர். ஆனால் குறியெல்லாம் குடுமிபிடியில் தான் இருக்கிறது. மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு தகவல் ரீதியில் தவிர்த்து, இப்புத்தகம் என்ன கற்றுக்கொடுக்கும்? உண்மையில் ஒரு சிலதை தவிர்த்து, பெரும்பாலானவை மோசமான முன்னுதாரணங்களே. இன்றைய உலகில் இதுதான் சரியென்று ஆகிவிட்டது.

சரி, தவறு என்பதை விட்டுவிட்டு ஜெயிப்பதை நோக்கி மட்டும் ஓடவேண்டும் என்பதாகிவிட்டது. நேர்மையாக தொழில் நடத்த வேண்டும் என்பவர்களுக்கு இப்புத்தகம் மார்க்கெட்டிங் நுணுக்கங்களை சொல்லிக்கொடுக்குமோ இல்லையோ, கொஞ்சம் பயத்தையும், எச்சரிக்கையுணர்வையும் கொடுக்கும்.

புத்தகம் வாங்க, இங்கு செல்லவும்.

தொடர்புடைய பதிவுகள்

காம்ப்ளான் - ஹார்லிக்ஸ் ஊட்டசத்து சண்டை
ஏர்டெல் - ரிலையன்ஸ் டிடிஎச் அடிதடி
கோனிகாவின் தமிழன் ஓசி ஆபர்
தமிழ்ப்பட விளம்பர தோரணம்
ரெட்பஸ் சக்ஸஸ் ஸ்டோரி

.

Saturday, September 4, 2010

ஜெயமோகன் பற்றி சுஜாதா

சுபமங்களாவில் மார்ச் 1993இல் வந்தது.

---

தற்போது தமிழில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருப்பவர்களில் கவனிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஜெயமோகனின் பெயர் இருக்கிறது. சில ஆண்டுகளாக எழுதிவரும் இவர் கதைகளை நான் அவ்வப்போது கவனித்ததுண்டு. போன வருஷம் இவர் கதையான ‘ஜகன் மித்யை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜனாதிபதி பரிசு பெற்றது சந்தோஷமாக இருந்தது. (இவருடைய வேறு நல்ல கதையை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது வேறு விஷயம்.) சிறு பத்திரிக்கைகளில் எழுதிவரும் ஒரு இளம் எழுத்தாளருக்கு இந்த மாதிரி அடையாளம் கிடைத்திருப்பது சந்தோஷமான விஷயமே.



”திசைகளின் நடுவே”. ஜெயமோகனின் ‘ரப்பர்’ நாவல் ஏற்கனவே வெளிவந்து ‘நல்ல கவனிப்பு பெற்றது’ என்று பின்னட்டை சொல்லும் இந்த புத்தகம் - பதினாலு சிறுகதைகளின் தொகுப்பு. அவருடைய சிறுகதை திறமையை கவனிக்க போதுமான கதைகள் உள்ளன.

என்னை பொறுத்த்வரையில் நான் ஒரு சிறுகதையின் உணர்ச்சிபூர்வமான அனுபவத்தில் பங்கேற்கும்போது தான் அது எனக்கு நல்ல கதையாகிறது. இல்லையெனில் நான் அதை உடனே நிராகரித்துவிடுகிறேன். மற்றவன் அனுபவம் எனக்கு முக்கியமில்லை.

இந்த பரீட்சையில் ஜெயமோகனின் “திசைகளின் நடுவே” தொகுப்பில் பதினான்கு கதைகளில் ஐந்து தேர்ந்தன. இதனால் மற்றவை நல்ல கதைகள் இல்லை என்று சொல்லவில்லை. எனக்கு அவை உறைக்கவில்லை.

‘பல்லக்கு’ என்ற அபாரமான கதையில் நான் சொன்ன நல்ல கதைக்குரிய அத்தனை அடையாளங்களும் இருக்கின்றன. முதலில் கதாசிரியன் சிருஷ்டிக்கும் தனிப்பட்ட யதார்த்தம். அந்த மலையாளச் சூழல். “ஓர்மிச்சா எனகு கரிச்சல் வரது, ஏமானே” போன்ற வினோத உரையாடல்கள். அற்புதமான வர்ணனைகள். இந்த வகை வர்ணனைகள் அந்தக் கதை சூழலை முழுவதும் அங்கீகரிக்க வைக்கின்றன்.

இந்தச் சூழலில் சொல்லப்படும் சம்பவங்கள் நமக்கு ஏற்படுத்தும் ‘ரியலைஸேஷன்’ தான் அந்த கதையின் இலக்கியத்தரத்தை உயர்த்துகிறது.

ஜெயமோகன் ஒரு வேற்று மொழிக்காரரின் அசாத்திய தைரியத்துடன் சிறுகதையின் பலவித வடிவங்களை முயற்சிப்பதை பாராட்ட வேண்டும். வேதகாலக் கதைகள், சாமியார் கதைகள், பிலாசபி கதைகள் எல்லாமே தயங்காமல் முயற்சிக்கிறார்.

”திசைகளின் நடுவே”யின் முன்னுரையில் “அறச்சார்பே எனது கடவுள். அறச்சார்பற்ற படைப்பை இலக்கியமாக மதிக்க மாட்டேன். கால் சுண்டு விரலால் எற்றித்தள்ள தயங்க மாட்டேன். அவற்றின் சகல அங்கீகாரங்களுடனும் கூட!” என்கிறார். இந்த ஆரவாரமான அலட்டலான முன்னுரையின் தேவையில்லாமலேயே ‘நதி’, ‘வலை’, ‘போதி’, ‘படுகை’ போன்ற கதைகளை ரசிக்க முடிகிறது.

அறசார்பு என்று எதை சொல்கிறார் என்பது குழப்பமாக இருப்பினும் ஒரு தொகுதிக்கு ஒரு ‘பல்லக்கு’ வந்தாலே போதும்.

.

Wednesday, June 30, 2010

இடிந்த வீட்டிலிருந்து உயரத்திற்கு - வடிவேலு

தன்னம்பிக்கை, சுயமுன்னேற்ற கதைகளை சிவ் கெரோ, எம்.எஸ். உதயமூர்த்தியோ, சோம. வள்ளியப்பனோ சொன்னால்தான் கேட்பீர்களோ? வைகை புயல் சொல்றதையும் கேளுங்க.



---

ஷூட்டிங் முடிச்சுட்டு் பொள்ளாச்சியிலிருந்து கார்ல மதுரைக்குப் போயிக்கிருக்கேன். நடுச்சாமம். எங்கிட்டோ வழியில ஒரு ஊரு. ஒரே ஒரு பொட்டிகடையில் மினுக்மினுக்குண்டு அரிக்கேன் வெளக்கு ஆடிட்டிருக்கு. குடிக்கத் தண்ணி கேக்கலாம்னு எறங்குறேன்.

அந்த கடக்காரரு என்னயப் பாத்ததும் ‘யெய்யா வடிவேலு’ன்னு விசுக்குன்னு எந்திருச்சு ஓடி வர்றாரு. ‘ஏடி தங்கம்’னு உள்ள ஓடிப்போயி தூங்கிக்கிருக்க அவரு புள்ளைய எழுப்புறாரு. ‘வடிவேலு மாமா வந்துருக்கார்டி’னு அந்த ரெட்ட சட குட்டிப் பொண்ண எழுப்பிக் கூட்டி வர்றாரு. வீடே முழிச்சிருச்சு. தூக்கத்தையெல்லாம் மறந்து, அந்தப் புள்ள என்னையக் கண்டுட்டு ரோசாப்பூ கெணக்கா ‘கேகே’ன்னு சிரிக்குது. ‘எங்கடி, மாமா மாதிரி நடிச்சுக் காட்டு’ன்னு அவுக அம்மா கேக்கவும், ‘வந்துட்டான்யா வந்துட்டான்யா’னு கையக் கொட்டி நடிச்சுக் காட்டுது. ‘ப்ப்ப்ப்ப்பூம்...’ என்னைய மாதிரியே அழுது காட்டுது.

கடையிலயிருந்து ஒரு மேரி பிஸ்கெட் பாக்கெட்ட எடுத்து எங் கையில திணிக்கிறாரு. கார்ல வந்து ஏறி உக்காந்தா தூக்கங் காங்கலைண்ணே. என்னென்னமோ நெனப்புங்க வருது. காரணமே இல்லாம கண்ணுல தண்ணி முட்டுது. கண்ண மூடுனா கிர்ர்ர்ருனு சினிமா கெணக்கா என் வாழ்க்கையே எனக்குள்ள ஓடுது.

கண்ணாடி வெட்டுற தெனக்கூலி நடராஜ பிள்ளையோட மவன் மதுர வேலு. மங்குடிச ஒண்ணுதேன் சொத்து. மக்குப் பய படிச்சது அஞ்சாப்புதேன். கன்னங்கரேல்னு காத்தா கருப்பா ஒரு உருவம். எங்கிட்டுப் போனாலும் ‘அப்பிடி தள்ளி நில்லுப்பா’னு ஒடனே ஓரங்கட்டி வைக்கிறதுக்கான அத்தனைத் தகுதிகளோடயும் அலைஞ்சுக்கிருந்தவன்.

பசிச்சா பாதி வயித்துக்குச் சாப்பாடு, மீதி வயித்துக்கு பீடிப் பொகனு வாழ்ந்த பய. அப்பாரு தொழில அப்பிடியே பிக்கப் பண்ணி, காலேஜு போக வேண்டிய வயசுல கண்ணாடி வெட்டப் போனவன். ஆனா, அறியாத புரியாத வயசுலேயே வெள்ள வேட்டியத் தெரையாக் கட்டி, பிலிம் சுருள்ல நெழலு காட்டி படம் ஓட்டுன விஞ்ஞானிக்குப் பொறந்த விஞ்ஞானியும் அவந்தேன்.

