Saturday, October 31, 2009

கண்டேன் காதலை

எனக்கும் பரத்துக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. இருந்தாலும், அவரை பார்க்க கடுப்பாக இருக்கிறது. அதிலும், சின்ன தளபதி எனும் டைட்டிலை பார்க்கும் போது...

ஹிந்தி படத்தை மொழிமாற்றம் செய்வதால், நேட்டிவிட்டி முக்கியம் என்று கதைக்களத்தை பார்த்து அமைத்திருக்கிறார்கள். ஆனால், நடிகர்கள் தேர்வில் குறை தெரிகிறது. பரத் பிஸினஸ்மேனாம். தமன்னா தேனி பொண்ணாம். இவ்வளவு இருந்தும், ஒருவரை வைத்து நேட்டிவிட்டி சரி செய்திருக்கிறார்கள். அழகம் பெருமாள்.

ஜெயம் ரவி நடித்திருக்கலாமோ? என்ன, லூசு போல் பேசிக்கொண்டு இருக்கும் தமன்னாவுடன் பார்த்திருந்தால், சந்தோஷ் சுப்ரமணியம் நினைவுக்கு வந்திருக்கும். தமன்னா, ஆனந்த தாண்டவம், அயனை தொடர்ந்து இதிலும் லூசு போல் நடித்து ஹாட்ரிக் அடித்திருக்கிறார். வாழ்த்துக்கள்!



நான் சந்தானத்தை நம்பித்தான் இந்த படத்துக்கு சென்றேன். நிறைய காட்சிகள் வைத்திருப்பதாக, இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும், அவர் தான் படத்தை கொஞ்சம் கலகலப்பாக்குகிறார். முதல்பாதியில் கொஞ்சமும். கடைசியில் கொஞ்சமும்.

இயக்குனர் கண்ணன், ஜெயம்கொண்டானில் பாடல்களை கலர்புல்லாக எடுத்திருந்தார். இதில், அப்படி எதுவும் இல்லை. வித்யாசாகரும் கைக்கொடுக்கவில்லை. இயக்குனருக்கே பிடிக்கவில்லையோ, என்னமோ... எந்த பாடலுமே முழுமையாக முடிந்தது போல் இல்லை.

ஒரு காட்சியில் தமன்னா, ரெண்டு ரூபாய்’ன்னா சும்மாவா? அதுல சாக்லேட் வாங்கலாம். தினகரன் வாங்கலாம் என்று சொல்லும் வசனத்தில் சக்சேனா தெரிந்தார்.

பண்ணியது ரீ-மேக். இதுல, டைட்டிலில் படத்தின் உரிமை அனைத்தும் சன் நிறுவனத்திற்காம். சன் டிவி விளம்பர மயக்கம் இப்பொழுது மக்களிடம் எடுபடுவதில்லை போலும். போட்டு வச்ச சம்சா அப்படியே இருந்தது.

வெற்றிப்படங்களில் ஒரு விஷயம் கவனிக்கலாம். இடைவெளிக்கு முன்னால் வரும் காட்சியோ, வசனமோ, வேறு ஒரு மாதிரி இடைவேளைக்கு பிறகு ரசிக்கும்படி வரும். இந்த படத்திலும் வருகிறது. கூடவே, கொட்டாவியும் சேர்ந்து வருகிறது.

பிகு: படம் பார்க்கும் போது, ஒரு காட்சியை ரசித்து பார்த்தேன். எழுதும் போது, அது என்னவென்று யோசித்து பார்க்கிறேன். நினைவுக்கே வரமாட்டேன்கிறது. அந்த அளவிற்கு இருக்கிறது படம்.

.

Friday, October 30, 2009

நாட்டு சரக்கு - நார்வே அயன்

புதிதாக பெங்களூருக்கு வந்த, எனக்கு தெரிந்த ஒருவர் எப்படியாவது ஒரு வருடத்தில் கன்னடம் கற்று தேர்ந்துவிட எண்ணினார். நல்ல விஷயம் தான். ஒரு கன்னடக்காரரின் வீட்டில் இதற்காக குடியமர்ந்தார். வீட்டுக்காரரிடம் பேசி பேசி கன்னடம் கற்றுவிடலாம் என்பது திட்டம். ஒரு வருடம் கழித்து அவரை சந்தித்த போது,

“கன்னடம் நல்லா பேசுறீங்களா?”
“இல்லைங்க. வீட்டுக்காரர் இப்ப நல்லா கொங்கு தமிழ்ல பேசுறாரு”
!

தமிழர்கள் கன்னடம் கற்றுகொள்வதை விட, இங்கிருக்கும் கன்னடர்கள் தமிழை வேகமாக கற்றுக்கொண்டுவிடுவார்கள். தமிழ் மட்டுமில்லை. மற்ற மொழிகளையும். கொஞ்சம் வெட்கப்பட வேண்டிய விஷயம் தான்.

---

ரஹ்மான் வந்தே மாதரம் ஆல்பத்திற்கு இசையமைத்தது தெரியும். வைரமுத்து எழுத, தமிழ் தாய் வாழ்த்திற்கும் இசையமைக்க போவதாக சொல்லியிருந்ததும் தெரியும். இப்ப, சீக்ரெட்டா இன்னொரு ஆல்பம் ரெடி பண்ணி கொண்டு இருக்கிறார். யாருக்காக? குழந்தைகளுக்காக. நர்சரி ரைம்ஸ் பாடல்களுக்கு இசையமைத்து கொண்டிருக்கிறார். நான் சின்ன வயசில ரைம்ஸை, தமிழ் பட பாடல் ட்யூனுக்கு பாடியிருக்கிறேன். இப்ப, சினிமா பாட்டுக்கு ட்யூன் போட்டவரே, ரைம்ஸுக்கும் ட்யூன் போடுகிறார். பாருங்க, இன்னும் கொஞ்சம் நாள்ல ஸ்கூல் ரைம்ஸ் ஹிட் ஆயிடும். இந்த ஆல்பத்தில் நடிக்க போவது யார் தெரியுமா? காட்ரீனா கைப்.

ஏம்ப்பா, நான் படிக்கும்போது இப்படியெல்லாம் பண்ணலையே?

---

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? சுற்றுச்சூழலுக்கு எதிராக இருப்பது, சாலையில் ஓடும் வாகனங்கள் மட்டுமல்ல, உங்கள் வீட்டு நாயும். ஒரு நார்மல் சைஸ் நாய் ஒரு வருடத்தில் 164 கிலோ கறியும், 95 கிலோ தானியங்களும் சாப்பிடுகிறதாம். என்ன கணக்கோ தெரியவில்லை! ஒரு நாயிற்கான ஒரு வருட உணவை உருவாக்குவதற்கு 0.8 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறதாம். பெரிய ஜெர்மன் செப்பர்ட் நாய் என்றால், 1.1 ஹெக்டர். ஒரு கார் ஒரு வருடம் ஒடுவதற்கு தேவையான சக்தியை உருவாக்குவதற்கான இடத்தை விட இது அதிகமாம். அதனால், நிறைய நாய் வளர்க்காதீங்க. முடிஞ்சா, ஷேர் பண்ணிக்கோங்க என்கிறார்கள். உணவாகவும் இருக்கும் கோழி, ஆடு, மாடு, பன்றியெல்லாம் நாயை விட பெட்டராம்.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.

---

சில பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை புத்திசாலி குழந்தையாக்குகிறோம் என்று சொல்லி விளம்பரம் செய்வதை கேள்விப்பட்டிருப்போம். அஹமதபாத்தில், புத்திசாலி குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு சொல்லிக்கொடுக்கிறோம் என்று ஒரு பல்கலைகழகம் ஆரம்பித்து இருக்கிறார்கள். அதெல்லாம் பெரிய விஷயமில்லை. யார் வேண்டுமானாலும் பலதரப்பட்ட திறமைகளைக் கொண்ட சூப்பர் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். எப்படி என்று இந்திய புராதன புத்தகங்களிலிருந்தும் நவீன மருத்துவமும் படித்து தெரிந்து வைத்திருக்கிறேன் என்கிறார் இதன் நிறுவனரான படேல். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கும் பேஷா பாடம் நடத்திடலாம் எனவும் சொல்கிறார்.

அஞ்சு வயசுல ஸ்கூலுக்கு போயிட்டு இருந்த குழந்தை, இப்ப இரண்டரை-மூணு வயதில் போயிகிட்டுயிருக்குது. இது போதாது என்று வயத்துக்குள்ளேயே பாடத்தை நடத்த போறாராம்.

---

ஊரை விட்டு பெங்களூருக்கு வந்த நண்பனுக்கு இங்குள்ள ஹோட்டல் சாப்பாடு பிடிக்கவேயில்லை. பிஸிபிலாபாத், வாங்கிபாத், மசால் தோசை, இட்லி - எதுவும் பிடிக்கவில்லை. மத்தியானம், சிக்கன் பிரியாணி மட்டும் உள்ளே இறங்குகிறது. சரி, அதையே சாப்பிடுவோம் என்று தினமும் அதையே சாப்பிட்டவன், ஒரு மாதம் கழித்து, ஊருக்கு போனபோது, ஊரில் அவனுக்காக அவனுடைய அம்மா ஆசையாக செய்து வைத்திருந்தது - சிக்கன் பிரியாணி!

அய்யோ... என பிரியாணி போபியா வந்தவனாக கதறி, எனக்கு ரசம் சாதம் தான் வேண்டும் என்று அதை மட்டும் வாங்கி சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறான்.

---



இவர்தான் நார்வே அயன். நார்வே ஏர்போர்ட்டில் கடத்த முயன்றதற்காக கஸ்டம்ஸ் ஆபிஸர்களால் கைது செய்யப்பட்டு இருப்பவர். இவர் நெஞ்சைச் சுற்றி சின்ன சின்ன பைகளில் அடைத்து கடத்தி வந்தது - பாம்புக்குட்டிகள். பைத்தான் வகை பாம்புகள். அது மட்டுமில்லை. தொடையில் அல்பினோ என்ற வகை சேர்ந்த பல்லிகள். இங்க, அவனவன் வீட்டுக்குள்ள இருக்குற பல்லியை விரட்ட முடியாம நொந்து போயி இருக்கான். உலகத்தோட அந்த பக்கத்துல கடத்திக்கொண்டு போற அளவுக்கு பல்லிக்கு கிராக்கி.

வேலில போன ஓணானை எடுத்து... அதை செஞ்சு காட்டுனது இவருதான்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

.

Thursday, October 29, 2009

அடிமையாக்கிடும் ஜானகியின் லாலல்லா...

மகேந்திரனிடமிருந்து...

---

அதிகம் கேட்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமலோ, கிடைத்தும் கவனித்து கேட்காமலோ தவற விட்ட பாடல்கள் சில என்னை வெட்கப்பட வைக்கும். எப்படி தவற விட்டேன் என்பது எனக்கே வியப்பாக இருக்கும்.

சில வருடங்களுக்கு முன் ஆர்க்குட் வலைத்தளத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, யாரோ ஒருவரின் புகைப்படத்தொகுப்பில் அவர் எஸ்.ஜானகியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட படங்கள் என்னை அவரோடு தொடர்புகொள்ள ஆவலை ஏற்படுத்தின. சிலநாட்களில் தொடர்பு கொண்டபோது ஒரு ஆச்சர்யம் அவர் வீடு, என் வீட்டிலிருந்த நடந்துபோகும் தூரம் தான்.



