Wednesday, June 30, 2010

இடிந்த வீட்டிலிருந்து உயரத்திற்கு - வடிவேலு

தன்னம்பிக்கை, சுயமுன்னேற்ற கதைகளை சிவ் கெரோ, எம்.எஸ். உதயமூர்த்தியோ, சோம. வள்ளியப்பனோ சொன்னால்தான் கேட்பீர்களோ? வைகை புயல் சொல்றதையும் கேளுங்க.



---

ஷூட்டிங் முடிச்சுட்டு் பொள்ளாச்சியிலிருந்து கார்ல மதுரைக்குப் போயிக்கிருக்கேன். நடுச்சாமம். எங்கிட்டோ வழியில ஒரு ஊரு. ஒரே ஒரு பொட்டிகடையில் மினுக்மினுக்குண்டு அரிக்கேன் வெளக்கு ஆடிட்டிருக்கு. குடிக்கத் தண்ணி கேக்கலாம்னு எறங்குறேன்.

அந்த கடக்காரரு என்னயப் பாத்ததும் ‘யெய்யா வடிவேலு’ன்னு விசுக்குன்னு எந்திருச்சு ஓடி வர்றாரு. ‘ஏடி தங்கம்’னு உள்ள ஓடிப்போயி தூங்கிக்கிருக்க அவரு புள்ளைய எழுப்புறாரு. ‘வடிவேலு மாமா வந்துருக்கார்டி’னு அந்த ரெட்ட சட குட்டிப் பொண்ண எழுப்பிக் கூட்டி வர்றாரு. வீடே முழிச்சிருச்சு. தூக்கத்தையெல்லாம் மறந்து, அந்தப் புள்ள என்னையக் கண்டுட்டு ரோசாப்பூ கெணக்கா ‘கேகே’ன்னு சிரிக்குது. ‘எங்கடி, மாமா மாதிரி நடிச்சுக் காட்டு’ன்னு அவுக அம்மா கேக்கவும், ‘வந்துட்டான்யா வந்துட்டான்யா’னு கையக் கொட்டி நடிச்சுக் காட்டுது. ‘ப்ப்ப்ப்ப்பூம்...’ என்னைய மாதிரியே அழுது காட்டுது.

கடையிலயிருந்து ஒரு மேரி பிஸ்கெட் பாக்கெட்ட எடுத்து எங் கையில திணிக்கிறாரு. கார்ல வந்து ஏறி உக்காந்தா தூக்கங் காங்கலைண்ணே. என்னென்னமோ நெனப்புங்க வருது. காரணமே இல்லாம கண்ணுல தண்ணி முட்டுது. கண்ண மூடுனா கிர்ர்ர்ருனு சினிமா கெணக்கா என் வாழ்க்கையே எனக்குள்ள ஓடுது.

கண்ணாடி வெட்டுற தெனக்கூலி நடராஜ பிள்ளையோட மவன் மதுர வேலு. மங்குடிச ஒண்ணுதேன் சொத்து. மக்குப் பய படிச்சது அஞ்சாப்புதேன். கன்னங்கரேல்னு காத்தா கருப்பா ஒரு உருவம். எங்கிட்டுப் போனாலும் ‘அப்பிடி தள்ளி நில்லுப்பா’னு ஒடனே ஓரங்கட்டி வைக்கிறதுக்கான அத்தனைத் தகுதிகளோடயும் அலைஞ்சுக்கிருந்தவன்.

பசிச்சா பாதி வயித்துக்குச் சாப்பாடு, மீதி வயித்துக்கு பீடிப் பொகனு வாழ்ந்த பய. அப்பாரு தொழில அப்பிடியே பிக்கப் பண்ணி, காலேஜு போக வேண்டிய வயசுல கண்ணாடி வெட்டப் போனவன். ஆனா, அறியாத புரியாத வயசுலேயே வெள்ள வேட்டியத் தெரையாக் கட்டி, பிலிம் சுருள்ல நெழலு காட்டி படம் ஓட்டுன விஞ்ஞானிக்குப் பொறந்த விஞ்ஞானியும் அவந்தேன்.

தங்கம், சிந்தாமணி, செண்ட்ரலு, தங்க ரீகல்னு மதுர சினிமாக் கொட்டாயிங்கதான் அவம் பள்ளிக்கொடம். வாத்தியார்னா அது எம்.ஜி.ஆருதேன். அவரு பாட்டுகளக் கேட்டு கனா கண்டு, காதலிச்சு, நரம்ப முறுக்கி கோவப்பட்டு, அழுது சிரிச்சு வளந்த பய. டப்பாக்கட்டு கட்டிட்டு கவுண்டர்ல அடிச்சுப் பிடிச்சு தொம்சம் பண்ணி டிக்கெட்டு வாங்குறதையே பெரிய சாதனையா நெனச்சுக் கொண்டாடுனவன். சினிமாவா பாத்துத் திரியத் திரிய... புரஜெட்டரு மெசினுலயிருந்து குபீர்னு பொகையா வெளிச்சங் கெளம்புற மாதிரி, அவன் மனசுலயும் நடிப்பாச வந்துருச்சு.

எப்பமும் பாட்டுப் பாட்டிட்டு டான்ஸப் போட்டுட்டு கனாலயே சுத்திக்கிருந்தப்ப, ‘இந்த நடராஜன் புள்ள வெளங்காது. உருப்படாம போறதுக்கான அம்புட்டையும் பண்ணுது’ன்னு தெறிச்சவய்ங்கதேன் அதிகம். இன்னிக்கு அவுக அம்புட்டு வீடுகள்லயும் எங் காமெடிய டி.வி-ல பாத்து ரசிக்கிறாக.

பொசுக்குனு அப்பா போயிச் சேந்த பொறவு... அம்மா, தம்பி - தங்கச்சிகளோட தனியா நிக்கேன். ஒரு நா பே மழண்ணே, எங்க வீடு மங்குடிச, சுத்துக்கட்டு சொவரு அப்பிடியே ஒடஞ்சு விழுந்திருச்சு. அம்புட்டு பேரும் நடுத்தெருவுல நிக்கிறோம். எங்கிட்டுப் போறதுன்னு தெரியல. மழையோட மழையா எங்காத்தா சந்தடியில்லாம அழறது எங்காதுக்கு மட்டுங் கேக்குது. அக்கம் பக்கம் போயி தங்க வெக்கப்பட்டுக்கிட்டு, ஒரு நா முச்சூடும் ரோட்ல கெடக்குறோம். மக்கா நா வேற ஏரியால வீடு பாத்துப் புடிச்சு அவுகள கொண்டுபோயிவிட்டேன். அந்த மழதேன் எனக்குள்ள திகீர்னு ஒரு தீய பத்தவெச்சுச்சுண்ணே!

அப்பத்தேன் மனசுல வைராக்கியம் வந்துச்சு! பொசுக்குனு ஒரு மழையில தெருவுக்கு வந்துச்சே எங்க குடும்பம்! எங்க ஆத்தாவுக்குப் பெரிய பங்களா கட்டி உக்காரவெச்சு அழகுபாக்கணும். ‘சினிமாதேன் ஒனக்குன்னா எங்கிட்டாவது ஓடு, சுத்திச்சுத்தி தேடு, உங்காம கொள்ளாம அல, பேத்தனமா ஒழ!’னு வைராக்கியம் வந்துபோச்சு. அப்பறந்தேன் மதுரையில ராஜ்கிரண்ணணப் பாத்ததும் அவரு காட்டுன வழியப் புடிச்சு சினிமாவுக்கு வந்ததும்..! உழைப்பும் தொழில் மேல அக்கறையும் இருந்தா எந்தப் பயலும் முன்னுக்கு வந்துரலாம்ணே, என் வாழ்க்க அதுக்கு இன்னொரு உதாரணம்ணே!



காசு பணம் வேணாம், அழகு வேணாம். ஆன்னு வாயப் பொளக்கிற தெறமயும் வேணாம். எது இருக்கோ, இல்லையோ... உள்ளுக்குள்ள ஒரு வெறி வேணும்ணே. ரயிலு எஞ்சினுல அள்ளிப்போட்ட கரி கெணக்கா கங்கா உள்ள ஒரு நெருப்பு எரிஞ்சுக்கே இருக்கணும். அம்புட்டுதேன்!