தங்கம், சிந்தாமணி, செண்ட்ரலு, தங்க ரீகல்னு மதுர சினிமாக் கொட்டாயிங்கதான் அவம் பள்ளிக்கொடம். வாத்தியார்னா அது எம்.ஜி.ஆருதேன். அவரு பாட்டுகளக் கேட்டு கனா கண்டு, காதலிச்சு, நரம்ப முறுக்கி கோவப்பட்டு, அழுது சிரிச்சு வளந்த பய. டப்பாக்கட்டு கட்டிட்டு கவுண்டர்ல அடிச்சுப் பிடிச்சு தொம்சம் பண்ணி டிக்கெட்டு வாங்குறதையே பெரிய சாதனையா நெனச்சுக் கொண்டாடுனவன். சினிமாவா பாத்துத் திரியத் திரிய... புரஜெட்டரு மெசினுலயிருந்து குபீர்னு பொகையா வெளிச்சங் கெளம்புற மாதிரி, அவன் மனசுலயும் நடிப்பாச வந்துருச்சு.

எப்பமும் பாட்டுப் பாட்டிட்டு டான்ஸப் போட்டுட்டு கனாலயே சுத்திக்கிருந்தப்ப, ‘இந்த நடராஜன் புள்ள வெளங்காது. உருப்படாம போறதுக்கான அம்புட்டையும் பண்ணுது’ன்னு தெறிச்சவய்ங்கதேன் அதிகம். இன்னிக்கு அவுக அம்புட்டு வீடுகள்லயும் எங் காமெடிய டி.வி-ல பாத்து ரசிக்கிறாக.

பொசுக்குனு அப்பா போயிச் சேந்த பொறவு... அம்மா, தம்பி - தங்கச்சிகளோட தனியா நிக்கேன். ஒரு நா பே மழண்ணே, எங்க வீடு மங்குடிச, சுத்துக்கட்டு சொவரு அப்பிடியே ஒடஞ்சு விழுந்திருச்சு. அம்புட்டு பேரும் நடுத்தெருவுல நிக்கிறோம். எங்கிட்டுப் போறதுன்னு தெரியல. மழையோட மழையா எங்காத்தா சந்தடியில்லாம அழறது எங்காதுக்கு மட்டுங் கேக்குது. அக்கம் பக்கம் போயி தங்க வெக்கப்பட்டுக்கிட்டு, ஒரு நா முச்சூடும் ரோட்ல கெடக்குறோம். மக்கா நா வேற ஏரியால வீடு பாத்துப் புடிச்சு அவுகள கொண்டுபோயிவிட்டேன். அந்த மழதேன் எனக்குள்ள திகீர்னு ஒரு தீய பத்தவெச்சுச்சுண்ணே!

அப்பத்தேன் மனசுல வைராக்கியம் வந்துச்சு! பொசுக்குனு ஒரு மழையில தெருவுக்கு வந்துச்சே எங்க குடும்பம்! எங்க ஆத்தாவுக்குப் பெரிய பங்களா கட்டி உக்காரவெச்சு அழகுபாக்கணும். ‘சினிமாதேன் ஒனக்குன்னா எங்கிட்டாவது ஓடு, சுத்திச்சுத்தி தேடு, உங்காம கொள்ளாம அல, பேத்தனமா ஒழ!’னு வைராக்கியம் வந்துபோச்சு. அப்பறந்தேன் மதுரையில ராஜ்கிரண்ணணப் பாத்ததும் அவரு காட்டுன வழியப் புடிச்சு சினிமாவுக்கு வந்ததும்..! உழைப்பும் தொழில் மேல அக்கறையும் இருந்தா எந்தப் பயலும் முன்னுக்கு வந்துரலாம்ணே, என் வாழ்க்க அதுக்கு இன்னொரு உதாரணம்ணே!



காசு பணம் வேணாம், அழகு வேணாம். ஆன்னு வாயப் பொளக்கிற தெறமயும் வேணாம். எது இருக்கோ, இல்லையோ... உள்ளுக்குள்ள ஒரு வெறி வேணும்ணே. ரயிலு எஞ்சினுல அள்ளிப்போட்ட கரி கெணக்கா கங்கா உள்ள ஒரு நெருப்பு எரிஞ்சுக்கே இருக்கணும். அம்புட்டுதேன்!



எண்ணே, என்னைய மாதிரி வேலுப்பயலே ஜெயிக்கிற ஒலகம்ணே இது, விட்றாத, வெரட்டிப் புடிச்சிரு, ஆமா, சொல்லிப்புட்டேன்!

வடி வடி வேலு... வெடிவேலு!
விகடன் பிரசுரம்.


---

ஒரு கொசுறு வடிவேலு வீடியோ. ’எல்லாம் அவன் செயல்’ படத்திலிருந்து.



காமெடி காட்சி தானே என்று நினைக்காமல், ஒளிப்பதிவாளர் பண்ணியிருக்கும் கேமரா சேட்டைகளை பாருங்க.

.

Wednesday, June 2, 2010

பழைய புத்தகக்கதை

இந்த காலத்து அக்காக்கள் போல அல்ல, அந்த கால அக்காக்கள். வார பத்திரிக்கைகளை படித்துவிட்டு தூக்கி எறியாமல், தங்களுக்கு பிடித்த தொடர்கதையை, வார வாரம் புத்தகத்தில் இருந்து கிழித்து எடுத்து, சேர்த்து வைத்து விட்டு, முடிவில் இவர்களே எந்த பதிப்பகத்தின் துணையும் இல்லாமல் பைண்டிங் செய்து ஒரு நாவல் தயாரித்துவிடுவார்கள். இவர்கள் தொகுத்து வைத்த கதை நன்றாக இருக்கிறதோ, இல்லையோ, அந்த புத்தகத்தில் இருக்கும் துணுக்குகள், ஜோக்குகள், அரைகுறை பேட்டிகள், விளம்பரங்கள் போன்றவை பெரும் சுவாரஸ்யத்தை கொடுக்கும். அவ்வப்போது எடுத்து பார்வையை மேயவிட்டு விட்டு வைத்துவிடலாம்.

இது போல் தயாரித்த புத்தகத்தில், பல வருடங்களுக்கு முன்பு ‘உடல் உயிர் ஆனந்தி’ கதை படித்தது நினைவில் இருக்கிறது. பிறகு, நெடுங்காலத்திற்கு இம்மாதிரி புத்தகங்கள் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இடையில் ஒரு நண்பர், எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துணையெழுத்தை’ இப்படி கொடுத்தார். சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பழைய புத்தகக்கடையில், தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தப்போது, சுஜாதா எழுதிய ‘கனவுத் தொழிற்சாலை’ கதை இந்த வடிவத்தில் கிடைத்தது. இந்த கதை கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறம் என்றால், யாரோ உருவாக்கி வைத்திருந்த பொக்கிஷமாக இது கிடைத்தது அதைவிட பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. ஆனந்த விகடனில் தற்போது பழைய படைப்புகளை ‘பொக்கிஷம்’ என்று வெளியிடுகிறார்கள் அல்லவா? அப்படியென்றால், இதுவும் பொக்கிஷம் தானே? இந்த பொக்கிஷத்தை தற்போதைய விகடனை விட குறைவான விலைக்கு வாங்கினேன்.



கதை - திரைத்துறையில் பணியாற்றும் சில மனிதர்களைப் பற்றியது. புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, கீழே இருந்து சல்லேன்று மேலே செல்பவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள், ஒரு சீனில் தலைக்காட்டுவதற்கு கடக்கவேண்டிய சங்கடங்கள், நேர்மையான முயற்சிக்கு விளையும் முடிவு என செல்லுலாய்ட் உலகை கவனித்து சுஜாதா எழுதிய இந்த கதை வெளிவந்த ஆண்டு - 1979. சினிமா உருவாக்கத்தில் பணிபுரிபவர்களின் வெவ்வேறு பிரச்சினையை பேசுகிறது இக்கதை. நான் பிறப்பதற்கு முன்பே, இந்த கதை வந்துவிட்டாலும், தற்போது தான் வாசிக்க வாய்த்திருக்கிறது. ஆனால், பல படங்களில் இந்த களத்தை பார்த்துவிட்டதால், கதையில் பெரிய ஈடுபாடு ஏற்படவில்லை.

இந்த கதைக்கான படங்களை ஜெயராஜ் வரைந்திருக்கிறார். என்ன சொல்லி வரைய சொன்னார்களோ? எல்லா வாரமுமே, ஓவியங்கள் ஒரு ’டைப்’பாகத்தான் இருக்கிறது. வெறும் படங்களை மட்டும் பார்த்தால், புஷ்பா தங்கதுரை எழுதிய கதைக்கு வரைந்து போல் இருக்கிறது. அந்த வார பகுதியில் ‘தூங்கினாள்’ என்று ஒரு வார்த்தை இருந்தால் போதும். ஏடாகூடமான பொஸிசனில் தூங்கினாற்போல் படம் வரைந்துக்கொடுத்திருக்கிறார் ஓவியர். சில இடங்களில் படத்தை பார்த்துவிட்டு வாசிக்கும்போது, இவர்களே படத்திற்கேற்ப எழுத்தாளரை ஒரிரு வாக்கியங்களை சேர்க்க சொல்லியிருப்பது போல் தோன்றியது.



