Monday, August 31, 2009

எஸ். ராமகிருஷ்ணனின் துணையெழுத்து



எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஆல்பம் படத்தில் இருந்தே, படங்களுக்கு வசனம் எழுதி வந்தாலும், நான் அவரை கவனிக்க ஆரம்பித்ததும், ரசிக்க ஆரம்பித்ததும், ’உன்னாலே உன்னாலே’ படத்தில் இருந்து தான். இந்த படம் வெளிவருவதற்கு முன்பே, இந்த படத்தின் வசனங்கள் மீது எனக்கொரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், ஜீவா இயக்கத்தில் இதற்கு முன்பு வந்த ’உள்ளம் கேட்குமே’ படத்தில் இருந்த சுஜாதாவின் வசனங்கள். முக்கியமாக, அந்த கல்லூரி பேர்வெல் காட்சியில் ஷாம் பேசும் வசனங்கள்.



அந்த படத்தில் வசனங்களுக்கு இயக்குனர் ஜீவா கொடுத்த முக்கியத்துவமும், அதற்கு அடுத்த படத்தில் எஸ். ராமகிருஷ்ணனை எழுத அழைத்ததும், இவரிடம் ஏதோ இருக்கிறது என்றெனக்கு உணர்த்தியது. படத்தை இசையுடன் தூக்கி பிடித்த வசனங்களும், என் எதிர்பார்ப்பை ஈடுகட்டியது. படத்தின் டைட்டில் காட்சியில் வரும் வசனங்களில் இருந்தே, ரசிகர்களை ஈர்க்க துவங்கியது.


காட்சிகளைக் காண, படங்களை க்ளிக் செய்யவும்.

இலக்கிய உலகில் இயங்கி வந்த எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துக்களுக்கு, சினிமா இன்னொரு தளத்தில் வெளிச்சம் கொடுத்ததென்றால், ஆனந்த விகடனில் வெளிவந்த துணையெழுத்து கட்டுரை தொடர் ஜனரஞ்சக வாசகர்களிடம் இவர் எழுத்தை பரவலாக்கியது. துணையெழுத்து, தேசாந்திரி தொடர்கள் வெளிவந்த சமயம், தொடர்ந்து படிக்கவில்லையென்றாலும், அவ்வப்போது வாசித்து வந்திருக்கிறேன். தற்போது, துணையெழுத்தை புத்தகவடிவில் வாசித்தேன்.

----

தினசரி வாழ்க்கையை இவர் காணும் பார்வை வித்தியாசமானது. அழகானது. ராமகிருஷ்ணன் என்றால் பயணங்கள் என்று சொல்லுமளவுக்கு, இவர் வாழ்வோடு பயணங்கள் கலந்திருக்கிறது. இவர் தன் வாழ்க்கை பயணத்தில் கடந்து வந்த இடங்களை, மனிதர்களை, நிகழ்வுகளை, இத்தொடரில் பதிவு செய்திருக்கிறார். நாம் சாதாரணமாக காணும் ஒரு விஷயத்தை, இவர் எழுத்தில் காணும் போது, இவருடைய பார்வையும், எழுத்தாளுமையும் தெரிகிறது.

ரயில்வே ஸ்டேஷன் போனால், உங்களுக்கு என்ன தோன்றும்? எழும்பூர் ரயில் நிலையத்தில் மறைந்திருக்கும் உணர்வுகளை, இவர் இப்படி புலப்படுத்துகிறார்.

இன்றைக்கும் எழும்பூர் ரயில் நிலையத்தினுள் ரயில் வந்து நிற்கும்போதெல்லாம் மனம், தானே காலத்தின் பின்னே போய்விடுகிறது. இதே ரயில்நிலையத்தில் எத்தனை கலைஞர்கள், படைப்பாளர்கள் வந்திறங்கி இருக்கிறார்கள்? அவர்களில் அறியப்பட்ட ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் எங்கே ஒளிந்துவிட்டார்கள்? கல்வெட்டைவிடவும் தொன்மையானது ரயில் நிலையப் படிக்கட்டுகள். அதில் பதிந்துள்ள பாத வரிகளைப் படிப்பதற்கு இன்றும் வழியில்லை.

இவரது எழுத்துக்கள் எளிமையானது. அதே சமயம் ஆழமானது. புத்தகங்கள் மேல் இவர் கொண்ட காதல், எவ்வளவு தூரமானாலும் இவரை பயணப்பட வைக்கிறது. பயணங்கள் என்பது ஊர் ஊராக சுற்றி அலைந்து, அங்கிருக்கும் கல், கட்டிட அழகை ரசித்து அதனுடன் நின்று புகைப்படம் எடுத்து கொள்வதல்ல என்பதை தனது எழுத்துக்களால் உணரவைக்கிறார். அரசர்கள், அரசியல்வாதிகள் வாழ்ந்த இடங்கள் மட்டும் கவனத்திற்குரியவை அல்ல. ஒவ்வொரு மனிதனின் அறையும் அவனுடைய உணர்வுகளால் நிரம்பிக்கிறது என்கிறார். தான் விருப்பப்பட்டும் காண இயலாத புதுமைப்பித்தனின் மேன்ஷன் அறைக்கு, வாசகனையும் அழைத்து செல்கிறார் தனது எழுத்துக்களால்.

புத்தகங்களைத் தேடி, பழங்கால ஓவியங்கள், சிலைகளைத் தேடி, எழுத்தாளர்களைத் தேடி, வாசகர்களைத் தேடி, ஏன்... மகன் கழுதையை பார்த்ததில்லை என்பதற்காக, மகனுடன் நகரமெங்கும் கழுதைக்காகக் கூட அலைந்திருக்கிறார்.

சிறுவயதிலிருந்து கழுதைகள் மீதிருந்த வசீகரம் மாறவே இல்லை. அதிலும், கழுதைகளின் மௌனம் புரிந்துகொள்ளப்பட முடியாதது. இயல்பிலேயே கழுதைகளுக்கு ஒரு துயர சாடை இருக்கிறது. அதன் கிழிந்த மூக்கு, தான் ஒரு சாது என்று சொல்லாமலேயே சொல்வதாக இருக்கும்.

காதலைப் பற்றி, காதலர்களைப் பற்றி,

உலகில் இரண்டு வகை மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒன்று, காதலை வெளிப்படுத்தி ஜெயித்தவர்கள் அல்லது தோற்றவர்கள். மற்றவர், காதலை வெளிப்படுத்தத் தயங்கியோ, மறைத்தோ, கடந்து வந்துவிட்டவர்கள். அழுகை, சிரிப்பு, கோபம், வேதனை என்பதுபோல காதல் என்பது ஒரு உணர்ச்சி. ஒருவேளை இந்த யாவும் ஒன்றாகக் கலந்ததொரு உணர்ச்சி என்றுகூடச் சொல்லலாம்.

காதலிப்பவர்கள்தான் உலகில் அதிகம் கோபப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது. உட்கார்ந்து பேசுவதற்கு இடமில்லாமல் இருக்கிறதே என்று நகரத்தின் மீது, சாலையில் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்களே என்று சகபயணிகள் மீது, இவ்வளவு சீக்கிரத்தில் ஆர்டர் செய்த ஓட்டர் சர்வர் மீது, சட்டைப்பை, ஹேண்ட்பேக்கை, டயரியை வீட்டில் உள்ளவர்கள் ரகசியமாகத் தேடிப் பார்க்கிறார்களே என மொத்த குடும்பத்தின் மீது, இஷ்டம்போல இரவும் பகலும் வருவதில்லையே என சந்திர, சூரியர்கள் மீது என எதன் மீதுதான் கோபம் வராமல் போகிறது?


நான் இந்த புத்தகத்தை தொடர்ந்து படிக்காமல், தினமும் ஒவ்வொரு கட்டுரையாக வாசித்து வந்தேன். புது அனுபவமாக இருந்தது. இந்த புத்தகம் வாசித்து முடித்த பிறகு, எஸ். ராமகிருஷ்ணன் எழுத்துக்கள் மேலான மதிப்பு கூடியது. (சண்டக்கோழி குட்டி ரேவதி விவகாரம் தவிர,) எந்த வம்புதும்பிற்கும் செல்லாமல் தொடர்ந்து எழுதி வருவது, அவர் மீதான மரியாதையை, என்னுள் இன்னமும் கூட்டுகிறது.

இந்த புத்தகம் வாசித்தபிறகு, நமது பார்வையிலும் சில மாற்றங்கள் வரும். அது அவர் எழுத்தின் வெற்றி அல்லாமல், வேறென்னவாக இருக்க முடியும்? அவர் பாணியில் சொல்வதென்றால், அவருடைய புத்தகங்களில், ஒவ்வொரு எழுத்திலும் இருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன், பக்கங்களில் பிரதியெடுக்கப்பட்டு, உலகெங்கும் வாசிக்கும் வாசகர்களுக்குள் புத்தகங்கள் மூலம் தொடர்ந்து இன்னமும் இறங்கி கொண்டிருக்கிறார்.

.

Sunday, August 30, 2009

பெங்களூர் - சாப்ட்வேர் இன்ஜினியர்களின் தற்கொலைகள்

கடந்த ஒரே வாரத்தில், பெங்களூரில் இரு சாப்ட்வேர் இன்ஜினியர்கள், தங்கள் நிறுவனங்களின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்திருக்கிறார்கள். இரண்டுமே இந்திய முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் - எச்.சி.எல். & விப்ரோ. இதைப் பற்றி இரண்டு நிறுவனங்களுமே, எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. எச்.சி.எல். அலுவலகத்தில் நடந்த இந்த தற்கொலை பற்றி காவல்துறையிடம் கூட தெரிவிக்கவில்லை. மருத்துவமனை சொல்லி, காவல்துறை தெரிந்து கொண்டு இருக்கிறது. இரு நிறுவனங்களும், இது பற்றி எந்த அறிக்கையோ, விளக்கமோ வெளியிடவில்லை. தனியார் நிறுவனங்களின் பொது அம்சங்கள் இவை.

இந்த தற்கொலைகளுக்கு வேலை இழப்பு காரணமாக இருக்கலாம் என்று ஊகங்கள் வெளிவருகிறது. இந்த தற்கொலைகளுக்கான காரணம் எதுவாக இருந்தாலும், இன்னமும் நிறைய தற்கொலைகள் வேலை இழப்பினால் நடக்கிறது என்பது உண்மை.

---

முதலில் எந்த பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது. எந்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கோழைகள் எடுக்கும் தைரியமாக முடிவு என்று தற்கொலையைக் கூறுவார்கள். வேலை இழப்பிற்கு உயிர் இழப்பது கோழைத்தனமானது மட்டுமல்ல, முட்டாள்தனமானதும் கூட.

இந்த வாழ்க்கை வாழ்வதற்கானது. வேலை அதில் ஒரு அங்கம். வாழ்க்கையை வசதியாக வாழ வழி செய்து கொடுப்பது வேலை. அவ்வளவே. இந்த வேலை இல்லாவிட்டால் இன்னொன்று. தற்போது, இந்த ஐடி துறை மேலேயெழும்பி வருவதாகவே கூறுகிறார்கள். வேலை இழந்தவர்கள், ஓரிரு மாதங்களில் வேலை பெற்று விடுகிறார்கள். அப்படியே, இந்த துறை விழுந்தாலும், வேறு துறைகள் இருக்கிறது. எல்லாம் அவரவர் மனம் சார்ந்தது.

இதற்காக எதற்கு உயிர் விட வேண்டும்?

---

நல்ல காலத்திலேயே, வேலைக்காக பிழிந்தெடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கும் சாப்ட்வேர் நிறுவனங்கள், இந்த நெருக்கடிக்காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பல கொடூரமானவை. இவை, ஒரு சிலரை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி சித்ரவதைக்குள்ளாக்கிறது என்பது உண்மை. சரியான ஆறுதலும், துணையும் இல்லாத பட்சத்தில், தற்கொலைக்கு தூண்டப்படும் நிகழ்வுகளும் ஏற்படுகின்றது.

நம் நாட்டின் பொருளாரத்தை இயக்குவது பங்கு சந்தை. ஏறத்தாழ இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் பங்குசந்தையில் பணம் திரட்டப்பட்டு நடத்தப்படுபவையே. ஒரு நிறுவனத்தின் ஏற்றமும் தாழ்வும் சந்தையை பாதிக்கிறது. சந்தையை பாதிக்கும் விஷயங்கள் அனைத்தும், நிறுவனங்களை பாதிக்கிறது. அதனால், நிறுவனங்கள் பங்குசந்தையை சார்ந்தே இருக்கிறது. அவரவர் நிறுவன பங்கு மதிப்பின் மேல் கவனம், நிறுவனங்களுக்கு எப்போதும் உண்டு.

ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பை, பாதிக்கும் விஷயங்களில் நிறுவனத்தின் வர்த்தக செயல்பாட்டை விட, சமயத்தில் நிறுவனத்தை பற்றிய செய்திகள் முக்கிய பங்கு வகிக்கிறது. நிறுவனம் புது ஆர்டர் பெற்றால், மதிப்பு உயரும். ஆர்டர் இழந்தால், மதிப்பு குறையும்.

ஊழியர்களை பணி நீக்கம் செய்தால்? நிறுவனத்தில் ஏதோ பிரச்சினை என்று சந்தையில் அது பிரதிபலிக்கும். இந்நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று தான், நிறுவனங்கள் வேறு வழிகளை பயன்படுத்துகிறது.

---

உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படும் போது, வணிக வாய்ப்புகள் குறைகிறது. வேலைகள் குறைகிறது. ஆட்குறைப்பு அவசியமாகிறது. பணி நீக்கம் என்று சொல்லி, நல்ல பெயரை இழக்காமல், ஊழியர்களை அவர்களாகவே வேலையை விட்டு விலகுமாறு சொல்லி, நிறுவனத்திற்கு இருக்கும் பெயரை பாதுகாக்கிறார்கள்.

விலக மறுத்தால்?

1) நாங்களே உன்னை வேலையை விட்டு நீக்குவோம்.
2) தவிர, உனக்கு வேலைக்கான அனுபவ சான்றிதழ்களும், மற்ற சான்றிதழ்களும் ஒழுங்காக வந்து சேராது.
3) தவிர, சம்பள பைசல் ஒழுங்காக இருக்காது.
4) தவிர, வேறு வேலையில் சேர முடியாதபடி, மத்திய தகவல் மையத்தில் உன் பெயருக்கு கரும்புள்ளி வைத்து விடுவோம்.
5) நீயாகவே போனால், எல்லாம் ஒழுங்காக வந்து சேரும்.

வேறு வழியில்லாமல், ஊழியர்கள் வேலையை விட வேண்டியிருக்கிறது, அவர்களாகவே விடும்படி. நிறுவனங்கள், இந்த மந்தநிலையிலும் யாரையும் வேலையை விட்டு நீக்கவில்லை என மார்தட்டி கொள்ளும் சூழலை வைத்துக்கொள்கிறார்கள்.