பழகுவதற்கு வெகு இனிமையான நபராக இருந்தார். எங்களின் பேச்சு பெரும்பாலும் ஜானகியையும் அவர் பாடல்களைப்பற்றியுமே இருந்தது. எப்போதுமே அவர் பெயரைகூட சொல்லாமல் அம்மா என்றே வாஞ்சையுடன் அழைத்தது எனக்கு வியப்பாக இருந்தது. வேறு பாடகர்களைப்பற்றியோ, வேறு பாடல்களைப்பற்றியோ பேசுவது கூட அவருக்கு விருப்பமில்லாததாக இருந்தது. ஜானகி தனக்கு வேண்டிய தன்னுடைய பாடல்களையே இவரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அவரிடம் பாடல்களின் தொகுப்பு இருக்கிறது.

சில நாட்களுக்கு பின் என் தேர்வுகளின் பொருட்டு ஒரு மாதம் விடுப்பில் இருந்தபோது தினமும் அவரை சந்திப்பது வாடிக்கையானது. ஒரு கோடைக்கால மாலைப்பொழுதில் அவர் வீட்டின் மாடியில் அமர்ந்து கையில் தேநீருடன் பேசிக்கொண்டிருந்தோம். வழக்கமான பாடல்களைப் பற்றிய பேச்சு... தீராத பேச்சு...

நான் பலமுறை கேட்டிருந்த ஜானகியின் பாடல்களைக்கூட அவர் சிலாகித்து சொல்லும் போது இன்னும் இனிமையாக, உடனே மீண்டும் கேட்க வேண்டும் போல இருக்கும். நான் வெகு நாட்களாக கேட்க நினைத்த கேள்வி... ஜானகியின் அதிசிறந்த பாடலாக நீங்கள் நினைப்பது எது?

அவர் பதில் சொல்வதற்குள் என் மனதில் ஊருசனம் தூங்கிருச்சு, கண்ணன் வந்து பாடுகின்றான், சின்னத்தாயவள் தந்த (இன்னும் பல) எல்லாம் யூகங்களாக விரிந்தன. சற்று நேரம், அடுத்த மாடியில் சிறுவர்கள் விடும் காற்றாடிகளை கூர்ந்து பார்த்துவிட்டு கேட்டார். நீ எப்பவாவது "பெண்மானே சங்கீதம் பாடிவா" பாட்ட கவனிச்சி கேட்டிருக்கியா?

எனக்கு ஆச்சர்யம்... நான் என்னென்னவோ பாடல்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்க, அந்த பாடலை அவர் சொன்னது... இப்ப கேக்கலாமா? என்று கேட்டு விட்டு பதில் சொல்லுமுன் வா போலாம் என்றார். அன்று அவர் அறையில் கேட்டபோது அந்த பாடல் எனக்கு இன்னும் பிடித்துப்போனது. அதன்பின்பு என் ராஜா பாடல்களின் வரிசையில் அது ஒரு கெட்டியான இடம் பிடித்துக்கொண்டது..!!



1985 ல் வெளியான "நான் சிகப்பு மனிதன்" ஒரு வழக்கமான எஸ்.எ.சந்திரசேகரின் படம் தான் எனினும், ராபின் ஹூட் வரிசை கதையும் பாக்யராஜின் பாத்திரமும் படத்தை சிறப்பாக்கின. ராஜாவின் இசையில் எஸ்.பி.பி & ஜானகியின் குரலில் பெண்மானே சங்கீதம் பாடிவா... சற்றே வித்தியாசமான வரிகள் அது. வழக்கமான திரைக்கவிஞருடையது இல்லை என்று காட்டவே, தேடிய போது பாடலாசிரியர் திரு மேத்தா என்று தெரிந்தது.

முன்பு ஒருமுறை மேத்தா அவர்களை பல்கலைகழக தமிழ்த்துறை விழாவில் சந்தித்திருக்கிறேன்.அவரின் தோற்றத்தை மீண்டும் யோசித்தபோது அது பாடல் வரிகளுடன் இணங்கிப்போக மறுத்தது. அப்படி ஒரு எளிமையான மனிதர் மேத்தா. காதல் ததும்பும் வரிகள், பாடகர்களின் திறம், ராஜாவின் தவிக்கவிடும் மெட்டு உங்களைக்கூட நொடியில் அடிமையாக்கிடும்.



ராஜாவின் பல பாடல்களை கவனித்தால், பாடலின் துவக்கம் அதிநவீன மேலை பாணியிலும், சரணம் எளிமையான தபேலா பின்னணியிலும் இருக்கும். முடிவு, மீண்டும் மேற்கத்திய கருவிகளின் பிடியில் சிக்கும். அந்த வரிசையில் இதுவும் ஒன்று. ஜானகியின் ஹம்மிங்குடன் துவங்கும் பாடலின் பலம் கிதார். சரணத்தின் இறுதி வரிகளை வயலின் விடாமல் தொடரும்.

ஜானகியின் லாலல்லா இல்லாவிட்டால் ராஜாவுக்கு திருப்தியே வராதோ? இசைக்குழுவின் வாத்தியங்கள் அனைத்தும் தராத நிறைவு ஜானகியின் லாலல்லா அவருக்கு தந்துவிடும் போல. இரண்டாம் சரணம் துவக்கத்தில் லாலல்லா பாடிவிட்டு யாத்திரை ஏன்? என்று துவங்குவார், அதுபோதாமல் அவர் சொல்லும் "ஹோய்"... கேட்கும் போது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புன்னகை வரும்.

"தேகமழை நானாகும் தேதியை தேடுவேன்... மேகவயல் நீயாக மேனியை மூடுவேன்..." என்பதை எஸ்.பி.பி பாடியிருப்பது ஒவ்வொரு முறையும் என்னை பித்துபிடிக்க வைக்கும். இன்னும் என்ன சொல்வது... கேட்டு பாருங்களேன்...



பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்...

தேன்மழை நீ ஹோய்... மார்பிலே தூவவோ?
தேவதை நீ ஹோய்... நான் தினம் தேடவோ?
கையருகில் பூமாலை காதலின் கோபுரம்
மைவிழியில் நீதானே வாழ்கிறாய் ஓர்புறம்...
என்காதல் வானிலே பெண்மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை கண்களின் உலாவில்...

யாத்திரை ஏன் ஹோய்... ராத்திரி நேரமே?
போர்க்களம் தான் ஹோய்... பூக்களின் தேகமே...
தேகமழை நானாகும் தேதியை தேடுவேன்...
மேகவயல் நீயாக மேனியை மூடுவேன்...
கண்ணோரம் காவியம் கைசேரும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வாராதோ?

பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்...


-மகேந்திரன்.

பாடலைக் காண படத்தை க்ளிக் செய்யவும்.

.

Wednesday, October 28, 2009

கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 4

சில கதைகளில் வந்த கதாபாத்திரங்கள். எந்த பத்திரிக்கை, எந்த கதை என்றெல்லாம் நினைவில்லை. வரையும் போது, தேதியுடன் மற்ற விவரங்கள் போட்டு வரைந்திருக்கலாம்.

ஆலிவர் ட்விஸ்ட் படிச்சிருக்கீங்களா? அப்ப, உங்க நினைவாற்றலுக்கு ஒரு சவால். இது யாரு?



இது?



ஏதோ ஒரு வார பத்திரிக்கை கதையில் வந்த போலீஸ்கார்.



யாருக்காவது ஏதாவது ஞாபகம் வருதா?



கொஞ்சம் வாய் மேலே போயிடுச்சு. யாரு பெத்த பிள்ளையோ?... என் பென்சில்ல வந்து இப்படி சிக்கிருச்சே!



இதுல அளவு சம்பந்தப்பட்ட ஒரு டெக்னிக்கல் மிஸ்டேக் இருக்கு. (ஏதோ ஒரு மிஸ்டேக் தான் இருக்குறாப்புல!) அந்த அம்மாவோட கையை கவனிங்க.



(தொடரும்)

.

Tuesday, October 27, 2009

முக்கிய அறிவிப்பு: டிவி பாருங்க!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் இந்த வாரம் முதல் மழைப்பாடல்கள் சுற்று ஆரம்பித்திருக்கிறது.



நேற்று துவங்கிய இதில் வழக்கம்போல பெரியவர்களுக்கே சவால் விடும்படி குழந்தைகள் கலக்கினார்கள். இந்த அறிவிப்பை நான் கொடுக்க முக்கிய காரணம் இன்று ஒளிபரப்பாகும் பகுதியில் (9PM - 10PM) ஒரு குழந்தை "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்" பாடப்போகிறார். (பெயர் ஸ்ரீநிஷா என்று நினைக்கிறேன்).

எப்போதுமே பிரமாதப்படுத்தும் அவரின் பாடலைக்கேட்க ஆவலாயிருக்கிறேன். நாளை அல்லது வியாழக்கிழமை பகுதியில் ஓவியா என்றொரு குழந்தை "மழையே மழையே இளமை முழுதும்" பாடப்போகிறார். இதெல்லாம் அவர்களின் முன்னோட்டத்தில் காண்பித்த சிறு பகுதிகளின் வாயிலாக தெரிந்தது.

எனக்கு தெரிந்து இதுநாள் வரை நான் பார்த்த தொலைகாட்சி இசை நிகழ்ச்சிகளிலோ, பாடும் போட்டிகளிலோ (1995ல் சன் டீவியில் ஏ.வீ.ரமணன் நடத்திய சப்தஸ்வரங்கள் துவங்கி), எந்த போட்டியாளருமே தொடத்துணியாத பாடல்கள் இவை இரண்டும். சிறுவர்களின் உலகமே அலாதியானது தானே? இருவருக்கும் பாடல் தேர்வு செய்து கொடுத்தவர்களுக்கு நன்றி.

இதில் இரண்டாவது பாடல் பிரதாப் போத்தன், சரிதா நடித்த "அம்மா" படத்துக்காக சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பி மற்றும் ஜானகி பாடியது. "கூந்தல் மலரில் தேனை எடுக்க... காத்துக்கிடந்தேன் கால்கள் கடுக்க..." என்ற வரிகளுக்காகவே எனக்கு பிடித்தமானது இந்த பாடல்.

நிகழ்ச்சியை பார்க்க காத்திருக்கிறேன். நீங்களும் பாருங்கள்...

-மகேந்திரன்.

.

தூத்துக்குடி ப்ரோட்டா

டிஸ்கி - நான் ஒரு பரோட்டா பிரியன்.

ஒவ்வொரு ஊர் மக்களும், அவர்கள் ஊரை விட்டு வெளியே செல்லும் போது, அவர்கள் ஊருக்கே உரிய சில விசேஷ விஷயங்களை விட்டு செல்கிறார்கள். தூத்துக்குடி மக்களுக்கு, ப்ரோட்டா. உப்பு, மீன் - இதையெல்லாம் விட ப்ரோட்டா ஒரு வகையில் வேறுபடுகிறது. அந்த மாதிரி தயார் செய்யப்படுவதையோ, பரிமாறப்படுவதையோ எங்கும் பார்த்ததில்லை. சுவைத்ததில்லை. (விருதுநகரில் சாப்பிட்டதில்லை)

இங்கு இதை பரோட்டா, புரோட்டா என்றெல்லாம் சொல்வதில்லை. ப்ரோட்டா, ரொட்டி அல்லது செட். வித்தியாசமா இருக்குல்ல? தூத்துக்குடியில் ப்ரோட்டா என்ற தலைப்பில் பிஎச்டி’யே பண்ணலாம். நான் ஒரு பதிவுவோடு நிறுத்தி கொள்கிறேன்.