சாதாரணமாகவே, விளம்பரங்களை விரும்புபவன் நான். அதாவது, விளம்பரங்களைப் பார்க்க பிடிக்கும்! அப்போது வந்த விளம்பரங்களில் இருந்த நிறுவனங்கள் பல இப்போது இல்லை. இருக்கும் நிறுவனங்கள் நிறைய மாற்றங்களுடன் இருக்கிறது. அன்று HMV நிறுவனம் 514 ரூபாய்க்கு ரெக்கார்டு ப்ளேயர் விற்றிருக்கிறது. இன்று ஸ்ரேயாவை வைத்து விளம்பரம் செய்யும் தூத்துக்குடி விவிடி எண்ணெய் நிறுவனம், அன்று யாரோ அடையாளம் தெரியாதவரை வைத்து விளம்பரம் செய்திருக்கிறது. நிறைய மாத்திரை விளம்பரங்கள் காணக்கிடைக்கிறது. சிவராஜ் வைத்தியசாலையின் சித்த வைத்திய மேதை தமிழகமெங்கும் போகும் சுற்றுப்பயணத்திட்ட விளம்பரம் அன்றும் இருந்திருக்கிறது. தற்போது, இவருடைய மகன் தந்தையின் பாதையில் செல்கிறார்.

வாரா வாரம் ’ரெட்டைவால் ரெங்குடு’, ‘முன்ஜாக்கிரதை முத்தண்ணா’, ’வீட்டு புரோக்கர் புண்ணியகோடி’, ’சிரிப்புத்திருடன் சிங்காரவேலு’ போன்ற கேரக்டர்களை வைத்து தனது கார்ட்டூன் மூலம் ஜோக்குகளை விளாசி தள்ளியிருக்கிறார் மதன். இந்த கேரக்டர்கள் இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு தீம் வைத்து தனது கார்ட்டூனால் ஜோக்கடித்திருக்கிறார். இவருடைய ஜோக்குகள் வெறும் கார்ட்டூனாகவோ, அல்லது ஓரிரண்டு வரிகளுடன் வருகிறது. இரண்டையுமே சேர்த்து பார்த்தால் தான் புரிகிறது. சிரிப்பும் வருகிறது. உ.ராஜாஜி என்ற வாசகர் எழுதியிருந்த ஜோக்,

“லேடி டைப்பிஸ்டோட நான் திருப்பதிக்கு போன விஷயம் எப்படியோ ஹெட் கிளார்க்குக்கும் மானேஜருக்கும் தெரிஞ்சு போச்சு...!’

“ஐயையோ! அப்புறம்?”

“குடைஞ்சு எடுத்துட்டாங்க... எனக்கு எங்கே லட்டு... எனக்கு எங்கே லட்டுன்னு!”


அடுத்தது, துணுக்குக்களை பார்ப்போம். சாலவாக்கம் கே.சுந்தர் என்ற வாசகர் எழுதியிருந்த துணுக்கு.

”செங்கல்பட்டு அங்கமுத்து திரையரங்கத்தில் 1978-ம் ஆண்டு தீபாவளி அன்று தப்புத்தாளங்கள், தாய் மீது சத்தியம், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய 3 படங்கள் 2 காட்சிகள் வீதம் ஒரே நாளில் வெளியிடப்பட்டன. மறுபடி இந்த வருடப்பொங்கலை முன்னிட்டு 12-ந் தேதியிலிருந்து அவள் என் உயிர், ஆயிரம் வாசல் இதயம், பவுர்ணமி நிலவில் ஆகிய 3 படங்கள் ஒரே நாளில் 2 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டன. இது போல் வேறெங்காவது 3 திரைப்படங்கள் ஒரே தியேட்டரில் வெளியாகியிருக்கின்றனவா?”

இப்ப மூன்று படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாவதே பெரிசு. இதில் ஒரு தியேட்டரில் என்பது ஓவரு. வேண்டுமானால், முப்பது தியேட்டரில் ஒரு படம் ரிலீஸாகும். இருந்தாலும் கே.சுந்தருக்கு அவர்களுக்கு தியேட்டர் பற்றி எழுதும் தொடரில் எனக்கு தெரிந்த பதிலை சொல்லுகிறேன்!

வாரப்பத்திரிக்கைகளில் தொடர்கதைகள் என்பதே காணாமல் போனபிறகு, இந்த காலத்து அக்காக்கள் எங்கு சென்று இப்படி கதை தொகுத்து புத்தகம் போட முடியும்? அவர்களும் சீரியல், ப்ளாக், பேஸ்புக் என்று பிஸியாகிவிட்டார்கள். எனக்கு சில சமயம் தோன்றும். ஏதேனும் கட்டுரை தொடரை, இப்படி தொகுத்து வைக்கலாம் என்று. பிறகு எப்படியும் இவர்களே தொகுத்து புத்தகம் போடுவார்கள், அப்போது வாங்கிக்கொள்ளலாம் என்று என்னுடைய சோம்பேறித்தனத்தால் விட்டுவிடுவேன். நானும் தொடர்ந்து விகடனோ, குமுதமோ வாங்குவதில்லை. தொடராக வரும்போது நினைத்து வைத்துக்கொண்டு, பிறகு புத்தகங்கள் வந்தபோது சிலவற்றை வாங்கியிருக்கிறேன். சில கட்டுரை தொடர்கள், பிடிஎப் வடிவத்திலும் எனக்கு கிடைத்துள்ளது. இருந்தாலும், பைண்டிங் செய்யப்பட்ட தொகுப்பு போல் வருமா?

குறைந்துக்கொண்டே செல்லும் இந்த பழக்கம், கூடிய விரைவில் காணாமல் போகக்கூடும். வளர்ந்து வரும் இணைய வசதிகள், அதற்கு ஆவண செய்யும்.

.

Thursday, April 29, 2010

ஆகட்டும் பார்க்கலாம்

சன் டிவியில் இருக்கும் போது, ரபி பெர்னார்டுக்கு பிரச்சினை வந்து ரபி விலகியப் பிறகு, அந்த இடத்தில் வந்தவர் வீரபாண்டியன். ஆரம்பக் கால ரபி அளவுக்கு இல்லாததால், இவர் மேல் பெரிய அபிப்ராயம் இல்லை. ’நேருக்கு நேர்’ நிகழ்ச்சி பார்ப்பதும் குறைந்து, ஒரு கட்டத்தில் நின்று விட்டது.

சமீபத்தில் நூலகத்தில் ஒரு புத்தகம் பார்த்தப்போது தான், இவரைப் பற்றி மேலும் சில விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன். இவருடைய தந்தை தியாகி திருநாவுக்கரசு அவர்கள் காமராஜரின் நண்பர். காமராஜருக்காக களத்தில் இறங்கி பல வேலைகள் செய்தவர். காமராஜர் இறந்த பிறகு, அரசியலில் இருந்து விலகிவிட்டார். வீரபாண்டியன் பல்வேறு வானொலிகளில், அரசியல் நிகழ்ச்சிகள் நடத்திய பின்னர், சன் டிவிக்கு வந்திருக்கிறார்.

தந்தைக்கு காமராஜருடன் இருந்த நெருக்கத்தால், சிறுவயதில் இருந்தே வீரபாண்டியனுக்கு காமராஜரிடம் அறிமுகம் இருந்திருக்கிறது. சிறுவனாக இருக்கும் போது, மேடைக்கு சென்று காமராஜருக்கு மாலை அணிவித்திருக்கிறார். கல்லூரி படிக்கும்போது, அங்கு வருகை வந்த காமராஜர் இவர் பெயரை ஞாபகமாக சொல்லி அழைத்திருக்கிறார். இப்படி காமராஜர் மேலான தாக்கம் தந்தை, மகன் இருவருக்கும் இருந்திருக்கிறது.

இவர் தந்தை இவரிடம் வைத்த ஒரு வேண்டுகோள், காமராஜர் பற்றிய தகவல்களை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுவது. இவரும் தந்தையின் சொல்லுக்கேற்ப, தந்தையிடம் கேட்டது, காமராஜரிடன் பழகிய தலைவர்களிடன் கேட்டது அனைத்தையும் தொகுத்து ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அதை தனது தந்தைக்கு அர்பணித்திருக்கிறார்.



‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்பது காமராஜரின் பஞ்ச் டயலாக். புத்தகம் முழுக்க தகவல் தொகுப்புகள். ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து இரண்டு மூன்று பக்கங்கள் இருக்கிறது. தகவல்கள் விலாவாரியாக இருக்கிறது. இவையெல்லாம் உண்மை என்று அடித்து சத்தியம் செய்திருக்கிறார். ஒவ்வொன்றையும் சொன்னது யார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். கலைஞர், மூப்பனார் என பல தலைவர்கள் இப்புத்தகத்திற்கு பங்களித்திருக்கிறார்கள். சொந்த கட்சியினர் கொள்கைக்கு புறம்பாக இருந்தால் அவர்களை கண்டிப்பதும், மாற்று கட்சியினரின் மக்கள் நல காரியங்களுக்கு அவர்களை பாராட்டுவதும் என காமராஜர் மற்ற தலைவர்களுடன் பழகிய விதம் இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

---

காமராஜர் ஒரு கூட்டத்திற்கு சென்றுக்கொண்டிருந்தப்போது, பக்கத்தில் இருந்த மின்சார கம்பத்தில் ஏறி நின்றுக்கொண்டு ஒருவர், “தலைவர் வாழ்க!” என்று அவரை பார்த்து கத்தியிருக்கிறார்.

இதை கவனித்த காமராஜர், அவரை பார்த்து, “ஏலேய் கிறுக்கா! நான் வாழுறது இருக்கட்டும். நீ செத்துறாதே. கீழே இறங்கி வா...” என அழைத்திருக்கிறார்.

கீழே வந்து மாலை அணிவித்தவர் பெயர், தொழில் எல்லாம் விசாரித்து, தையல்காரர் என்று தெரிந்துக்கொண்டார். செல்லும்போது, “ஒழுங்கா துணியை தையி, இப்படி தொங்காதே!” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

---

இது கலைஞர் சொன்னது.

