Wednesday, October 22, 2014

இந்திய சேவை. என்ன தேவை?



ஃப்ளிப்கார்டில் ஒரு பரிசு பொருள் ஆர்டர் செய்திருந்தேன். சொன்ன தேதிக்கு போய்  சேரவில்லை. போன் செய்து பார்த்தால், ஏதோ  கதையை சொன்னார்கள். கஸ்டமர் கேர்காரர்களுக்கு மன்னிப்பு கேட்பதில் எந்த ஈகோவும் இருப்பதில்லை.மன்னிப்பு கேட்பது பெரிய மனுஷத்தனம் என்ற கமலின் கூற்றின்படி, இவர்கள் பெரிய மனிதர்கள்.

சரி, ஒண்ணும்  பிரச்சினை இல்லை. சர்ப்ரைஸ் கிப்ட் தானே? சர்ப்ரைஸா மெதுவா போகட்டும் என்று விட்டுவிட்டேன்.

இங்கு அமெரிக்காவில் பெரும்பாலான பொருட்களை ஆன்லைனில் தான் வாங்குவேன். 90% சொன்ன தேதிக்கு வரும். 5% சொன்ன தேதிக்கு ஒருநாள் பிறகு வரும். 5% சொன்ன தேதிக்கு முன்பு வரும். இது என்னோட புள்ளிவிபரம். சொல்லவரும் விஷயம் என்னவென்றால், பெரும்பாலான சமயங்களில் சொன்ன தேதிக்கு முன்பே வரும் என்பது தான்.

தொடர்வதற்கு முன்பு, இன்னொரு விஷயம். இந்தியாவில் இருக்கும் போது, யாராவது இந்தியாவை மட்டம் தட்டி, அங்க அப்படி, இங்க இப்படி என்று சொன்னால் கடியாக இருக்கும். இப்படி நானும் எரிச்சல் கிளப்பக்கூடாது என்று தான் பல பதிவுகளை எழுத நினைத்து, எழுத ஆரம்பித்து விட்டிருக்கிறேன். இதுவும் அப்படி ஒரு பதிவுதான். இருந்தாலும், எழுதுகிறேன். யாரையேனும் புண்படுத்தினால், மன்னிக்கவும்.

ஃப்ளிப்கார்ட்டில் இப்படி ஆனதும், நான் நினைத்தது, ஃப்ளிப்கார்ட், ஒரு இந்திய கம்பெனி என்பதால், இம்மாதிரி பிரச்சினைகள் இருக்கிறது என்று. ஈபே, அமேசான் போன்ற அமெரிக்க கம்பெனிகளின் இந்திய தளங்கள் நல்லபடியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

அது தவறு என்று விரைவிலேயே தெரிந்தது. போன வருடம், என் அண்ணன் ஈபேயில் ஒரு நோக்கியா போன் வாங்கியிருக்கிறார். புது போன் தான். இந்த வருடம், ஏதோ பிரச்சினை வந்திருக்கிறது. நோக்கியாவில் கேட்டால், வாரண்டி போன வருடமே முடிந்திருக்கிறது. போன் வாங்குவதற்கு முன்பு. அதாவது, வாரண்டி முடிந்த பிறகு, பழைய போனை புது போன் என்று பொய் சொல்லி விற்றிருக்கிறார்கள். ஈபேயில் கேட்டால், இது விற்பனையாளர் தவறு. நீங்கள் வாங்கி இரண்டு மாதத்திற்குள் புகார் சொல்லியிருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்தது, சமீபத்தில் அபிலாஷின் இந்த பதிவை படித்தேன். அமேசானின் டெலிவரி குளறுபடி பற்றியது.

இப்ப எனக்கு தோன்றுவது, ஃப்ளிப்கார்ட் அமெரிக்க தளம் ஆரம்பித்தாலும், இந்தியாவில் இருக்கும் பிரச்சினைகள் இருக்க போவதில்லை என்று.