துறை உச்சத்தில் இருக்கும் போது, ஓங்கும் ஊழியர்களின் கைகள், இச்சமயம் மேலெழும்புவதில்லை. அடங்கி, அமைதியாக ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திடுகின்றன.

---

இதனால் மனமொடிந்து செய்யப்படும் தற்கொலைகளும், நிறுவனங்கள் செய்யும் கொலைகளாகவே கருதப்பட வேண்டும். நிறுவனங்கள் மூடிய கதவினுள் செய்யும் இக்கொடுமைகளை பற்றி தெரிந்தும், ஏதும் கேள்வி கேட்காமல், எதிர்ப்பை பதிவு செய்யாமல், அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற ஊழியர்களும், இதற்கு மறைமுகமாக உடந்தையாகிறார்கள். அவரவருக்கு ஏதும் நிகழாதவரை, ஏதும் தோன்றுவதில்லை.

நிறுவனத்தின் சாதனைகளை பங்கு போட்டுக்கொண்டு, லாபங்களை பங்கு போட்டுக்கொண்டு, வசதிகளைப் வசதியாக பெற்றுவரும் ஊழியர்கள், இந்த உயிர் இழப்புகளின் பாவத்தையும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும்.

உலகில் மற்ற நாடுகளில் போர் என்ற பெயரில், அமெரிக்கா நடத்தி வந்த வெறியாட்டத்தின் பலனை, ஏற்கனவே அந்நாடு சிறிது அனுபவித்து விட்டது. நம் அண்டை நாட்டில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு உடந்தையாக இருந்த நம் நாடும், அதற்கான பலனை பெறும். போலவே, நிறுவனங்கள் ஊழியர்களுக்கெதிராக மேற்கொள்ளூம் கொடுமைகளை, கண்டுக்கொள்ளாமல் இருப்பதின் மூலம் ஊக்கமளித்து வருவதின் பலனை, நிறுவனங்களுடன் சேர்ந்து சாப்ட்வேர் இன்ஜினியர்களான நாமும் அனுபவிப்போம்.

வேறென்ன செய்ய? தண்டனை நாளின்போது, நேர்மையுடன், நிறைவுடன் இருப்போம்.

.

Friday, August 28, 2009

அன்றும்... இன்றும்...

மிருக வதை



அழகு



வாய்ப்பு



அதிகாரம்



பக்தி



மரண பயம்



.

லேப்டாப் விஜயகாந்த் கொடுத்த பேனர்

போட்டோ கமெண்ட்ஸ் வித்தகர், சுகுமார் சுவாமிநாதன், அவருடைய வலைமனையில் விஜயகாந்த் புகைப்படத்தை கொடுத்து கமெண்ட்ஸ் எழுத சொல்லி, ஒரு போட்டி நடத்தினார். சும்மா இல்லை, அருமையான பரிசுடன்.

என்னுடைய கமெண்ட் இது...



எனக்கும் பரிசு கொடுத்திருக்கிறார். மற்ற கமெண்ட்ஸ் பட்டையைக் கிளப்புகிறது.

பரிசாக ப்ளாகிற்கு பேனர்கள். ஒன்று என்றில்லாமல், வகை வகையாக அசத்தலாக மூன்று. அவர் கொடுத்திருக்கும் அனைத்து பேனர்களும் கலக்கலாக இருக்கிறது.

நன்றி சுகுமார் சார்.

முடிவா ஒரு கமெண்ட்..



ஓ! இதுதான் என்னைய வச்சு காமெடி பண்றது’ங்றதா?...

.

Thursday, August 27, 2009

சன் டிவியின் இரண்டு 'நினைத்தாலே இனிக்கும்'



இதயம், காதல் தேசம், உள்ளம் கேட்குமே - இந்த படப் பாடல்களை கேட்கும்போது, பலருக்கு அவர்களின் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வரும். கல்லூரி பற்றிய படங்கள் என்பதற்காக சொல்லவில்லை. இம்மாதிரி படங்கள் வரும்போது, அவர்கள் கல்லூரியில் படித்து கொண்டிருந்தால், இப்படங்கள் அவர்களுக்கு ரொம்ப விசேஷமாக இருக்கும். எனக்கு ‘ஏப்ரல் மாதத்தில்’ என்றொரு மொக்கை படம். :-( (நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, இந்த படம்தான் வந்தது.)

இந்த வருடம், கல்லூரியின் கடைசி வருடத்தை கடந்து கொண்டிருப்பவர்களுக்கு, அப்படி இருக்க போவது - நினைத்தாலே இனிக்கும்.... ஸாரி, சன் டிவியின் நினைத்தாலே இனிக்கும். ப்ரித்விராஜ், ப்ரியாமணி (மணிரத்னத்தின் அசோகவன ஜோடிகள்!), பி. வாசு வாரிசு, மிர்ச்சி சுசியின் கார்த்திக் ஆகியோர் படத்தின் நட்சத்திரங்கள்.



இந்த படத்திற்கு Light Illusion என்கிற நிறுவனம் செய்திருக்கும் நிற, ஒளி மாற்றங்களை இங்கே ஷோகேஸில் வைத்திருக்கிறார்கள்.

---

விஜய் ஆண்டனி இசையில் மொத்தம் ஏழு பாடல்கள். எனக்கு மூன்று பிடித்திருந்தது.

அழகாய் பூக்குதே

இது லவ் பீலிங் பாட்டு. பெரிய தலைகள் எதுவும் பாடல்கள் எழுதாதே, இப்ப புத்துணர்வாக இருக்கிறது. இந்த பாடலை எழுதியிருப்பவர் கலைக்குமார்.

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே
கவிதைவின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே!


ஸிந்ததைசர், ட்ரம்ஸ்களிடம் சிக்கி தவித்து கொண்டிக்கும் செவிகளுக்கு, இந்த பாடலின் இடையே வரும் புல்லாங்குழல் ஒலி - இதம். எளிமையாக, அழகாக இருக்கிறது. ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’, இது என மெலடியிலும் கலக்க ஆரம்பித்துவிட்டார் விஜய்.

செக்ஸி லேடி

படத்தின் ஆர்ப்பாட்டமான பாடல். மேளத்தை துணைக்கு அழைத்துக்கொண்டு, ஒரு வெஸ்டர்ன் சாங். இளமை துள்ளல் இசையில் மட்டுமில்லாமல், ப்ரியனின் பாடல் வரிகளிலும்.

தூக்கமென்பதை தூக்கில் போட்டு நாம், கொல்ல வேண்டுமே இளவயதில்
சேவல் கூவிடும் வேளை வரையிலே, ஆட்டம் தொடருமே பலவகையில்

நட்சத்திரங்களை க்ளாஸில் ஊற்றிதான் பருக தூண்டிதே, தினம் இரவில்
இருட்டை கண்டதும் இன்பமாதோர் பேயும் பிடிக்குதே, நம் மனதில்


துள்ளல் இசையை கருவிகளில் மட்டுமில்லாமல், நிறைய இடங்களில் குரலிலேயே வர வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. ஏற்கனவே, இந்த பாடலை டிவியில் போட்டு விட்டார்கள். கவனத்தை ஈர்த்தது, ஒளிப்பதிவாளர்தான். இந்த பாட்டுக்கு மட்டும் ரத்னவேலு என்கிறார்கள். மற்றபடி படத்திற்கு பாலசுப்பிரமணியம்.



பாடலைக் காண மேலுள்ள படத்தை க்ளிக்கவும்.

பியா பியா

விஜய் ஆண்டனி பாடியிருக்கிற பாடல். பாடல் ஆரம்பக்கும் போதே, இது விஜய் ஆண்டனி பாடல் என்று சொல்லி விடலாம். கானா டைப், உற்சாகத்தை வரவழைக்கும் பாடல்.

உன் மூச்சு வாசனையில் ரோஜாக்கள், டவுன் டவுன் டவுன்...
உன்னுடைய பேச்சினிலே ரிங் டோன்கள், டவுன் டவுன் டவுன்...


அதுக்கு மேல, அண்ணாமலை எழுதுயிருக்கிறத நீங்களே கேளுங்க.

----

விஜய் ஆண்டனி அப்பப்ப, இங்கிலீஷ் ஆல்பங்களில் இருந்து உருவுவார். ‘இது மாணவர் உலகம்’ பாடலை அப்படியே எடுத்துவிட்டாரோ என்று நினைக்கும் வகையில் ஆல்பம் சாங் போல் இருக்கிறது. தமிழ் வரிகள் கூட ஆங்கில உச்சரிப்பில்... ‘நண்பனை பார்த்த தேதி மட்டும்’ நட்பின் புகழ் பாடும் பாடல். காலேஜ் பேர்வெலில் பாடுவதற்கான பாடல். ’நாட்கள் நகர்ந்து வருடங்கள் கடக்கும்’ - படத்தின் தீம் சொல்லும் ஒன்றரை நிமிட பிட் சாங். ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ - இந்த வார்த்தையை போட்டு ஒரு கானா பாட்டை ஆரம்பிக்க, எப்படித்தான் தோன்றியதோ?

---

சமீபத்தில் கோவையை கடந்து ரயிலில் வரும்போது, எம்பி3 ப்ளேயரில் எப்எம் ட்ரை பண்ணலாம்’ன்னு வைத்தேன். சூரியனில், இந்த படப்பாடல் தான் வைத்தவுடன் வந்தது. நினைத்துக் கொண்டேன். ஆஹா! ஆரம்பிச்சிட்டாங்கயா...

படம் வரும்வரை சூரியன். வந்தபிறகு சன் மியூசிக்.

சன் டிவி படம் என்பதனால் பயப்பட வேண்டாம். படத்தின் இயக்குனர் குமாரவேல், இயக்குனர் கமலின் அஸிஸ்டெண்ட். அப்ப, அதுக்கு தான் பயப்படணும் என்கிறீர்களா? என்றாலும், இது மலையாள க்ளாஸ்மேட்டின் ரீ-மேக். குரு-சிஷ்யன் இருவரும் ஒரே சமயத்தில் ரீ-மேக்குகிறார்கள்.

இயக்குனரின் தந்தை, கமலை வைத்து பல படங்கள் இயக்கிய ரங்கராஜன். அதில் கல்யாணராமன், மீண்டும் கோகிலா என்று சூப்பர் படங்கள் இருந்தாலும், எனக்கு பிடித்தது கடைசியில் வந்த மகராசன் தான். :-)

---

நினைத்தாலே இனிக்கும் என்று ஒரு புது நிகழ்ச்சியை சன் மியூசிக்கில் போடுகிறார்கள். நல்ல, நல்ல பாடல்களாக போடுகிறார்கள். நேரம் இரவு பதினொரு மணிக்கு. நல்ல பாட்டு போடுற நேரத்தை பாருங்க. நான் இப்பெல்லாம் அதுக்கு முன்னாடியே தூங்க போயிடுறேன். எனக்காக இதை ஒரு மணி நேரம் முன்னால் போட்டால், நல்லா இருக்கும்.

போனில் பாட்டு கேட்கும், லைவ் நிகழ்ச்சி. பதினொரு மணிக்கும், போனில் பேசுவதற்கு உலகில் தமிழ் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஒருவேளை, உலகில் மற்ற பகுதிகளில் வாழும் மக்களுக்காகத்தான் இந்த நிகழ்ச்சியா?

கிட்டத்தட்ட மிட் நைட் நேரத்தில் வரும் ப்ரோகாம் என்பதால், சில விவகாரமான விளம்பரங்களும் இடையில் வருகிறது. பீ கேர் புல்.

.

Wednesday, August 26, 2009

ஆதவன் - இருக்கும் கூட்டத்தில் இன்னுமொருவன்



ஆதவன் படத்துடன் இண்டஸ்ட்ரியில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பணியாற்றியுள்ள இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை ஒன்று கூடியுள்ளது. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா, சிரஞ்சீவி, நாகார்ஜுனா என்று முன்னணி நாயகர்களுடன் மட்டுமில்லாமல், தமிழின் முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவருடனும் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்து பணியாற்றியுள்ளார். எனக்கு தெரிந்து 14 இசையமைப்பாளர்கள்.

1) இளையராஜா
2) ஏ.ஆர். ரஹ்மான்
3) தேவா
4) யுவன் சங்கர் ராஜா
5) ஹாரிஸ் ஜெயராஜ்
6) வித்யாசாகர்
7) தேவி ஸ்ரீ பிரசாத்
8) எஸ். ஏ. ராஜ்குமார்
9) சிற்பி
10) சபேஷ் முரளி
11) ஸ்ரீகாந்த் தேவா
12) மரகதமணி
13) சௌந்தர்யன்
14) ஹிமேஷ் ரேஷ்மயா

இது ரேட்டிங் இல்ல. சும்மா, ஒரு ப்ளோவுல எழுதினேன். :-)

எத்தனை இசையமைப்பாளர்களுடன் இணைந்தாலும், பாடல்களில் இது ரவிக்குமார் டைப் பாடல் என்று எந்த தனித்தன்மையையும் காண முடியாது. பாடலால் இவர் படம் ஹிட்டானது என்றும், எந்த படத்தையும் சொல்ல முடியாது. படம் ஹிட்டாகும். சேர்ந்து பாடலும் ஹிட்டாகும். ஏதோ ஒருவகையில் பெருமைப்பட்டு கொள்ளலாம்.

இப்போது, புது புது பாடகர்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், ஒரு பாடகரால் நிறைய பாட முடியாமல் போகிறது. ரசிகர்களுக்கும் தொடர்ச்சியாக தங்களுக்கு பிடித்த பாடகர்கள் பாடும் பாடலைக் கேட்க முடியாமல் போகிறது. இப்படின்னா அப்படி... அப்படின்னா இப்படி...

இப்படி பாடல்கள் குறைந்து போன பாடகர்களில் ஒருவர், மனோ. பாடகர்களில் விசேஷமானது, அவர்களின் தனித்தன்மையான குரல். இவர் அதை மாற்றி மாற்றி பாடுபவர். செண்பகமே, செண்பகமே என்று மென்மையான குரலிலும் பாடுவார். முக்காலா, அழகிய லைலா என்று இன்னொரு அதிரடி குரலிலும் பாடுவார். இந்த படத்தில், மாசி மாசி என்றொரு பாடலை மனோ தனது மாற்று குரலில் பாடியிருக்கிறார்.

இதேப்போல் திரைப்பாடல்கள் குறைந்து போன, இன்னொரு பாடகரான உன்னிகிருஷ்ணனும் ஒரு பாடல் இந்த படத்தில் பாடியுள்ளார். வாராயோ வாராயோ என்று ஒரு நல்ல மெலடி பாடல்.