ஒருமுறை சட்டசபையில், இந்தி எதிர்ப்பு பற்றிய விவாதத்தின் போது, ஒரு திமுக எம்.எல்.ஏ (யாருன்னு மறந்து போச்சு!) சொன்னாராம். ”தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஹிந்தி சொல்லிக்கொடுக்கக்கூடாது. ஆங்கிலமும் சொல்லிக்கொடுக்கக்கூடாது. தமிழ் மட்டும் தான்” என்று. கேட்டுக்கொண்டிருந்த அன்றைய முதல்வர் காமராஜர், எதிர்க்கட்சி தலைவர் அண்ணாவை, தன்னருகில் அழைத்தார். கலைஞரும் உடன் சென்றாராம்.

அண்ணாவிடம் காமராஜர் சொன்னது,

“நான் என்ன தமிழுக்கு எதிரியா? பள்ளிக்கூடத்துல ஆங்கிலம் சொல்லிக்கொடுக்காம எப்படி? அப்புறம், அதுக்கு பதில் ஹிந்தி அல்லவா வந்து உட்கார்ந்துவிடும்?”

அதைக்கேட்ட அண்ணா, பின்பு காரில் செல்லும்போது கருணாநிதியுடம் கூறியது,

“திமுக கொடி தான் பிடிக்கவில்லை என்றாலும், அவருக்கு உள்ள தமிழ் உணர்வு நம்மிடம் உள்ளது போன்றது தான்.”

---

சாப்பாடு கூடை தூக்கும் ஒரு பாட்டியை காமராஜர் ஒரு கூட்டத்தில் சந்தித்தார். அந்த பாட்டி காமராஜரிடம் தனது நிலையை எடுத்துக்கூறி உதவி கேட்க, அருகே இருந்தவர் அந்த பாட்டிக்கு சிறிது பணம் கொடுத்திருக்கிறார். பணத்தை வாங்க மறுத்து, அதற்கு அந்த பாட்டி, “இன்னைக்கு நீங்க கொடுத்திருவீங்க? ஒருநாள் சரி. ஆனா, என்னை மாதிரி ஆதரவு இல்லாதவுங்க நிலை என்னைக்கும் இப்படித்தானே இருக்கும்?” என கேட்க, ”ஆகட்டும் பார்க்கலாம்” என சொல்லி அனுப்பியிருக்கிறார் காமராஜர்.

அலுவலகம் வந்தப்பிறகு அதிகாரிகளை கூப்பிட்டு விசாரித்திருக்கிறார். முதியோர்கள் எத்தனை பேர் இப்படி ஆதரவு இல்லாமல் இருக்கிறார்கள், ஒரு வயதானவருக்கு மாதம் எவ்வளவு செலவு ஆகும் என்றெல்லாம் கேட்டு, மாதந்தோறும் முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

---

இப்படி நிறைய தகவல்கள் தொகுப்புக்கள். ஆனாலும், சில புத்தகங்களில் இருக்கும் கதை படிக்கும் உணர்வு இதில் இல்லை. மாறாக, சொன்னவர் பெயர், இடம், முடிந்தளவுக்கு தேதி வாரியாக குறிப்பிட்டு இருப்பதால், நடந்த நிகழ்ச்சிகளின் அதிகாரப்பூர்வ தொகுப்பாக இருக்கிறது.

வழக்கமா பழைய தலைவர்களின் பெருமையை இப்படி படிப்பது தான். அதுவும் காமராஜரைப் பற்றி சொல்ல வேண்டாம். ”இப்படி எல்லாம் அந்த காலத்துல இருந்திருக்கிறார்களே? இப்பவும் தலைவர்கள்’ன்னு இருக்காங்களே!” என்ற புலம்பல்கள் எல்லாம் இனி தேவையற்றது என நினைக்கிறேன்.

ஓட்டுக்கு காசு வாங்கிற மக்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா என்ன? மக்கள் மாறிய காலத்தில், தலைவர்கள் மட்டும் அப்படி மாறாமல் இருக்க வேண்டுமா?!

இந்த புத்தகத்தை இங்கே வாங்கலாம்.

.

Thursday, April 8, 2010

கொலை செய்தாரா கலைவாணர்?

இன்று தமிழில் வரும் எல்லா இதழ்களிலும் கிசுகிசு உண்டு. ஜனரஞ்சகப் புத்தகம் என்றால் திரைத்துறையினரைப் பற்றிய கிசுகிசு. புலனாய்வு புத்தகம் என்றால் அரசியல்வாதிகளைப் பற்றிய கிசுகிசு. இலக்கியப் புத்தகம் என்றால் எழுத்தாளர்களைப் பற்றிய கிசுகிசு. தமிழ் புத்தகங்கள் தான் இவ்வாறு என்றில்லை. ஹிந்தியில் இதற்கென்று ஒரு தனி சானலே உண்டு. அடுத்தவன் பற்றிய அந்தரங்கத்தை தெரிந்து கொள்ள, இயற்கையாகவே மனிதனுக்கு அவ்வளவு ஆர்வம்.

தமிழில் இப்படி வந்த முதல் பத்திரிக்கை - சினிமா தூது. 1944 ஆண்டு இதை தொடங்கியவர், லட்சுமிகாந்தன். இவர் அப்பொழுது தான் அந்தமான் ஜெயிலில் இருந்து வந்திருந்தார். ஒரு போர்ஜரி கேஸில் ஜெயிலுக்கு சென்றிருந்தார். இந்த பத்திரிக்கை அரசாங்க அனுமதி பெறாததால், தடை செய்யப்பட்டது. தடை செய்தால், வாசகர்களின் அறிவுக்கு எப்படி தீனி போடுவது? அப்பொழுது அனந்தய்யர் என்பவர் இந்துநேசன் என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார். அவரிடம் லட்சுமிகாந்தன் சென்று, பக்கத்தை நான் பாத்துக்கிறேன், பதிப்பை நீங்க பாத்துக்கோங்க என்றிருக்கிறார். டீலிங் நன்றாக இருக்கவே, பத்திரிக்கை செம மேட்டர்களுடன் வெளியானது.

இப்போதைய இளம் நடிகர்கள் பத்திரிக்கையாளர்களிடம் ‘என்ன நீங்க? என்னை பத்தி கிசுகிசுவே எழுதலை?” என்று கோபித்துக் கொண்டிருக்க, அன்றைய நடிகர்கள் கிசுகிசுவை கண்டு நடுங்கி இருக்கிறார்கள். சிலர் பணம் கொடுத்து, தங்களை பற்றிய செய்திகள் வராமல் பார்த்து கொண்டார்கள். அது பொய்யாக இருந்தாலும்.



அந்நேரம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிரபல நடிகர். பல படங்களில் நடித்து கொண்டிருந்தார். அவரை பற்றியும் இந்துநேசனில் வந்தது.

என்.என்.கிருஷ்ணன் இதை கண்டுகொள்ளவில்லை. பணம் கேட்டு சென்ற போது, அவர் கொடுக்கவில்லை. தொடர்ந்து, அவரை பற்றிய செய்திகள் வந்து கொண்டு இருந்தது. கேட்டதற்கு, ’எவனோ ஒருவன் நம்மால் பொழைக்கிறான். பொழைச்சிட்டு போகட்டும்.” என்றார்.

இந்நிலையில் வடிவேலு என்பவர் தங்கியிருந்த வீட்டை லட்சுமிகாந்தன் வாங்கினார். வீட்டை காலி செய்ய சொன்னபோது, வடிவேலு மறுத்திருக்கிறார். இவ்விஷயத்தில் இவர்களுக்குள் தகராறு ஆகிவிட்டது.

ஒரு நாள் லட்சுமிகாந்தன் அவருடைய வக்கீலை பார்க்க ரிக்‌ஷாவில் சென்று கொண்டிருந்தார். போகும்வழியில் அவருக்காக காத்திருந்த வடிவேலுவும், அவருடைய நண்பரும், ரிக்‌ஷா கடந்து சென்றவுடன், பின்னால் சென்று, ரிக்‌ஷாவை பிடித்து இழுக்க, ரிக்‌ஷா கவிழ்ந்தது. ரிக்‌ஷா ஓட்டியவரை வடிவேலுவின் நண்பர் விரட்டியடிக்க, வடிவேலு லட்சுமிகாந்தன் மேல் பாய்ந்து கத்தியால் குத்தினார். சம்பவத்தில் கத்தி குத்துப்பட்ட லட்சுமிகாந்தன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பிறகு இறந்தார்.

இரு வாரங்கள் கழித்து, இந்த கொலை வழக்குக்காக என்.எஸ்.கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவருடன் அந்நாளைய சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதரும் கைது செய்யப்பட்டார். தவிர, வடிவேலுவும் இன்னும் சிலரும்.

அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு. நடிகர்களுக்கு பத்திரிக்கை ரீதியான தகராறு. வடிவேலுவுக்கு வீடு விவகாரத்தில் தகராறு. அதனால், பாகவதரையும், கலைவாணரையும் சந்தித்த வடிவேலுவிடம், அவர்கள் லட்சுமிகாந்தனை கொலை செய்யுமாறும் தேவையான பண உதவிகளை தாங்கள் செய்வதாகவும் கூறியிருக்கிறார்கள் என்பது தான்.

ஏழு மாதங்கள் நடந்த விசாரணையின் முடிவில் கொடுத்த தீர்ப்பில், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சொல்லி பாகவதருக்கும், கலைவாணருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.