தூத்துக்குடி தெருக்களில் பத்து அடி எடுத்து வைப்பதற்குள், ஒரு பேக்கரியையோ, ப்ரோட்டா கடையையோ காணலாம். பேக்கரியில் இருக்கும், தூத்துக்குடியின் இன்னொரு ஸ்பெஷலான மக்ரோனை பற்றி, இன்னொரு பதிவில் காணலாம். ப்ரோட்டா கடைக்கு ஹோட்டல் என்றோ, உணவகம் என்றோ சாதாரணமாக பெயர் வைத்துவிட மாட்டார்கள். நைட் கிளப்.

நைட் கிளப் என்றதும் மங்கிய வெளிச்சத்தில் அரைகுறை உடையில் ஆடும் பெண்கள் நினைவுக்கு வருகிறார்களா? தூத்துக்குடியில் இருப்பவர்களுக்கு அப்படி எதுவும் நினைவுக்கு வராது. ஒரு பத்துக்கு பத்து சதுர அடிக்கும் குறைவான அளவில் இருக்கும் கடைதான் நினைவுக்கு வரும். இந்த அளவு கடைக்குள்ளேயே, பத்து பதினைந்து பேருக்கு சுட சுட ப்ரோட்டா பரிமாறப்படும் வித்தையை ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டில் இருப்பவர்கள், இங்கு வந்து பார்த்து கற்றுக்கொள்ளலாம்.



பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்? மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள். ஆனா, இங்கே மெத்தடே வேற. தோசைக்கல்லில் போடுவதற்கு பதில், எண்ணெய்யில் பொறிப்பார்கள். அதற்கு முன், தோசைக்கல்லில் வாட்டுவதும் உண்டு. இதனால், ப்ரோட்டா சும்மா மொறு மொறுவென வரும். பை டிபால்ட், உங்கள் இலைக்கு பிய்த்து போட்டே வரும். தொட்டுக்க, இல்லையில்லை, குழப்பி அடிக்க சால்னா வரும். சால்னாவில் இரு வகைகள் இருக்கும். காரமானது ஒன்று. காரம் குறைவானது ஒன்று. அதற்கு மேல், சிக்கன் ப்ரை, சில்லி சிக்கன், மட்டன் சுக்கா, காடை, கௌதாரி, புறா, ஆம்லேட், ஆப்பாயில் இதையெல்லாம் வாங்கி கொள்ளலாம். பார்சலில் வாங்கி சென்றால், வேறொரு சுவை. வழக்கம் போல், தயிர் வெங்காயம் இலவசம். பெரும்பாலும் வெறும் வெங்காயம், தயிர் இல்லாமல்.

பொதுவாக, இந்த நைட் கிளப்களில், இட்லி, பூரி போன்றவற்றை எதிர்பார்க்கக்கூடாது. சில கடைகளில், தோசை, இடியாப்பம், ஆப்பம் கிடைக்கும். அதற்கும் சால்னா தான். சட்னி, சாம்பார்? ம்ஹும். சமீபத்தில் சேலம் சென்றபோது, பஸ் ஸ்டாண்ட் பக்கமிருக்கும் செல்வி மெஸ்ஸில் ‘இங்கு சைவம் கிடையாது’ என்ற போர்ட்டை என் நண்பர்கள் ஆச்சர்யமாக பார்த்தார்கள். போர்டு வைக்காமலேயே, தூத்துக்குடி நைட் கிளப்களில் அதுதான் பாலிஸி. அதனால், இக்கடைகள் அசைவக்காரர்களுக்கே எக்ஸ்க்ளுசிவ்வானது.

அப்ப, இட்லி, தோசைக்கு எங்கு செல்வது? அதற்கு வேறு ஓட்டல்கள் உண்டு. அவை சாதாரணமாக மற்ற ஊர்களில் இருப்பது போல் காலை முதல் இரவு வரை இருக்கும். நைட் கிளப்கள் நைட் மட்டுமே. காலையில் மூடி கிடக்கும். மதியத்திற்கு பிறகு, சாயந்தரம் வாக்கில் திறப்பார்கள். ஒருவர் அடுப்பு, பாத்திரங்களை எடுத்து வெளியே வைப்பார். இன்னொருவர் வெங்காயம் வெட்ட ஆரம்பிப்பார். அந்த நேரத்தில், அடுப்பை வைத்தவர், எண்ணெயை ஊற்றி சால்னா, கிரேவிக்கான வேலையை ஆரம்பிப்பார். இன்னொருவரோ, ப்ரோட்டாவுக்கான மாவை பிசைய ஆரம்பித்து விடுவார். இந்நேரத்திற்கு, ஊரே சால்னா வாசனையில் மூழ்கி இருக்கும்.

ஒரு கடையில் அதிகபட்சம் நாலு பேர்தான் வேலைக்கு இருப்பார்கள். பெரிய கடை என்றால், இன்னும் இரண்டு மூன்று பேர்கள் இருப்பார்கள். அவ்வளவு தான். நீங்கள் தான் நீங்கள் சாப்பிட்ட இலையை எடுத்து வெளியே போட்டுவிட்டு, கை கழுவ வேண்டும். ஒருவர் ப்ரோட்டா சுட சுட பொறித்து கொண்டே இருப்பார். இன்னொருவர் அதை சுக்கு நூறாய் பிய்த்து நமக்கு பரிமாறிக்கொண்டே இருப்பார். இன்னொருவர், பார்சலுக்கு வந்தவர்களை ஹேண்டில் செய்து கொண்டு இருப்பார். பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் ஒரு கடையில், ப்ரோட்டாவை பிய்க்க ஒரு மெஷின் வைத்திருந்தார்கள். டெக்னாலஜி. சமீபத்தில் பார்த்து ஷாக்காயிட்டேன்.

கடைக்கு கடை ப்ரோட்டா மாறுப்படும். அளவுகளில் மட்டுமில்லாமல், சுவையிலும். சில கடைகளில், பொறிக்காத மெது மெது பரோட்டா கிடைக்கும். ஒரு முறை பார்த்து, ஒரு கடையின் சுவை பிடித்து விட்டால், சந்தா கொடுக்காமலேயே அந்த கடையின் ஆயுள்கால மெம்பர் ஆகிவிடுவீர்கள். அளவுக்கு ஏற்றது போல், ப்ரோட்டா விலை இருக்கும். தற்போதைய நிலையில், ரூபாய் மூன்றில் இருந்து பத்து வரை.

எண்ணெய்யில் பொறிப்பதால், கொலட்ஸ்ரால் அபாயம் இருக்கிறது. காரமா எங்க சாப்பிட்டாலும், அல்சர் வரும். மற்றபடி, சூடாக இருப்பதால், வேறு எந்த உபாதைகளும் வருவதில்லை. சால்னாவில் இருக்கும் இஞ்சி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் போன்றவற்றால், ஏதேனும் மருத்துவ நன்மை இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்துதான் கண்டுப்பிடிக்க வேண்டும். ஊருக்குள், இதைத்தான் தினமும் சாப்பிட்டுக்கொண்டு நிறைய பேர் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால், ஒருமுறை சாப்பிடுபவர்கள், தயங்காமல் இறங்கி பட்டைய கிளப்பலாம். தண்ணீர், கையோடு கொண்டு செல்வது உசிதம். இல்லாவிட்டால், வீடு வந்து குடிக்கலாம்.

சொந்த ஊர் கதையை பேசுனா, கண்ணீர் வருவது வழக்கம். தூத்துக்குடிக்காரங்களுக்கு, உமிழ் நீரும்.

.

Monday, October 26, 2009

கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 3

இப்படி நோட்டுப்புக்குல வரைஞ்சதாலே, அதை இம்ப்ரூவ் பண்ணிக்கணும்’ன்னு நினைச்சிக்கிட்டு ‘கார்ட்டூன் வரைவது எப்படி?”, “கேரிக்கேச்சர் வரைவது எப்படி?” போன்ற புத்தகங்களை எல்லாம் வாங்கியிருக்கேன். (எனக்கு தெரிஞ்ச வாத்தியார் ஒருத்தர்க்கிட்ட கடனுக்கு!) ஆனா, சொந்தமா எதையும் விதவிதமா வரைஞ்சு பார்த்தில்லை. அப்ப, வீட்டுல குமுதம் தான் வாங்குவாங்க. அதுல வருற படங்களை வரையுறது தான் வேலை.

முக சாயலை விட, இந்த போஸ், கெட்டப் இது யாரு’ன்னு காட்டிக்கொடுத்திடும். சூர்ய வம்சம் சரத்குமார்.


நெப்போலியன். ஏதோ, செல்வமணி படம்’ன்னு நினைக்குறேன்.



யாரை பார்த்து வரைஞ்சேன்’ன்னு தெரியலை. ஆனா இப்ப பார்க்க கொஞ்சம் அர்ஜீன் போல் இருப்பதால் (எனக்கு), இது அர்ஜீன். உங்களுக்கு எப்படி தெரியுதோ, அப்படி வைச்சுக்கலாம்.



மனோரமா. ஒரு தேர்தல்ல அவுங்க அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்தாங்க இல்ல? அப்ப, வரைஞ்சது. அப்பத்தானே, ஆச்சி ரஜினியை போட்டுத் தாக்குனது?




ரேவதி. சைஸ் கன்னாபின்னான்னு நான் வரையலை. இது ஒரு கேரிக்கேச்சரை பார்த்து வரைஞ்சது.



எனக்கே பார்க்க கஷ்டமாத்தான் இருக்கு. என்ன பண்ண? இது மீனாக்‌ஷி சேஷாத்ரி. ப்ளீஸ், நம்புங்க.



அப்புறம், குமுதத்தில் வர்ற அரசியல்வாதி கார்ட்டூன்ஸ், கதைக்கு ஓவியர்கள் வரைந்திருக்கும் படங்கள் இதையும் வரையுறதுண்டு. அடுத்த பதிவில் அவை.

ஒவ்வொரு ஒவியருக்கும், கதாபாத்திரங்களை வரைவதில் ஒரு பாணியிருக்கும். மாருதி வரையும் அந்த கதாநாயகிகளுக்கான ஒவியங்கள்... அப்பப்பா... என்ன அழகு... பிரம்மன், மாருதியின் ஆலோசனையைக் கேட்டு வேலையை பார்த்தால், உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்?

.

Saturday, October 24, 2009

ரஜினிகாந்தும் விஜயகாந்தும்

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அதிரடி ஆட்டம் போட்டு கொண்டிருந்த போது, விஜயகாந்த் மதுரையில் அவருடைய அரிசி மில்லில் விரலாலயே மூட்டையை குத்தி அரிசி தரம் பார்த்துக் கொண்டிருந்தார். ‘ஆசை அறுபது நாள்’ படத்தின் 50வது நாள் விழாவிற்கு மதுரை வந்த ரஜினியை பாதுகாப்பாக கவனித்தவர் அப்போதைய விஜயராஜ். அவ்விழாவில் சினிமா நட்சத்திரங்களை பாதுகாத்த விஜயராஜை பாராட்டிய ரஜினி, அவரிடம் சொன்னது - “நீங்க பார்க்குறதுக்கு என்னை மாதிரியே இருக்கீங்க விஜி!”

மதுரையில் விநியோகஸ்தராக இருந்த மர்சூக், ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்க எண்ணியிருந்தார். அவரோ ரொம்ப பிஸியாக இருக்க, கால்ஷீட் கிடைக்காத சூழ்நிலை. ரஜினி போல் இருக்கும் விஜயராஜை நடிக்க வைத்தால் என்ன? என்று ஒரு எண்ணம் அவருக்கு வந்தது. விஜயராஜும் ஒத்துக்கொண்டார். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த படத்தை கைவிடும் நிலையாகிவிட்டது.