அதாவது, பிரச்சினை இருப்பது, நிறுவனத்தின் விதிமுறைகளிலோ, செயல்முறைகளிலோ இல்லை. ஊழியர்களிடம். ஊழியர்களாகிய மனிதர்களின் மனநிலையில். மனிதர்கள் வாழும் சூழலில்.

இவையெல்லாம் மாறாமல், இம்மாதிரி சேவைகளின் தரம் மாற போவதில்லை.

.


Saturday, October 18, 2014

சுந்தர் சியின் திறமை



அரண்மனையை டெண்ட்கொட்டாயில் (tentkotta.com) பார்த்தேன்.



சுந்தர் சியின் திறமையை பாராட்ட தோன்றியது. ஆயிரம் ஜென்மங்கள், சந்திரமுகி என்று என்ன சொன்னாலும், போரடிக்காமல், சிரிக்க வைக்குமாறு படம் எடுப்பதில் சுந்தர் சி நிபுணர் தான்.

சுந்தர் சியிடம் நான் ஆச்சரியத்துடன் பார்ப்பது என்னவென்றால், இந்த long term  consistency  தான். காமெடியில் கவுண்டரில் ஆரம்பித்தவர், விவேக், வடிவேலு என்று இப்போது சந்தானத்துடன் ஹாட்ரிக் அடித்துக்கொண்டிருக்கிறார்.

நடிகர்களிலும் கார்த்திக், சரத்குமார், சத்யராஜ் என்று ஆரம்பித்து ரஜினி, கமல் என்று சென்று பிரபுதேவா, பிரசாந்த், அஜித், மாதவன் போன்ற அடுத்த தலைமுறையினரை இயக்கி, இப்போது விஷால், சித்தார்த், விமல், வினய் போன்றோர்களை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

நடுவே ஹீரோவாக நடித்து கொஞ்சம் சரிவை பார்த்தாலும், இயக்கத்தில் வண்டியை சரியாகவே ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

இவருடைய வெற்றிக்கு காரணமாக, நான் நினைப்பது - காலத்திற்கேற்ப படமெடுப்பது. இதை மக்களின் ரசனைக்கேற்ப படமெடுப்பது என்றும் சொல்லலாம். எந்த வகை படங்கள் ஓடுகிறதோ, அதை மக்கள் ரசனையாக எடுத்து கொள்வாராக இருக்கும். பெரும்பாலும் நகைச்சுவை படங்கள் என்றாலும், நடுநடுவே ட்ரெண்டுக்கேற்ப படமெடுத்து மெயின்ஸ்ட்ரீமுடன் நிலை நிறுத்திக்கொள்வார். நகைச்சுவை எல்லா படங்களிலும் இருப்பதால், அதை விடலாம். கிராமத்து கதை, சிட்டி கதை, வெளிநாட்டு கதை, காதல், சென்டிமென்ட் கதை, ஆக்ஷன் கதை, பேய் கதை என்று எல்லாவித கதைகளையும் எடுத்து வெற்றி கொடுத்திருக்கிறார்.

இது சுலபமல்ல. எல்லோராலும், எல்லாவித படங்களை எடுக்க முடியாது.

உதாரணத்திற்கு, துள்ளுவதோ இளமை போன்ற கில்மா படங்கள் வந்தபோது, ஷங்கரும் அதை போல எடுக்க நினைத்து, பாய்ஸ் கொடுத்தார். மக்கள் அதற்குள் திருந்தி, ச்சீ த்தூ என்றார்கள். பாயசம் செய்தால், உடனே சூடாக கொடுக்க வேண்டும். ஆறியது என்றால் கூட பரவாயில்லை. பாய்ஸன் ஆனப்பிறகா கொடுப்பது? இந்த விஷயத்தில் சுந்தர் சி ஹாட்டு.

இதற்கும் இவருடைய படமெல்லாம், எங்கிருந்தோ ஜெராக்ஸ் செய்யப்பட்டதாக இருக்கும். காட்சிகள் பார்த்ததாக இருக்கும். இருந்தாலும், ஒட்டுமொத்த செய்நேர்த்தியில் குறை கூற முடியாதபடி படமெடுப்பது இவருடைய பலம்.