கலைவாணர் சிறையில் அடைக்கப்பட, வழக்கு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் நடந்த வழக்குக்காக கலைவாணரின் சொத்துக்கள் விற்கப்பட்டது. வாரி வழங்கிக்கொண்டிருந்த குடும்பம், மற்றவர்களிடம் கை நீட்டி வாங்கும் நிலைக்கு வந்தது.

வழக்கில் பாகவதரும், கலைவாணரும் சம்பந்தப்பட்டு இருந்தது ஒரே இடத்தில் தான். வடிவேலு அவர்களை ஒரு தியேட்டரில் சந்தித்து, அவர்களிடம் இருந்து பணம் பெற்று கொண்டார் என்பது தான். ஆனால், சம்பவத்தன்று கலைவாணர் சேலத்தில் இருந்ததற்கு சாட்சிகள் இருந்ததாலும், அப்ரூவரான ஒருவரின் வாக்குமூலம் நிரூபணம் ஆகாததாலும், என்.எஸ்.கிருஷ்ணன் விடுதலை செய்யப்பட்டார். அதுபோல், பாகவதரும் விடுதலை செய்யப்பட்டார்.

லட்சுமிகாந்தனின் நிலைக்கு கலைவாணர் காரணம் இல்லை என்று நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறினாலும், அவருக்கு நேர்ந்ததை காலத்தின் தீர்ப்பாகத்தான் எடுத்து கொள்ள வேண்டும். எழுத்து தான் என்றாலும் அதில் கண்ணியம் இல்லாவிட்டால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு லட்சுமிகாந்தன் ஒரு உதாரணம். சோதனையான காலமென்றாலும், கூட இருந்தவர்களை கலைவாணர் புரிந்து கொள்ள உதவியது இந்த காலம் தான்.

மேலும் தகவலுக்கு & கலைவாணரைப் பற்றி அறிந்து கொள்ள - முத்துராமனின் சிரிப்பு டாக்டர்.

---

இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு.முத்துராமன் அவர்கள் தற்போது உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவரைப் பற்றி.

.

Thursday, April 1, 2010

வைரமுத்துவின் ‘பாட்டு’ டைரி

பாடல்களை ரசிக்கும் அனைவருக்குமே, பாடல்கள் உருவான விதம், பாடல்களுடனான அனுபவம் பற்றிய கட்டுரைகளும் பிடிக்கும். உதாரணத்திற்கு, இந்த தளத்தில் நண்பர் மகேந்திரன் எழுதிய இசை பக்கங்களை சொல்லலாம். அது ஒரு இசை ரசிகனின் பார்வையில் எழுதப்பட்டவை.

சமீபத்தில் பாடலாசிரியர் யுகபாரதியும், அவரது வலைத்தளத்தில் தான் எழுதிய பாடல்கள் உருவான அனுபவங்களை ‘முன்னாள் சொற்கள்’ என்ற தலைப்பில் எழுதி வருகிறார்.

அதுபோல், வைரமுத்து அவர் எழுதிய பின்னணிப் பாடல்களின் பின்னணி பற்றி எழுதியிருக்கும் புத்தகம் தான் - நேற்றுப் போட்ட கோலம் (1985).



---

’சின்ன வீடு’ பட பாடல் பதிவின் போது, பாக்யராஜிடம் இளையராஜா கூறியது,

“நம்முடைய நாட்டுப்பாடல்களும், மேற்கத்திய இசையும் செவிகளுக்கு வேறு வேறாய்த் தோன்றிய போதிலும் ஏதோ ஓர் புள்ளியில் இரண்டும் சந்தித்துக் கொள்கின்றன. அங்கே அவை இரண்டும் ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. மேற்கத்திய இசையின் பாட்டை நம்முடைய நாட்டுப்புற பாணிக்கு இறக்குமதி செய்து நிறம் மாற்றினால், அது ஒரு வித்தியாசமான கலவையாக இருக்கும். அதுவே காதல் பாடலென்றால், மாறுதலாக இருக்கும்”

அப்படி மெட்டமைத்ததுதான் ‘சிட்டுக்குருவி வெட்கப்படுது’.

இந்த பாடல் எழுதும்போது தான், பாக்யராஜின் பாடல் உருவாக்கத் திறன் பற்றி தெரிந்து கொண்டார் வைரமுத்து.

இளையராஜாவிடமிருந்து மெட்டுக்களை வாங்கிச் சென்றவுடன் அவர் அவற்றை ஆறப்போட்டுவிடுவதில்லை. மனசுக்குள் ஊறப்போட்டு விடுகிறார். ஏறக்குறைய எல்லா மெட்டுக்களுக்கும் அவரே எழுதிப் பார்த்தும் விடுகிறார்.

இந்த பாடலில் “முத்தம் தரவே முகமே தருமே” என்று வைரமுத்து எழுதியிருந்த இடத்தில், பாக்யராஜ் “அந்தப்புரமே வரமே தருமே” என்று எழுதி வைத்திருந்தார். ஏனோ, அவர் எழுதிய வரிகள் வேண்டும் என்று பாக்யராஜுக்கு தோன்ற, வைரமுத்துவும் சம்மதித்து, அந்த வரியை மாற்றியிருக்கிறார்.

---

சிவாஜி நடித்த சாதனை படம். அந்த படத்தில் வரும் ‘அன்பே அன்பே’ பாடலில் இருக்கும் வினோதம் என்று இவ்வாறு கூறுகிறார்.

எனக்கு இசை தெரியாது. சுரஞானம் எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது.

ஆனால் இந்த பாடலின் ஒலிப்பதிவின்போது இளையராஜா அவர்கள் சொன்ன சில செய்திகள் என்னை வியப்பின் விளிம்பிற்குத் தள்ளின.

இந்த பாடலின் முதல் சரணத்தில் ’பாவை செய்த பாவம் என்ன’ என்று எழுதியிருக்கிறேன். அவரது சுரம் ‘பா’ எனத் தொடங்குகிறது. என்னை அறியாமல் அதே இடத்தில் நானும் ‘பா’ என்று தொடங்கியிருக்கிறேன்.

’சாவை இன்னும் கொஞ்சநேரம் தள்ளிப்போடக்கூடாதோ’ என்ற வரியில் அவரது சுரம் ‘சா’ என தொடங்குகிறது. நானும் என்னையறியாமல் ‘சா’வென்று தொடங்கித்தான் எழுதியிருக்கிறேன்.

’தள்ளிப்போடக் கூடாதோ’ என்ற இடத்தில் இயல்பாகவே தாளம் தள்ளி வருகிறது. நான் இதனை அறியாமலேயே ’தள்ளிப்போடக் கூடாதோ’ என்று எழுதியிருக்கிறேன்.

இந்த ஒப்புமைகளையெல்லாம் இளையராஜா அவர்கள் எனக்குச் சுட்டிக் காட்டியபோது, என்னால் நம்பவே முடியவில்லை. நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். காரணம் தெரியாமல் என் கண்கள் பனிக்கின்றன.


---

ஒரு பாடலை பற்றி இப்படி படித்துவிட்டு, திரும்பவும் அந்த பாடலை கேட்கும்போது, கேட்ட பாடலாக இருந்தாலும், இன்னும் ப்ரெஷாக, இன்னமும் இனிமையாக இருக்கிறது. பிடித்த பாடல், மேலும் பிடித்து போகிறது.

ஆனால், நான் கேட்டிராத சில பாடல்கள் பற்றிய வைரமுத்துவின் எண்ணவோட்டத்தை, நான் அறிந்திராத காரணத்தால் என்னால் முழுமையாக உணரமுடியவில்லை.

மொத்தம் 25 பாடல்களை பற்றி 141 பக்கங்களில் சொல்லியிருக்கிறார். பெரும்பாலானவை, இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள். எம்.எஸ்.வி, சங்கர்கணேஷ், கங்கைஅமரனுக்கு எழுதிய பாடல்களும் உண்டு.

இதை அவர் எழுதிய காலம், ரஹ்மான் வருகைக்கு முந்திய காலம் என்பதால், ரஹ்மான் பாடல்கள் பற்றிய குறிப்புகள் இதில் இல்லை என்பது என்னளவில் இன்னொரு குறை. இதற்கு பிறகு, இது போல் ஏதும் வைரமுத்து எழுதியிருக்கிறாரா?

ஆனால், ரஹ்மான் இதுபோல் பாடல் பதிவு அனுபவங்களை புகைப்பட புத்தகமாக (Coffee Table Book) போட போவதாக கேள்விப்பட்டேன். அதில் பார்த்துக்கொள்ளலாம்.

.

Tuesday, March 16, 2010

சந்திரபாபுவுக்கு ஏன் எம்.ஜி.ஆரை பிடிக்காது?

ஒரு மனிதன் எல்லோருக்குமே நல்லவனாக இருக்க முடியாது. அது எம்.ஜி.ஆராக இருந்தாலும். அடிமட்ட தொண்டன் முதற்கொண்டு அமைச்சர் பெருங்குடி மக்கள் வரை அனைவரின் கண்களுக்கும் வள்ளலாக தெரிந்தவர், சந்திரபாபுவின் கண்களுக்கு மட்டும் ஏன் அப்படி இருக்கவில்லை?

---

குலேபகாவலி ஷூட்டிங்கில் சந்திரபாபு, பட குழுவினருடன் சேர்ந்து ஜோக் அடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அவர் அடித்த ஜோக்கிற்கு எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆரை தவிர.




“என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர், சிரிச்சா முத்தா உதிர்ந்திரும்?” (எல்லோரையும் மிஸ்டர் என்றுத்தான் அழைப்பார்)

“உங்க ஜோக்குக்கு கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்”

இதற்கு அவமானமாக உணர்ந்த சந்திரபாபு, மற்றவர்களுடன் விசாரித்ததில் தெரிந்துக்கொண்டது. அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்கும் இடம் தேடித்தான் போக வேண்டும்.