எண்ணே, என்னைய மாதிரி வேலுப்பயலே ஜெயிக்கிற ஒலகம்ணே இது, விட்றாத, வெரட்டிப் புடிச்சிரு, ஆமா, சொல்லிப்புட்டேன்!

வடி வடி வேலு... வெடிவேலு!
விகடன் பிரசுரம்.


---

ஒரு கொசுறு வடிவேலு வீடியோ. ’எல்லாம் அவன் செயல்’ படத்திலிருந்து.



காமெடி காட்சி தானே என்று நினைக்காமல், ஒளிப்பதிவாளர் பண்ணியிருக்கும் கேமரா சேட்டைகளை பாருங்க.

.

Thursday, June 24, 2010

சில ’புரியல’கள்



வயசு பசங்க, ஒரு வயசு பொண்ணப்பார்த்து, ‘சூப்பர் பிகர்’ என தங்களுக்குள் பேசிக்கொள்வது ஆணாதிக்கமா?

---

தம் அடிப்பவனும், தண்ணி அடிப்பவனும் சமூக ஒழுக்கத்தைப் பற்றி பேசலாமா? கூடாதா?

---

வாதம் செய்கிறேன் என்று வாய்ப்பே கொடுக்காமல் வகுந்தெடுப்பது பாசிசமா? இல்லையா?

---

அவனவன் அவன் வேலையையும், வீட்டையும் ஒழுங்காக பார்த்துக்கொண்டாலே, சமுதாயம் அதுவா முன்னேறும் என்கிறார்களே, உண்மையா?

---

ராவணன் பிராமணன் என்றும் வாசித்திருக்கிறேன். ராவணன் திராவிடன் என்றும் வாசித்திருக்கிறேன். எது உண்மை? இரண்டும் உண்மையா?

---

ராமரை கும்பிட்டால், ராமாயணம் வெறும் கதை எனக்கூறுபவர்கள், ராவணனை வெறும் படமாக பார்க்கவிடாமல், ராமாயண அரசியலை ஏன் உள்ளே இழுக்கிறார்கள்?

---

ஹீரோயிச ராவணன், கிளாமர் சீதை, சூழ்ச்சிக்கார ராமன், சரக்கடிக்கும் அனுமர் என இருந்தும் திராவிட நாத்திகர்கள் ஏன் மணிரத்னத்தை ரவுண்ட் கட்டுகிறார்கள்? அதற்கேற்ப காரணங்களை எப்படி பிடிக்கிறார்கள்?

---

முதலாளித்துவம் கெட்ட சொல்லா? முதலாளிகள் அனைவரும் கெட்டவர்களா?

---

நல்ல முதலாளிகள் யார் யார்? அப்படி யாருமே கிடையாதா? நல்ல முதலாளி ஆவது எப்படி?

---

நமக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியும் கெட்டவரா? அவர் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டே, அவரையோ, அவரை போல சிந்தாந்தம் கொண்டவர்களையோ கெட்ட விதமாக விமர்சிப்பது சரியா?

---

முதலாளிகளையும், அவர்கள் தரும் சம்பளம், இன்னபிற வசதிகளையும் உதறி தள்ளிவிட்டு நியாயம் பேசுவதுதான் சரியாமே?

---

எடுக்கப்படும் சினிமா அனைத்திலும் நியாயமான சமூக அரசியல் தீர்வுகளை எதிர்ப்பார்ப்பவர்கள், பொழுதுபோக்கிற்கு நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ எங்கு செல்வார்கள்?

---

பொதுவுடமை பேசும் பதிவர்கள் ஏன் தங்கள் பதிவுகளை முழுதாக ரீடரில் காட்டுவதில்லை?

---

பைரேட்டட் மைக்ரோசாப்ட் மெஷினில், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து, தாராளமயமாக்கத்தை எதிர்த்து கூகிள் ப்ளாக்கரில் பதிவெழுதி, அதையே அடோப் பிடிஎப் பைலாகவும் மாற்றி நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வது சரியா?

---

இத்தனை இஸங்களை தெரிந்துக்கொண்டு, சுற்றி இருப்பவர்களை ரப்ச்சர் பண்ணி வாழ்வது சிறந்ததா? இது பற்றி எதுவும் தெரியாமல் சாதா மொக்கைகளைப் போட்டு ஜாலியாக வாழ்வது சிறந்ததா?

.

Wednesday, June 23, 2010

செம்மொழி மாநாடு துவக்கமும் கணேஷின் முடிவும்

கணேஷ் போன் பண்ணினான். வேலை முடிந்துவிட்டதால், சீக்கிரம் வீடு வந்துவிட்டானாம்.

“சீக்கிரமே வந்து வீட்டுல என்ன பண்ணிட்டு இருக்க?”

“செம்மொழி மாநாடு டிவில போட்டுட்டு இருக்காங்க. அதான் பாத்துட்டு இருக்கேன்.”



என்னவோ தெரியவில்லை. கணேஷ் இந்த மாநாடு விஷயத்தில் ரொம்பவும் கவனம் செலுத்துகிறான். இந்த வாரயிறுதியில் கோவை செல்வதாக கூட ஜடியா இருப்பதாக நேற்று சொல்லியிருந்தான்.

வெறுமே ”ம்” என்றேன்.

“ஏன் இத நடத்துறாங்க?”

எனக்கு தெரிந்ததை சொன்னேன். ரெண்டு மூன்று நாட்களாக வாசித்துக்கொண்டிருந்த தமிழ் பெருமைகளையும், இந்த மாநாடு மூலம் நடக்க போவதாக சொன்ன நன்மைகளையும் சொன்னேன்.

“இத யாரு நடத்துறா?”

“நம்ம முதல்வர் தாத்தா தான். இதுவரை இவர் நடத்தியதில்லை. முதல்முறையாக நடத்துகிறார்”. கூடுதல் தகவல்களையும் கொடுத்தேன்.

”மேடையில யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?” டிவி பார்த்துக்கொண்டே கேட்டான்.

“யாரெல்லாம்?”

“மதுரை சிங்கம்.”

“அழகிரியா?”

“ஆமாம். அதுக்கு அப்புறம் தாடி வைச்சுக்கிட்டு ஒரு சிங்!”

“சுர்ஜித் சிங் பர்னாலா.”

“அப்புறம் முக்காடு போட்டுக்கிட்டு ஒரு பாட்டி.”

“ம்”

“நெக்ஸ்ட், நம்ம தாத்தா”

“அப்புறம்?”

“தளபதி”

”ஸ்டாலினா? அடுத்தது என்ன கனிமொழியா?”

“ஆமாம்”

என்னால் நம்ப முடியவில்லை.

“அப்புறம் சன் பிக்சர்ஸ்.”

”என்னது கலாநிதி... ச்சே தயாநிதி மாறனா?”

“ஆமாம்.”

உண்மையை சொல்கிறானா? பொய் சொல்கிறானா? தெரியவில்லை. இப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லவும் முடியாது. ஊர் நிலவரம் அப்படியிருக்கிறது. ஆனால் ஒன்று உறுதியாக சொல்ல முடியும். கணேஷ் இந்த வாரம் கோயமுத்தூர் போகவில்லையாம்.

சண்டே ராவணன் போகலாம் என்றிருக்கிறானாம்.

பின் குறிப்பு - கலைஞர் செய்திகள் பார்த்தபோது, கணேஷ் சொன்னது முழுவதும் உண்மை இல்லை என்று தெரிந்தது. பிற அனைத்து குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், கூட்டணி தலைவர்களும் இருந்தனர்.

.

Friday, June 18, 2010

ராவணன் - டண் டண் டண்டணக்கா

வால்மீகியோ, கம்பரோ இருந்திருந்தால் கேஸ் போட்டு ஜெயிக்க முழு வாய்ப்புள்ள வகையில் ராமாயணத்தை, நவீன சினிமா மொழியில் மணிரத்னம் எடுத்திருக்கும் படம் - ராவணன்.



விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ரித்விராஜ், ப்ரியாமணி, பிரபு, கார்த்திக் - இவர்கள் யாருக்கும் இல்லாத ஆரவாரம் தியேட்டரில் ரஞ்சிதாவுக்கு தான் இருந்தது.

விக்ரம் ஆரவாரத்தோடு நடித்திருக்கிறார். ஆனாலும், இதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இதை எப்படி அபிஷேக் செய்திருப்பார் என காண ஆர்வமாக இருக்கிறேன்.

ஐஸ்வர்யாவுக்கு வயதாகிவிட்டது. எந்திரனில் தலைவர்தான் யங்காக இருப்பார் என நினைக்கிறேன். பாவம். இவரை தூக்கி போட்டு பந்தாடியிருக்கிறார் இயக்குனர்.

ராமாயண சம்பவங்களையும், கதாபாத்திரங்களையும் படம் முழுக்க குறியீடுகளாக வைத்தது சரிதான். அதற்காக, கார்த்திக்கை அனுமனாக காட்டுகிறேன் என்று மரம் மரமாக தாவ விட்டது, சிறுப்பிள்ளைத்தனமாக இருந்தது.

படத்தின் ப்ளஸ்கள் - ஒளிப்பதிவு, இசை, கலை. படத்தின் ஆரம்பத்தில் வரும் ஷாட்கள் உலகத்தரம். உதாரணத்திற்கு, படகிலிருந்து கழுகு பறக்கும் காட்சி, தண்ணீருக்குள் இருந்து தோணியை படகு நொறுக்கும் காட்சி, மரக்கிளையில் இருக்கும் புட்டானை கடக்கும் காட்சிகளை சொல்லலாம். நாம் ஏற்கனவே வேறு படங்களில் பார்த்த இடங்களாக இருந்தாலும், உடைந்த சிலை, மண்டபங்கள் என செட் போட்டு புதியதாக ஒரு உலகத்தை காட்டியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர். உடைந்த பாலத்தில் நடக்கும் சண்டைக்காட்சி, நல்ல படமாக்கம்.

உடை வடிவமைப்பும், சில பின்னணி இடங்களும் ஹிந்தி டப்பிங் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. வசனங்கள் சுஹாசினி எழுதியிருந்தாலும், மணிரத்னம் எழுதியது போலத்தான் இருக்கிறது. அல்டிமேட் படங்களில் வருவதை போல, தலை தலை என்று திணிக்கபட்டிருக்கும் வசனங்கள்.

சிடியில் வந்ததை தவிர எக்ஸ்ட்ரா சில பாடல்களை வழக்கம்போல் படத்தில் அமைத்திருக்கிறார் ரஹ்மான். மிரட்டும் இசை. ஏற்கனவே சிலது கேட்ட மாதிரி இருந்தாலும். காற்று, மழை என காட்டுக்குள் ஈரமாக உட்கார்ந்திருக்கும் உணர்வு பல இடங்களில் வருகிறது.

இப்படி தொழில்நுட்ப சைடில் ஸ்ட்ராங்காக இருந்தும், தெரிந்த கதையென்பதால் சீட்டில் அழுத்தி உட்கார வைப்பது சிரமம்தான். வழக்கமாக மணிரத்னம் படங்களில், மற்றதில் இருக்கும் சினிமாத்தனமான காட்சிகளோ, வசனங்களோ இருக்காது. இதில் அப்படி சொல்ல முடியாது. எனக்கு சமீபகாலங்களில் மணிரத்னத்தின் எந்த படமும் முதல் முறை பார்க்கும்போது பிடித்ததில்லை. இதுவும் அப்படியே.

---

"எப்ப பாரு, மகாபாரதம், ராமாயணம்'ன்னே மணிரத்னம் படமெடுக்குறாரே?"

"இல்லாட்டி, ஒரு பையன் - ஒரு பொண்ணு லவ், ஒரு வீரமான ஹீரோ - கெட்ட வில்லன் சண்டை'ன்னு படங்கள் வரும். அதுக்கு இது ஒரு மாற்றம்."

"அதுவும் சரிதான்"

---
.

Thursday, June 17, 2010

ஹெட்லைட் மர்மம்

ஏதேச்சையாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபோது, வீட்டின் முன்னால் இருந்த காரின் ஹெட்லைட்கள் எரிந்துக்கொண்டிருந்தது. இன்று காரை வெளியே எடுக்கவே இல்லையே! கார் கவர் போட்டபடி நின்று கொண்டிருந்தது.

கவரை எடுத்து காரை தட்டி பார்த்தேன். லைட் அப்படியே எரிந்துக்கொண்டிருந்தது. வேறு எந்த சத்தமும் இல்லை. வேறு எந்த விளக்கும் எரியவில்லை. ஹெட் லைட் மட்டும் தொடர்ந்து எரிந்துக்கொண்டிருந்தது.



கார் கதவை திறந்து உள்ளே சென்றேன். ஹெட்லைட்டுக்கான திருகும் வகை பட்டன், சரியாகவே இருந்தது. ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இருந்தாலும், ஹெட்லைட் எரிந்துக்கொண்டிருந்தது.

இன்ஜின் ஆன் செய்தேன். லைட் எரிந்துக்கொண்டிருந்தது. ஸ்டியரிங் கீழே இருக்கும் கோலை திருகி, ஹெட்லைட் பட்டனை ஆன் பொஸிசனில் வைத்தேன். அப்பவும் எரிந்தது. ஆஃப் செய்தேன். அப்பவும் எரிந்தது.

மாருதியாய நமஹ!

இன்ஜின் ஆஃப் செய்து, சாவியை எடுத்து விட்டு வெளியே வந்தாலும், லைட் என்னை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் வெளிச்சத்தை முன்னால் பாய்ச்சிக்கொண்டிருந்தது.

லைட் மேல் கையை வைக்க, சூடாக இருந்தது.

இன்ஜின் ஆஃப்பாக இருக்கும் போது, இப்படி லைட் எரிந்துக்கொண்டே இருந்தால், பேட்டரி காலி ஆகும் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.

என்ன பண்றது? ஒரே குழப்பமா இருக்கே! கூகிள்ல தேடலாமா? இல்ல, ஒரு பதிவு போட்டு, யாருக்கிட்டவாவது கேட்போமா?!!! ச்சீய்... கஸ்டமர் கேர் கால் பண்ணுவோம்.

போன் போட்டு, விளக்கி சொல்லி, என்னன்னு கேட்டா, அவன் ஒரு நாலைஞ்சு நம்பர் சொல்லி கால் பண்ண சொன்னான். எங்க ஏரியா பக்கமிருக்கும் இன்ஜினியராம்.

ஒரு அரை மணி நேரத்தில் வந்தான். செக் செய்தான். காரணத்தை சொன்னான்.

மர்மம் விளங்கி, சிரிப்பாகவும் வந்தது. கடுப்பாகவும் இருந்தது.

சரி செய்துவிட்டு சென்றான்.

இப்ப, நீங்க சொல்லுங்க? என்னவா இருக்கும்?

.

Monday, June 14, 2010

நாட்டு சரக்கு - பெங்களூரில் திருப்பதி லட்டு

சில நாட்களுக்கு முன்பு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீது தாக்குதல் நடந்ததாக பரபரப்பு செய்திகள் வெளிவந்தன. அவரும் பயங்கர பில்ட்-அப்புடன் ‘என் மீது தாக்குதல் நடத்தியவனை மன்னித்து விடுகிறேன்’ என்று பெரிய மனசு பண்ணி சொன்னார். இதற்குள், பிஜேபி தலைவர்கள் குருவுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தும்படி, தங்கள் கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்வருக்கு சொல்ல, அவரும் பாதுகாப்பை அதிகப்படுத்தினார். அதற்கு பிறகு, சில நாட்களுக்கு பிறகு தான் உண்மை தெரிந்தது. இது ஏதும் தீவிரவாத தாக்குதல் அல்ல. தூரத்தில் ஒருவர் தொந்தரவு கொடுத்த நாயை சுட்ட குண்டு, அங்கு வந்து விழுந்துள்ளது என்று. இந்த குண்டுக்கு, ஆசிரமமும், ஊடகங்களும், கட்சிகளும் கொடுத்த பில்ட்-அப் ஓவரோ ஒவர்.