பிறகு, சென்னையில் ஒருமுறை ரஜினியை ப்ரியா படப்பிடிப்பில் மர்சூக்கும் விஜயராஜும் சந்தித்தார்கள். விஜயராஜை திரும்பவும் ரஜினியிடம் அறிமுகப்படுத்திய மர்சூக்கிடம், ரஜினி சிரித்தப்படியே கேட்டது - “அட அச்சு அசலா என்னை மாதிரியே இருக்குறாரே? எனக்கு போட்டியை உருவாக்குறீங்களா?”



அச்சமயம், விஜயராஜுக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பெயர் ‘என் கேள்விக்கென்ன பதில்?’. படத்தின் ஹீரோ ரஜினி. விஜயராஜுக்கு கிடைத்த கேரக்டர், ரஜினியின் தம்பி. ஷூட்டிங் ஆரம்பித்து, நாலு நாட்களிலே விஜயராஜ் படத்தில் இருந்து தூக்கப்பட்டார். உண்மைக்காரணம் என்னவோ? ஆனால், ’தமிழ் ஒழுங்கா பேசலை’ என்பது அதற்கு சொல்லப்பட்ட காரணம்.

அப்புறம் விஜயராஜ் ஊருக்கு திரும்பி சென்று, சில காலம் கழித்து மறுபடியும் வாய்ப்பு தேடி சென்னை வந்து, ஆல்பமும் கையுமாக சுற்றியலைந்தார். ஆல்பம் முழுக்க ரஜினி ஸ்டைலில் ஸ்டில்ஸ். ஆல்பத்தை கண்டவர்கள் கேட்டது - ‘கறுப்பா இருந்துட்டா மட்டும் ரஜினி ஆயிட முடியுமா?’.

ஒரு வழியா வாய்ப்பு கிடைத்து ’இனிக்கும் இளமை’ என்ற படத்துல் நடித்து விட்டார். படத்தின் இயக்குனர் எம்.ஏ.காஜா, அவருக்கு ‘அம்ருதராஜ்’ என்று பெயர் வைத்து பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தினார். சில பத்திரிக்கையாளர்கள், ‘இந்த பேரு சரி இல்லைங்க. பார்க்க ரஜினி மாதிரி இருக்காரு. ரஜினிகாந்த் ரேஞ்சுக்கு ஒரு பேரு வைங்க’ என்றதால், அப்போதே எம்.ஏ.காஜா அவருக்கு விருச்சிககாந்த், சாரி, விஜயகாந்த் என்று பெயர் வைத்தார்.

அப்புறம் என்ன நடந்தது என்றுதான் தெரியுமே? இப்ப, விஜய்க்கு பிடிக்காட்டி விஷாலுக்கு கதை சொல்ல இயக்குனர்கள் செல்வது போல், அப்போது ரஜினியால் நடிக்க இயலாத படங்களில் இயக்குனர்களின் ஒரே சாய்ஸ் - விஜயகாந்த். விறுவிறுவென வெற்றிகளைக் கொடுத்து, ரஜினி இருந்த அதே முன்னணி நடிகர்களின் வரிசைக்கு வந்தார். நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு நடிகர் சங்க தலைவரானார்.



’நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்திலே கரெக்டா வருவேன்’ என்று ரஜினி டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்த போது, விஜயகாந்த் ‘நான் இப்போ வருவேன், அப்போ வருவேன், நேரா வருவேன், சைடுலே எட்டிப்பார்ப்பேன்னுல்லாம் சொல்லமாட்டேன். கண்டிப்பா வருவேன்.’ என்று தடாலடியாக அரசியலில் நுழைந்தார்.

ரஜினி தனது ரசிகர்கள் தனது படத்தை தேர்தலில் பயன்படுத்தியபோது, அதற்கு தடைவிதித்தார். விஜயகாந்தோ, கண்டுக்கொள்ளவில்லை. சுயேட்சையாகவே, அவரது ரசிகர்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றார்கள். கட்சி ஆரம்பித்து, கொஞ்ச காலத்திலேயே நடந்த தேர்தலிலும் குறிப்பிடத்தக்க ஓட்டு சதவிகிதத்தை பெற்றார். தொடர்ந்து படங்களிலும் நடித்தார். படங்களில் நடித்தாலும், விஜயகாந்தின் முழு பார்வையும் அரசியலில் தான். இந்நேரத்தில் ‘அரசியல், சினிமா - இரண்டு குதிரையிலும் திறமையாக சவாரி செய்கிறார் விஜயகாந்த்’ என்று ஒரு மேடையில் ரஜினி பாராட்டியிருந்தார். ஆனால், அரசியலில் இறங்கிய பிறகு, விஜயகாந்தின் எந்த படமும் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



கறுப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக்கொள்கிற விஜயகாந்துக்கு ஏன் இன்னமும் எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது போல் பெரும் ஆதரவு கிடைக்கவில்லை. யாருக்குக்கிட்ட கேட்க? ரஜினி என்ன சொல்கிறார்? ரஜினியிடம், ஒரு ரசிகர் அரசியல் வெற்றி பற்றி கேட்ட கேள்விக்கு சொன்ன பதில் - ‘அதுக்கு பெருந்துணையா இருப்பது நேரமும், சூழலும்.’

தன் ரசிகராக இருந்த ஒருவர், சினிமாவிற்கு வந்து, உச்சத்தை அடைந்து, பிறகு வீழ்ச்சியைக் கண்ட பிறகும், முன்பிருந்தது போல் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராக இருப்பது ரஜினியின் சாதனை. அரசியலில் ஈடுபட சகல தகுதிகளும் கொண்ட தன் அபிமான நடிகரே தயங்கும் போது, தைரியத்துடன் இறங்கி ஆரம்பத்திலேயே ஒரளவுக்கு வெற்றியும் பெற்றது, விஜயகாந்தின் சாதனை.

---

விஜயகாந்த் பற்றிய புத்தகத்தில் நம்ம யுவகிருஷ்ணா (எ) லக்கிலுக், விஜயகாந்தின் சிறுவயது காலம் முதல் தற்போதைய அரசியல் முகம் வரை அவருக்கே உரிய பாணியில் எழுதியிருக்கிறார். படிப்பவர்களுக்கு தாவூ தீராது, டவுசர் கிழியாது என்பது உத்தரவாதம். விஜயகாந்த பற்றி எழுதிய இந்த புத்தகத்தை ஆசிரியர் சமர்ப்பித்து இருப்பது, கலைஞருக்கும் புரட்சித்தலைவிக்கும். புத்தகத்தின் ஆரம்பத்தில் ஆசிரியர் விஜயகாந்திற்கு கொடுத்திருக்கும்
எண்ட்ரி, இதுவரை எந்த படத்திலும் அவருக்கு கிடைத்திராதது.

விஜயகாந்த் பற்றி வந்த தொடர்கள், புத்தகங்கள், செய்திகளிலிருந்து கிடைத்த தகவல்களை கொண்டு சிறப்பான நடையில் வந்திருக்கும் இப்புத்தகம், அவருடன் நெருங்கி பழகியவர்களின் பேட்டிகளின் துணைக்கொண்டு வந்திருந்தால் இன்னும் வேறு சில பரிணாமங்களை தந்திருக்குமோ? சினிமாவில் ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டாலும், விஜயகாந்த் அரசியலில் ஆரம்பக்கட்டத்தில் தான் இருக்கிறார். சினிமாவில் பெற்ற வெற்றியை அரசியலில் பெற விஜயகாந்திற்கும், அதை பற்றியும் புத்தகம் எழுத யுவகிருஷ்ணாவிற்கும் வாழ்த்துக்கள்.

புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.

.

Friday, October 23, 2009

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்...

நீண்ட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் மகேந்திரன்...

---

இரு வாரங்களுக்கு முன் நண்பனுடன், அவனுக்கு தீபாவளி புத்தாடை வாங்க சென்றிருந்தேன். எப்போதுமே கூட்டம் அலைமோதும், அணிந்து பார்க்கவும் தனிமையற்ற ஆடையகங்களுக்கு செல்வதை தவிர்ப்பேன்.

சற்றே ஒத்த கருத்துடைய நண்பன் என்பதால் பிரபலமடையாத, தொலைவிலுள்ள கடையின் மூன்றாம் தளத்தின் எங்கள் தேடல் துவங்கியது. எங்கிருந்தோ கசியும் படியான அமைப்பில் பாடல்கள் ஒலிக்கும்படி செய்திருந்தனர். நண்பனுக்காக அவனுடன் நின்றிருந்த போதும், மனது ஒவ்வொரு பாடலுடனும் சடுகுடு ஆடிக்கொண்டிருந்தது.

மதியப்பொழுது என்பதாலும் தீபாவளி காய்ச்சல் இன்னும் தீவிரமடையவில்லை என்பதாலும், முதல் தளத்தில் சேலை தேடும் சில பெண்கள் தவிர யாருமில்லை. புத்தாடைகளுக்கே உண்டான ஒரு வாசமும், தளத்தின் குளுமையும் என்னை இன்னும் முழுமையாய் பாடலை கவனிக்க வைத்தன. ஒரு கட்டத்தில் என்னை அழைத்து வந்தது, வீணென்று அவனுக்கே தெரிந்து விட்டது போல என்னை கேட்பதையும் நிறுத்திக்கொண்டான்.

அங்கே வெகு வருடங்களுக்கு பின் இன்னும் ஒருமுறை ரசித்துக்கேட்ட பாடல் ஒன்று. உறவுகளின் வரையறையை சொல்லி அடக்கி வைத்தாலும் அடங்காத மனதின் கிளர்ச்சி அந்த பாடல். படம் வெளியாகி பல வருடங்களுக்கு பின்னும், என் பள்ளியிறுதி வகுப்பின் ஒரு விடுமுறை மதியப்பொழுதில் தொலைக்காட்சியில் அந்த படம் போட்ட போது அம்மா அவசரமாக சேனல் மாற்றினார். அப்படி ஒரு சர்ச்சைக்குள்ளான படத்தில் ராஜாவின் அபாரமான பாடல்.

வெளியாகி 26 வருடங்களுக்கு பிறகும், பாடலின் குளுமை சற்றும் குறையாமல் கழுத்தை வளைத்து காதில் ரகசியம் சொல்லும் இந்தப்பாடல். 1983 ல், வெளியான "இன்று நீ நாளை நான்". விவரம் தெரியும் வயதில் எனக்கு இன்னுமொரு ஆச்சர்யம் - படத்தின் இயக்குனர் மேஜர் சுந்தர்ராஜன். சிவக்குமார், லட்சுமி, சுலக்க்ஷனா, நடிப்பில் உறவுகளின் கட்டுக்களை உதறிவிடும் உணர்வுகளை பற்றிய படம்.



ஜெயகாந்தன் சிறுகதை ஒன்றில், முறை தவறிய உறவினை குறித்து "தேவை என்று வந்துவிட்டால் ஜாதியையா பார்க்கத்தோன்றும்?" என்று முடித்திருப்பார். அதன் பிரதிபலிப்பான இந்த படம் வெளியான போது ஏகத்துக்கும் சர்ச்சை உண்டானது. சி.எ.பாலனின் "தூக்குமர நிழலில்" என்ற நாவலை தழுவி படமாக்கப்பட்டது.



வசதி படைத்த ஜெய்சங்கரின் வீட்டில் சிறுவயது முதல் வேலை செய்யும் சிவகுமார், குடும்பத்தில் ஒருவர் போல இருக்கிறார். ஜெய்சங்கரின் மனைவி லட்சுமியையும் அண்ணி என்றே அழைக்கிறார். அவர்களே பெண்பார்த்து சுலக்க்ஷனாவை சிவகுமாருக்கு மணம் முடித்தும் வைக்கின்றனர். அரசியல் மோகத்தில் மனைவியை கவனிக்க நேரமின்றி ஜெய்சங்கர் தேர்தலில் நின்று தோற்று, நிறைய குடிக்க ஆரம்பிக்கிறார். தனிமையில் வாடும் லட்சுமியை, சிவகுமார்-சுலக்க்ஷனா தம்பதியின் அன்னியோன்யம் இன்னும் தகிக்க வைக்கிறது.