அதை பற்றி சந்திரபாபு சொன்னது,

“அன்று அவர் வளர்த்துக்கொண்ட அந்த ‘தான்’ என்ற அகந்தை, இன்று அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன். அந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன்.”

---

குலேபகாவலி, புதுமைப்பித்தன் வெற்றிகளுக்கு பிறகு, எம்.ஜி.ஆர் படங்களில் காமெடிக்கு சந்திரபாபுதான் வேண்டும் என்றார்கள் விநியோகஸ்தர்கள். ‘சந்திரபாபுவின் காமெடிக்காகவே படத்தை பார்க்கலாம்’ போன்ற பேச்சுக்கள் எம்.ஜி.ஆரின் காதுக்களுக்கு சென்றது.

அதில் இருந்து, “சந்திரபாபு வேண்டாம். அவன் இருந்தால், நான் கால்ஷீட் தரமாட்டேன்” என்று எம்.ஜி.ஆர். கூறியதாக வந்த செய்திகள் சந்திரபாபுவுக்கு தெரிய வந்தது.

ஆனால், அதற்கு பிறகும் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். சந்திரபாபுவை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

---

அடிமைப்பெண் ஷூட்டிங்.

சந்திரபாபுவும், ஜெயலலிதாவும் ஒரு சுவர் ஏறி குதிப்பதுப்போல் காட்சி. முதலில் ஏறிய சந்திரபாபு, நிலைத்தடுமாறி கீழே விழப்போக, ஜெயலலிதா பிடித்துக்கொண்டார்.

சாப்பாட்டு நேரத்தில் அனைவருக்கும் உணவு வந்துவிட, சந்திரபாபுவுக்கு மட்டும் வரவில்லை. எம்.ஜி.ஆர். தன்னுடைய சாப்பாட்டை, சந்திரபாபுவுக்கு கொடுத்துவிட்டு, சாப்பிடாமல் இருந்துவிட்டார். கேட்டதற்கு, பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.

ஏன் இப்படி உம்மென்று இருக்கிறார் என்று ஜெயலலிதாவிடம் சந்திரபாபு கேட்டதற்கு, ஜெயலலிதா சந்திரபாபுவை விழாமல் தாங்கி பிடித்தது அவருக்கு பிடிக்கவில்லை என்று சொன்னாராம்.

இதை கேட்டவுடன் சந்திரபாபுவுக்கு சங்கடமாகிவிட்டதாம். ஏனெனில் சந்திரபாபுவிற்கும், ஜெயலலிதாவின் குடும்பத்திற்கும் ஏற்கனவே நல்ல பழக்கம் உண்டு. ஜெயலலிதா சிறுமியாக இருக்கும்போதே, அவர்கள் வீட்டுக்கு சந்திரபாபு செல்வாராம். ஜெயலலிதாவும் ‘அங்கிள்’ என்று ஓடி வந்து பழகுவாராம்.

---

சந்திரபாபு எம்.ஜி.ஆரை வைத்து ‘மாடி வீட்டு ஏழை’ என்றொரு படத்தை ஆரம்பித்தார். இந்த படத்தில் நடிக்க சம்மதித்த எம்.ஜி.ஆர், சம்பளத்தின் ஒரு பகுதியை கருப்பாகவும், மீதியை வெள்ளையாகவும் கேட்டதாக சந்திரபாபு, பின்னர் பிலிமாலயா பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அட்வான்ஸ் வாங்கிய எம்.ஜி.ஆர்., பூஜைக்கும் அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கும் மட்டுமே வந்திருக்கிறார். பிறகு, எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கிடைக்கவே இல்லை.

நேரே சென்று பேசி பார்க்கலாம் என சென்ற சந்திரபாபுவை, அரை மணி நேரம் கண்ணேதிரே காக்க வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். ’நான் நடிகன், நான் கதாசிரியன், நான் வசனகர்த்தா, நான் டைரக்டர் என பெருமைப்பட்ட என்னை, டேய் நீ புரொடக்‌ஷன் பாயும் கூடத்தான்’ என அப்போது உணர வைத்ததாக கூறியிருக்கிறார் சந்திரபாபு.

கடைசியில் அவரை பார்த்தபோது, கால்ஷீட் பற்றி கேட்டிருக்கிறார். கால்ஷீட் சம்பந்தமாக அண்ணனிடம் பேசிக்கொள்ளும்மாறு எம்.ஜி.ஆர் சொல்ல, அண்ணன் சக்ரபாணியை பார்க்க சென்றார் சந்திரபாபு.

அங்கே அவர்களுக்குள் நடந்த உரையாடல், ஒருகட்டத்தில் முற்றிப்போய், சேரைத்தூக்கி அடிக்கும் நிலைக்கு போய்விட்டார் சந்திரபாபு. இந்த விஷயம் வெளியே பரவி, படம் நின்று போய், அடமானம் வைத்திருந்த சந்திரபாபுவின் சொத்துக்கள் ஏலத்திற்கு வந்தது. பெயரும் கெட்டுப்போனது. குடி இன்னும் அதிகமாக, குடி கெட்டது.

---

ஒரு பேட்டியில் சந்திரபாபுவிடம் இப்படி கேட்டார்கள்.

எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம்.

---

கண்ணீரும் புன்னகையும்
முகில்
174 பக்கங்கள்
கிழக்கு பதிப்பகம்

.

Wednesday, March 3, 2010

பல்லி சாப்பிடலாமா?

சாம்பார்ல பல்லி விழுந்து, தெரியாம அந்த சாப்பாட்டை சாப்பிட்டா என்ன ஆகும்?

இந்திய பள்ளி குழந்தைகள் மயங்கி விழுவார்கள். சீனா குழந்தைகள் ‘அப்படியே சாப்பிடுவேன்’ என்று சொல்லி சாப்பிடுவார்கள். ஏன் இப்படி?

உண்மையில், பல்லியில் விஷம் கிடையாது. எந்த ஊராக இருந்தாலும். நன்றாக அவிந்து சமைக்கப்பட்டிருந்தால், அதை உண்ணுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை. நம்மூரில், பயங்காட்டியே குழந்தைகளை மயங்கி விழ செய்து விடுவார்கள்.

---

ஒரு ஆக்ஸிடெண்ட். நடுரோட்டில் லாரி டிரைவர் கிடைக்கிறார். அடிபட்டதில் தொண்டையில் ரத்தம் கட்டி, மூச்சு குழாய் அடைத்துக்கொண்டது. அந்த வழியாக வந்த ஒரு டாக்டர், லாரி டிரைவரை சோதித்துப்பார்க்கிறார். தொண்டையில் ஒரு ஓட்டை போட்டால், பிழைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால், கஷ்டம் தான்.

ஆனால், டாக்டரிடம் எந்த மருத்துவ உபகரணமும் இல்லை. பார்க்கிறார். வேறு வழியில்லாததால், லாரியில் இருந்த ஸ்க்ரூ ட்ரைவரை வைத்தே ஓட்டையை போட்டுவிடுகிறார். லாரி டிரைவரும் பிழைத்துவிடுகிறார்.

இந்த விஷயம் ஒரு வக்கீலுக்கு தெரிந்துபோய், டாக்டர் மேல் கேஸ் போட்டாராம். ஆனால், நீதிபதி டாக்டரை பாராட்டி வழக்கை தள்ளுபடி செய்தாராம்.

---

சிகரெட் பிடிப்பவர்களில், எழுபது சதவிகித பேருக்கு மரபணுக்கள் நல்ல எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. மீதி முப்பது சதவிகித பேருக்கு, பல பிரச்சினைகள் வரும். ஆனால், யாரந்த அந்த முப்பது சதவிகித பேர் என்பது தான் யாருக்கும் தெரியாத ரகசியம்.

சிகரெட் பிடிக்கும் அனைவருக்குமே பாதிப்பு வந்திருந்தால், இந்நேரம் சிகரெட் என்பதே இருந்திருக்காது.

---

அரிய ஆராய்ச்சிகளுக்கு நோபல் பரிசு கொடுப்பது போல், டம்மி ஆராய்ச்சிகளுக்கு இக்நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது.

பெங்களூர் டாக்டர்கள் இருவர் இந்த பரிசை வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் செய்த ஆராய்ச்சி, பெங்களூர் பள்ளி மாணவர்களின் மூக்கு நோண்டும் பழக்கம் பற்றியது. ஆராய்ச்சி முடிவு - ‘மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு நான்கு முறை மூக்கு நோண்டுகிறார்கள்’.

இதுபோல் நடந்த இன்னொரு ஆராய்ச்சியின் முடிவு - ’தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுந்தால், தலை, முதுகு, தோள்பட்டையில் தான் அடி படும்’. இந்த ஆராய்ச்சி நான்காண்டு காலம் நடந்திருக்கிறது!

---

சிலர் ஸ்கூலுக்கு மட்டம் போட, வெங்காயம் வைத்து காய்ச்சல் வரவழைத்திருப்பார்கள். ஆனால், டாக்டரிடம் போனால் எப்படியும் மாட்டிக்கொள்வார்கள். டாக்டரையும் ஏமாற்ற சில மொள்ளமாறித்தனங்கள் இருக்கிறது.

தெர்மாமீட்டரை லைட்டா கடிச்சா, இரண்டு மூன்று டிகிரிகள் அதிகம் காட்டும். அதிகம் கடிச்சா, அவ்வளவுதான். மெர்க்குரி வயித்துக்குள்ள போயிரும்.

இன்னொரு உட்டாலங்கடி வழி, தெர்மாமீட்டரை வாயில வைக்கிறதுக்கு முன்னாடி, வெந்நீரை குடித்துவிட்டு வாயை மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஊசி போட்டு, காய்ச்சல் வரவழைத்துக்கொள்பவர்களும் உண்டு. அந்நேரங்களில், காய்ச்சல் எப்படி வந்தது என்று டாக்டராலும் கண்டுப்பிடிக்க முடியாது.