இப்ப அதுக்கும் மேல ஓவரா, இன்னொரு செய்தி. அது எப்படி தெரு நாயை சுடலாம்? என்று மிருக பாதுகாப்பு அமைப்பு ஒன்று கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது. அப்படி கொல்வதற்கு சட்டத்தில் இடமில்லையாம். சரி, தெருவில் நாய் துரத்தினால், கல்லெடுத்து எறியலாமா? அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா? இல்லை, கடிபட்டு ஆஸ்பத்திரி சென்று ஊசி போடுவது தான் சரியான தீர்வா?

---

அகமதாபாத்தில் இருக்கும் அந்த குடும்ப தலைவிக்கு அந்த பிரச்சினை ரொம்ப பெரிதாக தெரிந்தது. முந்திய தினம், தன் கணவனுடன் போட்ட சண்டையால், தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். அவர்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவனுக்கு எட்டு வயது. இளையவனுக்கு ஐந்து வயது. ஐம்பது தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்க ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில் சுய நினைவை இழக்க, வீட்டில் இருந்த பிள்ளைகளுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. கேட்பது எதற்கும் அம்மா பதில் சொல்லாமல் இருக்க, சிறியவன் அழ ஆரம்பித்தான். பெரியவனுக்கு முதலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. எப்பொழுதோ, யாரோ சொல்லி கொடுத்த 108 என்ற போன் நம்பர் நினைவுக்கு வர, அந்த நம்பருக்கு போன் செய்து விஷயத்தை ஒரளவுக்கு சொல்லி புரியவைத்தான். அவர்களும் இதை அலட்சியப்படுத்தாமல், வீடு இருக்கும் இடத்தை, அவன் சொன்ன அடையாளத்தை வைத்து கண்டுபிடித்து, அரை மணி நேரத்தில் அவர்கள் வீட்டுக்கு வர, சிறுவனின் அன்னை காப்பாற்றப்பட்டார்.

பெற்றோர்களே, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 108. மறக்காமல், உங்கள் குழந்தைக்க்கு சொல்லிக்கொடுங்கள்.

---

சமீபகாலங்களில் எல்லா விளம்பரங்களிலும் விற்கப்படும் பொருளைப் பற்றியோ, சேவையைப் பற்றியோ சொல்லாமல், பெண்ணையோ, காதலையோ, காமத்தையோ பயன்படுத்தி, அதை எப்படியாவது விற்கப்படும் பொருளுடன் இணைத்து விளம்பரம் செய்கிறார்கள். ஐஸ்க்ரிம் ஆகட்டும், குளிர்பானம் ஆகட்டும். அது ரொமான்ஸை கூட்டுவதாக விளம்பரம். பாடி ஸ்ப்ரே ஆகட்டும், ஷேவிங் க்ரிம் ஆகட்டும். அது பெண்களை ஈர்ப்பதாக விளம்பரம். இது போல், சென்ற வாரம் நான் டைம்ஸ் அசெண்ட்டில் (வேலைவாய்ப்பு இணைப்பு) கண்ட விளம்பரம் - ஒரு சர்வதேச வங்கி தனது ஐடி துறைக்காக வெளியிட்டிருந்த வேலைவாய்ப்பு விளம்பரம்.



நீங்களே பாருங்கள். எவனாவது விளம்பரத்தை தப்பா புரிஞ்சி, வேலையில சேர்ந்து, அங்க போயி ‘எங்க என் ஜோடி?’ன்னு கேட்டுடக்கூடாது. சும்மாவே, ஐடி’ன்னா ஓவர் ஆட்டம்’ங்கிறாங்க. இதுல இது வேற!

---

நம்மில் பலர், டொரண்ட்டில் (Torrent) படங்களை டவுன்லோட் செய்து பார்க்கிறோம். தியேட்டருக்கு செல்லும் வாய்ப்பில்லாதவர்கள், தியேட்டரில் இன்னும் வராத, வர வாய்ப்பில்லாத, வந்து போன படங்களை பார்க்க விரும்புபவர்கள், இணையத்தில் படங்களை டவுன்லோட் செய்து பார்க்கிறார்கள். இப்படி டவுன்லோட் செய்தவர்கள் மீது, ‘ஹர்ட் லாக்கர்’ பட தயாரிப்பாளர்கள் சமீபத்தில் நீதிமன்றத்தில் கேஸ் போட்டுள்ளார்கள். படத்தை டவுன்லோட் செய்தவர்களின் ஐபி அட்ரஸை நீதிமன்றத்தில் சமர்பித்து, நஷ்ட ஈடு கேட்டு இருக்கிறார்கள். ஐபி அட்ரஸ் எதற்கு? இணையத்தில் பலர் தரவிறக்கி செய்து பார்த்ததாகவே சொல்லி, விமர்சனம் என்ற பெயரில் சுயவாக்குமூலமே கொடுத்திருக்கிறார்களே!

ஒண்ணும் செய்ய முடியாது என்றாலும், இவர்கள் இனி விமர்சனம் எழுதுகிறேன் என்று சுயவாக்குமூலம் கொடுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

---

பெங்களூரில் திருப்பதி தேவஸ்தானம், ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள். திருப்பதியில் செய்யும் பூஜைகள் போலவே, இங்கும் செய்கிறார்கள். அதெல்லாம் முக்கியமா? அதே போல், லட்டு கொடுப்பார்களா? என்பது தான் என் சந்தேகமாக இருந்தது. கொடுப்பார்களாம். சனிக்கிழமைகளில் மட்டும். ஒன்று ரூபாய் 25.

இன்னும் இந்த கோவில் போனதில்லை. ஒரு சனிக்கிழமை போக வேண்டும்.

---


எப்பவுமே நம்மூர் ஆஸ்பத்திரிகளைப் பற்றி மோசமாகத்தானே கேள்விப்படுகிறோம். இதோ ஒரு நல்ல செய்தி.

ஏதோ வேலை விஷயமாக பெங்களூர் வந்த ஒரு அமெரிக்கருக்கு திடீரென இரவில் நெஞ்சு வலிக்க, அவரை ஜெயதேவா ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கிறார்கள். பணியிலிருந்த டாக்டர் பரிசோதித்து, சீரியஸாக ஒன்றுமில்லை என்று சொல்லி அவரை உடனே திருப்பி அனுப்பியிருக்கிறார். பில்லை பார்த்த அமெரிக்கருக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். 92 ரூபாய்க்கு பில் போட்டிருக்கிறார்கள். உண்மையில் இது இந்தியர்களுக்கே ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கும். இருந்தாலும் விஷயம் தெரியாமல், அந்த ஆள் ஊருக்கு சென்று ஒபாமாவுக்கு லெட்டர் போட்டிருக்கிறார். “ஜயா, இந்த மாதிரி இந்தியாவுல நெஞ்சு வலிக்கு ஒரு ஆஸ்பத்திரி போயிருந்தேன். ரெண்டே ரெண்டு டாலர் தான் வாங்குனாங்க. நீங்களும் இருக்கீங்களே!”ன்னு. அதிபரும் அதற்கு பதிலளித்திருக்கிறார். அமெரிக்க மக்களின் மருத்துவ சேவைக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று. கூடவே, பெங்களூர் ஆஸ்பத்திரிக்கு பாராட்டும் தெரிவித்து இருக்கிறார்.

ஏதோ அவர் நேரம் இந்த ஆஸ்பத்திரி போனாரு. ‘புகழ்பெற்ற’ மற்ற மருத்துவமனைகளுக்கு சென்றிருந்தால் அவ்வளவுதான். பீஸ் மட்டுமில்ல, ப்யூஸும் புடுங்கிருப்பாங்க.

.

Sunday, June 13, 2010

செம்மொழியான தமிழ் மொழியாம்

ரஹ்மான் இசையமைத்து, கௌதம் மேனன் படமாக்கியிருக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான பாடல், என்னை பொறுத்தவரை அருமையாக வந்திருக்கிறது. என்ன தான் மாநாட்டு அரசியல் மீது, ரஹ்மானின் மேற்கத்திய இசையமைப்பின் மீது, பாடலை பாடியிருக்கும் வேற்று மொழி பாடகர்கள் மீது, படமாக்கிய கௌதம் மேனன் மீது எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், இந்த பாடலின் வீடியோ திரும்ப திரும்ப பார்க்க தூண்டும்படி இருப்பது உண்மை.