ஹாரிஸ் பாடல்களில் புது புது வார்த்தைகள் கிடைக்கும். இதிலும் லமோதிமோ திபுதிபுரமோ ரமோதிபோ, அப்படின்னு ஏதேதோ சொல்லி ஹசிலி பிசிலி’ன்னு ஒரு பாட்டு ஆரம்பிக்குது. இதையெல்லாம் பாடகர்களுக்கு எப்படி சொல்லி கொடுப்பாங்களோ? எப்படித்தான் மறுபடி மறுபடி ஒரே மாதிரி பாட முடியுமோ?

ஹாரிஸ்கிட்ட ஓபனிங் சாங்’ன்னு சொன்னா, பழைய பாட்டு மாதிரிதான் போடுவாரா? பளபளக்கும் பகலா நீ - மாதிரியே இருக்குது, இந்த படத்தின் ஓபனிங் சாங் என்று நான் நினைக்கும் - டமக்கு டமக்கு.

வேற என்ன சொல்ல? பொதுவாவே, ரவிக்குமார் அவர் படப்பாடல்களில் ரொம்ப மெனக்கெட மாட்டார். இதிலும் அப்படியே.

ஹாரிஸ், எப்ப இந்த பேட்டர்ன் விட்டு வெளியே வருவாரோ? கிட்டார், கீ-போர்டு இதையெல்லாம் புடுங்கிட்டுத்தான் இசையமைக்க சொல்லணும்.

.

Tuesday, August 25, 2009

நாட்டு சரக்கு - சல்மானின் மத நல்லிணக்கம்



ஸ்வைன் ப்ளூ இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள, ரூபாய் 700 இல் இருந்து ரூபாய் 2500 வரை ஆகுமாம். இந்திய மாநில அரசுகளில் முதல்முறையாக, கர்நாடகாவில் இச்சோதனைகளை அரசின் செலவில், இலவசமாக செய்து கொள்ளலாமாம்.

தமிழ்நாட்டில் ஏதேதோ இலவசமாக கொடுக்கிறார்கள். இதையும் கொடுக்கலாமே?

---

எனக்கு பயணங்கள் பிடிக்கும். ஜன்னல் இருக்கை என்றால் ரொம்ப, ரொம்ப. இதற்காக ரயிலில் முன்பதிவு செய்யும்போது, சைட் லோயரை விருப்பமாக தேர்வு செய்வேன். கிடைத்தால் கொஞ்ச நேரம் ஜாலியாக இருப்பேன். இருட்டும் போது, யாராவது வருவார்கள். லேடிஸ் சார், (இல்லையென்றால், வயதானவர்கள்) மேலே ஏறி படுக்க முடியாது, நீங்க கொஞ்சம் மேலே போங்களேன் என்பார்கள். நானும் மறுபேச்சில்லாமல், இடத்தை காலி செய்வேன். இதற்காகவா, நான் கஷ்டப்பட்டு முன்பதிவு செய்தேன்? என முன்பெல்லாம் தோணும்.

இப்ப பழக்கமாயிடுச்சு. கடந்த இரு வாரங்களாக, ரயிலில்தான் பயணம் செய்து கொண்டிருந்தேன். இரவு உணவை முடித்து விட்டு, காத்து கொண்டிருந்தேன். என்னடா, இன்னும் யாரும் வரலை என்று. நினைத்து கொண்டிருந்த போதே, டிடிஆர் வந்தார். எதிர்பார்த்ததை கேட்டார். இந்த முறை இரு குழந்தைகளுடன் ஒரு பெண்ணாம். சரியென்று மேலே ஏறினேன். இன்னொருமுறையும் அதேப்போல்.

சுயநலம் தான். நாளை என் அப்பாவோ, அம்மாவோ வருவாங்க, இல்லை?

---

அதிமுகவுக்கு என்னவாயிற்று என்றே தெரியவில்லை. கட்சியின் நிதிநிலை சரியில்லை என்கிறார்கள். இரண்டாம் வரிசை பெரிய தலைகள், அதிமுகவாலேயோ அல்லது திமுகவாலேயோ தூக்கப்படுகிறார்கள். அதிமுக பற்றி இன்னொரு ஆச்சரியமூட்டும் செய்தி கேட்டேன். கருணாநிதி பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறந்ததற்கு ஆதரவு தெரிவித்துள்ளார், ஜெயலலிதா.

’திருவள்ளுவரும் சர்வக்ஞரும் சமமானவர்களா?’ அப்படின்னு ஏதாச்சும் கேள்வி கேட்டு குற்றம் சாட்டியிருக்கலாமே? நான் சமீபத்தில் இப்படியொரு கேள்வி கேட்டு ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் கண்டேன். ஏதோ திருவள்ளுவர் சொல்லி, எல்லாம் கேட்டுட்ட மாதிரி.

---

அதிமுக இடைதேர்தலை புறக்கணிப்பதாக சொல்லியும், ஓட்டு சதவிகிதம் அதிகமாகத்தான் இருந்திருக்கிறது. இதையெல்லாம் யார் கேட்க போகிறார்கள்? ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில், ஓட்டுப்போட்ட மை கையில் இருந்தால், விரல் வெட்டப்படும் என்று சொல்லியும் மக்கள் ஓட்டு போட்டு இருக்கிறார்கள்.

சும்மா சொல்லி வதந்தி கிளப்பவில்லை. நிஜமாகவே, இருவரின் ஓட்டு போட்ட விரலை வெட்டி எறிந்திருக்கிறார்கள். நாமெல்லாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்? கையில நோட்டு. குத்துறேன் ஓட்டு.

---

ஷாருக்கானுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் இழைக்கப்பட்ட ’அநீதி’, இன்று இந்தியா முழுமைக்கும் தெரிந்திருக்கிறது. வேறு எந்த நாட்டிலும், மீடியா இது போன்ற செய்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லையாம். ஜப்பானில், இது எல்லாம் ஒரு செய்தி, என்று பேப்பரில் வரவே வராதாம்.

ரூல்ஸ் இஸ் ரூல்ஸ். அவ்வளவுதான். இது பரவாயில்லை. போன ஞாயிறு, நம்ம தினத்தந்தியின் தலைப்பு செய்திகளில் ஒன்று.

ரம்பா வீட்டின் முன் ரசிகர் ரகளை.

---

விநாயகர் சதுர்த்தி அன்று ஈச்சனாரி பிள்ளையார் கோவிலுக்கு சென்றிருந்தேன். அவருடைய பிறந்தநாள் என்பதால் (பிறந்தநாள் தானே?), அவருக்கு வாழ்த்து சொல்ல வழக்கத்திற்கு மாறான கூட்டம். ஆனால், நம்மூர் அரசியல் தலைவர்கள் பிறந்தநாளுக்கு, லைன் கட்டி நிற்பார்களே? அந்த அளவுக்கு இல்லை. சின்ன வரிசைதான் என்று எப்போதும் தோன்றும் வகையில் அனுப்பிகொண்டிருந்தார்கள்.

வெளியே ஒருவர், வந்திருந்தவர்கள் அனைவருக்கும் பிள்ளையார் பாடல்கள் கொண்ட வீடியோ டிவிடியை இலவசமாக வழங்கி கொண்டிருந்தார். தமிழக இல்லங்கள், டிவிடி ப்ளேயரில் தன்னிறைவு அடைந்துவிட்டது போலும்.

---

சல்மான்கான், விநாயகர் சதுர்த்திக்கு ஆடிபாடுவது போல் ஒரு பாடலை, ஹிந்தி போக்கிரிக்கு பிரபுதேவா எடுத்திருக்கிறார். சல்மான்கான், விநாயகர் சதுர்த்திக்கா? என்று ஆச்சரியப்பட வேண்டாம். சல்மான் உண்மையிலேயே பிள்ளையார் பக்தராம். அவருடைய குடும்பம் மத நல்லிணக்கத்தை பேணும் குடும்பம்.

சல்மான்கான் தந்தையின் முதல் மனைவி இந்து. இரண்டாம் மனைவி கிரிஸ்டியன். மத நல்லிணக்கம் தானே?

Friday, August 21, 2009

கந்த கந்த கந்த கந்தல்சாமி

ரஜினி மாதிரி ஏழைகளுக்கு பணத்தை வாரி வழங்கணும், கமல் மாதிரி பெண் வேடம், தாத்தா வேடமெல்லாம் போடணும், அஜித் மாதிரி கூலிங் கிளாஸ், கோட் போட்டு நடக்கணும், சூர்யா மாதிரி வெளிநாட்டுக்கு போயி ஸ்மக்லிங் பண்ணனும் - இப்படியெல்லாம் விக்ரம் ஆசைப்பட்டு இருப்பாரு போல. ஒரே படத்துல அத்தனை ஆசையையும் நிறைவேத்தி வச்சிருக்காரு, சுசி கணேசன்.

சூப்பர் ஹீரோ படம்’ன்னு சொன்னது மட்டுமில்லாமல், முதல் ரீலிலேயே தெரிந்து விடுகிறது, இது லாஜிக் பார்க்காமல் பே’ன்னு பார்க்க வேண்டிய பேண்டஸி படம்’ன்னு. சில காட்சிகளிலேயே அந்த சுவாரஸ்யம் காணாமல் போயி, சீக்கிரம் விடுங்கடா, வீட்டுக்கு போகணும்’ன்னு அழ வைத்துவிடுகிறார்கள்.

ஸ்ரேயா வரும் காட்சிகள், எரிச்சலாக இருந்தது. ஒரு சீன்ல மட்டும் முழுசா மூடிக்கிட்டு வந்தாங்க. அதுலயும் கடைசில, அவுங்களே கிழிச்சிக்கிட்டாங்க. அவுங்க உடைய குறைச்ச மாதிரி, அவுங்க வந்த சீன்களையும் குறைச்சிருக்கலாம். அதேப்போல், மெக்ஸிகோ காட்சிகள். பிரமாண்டமா எடுக்குறேன்னு, இவ்ளோ சீன்ஸா எடுக்குறது? ஹீரோதான் பறக்குறாருன்னு பார்த்தா, இவுங்களும் பறக்குறாங்க.

வடிவேலுவின் காமெடி ட்ராக், படத்திற்கு அவ்வளவு பொருத்தம் இல்லை. ஆனாலும், படத்தில் வடிவேலு சிரித்தாலும் சரி, அழுதாலும் சரி, தியேட்டரில் மக்கள் குலுங்குகிறார்கள். இப்போது வரும் படங்களில், பிரபுவுக்கு என்று மறக்காமல் ஒரு கேரக்டர் வைத்து விடுகிறார்கள். இதிலும் மறக்கவில்லை.

தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களில் குத்து குத்து குத்தி எடுத்திருக்கிறார். பின்னணியில் அடித்து வெளுத்து வாங்கியிருக்கிறார். சில படங்கள் சரி இல்லாவிட்டாலும், அடுத்த பாட்டு எப்ப’ன்னு உட்கார்ந்திருப்பேன். இதில் ஒரு கட்டத்தில் சலிப்பாகிவிட்டது. ஸ்ரேயா கொடுமை தான் தாங்க முடியவில்லை என்றால், அந்த முமைத்கான் பாடலில் நடன அசைவுகள் - கண்றாவி.

சுசி கணேசன், திருட்டு பயலே’வை தொடர்ந்து இதிலும் அதேப்போல் ரகசியமாய் பின்தொடர்ந்து நடித்திருக்கிறார். விரும்புகிறேன், பைவ் ஸ்டார் என்று ‘அட’ போட வைத்த இயக்குனர் (என்னையை இல்ல!), இப்போது ஷங்கர் பாணியில் இங்கு வந்து நிற்கிறார். இனி எங்க போயி நிற்பாரோ?

ஆமாம், சுசி கணேசன் சார், நீங்க மணிரத்னம் சீடராச்சே!

கடவுள் பெயரில் உதவி செய்வது, சிட்டு பேப்பரில் எழுதிய வேண்டுதல்களை நிறைவேற்றுவது, கோழி வேடத்தில் செய்யும் கோணாங்கி மேஜிக் செயல்களுக்கு பின்னணி டெக்னாலஜி லாஜிக் கொடுப்பது போன்றவை நிமிர்ந்து உட்கார வைத்தாலும், உரிச்ச கோழியாய் ஸ்ரேயா, சலிப்படைய வைக்கும் நீளம் என்று மற்றவை நெளிய வைக்கிறது.

கொஞ்சம் வெட்டி ஒட்டு போட்டிருந்தால், கந்தல் குறைந்திருக்கும். தாணு நல்லா இருக்கணும்’ன்னு நினைச்சிங்கன்னா, போயி படத்தை பாருங்க. நீங்க நல்லா இருக்கணும்’ன்னு நினைச்சா...

மற்றவர் கண்ணீர் துடைப்பவனே, கடவுள்.

பில்கேட்ஸுக்கு கந்தசாமியின் பிங்கிலிப்பா பிலாப்பி

’எவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா...’ என்று தமிழகத்தின் விடிவெள்ளி சொன்ன பொன்மொழி, வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க...

---

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்...

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி.

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

கந்தசாமி ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?”

---

கூடிய விரைவில், இன்னொரு தத்துவத்தை பற்றி பார்க்கலாம்.

“நீ அடிச்சா பீஸு... நான் அடிச்சா மாஸு...”

.

Wednesday, August 19, 2009

நாட்டு சரக்கு - சேரனால்தான் முடியுமாமே?

பியரா சிங், வயது 80. ஒரு கொலைக்குற்றத்துக்காக தூக்கு தண்டனை பெற்றவர், கடந்த 20 ஆண்டுகளாக அமிர்தசரஸ் சிறையில், 12க்கு 6 அடி அறையில் அடைப்பட்டுக்கிடக்கிறார். கருணை வேண்டி, 12 வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதிக்கு மனு செய்திருந்தார். இன்னும் பதில் வரவில்லையாம். போய் சேர்ந்திருச்சான்னே தெரியலை.

கருணையே வேண்டாம். என்னை கொன்றுவிடுங்கள் என்கிறார். ”எனக்கு தூக்கு என்று தீர்ப்பு வழங்கிய நாளே, என்னை தூக்கிலிட்டு இருக்க வேண்டும்.”

தாமதிக்கப்படும் கருணை, பெருங்கொடுமை. இதற்கு மேல், அவருக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும்?

---

சாலைகளில் மூடப்படாத சாக்கடை துவாரங்களில், மனிதர்கள் விழும் விபத்தை பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்போம். அப்படி ஒரு செய்தியை படித்தேன். இந்த முறை விழுந்தது - ஒரு யானை. தாய்லாந்தில். அவ்வளவு பெரிய சாக்கடை குழியா?

சில விஷயங்களில், நம் நாடு பரவாயில்லை என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதான்.