அளவற்ற குடியால் ஜெய்சங்கர் இறந்த பின்பு, விதவையான லட்சுமியின் பார்வை சிவகுமாரின் மீது இன்னும் தீவிரமடைகிறது. பண்பாடு கருதி கட்டுப்பாட்டுடன் இருக்கிறார். சிவகுமாரின் குழந்தையும் லட்சுமியை பெரியம்மா என்று அழைத்து அவரிடமே
வளர்கிறது. இந்நிலையில் இரண்டாவது பிரசவத்துக்காக சுலக்க்ஷனா தாய் வீடு செல்ல, ஒரு மழைநாளின் ஒதுங்க இடமில்லாத ஈரத்தில் லட்சுமி, சிவகுமாரிடம் தன்னை வெளிப்படுத்துகிறார். முறை தவறிய உறவு அங்கே துவங்குகிறது.



அன்று முதல் அவரை அண்ணி என்று அழைப்பதை நிறுத்திக்கொள்கிறார். இருவரும் திருமணம் செய்ய எடுக்கும் முடிவு சுலக்க்ஷனாவுக்கு தெரிய வரும் பொழுது நிகழும் களேபரத்தில் சுலக்க்ஷனா இறக்க, சிவகுமார் தூக்கு தண்டனை கைதியாகிறார். தண்டனைக்கு முதல் நாள் அவரைக்காண வரும் லட்சுமி, ஜெயிலிலேயே தற்கொலை செய்து கொள்கிறார். படம் நிறைவடைகிறது.

எந்த ஒரு விஷயமும் நமக்கு நிகழாத வரை, அதன் பாதிப்பு முழுமையாக நம்மை தாக்காது. எல்லோரும் முகம் சுழித்தாலும், எனக்கு இன்னும் அந்த அத்துமீறல் நியாயமாகவே படுகிறது. தவறு செய்யாமலிருக்க காரணம், சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பது தானே?

படத்தில் ராஜாவின் பங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. அற்புதமான காலத்தால் கரையாத பாடல்கள். ஜானகி, ஷைலஜாவின் கூட்டணியில் "மொட்டுவிட்ட முல்லைக்கொடி மச்சான் தொட்ட மஞ்சக்கிளி...", எஸ்.பி.பி, ஜானகி, உமா ரமணன் இணைந்த "தாழம்பூவே கண்ணுறங்கு தங்கத்தேரே கண்ணுறங்கு..." போன்ற நெடுங்காலம் வானொலியின் வர்த்தக ஒளிபரப்பை குத்தகைக்கு எடுத்த பாடல்கள்.



இந்த படத்தில் நான் சொல்ல வந்த என் விருப்ப எண், படத்தின் அதி முக்கிய மழைக்காட்சி பாடல். பாடல் துவங்கும்போது உங்களுக்கே தெரியாமல் மெலிதாக குளிர்வது போலவும், சில்லென்ற சாரல் துளைப்பதைப்போலவும் உணர்வீர்கள். ஜானகியின் ஆலாபனையுடன் துவங்கும் இந்த பாடல் வரிகள் கவனிக்கப்படாமல் போன வைரமுத்துவின் வைர வரிகள். ஒரு விதவையின் தாகம் இதற்கு மேலும் வெளிப்படுத்தப்படுமா? சற்றே வித்தியாசமான தாளக்கட்டில் பாடல் தொடரும். மழையுடன் ஒத்திசைந்த மிருதங்க இசை.

என் பதின்ம வயதில் இந்தப்பாடலின் "மழை செய்யும் கோளாறு... கொதிக்குதே பாலாறு..." என்ற வரிகளில் நான் வைரமுத்துவின் அடிமையாகி போனேன். அதை ஜானகி பாடியிருக்கும் விதம் கவனிக்கையில், இதை ராஜா, ஜானகிக்கு எப்படி சொல்லி தந்திருப்பார் என்பதை என்னால் யூகிக்கவே முடியவில்லை. சிவகுமாரின் மிகையான நடிப்பைத்தவிர அத்தனையுமே பாடலின் பலம். லட்சுமியின் முக பாவங்கள் நிச்சயமாய் உங்களை வியக்க வைக்கும். சரணத்தின் முன்பு ஜானகி கொஞ்சும் லல்லல்லல லல்ல லாலா... சொல்லி விளங்க வைக்க முடியாத ஒன்று.

என் உணர்வுகளுக்கு நான் இது நாள் வரை போட்டு வைத்திருந்த தடைகள் அனைத்தையும், கழுவித்துடைக்க வந்த இந்த மழை உண்மையில் இங்கே பெய்யவில்லை... இது காமன் காட்டில் பெய்த மழை...!! கேட்டுப்பாருங்கள்...



பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்..
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்..

மழைப்பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு... கொதிக்குதே பாலாறு...
இது காதல் ஆசைக்கும் காமன் பூசைக்கும் நேரமா?
இந்த ஜோடிவண்டுகள் கூடு தாண்டிடுமா?

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

இந்த தாமரை மலர்ந்தபின்பு மூடுமோ?
பட்டு பூங்கொடி படர இடம் தேடுமோ?
மலர்க்கணை பாயாதோ... மதுக்குடம் சாயாதோ?
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா...
மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா...

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்...
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்...


-மகேந்திரன்.

---

பாடல்களைக் காண படங்களை க்ளிக்கவும்.

Thursday, October 22, 2009

கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 2

இந்த பதிவுல, நான் நடிகர்களை வரைஞ்ச படங்கள். வரையும்போது, இப்படியெல்லாம் திட்டம் போட்டு வரையல. மூடுக்கு ஏத்த மாதிரி, கைக்கு கிடைஞ்ச படங்களை பார்த்து வரைஞ்சிட்டு இருந்தேன்.

அப்ப, நிறைய கிரிட்டிங் கார்டுகள சேர்த்துக்கிட்டு இருந்தேன். என் வயதை ஒட்டிய உறவினர்கள், நண்பர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நடிகர்களை பிடிக்கும். தீபாவளி, பொங்கலின் போது, அவர்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பி வைப்பேன். எனக்கு பிடிக்கலைன்னா கூட, நான் யாருக்கும் அனுப்பலன்னா கூட, எனக்கு கார்டு பிடிச்சிருந்தா வாங்கியிருவேன். இப்ப, எங்க போச்சோ?

இங்கே நான் வரைஞ்ச படங்களில் இருப்பது யாரு’ன்னு கேட்டு போட்டி வைக்கலாம். எதுக்கு அசிங்கப்பட்டுக்கிட்டு? நானே சொல்லியிருதேன்.

சிவாஜி. படிக்காதவன் பட கெட்டப். இதில் ரொம்ப கம்பீரமா இருக்கறாப்பல தோணும். சென்னையில சிலை வைக்கும்போது, இந்த மாதிரி ஏதாவது ஒரு கம்பீர கெட்டப்ல வச்சிருக்கலாம்’ன்னு தோணிச்சி. அந்த சிலை, சிவாஜி மாதிரியே இல்லை.

எம்ஜியாரு எங்கேன்னு கேட்கறீங்களா? அவரு அரசியல்வாதி செக்‌ஷன்ல வருவாரு. (ஓ! அது வேறயா?)



தலீவரு! ரஜினியை நிறைய வரைஞ்சிருக்கேன். எதையும் பார்க்காமக்கூட வரைவேன். m ஷேப்ல தலை முடி, ஒரு கூலிங் கிளாஸ், வாயை ஒட்டிய மீசை - இவ்ளோ வரைஞ்ச போதும். ரஜினி மாதிரி வந்திரும். இது கொஞ்சம் பழைய ரஜினி.



கமல் வரைய கஷ்டம் தான். தேவர் மகன் மாதிரி ஏதாவது ஸ்பெஷல் கெட்டப் போட்டா, ஈஸியா வரைஞ்சிரலாம். இல்லாட்டி, கண்டுபிடிக்குறது கஷ்டம் தான். இது கமல் மாதிரி இருக்கா?



இது நானே எதிர்பாராமல் விஜயகாந்த் போல் வந்த படம். ஏதோ ஒரு புத்தகத்தில் வந்த ஓவியத்தை பார்த்து வரைந்தது.



இந்த படத்தை இப்ப பார்க்கும்போது, ரொம்ப ஆச்சரியப்பட்டுட்டேன், பிரபு கழுத்துக்கு கீழே கொடுத்திருக்கிற ஷேடு பார்த்து. அதேப்போல், அடுத்த படத்தில் கார்த்திக் நாடிக்கு.



கார்த்திக். கிளாமரா இல்ல?




நல்லவேளை, விஜய், அஜித், விக்ரம், சூர்யா இவர்களேல்லாம் வந்த பிறகு, நான் வரையவில்லை. தப்பித்து விட்டார்கள். எழுதும்போது, அவர்களையும் இப்ப வரைந்தால் என்ன என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.

இன்னும் சில நடிகர்கள் இருக்கிறார்கள். நடிகைகளும் கூட. அவர்கள், அடுத்த பதிவில்...

.

Wednesday, October 21, 2009

கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 1

நமக்கு சின்ன வயசில படம் வரையிறதுதான் பொழுதுபோக்கு. கையில கிடைக்கிற பேப்பருல எல்லாம் வரைய ஆரம்பிச்சுடுவேன். நோட்டு நோட்டா வரைஞ்சு தள்ளியிருக்கேன். சூப்பரா வரைவேன்னு சொல்ல முடியாது. சொந்தமா வரையுறத விட, பத்திரிக்கை, வாழ்த்து அட்டை போன்றவற்றை பார்த்து வரையுறது தான் அதிகம். சில சமயம், யாராவது கொஞ்சம் அசையாம அப்படியே இருந்தாலும், அவுங்களுக்கு தெரியாம வரையுறது உண்டு.

இப்ப, சமீபத்துல பரண்ல கிடந்த அந்த நோட்டுகள் கண்ல சிக்கிச்சு. சரி, டிஜிட்டைஸ் பண்ணிறலாம்’ன்னு இதோ பதிவுல,

முதல்ல சில சாமி படங்கள்... பர்ஸ்ட், பிள்ளையாரு. அப்புறம், அவரு பிரதர் முருகன். நம்ம பேவரைட் கடவுள்.



மயில் தோகையை நோட்டுக்குள்ள வச்சா வளரும்’ன்னு சொன்னாங்க. இன்னும் வளரல. ஒரு பத்து வருஷம் கழிச்சு பார்த்தா, வளர்ந்திருக்குமோ? :-)



கைலாய பிரதர்ஸ்.



முருகருக்கு கல்யாணம். ஏதாவது ஒரு கல்யாண பத்திரிக்கை பார்த்து வரைஞ்சிருப்பேன்’ன்னு நினைக்குறேன்.



நம்ம சிறுவயது ஒவியங்கள் எப்படி? ஸ்கூல் படிச்ச வரைக்கும் தான் வரைஞ்சேன். அப்புறம், ம்ஹும்.

தலைப்புல ஒண்ணு’ன்னு போட்டு இருக்குறதால, இன்னும் தொடரும். அடுத்தது, நம்ம கைவண்ணத்தில் திரை நட்சத்திரங்கள்.

.