இப்படி இருந்தும், இவருடைய மதகஜராஜா வெளிவர போராடுவது தான் வியப்பாக இருக்கிறது. எனக்கு தெரிந்து, விஷால் சொந்த குரலில் பாடியது தான், காரணமாக இருக்க கூடும். (அட, சுந்தர் சியே பாடிய சண்டை, குரு  சிஷ்யன் வெளிவந்திருக்கிறது!!!)

.

Saturday, October 11, 2014

பணியிடத்து ஃபன் - 2


டீம் பிரச்சினையை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். கரப்ட் (corrupt) ஆன பேக்கப்பை (backup) சரி செய்ய போராடிக்கொண்டிருந்தார்கள். இதை சரி செய்ய முடியாமல் போனால் என்ன செய்வது? என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். கூடவே வயிறு பசித்ததால், இந்த பிரச்சினையுடன் டின்னரை எப்படி ஹேண்டில் செய்வது என்றும் உப யோசனை.

எவ்வளவு நேரம் தான் போனிலும், லேப்டாப்பிலும் இருப்பது? அட, பிரச்சினையை தீர்க்க இது ரெண்டு மட்டும் தானே தேவை? நம்ம வீட்டுல இருந்தா என்ன? நண்பர் வீட்டுல இருந்தா என்ன? சட்டையை போட்டுக்கொண்டு கிளம்பினேன். மற்ற நண்பர்களையும் கிளம்பி வர சொல்லியாச்சு. அலுவலக இணைப்பில் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நண்பர் வீட்டிற்கு கிளம்பினேன்(னோம்).

போகும் வழியில் இன்ஸ்டால் பிரச்சினையை சமாளிக்கும் வழிகள் யோசனைக்கு வந்தன.



டெஸ்ட் சூழலில் இருக்கும் வெர்ஷனையும் எடுத்து போட முடியாது. ஒவ்வொரு சூழலிலும் அப்ளிகேஷனை நிறுவும் போது (deploy), அச்கூழலுக்கேற்ப மென்பொருள் கட்டமைக்கப்படும் (configuration). உதாரணத்திற்கு, இங்கிருக்கும் அப்ளிகேஷன் பரிசோதனைக்கூட தரவுத்தளத்துடன் (test  database) இணைக்கப்பட்டிருக்கும். இதுபோலவே மற்ற இணைப்புகளும் இருக்கும். இந்த வெர்ஷனை எடுத்து ப்ரொடக்ஷனில் போட்டால், சரியாக வேலை செய்யப்போவதில்லை. சரி செய்ய முயற்சிக்கலாம். அவ்வளவு தலையை கெடுக்க கூடாது. படிப்பினை - சரியான பேக்கப் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

நண்பர் வீட்டில் உணவு தயார். மராட்டிய நண்பர் அவர். மதுரைக்கு வாக்கப்பட்டு இருந்தார். அவருடைய மனைவி வளர்ந்தது எல்லாம், மதுரையில். சாம்பார், சிக்கன் குழம்பு, கேசரி என்று தயார் செய்து ரெடியாக இருந்தது. கிச்சனில், அவருடைய மனைவியார் ரவா தோசை வார்த்து சுட சுட வழங்கி கொண்டிருந்தார். ஏற்கனவே வந்திருந்த மற்ற நண்பர்கள், ஜோதியில் ஐக்கியமாகி இருந்தார்கள்.

அலுவலக பிரச்சினை இன்னமும் தீரவில்லை. என் யோசனை தொடர்ந்தது. Development சூழலில் இருந்து, திரும்பவும் அப்ளிகேஷனை உருவாக்கலாமா (application build)? அதாவது, இரு மாதங்களுக்கு முன்பு செய்து செயலை திரும்ப செய்வது.