---

தமிழ் படங்களுக்கு பொருத்தமான டைட்டில் வைக்கிறார்களோ, இல்லையோ, தமிழில் மொழிமாற்றம் செய்து வரும் ஆங்கில படங்களுக்கு பொருத்தமாகத்தான் பெயர் வைக்கிறார்கள். சமீபத்தில் நான் அப்படி பார்த்த ஒரு தலைப்பு - ருத்ர மனிதர்கள் 2009. மனிதர்களை உண்ணுபவர்களை பற்றிய கதையாம். ’நான் கடவுள்’ படத்தில் ருத்ரன் தானே, மனிதர்களை தின்பான். அதான், அப்படி தின்பவர்களை பற்றிய படத்திற்கு ருத்ர மனிதர்கள் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

கொஞ்சம் நாள் முன்னாடி, இப்படித்தான் ‘300 பருத்தி வீரர்கள்’ என்று ஒரு படம் வந்தது.

---

போன விநாயகர் சதுர்த்திக்கு, விடுமுறை தினத்தை முன்னிட்டு என்று சொல்லி கலைஞர் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டார்கள். இந்த வருடம் விடுமுறை தினமான ஞாயிறு அன்று தான் சதுர்த்தியே வருகிறது.

இப்ப, என்ன செய்வீங்க...???

---

தவணை முறையில மிக்ஸி வாங்கிருப்போம்... கிரைண்டர் வாங்கியிருப்போம்... டிவி வாங்கியிருப்போம்... இனி ஜீன்ஸும் வாங்கலாம். இப்படி ஒரு அருமையான திட்டத்தை கொண்டு வந்திருப்பது, லெவிஸ் நிறுவனம். முதல் கட்டமாக, பெங்களூரில் மட்டும். மூணு மாச வட்டியில்லா தவணையில, ஜீன்ஸ் பேண்ட் வாங்கிக்கலாம்.

கடனை கட்டி முடிக்கறதுக்குள்ள, எப்படியும் எவனும் ஜீன்ஸை துவைச்சி இருக்க மாட்டான். இப்ப, கடனை கட்ட முடியாட்டி, என்ன பண்ணுவாங்க? ஜீன்ஸை புடுங்கிட்டு போயிடுவாங்களா?

ச்சீய்...

---

பன்றி காய்ச்சல் இந்தியாவில் பரவுவதற்கு காரணம், அமெரிக்க சதியாம். புலனாய்வு பத்திரிக்கைகளின் கவர் ஸ்டோரி இது. ஷாருக் விவகாரத்தில், அம்பிகா சோனி சொன்னது போல், இதற்கும் நாம் பதிலடி கொடுக்க வேண்டும்.

ஊருக்குள் சேரனால் தான் முடியும் என்கிறார்கள்.

சேரன் சார், பொக்கிஷம் படத்தை ஆஸ்கர்க்கு அனுப்புங்க.

.

Monday, August 17, 2009

இயக்குனர் பாக்யராஜின் காதல் வைபோகமே!

மகேந்திரனிடமிருந்து...

எனக்கு எப்போதுமே ஒரு வியப்புண்டு. திரைக்கதையைப்பற்றி யார் பேசினாலும் கே.பாக்யராஜை பற்றி மிகவும் சிலாகித்துப்பேசுகிறார்களே என்று. தமிழ்த்திரையுலகை பொறுத்தவரை அவரை திரைக்கதையின் தந்தை (Father of Screenplay) என்றுகூட சொல்கிறார்களே என்று ஆச்சர்யம். பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்ததால் அவர் பன்முகத்திறமை வாய்ந்தவர் என்பதை நம்ப சற்று சிரமமாக இருந்தது. இயக்கம், திரைக்கதை, வசனம் மட்டுமின்றி இசையமைப்பில் அவரின் ஆர்வம் இன்னும் சிறப்பானது.

சிலவருடங்களுக்கு முன்பு, மறைந்த திரு ஜீவா 12B என்றொரு, தலை சுற்ற வைக்கும் கதையை படமாக்க முனைந்தபோது இடையில் எப்படி கொண்டு செல்வதென்று புரியாத நிலையில் பாக்யராஜின் உதவியை நாடினார். அவரும் அதை அழகாக முடித்துக்கொடுத்தார். ஜீவா நன்றி மறவாமல் திரைக்கதை உதவி என்று பாக்யராஜின் பெயரை அனுமதித்தார்.

பாக்யராஜ் எடுத்துக்கொள்ளும் கதைக்களங்கள் எப்போதுமே வித்யாசமானதாக இருக்கும். அந்த ஏழுநாட்கள், முந்தானை முடிச்சி, தாவணிக்கனவுகள், சின்ன வீடு எல்லாமே ரசிக்கும்படியானவை. கிளுகிளுப்பின் கரங்கள் விரசத்தை தொட்டுவிடாமல் ரசிக்கும் வகையில் இருக்கும். படம் முடிந்து வரும்போதும் கண்டிப்பாக எல்லோர் முகத்திலும் புன்னகை இருக்கும்.

சமீபத்தில் ஒரு படம் பார்க்க நேர்ந்தது. பாக்யராஜின் நேர்த்தியான இயக்கத்திற்கு சிறந்த உதாரணமும், அவரை எல்லோரும் புகழ்வதற்கு காரணமும் கிடைத்தன. பாக்யராஜ் இயக்கத்தில், கங்கை அமரன் இசையமைப்பில் 1980 ஆண்டு வெளிவந்த "சுவரில்லாத சித்திரங்கள்". பாக்யராஜ், சுதாகர் மற்றும் சுமதி நடித்திருப்பார்கள். (என் அலுவலகத்தோழியின் சொந்த சித்தி சுமதி என்பதால், காட்சிகள் எனக்கு இன்னும் ரசிக்கும்படியாக இருந்தன). படத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல் "காதல் வைபோகமே காணும் நன்னாளிதே" கங்கை அமரன் எழுதி, மலேசியா, ஜானகி பாடிய ஒரு இனிய பாடல். இதுநாள் வரை கேட்காமல் இருந்தவர்கள் கூட சுந்தர்.சி யின் பெருமாள் பட ரீமிக்சை, (கொலை செய்யப்பட பிரதியை) சன்மியுசிக் உபயத்தில் கேட்டு சலித்திருப்பார்கள்.

கதைப்படி பள்ளியில் படிக்கும் (ஏறக்குறைய சிறுமியே தான்) சுமதியை காதலிக்கும் வசதியான வீட்டுப்பையன் சுதாகர், சுமதியை பார்க்க வேண்டி, சுமதி வீட்டின் எதிரில் தையல் கடை வைத்திருக்கும் கவுண்டமணியை சிநேகிதப்படுத்திக்கொள்வார். அடிக்கடி வந்து கடையில் அமரும் சாக்கில் சுமதியைப்பார்ப்பார். சுமதியும் கவுண்டமணியிடம் பேசும் சாக்கில் சுதாகருக்கு தகவல் பரிமாறுவார். அதே தெருவில் வசிக்கும் பாக்யராஜும் சுமதியை ஒருதலையாக காதலிப்பார். ஒருநாள் சுமதியின் பள்ளியில் செல்லவிருக்கும் சுற்றுலா பற்றி
சுதாகருக்கு தெரிவிக்க வேண்டி சுமதி தன் வீட்டு வாசலில் நின்று சத்தமாக இப்படி சொல்வார். "தெரியுமா டெய்லர்? எங்க ஸ்கூலில நாங்க எல்லாரும் நாளைக்கு கொடைக்கானல் போறோம்.." (அந்த குதூகலக்குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது). சேதி தனக்குதான் என்று புரிந்து கொண்ட சுதாகரும் மெல்ல தலையசைப்பார்.

தற்செயலாக வெளியே வரும் பாக்யராஜ் சேதி தனக்குத்தான் என்று தவறாக புரிந்துகொண்டு கொடைக்கானலுக்கு பின்தொடர தயாராவார். நல்ல உடைகள் எதுவும் தன்னிடம் இல்லாததால் சுதாகரிடமே சென்று இரவல் உடைகளை வாங்கிப்போட்டுக்கொண்டு கொடைக்கானலுக்கு பயணப்படுவார். அந்த மலைப்பாதைப்பயணத்தில் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் தலைசாய்த்து கண்மூடி பாக்யராஜ் காணும் கனவுப்பாடல் இது..

அந்தப்பாடலை அவர் படமாக்கியிருக்கும் விதம் முதல்முறையில் யாருக்குமே புரியாது. சுதாகர், சுமதியின் காதலைப்பற்றி அறிந்திராத பாக்யராஜின் கனவில் வரும் சுமதி பள்ளிச்சீருடை அணிந்திருப்பார்.(பள்ளியிலிருந்து அழைத்து சென்றதாக அவர் நம்பிக்கொண்டிருப்பதால்). இது மலேசியா (பாக்யராஜுக்காக) மற்றும் ஜானகியின் (சுமதிக்காக) சேர்ந்திசைப்பாடல். எனவே மலேசியா குரல் ஒலிக்கும் இடங்களில் எல்லாம், சுதாகரிடம் வாங்கி அணிந்த உடைகளுடன் பாக்யராஜும், பள்ளிச்சீருடையில் சுமதியும் ஆடிக்கொண்டிருப்பார்கள். ஜானகி குரல் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் சுதாகரும் சுமதியும் தம் சொந்த உடைகளில் ஆடிக்கொண்டிருப்பார்கள். ஒரு கனவும், நிஜமும் அற்புதமாக கலக்கப்பட்டிருக்கும்.

புரியாதவர்கள் மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.. இல்லையேல் படத்தைப்பாருங்கள். இது ஒரு சாதாரணமான பாடல்காட்சி. இதற்கு இவ்வளவு மெனக்கெடவில்லை எனினும் பாக்யராஜை யாரும் கேள்விகேட்கப்போவதில்லை. இருந்தும் சினிமாவை ஒரு தவம் போல செய்தவர்கள் நிறைந்திருந்த நாட்களது.

இப்போது போல ஆண்டிப்பட்டியில் மாடுமேய்க்கும் நாயகன், ஒரு பாடலுக்காக ஆஸ்திரேலியா சென்று ஆடும் கேலிக்கூத்து எல்லாம் அப்போது இல்லை. நிஜமான உழைப்பு அது. புரிந்துகொள்ள அடுத்தமுறை பாடல் வரும் பொது கவனித்துப்பாருங்கள்.

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுதே..

கோடைகாலத்து தென்றல், குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடைகாலத்தில் ஆடல் விளையாடல் கூடல்..
வானம் தாலாட்டுபாட மலைகள் பொன்னூஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட சுகம் தேட கூட
பூவில் மேடையமைத்து பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு, துடிதுடிப்பு இது கல்யாண பரபரப்பு..

எண்ணம் என்னென்ன வண்ணம், இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்தராகம் , சுகபோகம், தாபம்
மேகலை பாடிடும் ராகம் , ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம், சுகபோகம், யோகம்
வாழ்ந்தால் உந்தன் மடியில் , வளர்ந்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் , தொடர்ந்திருப்பேன் ஏழேழு ஜன்மம் எடுப்பேன்..

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்தே
ஆனந்தப்பண்பாடுதே...


-மகேந்திரன்.

.

Saturday, August 15, 2009

பன்றி காய்ச்சலும் இன்ன பிற சங்கதிகளும்

கலைஞரிடம் நிருபர்கள்,

”பன்றி காய்ச்சலை தடுக்க என்ன செய்ய போகிறீர்கள்?”
கலைஞர் - ”பொது குழு கூடி முடிவெடுக்கும்.”
”தலைவா, இது கட்சி பிரச்சினையில்லை.”
கலைஞர் - ”அப்ப, அரசு உயர்மட்டக்குழு கூடி முடிவெடுக்கும்.”

உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பிறகு,

நிருபர்கள் - ”என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்?”
கலைஞர் - ”இது குறித்து முடிவெடுக்க, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.”

----

ஜெயலலிதா

“பன்றி காய்ச்சலுக்கு காரணம் - கருணாநிதியே!”

ஜோக்குக்கு சொல்லலீங்க... நிஜமாவே அவுங்க சொன்னது.

---

கம்யூனிஸ்டுகள்,

“மன்மோகன் சிங் அரசின் உலகமயமாக்க கொள்கையின் பின்விளைவுதான் இந்த பன்றி காய்ச்சல். இதற்கு முழு பொறுப்பும் ஏற்று காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும்.”

---

போன வார செய்தி...

பசியால் எந்த ஒரு இந்தியனும் பலியாக விட மாட்டோம். அதற்கான திட்டங்கள் அரசிடம் உள்ளது. - மன்மோகன் சிங் அறிவிப்பு.

இந்த வார செய்தி...

பன்றி காய்ச்சலால் 28 பேர் பலி.

---

டிவியில் எப்பொழுதும் கிரிக்கெட் ஸ்கோர் போடும் இடத்தில், இப்பொழுது பன்றி காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கையை போடுகிறார்கள். டிக்கெரிங் எப்பொழுதும் ஓடி கொண்டிருக்கிறது. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியவர்கள், பயங்காட்டியே சாகடித்து விடுவார்கள் போல் உள்ளது. ரொம்ப லைட்டாகவும் இருக்க வேண்டாம். அதற்காக ஒரேடியாக ஆட்டம் காண வைக்கவும் வேண்டாம்.

சரி... பன்றி காய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யலாம்? போர்க்கால அடிப்படையில், உடம்ப எந்த நோயும் தாக்காம, கிண்ணுன்னு வச்சிருங்க. அதுக்கு, சில சுலபமான வழிகள் பிளஸ் டவுட்களும்...

1) முடிந்தவரை கை கழுவிக்கொண்டே இருங்க. சும்மா இருக்கும்போது, கையை கண்ணுல, மூக்குல, வாயில வச்சு தேய்க்காம, வேற வேலையை பாருங்க.
(டவுட்: கை கழுவி முடிஞ்ச பிறகு, அந்த டேப் மூடுற இடத்துல கிருமி இருந்திச்சினா?)

2) நல்லா தூங்குங்க. நைட் உக்கார்ந்து ப்ளாக் எழுதுறதோ, படிக்குறதோ கண்டிப்பா கூடாது.
(பன்றி காய்ச்சல் மட்டுமில்லாம, இன்னும் பல வியாதிகள் வராது)

3) நிறைய தண்ணி குடிங்க. இது எப்பவும் பண்ண வேண்டியது. அட்லீஸ்ட், இப்பவாவது பண்ணுங்க.
(தண்ணின்னா H2O!.)

4) இது எல்லாமே உடம்பு நல்லா எதிர்ப்பு சக்தியோடு இருக்குறதுக்காக. நல்லா சுகாதரமான, சத்தான சாப்பாடு சாப்பிடுங்க. சளி பிடிக்குற மாதிரியான ஐட்டங்களை தவிர்க்க பாருங்க.
(சுகாதாரமான உணவு என்றால் ஹோட்டல்'ல சாப்பிட கூடாதா? இது ரொம்ப கஷ்டம்)

5) இந்த சமயமாவது சரக்கடிக்காதீங்க.
(சரக்கடிக்கிறதால, உங்களுக்கு எல்லோரையும் எதிர்க்கிற சக்தி வரலாம். ஆனா, உடம்புல எதிர்ப்பு சக்தி குறையுமாம்.)