Tuesday, October 20, 2009

ஆதவன்

கே.எஸ்.ரவிகுமாரிடம் எந்த கதையை கொடுத்தாலும், அவருக்கே உரிய பாணியில் எல்லாத்தரப்பையும் கவரும் வண்ணம் திரைக்கதை அமைத்து வெளியிட்டு விடுவார். இப்ப, தசாவதாரத்திற்கு பிறகு ஒரு சின்ன மாற்றம் தெரிகிறது. திரைக்கதையில் இல்லை, மேக்கிங்கில், பண்ணுகிற செலவில். சரி, விடுங்க... அவரும் பிரமாண்ட இயக்குனர் ஆகிவிட்டார். வழக்கம் போல், கியாரண்டி இருந்தால் சரி.

ஆதவனும் வழக்கமான கதை. வழக்கமான திரைக்கதை. இருந்தும், போரடிக்காமல் காமெடிக்கு வடிவேலு துணையிலும், பாடலுக்கு ஹாரிஸ் துணையிலும் செல்கிறது. அதனால், வழக்கம் போல் கே.எஸ்.ரவிக்குமாருக்கு வெற்றி படமாகி விடும். வடிவேலு, சரோஜா தேவி மேக்கப் பற்றி அடிக்கும் நக்கலுக்கு தியேட்டரில் சிரிப்போ சிரிப்பு.



இதுவரை எந்த படத்திலும் சூர்யாவிற்கு என்று ஒரு தனி டைட்டில் போடுவதில்லை. இதில் அவருக்கும் தொடங்கி வைத்துள்ளார்கள். அவரது பர்சனல் புகைபடங்களை வைத்து... சிறுவயதிலிருந்து இப்போது உள்ளது வரை... நல்லாத்தான் இருக்குது...

இயக்குனருக்கு என்றும் ஸ்பெஷல்'ஆக போடுகிறார்கள், மலையில் இயக்குனர் முகம் தெரியும் வண்ணம்.

பத்து வயது சூர்யாவை கிராபிக்ஸ் உபயத்தால் கொண்டு வந்துள்ளார்கள். இதற்கு முன், எந்த நடிகரையாவது இப்படி காட்டி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. தமிழின் முதல் முயற்சி ஓரளவிற்கு நன்றாகவே வந்துள்ளது. வாழ்த்துக்கள். ட்ரெண்ட் தொடருமா? வெற்றிகரமாக தொடர்ந்தால், சுலபமாகும் பட்சத்தில் குழந்தை நட்சத்திரங்கள் நிலை!

பாடல்கள் கன்னாபின்னாவென்று படத்தில் வருகிறது, எதற்கு என்று தெரியாமலே. ஏற்கனவே ஹிட் ஆனதால், சரி.

கிளைமாக்ஸ் ஹெலிகாப்டர்-கிரேன்-வெடிகுண்டு சண்டைக்காட்சி நல்ல விறுவிறுப்பு. வெளிநாடு போல் இருந்தது. ஆனால், காட்சிப்படி இந்தியாவில் நடப்பது தான். எப்படி இருந்த ரவிக்குமார், இப்படி ஆகிட்டாரே? ஒரு வேளை, இது தான் குறைந்த செலவோ?

நான் பத்து வயது பொடிசுகள் இருவரை அழைத்து சென்றிருந்தேன். அவர்களுக்கு பிடித்திருந்தால் போதும் என்பது தான் என் எதிர்பார்ப்பு. படம் முடிந்து வெளிய வந்த பிறகு, அவர்களிடம் கேட்டேன், எப்படியென்று. சூப்பர் என்றார்கள். அது போதும் எனக்கு.

.

Sunday, October 18, 2009

தீபாவளி



அதிகாலை எண்ணை குளியல்,
படைக்கும் முன் சுவைக்கும் ஜாமூன்,
கறிக்குழம்புடன் இட்லி, சட்னியுடன் வடை,
புது சட்டை கசங்க எடுத்த சினிமா டிக்கெட்,
தெரு அதிர வெடித்த சரவெடி,
எல்லாவற்றையும் விட மகிழ்ச்சியை கொடுத்தது
பெர்த் கன்பர்ம் ஆன ட்ரையின் டிக்கெட்.

.

திரு திரு... துறு துறு...

இந்த படம் வெளிவந்து ரொம்ப நாள் ஆனாலும், தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. பாருங்க, தியேட்டர்'ல தான் பார்ப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் எனக்கெல்லாம், இந்த சினிமாக்காரர்கள் விழா எடுக்கமாட்டார்களா?

மல்டிப்ளெக்ஸ் ரசிகர்களை குறிவைத்து எடுத்திருக்கும் படம். நிறைய காமெடி, கொஞ்சம் சென்டிமென்ட், லைட்ட ரொமான்ஸ், ஒரு திரில்லர் சீன், பாதிக்கு மேல் சேஸ் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.

பெண் இயக்குனர் என்றால் நம்பி பார்க்கலாம் போல? நீட்டாக எடுத்திருக்கிறார். ஒரே படுக்கையில், நாயகனும் நாயகியும் தூங்கும் காட்சி, டீசண்டாகவும் அதே சமயம் குறும்பாகவும் இருந்தது. இந்த காட்சியை மற்ற இயக்குனர்கள் எப்படி எடுத்திருப்பார்கள் என்று நினைத்து பார்த்தேன். கண்டிப்பாக, ஒரு கனவு பாட்டு வந்திருக்கும்.



ஒவ்வொரு கேரக்டருக்கும் இயக்குனர் கொடுத்திருக்கும் குணாதிசியத்தை கடைசி வரை காட்சிகளில் மெயின்டெயின் செய்திருக்கிறார். கொள்ளையான வீடு போல் எப்போதும் வீட்டை வைத்திருக்கும் ஹீரோ, வினாடி கணக்கில் நேரத்தை சொல்லும் ஹீரோயின், பெயரை மறக்கும் மௌலி, ப்ராஸஸில் குறியாக இருக்கும் வாடிக்கையாளர் என்று கன்சிஸ்டன்ட் கேரக்டர்ஸ். கிளைமாக்சில் வரும் அஹிம்சாவாத சித்திரவதை ஐடியாக்கள், கலக்கல்.

எல்லோருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள். அஜ்மல் - அஞ்சாதே'க்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம். பாடல்கள் எல்லாம் ரொம்ப போர். கை ரிமோட்டை தேடுகிறது. அதேபோல், தெரு தெருவாக ரொம்ப நேரம் அலைவதும் கொஞ்சம் சலிப்பை வரவழைத்தது.

அந்த குழந்தை செம க்யுட். பார்த்து கொண்டே இருக்கலாம். படத்தையும் பிரமாண்ட எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் பார்க்கலாம்.

என் நண்பனின் கமென்ட் - பொய் சொல்ல போறோம் அளவுக்கு இல்லையே!

---

கோவா ட்ரைலர் பார்த்தேன். செம கலர்புல். வெங்கட்டுக்கு இதுவும் பயணக்கதையா? ரஜினி'ங்கற பெயர் டைட்டிலில் வந்தாலே வெயிட்டாத்தான் இருக்குது. எப்ப பாஸ், சாங் ரீலிஸ்?

.

Friday, October 16, 2009

பேராண்மை

இயக்குனர் ஜனநாதன் விவரம் தெரிஞ்சவர். காடுகளை பற்றி, ஜாதிகளை பற்றி, பொருளாதார அரசியல் பற்றி பல விஷயங்களை வசனங்களில் சொல்கிறார். தமிழில் ஒரு பாரஸ்ட் அட்வெஞ்சர் படம் எடுக்க ஆசைப்பட்டு இருக்கார். ஆனா, ப்ச்....

எனக்கு இந்த மாதிரி படம் பார்க்க பிடிக்கும். கடைசியா, கேப்டன் பிரபாகரன் இப்படி விரும்பி பார்த்தேன். இந்த படமும் சின்ன வயசில பார்த்த அதே தியேட்டர்ல தான் பார்த்தேன். சில காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தாலும், படத்தோடு ஒன்ற முடியவில்லை.



ஜெயம் ரவி தைரியமாக நடித்திருக்கிறார். ஆமாங்க, ஒரு காட்சியில் கோவணத்தோடு வருகிறார். இயக்குனருக்கு இதில் என்ன ஆசையோ? இப்படித்தான், ஈ படத்தில் ஒரு காட்சியில் ஜீவா வருவார். அதிலும், ஜட்டியோடு வர சொல்லியிருப்பார். ஜீவாதான் எஸ்கேப் ஆகி இருப்பார் என்று நினைக்கிறேன்.

ரவி ஸ்மார்டாக இருக்கிறார். ரொம்ப நம்பிக்கையா நடித்திருக்கிறார். வித விதமான பெரிய பெரிய கன்களை தூக்கி சுடுகிறார். கம்பீரமே இல்லாமல், கன்னா பின்னாவென்று சுடுவது போல் இருக்கிறது. எதிரிகளின் திட்டங்கள் அனைத்தையும் யூகத்திலேயே சரியாக சொல்கிறார்.

அஞ்சு பொண்ணுங்க ஓவர் லூட்டி பண்றாங்க. முகம் சுழிக்கும் அளவுக்கு. வடிவேலு வருகிறார். சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். ஊர்வசி - சொல்ல ஒண்ணுமில்லை.

படத்தில் ஜாதி பற்றி பொன்வண்ணன் பேசும் வசனங்களும், அந்த பெண்கள் பேசும் டபுள் மீனிங் வசனங்களும் ஏராளம். எல்லாம் சென்சாரால் கட் செய்யப்பட்டு, முதல் பாதி பெரும்பாலும் மவுனமாகவே ஓடுகிறது.

இது விஜயகாந்த் நடிக்கவேண்டிய படம். ரவி நடித்திருக்கிறார். வீரப்பனும் இல்லை. பாகிஸ்தான் தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் பிஸியாக இருப்பதால், அமெரிக்கர்கள் இந்திய காடுகளில் ஊடுருவுகிறார்கள். இந்தியா, ஒரு ராக்கெட் விடுவதை தடுக்க, அமெரிக்கர்கள் இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லை. சும்மா, சொன்னாலே போதாது? தவிர, நாமளும்தான் மாதத்திற்கு இரு படங்கள் வெளியிடும் சன் பிக்சர்ஸ் போல், அடிக்கடி ராக்கெட் விடுகிறோமே? அவ்ளோ, கஷ்டபட்டுயிருக்க வேண்டாம்.

வழக்கம்போல் இல்லாமல் வித்தியாசமாக யோசித்திருக்கும் கதாசிரியருக்கு பாராட்டுக்கள். மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை சொன்னதற்கு வசனகர்த்தாவிற்கு வாழ்த்துக்கள். (பாம்பு,கியர் வசனங்களுக்காக குட்டுகளும்). இயக்குனர் தமிழ்ப்பட இலக்கணத்தை மீறி எடுக்க, என்ன செய்ய? வேண்டி கொள்கிறேன்.

.

Wednesday, October 14, 2009

திருவண்ணாமலை அன்னதான போர்ஜரி

திருவண்ணாமலையில் இருக்கும் ஒரு அறக்கட்டளை. ஏதோ அன்னதான அறக்கட்டளை என்று வரும். சரியாக தெரியவில்லை. வேறு ஏதும் நல்ல அறக்கட்டளையை தவறாக சொல்லிவிடக்கூடாது. அதனால், திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு அறக்கட்டளை என்று எடுத்துக்கொள்ளவும்.