மணி எட்டரை. அணியிடம் கருத்து கேட்டேன். இன்னொரு பிரச்சினையை சொன்னார்கள். அது என்னவென்றால், சில நாட்களுக்கு முன்பு, அலுவலகத்தில் இருக்கும் கணிப்பொறிகளில் இயங்குதளத்தை மேம்படுத்தி இருந்தார்கள் (operating system upgrade). விண்டோஸ் எக்ஸ்பியில் இருந்து விண்டோஸ் 8க்கு. இது நடந்தது வெகு சமிபத்தில். அதே வாரத்தில். விண்டோஸ் எக்ஸ்பியில் build செய்ய முடிந்த அப்ளிகேஷனை விண்டோஸ் 8இல் செய்ய முடியவில்லை. இந்த பிரச்சினை என் காதுக்கும் வந்தது. அப்போது இது பெரிய பிரச்சினையாக தெரியவில்லை. எப்படியும் சரி செய்ய முடியும். மெதுவாக பிறகு அடுத்த வாரத்தில் சரி செய்யலாம் என்று இருந்துவிட்டோம். இப்போது அது பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. படிப்பினை - எந்த பிரச்சினையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அந்தந்த பிரச்சினையை அவ்வப்போது தீர்த்துவிடவேண்டும்.

இந்த பிரச்சினையை எல்லாம் ஒரு பெரிய கை இருந்தால் சரி செய்து விடலாம். இப்போது இன்ஸ்டால் அணியில் இருப்பது எல்லாம் ஜூனியர்கள். Tech  lead ஆக இருப்பவர், அன்று வேறு ஏதோ வேலை இருப்பதால் போன்காலில் ஜாயின் பண்ணவில்லை. அவரை அழைத்து பார்த்தாலும், தொடர்பு கொள்ளமுடியவில்லை. இப்படியெல்லாம் பிரச்சினைகள் இதற்கு முன்பு வந்ததில்லை. படிப்பினை - இச்சமயங்களில் எக்ஸ்பர்ட், தொடர்பு எல்லைக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அனைவரும் சாப்பிட்டு முடிந்ததால், நானும் சாப்பிட உட்கார்ந்தேன்.

விண்டோஸ் 8 பிரச்சினையும் கடினமானதாக இருந்தது. இருந்தாலும், அணியினர் முயன்று கொண்டிருந்தார்கள். நான் தோசை சாப்பிட்டுக்கொண்டே, அடுத்த வழியை யோசித்துக்கொண்டிருந்தேன். இந்தியாவில் இருக்கும் அணியினரின் கணிப்பொறிகளில் இன்னமும் விண்டோஸ் எக்ஸ்பி தான். ஆனால் அவர்கள் அலுவலகம் வர இன்னும் நேரமாகும். இந்தியாவில், பூனேயில் எப்பவும் அலுவலகத்துக்கு சீக்கிரம் வரும் ஒரு பெண்ணிற்கு போன் செய்தேன். கிளம்பி கொண்டிருப்பதாக சொன்னார். வழக்கத்திற்கு முன்பு இன்னும் சீக்கிரமாக வருமாறு சொன்னேன்.

அந்த பெண் அலுவலகம் வந்தவுடன் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பிக்கை வந்தது. இப்போது இன்ஸ்டாலை சோதிக்கும் பயனாளி, அலுவலகத்தில் இருப்பது நினைவுக்கு வந்தது. எவ்வளவு நேரம் தான் அவர் அலுவலகத்தில் இருப்பார்? பத்து மணிக்கு தான் கிளம்ப வேண்டும் என்று சொன்னார். அவர் கிளம்பி விட்டால், வேறு யார் இதை சோதிப்பது? அவர் சோதித்து ஒப்புதல் கொடுக்காவிட்டால், இந்த இன்ஸ்டால் முடியாது.

அதே சமயம், ஒரு முடிவான நேரம் இல்லாமல் அவரை அப்படியே காத்திருக்க வைக்கவும் முடியாது. சரி, ஒன்பதரை வரை பார்ப்போம். அந்த நேரத்து நிலையை பொறுத்து ஒரு முடிவு எடுக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

இந்த பிளானை எல்லாம் எனது இயக்குனருக்கு ஒரு போன் போட்டு சொன்னேன். அவரும் நம்பி வேறு வழியில்லாததால் ஒத்துக்கொண்டார்!!!