---

அருகம்புல் ஜூஸ் நல்லதா? அருகம்புல்லை கழுவி, நல்ல தண்ணீரில் ஜூஸ் போட்டால் நல்லது. இல்லாவிட்டால்...?

அருகம்புல் ஜூஸ் குடித்த ஒருவருடைய வயிற்றில், ஆடு, மாடுகளின் வயிற்றில் இருக்கும் ஒருவகை புழு இருந்திருக்கிறது. எப்படி வந்தது? ஆடு, மாடுகளின் சாணம் இருந்த புல்லை கழுவாமல் போட்ட ஜூஸை குடித்ததால் வந்த வினை.

---



மருத்துவ உலகில் சர்ச்சையை ஏற்படுத்திய டாக்டர் கே.ஆர். சேதுராமனின் ‘போஸ்ட் மார்ட்டம்’ புத்தகத்திலிருந்து.

.

Saturday, February 13, 2010

காதலைக் காதலிக்கிறேன் - பிரகாஷ்ராஜ்



”பூப்பதற்கான விநாடியை
எதிர்நோக்குகிறது ஒரு மொட்டு.
காத்திருக்கத் தெரியாத வண்டு
மொட்டறுத்து உள்புக முயற்சிக்கிறது
மொட்டவிழ்க்கவே தெரியாத வண்டுக்கு
தேன் உண்ணவா தெரியப்போகிறது?”


’கதா சப்த சதி’ங்கற தெலுங்குக் காதல் கவிதை தொகுப்பில், காதலையும் காமத்தையும் அவசரமா அடைஞ்சுடணும்னு நினைக்கிற தன் காதலனுக்கு அவனைக் காதலிக்கிற பொண்ணு சொல்றது இது.

கரெக்ட்! ஏன்னா, காதல் என்பது பெறுவது இல்லை, தருவது இல்லை. அடைவதும் இல்லை. அது... நிகழ்வது!

’வாழ்க்கை ரொம்ப போரடிக்குங்க!’ன்னு சொல்ற யாருமே, காதலிக்க தெரியாதவங்கதான். ஏன்னா, காதலிக்க தெரிஞ்சவுங்களுக்கு வாழ்க்கை போரடிக்கிறதில்லை. அதுக்கு நானும் ஒரு சாட்சி.

காதல் புனிதமானது’ன்னு சொல்றவனுக்கு அது புனிதம். காதல் அற்பமானது’ன்னு சொல்றவனுக்கு அது அற்பம். புன்னகையோ, கண்ணீரோ.. அதை நீங்க சந்திச்சே ஆகணும். நீங்க உங்க சொல்லாலும், செயலாலும் அழகாகணுமா? காதலைத் தேடுங்க. ஏன்னா, தேடல்தான் காதல்!

ஆனா, நிறைய காதல்கள், கல்யாணத்தன்னிக்கே செத்துப்போகுது. காரணம், காதலன் புருஷனாகிடுறான். காதலி பொண்டாட்டி ஆகிடுறா. கல்யாணம் பண்ணிக்கிட்டா காதலிக்கக் கூடாதுன்னு அவங்களாவே முடிவு பண்ணிடுறாங்க. அதான் வாழ்க்கை சீக்கிரம் போரடிக்க ஆரம்பிச்சுடுது.

நாட்டுப்புற கதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது. ஒரு கிழவனும் கிழவியும் தள்ளாடுற வயசுல இருக்காங்க. சாகப்போற நேரத்துக்கு முன்னால, கிழவன் தன்னோட கிழவியிடம் ஒரு வேண்டுகோள் வைப்பான்.

அந்த இருட்டுக்குடிசையில் ஒரேயொரு விளக்கை மட்டும் ஏத்த சொல்றான். எரிகிற தீபத்துக்கு பக்கத்தில் அவளோட முகத்தை வைக்க சொல்றான். ’கிழவனுக்கு கிறுக்கு புடிச்சிடுச்சு’ன்னு பிள்ளைக சொன்னாலும், கிழவன் சொன்னபடி செய்யுறா கிழவி.

வெளிச்சத்தில் அவளோட முகத்தை பார்த்ததும், கிழவன் முகத்தில் ஒரு வெளிச்சம் வருது.

”இவளும் நானும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணோம். வீடு, உறவு, ஊருன்னு எல்லோரோட எதிர்ப்பையும் மீறி கல்யாணம் பண்ணினோம். நாப்பது வருஷ வாழ்க்கை. இதோ இப்போ சாகப்போறேன்.

இத்தனை வருஷ வாழ்க்கையில், என்னை காதலிச்ச காரணத்தால, தன்னோட வருத்தங்களைக்கூட இவ எங்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம். நான் இவக்கூட எவ்வளவு சந்தோஷமா வாழ்ந்தேன்னு என் மனசாட்சிக்கு நல்லா தெரியும். அவ என்னோட எப்படி வாழ்ந்தாள்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்.

இருட்டுக்கு நடுவில் எரியுற விளக்கு பிரகாசமா இருக்கு. விளக்கு பக்கத்தில் என் காதலியின் முகம் அதைவிடப் பிரகாசமா இருக்கு. என்னோட அவளும் சந்தோஷமாதான் வாழ்ந்திருக்கா. இந்த சந்தோஷத்தோட நான் இனிமேல் செத்துப்போவேன்”ன்னு கிழவன் சொல்றதா கதை முடியும்.

அப்படி ஒரு கிழவனா வாழக்கிடைக்கிறது ஆசீர்வாதம்!

”நீங்க எத்தனையோ பேரைக் காதலிச்சதா சொல்றீங்க. அதெல்லாம் உண்மையான காதலா? புனிதமான காதல்னா அது நிறைய பெண்கள் மேலே எப்படி வரும்?”னு என்கிட்ட கேட்டிருக்காங்க.

அவங்க, நான் பெண்களை காதலிக்கிறதா நினைச்சுட்டு இருக்காங்க. நான் அவங்களுக்குச் சொல்ல விரும்பறது இதுதான்.

நான் காதலைக் காதலிக்கிறேன்!

---

பிரகாஷ்ராஜ்
சொல்லாததும் உண்மை
விகடன் பிரசுரம்

.

Monday, February 1, 2010

மாயாவதி

பொதுவாகவே வெகுஜனங்கள் பலருக்கு அரசியல்வாதிகளை கண்டால் பிடிக்காது. இதற்கு அவர்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் என பல காரணங்கள் இருக்கலாம். எனக்கு அப்படி எதுவுமில்லாமல், பார்த்தவுடனே பிடிக்காமல் போன அரசியல்வாதி என்றால் அது மாயாவதி தான். உத்திரப்பிரதேசத்தை தாண்டி இவரை பற்றி வரும் செய்திகள் எல்லாமுமே நெகட்டிவ்வாகத்தான் இருக்கும்.



இந்த நிலையில் கடந்த தேர்தலின் போது, இவர் பிரதமராக வர வாய்ப்புக்கள் இருப்பதாக வட இந்திய மீடியாக்கள் தொடர்ந்து கூற, தேர்தல் முடிவுகள் அதை புஸ்வாணமாக்கியப்போது, ரொம்ப நிம்மதியாக இருந்தது. அந்தளவுக்கு மாயாவதி எனக்கு பிடிக்காமல் போனதற்கு காரணம் தெரியவில்லை.

ஆனால், கிழக்குப் பதிப்பகத்தின் மாயாவதி புத்தகத்தை படித்தப்பிறகு இப்படி சொல்லவே எனக்கு பயமாக இருக்கிறது. ஏனெனில், குற்றசாட்டுக்களுக்கு மாயாவதி கொடுக்கும் பதிலடி அப்படி.

---

இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கும்போதே, உள்ளுக்குள் குறுகுறுவென இருந்தது. கிழக்கு பதிப்பகத்தில் வரும் வாழ்க்கை வரலாறு புத்தகங்களைப் படித்து முடித்தவுடன், சம்பந்தப்பட்டவருக்கு தொண்டராகிவிடுவோம். கிழக்கின் புத்தகம் என்றில்லாமல், எந்த வாழ்க்கை வரலாறு புத்தகம் என்றாலும், சம்பந்தப்பட்டவர் பற்றி நிறைய பாஸிட்டிவ் தகவல்களும், தேவைப்பட்டால் கொஞ்சம் நெகட்டிவ் தகவல்களும் இருக்கும்.

அப்படி இருக்கும்போது, மாயாவதி பற்றி பாஸிட்டிவ் செய்திகள் என்ற ஆச்சரியமும், அவை என்னவாக இருக்கும் என்ற ஆர்வமும் அதிகரித்தது. ஏனென்றால், சமீபக்காலங்களில்... ஏன் அவரை எனக்கு தெரிந்ததில் இருந்தே, செய்தித்தாள்களில் படிக்கும் செய்திகள் எல்லாமுமே தப்பாகத்தான் இருக்கும். ஊழல், ஆடம்பரம், தனக்கு தானே விளம்பரம் என எல்லாமுமே. இவரை பற்றி நல்லதாக என்ன படித்திருக்கிறேன் என்று யோசித்தால், ஒன்றும் நினைவுக்கு வருவதில்லை.

யார் இவர்? எப்படி இவர் இப்படி முதல்வராக முன்னிலைக்கு வந்தார்? பிரதமராகும் தகுதி இவருக்கு இருக்கிறதா? நல்லவரா, கெட்டவரா?

ஒரு தலைவராக, ஒரு பெண் வருவதே கஷ்டம் எனும்போது, ஒரு தலித் பெண்மணியால் எப்படி முதல்வராக முடிந்தது?