6) எக்ஸசைஸ் பண்ணுவீங்களா? இல்லாட்டி, வாரத்துக்கு மூணு-நாலு நாளு, அரை மணி நேரம் நடங்க.
(எங்க நடக்குறதா? ஆபிஸ் மாடிப்படில ஏறி இறங்குங்க. இல்லாட்டி, கேர்ள் ப்ரண்டோடு உக்கார்ந்து பேசிவீங்களே, அந்த பார்க்குல நடந்துக்கிட்டே பேசுங்க.)

7) யாராவது Hன்னா, S ஆயிடுங்க. ஒரே தட்டுல போட்டு சாப்பிடுற அளவுக்கு ப்ரண்டா இருந்தாலும், கொஞ்ச நாள் ரெண்டு தட்டுல சாப்பிடுங்க.

8) தியேட்டர், மால் எல்லாம் அவசியம் இருந்தா, குழந்தைகளை அழைச்சிட்டு போங்க. மொக்கையை வீட்டுல இருந்தே போடுங்க.
(நம்மூர் தியேட்டர் டாய்லட்டுக்குள்ள, சும்மாவே மாஸ்க் போட்டுட்டுதான் போக வேண்டி இருக்கும்.)

9) இதுவரை சொன்னது, டாக்டர்கள் பரிந்துரைத்தது. ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் என்ன சொல்றாருன்னா, கோளறு பதிகம் படிக்கணுமாம். அதிருத்ர யாகம் நடத்தணுமாம்.



---

இந்த சமயத்துல ஊருக்கு போனேன். நிறைய பேரு மாஸ்க் போட்டுட்டு போனாங்க. நானும் கர்ச்சிப் கட்டிட்டு பஸ்'ல ஏறினேன். கொஞ்சம் தயக்கமாதான் இருந்தது. வித்தியாசமா பார்ப்பாங்களே'ன்னு. பஸ்'ல ஏற்கனவே சில முகமூடிகள் இருந்தார்கள்.

நிஜமாவே முகமூடி கொள்ளையர்கள் வழியை மறிச்சா கூட, 'சும்மா காமெடி பண்ணாதீங்க'ன்னு சொல்லிட்டு போற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். மனிதர்களை விடுங்க, நாயே கண்டுக்காம போகுது. அது, தன் முன்னிரண்டு காலால் முகத்தை பொத்தாமல் போகும் வரை ஆச்சர்யமில்லை.

என் ப்ரெண்ட்,

"ரொம்ப பயமா இருக்குடா..."

"சாவு மேல அவ்ளோ பயமா?"

"சிங்க காய்ச்சல், புலி காய்ச்சல்'ன்ன பெருமையா செத்து போகலாம். பன்றி காய்ச்சல்'ங்கறதுதான் யோசிக்க வைக்குது."

கேலிக்காகவும், கேவலப்படுத்துவதற்காகவும் மனிதனால் பயன்படுத்த ஒரு விலங்கின் பெயர், இன்று எல்லோரையும் கதிகலங்க வைத்துவிட்டது என்பதென்னவோ உண்மைதான்.

.

Wednesday, August 12, 2009

எழுத்து - கதை - கோபிகிருஷ்ணன்

சிறுவயதில் இருந்து வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அனைவருமே, கதைகளில் இருந்துதான் அந்த ஆர்வத்தை ஆரம்பித்து இருப்பார்கள். என்னுடையதும் அப்படித்தான். சிறுவர்மலர், அம்புலிமாமா, காமிக்ஸ் என்று தொடங்கி ராஜேஷ்குமார், சுபா, சுஜாதா என்று போனது. ஆனால், பிறகு கதை படிப்பதில் ஆர்வம் குறைந்தது. கதை படிப்பது பொழுது போக்க மட்டும் தான் என்ற எண்ணம் இதற்கு ஒரு காரணம். பொழுது போக்குவதற்கு படித்தாலும், ஏதாவது தெரியாதது தெரிந்து கொள்ளலாம் என்று அரசியல் வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்களை ஆர்வத்துடன் வாசித்து கொண்டிருந்தேன்.

உண்மையில் கதைகள் மூலம் நாம் நிறைய மறைமுகமாக கற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து ஒரு எழுத்தாளரின் கதைகளை படிப்பதின் மூலம், அந்த எழுத்தாளரை சுற்றி இருந்த உலகத்தை, எழுதியவரின் கண்களால் நாம் காணலாம். அவரின் உள்ளே நுழைந்து அவருடைய எண்ணவோட்டத்தில் நாமும் நீந்தலாம். தொடர் வாசிப்பைப் பொறுத்து, அவராகக் கூட வாசகன் மாறலாம்.

என்னத்தான் கதைக்கென்று கரு, கதாபாத்திரம், முடிவென்று இருந்தாலும், கதை நடக்கும் சூழல், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் பதிவாக இருக்கும். காலச்சூழலை தலைமுறைகளுக்கிடையே பகிர்ந்து கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது கதைகள். ஒருவகை சமூக கல்வெட்டுக்கள் இவை. பக்தியே, மனிதனுக்கு கதைகள் மூலம் புகுத்தப்படுவது தானே?

கதைகள் எழுதுவதும், கதைகள் வாசிப்பதும் ஒரு தனிமனிதனின் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டது அல்ல. சமூகரீதியாக தொடர்புள்ளது. கதைகளில் தான், இடங்களைப் பற்றி, மனிதர்களைப் பற்றி, வழக்கங்களைப் பற்றிய குறிப்புகளுடன் எழுத்தோடு எழுத்தாக உணர்வுகளும் பின்னப்பட்டிருக்கிறது.

---

யார் எழுத்தாளன்? எழுதுபவன் எல்லோரும் எழுத்தாளன் என்று எண்ணிக் கொண்டிருந்தால், அது எழுத்தாளர்களுக்கு நாம் செய்யும் அவமரியாதையாகத்தான் இருக்கும்.

எழுத்தாளன், எழுதியதை விட அதிகம் வாசித்தவனாக இருப்பான்.

எழுத்தில் எந்த சமரசத்தை செய்து கொள்ளாதவனாக இருப்பான்.

எதிர்பார்ப்பு, எழுத்து சார்ந்தே இருக்கும்.

பேனா மையில் நேர்மை கலந்திருக்கும்.

எழுத்தும் வாழ்வும் ஒன்றாயிருக்கும்.

---

பதிவுலகத்தில் இன்னும் ஆர்வம் நீர்த்துவிடாமல் இருப்பதற்கு, தெரியாதவற்றை கற்றுக்கொடுக்கும் அமுதசுரபியாக வலையுலகம் தொடர்ந்து இருப்பதே காரணம். கோபிகிருஷ்ணன் என்றொரு முக்கியமான, அதிகம் கண்டுக்கொள்ளப்படாத எழுத்தாளரை தெரிந்து கொண்டதே ஜயோவ்ராம் சுந்தர் மற்றும் சிவராமன் பதிவுகளால் தான். இருவருக்கும் நன்றி.

---

டேபிள் டென்னிஸ், தூயோன், இடாகினிப் பேய்களும்... - இந்த மூன்று புத்தகங்களையும் வாசித்ததில் நான் உணர்ந்தவை மேலுள்ளவை. இதில் நான் செய்த தவறு, கோபிகிருஷ்ணனை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல், டேபிள் டென்னிஸ் வாசிக்க துவங்கியது. முழுவதும் முடித்தபிறகும், என்னுள் எதுவும் ஏறவில்லை. என் வாசிப்பு நிலை உணர மட்டுமே உதவியது.

இவையெல்லாம் பெயருக்குத்தான் கதைப்புத்தகங்கள். உண்மையில், இவை கோபிகிருஷ்ணனின் வாழ்க்கைப்பதிவுகள்.

---

கதை எழுதுவதற்கான ஆர்வத்தை மற்றவர்களிடம் தூண்டுவதற்கும், அதை மேம்படுத்த முயற்சி எடுப்பதற்கும், தெரியாத எழுத்தாளர்களை பற்றிய அறிமுகம் கொடுப்பதற்கும் (அட்லீஸ்ட் என் போன்றவர்களுக்கு), சிவராமன், சுந்தர் ஆகியோருக்கு மீண்டும் என் நன்றிகள்.

.

Tuesday, August 11, 2009

கன்னட அமைப்புகளை நோக்கி ஒரு கர்நாடக தமிழரின் குரல்

திரும்ப திரும்ப திருவள்ளுவர் சிலையைப் பற்றி எழுதவது போல் உள்ளது. இருந்தாலும் இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.

சிலை திறப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிபதி தினகரன் கூறியது, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.

வழக்கு தொடர்ந்த கன்னட அமைப்பினர், அதை எதிர்க்க காரணமாக கூறியது - இடத்திற்கான அனுமதியையும், வீரப்பன் கோரிக்கையை ஏன் செயல்படுத்த வேண்டும் என்பதையும்.

தீர்ப்புக்கு முன் நீதிபதி பேசிய வார்த்தைகள், ஒவ்வொன்றும் சவுக்கடி.

----

சிலையைத் திறப்பதற்கான அனுமதியை மாநகராட்சியும், அரசும் வழங்கிவிட்டதைத் தெரியாமல் மனுதாரர்களாகிய கன்னட சங்கத்தினர் பொதுநல வழக்குத் தொடர்ந்தது சரியல்ல. மாநகராட்சி நிலம் என்பது அரசு நிலம்தானே? நீங்கள் தவறான முறையில் வழக்கைத் தொடர்ந்துள்ளீர்கள்.

நீங்கள் திருவள்ளுவர் சிலை திறப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்தீர்களா அல்லது ஒட்டு மொத்தமாக நகரில் சிலைகள் அமைப்பதற்கு எதிராக மனு தாக்கல் செய்தீர்களா? வழக்கை விட்டு வேறு பக்கம் போகாதீர்கள். நாமெல்லாம் இந்தியர்கள் என்பதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?

நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன். இப்போது கர்நாடக தலைமை நீதிபதியாக பணியாற்றுகிறேன். கடந்த ஓராண்டாக கர்நாடகத்தில் வாழ்கிறேன். கன்னடராக வாழ்ந்து வருகிறேன். பெங்களூரில் நடக்கும் சிலை திறப்பு விழாவில், மனுதாரர்கள் கலந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.

குடகு, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் முன்பு கோவை ஆ‌ட்‌சிய‌‌ரி‌ன் ஆளுகையின் கீழ் இருந்தன. காவிரி நீரை தரமாட்டேன் என்கிறீர்களே, காவிரியை கர்நாடக எல்லைக்குள்ளே கட்டுப்படுத்த முடியுமா? அது இயற்கையாகவே தமிழகம் நோக்கி பாயத்தானே செய்யும்? மொழியின் பெயரால் நாட்டை பிரிக்காதீர்கள்.

வீரப்பன் கோரிக்கை விடுத்ததாலேயே, ஒரு விஷயம் சட்டவிரோதம் ஆகிவிடுமா? திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். 50 வருடங்களுக்கு முன்பு வந்தவர்கள் கூறியதற்காக சிலை திறப்பை தவிர்க்க முடியாது. தமிழகத்துடன் ஆயிர‌ம் பிரச்சனைகள் இருக்கலாம். அதற்காக திருவள்ளுவர் சிலை திறப்பை தடுப்பது நியாயமாகாது. பிரச்சனைகள் இருப்பதால் தமிழகத்துடன் போருக்கு போக முடியுமா? அப்படி போரிட்டால் என்னை எந்த அணியில் சேர்ப்பீர்கள்?

நமது நாடு மிகுந்த பலம் வாய்ந்த நாடாகும். கூட்டமைப்பின் கீழ் நாடு செயல்படுகிறது. இதனால் நாம் நம்மிடம் உள்ள கருத்துவேறுபாடுகளை மறக்க வேண்டும். நம் அனைவருக்குள்ளும் இந்தியன் என்ற மனப்பான்மை வளர வேண்டும். தமிழர், கன்னடர், மலையாளிகள் என்ற வேறுபாடு கூடாது.

மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் ஏற்கும்படியாக இல்லை. காவிரி, ஒகேனக்கல் பிரச்சினையுடன் இதை சம்பந்தப்படுத்த வேண்டாம். கர்நாடக எல்லைக்குள்ளேயே காவிரி நீரை உங்களால் தடுத்து நிறுத்த முடியுமா? அது இயற்கையுடன் ஒன்றுபட்டது. உங்களது முயற்சி இரு மாநிலங்களிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களிடம் கருத்து வேறுபாட்டை உருவாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?. எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது எளிது. ஆனால் தீயை அணைப்பது கஷ்டம். குழப்பத்தை ஏற்படுத்தி போராட்டத்துக்கு வழி வகுப்பது எளிது. ஆனால் போராட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம்.

கோர்ட்டில் மனு செய்வது சுலபம். ஆனால் இதன் மூலம் ஏற்படும் விளைவுகளை சந்திப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நீங்கள் உணர்ந்துகொண்டீர்களா?.

இதுபோன்ற வழக்குகளை கோர்ட்டுக்கு கொண்டு வந்து, பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்த வழக்கில் எந்த ஓர் அவசரமும் இருப்பதாக தெரியவில்லை. இதை ஒரு பொது நலன் வழக்கு என்றுகூட சொல்ல முடியாது. அப்படியிருக்கும்போது வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதற்காக அவசரம் காட்டுகிறீர்கள். இது முக்கியமான பொதுநல வழக்கு என்று கூறுகிறீர்கள். ஆனால் மனுதாரர்களில் ஒருவர் கூட கோர்ட்டுக்கு வரவில்லை. அப்படி இருக்கையில் இதை முக்கியமான வழக்கு என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

திருவள்ளுவர் சிலை திறப்பு விழா அரசு விழா இல்லை என்பதுபோல நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக முதல்வர் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்து, விழாவில் பங்கேற்று திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். அப்படி இருக்கும்போது இது எப்படி தனியார் நிகழ்ச்சியாக இருக்க முடியும்? அப்படியே இது அரசு விழா இல்லை என்று நீங்கள் கூறினால், அதையும் நீதிமன்றத்தில் நீங்கள் நிரூபிக்க வேண்டும் அல்லது நீங்கள் தான் பிரச்னைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.

முதலில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா அழைப்பிதழை கொண்டு வாருங்கள். அதில் கர்நாடக அரசு சின்னம் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்போம். அது அரசு விழாவா இல்லையா என்பதை நானே உங்களுக்கு ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறேன். எனவே மொழி, மதம், சாதி போன்றவற்றை காரணம் காட்டி, நாட்டை துண்டாடாதீர்கள். கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும் இடையேயுள்ள இதயப்பூர்வமான உறவை கெடுக்கக்கூடாது.