ஒன்பதரைக்கு முன்பே பூனே பெண் அலுலலகம் வந்தார். இந்தியாவில் மணி ஒன்பது ஆகவில்லை. மடமடவென build  செய்தார். அந்த வெர்ஷனை எங்களுக்கு அனுப்பினார். நாங்கள் அந்த வெர்ஷனை முதலில் பரிசோதனை சூழலில் சோதித்தோம். வெற்றி.

அடுத்ததாக ப்ரோடக்ஷனில் நிறுவினோம். அலுவலகத்தில் இருந்த பயனர் குழு உறுப்பினர் சோதிக்க தொடங்கினார். மணி பத்தை தாண்டியது. போன் லைன் அமைதியாக இருந்தது.  பத்து பத்துக்கு முடித்து எல்லாம் சரியாக இருப்பதாக சொன்னார். ஹையா!!! ஜாலி!!!!

கேசரி சாப்பிட்டுவிட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு போனை வைத்தேன். அடுத்த நாள் அலுவலகத்தில் படிப்பினைகள் செயல் திட்டங்களாக உருவெடுத்தது.

.

Wednesday, October 1, 2014

பணியிடத்து ஃபன்

ஆன்சைட் வேலையின் சிறப்பம்சங்கள் (சம்பளத்தை விடுங்க!!) - நேரடியாக க்ளையண்ட் எனப்படும் மென்பொருள் பயனர்களுடமும், நிர்வாகிகளுடமும் இணைந்து பணியாற்றலாம் , அவர்களின் எதிர்ப்பார்ப்பைப்  புரிந்து கொள்ளலாம், எழுதிய மென்கோடுகள் பயனில் இருப்பதை காணலாம், எழுதிய தவறுகள் ஏற்படுத்தும் பாதிப்பைப் பார்க்கலாம், பாதிப்பை ரியல்டைமில் சரி செய்யும் வாய்ப்பு கிடைக்கலாம். இப்படி சொல்லிக்கொண்டு போகலாம்.

அப்படி கிடைத்த அனுபவம் ஒன்று இது.

அது ஒரு வெப் அப்ளிகேஷன். அதை பயன்படுத்தும் குழு, சில தேவைகளை கூறியிருந்தார்கள். நாங்களும் அதை செய்து முடித்துவிட்டோம். என்ன செய்தோம்? (மென்பொருள் அனுபவஸ்தர்கள் அடுத்த பாரா செல்லலாம்.)

Development, Testing, Production - என்று ஒரு மென்பொருள் பல சூழலில் ஓடிக்கொண்டிருக்கும். இது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். Local, preproduction என்று இன்னும் பல அடுக்குகள் இருக்கும். வேறு வேறு பெயர்கள் இருக்கும். மாற்றங்களை முதலில் local அல்லது development சூழலில் செய்வார்கள். பிறகு, சோதனை செய்ய testing  சூழலுக்கு கொண்டு செல்வார்கள். முழுமையான பரிசோதனைக்கு பிறகு, production செல்லும். Productionஇல் போடும்போது இன்னும் சில பல பரிசோதனைகள் இருக்கும். இது பெரும்பாலும் பயனர்கள் யாரும் இல்லாத சாயங்கால, இரவு நேரங்களில் நடைபெறும்.

அப்படி ஒரு பொன் மாலை பொழுது. அப்படிபட்ட நாட்களில் கொஞ்சம் கிறுகிறுன்னு தான் இருக்கும். ஏதாச்சும் தப்பாச்சுனா, அடுத்த நாள் அலுவலகத்தில் பிரபலமாகிடுவோமே? அன்று எங்கள் அணியில் இருந்த ஒருவன், அடுத்த நாளில் இந்தியா கிளம்புவதாக இருந்ததால், உடன் பணிபுரியும் இன்னொரு குடும்பஸ்தன், இரவு உணவிற்கு அழைத்திருந்தான். அப்போது மனைவி, குழந்தை இந்தியாவில் இருந்ததால், நான் தற்காலிக பேச்சிலராக இருந்தேன். இந்த மாதிரி யாரும் சாப்பிட கூப்பிடும்போது, மகிழ்ச்சியுடன் அப்பாயின்மெண்ட் கொடுத்துவிடுவேன்.