குழந்தைகளுக்கு பிடித்திருக்கிறது (பள்ளிக்கூடம் மற்றும் சிறு குழந்தைகளை காட்டுவதால் இருக்கலாம்). இளைஞர்களுக்கு பிடிக்கும் (சாப்ட்வேர் பொண்ணா அஞ்சலி வருவதால் சொல்லவில்லை). ரொம்பவும் நவீனமாக இருப்பதால், பெரியவர்களை கவர்வது கஷ்டம் தான்.

கிட்டத்தட்ட 70 பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். டி.எம்.எஸ். இல் இருந்து ஜி.வி. பிரகாஷ் வரை. வழக்கம் போல், ரஹ்மான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இரவு கூப்பிட்டு பாட வைத்திருப்பார். எல்லாவற்றையும் வெட்டி, ஒட்டி, கிட்டத்தட்ட மூன்று மாத கால உழைப்பில் வெளிவந்திருக்கும் இறுதி வடிவத்தை கேட்கும் போது, அழகாக தொகுக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு தெரிகிறது.

---

கலைஞர் எழுதிய பாடல் வரிகள். யார் யார் எந்தெந்த வரிகள் பாடினார்கள் என்பது அடைப்புக்குறிக்குள். பாடல் எம்பி3 வடிவில்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர், (டி.எம்.சவுந்தரராஜன்)
யாதும் ஊரே, யாவரும் கேளிர் (ஏ.ஆர்.ரஹ்மான்)
உண்பது நாழி உடுப்பது இரண்டே (ஹரிணி)
உறைவிடம் என்பது ஒன்றேயென (சின்மயி)
உரைத்து வாழ்ந்தோம்... உழைத்து வாழ்வோம்.... (கார்த்திக்)

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம் (ஹரிஹரன்)

போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே (ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்)

அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம் (பாடகர் குழு)

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... (ஏ.ஆர்.ரஹ்மான்)
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்... (விஜய் ஜேசுதாஸ்)

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்... (பி. சுசிலா)

ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு (நரேஷ் ஐயர்)

ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் (ஜி.வி.பிரகாஷ்குமார்)
சிந்தாமணியுடனே (பாடகர் குழு)

வளையாபதி குண்டலகேசியும் (டி.எல்.மஹாராஜன்)

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)

கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி (ப்ளேஸ் குழு)

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து (டி.எம். கிருஷ்ணா)
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி (நரேஷ் ஐயர்)

ஓதி வளரும் உயிரான உலக மொழி... (ஸ்ரீநிவாஸ்)
ஓதி வளரும் உயிரான உலக மொழி... (டி.எம். கிருஷ்ணா)
நம்மொழி நம் மொழி... அதுவே (பாடகர் குழு)

செம்மொழியான தமிழ் மொழியாம்...
தமிழ் மொழி... தமிழ் மொழி... தமிழ் மொழியாம்... (ஸ்ருதி ஹாசன்)

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)

தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்...
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்... (சின்ன பொண்ணு)

வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே...
வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே... (ஏ.ஆர்.ரஹ்மான்)


---



எந்த நோக்கத்திற்காக, ரஹ்மானை இசையமைக்க சொன்னார்கள் என்று தெரியவில்லை. உலக அளவில் சாதனை புரிந்த தமிழன், பாடல் உலக அளவிற்கு எடுத்து செல்லபட வேண்டும் என நினைத்திருக்கலாம். ரஹ்மான் அவருக்குரிய பாணியில் இசையமைத்திருக்கிறார். பாடல் கண்டிப்பாக பெரிதாக பிரபலமடையும்.

பாடலின் இசையில், தமிழக இசை கருவிகளை சேர்த்துக்கொள்ளாமல், மேற்கத்திய தாக்கம் அதிகம் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. பாடலில் பிரதானமாக இருப்பது கீ-போர்டும், கிட்டாரும். நம்ம மேளமும், நாதஸ்வரமும் இருக்கத்தான் செய்கிறது. இல்லாமல் இல்லை. எப்போதும் சொல்லப்படும் ’வரிகளை இசை அழுத்துகிறது’ என்னும் குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாதென்பதில் கவனமாக இருந்திருப்பது தெரிகிறது. ஆனாலும், ஆங்காங்கே அதிரடி அதிர்வை கொடுக்க ரஹ்மான் தவறவில்லை. ப்ளேஸ் & ஸ்ருதியின் ராப் உச்சரிப்பை மட்டும், இந்த செம்மொழி பாடலில் தவிர்த்திருக்கலாம். ஆனால், அதையும் தமிழ் அனுமதிக்கும் எல்லைக்கடந்த உச்சரிப்பு வடிவமாக எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் கர்னாடிக், சுஃபி போல.



பாடலை படமாக்கியிருப்பது - ’விண்ணைத்தாண்டி வருவாயா’ தொழில்நுட்பக்குழு. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ததை, எடிட் செய்திருப்பது ஆண்டனி. கலை: ராஜீவன். ’காக்க காக்க’ கேமராமேனாக வந்த கணேஷ், ஸ்கூல் வாத்தியராக வருகிறார். கல்லூரி ஹீரோ அகில், புது மாப்பிள்ளையாக வருகிறார். அங்காடி தெரு அஞ்சலி, மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவராக வந்து, கூகிளில் தமிழில் தேடுகிறார்.

ஹெலிகாப்டரில் படம் பிடித்திருக்கும் தமிழகத்தின் கடலோர பகுதிகள், ஆன்மிகத்தலங்கள் பார்க்க அழகாக இருக்கிறது. மகாபலிபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை காட்டுகிறார்கள். பாடிய பாடகர்கள் அனைவரும் நடித்தும் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த பாடலுக்காக ரஹ்மானும், கௌதம் மேனனும் பணம் ஏதும் பெற்றுக்கொள்ளவில்லை என்று கேள்விப்பட்டேன். மற்றவர்களும் அப்படியாகத்தான் இருக்கும். அவர்களாக ஆர்வத்துடன் நேரத்தை செலவிட்டு பணியாற்றிய பாடலில் குற்றம் சொல்லுவதும், பணியாற்றிய கலைஞர்களின் இனம், மொழியை கொண்டு அவர்களை விமர்சிப்பதும், தமிழராகிய நமக்கு தான் கேவலம்.

பாடலில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். கூடவே நன்றியும்.

.

Friday, June 11, 2010

தியேட்டர் - 3

ஏதோ ஒரு மருத்துவ இதழில் படித்தது. டிவி பார்க்கும்போது, எட்டு அடி தூரம் தள்ளி இருந்து பார்க்க வேண்டும் என்று. இல்லாவிட்டால், கண் கெட்டுபோய் விடுமாம். அதேபோல், படுத்துக்கிடந்து டிவி பார்க்கவே கூடாதாம். கண்ணுக்கு ஏதும் ப்ராப்ளம் என்றால், கண்ணாடி போட வேண்டி இருக்குமே, அது நம்ம முகத்துக்கு நல்லா இருக்காதே என்ற பயத்திலேயே, அந்த மருத்துவ அறிவுரைகளை ஆரம்பத்தில் இருந்தே கடைப்பிடித்து வருகிறேன்.

இதனால் பள்ளிக்காலத்தில் தியேட்டர் செல்லும் போது, எவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்கிறோமோ, அவ்வளவு நல்லது என்று கடைசி வரிசை இருக்கைக்கு செல்லவே விரும்புவேன். அதே சமயம், முதல் நாள் ரஜினி படம் பார்க்கிறேன் என்று கழுத்து வலிக்க முதல் இருக்கையில் இருந்து பார்த்ததும் உண்டு. மற்றபடி, அந்த நேரத்தில் அதிகம் விரும்பியது கடைசி வரிசைகளை. நிறைய பேர் அப்படிதான். இன்னும்.