திருவள்ளுவர் சிலைக்கு எதிராக போராடினீர்கள் என்றால் அதை வெளியே வைத்துக் கொள்ளுங்கள். நீதிமன்றத்திற்குள் அதை எடுத்து வராதீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால், சென்னையில் சர்வக்ஞர் சிலை திறக்கக் கூடாது என்று தமிழக நீதிமன்றத்தில் சென்று வழக்கு தொடர்ந்து கொள்ளுங்கள்.

மாநகராட்சி தேர்தலை முன்வைத்து சிலை திறக்க அரசு முயற்சிப்பதாக கூறுகிறீர்கள். திருவள்ளுவர் ஒரு அரசியல்வாதி அல்ல.

திருவள்ளுவர், சர்வக்ஞர் ஆகியோர் நாட்டின் கலாசார வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள பெரும் புலவர்கள். இதன் மூலம் மதம், மொழி ஆகியவற்றின் பெயரால் நாட்டைப் பிரித்துப் பார்க்க முயற்சி செய்துள்ளீர்கள். இது தவறு. தவறான வழக்கை தாக்கல் செய்துள்ள உங்கள் மீது அபராதம் விதிக்க முடியும். ஆனால் மனுதாரர்களுக்கு, நீதிமன்றம் எச்சரிக்கை மட்டும் விடுக்கிறது.

9-ந் தேதி நடை பெறும் சிலை திறப்பு விழா முழு வெற்றி பெறட்டும். இதன் மூலம் சாதி, மதம், இனம், மொழிபேதம் இல்லாத சமுதாயத்தை படைப்போம்.

----

நீதிபதி ஐயா, சபாஷ்!

நன்றி : தினத்தந்தி, தினமணி, தமிழ்செய்தி

ஜெய் ஹோ - ஆஸ்கருக்கு தகுதியானதா?

ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி எங்கு எதை கேட்டாலும், பார்த்தாலும் நின்று கவனித்துவிட்டே செல்வேன். பேச்சை விட செயலுக்கு அதிகம் கவனம் கொடுக்கும் பிரபலங்களுள் ஒருவர் என்பதால் அவர் துறை சார்ந்து மட்டுமில்லாமல் ஒரு மனிதனாகவும் என்னை கவர்ந்தவர்.



கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள “ஜெய் ஹோ ஏ.ஆர்.ரஹ்மான்” புத்தகத்திற்கு அறிமுகம் கொடுக்கும்விதமாக, ஆஹா எப்.எம்.மில் ஒலிப்பரப்பு செய்யப்பட்ட, பத்திரிக்கையாளர் & எழுத்தாளர் தீனதயாளன் - நூலாசிரியர் சொக்கன் இடையே நடந்த, ஏ.ஆர்.ரஹ்மான் சம்பந்தமான ஒரு மணி நேர உரையாடலை கேட்டேன். பிடித்திருந்தது. பகிர்ந்து கொள்கிறேன்.

---

ரஹ்மான் பற்றி பேசும்போது இளையராஜாவை தவிர்க்க முடியாதா? தெரியவில்லை. ரஹ்மான் அடைந்த இந்த உயரத்தை, இளையராஜாவால் ஏன் அடைய முடியவில்லை என்ற கேள்விக்கு, இளையராஜா தென்னிந்திய மாநிலங்கள், பிறகு குறிப்பிடும் அளவு ஹிந்தி படங்கள் போன்றவற்றிலே திருப்தி அடைந்து விட்டார் என்றும், பெரிய அளவில் தமிழை தாண்டி செல்லவேண்டும் என்று முயற்சி எடுக்காததே காரணம் என்றும் தனக்கு தோன்றுவதாக சொக்கன் குறிப்பிட்டார்.

யாருக்குமே முன்னோர்கள் படைத்த படைப்புகளின் பாதிப்பு இருக்கும். ஆனால், ரஹ்மானால் எப்படி இளையராஜாவின் இசையை தான் கேட்பதில்லை என்று தடாலடியாக பேட்டி கொடுக்கமுடிந்தது? என்ற கேள்விக்கு, இளையராஜா திரையுலகை அரசாண்ட காலத்தில், அவரை போலவே இசையமைத்த இசையமைப்பாளர்கள் ஏராளம். ஆனால், ரஹ்மான தனக்கான இசை என்ற துடிப்பிலே ஆரம்பம் முதலே இருந்தார். அதற்காக முன்னோர்களை முற்றிலும் நிராகரிக்காமல், தெலுங்கு இசைமைப்பாளர் ராஜ்கோட்டியின் துள்ளல் பாணி இசையை தனது தனித்துவமான ஒலியமைப்பில் கையாண்டுள்ளதாக ரஹ்மானே கூறியுள்ளதாக சொக்கன் பதிலளித்தார். அதேப்போல், பதே அலிகான் பாதிப்பையும் ரஹ்மான் இசையில் காணலாம் என்றார்.

---

ரஹ்மான் ரொம்ப சுலபமாக ஹிந்திக்கு சென்றுவிடவில்லை. அவருக்கு எதிராக ஒரு பெரிய லாபியே அங்கு வேலை செய்து கொண்டிருந்தது. ரோஜா இசை - ஒரு அதிர்ஷ்ட வெற்றியே என்ற பிரச்சாரம் ஹிந்தி தயாரிப்பாளர்களிடம் பிரமாதமாக செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனாலும், ரங்கீலா மூலம் ரஹ்மான் ஹிந்திக்கு நுழைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ராம் கோபால் வர்மா. ரஹ்மானுக்காக, பிடிவாதமாக இருந்து, தயாரிப்பாளர் தன் மேல் வைத்த நிபந்தனையை ரஹ்மானுக்காக ஏற்றுக்கொண்டு, ரங்கீலாவை இயக்கினார் ராம் கோபால் வர்மா.

படத்திற்கு இசையமைப்பதோடு நின்று விடாமல், தன் இசை படமாக்கப்படுவதையும் கவனிக்கிறார். சரியாக படமாக்கப்படாத படங்களின் இயக்குனர்களிடம் திரும்ப பணியாற்றுவதில்லை. அதாவது, தான் கஷ்டப்பட்டு அமைத்த தனது இசை சிறப்பாக ரசிகனை வந்தடைவதிலும் கவனம் கொள்கிறார் ரஹ்மான்.

இசையமைக்கும் போது இது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமல், பாடகர்களுக்கு சுதந்திரம் கொடுத்து, அவர்கள் கொடுக்கும் மாற்றங்கள் அழகாக இருக்கும்பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்கிறார். திருப்தி இல்லாவிட்டால், இன்னமும் தேடல் தொடர்கிறது. அதனால், பாடகர்களே பாடலை சிடியில் கேட்கும்போது புதியதாக உணர்கிறார்கள். ஆனால், சமயங்களில் இதனால் ஒரே பாடலை பலரை பாட வைத்து, எந்த பாடகரின் பெயர் சிடியில் வருகிறதென்று, பாடகருக்கே இசை வெளியிடும் நாளன்று தான் தெரிகிறதாம்.

ரஹ்மான் இசையில் பாடல்வரிகள் அமுக்கப்படுவதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டை பற்றிய கேள்விக்கு, வைரமுத்து பெற்ற நான்கு தேசிய விருதுகளும் ரஹ்மான் இசையமைத்த பாடல்களுக்கே என்ற செய்தியை சொக்கன் பதிலாக கூறினார்.

---

ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்கு இசையமைக்க எடுத்துக்கொண்ட கால அவகாசம், பொதுவாக அவர் எடுத்துக்கொள்ளும் நேரத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. இதுவரை செய்யாத சாதனையை இசையில் செய்தார் என்றும் சொல்லமுடியாது. படத்திற்கு இசையமைத்ததோடு மறந்துவிட்டார். இருந்துமானால், இதுவரை அவருக்கு கிடைத்த அங்கீகாரங்களில் பெரியதான ஆஸ்கர், இதற்கு அவருக்கு கிடைத்தது. இந்த அங்கீகாரத்தை இந்த ஒரு படத்துடன், பட இசையுடன் வைத்து பார்க்காமல், ரஹ்மானின் இத்தனை ஆண்டுகால தனித்துவமான உழைப்பை வைத்து பார்த்தோமானால், ஆஸ்கர் அவர் தகுதிக்கு சிறியது தான்.

---

இந்த கலந்துரையாடலை இங்கு கேட்கலாம். நன்றி - பத்ரி சேஷாத்ரி.



ரஹ்மான் ஆரம்பக்காலத்தில் தூர்தர்ஷனுக்கு கொடுத்த பேட்டியை, மேலேயுள்ள படத்தை க்ளிக்கி காணலாம். ரஹ்மானின் ஆஸ்தான சவுண்ட் இன்ஜினியர், மறைந்த ஸ்ரீதர் அவர்களின் பேட்டியும் அதில் உள்ளது.

.

Monday, August 10, 2009

பெங்களூரை கலக்கிய வள்ளுவர்

"நமக்கு துன்பம் தருபவனுக்கும், நாம் நன்மையே செய்யவேண்டும்"

தேசபிதா காந்தியடிகளுக்கு, இதை கற்றுகொடுத்தது ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள். அவரது எழுத்துக்கள் மூலமாகத்தான், தனது காந்திய கொள்கைக்கு வடிவம் கொடுத்தார். அவரது எழுத்துக்களால் கவரப்பட்டு, காந்தி அவருடன் கடிதங்கள் மூலமாக தொடர்பு வைத்திருந்தார்.

ஒருமுறை காந்தி அவரிடம், தங்கள் எழுத்துக்களுக்கு எது முன்மாதிரி, மூலம் என்று கேட்டதற்கு, உங்கள் நாட்டை சேர்ந்த, தமிழ் மொழியில் எழுதப்பட்ட திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ என்ற பதில் காந்தியை ஆச்சர்யமடைய வைத்தது.



பிறகு, காந்தி திருக்குறள் படிப்பதற்காகவே, தமிழ் கற்றார். அடுத்த ஜென்மத்தில் தான் பிறந்தால், தமிழனாக, தமிழ்நாட்டில் பிறக்கவே ஆசைப்படுகிறேன் என்றார்.

---

ஒருவழியாக பல வேண்டுக்கோளுக்கு பிறகு, கெஞ்சல்களுக்கு பிறகு, பெங்களூரை காண திருவள்ளுவருக்கு வழி செய்துவிட்டார்கள். இனி, தினமும் வள்ளுவர் தன் முன்னால் இருக்கும் அல்சூர் ஏரிக்கரையை பார்த்துக்கொண்டிருக்கலாம். ட்ராபிக் ஜாம், பிழைப்புக்காக மாநிலம் தாண்டி வந்தவர்கள், தான் எழுதியது எதையும் கண்டுக்கொள்ளாமல் ஓடி கொண்டிருக்கும், ஓட்டிக் கொண்டிருக்கும் மக்கள் யாவரையும் காணலாம்.



வெண்கலச்சிலையில், நல்லா ஸ்ட்ராங்காகவே இருக்கிறார், வள்ளுவர்.

---

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து கடைக்கோடி கன்னியாக்குமரி வரை வள்ளுவருக்கான நினைவு சின்னங்களை பிரமாண்டமாக கவனம் பெறும்வகையில் அமைத்து, அவருக்கு புகழ் சேர்ப்பதில் முண்ணனியில் இருப்பவர் கலைஞர்.

சிலரின் மடத்தனமான எண்ணங்களால், பெங்களூரில் இழுபறியாகிக் கொண்டிருந்த திருவள்ளுவர் சிலை திறப்பிற்கும் முழு முயற்சி எடுத்தவர் கலைஞர். மருத்துவ பரிசோதனைக்காக சென்னை வந்த மாற்றுக்கூட்டணி, மாற்றுக்கட்சி கர்நாடக முதல்வரை விரோதம் பாராட்டாமல், தான் சந்திக்க விரும்புவதாக தகவல் அனுப்பி, தன் வீட்டிற்கு வரவழைத்து, சிலை திறக்க வேண்டுக்கோள் விடுத்து, சர்வக்ஞர் சிலை திறக்க தாங்கள் எப்போதும் தயார் என்று அறிவித்து, விழா ஏற்பாட்டிற்கு பணம் செலவழித்து, ஒருவாரம் முன்பே பெங்களூர் வந்து, சிலை திறந்து, விழாவை சிறப்பித்து சென்றிருக்கிறார் தமிழக முதல்வர் கலைஞர்.

இதற்கு எந்தவிதமான காரணங்கள் கூறினாலும், தமிழக மக்களின் நன்றிக்குரியவர் கலைஞர். தனது பேச்சால், ஒரு சுமூக சூழலுக்கு தொடக்கப்புள்ளி வைத்து சென்றிருக்கும் கலைஞருக்கு கோடானு கோடி நன்றிகள்.

ஜாக்கிசான் வந்த விழாவில்கூட அவரை பற்றிய புள்ளிவிவரங்களை அடுக்கிய முதல்வர், இங்கு சர்வக்ஞரை பற்றி சொல்லாமல் விடுவாரா? அவரை பற்றிய விவரங்களையும், அவருடைய படைப்புகள் பற்றியும், அதற்கு விளக்கங்களும் கொடுத்தார்.

விழாவில் எடியூரப்பாவை வழக்கம்போல் தம்பி என்றழைத்தார். நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். எடியூரப்பாவிற்கு புதிதல்லவா? கண் கலங்கிவிட்டார். கலக்குறீயே தலைவா!

---

இன்னொரு மாநில முதல்வர் கலந்துக்கொள்ளும் விழா என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்திருந்தார்கள். பிரச்சினை செய்பவர்கள் என்று கருதப்பட்டவர்களும், அவர்களது அடிப்பொடிகளையும் ஒருநாள் முன்பே தூக்கி உள்ளே வைத்துவிட்டார்கள். மீறி ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.



பொதுவாக நகரமெங்குமே காக்கிச்சட்டைகளை காணமுடிந்தது. களத்தில் 3000 போலீசார்கள் இருந்தார்களாம்.

ஆட்டோ, தனியார் நிறுவன பஸ், கேப் உள்ளிட்ட வாகனங்களுக்கும், கண்ணாடி கட்டிடங்களுக்கும் பாதுக்காப்பாக, பெங்களூரில் வழக்கமாக கட்டப்படும், சிகப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டு இருந்தது.