இன்ஸ்டால், 6:30க்கு . சாப்பாடு அப்பாயிண்ட்மெண்ட் 7-8 மணிக்கு செல்லலாம் என்றிருந்தேன்.

இன்ஸ்டால் ஆரம்பித்தது.

1. அது ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் அப்ளிகேஷன். அதை முதலில் நிறுத்த வேண்டும். நிறுத்தியாச்சு.

2. பொதுவாக ஓடிக்கொண்டிருக்கும் வெர்சனின் நகல் இருக்கும். இல்லாவிட்டால் நகல் எடுக்க ஸ்க்ரிப்ட் இருக்கும்.ஸ்க்ரிப்ட்டை ஓட்டியாச்சு.

3. நாங்கள் மாற்றி எழுதியிருந்த மென்பொருளை, அடுத்து போட வேண்டும். போட்டாச்சு.

4. போட்டது ஒழுங்க ஓடுதா என்று சோதனை செய்ய வேண்டும். சோதிக்கும் பயனாளி, அலுவலகத்தில் இருந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு காரணத்தால், அவருக்கு வீட்டில் இருந்து பணிபுரியும் வசதி இல்லை.

சோதிக்கும்போது, ஒரு பிரச்சினை வந்தது. அந்த பிரச்சினை உடனே சரி செய்ய முடியாத பிரச்சினை.ஒவ்வொரு சூழல் ஒவ்வொரு மாதிரி இருப்பதால், இது முன்னமே கண்டுப்பிடிக்கப்படவில்லை. தப்புதான். என்ன செய்ய?

சரி. இன்று முடியாது. பிரச்சினையை சரி செய்து விட்டு வேறொரு நாள் production வரலாம் என்று முடிவெடுத்தோம்.

இப்பொழுதே நேரமாகிவிட்டது. சாப்பிட அழைப்பு வந்துக்கொண்டு இருக்கிறது. நான் உள்பட, சாப்பிட செல்ல வேண்டிய விருந்தினர்கள் அனைவரும் இன்ஸ்டால் லைனில் இருக்கிறோம். வரமுடியாது என்றும் சொல்ல முடியாத சூழ்நிலை. அடுத்த நாள், அந்த பையன் இந்தியா செல்கிறான். இப்போது முடிந்து விடும், இப்போது முடிந்து விடும் என்று நினைத்துக்கொண்டு, வருகிறோம், வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

தப்பான ப்ரோகிராமை எடுத்து விட்டு முன்பு ஓடிக்கொண்டிருந்த சரியான வெர்ஷனை நிறுவ வேண்டும்.

நிறுவினோம். நிறுவினால் அதுவும் சரியாக ஓடவில்லை. சரியாக ஓடிக்கொண்டிருந்தது தானே? என்ன ஆச்சு?

இரண்டாம் ஸ்டெப்பில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது. என்னவென்று ஆராய நேரம் இல்லை. சரி செய்தாக வேண்டும்.

ஓடிக்கொண்டிருந்த நல்ல வெர்ஷனும் இல்லாத நிலை இப்போது. உள்ளதும் போச்சு. என்ன செய்யலாம்?

(தொடரும்)

Sunday, September 28, 2014

ஜாகை மாற்றம் - அப்டேட்

கடந்த மாதம் டென்வரில் இருந்து மின்னியாபொலிஸ் வந்தேன். ஒருவழியாக கடந்த வாரம் தான் ஒரு நிலையை அடைந்தோம்.