ஆனால், நான் மாறிவிட்டேன். தற்போது, உட்காரவிரும்பும் இடம் - 2/3 என்ற அளவில் ஸ்கிரினில் இருந்து தள்ளியிருக்கும் வரிசையில் நடு சீட். ஸ்கேல் எடுத்து அளந்து உக்காரவிட்டாலும், ஓரளவுக்கு இந்த கணக்கில் தான் உட்காருகிறேன். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.

கடைசி வரிசையில் இருந்தால், தலைக்கு மேல் இருக்கும் டிடிஎஸ் ஸ்பீக்கரில் இருந்து வரும் சவுண்ட், அதற்கான எபெக்டை கொடுப்பதில்லை. வரிசையின் ஒரு ஓரத்தில் இருந்தால், அந்த பக்கமிருந்து வரும் சத்தம் சரியான அளவில் வருவதில்லை. இப்படி நடுவே இருந்தால் தான், சரவுண்ட் சவுண்ட்டின் அருமை தெரிகிறது. டிடிஎஸ் வந்த புதிதில், இதையெல்லாம் ரொம்பவும் கவனித்துக்கொண்டு இருப்பேன். சங்கமம் படத்தில் ஒரு கட்டையை பின்னால் எறிவது போன்ற ஒரு காட்சியில், தியேட்டரில் அனைவரும் பின்னாடி திரும்பி பார்த்தார்கள். சில்லறையை சிதறும் காட்சி இருந்தால், வித்யாசாகர் கலக்குவார். சிநேகிதியே, ரன், தூள் - இந்த படங்களில் எல்லாம் சில்லறையை சிதற விட்டு, தியேட்டரை சிலிர்க்க வைத்தார்.

டிடிஎஸ் வந்தபிறகு, தியேட்டர் ஆப்பரேட்டர்கள் தங்கள் திறமையை காட்டும் வாய்ப்பு குறைந்துவிட்டது. முன்பெல்லாம், படம் பார்ப்பதை பெரும் ஆர்வத்திற்குரிய விஷயமாக்குவதற்கு, நான் பார்த்த தியேட்டர்களில் ஆப்பரேட்டர்கள் தங்களால் முடிந்த வேலையை செய்துக்கொண்டிருந்தார்கள். அரசியல் பஞ்ச் வசனம் என்றால், சவுண்டை கரெக்டாக அந்த இடத்தில் கொஞ்சம் கூட்டி வைப்பார்கள். இது அவரவர் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப மாறுபடும். எனக்கு பாட்ஷா, கேப்டன் பிரபாகரன், மக்களாட்சி எல்லாம் நினைவுக்கு வருகிறது. அச்சமயம் எழுந்த கைத்தட்டல் எல்லாம் நியாயமாக அந்த ஆப்பரேட்டர்களுக்கு செல்ல வேண்டியது.

பாடல் காட்சி என்றால், நடுவே வரும் இசைக்கு, இரு பக்கமிருக்கும் ஸ்பீக்கரையும் இசைக்க விட்டு விடுவார்கள். பாடகர்களின் குரலுக்கு, ஸ்கீரின் அருகே இருக்கும் ஸ்பீக்கர், இசைக்கு சுற்றி இருக்கும் ஸ்பீக்கர் என பல வித்தைகளை பலமாக காட்டுவார்கள். அதேபோல், சண்டைக்காட்சிகளுக்கு டீஷும், டூஷூம் மட்டும் சைடு ஸ்பீக்கரில் இருந்து வரும். திகில் காட்சிகளைப் பற்றி சொல்லவேண்டாம். சரியான நேரத்தில் சவுண்டை கூட்டி, மக்களை அலறவிடுவார்கள்.

சமீபகாலங்களில் இப்படி எந்தவிதமான வேலைகளையும், அவர்கள் செய்யவேண்டியதில்லாமல் போய்விட்டது. இருந்தும், தங்கள் ஆர்வத்தில் இவ்வாறு செயல்படும் ஆப்பரேட்டர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், இது தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு, சவுண்ட் இன்ஜினியரிங், சவுண்ட் மிக்ஸிங் என பல லேட்டஸ்ட் துறைகள் வந்துவிட்டன. ஸ்லம்டாக் மில்லினியர், ஒரு சுமாரான தியேட்டரில் தான் பார்த்தோம். வானத்தில் பறக்கும் விமானத்தை காட்டும் காட்சி ஒன்றில், முன்னால் வந்து உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்த நண்பன், விமானம் பறக்கும் சத்தத்தை கேட்டு, அப்படியே பின்னால் சீட்டில் சாய்ந்தான். அந்த தியேட்டரிலேயே, இப்படி ஒரு சுழல வைக்கும் சவுண்ட் என்பது ஆச்சரியம் தான். ரசூல் பூக்குட்டிக்கு ஏன் ஆஸ்கர் கொடுத்தார்கள் என்று தெரிந்தது.



ஒலி அமைப்பு, ரசிகனை சரியாக வந்து சேர, திரையரங்கின் அமைப்பு, ஸ்பீக்கர் அமைந்திருக்கும் நிலை, ஒலி அளவு போன்றவை முக்கிய காரணிகளாக இருக்கிறது. ரொம்ப பெரிய தியேட்டராக இருந்தாலும் நல்லதல்ல. ரொம்ப சிறியதாக இருந்தாலும் நல்லதல்ல. அதே போல், ஒலியின் அளவு அதிகமாக இருக்கும் போது, நுண்ணிய இசை துணுக்குக்களை கேட்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. போலவே, குறைவாக இருக்கும் போது, படத்தின் மேலான பீல் குறைந்துவிடுகிறது. இப்படி சரி நிலையில் அமைந்திருக்கும் திரையரங்குகள் குறைவு. உங்களுக்கு தெரிந்த சிறந்த திரையரங்குகளை குறிப்பிடலாம்.

நடுவே உட்கார்ந்து பார்ப்பதற்கு, இன்னொரு காரணம் - ரொம்ப தூரத்தில் இருந்து பார்த்தால், ஹோம் தியேட்டர் எபெக்ட் வந்துவிடுகிறது. அப்புறம் எதுக்கு தியேட்டர் வருகிறோம்? பிரமாண்டமா இருக்கவேண்டாம்? இதனாலேயே, சமயங்களில் இன்னும் கொஞ்சம் முன்னால் உட்கார தோணும்.

இந்த விஷயத்தில் சில மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் சரியாக இருக்கிறது. திரை பெரிதாக, திரையரங்கின் நீளம் குறைவாக, ஸ்கீரினின் பாதி உயரத்திற்கு சமமான உயரத்தில் அமர்ந்து படம் பார்ப்பது நன்றாகத்தான் இருக்கிறது.

நான் இவ்வளவு சொன்னாலும், இன்னும் சிலருக்கு கடைசி சீட்டும், ஓர சீட்டும் விருப்பமானதாக இருப்பதை கண்டுக்கொண்டு தான் இருக்கிறேன். காரணம் தான் தெரியுமே?!

(தொடரும்)

.

Sunday, June 6, 2010

வேலை வேணுமா வேலை!!!

வேலை தேடுபவர்களுக்காக சில குறிப்புகள்.

இவை ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இவை அனைத்தையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால், நீங்கள் விரும்பும் வேலை கண்டிப்பாக சாத்தியம்.



1) முதலில் என்ன மாதிரியான வேலையை எதிர்பார்க்கிறீர்கள் என்று யோசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைக்கும், விரும்பும் வேலைக்கும் அடிப்படை தொடர்பு இருக்கவேண்டும்.

2) தெளிவாக உங்களைப் பற்றிய குறிப்புகளை (Resume) தயார் செய்துக்கொள்ளுங்கள். கூடவே, கவர் லெட்டரும்.

3) ஒன்றிரண்டு முன்னணி வேலைவாய்ப்பு இணையத்தளங்களில் பதிவு செய்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, Naukri, Monster.

4) நிறுவனங்கள் இத்தளங்களில் தேடும் போது, குறிச்சொற்கள், அனுபவ வருடங்கள் வைத்தே தேடுவார்கள். குறிச்சொற்கள் (Keywords) உங்களுக்கேற்ப சரியாக அமைத்துக் கொள்வது முக்கியம்.