---

உத்திரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் ஏழை விவசாயிக்கு மகளாக பிறந்து, வறுமையில் தவித்து, சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்டு, பிறகு கஷ்டப்பட்டு முன்னேறி தற்போதுள்ள நிலைக்கு வந்திருக்கிறார் மாயாவதி என்றால் அது முற்றிலும் தவறு!

இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் டெல்லியில். இவருடைய தந்தை ஒரு அரசு ஊழியர். ஆணாதிக்க சூழலில் வளர்ந்தாலும், இயல்பிலேயே தைரியத்துடன் வளர்ந்தார். நன்றாக படித்தார். உத்திரப்பிரதேச கிராமங்களில் இருக்கும் சாதி வித்தியாசங்களை கண்டு வருந்தி கோபப்பட்டார். ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டர் ஆவதென முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினார். ஆசிரியராகவும் வேலைப் பார்த்துக்கொண்டே.

அம்பேத்கார் சிந்தனைகளில் வயப்பட்டவர், விவாத மேடைகளில் யாருக்கும் பயப்படாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசி பலருடைய கவனத்தை பெற்றார். பிறகு கன்ஷிராமின் பார்வைப்பட்டு, தைரியமான பேச்சால், தலித் ஊழியர் நலன் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்தார். கன்ஷிராமின் வழிக்காட்டலில் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். கலெக்டர் கனவை கைவிட்டுவிட்டு, கன்ஷிராம் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியின் உத்திரப்பிரதேசத்திற்கான முகமாக மாறினார்.

அதற்கு பிறகு நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் நின்றவர், மூன்று முறை தோற்று, பிறகு எம்.பி. ஆனார். ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு வங்கி விரிவடைய விரிவடைய, ஒரு கட்டத்தில் அரசியல், கூட்டணி விளையாட்டால் உத்திரப்பிரதேசத்தின் முதல்வரானார். செல்வாக்கு வளர வளர, அதற்கு பிறகு அவரால் தனித்து ஆட்சியை பிடிக்கவும் முடிந்தது. “இந்திய பிரதமராகும் தகுதி எனக்கிருக்கிறது” என தைரியமாக கூச்சப்படாமல் அடிக்கடி சொல்லவும் முடிந்தது.

---

அரசியலில் இவர் வெற்றிப் பெற்றதற்கு முக்கிய காரணங்களாக இவரது தைரியத்தையும் பிடிவாதக்குணத்தையும் சொல்லலாம்.

மாயாவதியின் தந்தை பிரபு தாஸ் தயாள் பெண் குழந்தைகளை வெறுத்தவர். மாயாவதி உள்ளிட்ட தனது பெண் குழந்தைகளை கண்டுக்கொள்ளாமல் ஆண் குழந்தைகளை மட்டும் அக்கறையுடன் வளர்த்தவர். பின்னாட்களில், மாயாவதி முதல்வரானப்பிறகு அவருடைய தந்தை அவருக்கு தெரிந்தவர்கள் சிலருடைய கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு மாயாவதியிடம் சென்றார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மாயாவதி சொன்னது.

”இதையெல்லாம் என்கிட்ட ஏன் சொல்றீங்க? உங்களுக்கு உங்க பசங்க தானே உசத்தி? போய் அவுங்கிட்ட சொல்லுங்க?”

---

கன்ஷிராமை தொடாமல் மாயாவதி பற்றி தெரிந்துக்கொள்ள முடியாது. இந்திய அரசியல்வாதிகளில் வித்தியாசமானவர். தொலைநோக்கு பார்வை உடையவர்.

கட்சியை ஆரம்பித்தவர், எந்த பதவியிலும் இருந்ததில்லை. அதிகாரம் தன் கையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. உத்திரப்பிரதேச முதல்வர் நாற்காலியில் மாயாவதியை உட்கார வைத்தவர், இது போல் ஒவ்வொரு மாநிலத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கனவுடன் திட்டங்கள் தீட்டிக்கொண்டே இருந்தார். இன்று தமிழகத்திலும் கட்சியை ஆரம்பித்து, மாநில மாநாடு நடத்தியிருக்கிறார்கள் என்றால் அதற்கு எல்லாம் மூலக்காரணம் கன்ஷிராம்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். மாயாவதியின் வெற்றிக்கு பின்னால் இருந்தது கன்ஷிராம் என்றால் யாராலும் மறுக்க முடியாது.

---

தலித், தலித் முன்னேற்றம் என்று பேசி பேசி ஆட்சியை பிடித்தவர், அவர்களுக்காக அப்படி என்ன செய்தார் என்றால், பெரிதாக எதுவும் இல்லை. அரசாங்க வேலைகளில் முன்னுரிமை, தலித்களின் உரிமை காக்கும் சட்டம் தவிர புரட்சிக்கர திட்டங்கள் ஏதும் இல்லை. தலித்களுக்கு எதிரான கொடுமைகளும் குறைந்திருக்கிறதா என்று தெரியவில்லை. மற்றபடி ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தனக்குத்தானே வைத்துக்கொண்ட சிலைகள், ஊழல் குற்றச்சாட்டுகள் இவையனைத்திற்கும் குறைவேயில்லை. இவை பற்றி எழும்பும் கேள்விகளுக்கு இவர் சொல்லும் ஒரே பதில் - “ஒரு தலித் பெண் நன்றாக வாழ்கிறாளே? என்ற பொறாமையும் எரிச்சலும் தான் இந்த குற்றசாட்டுக்களுக்கு காரணம்.”

இதையெல்லாம் பார்க்கும்போது, இவர் நம்மூர் முன்னணி அரசியல்வாதிகளின் கலவையாகத்தான் தெரிகிறார்.

---

நூலாசிரியர் சி.என்.எஸ்., மாயாவதியின் அரசியல் வளர்ச்சியை சொல்லுவதின் மூலம், கன்ஷிராம் பற்றியும், அவருடைய சிந்தனைகள் பற்றியும், பகுஜன் சமாஜ் கட்சியின் பிறப்பை பற்றியும், உத்திரப்பிரதேச அரசியல் நிலையை பற்றியும் படிப்பவர்களுக்கு புரிய வைத்திருக்கிறார். அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக ஒபாமா வந்தது போல், இந்தியாவின் முதல் தலித் பிரதமராக வரும் வாய்ப்பு மாயாவதிக்கு அதிகம் இருப்பதாக கூறுகிறார். தலித்-பிராமணர் தேர்தல் கூட்டணி போன்ற அவருடைய அரசியல் தந்திரமும், அவருடைய நடுத்தர வயதும் அதற்கு கைக்கொடுக்கும் என்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கோ, பகுஜன் சமாஜ் கட்சியின் பிரமாதமான நிதி நிலைமை பற்றிய கேள்விக்களுக்கோ மாயாவதியைப் போல் ஆசிரியரிடமும் பதிலில்லை.

புத்தகம் படித்து முடிந்தபிறகாவது, மாயாவதி மேலான எரிச்சல் குறைந்திருக்கிறதா என்றால் இல்லை. உங்களுக்கும் இம்மாதிரியான எரிச்சல் இருந்தால், நீங்களும் அதன் காரணம் தேடி இப்புத்தகம் படிக்கலாம். மற்றபடி, தமிழகத்தில் உதயமாகி வரும் பகுஜன் சமாஜ் தொண்டர்களும், திடீர் தலைவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

மாயாவதி
சி.என்.எஸ்.
கிழக்கு பதிப்பகம்
166 பக்கங்கள்
ரூ. 80


.

Sunday, January 24, 2010

இளையராஜா பற்றி வைரமுத்து



இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!

உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.

மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.

---

திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.

மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.

பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.

நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.

ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.

பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே நேசிக்கிறேன்.

---

நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.

என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.

உன்னை நானும் பார்க்கிறேன்.

தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.

வார்த்தை துடிக்கிறது;

வைராக்கியம் தடுக்கிறது;

வந்துவிட்டேன்.

---

அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.

ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.

இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.

என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.

நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.

ஒரு கணம் திகைத்தேன்.

வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.

பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.

நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.

நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.

உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்.

‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.

அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.

---

எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.

இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.

ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.

படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.

உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!

உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!

காரணமே இல்லையே.

இது இருதயத்திற்கு ஆகாதே.

---

நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.

ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.

இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.

---

நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!

இப்போது சொல்கிறேன்.

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.

---

உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.

மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.

---

நீயும் நானும் சேர வேண்டுமாம்.

சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?

‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.

மழை வந்தது.

நின்று விட்டேன்.

என்னை நீ பிடித்து விட்டாய்.

அப்போது சேர்ந்து விட்டோம்.

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?

இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?


---

வைரமுத்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் திரையுலக வாழ்க்கையிலும் சந்தித்த மனிதர்களில் தன்னை ஏதெனும் ஒரு விதத்தில் பாதித்தவர்களை பற்றி தனக்கே உரிய நடையில் எழுதியிருக்கும் புத்தகம் ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’. சிவாஜி, எம்.ஜி.ஆர்., கலைஞர், பாரதிராஜா, கே.பாக்யராஜ், ஏ.வி.எம். சரவணன், சாலமன் பாப்பையா என நமக்கு தெரிந்தவர்கள் பற்றிய தெரியாத விஷயங்களை, அவர்களின் உயர்ந்த பண்புகளை சிலாகித்து, சிலாகிக்க வைக்கிறது வைரமுத்து எழுத்துக்கள்.

---

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
வைரமுத்து.
219 பக்கங்கள்.
ரூ. 70.
சூர்யா லிட்ரேச்சர் லிமிடெட்.
திருமகள் நிலையம்.

.