இவர்கள் மாதம் தோறும் கடிதம் அனுப்புவார்கள். எப்படி அட்ரஸ் பிடிப்பார்களோ தெரியவில்லை. அன்னதானம் நடத்துகிறோம் அல்லது குரு பெயர்ச்சி பூஜை நடத்துக்கிறோம். உங்களால் முடிந்த அமௌண்ட்டை அனுப்பவும் என்று. கடவுள் பக்தியால் சிலரும், ஏதோ நல்ல காரியம் என்று சிலரும் யோசிக்காமல் தங்களால் முடிந்த பணத்தை அனுப்புவார்கள். எனக்கு தெரிந்த சிலரும் அனுப்பி இருக்கிறார்கள். பணம் அனுப்பியவர்களுக்கு ருத்திராட்சை, கருப்பு கயிறு, விபூதி, குங்குமம், செப்பு தகடு இப்படி ஏதாவது வரும். சமயத்தில் அன்னதான புகைப்படங்கள் வரும். மறக்காமல், சில நாட்கள் கழித்து, திரும்பவும் பணம் அனுப்ப சொல்லி கடிதம் வரும். பலரும் இது கோயிலுக்கு தொடர்புடையவர்களிடம் இருந்து வருவதாக நினைத்து கொண்டிருக்கிறார்கள்.



சமீபத்தில் திருவண்ணாமலை சென்று இருந்தேன். ஒரு கடைக்காரரிடம் ஒருவர் பேச்சு கொடுத்தப்போது, இது பற்றிய டாபிக் வந்தது.

“ஏங்க, இங்க கோயில் அன்னதான அறக்கட்டளை எங்கே இருக்கிறது?”

”அது ஒரு போர்ஜரிங்க”

கேட்டவர் ஷாக்கானார். நானும் ஆர்வமுடன் உரையாடலை கேட்க தொடங்கினேன்.

“போர்ஜரியா? பதிவு பண்ணின ட்ரஸ்ட் தானாங்க அது? கவர்மெண்ட் பதிவு எண் பார்த்தேனே?”

“நானும் கூடத்தான் ட்ரஸ்ட் ஆரம்பிப்பேன். தெருவுல சுத்திட்டு இருந்தவன், ட்ரஸ்ட் ஆரம்பிச்சு, இப்ப காருல பறக்குறான்.”

“இவ்ளோ சொல்றீங்க. போலிஸ் ஒண்ணும் பண்ணலீயா?”

“இப்ப வருற லெட்டர்ல அந்த அறக்கட்டளை பேரை பாருங்க. மாத்திருப்பாங்க.”

“மாட்டிக்கிட்டாங்களா? எப்படி?”

“நன்கொடை கொடுத்தவுங்க எல்லாம், கோயிலுக்கு பாஸ் கேட்க ஆரம்பிக்க, அப்பத்தான் கோவிலுக்கும், ஏமாந்து பாஸ் கேட்டவங்களுக்கும் விவரம் புரிஞ்சுது.”

“இப்ப என்ன பண்றான், அவன்?”

“வேற ட்ரஸ்ட் ஆரம்பிச்சுட்டான். தயவுசெய்து அதுக்கும் பணம் அனுப்பிடாதீங்க.”

“அன்னதானம் பண்ற போட்டோ எல்லாம் அனுப்புனாங்களே?”

“என்ன சார்? எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறீங்க. அப்படி போட்டோ அனுப்புறது பெரிய விஷயமா? உங்கக்கிட்ட மட்டுமா வாங்குனான்? இந்த மாதிரி தமிழ்நாடு முழுக்க, ஏன் உலகம் முழுக்கக் கூட அனுப்பியிருப்பான். எத்தனை கோடி அடிச்சானோ? ஏதாவது பண்ணனும்ன்னு நினைச்சா, நீங்க உங்க வீட்டுப்பக்கம் இருக்குற கஷ்டபடுற யாருக்காவது அஞ்சு கிலோ, பத்து கிலோ அரிசி வாங்கி கொடுங்க. கோவிலுக்குத்தான் பண்ணனும்’ன்னு நினைச்சா, நீங்களே நேரா வந்து 2000, 3000 நன்கொடை கொடுக்கலாம். அவுங்களும், உங்க முன்னாடியே அன்னதானம் போடுவாங்க. அதைவிட்டுட்டு விபூதி அனுப்புறான், குங்குமம் அனுப்புறான்’ன்னு பணம் அனுப்பாதீங்க. நான் கூடத்தான் அனுப்புவேன்.”

இது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தெரிந்தால், மேலும் விவரம் சொல்லலாம். தெரியாதவர்கள், உஷாராகவும்.

.

Monday, October 12, 2009

செல்போன்

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, நோக்கியா தனது செங்கல்கட்டி மாடல் செல்போனை வெளியிட்டுயிருந்தது. என்னுடன் படித்தவர்கள் சிலர் அதை வைத்திருந்தார்கள். எனக்கு அப்போது அதன் வடிவமைப்பு, கால் ரேட் போன்றவற்றாலேயே செல்போன் மேல் எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை.

பிறகு, வேலைக்கு சேர்ந்தபிறகும், சுமார் ஆறுமாதக்காலம் செல்போன் வாங்கவில்லை. என் நண்பர்கள் கேட்கும்போது, வீட்டில் இருக்கும்போது வீட்டு நம்பருக்கு கால் பண்ணு. ஆபிஸ்ல இருக்கும்போது ஆபிஸ் நம்பருக்கு கால் பண்ணு என்று சொல்லி சமாளித்துவிடுவேன். ஒருகட்டத்தில், மொபைல் வாங்கு என்ற வேண்டுகோள் மிரட்டலாக மாறியது. நீ வாங்கு, இல்லாவிட்டால் நாங்கள் வாங்கி கொடுத்துவிடுவோம் என்றார்கள். அவ்வளவு நல்ல நண்பர்களா? என்று நினைக்கவேண்டாம். என் காசு கொஞ்சம் அவர்களிடம் இருந்தது!

எது வாங்கினாலும் கொஞ்சம் ரிசர்ச் பண்ணி வாங்குவேன். அப்படி ஒரு மாடலை ரிசர்ச் பண்ணி, பிறகு கடைக்கு சென்றபிறகு கூட வந்தவர்களால் மனம் மாறி, ஒன்றும் தெரியாத ஒரு மாடலை வாங்கினேன். அது வெளிவந்த வேகத்தில், ப்ளாபானா மாடல். ஆனாலும், அதை மூன்று வருடங்களுக்கு ஓட்டினேன். ஒரு கட்டத்தில், ஏதோ ஒரு வியாதி வந்து, பேட்டரி வீங்கி, உயிரிழந்தது.



படம் பிடிக்க டிஜிட்டல் கேமரா இருக்கிறது. பாட்டு கேட்க எம்பி3 ப்ளேயர் இருக்கிறது என்பதால் பேசிக் மாடல் மீது தான் என் விருப்பம். அதனால் லுக்காக இருக்கும் பேசிக் மாடல் போதும் என்று ஒரு போல்டர் டைப் மாடல் வாங்கினேன். இன்னும் அது என்னிடம் போராடிக்கொண்டிருக்கிறது.

---

"லீவு வேணும்."
"எதுக்கு?"
"கல்யாணத்துக்கு."
"யாருக்கு?"
"எனக்குத்தான்."
"எடுத்துக்க. ஆனா, மொபைல எப்பவும் ஆன்ல வை."
"முகூர்த்தம் சமயமாவது கால் பண்ணாதீங்க. தாலி கட்டும்போது எடுக்க முடியாது."

இப்படியே இல்லனாலும், இம்மாதிரி சம்பாஷணைகளை அலுவலகத்தில் கேட்டு இருக்கிறேன். செல்போனால் என்னத்தான் ஏகப்பட்ட நன்மைகள் என்றாலும், நம்மை அறியாமலே அது சுழற்றும் சுழலில் சிக்குகிறோம். போனில் பேசி, பேசி, பேச ஆளில்லாத போது வெறுமையாக உணருகிறோம். கூட்டமாக மற்றவர்கள் பிஸியாக இருக்கும் இடங்களில், நாம் தனியாக இருக்கும்போது, நமக்கு செல்போனே துணை. எடுத்து காதில் வைத்து பேச தொடங்கிவிடலாம். யாரும் அழைக்கவில்லை என்றாலும்.

போனில்லாமல் இருப்பது என்பது பேண்டஸி கதைக்கரு போல் இருக்கும் இக்காலத்தில், லீவு எடுத்து ஊருக்கு செல்லும்போது, அதை அவ்வளவாக கவனிக்கவே மாட்டேன். எப்பவாவது எடுத்து யார் கால் பண்ணி இருக்கிறார்கள் என்று மட்டும் பார்ப்பேன். சமயங்களில், இரு நாட்கள் தொடர்ந்து பார்க்காமல் கூட இருந்திருக்கிறேன். ரொம்ப நிம்மதியாக இருக்கும்.

---

அப்பாவிடம் செல்போன் கிடையாது. அவரும் தேவையாக உணர்ந்ததில்லை. ஆர்வமும் இல்லை. வாங்கலாம் என்று நான் நினைக்கும் சில சமயங்களிலும், எதுக்கு சந்தோஷமா இருக்கட்டுமே என்று விட்டு விடுவேன்.

சமீபகாலங்களில் பயணங்களின்போது, அதிகாலைநேர டெலிபோன் பூத் இல்லாத சமயங்களில், காத்திருக்கும் நிலை அவருக்கு ஏற்படுகிறது. சரி, அவருக்கும் ஒன்று வாங்கிவிடலாம் என்று முடிவு செய்து என் நண்பனை இழுத்துக்கொண்டு கடை கடையாக ஏறி இறங்கினேன். நடப்பு நிலவரம் தெரியாதில்லை?

இன்கமிங். அவுட் கோயிங். மெசேஜ் கூட யூஸ் ஆகாது. ஆரம்பக்கட்ட மொபைல் வாங்கலாம் என்று தேடினோம். 600-700 ரூபாய்க்கு மோட்டரோலோ மொபைல் கிடைக்கிறது. பார்க்க சகிக்கவில்லை. கூடியவிரைவில், சிம் கார்டு போல் மொபைலும் தெருவுக்கு தெரு கொடுக்க போகிறார்கள்.

நோக்கியா வாங்கத்தான் ஆர்வமிருந்தாலும், ஒரு கம்பெனியையும் விடவில்லை. நோக்கியா, மோட்டரோலொ, சாம்சங், எல்ஜி, சோனி என்று ஒரு ரவுண்ட் விட்டு, எல்ஜி KP107b என்ற மாடலை தேர்ந்தெடுத்தோம். அந்நேரத்திற்கு நல்ல மொபைலாக கண்ணுக்கு தெரிந்தது. கலர் ஸ்கிரின், ஒல்லி உடம்பு, கருப்பு தேகம், 900mAh பேட்டரி. ஸ்பிக்கர் போன். ரூபாய் 1250. போதும்.



ஒவ்வொரு முறையும் நோக்கியா வாங்க நினைத்து, மற்றவைகளுடன் ஒப்பிட்டு பார்த்து, வேறு மொபைல் தான் எடுக்கிறேன். எனக்கும் நோக்கியாவிற்கும் ஏனோ ஒத்து போவதில்லை.

இந்த மொபைலா? இதுல அது ப்ராபளமாச்சே என்று ஏதாவது சொல்லி என்னை வெறுப்பேத்திவிடவேண்டாம்.

Monday, October 5, 2009

சில படங்கள் - சில பாடல்கள்

ஜக்குபாய் - ரஜினி படத்தலைப்பு. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம். ஏ.ஆர்.ரஹ்மான் - கலைஞர் வெளியிட்ட பாடல்கள். இவை தவிர வேறு ஏதும் விசேஷம் இருப்பது போல் தெரியவில்லை. 'பொன் மகள் வந்தாள்' ரீ-மிக்ஸ் பாடிய ஃரபி இசையமைப்பாளராகி இருக்கிறார். இதிலும் ரீ-மிக்ஸ் இருக்கிறது. அன்புள்ள மான் விழியே. ஃரபியே.