டென்வரை விட குளிர் அதிகமாக இருக்குமாம். நான் பிறந்ததில் இருந்து மாறி மாறி வந்திருக்கும் இடங்களை எண்ணிப்பார்க்கிறேன். குளிர் அதிகமாகிக்கொண்டே தான் வந்திருக்கிறது. அண்டார்டிகாவில் ரிட்டயர் ஆவேனோ?

டென்வர் ரொம்பவும் பழகிப்போயிருந்தது.வீட்டிற்கு வெளியேவே சுலபமாக அனைத்தும் கிடைத்தது. சமையலின்போது கருவேப்பிலை இல்லையென்றால், பொடிநடையாக சென்று வாங்கிவந்துவிடலாம். ஊரில் இருக்கும்போது வீட்டின் முன்புறம் இருந்த மரத்தில் சுவர் ஏறி பறிப்பேன். அதற்கு பிறகான வசதி, டென்வரில் தான் இருந்தது.

டென்வர் மலைக்களுக்கு பிரபலம் என்றால் மின்னியாபொலிஸ் ஏரிகளுக்கு. 10000 ஏரிகள் கொண்ட மாநிலமாம். நானும் பார்த்தேன். எங்கு பார்த்தாலும் ஏரிகளும், அதில் நீருற்றுகளும் நிறைந்து இருக்கிறது. எங்க அபார்ட்மெண்ட் உள்ளேயே மூணு குட்டி ஏரி இருக்குனா பார்த்துக்கோங்களேன்!!!



மின்னியாபொலிசில் எனது அலுவலகம் இருப்பது, டவுண்டவுன் எனப்படும் நகரின் மையத்தில். இங்கு இருக்கும் ஸ்கைவே தான், இந்த ஊரில் என்னை இம்ப்ரெஸ் செய்த முதல் சமாச்சாரம்.

இருக்கும் பெரும்பாலான கட்டிடங்களை, இரண்டாம் தளத்தில் நடைபாதை அமைத்து இணைத்திருக்கிறார்கள். பலன் - ரோட்டில் இறங்காமல் கட்டிடங்கள் வழியாகவே ஒரு ரவுண்ட் போகலாம். குளிர்காலத்தில் ரொம்பவும் வசதியை கொடுக்கும். பாதையோர கடைகள் அனைத்தும், இந்த ஸ்கைவேயில் தான் இருக்கிறது. முதல் நாள் காரில் ஜிபிஎஸ் போட்டுக்கொண்டு ஒரு ரவுண்ட் வந்தபோது, ஜிபிஎஸ் நிறைய கடைகளைக் காட்ட, கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை.ஒன்றும் புரியவில்லை. அப்புறம், ஸ்கைவே பற்றி தெரிந்தபோது தான், இது புரிந்தது.

பஸ் வசதி நன்றாக இருக்கிறது. பஸ்களுக்கு தனி லேன் இருப்பதால், ஊருக்குள்ளே பஸ்ஸில் சென்றால்தான் சீக்கிரமாக செல்லமுடிகிறது. இந்த தனி லேனில் பணம் செலுத்தினாலும், கூட்டமாக (Carpool) சென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நான் தங்கியிருக்கும் இடம் தான் காரணமா தெரியவில்லை. எங்கு செல்லவேண்டுமென்றாலும், பத்து மைல், இருபது மைல் என்று சொல்கிறார்கள். ப்ரெஷாக மீனும், மட்டனும் எங்கு கிடைக்கும் என்று யாராவது சொன்னால் தேவலை.

பொண்ணை ஸ்கூலில் சேர்த்தாச்சு. ரொம்பவும் பயந்து போயி இருந்தேன். அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாளோ என்று. நல்லவேளை, அமைதியாக சுமுகமாகவே அன்றைய தினம் முடிந்தது. இப்போதைக்கு ஜாலியாகவே செல்கிறாள். அங்கும் விளையாட்டு தான் காட்டுகிறார்கள்.

அதெல்லாம் சரி. இந்த பதிவு இப்ப எதுக்கு போட தோணியது?

டொமைன் ரினிவ் பண்ண ரிமைன்டர் வந்தது.

.