விழா நடந்த நகரின் மையப்பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கும் கலைஞர் முகத்துடன் கூடிய ப்ளெக்ஸ் போர்டுகள். தமிழில் வாழ்த்துக்கள், நன்றிகளுடன் உள்ளூர் மார்க்கெட்டிங் அரசியல்வாதிகள். கூடவே தமிழர்களின் தனித்தன்மையுடன் கூடிய, கைக்கூப்பிய நிலையில் இருக்கும் நடிகர்களின் படங்கள். எம்.ஜி.ஆரில் இருந்து தனுஷ் வரை. ரெட் அஜித் ரசிகர் மன்றம், சுள்ளான் தனுஷ் ரசிகர் பேரவை என்று கட்-அவுட்கள் வைக்காததுதான் பாக்கி.



சிலை தான் என்றாலும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு திறந்தது என்பதால், சிலையை கணிசமான தூரத்தில் இருந்து மொய்த்து கொண்டிருந்த மக்கள் முகத்தில் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. தமிழ்நாட்டில் இருந்து சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு இன்னொரு ஸ்பாட். நடைப்பாதையில், திடீர் புத்தக்கடை, திருக்குறள் சிடிக்கடைகள் உருவாகியிருந்தது.



இனி வரும் நாட்கள் எப்படி என்று தெரியவில்லை. பூக்கள் அலங்காரம், வண்ண ஒளி விளக்குகள், போலீஸ் பந்தோபஸ்து, மகிழ்ச்சியுடன் உணர்வுவயப்பட்ட நிலையில் சுற்றி வலம் வந்த மக்கள் என்று வள்ளுவருக்கு முதல் நாள் இனிமையாகவே முடிந்தது.



படங்களை பெரிதாக்கி காண, படத்தின் மேல் க்ளிக்கவும்.

.

Sunday, August 9, 2009

அச்சமுண்டு அச்சமுண்டு

இது வழக்கமான தமிழ் சினிமா இல்லை. கதாநாயக வழிபாடு கிடையாது. பஞ்ச் வசனங்கள் கிடையாது. குத்து பாட்டு கிடையாது. இரட்டை அர்த்த வசனம் கிடையாது. ஆபாச பாடல்கள் கிடையாது. வெட்டுக்குத்து கிடையாது. அட போப்பா! ஒண்ணும் கிடையாது. ஒரு திருப்பமும் இல்லாமல், ப்ளேனாக இருக்குது.

ரெட் ஒன் கேமராவில் எடுத்த முதல் இந்திய சினிமா என்று சொல்லிவிட்டு டாக்குமெண்டரி போடுகிறார்கள். முடிவில் டாக்குமெண்டரியே தான் என்று முடிவு செய்து அனுப்புகிறார்கள். என்ன, பிரசன்னா, சினேகாவை வைத்து கொஞ்சம் காஸ்ட்லியாக எடுத்திருக்கிறார்கள். இதில் டிவி சீரியலை வேறு நக்கல் செய்து டயலாக்.

சொல்லி இருப்பது சொல்ல வேண்டிய விஷயம் தான். உலகமெங்கும் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியது. ஆனால், ஒரு சினிமாவாக ரொம்ப ஸ்லோ. முடியும் வரை, ’படத்தை’ போட சொல்லி தியேட்டரில் ஒரே கூச்சல். எனக்கு தியேட்டரில் இருந்தவர்கள் கொடுத்த கமெண்ட்ஸ்தான் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. (’தக்காளி ரசம் வைச்சுடு. வந்துடுறேன்’ - ரசத்துக்கே இப்படியா?)

அமெரிக்காவை படம் முழுக்க காட்டி, அங்கே ஒரு வெள்ளைக்கார வில்லனைக் காட்டி, முடிவில் இந்தியாவில் தான் பாலியல் குற்றங்கள் அதிகம் என்கிறார்கள். அப்புறம் எதற்கு அமெரிக்கா?

படத்தில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத ஒரே ஹீரோ - இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. பிண்ணனி இசை சூப்பர். படத்திற்கு வெயிட் கொடுப்பது இசைதான். சௌம்யா பாடிய ”கண்ணில் தாகம்” நன்றாக இருந்தது. படம் பார்க்க போனதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது. ஹிந்திக்காரன், தமிழை மென்னு துப்புனா, போட்டு பந்தாடுறாங்க. அம்மணி, ‘சொல்லி’யை ‘ஷொல்லி’ன்னு சொல்லுவது தப்பில்லையா?

ஒளிப்பதிவும் நன்றாக இருந்தது. ஏதோ ஒரு அமெரிக்கர். செம துல்லியம். இதுதான் ரெட் ஒன் கேமராவின் ஸ்பெஷலா? சில இடங்களில் ஷார்ப்னெஸ் குறைந்து குறைந்து மாறியது போல் இருந்தது.

படத்தில் நான்கே... இல்லை மூன்றரை பேர்கள். அதில் வில்லனாக வந்த அமெரிக்கர் நல்லா நடித்திருந்தார். இந்தியர்களின் அமெரிக்க வாழ்வை காட்டியது, கொஞ்சம் பார்க்க வைத்தது. அதையும் எவ்வளவு நேரம்தான் பார்க்க முடியும்? ஒன்றிரண்டு சீனில் காட்ட வேண்டியதை, படமாக எடுத்து சிரமப்பட்டது போல் உள்ளது. இதற்கும் படம் இரண்டு மணி நேரம் தான் இருக்கும். அதிலும், ஒரே மாதிரியான காட்சிகள், இரண்டு முறை வந்தது போன்ற காட்சியமைப்புகள்.

விழிப்புணர்வு தேவைப்படும் விஷயத்தை சொல்ல வந்ததற்கு பாராட்டலாம். ஆனால், அதற்கான காரணமும் சொல்லாமல், தீர்வும் சொல்லாமல் விட்டகுறை தொட்டகுறையாக வந்திருக்கிறது.

அச்சமுண்டு அச்சமுண்டு - இந்த மாதிரி படத்திற்கு என்னை யாராவது கூப்பிட்டால்...

.

Friday, August 7, 2009

திருவள்ளுவர் சிலை - எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்குது?

இன்று பெங்களூர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்திருந்த கர்நாடக அரசு விளம்பரம்.



அப்பப்பா! ஒரு சிலை வைக்க எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்குது...

நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா

.

நாட்டு சரக்கு - பெயர் மாற்றும் அழகிரி

பெயரை மாற்றுகிறார் அழகிரி. பயப்பட வேண்டாம். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும் அவர் பெயரை, டெல்லியில் அமைச்சர்கள் உள்ளிட்ட மற்றவர்கள் அஸகிரி என்று வாசிக்கிறார்களாம். பாருங்க கொடுமைய! தமிழின் பெருமையாம் ழகரம், அழகிரிக்கு கொடுக்கும் சிரமத்தை. அதனால், azhagiri, இனி ஆங்கிலத்தில் alagiri என்றழைக்கப்படுவாராம். இதே கொடுமையை, இவ்ளோ நாள் அனுபவிச்சிட்டு இருந்த மற்றொருவர் - கனிமொஸி... சே... கனிமொழி.

இதுக்கு, ’பதவிக்காக தமிழை சமரசம் செய்து கொண்ட அழகிரி’ன்னு யாராச்சும் கிளம்புவாங்களே?

ழி’க்கு ஆங்கிலத்தில் zhi என்பதற்கு ஏதேனும் காரணம் உண்டா? இப்படி உருவாக்கியவர் யார்?

---

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஊத்தங்கரை பக்கமுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன், சேலத்தில் இருந்து வந்த அரசாங்க பேருந்தினால் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். ஒரே மகன். பல மாதமாகியும், வெங்கடேசனுக்கு எந்த நஷ்ட ஈடும் கிடைக்கவில்லை.

இதற்காக தொடர்ந்த வழக்கில், இரு ஆண்டுகளுக்கு முன்பு, நீதிமன்றம் வெங்கடேசனுக்கு பணம் வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. கழகமோ, இன்னமும் வழங்கவில்லை. பார்த்தார் நீதிபதி. வெங்கடேசனிடம் பஸ் ஸ்டாண்ட் போயி, ஒரு பஸ்ஸை எடுத்து செல்லுமாறு கூறிவிட்டார்.

இப்ப, அந்த கவர்மெண்ட் பஸ் வெங்கடேசன் வீட்டு முன்னாடி நிக்குதாம். யாரும் தூக்கிட்டு போயிட கூடாதுன்னு, அது பக்கத்திலேயே சமைச்சு, சாப்பிட்டு அதுலேயே தூங்குறாராம்.

போக்குவரத்து கழகம் மேலயும், நம்மூர் மேலயும் தான் எவ்ளோ நம்பிக்கை?

---


இப்ப சாதாரணமாக காய்ச்சல் வந்தாலோ, இல்ல ஜலதோஷம் வந்தாலோ, பன்றி காய்ச்சலா இருக்குமோன்னு பயப்பட ஆரம்பிச்சிட்டுட்டாங்க. கொஞ்ச நாள் முன்னாடி வரை, 'இது வெளிநாட்டுல தான் இருக்குது' அப்படின்னு வெளிநாடு போறவங்களும், ஏர்போர்ட் போறவங்களும் தான் எச்சரிக்கையா இருந்தாங்க. வித்தியாசமான நோயா இருந்தது. சுகாதாரம் இல்லாத இடங்களுக்கு போனா, மத்த வியாதிகள் வரும். இது கார்ப்பரேட் ஆபிஸ் போனாத்தான் வரும்ங்கற நிலை. இப்ப, நிலை மாறிவிட்டது. நீக்கமற பரவிவிட்டது. யாரோட மெத்தனமோ?

ஆனா, இனியும் பல இடங்களில் மெத்தனமாத்தான் இருக்காங்க. ’ஸ்வென் ப்ளூவா இருக்குமோ? டெஸ்ட் பண்ணுங்க, டாக்டர்?’ன்னு கேட்டா, போயிட்டு நாளைக்கு வாங்கன்னு சொல்றாங்களாம். இந்த நோயினால் இறந்த குழந்தை ரிதாவின் பெற்றோரும், குழந்தையை பரிசோதித்த டாக்டரின் மெத்தனத்தைத்தான் கைக்காட்டுகிறார்கள்.

அதனால, காய்ச்சல், தொண்டை வலி, இருமல், மூக்கு ஒழுகுறது, உடம்பு வலி, தலைவலி, சோர்வு - இதெல்லாம் இருந்தா உஷாரு.

----

பொழுது போகாமல் பாட்டு கேட்க கம்ப்யூட்டர் ஆன் செய்தேன். கேட்பதற்கு பாடல்களை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தபோது, ஆங்கில எழுத்து வரிசை ஒழுங்கில் தமிழ் படப்பெயர்களை கவனித்தேன். வேடிக்கையாக இருந்தது. பொழுதுபோக்கலாம்ன்னு பாட்டு கேட்க வந்தா, பாட்டு கேட்காமலே பொழுது போச்சு!

அச்சமில்லை அச்சமில்லை - அச்சமுண்டு அச்சமுண்டு
அழகன் - அழகி
சின்ன கவுண்டர் - சின்ன ஜமீன் (சின்ன நாட்டாமை?)
பெரியார் - பெருமாள் (ஆங்கில வரிசைப்படி ரெண்டும் பக்கத்துல)
மிஸ்டர் பாரத் - மிஸ்டர் ரோமியோ (இன்னொரு மிஸ்டர் இருக்கே? கார்த்திக் நடிச்சது...)
ராஜ பார்வை - ராஜாவின் பார்வையிலே
ரெண்டு - ரெண்டு பேர்
ரோஜா - ரோஜாக்கூட்டம்
எங்க ஊரு பாட்டுக்காரன் - எங்க ஊரு காவல்காரன் (இதுல ’எங்க ஊரு’ ’காரன்’, இதெல்லாம் ராமராஜனோட ட்ரெட்மார்க் டைட்டில் பாகங்கள்)
நான் அடிமை இல்லை - நான் அவன் இல்லை (ஹா ஹா ஹா)

இன்னும் சில பெயர்களை பார்த்தால் காமெடியா இருந்தது. சண்டைக்கோழி, குருவி, சேவல்... இனி காக்கா, வாத்து, காடை, கௌதாரி எல்லாம் வருமோ? அப்புறம் இதுல காடை, கௌதாரியை எல்லாம் சாப்பாட்டு டேபிள்ல மட்டும் தான் பார்த்திருக்கேன்.

---

ரொம்ப நாளா பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்குற நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது,

“ஒரு பொண்ணும் சரியா அமைய மாட்டேங்குது”

”நீ நிறைய கண்டிசன்ஸ் போட்டு இருப்ப?”

“நிறைய இல்லை. ஒண்ணே ஒண்ணுத்தான்.”

“என்ன?”

“பார்க்குறது பொண்ணா இருக்கணும். அவ்ளோத்தான்”

---

கோர்ட் கொடுக்கும் தீர்ப்புக்கள் வர வர சுவாரஸ்யமாகவும், ஓவராகவும் இருப்பதாக ’மக்கள்’ பேசிக்கிறாங்க (நீதிமன்ற தீர்ப்புக்கு கருத்து சொல்ல கூடாதாம்ல!).

ஆண் ஆணை திருமணம் செய்து கொள்ளலாம். பெண் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். அப்புறம், திருமணமான பிறகு தாலி அவசியம் இல்லை. கழட்டி ஆணியில் மாட்டி கொள்ளலாம். சேர்ந்து பல ஆண்டுகள் வாழ்ந்தாலே, திருமணமானதாக கருதி கொள்ளலாம். மருமகளை மாமியார் எட்டி உதைப்பது கொடுமை இல்லை. இப்படி ஒரே பரபரப்பு தீர்ப்புகள்.

நீதிமன்றங்கள் ‘பார்ம்’ல இருப்பதாக தோன்றுகிறது.


.

Wednesday, August 5, 2009

தமிழனைப் புரிந்து கொண்ட கோனிகா

இப்பொழுதெல்லாம் எல்லா போட்டோ ப்ரிண்ட் செய்யும் லேப்களும், அவர்களுக்கென இணையதளம் ஆரம்பித்து விட்டன. வீட்டிலிருந்து டிஜிட்டல் வடிவ புகைப்படங்களை, அவர்கள் தளத்தில் ஏற்றினால், ப்ரிண்ட் செய்யப்பட்ட புகைப்படங்கள் வீடு வந்து சேரும்.

ஜப்பான் நிறுவனமான கோனிகாவும், இது போன்ற லேப்களை உலகமெங்கும் வைத்துள்ளார்கள். சென்னையிலும் நிறைய இடங்களில்.

அவர்கள் உக்கார்ந்து யோசித்திருப்பார்கள் போல! தமிழ் மக்களை எப்படி கவர்ந்திழுப்பது என்று. முடிவில் அவர்கள் செய்த முடிவு - ஓசிக்கு போட்டோ ப்ரிண்ட் போட்டு இழுப்போம்ன்னு.