5) ஒவ்வொரு முறை நீங்கள் இத்தளங்களில் நுழையும்போதும், நீங்கள் ரிசண்ட் ஆக்டிவ் உறுப்பினர் ஆகிறீர்கள். நிறுவனங்கள் தேடும்போது, முதன்மை பெறுகிறீர்கள். அதனால், அவ்வபோது இத்தளங்களை பார்ப்பது மட்டும் போதாது. அடிக்கடி செல்லுங்கள்.

6) நன்றாக படித்துவிட்டு தான் விண்ணப்பிப்பேன் என்று நினைத்தால், நேர விரயம் தான் ஆகும். வேலைத்தேட ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால், உடனே விண்ணப்பிக்கவும். அழைப்புகள் வந்து, தேர்வுக்கு செல்லும்போது தான் படிக்கவும் தோன்றும். அச்சமயம் படிப்பது தான், மூளையிலும் ஆழப்பதியும்.

7) அதே சமயம், நிறுவனத்தில் இருந்து என்ன சொல்லி அழைத்தாலும், சிறிது கூட தயார் செய்து கொள்ளாமல் போகக்கூடாது. உதாரணத்திற்கு, HR இண்டர்வியூ என்று சொல்லி விட்டு, டெக்னிக்கல் இண்டர்வியூ வைத்துவிட வாய்ப்பு இருக்கிறது. எதற்கும் தயாராக இருக்கவும்.

8) படிக்கும் போது, சிறுக்குறிப்புகளாக எழுதி வைத்துக்கொள்ளவும். தேர்வுக்கு முன்பு கிளம்பும் போது, மேலோட்டமாக பார்த்துவிட்டு செல்ல உதவும்.

9) நேரத்திற்கு செல்லவும். கிளம்பும் முன்பு, தேவையானவை எல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளவும். Resume இரண்டு-மூன்று நகல்கள் எடுத்துகொள்ளவும். ஒன்றிரண்டுக்கு மேற்பட்ட தேர்வாளர்கள் இருக்கும்போது, கொடுக்க உதவும்.

10) ஒவ்வொரு தேர்வின் போதும், இந்த வேலை கண்டிப்பாக கிடைத்துவிட வேண்டும் என்ற நினைப்பு நல்லதுதான். ஆனால், அதுவே ரொம்ப உறுதியாக இருந்துவிட்டால், பின்பு தேர்வு முடிவு சரிவராபட்சத்தில் சோர்வடைய செய்யும். அடுத்தடுத்த தேர்வுகளைப் பாதிக்கும். அதனால், ஒவ்வொரு தேர்வையும் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளவும்.

11) அனுபவங்களை பதிவு செய்து வைக்கவும். இதற்கென, ஒரு குறிப்பேடு வைத்துக்கொள்ளவும். ஒவ்வொரு தேர்வு முடிந்தவுடனும், என்ன கேள்விகள் கேட்கப்பட்டன என்று குறித்து வைத்துக் கொள்ளவும். உடனே குறித்து வைத்துக்கொண்டால், நிறைய கேள்விகள் ஞாபகத்தில் இருக்கும். தேதிவாரியாக, நிறுவனம்வாரியாக குறித்துக்கொள்ளவும்.

12) தேர்வின் போது, தெரியாமல் பதிலளிக்க முடியாமல் போன கேள்விக்கான பதிலை, பிறகு படித்து தெரிந்துக்கொள்ளவும். அடுத்து வேறு ஏதெனும் தேர்வில், அதே கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் போனால், நீங்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம். அப்படி நிகழாமல் பார்த்துக்கொள்ளவும்.

13) சிரித்த முகத்துடன், தேர்வாளர்கள் உடன் அறிமுகப்படுத்திக்கொள்ளவும். இறுதிவரை சகஜமாக இருக்கவும்.

14) கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் பெரும்பாலும் நமது அனுபவக்குறிப்புகளில் இருந்தும், நாம் என்ன சொல்கிறோம் என்பதிலிருந்தும் தான் கேட்கப்படும். அதனால், resumeஇல் இருக்கும் சொற்கள் அனைத்திற்கும் உங்களிடம் பதில் இருக்க வேண்டும். அதேபோல், என்ன சொல்கிறோம் என்பதை யோசித்து சொல்லவும். அடுத்த கேள்வி, நீங்கள் சொல்வதில் இருந்தே எழும்பலாம்.

15) கேள்விகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். சுத்தமாக தெரியாத கேள்விக்கு, தப்பான பதில் சொல்லி மாட்டிக்கொள்ள வேண்டும். தெரியாதவற்றை தெரியாது என்றே காரணத்துடன் சொல்லிவிடலாம். (12 பாயிண்ட் பார்க்கவும்.)

16) நேர்முக தேர்வு முடிவில், உங்களுக்கு அந்த நிறுவனம் பற்றி, நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலை பற்றி, ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

இக்குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருந்து, ஏதேனும் குறிப்பில் மேலும் தகவல்கள் தேவையெனில் சொல்லுங்கள். மேலும் தகவல்கள் அளிக்க முயலுகிறேன்.

நீங்கள் விரும்பும் வேலையை விரைவில் அடைய வாழ்த்துக்கள்!!!

.

Saturday, June 5, 2010

நல்வரவு... கணேஷ்

கணேஷ் என்றொரு நண்பன். அவனிடம் இருக்கும் பெரிய சொத்தே, அவன் மொபைல் தான். மொபைல் இல்லாவிட்டால், எங்கே இதயம் நின்றுவிடுமோ என்று நினைக்கும் அளவுக்கு மொபைலுடன் அவ்வளவு நெருக்கம். எல்லா மொபைல் மேலும் தீரா ஆசையிருந்தாலும், நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட ஒரு மொபைலை சமீபத்தில் வாங்கியிருக்கிறான்.



“அப்படி என்ன இந்த மொபைல் மேல உனக்கு ஆசை? இதுல என்ன ஸ்பெஷல்?”

“இதுல எல்லாம் இருக்கும்.”

“ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின்?”

இல்லையாம். முறைக்கிறான். சரி, விடுங்க.

ஒருநாள் அந்த மொபைலில் ப்ரவுசரை ஓபன் செய்து, நான் ‘குமரன் குடிலை’க் காட்ட, அவன் இப்பொழுது அடிக்கடி திறந்து பார்த்துக்கொள்கிறான். எனக்கு மிஸ்ட் கால் கொடுப்பவன், இப்பொழுது காசு செலவழித்து இந்த தளத்தைப் பார்க்கிறான். தெரிந்தவர்கள் அதிகம் பார்க்க, பார்க்க, எனது எழுத்தில் கண்ட்ரோல் கூடிக்கொண்டே போகிறது.



நான் எழுதியவை சிலவற்றை படித்துவிட்டு கேட்டான்.

“நான் கூட எழுதலாமா?”

ம்ஹும். நீ வேறயா?!!!

சரி. இப்படி வாசிப்பவர்களை எல்லாம் எழுத தூண்டும் எழுத்தா என்னுடையது? (புரியுது... இருந்தாலும் நான் எவ்வளவு பாஸிட்டிவ்’வா எடுத்திருக்கேன், பாருங்க!)

பரவாயில்லை.

ஏற்கனவே, மொபைலில் தமிழில் டைப் செய்து பழகியிருக்கிறான். எண்களுக்கான நபர்களின் பெயர்களைக் கூட தமிழில் தான் அடித்து சேகரித்து வைத்திருக்கிறான். அவ்வளவு தமிழார்வமா? ஏனெனில்,... இப்ப, எனக்கு ‘தேவதையை கண்டேனில்’ இருந்து ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது.

படத்தில் நாயகி ஸ்ரீதேவி கல்லூரிக்கு வராமல் லீவு எடுத்திருப்பார். அவருடைய தோழிகள், தனுஷிடம் வந்து ஒரு லெட்டரைக் கொடுப்பார்கள். லெட்டரை பிரித்து பார்த்த தனுஷ்,திருப்பி அதை தோழிகளிடமே கொடுத்து வாசிக்க சொல்வார்.

“ஏன்?”

“ஏன்னா, அது தமிழ்’ல எழுதியிருக்கு.”