மொத்தம் ஏழு பாடல்கள். மகேஸ்வரியும் சுனிதாவும் லம்பாக நிறைய பாடியிருக்கிறார்கள். எனக்கு ஒரளவுக்கு பிடித்தது - ஹரிஹரன் பாடிய ‘ஏழு வண்ணத்தில்'. ஹரிஹரனின் குரலுக்காக.

---

வேட்டைக்காரன் - வழக்கமான டெம்ப்ளேட் பாடல்கள். 5 குத்து, 1 மெலடி என்று இருந்ததில் மெலடி என்பது இப்போது காதல் டூயட் என்றாகிவிட்டது. மத்ததெல்லாம் தனியாகவோ, கூட்டத்துடனோ, ஜோடியாகவோ ஆடுகிற குத்துபாடல்கள். வேறென்ன எதிர்பார்க்க?

என்னை ரொம்ப கவர்ந்த பாடல் - 'கரிகாலன் கால போல'. சங்கீதா ராஜேஷ்வரன். யப்பா... என்ன குரலுடா அது? அந்த குலோப் ஜாமூன் கொஞ்சும் குரலுடன் அனுஷ்காவை நினைத்து பார்த்தால், இப்பவே என்னன்னமொ செய்யுது.

---



யோகி - ரஹ்மானுக்கு பிறகு புது கருவி, புது இசை என்று முயற்சி செய்வது யுவன் தான் என்று நினைக்கிறேன். படத்திற்கு போடும் தீம் மியூசிக், செல்போனில் ரிங்டோனாகத்தான் உபயோகப்படுமானால், இசையமைத்தவரை 'ரிங்டோன் கம்போஸர்' என்று தான் அழைக்கவேண்டும் என்றார் ஸ்ருதி. அப்படி இல்லாமல், தீம் மியூசிக் எக்ஸ்பெர்ட்டாக எனக்கு தெரிவது சமீபகாலத்தில் யுவன் தான். இந்த படத்தில் இரண்டு தீம் இசைகளில் கலக்கியிருக்கிறார். என்ன, அவர் முக்கி முக்கி பாடுவதை கொஞ்சம் குறைத்து கொள்ளலாம்.

பிச்சைக்காரர் மகனாக நடிக்க நடிகர்கள் மறுத்ததால், தான் நடிக்க வந்ததாக அமீர் கூறியிருந்தார். இப்பட பாடல்களில் ஹீரோவுக்கு கொடுக்கும் ஹை-டெக் பில்-டப்புகள் மிரள வைக்கிறது. படம் வரட்டும்.

---

பேராண்மை - வித்தியாசமான கதைகளோடு, வித்தியாசமான களத்தில் படமெடுக்கும் இயக்குனர்களில் அவ்வளவாக விளம்பரம் இல்லாதவர் - ஜனநாதன். முதல் படம் இயற்கையில் தேசிய விருது பெற்றவர். எனக்கு அந்த படம் ரொம்ப பிடித்திருந்தது. ஈ - கான்செப்ட் தவிர படம் கவரவில்லை. திரும்பவும் பேராண்மையில் வித்யாசாகர்-வைரமுத்து கூட்டணியுடன் வருகிறார்.

வித்யாசாகரின் ஆஸ்தான மதுபாலகிருஷ்ணன், சாதனா சர்கம் மற்றும் நிறைய புது குரல்கள் பாடியிருக்கிறார்கள். பாடல்களை ஒருமுறை கேட்டேன். இனி படத்துடன் கேட்டு கொள்ளலாம்.

---

நந்தலாலா - பாடல்கள் வெளியாகி ரொம்ப நாளாச்சு. படம் வருமான்னு தெரியலை. ஜேசுதாஸ் பாடியிருக்கும் ‘ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும்' பாடல் க்ளாஸ். இந்த மாதிரி ஜேசுதாஸ் குரலில், இளையராஜா இசையில், ஒரு பாசப்பாடலைக் கேட்டு ரொம்ப நாளாச்சு. அதனாலயே பிடித்தது.

இளையராஜாவுக்கும் மிஷ்கினுக்கும் பிரச்சினையானாதற்கு காரணமாக சொல்லப்பட்ட அந்த குறவர் பாடல் - புது முயற்சி. கேட்கும் போது, கண்டிப்பா என்னமோ பண்ணும்.

இளையராஜா சமீபகாலங்களில் சிலப்படங்களில் இசையமைப்பதை கேட்கும்போது, ஏனோ தானோ என்று இசையமைப்பது போல் உள்ளது. இதனாலயே, அவரிடம் செல்லும் சில நல்ல இயக்குனர்களும் வழிமாறக்கூடும். பாலாவும் ரஹ்மானும் இணைவதாக வேறு செய்திகள் வருகிறது. இப்படியெல்லாம் தத்துபித்துவென்று உளறி இளையராஜா ரசிகர்களிடம் அடி வாங்க விரும்பவில்லை.

அவருக்கு விருது வழங்கவேண்டும் என்பதற்காக ‘அஜந்தா' படத்திற்கு தமிழக அரசு வழங்கிய விருது, செம காமெடி. ஏன் அந்த வருஷம் அவர் இசையமைத்து வேறு எந்த படமும் வரவில்லையா?

.

Friday, October 2, 2009

அழ வைக்கும் விஜய் டிவி

ரொம்ப உயரத்தில் இருந்த திரை நட்சத்திரங்களை, சேட்டிலைட் சானல்கள் தான் மக்களுக்கு அருகில் கொண்டு வருகிறார்கள். திரை நட்சத்திரங்களுடன் மக்கள் நேரடியாக, தொலைபேசி மூலமாக கலந்துரையாடும் நிகழ்ச்சிகள் அதிகம் வர தொடங்கி இருக்கின்றன.

சென்ற வாரம், விஜய் டிவியில் கமல் பொது மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்று ஒளிப்பரப்பானது. அதேப்போல், கலைஞர் டிவியில் கமலுடன் முன்னணி இயக்குனர்கள் சேரன், அமீர், மிஷ்கின், லிங்குசாமி ஆகியோர் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றும் ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியில் உன்னைப்போல் ஒருவன் பற்றியும், உலக சினிமா பற்றியும் உரையாட போவதாக சொன்னார்கள். மேடைகளில் தீப்பொறி பறக்க பேசும் சேரன், அமீர் இருக்கிறார்களே என்று நானும் ஆர்வத்துடன் உட்கார்ந்தேன். ஆனால், அவர்கள் கமலை புகழ்ந்த புகழ்ச்சி இருக்கிறதே, விஜய் டிவியில் ஒரு பெண், கமலை கடவுள் என்று போற்றியதற்கு கொஞ்சமும் குறைவில்லை.

சேரன் உங்களை போல் நடிக்க ஆளில்லை என்கிறார். மிஷ்கின் வெட்னஸ்டே வேற, இது வேற என்கிறார். கமல் நிலைமையும் கஷ்டமாகத்தான் இருந்தது. தன்னடக்கமாக பேசுவதற்கும், இயல்பாக பேசுவதற்கும் ரொம்பவே சிரமப்பட்டார். இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவரை ரணகளப்படுத்துகிறார்கள்.

---

விஜய் டிவியின் பலம், டாக் ஷோஸ். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் கலந்துகொள்பவர்களை பேச வைத்து, முடிந்தால் அழ வைத்து, அதை பரபரப்பாக்கி ஹிட் செய்வது. முடிந்தால் அழ வைப்பது என்று சொல்ல கூடாது. யாரை வேண்டுமானாலும் அழ வைத்து விடுவார்கள்.

இதையே விஜய் ஆதிராஜ் ஒரு பேட்டியில் சொன்னார். ஜோடி நம்பர் ஒன் இறுதி போட்டி நடக்கும் அன்று, அவர்களுக்கே தெரியாமல், அவர்கள் குழந்தையிடம், அப்பா, அம்மா ஏதோ போட்டிக்கு போகிறார்கள், விஷ் பண்ணுங்க என்று சொல்லி, குட்டி குழந்தையை செண்டிமெண்டாக பேச வைத்து, அதை ஒளிப்பரப்பி, இருவரையும் தங்களை அறியாமலேயே அழ வைத்தார்களாம். இந்த விஷயத்தில், விஜய் டிவி பெரிய ஆட்கள் என்று அவரே கூறினார்.

அதேப்போல், விஜய் டிவியின் பலமாக இருக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர் - கோபி நாத்.

கோபிக்கு மனோதத்துவ ரீதியில் என்ன பேசி அழ வைக்கலாம் என்று ட்ரெயினிங் கொடுத்திருப்பார்கள் போல. கமல் வந்திருந்த நிகழ்ச்சியில், ஒரு பெண்ணை அழ வைத்து, விட்டால் கமலும் அழுது விடுவார் என்று நிலைமையை உருவாக்கி, கடைசியில் கமலே மூடை மாத்துங்க என்றார். பிறகு, மும்பை தாக்குலை நேரில் கண்ட இன்னொருவர் கண்ணீருடன் பேசி, கமலை கதி கலங்க வைத்தார்.



ஆனால், விஜய் டிவி விடவில்லை. கமலுக்கு ரஜினி, மம்மூட்டி, மோகன்லால், வெங்கடேஷ் ஆகிய தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களை வைத்து நடத்திய பாராட்டு விழாவில் கமலை அழ வைத்து விட்டார்கள். இன்னும் அதை டிவியில் போடவில்லை. போடும்போது அதை ஒரு வருஷத்துக்கு இழுத்து போடுவார்கள்.

---

கொஞ்சம் நாள் முன்பு, நீயா நானா நிகழ்ச்சியில் ‘மனதால் முடிவெடுப்பவர்கள்-அறிவால் முடிவெடுப்பவர்கள்' என்பது போல ஒரு தலைப்பில் பேசினார்கள். அதில் ஒருவர் தான் தன் தந்தை இறந்தபோதும் அழவில்லை என்றார். அப்போது, கோபி எப்படியாவது அவரை அழ வைத்து விடலாம் என்று தொடர்ச்சியாக சில கேள்விகள் கேட்டார். ஆனால், அவர் அசரவில்லை. புன்னகையுடனே பதிலளித்து கொண்டிருந்தார்.

முடிவில் கோபி இப்படி சொன்னார். “இன்னும் நாலு கேள்வி கேட்டா, நீங்க அழுதுடுவீங்க. வேண்டாம்'ன்னு விடுறேன்.” வெளிப்படையாகவே தன் நோக்கத்தை, கோபி இப்படி கூறியது, எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

கமலிடம் திருமணம் பற்றிய சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்கும் தனித்தன்மைக்கூடிய தமிழ் தொகுப்பாளர் என்றாலும், அவ்வப்போது கோபியும் இப்படி கடுப்பை கிளப்புகிறார். இன்னொரு சம்பவம். விஜய் அவார்ட்ஸ் மேடையில் கௌதம் - ஹாரிஸை வைத்து 'பிரிந்தவர்கள் சேர்கிறார்கள்' என்று குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து சொல்வது போல் சொன்னது.

---

நமது உணர்ச்சிகளின் உச்சம், அழுகை. அதை வைத்து வியாபாரம் நடத்துகிறார்கள் விஜய் டிவி. எவ்வளவு நாளுக்கு, இப்படி அழுகையை பரபரப்பாக்கி நிகழ்ச்சிகள் பண்ணுவார்களோ?

மற்ற சேனல்களில், சீரியல்களில் நடிகர்களை அழ வைக்கிறார்கள் என்றால், விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில், ரியல் மனிதர்களையே அழ வைக்கிறார்கள். முன்னதை விட மோசமானது இது.

.