இந்த தளத்திற்கு சென்று ரெஜிஸ்டர் செஞ்சா, இருபத்தி அஞ்சு போட்டோஸ் ப்ரீ ப்ரிண்டிங். தளத்தை பார்த்தால், சென்னைக்கான ஸ்பெஷல் ஆபர் போல் தெரிகிறது.

நானும் தமிழன். என் கடமையை நிறைவேத்திட்டேன். போட்டோஸும் உடனே வந்திடுச்சி. நீங்களும்...

.

இன்ஜினியரும் மேனேஜரும்

அது ஒரு நேஷனல் ஹைவேயை இணைக்கும் சிறு சாலை. சாலை, பக்கமிருந்த விளை நிலங்களிலிருந்து சற்றே உயரத்தில் இருந்தது. சாலையை விட்டு இறங்கி ஒருவன், எதையோ நிலத்தில் சில கருவிகளால் அளந்து கொண்டிருந்தான். அப்போது சாலையில் வேகமாக வந்த ஒரு கார் வழுக்கிக் கொண்டு நின்றது.

இவன் திரும்பி பார்க்க, கண்ணாடியை இறக்கிவிட்டவாறே ஒரு பெண்.

“ஹலோ! ஒரு ஹெல்ப். என் ப்ரண்ட பார்க்க அவசரமா போறேன். இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன்னு வாக்குறுதி கொடுத்திருக்கேன். இப்ப எங்க இருக்கேன்னு தெரியலை. கொஞ்சம் உதவ முடியுமா?”

செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு, காரை நோக்கி பேசிக்கொண்டே வந்தான்.

“இப்ப நீங்க நான் இருக்குற இடத்தில இருந்து பத்து அடி உயரத்துல இருக்கீங்க. கடல்மட்டத்துல இருந்து, 3000 அடி உயரத்துல. சென்னைக்கும் பெங்களூர்க்கும் இடையே 120 கிலோமீட்டர் தூரத்துல 41 டிகிரி ஆங்கிள்ல இருக்கீங்க.”

யோசித்த பார்வையுடன், ஸ்டிரியங் பக்கம் திரும்பினாள். மெல்லியதாய் தனக்குள் சிரித்து கொண்டாள். திரும்பி அவனிடம்,

“நீங்க ஒரு இன்ஜினியராத்தான் இருக்கணும்.”

நடந்து வந்து கொண்டிருந்தவன் நின்றான்.

“ஆமாம். எப்படி சொல்றீங்க?”

“நீங்க சொன்னது எல்லாம் டெக்னிக்கலா கரெக்ட். இருந்தும் அதுல எனக்கு தேவையான தகவல் எதுவும் இல்லை. ஸோ, இன்னமும் நான் தொலைந்த நிலையில் தான் இருக்கிறேன். உண்மையிலே, நீங்க சொன்னது எதுவும் எனக்கு உபயோகமா இல்லை. என் பயண நேரத்தை இன்னும் சிறிது வீணாக்கியது மட்டும் தான் உங்களால் முடிந்தது.”

நின்றவன் திரும்பி, தான் நடந்து வந்த தூரத்தையும், தூரத்தில் இருந்த தன் கருவிகளையும் பார்த்தான். அவளிடம் திரும்பி,

“நீங்க மேனேஜரா?”

“ம். எப்படி சொன்னீங்க?”

வலது கரத்தை தன் வயிற்றுக்கு குறுக்கே வைத்து, இடது கையால தன் கன்னத்தை தட்டியவாறே,

“ம்ம்ம்... உங்களுக்கு நீங்க எங்க இருக்கீங்கன்னும் தெரியலை. எங்க போறீங்கன்னும் தெரியலை. இப்ப இந்த கார்ல இந்த உயரமான ரோட்ல இருக்கீங்க. ஒரு வாக்குறுதி வேற கொடுத்திருக்கீங்க. ஆனா, அதை எப்படி காப்பாத்த போறீங்கன்னும் தெரியாம கொடுத்திருக்கீங்க. இந்த லட்சணத்துல, உங்களுக்கு கீழே இருக்குறவன், உங்க பிரச்சினையை எல்லாம் தீர்க்கணும்ன்னு ஒரு எதிர்ப்பார்ப்பு. பின்ன, நீங்க மேனேஜராத்தான் இருக்கணும்.”


.

Tuesday, August 4, 2009

ஏதோ மோகம்... ஏதோ தாகம்...

மகேந்திரனிடமிருந்து...

இது இவ்வளவு கஷ்டமாகவா இருக்கும்? அனுபவிப்பவர்கள் எல்லாம் மிகுந்த சந்தோஷத்துடன் வளைய வருகிறார்களே.. எனக்கு மட்டும் ஏன் இத்தனை சிரமமாயிருக்கிறது? யாரிடம் சொல்வது? எப்படி சொல்வது? சொன்னால் என்ன சொல்வார்கள்? அவனுக்கும் இப்படிதான் இருக்குமா? எப்படி அறிவது? முன்பெல்லாம் நான் இப்படியில்லையே... எங்கிருந்து வந்தது இது?

இத்தனை கேள்விகளையும் இரண்டே வரிகளில் வெளிப்படுத்தமுடியுமா? முடிந்திருக்கிறதே...

"நேத்துவர நெனைக்கலியே... ஆசவித மொளைக்கலியே..." என்று அவள் பாடும்போது எனக்கும் கூட காதலித்தால் என்ன என்று தோன்றும்.

காமம் வந்தால் அது காதலில்லை என்பதெல்லாம் அப்பட்டமான பொய். அதை நிஜப்படுத்த வேண்டுமென்றால் காலம் முழுதும் என் வீட்டு பூனையையும், நாய்குட்டியையும் தான் நான் காதலிக்க வேண்டியதாயிருக்கும். முதல் காதல் தோன்றும் போதே அதன் பின்னால் காமம் ஒளிந்து நின்று என்னை கண்டுபிடி என்று கெக்கலிக்கும். இருவருமே கண்ணைக்கட்டி கொண்டு ஆடும்போது யார் யாரை கண்டுபிடிப்பது? தகுந்த நேரம் வரும்போது அதுவாகவே தன்னை வெளிக்காட்டிகொள்ளும்...

அப்படியான வெளிப்பாடு தான் இந்த பாடல்..

1982 ல் வெளியான "கோழி கூவுது" படத்திலிடம் பெற்ற ஒரு அற்புதமான ராஜாவின் பாடல். "ஏதோ மோகம்... ஏதோ தாகம்..."

பாடலின் துவக்கத்தில் வயலின், குழலோசைகளுக்கு பின் வரும் நீரின் ஓசை கேட்கும் போதெல்லாம் ததும்பி வழியும் மோகத்தின் ஓசை போலவே இருக்கும். ஜானகியின் அதி அற்புதக்குரலுக்கு ஈடு கொடுத்திருப்பவர் கிருஷ்ணசந்தர் என்றொரு மலையாள தேசத்தவர். ஒய்.ஜி.மகேந்திரனுடன் பல படங்களில் இணையாக நடித்த வனிதா (இப்போது தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்து வருகிறார்) என்பவரின் கணவர்.

மல்டி ட்ராக் என்றொரு முறை அறிமுகத்துக்கு வந்தபோது, ராஜாவின் புதுமுயற்சி ஒன்று எதிர்பார்க்கவியலாத முறையில் இப்பாடலில் கையாளப்பட்டது. பாடல் துவக்கம் முதல் ஜானகியின் குரலைத்தொடர்ந்து வரும் சேர்ந்திசைக்குரல்கள் அனைத்துமே ஜானகியே பாடியிருப்பார். அதாவது பாடலில் ஒலிக்கும் பெண்குரல்கள் எல்லாமே ஜானகியினுடையது. நம்ப முடியவில்லை அல்லவா? அடுத்தமுறை கவனித்துப்பாருங்கள்.

பாடலின் மிகப்பெரிய பலம் வைரமுத்து. பொங்கி பிரவாகமாக வெளிப்படும் மோகத்தை விளக்க இதைவிட தெளிவாய் இன்னொரு பாடல் எழுத முடியுமா? மோகத்தின் வண்ணம் சிகப்பென்றும், தகிக்கும் வெப்பமுடையதென்றும் சொல்பவர்கள் இந்தப்பாடலில் தோற்றுப்போவீர்கள். நடுங்கவைக்கும் குளிர்ச்சியான மோகத்தின் நீலநிற மறுபக்கம் இந்த பாடல்.

பெண்ணின் உணர்வுகள் எப்போதுமே ரகசியமானவை, மாறாக ஓங்கி ஒலிப்பது ஆணினுடையது. அதை அப்படியே பிரதிபலிக்கும் பாடலின் சரணம். "தாழம்பூவு ஈரமாச்சு.. தலையில் சூடும் நேரமாச்சு.." என்று அவள் தன் வீட்டின் இருள் சூழ்ந்த மூலையில் பதுங்கும் போது, "பார்வையால நூறு பேச்சு.. வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு.." என்று அவன் வயல்வெளிகளில் பறையறிவித்துக்கொண்டே ஓடுவான்... இறுதியாக "போதும் போதும் காமதேவனே" என்று பணிவான்.



சுரேஷ் மற்றும் மறைந்த நடிகை விஜி இருவருக்கும் இது அறிமுகப்படம். ஊருக்கு தபால் காரராக வரும் சுரேஷ், கடிதம் கொடுப்பதைத்தவிர எல்லாம் செய்திருப்பார். பாடலின் உணர்வு சற்றும் கெடாதவகையில், புரியாதவருக்கு சற்றே விரசமாய் படமாக்கப்பட்டிருக்கும்.

துவக்கத்தில் ஈரநிலத்தில் வரிசையாய் விதை ஊன்றும் ஒரு கையை காண்பிக்கும்போதே நம் மனசுக்குள் அது முளைத்துவிடும். காதலின் தவிப்பு அலைக்கழிக்க, இயல்பாய் இருக்க வெகு பிரயத்தனப்படும் சுரேஷ், திருநீறு எல்லாம் அணிந்து காய்ச்சல் வந்தது போல் இருப்பார். விஜியோ பாவாடை தாவணியில் அபரிமிதமான அழகோடு கட்டிலில் குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பார். இன்னும் பார்த்தால் மட்டுமே புலப்படும் அழகான விஷயங்கள் பாடல் முழுக்க இருக்கும்.

எல்லா இடத்திலும் ஜானகி, "ஆசவித" என்பதை "ஆஸவித" என்று பாடியிருப்பது கொள்ளை அழகு. இரண்டு சரணங்களிலும் இறுதியில் "விடியச்சொல்லி கோழிகூவுதே.. இன்பவேளையில் நெஞ்சு தாவுதே" என்று பல்லவியோடு இணைந்து கொள்வது அக்மார்க் ராஜாவின் முத்திரை. இறுதிப்பல்லவி முடியுமிடத்தில் "வனக்கிளியே" என்பதை இருவரும் மாறி மாறி பாடி முடித்திருப்பார்கள். ராஜாவின் ரசிகர்களின் பட்டியலில் இந்தப்பாடல் கண்டிப்பாக தவிர்க்க முடியாத ஒன்று... கேட்டுப்பாருங்கள்...

ஏதோ மோகம்... ஏதோ தாகம்...
நேத்துவர நினைக்கலியே ஆசவித மொளைக்கலியே
சேதி என்ன... வனக்கிளியே...

தாழம்பூவு ஈரமாச்சு... தலையில் சூடும் நேரமாச்சு...
சூடுகண்டு ஈரமூச்சு... தோளைசுட்டு காயமாச்சு...
பார்வையால நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காமதேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே...

பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து...
தொட்டபாகம் தொட்டுப்பாத்து சாய்வதென்ன கண்கள் பூத்து...
அக்கம் பக்கம் சுத்திப்பாத்து தலைக்குமேல தண்ணி ஊத்து...
விடியச்சொல்லி கோழி கூவுதே,
இன்பவேளையில் நெஞ்சு தாவுதே...

ஏதோ மோகம்... ஏதோ தாகம்..
நேத்துவர நினைக்கலியே ஆசவித மொளைக்கலியே
சேதி என்ன... வனக்கிளியே...


-மகேந்திரன்

(பாடலைக் காண படத்தை க்ளிக்கவும்)

Monday, August 3, 2009

சாப்ட்வேர்காரர்களின் மொழி

ஸ்வீட்ஸ் கடையில்,

”அண்ணே, கொஞ்சம் அந்த முறுக்கை கொடுங்கண்ணே... டெஸ்ட் பண்ணிக்குறேன்.”

(வாங்குறதுக்கு முன்ன, டேஸ்ட் பார்க்கணும்மாம்)

---

ஆஸ்பிட்டலில்,

”என்னைக்கு டாக்டர், அவர ரிலீஸ் பண்றீங்க?”

(டிஸ்சார்ஜத்தான் அப்படி கேட்குறாரு)

---

புதுசா கல்யாணம் ஆனவன், போனில் சாப்ட்வேர் நண்பனிடம்,

”ஏண்டா கல்யாணத்துக்கு வரலை?”

”அன்னைக்கு டெலிவரி இருந்திச்சுடா...”

”உன் பொண்டாட்டிக்கா?”

!

---

ஆசிரமத்தில்,

”சாமி, வாழ்க்கையில எனக்கு ஒரே Issues... இதுக்கெல்லாம் என்ன Solution?”

(அவருக்கு வாழ்க்கையில பிரச்சினையாம்... அதுக்கு என்ன தீர்வுங்குறத இப்படி கேட்குறாரு)

---

”அவுங்க ஹனிமூனுக்கு ஆன் சைட் போறாங்க...”

(வெளிநாடு போறதுன்னாவே, ஆன்சைட் தான்)

---

குழந்தை சாப்ட்வேர் அப்பாவிடம்,

”அப்பா, Threadன்னா என்னப்பா?”

“அத ஏன்’ம்மா கேட்குற? சரி... இப்ப ஒரு சமயத்துல, ஒரு வேலையை...”

அம்மா உள்ளேயிருந்து, “Threadன்னா நூல்’டீ”

---

இன்னொரு குழந்தை அவுங்க சாப்ட்வேர் அப்பாவிடம்,

“டாடி, String’ன்னா என்ன டாடி?”

“String'ன்னா Text. வார்த்தைகள். வாக்கியங்கள்.”

“அப்புறம் எதுக்கு டாடி, புக்ல கயிறு மாதிரி படம் போட்டுருக்கு?”

---

டிவி ஷோரூமில் சேல்ஸ்மேனிடம்,

என்னோட requirement என்னன்னா,....

(டிவின்னு இல்ல, சிலரு டீக்கடையில போயும் requirement சொல்றாங்க)

---

மனைவி கணவனிடம்,

ஏங்க, வாசிங்மெஷின் பாதில நின்னுருச்சுங்க...

Restart பண்ணுடீ!

---

டேய், காலையில எங்க பெரியப்பா போன காரு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சி..

ஓ! அப்படியா? இப்ப status என்ன?

.