“உங்களுக்கு தமிழ் தெரியாதா?”

“கொஞ்சும்... கொஞ்சும்... தெரியும்.”

“அப்ப, இங்கிலிஷ்?”

“சுத்தம்.” (வசனம் - பூபதி பாண்டியன்)

அப்படிப்பட்ட ’சுத்தமான’ நண்பன் அவன். அவனும் என்னை போல் தமிழை வளர்த்தால் நல்லது தான்!

வா கணேஷ்... வருகைக்கு ரொம்ப நன்றி!!! :-)

.

Friday, June 4, 2010

மணிரத்னம் -> ராவணன் <- ரஹ்மான்

1983இல் முதல் படத்தை எடுத்த ஒரு இயக்குனர், இன்னமும் மவுசோடு இருக்கிறார் என்றால் அது மணிரத்னமாகத் தான் இருக்கும். ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும், எதை கொடுக்க வேண்டும் என்று கூட்டம் யோசித்துக்கொண்டிருக்கும் போது, தனது பிடித்ததை மட்டும் தொடர்ந்து எடுத்து, கொடுத்துக் கொண்டிருப்பவர் மணிரத்னம். போன படத்தின் ரிசல்ட் என்னவாக இருந்தாலும், அடுத்த படத்தின் மேல் எதிர்ப்பார்ப்பு எப்போதுமே எகிறி அடிக்கத்தான் செய்கிறது.



என்ன காரணமாக இருக்கும்?

ஆரம்பத்தில் இருந்து கொடுத்த தரமான படைப்புகளால் உருவான ப்ராண்ட் நேமை சரிந்துவிடாமல் தக்க வைத்துக்கொண்டிருப்பது. ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என வியாபார வழியில் இருப்பவர்களை விட, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என படைப்பின் உருவாக்கத்தில் இருப்பவர்களிடம் அந்த ப்ராண்ட் நேமை செல்வாக்காக வைத்திருப்பது. இதனால் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும், இவர் கூப்பிட்டால் வந்து தலையைக் காட்டிவிடுவார்கள். சில நேரங்களில் படத்தின் வியாபாரத்திற்கு இவர்கள் உதவி விடுவார்கள்.

பட்ஜெட் அதிகமாக இல்லாவிட்டாலும், பிரமாண்ட படங்கள் விற்கும் விலைக்கு விற்பனையாகும் திறன் கொண்டவை இவர் படங்கள். நடிகர்களுக்கு பெரும்பாலும் வழக்கத்திற்கு மாறாக குறைவாகவே சம்பளம் கொடுப்பார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிகம் பேசாதவர். ஆனால், படங்களை பார்ப்பவர்கள் அதிகம் பேசும்படி எடுப்பவர். சர்ச்சைக்குள்ளான விஷயங்களை படமாக்குபவர். வரதராஜ முதலியார், மகாபாரத கர்ணன், காஷ்மீர் தீவிரவாதம், பம்பாய் குண்டுவெடிப்பு, கலைஞர்-எம்ஜிஆர் நட்பு, இலங்கை போர், அம்பானி என படத்தை பிரபலமாக்கும் காரணிகளைக் கொண்டு களம் அமைப்பவர்.

எப்போதுமே நடைமுறையில் இருக்கும் சராசரி படமாக்கம் இவரிடம் இருக்காது. பார்ப்பவர்களுக்கு புரிகிறதோ, இல்லையோ, வேறொரு நிலையில் இருக்கும். தயாரிப்புக்காக யாரையும் சார்ந்து இல்லாமல் இருப்பதால், இவருக்கு இது சாத்தியமாகிறது. கதையை ரொம்ப ரகசியமாக வைத்திருக்கும் இயக்குனர். இதனாலேயே, மற்ற இயக்குனர்களின் படக்கதைகளை விட, இவர் படக்கதைகள் சீக்கிரம் வெளியே வந்துவிடும்! சினிமா ரசனையில் மேல்மட்டம் என்றால், இவருடைய படங்கள் எனக்கு பிடிக்கும் என்று சொல்ல வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்திருக்கிறார். (அதற்கும் மேல்மட்டம் போக வேண்டுமென்றால், இவரையே பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டும்!)

இவருடைய பலவீனங்கள் என்றால், ஏ மற்றும் கொஞ்சம் பி ஆடியன்ஸ்களை மட்டுமே இவருடைய படங்கள் கவரும் (புரியும்). அதனாலேயே, இவர் உள்ளூர் மார்கெட்டுக்காக படம் எடுப்பதில்லை. எப்படி மசாலா இயக்குனர்களுக்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறதோ, அதேப்போல் இவருக்கும் ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. ஒரே பாணியில் எடுத்தாலும், அதை இவருடைய ஸ்டைல் என்று சொல்லிவிடுவார்கள். கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் ஒரே மாதிரி இருக்கும். பெரும்பாலும், ஒரே மாதிரி பேசுவார்கள். சினிமா காட்சி ஊடகம்; காட்சிகளின் மூலம் எல்லாவற்றையும் உணர வைக்க வேண்டும் என்ற பிடிவாதத்தால் வசனம் குறைவாக இருக்கும். இவருடைய படங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகே வருவதால், இவை எதுவும் படத்தை பாதிப்பதில்லை. ஒரே மாதிரி இருக்கிறது என்று புகார் எழுவதில்லை. (விஜய் கவனிக்க)

உயர்தரம் என்று சொல்லும் போது ஒன்று நினைவுக்கு வருகிறது. ’அலைபாயுதே’யில் ஒரு காட்சியில், சரியாக கவனிக்கப்படாமல் கீழே வைத்திருக்கும் மைக் ஒன்று காட்சிக்குள் வந்திருக்கும். இதை ஒரு பேட்டியில், சுட்டிக்காட்டியது - சிம்பு. அதனால், நத்திங் இஸ் பெர்ஃபெக்ட்.

---

ராவணன். இப்போது கிட்டத்தட்ட அனைவருக்கும் கதை தெரிந்திருக்கும். இருந்தாலும், படத்தை பார்க்கும் ஆர்வம் யாருக்கும் இல்லாமல் இல்லை.



அபிஷேக், ஐஸ்வர்யாவுக்காக ஹிந்தி மார்க்கெட்டும், விக்ரமுக்காக தமிழ் மார்க்கெட்டும், ரஹ்மானுக்காக சர்வதேச மார்க்கெட்டும் (ஹி... ஹி...) காத்திருக்கும் படம். இது எல்லாம் படம் பார்த்து ரசிக்க காத்திருப்பவர்கள் பற்றி சொன்னது. இன்னொரு கூட்டம் இருக்கிறது. படத்தைப் பார்த்து நோண்டி நொங்கெடுக்க.

அவர்களுக்கு தோதாக, இயக்குனரும் ஒரு களத்தை எடுத்திருக்கிறார். ரஹ்மான் பாடல் வெளியீட்டின் போது, ஒரு பாடலை பாடி படத்தின் முடிவை சொல்லிவிட்டார். மணிரத்னம் ஏதும் குதர்க்கமாக யோசித்து படமெடுத்திருக்கிறாரோ இல்லையோ, படத்தை பார்த்து அப்படி கருத்துக்கள் வரும். ஜூன் 18க்கு பிறகு, இணையத்தில் சில பக்கங்கள் நாறப்போகிறது.

---

கருவிகள் தவிர்த்து, பாடல்களின் இசை அமைப்பில் ரஹ்மான் ஏதும் புதிதாக இதில் முயற்சி செய்யவில்லை எனக் கருதுகிறேன். பாடல்கள் பெரும்பாலோருக்கு உடனே பிடித்துவிட்டதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். எனக்கும் தான். முந்தைய படமான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பாடல்களை, படம் வருவதற்கு முன்பு கேட்டதை விட, பிறகு கேட்டது தான் அதிகம். ஆனால், ராவணன் அப்படியில்லாமல், இப்பொழுதே அதிகம் கேட்கும் பாடல்களாகி விட்டது. வெளியேயும் ஊருக்குள், அதிகம் கேட்கப்படுவதை பார்க்கிறேன்.



அனைத்து தரப்பு உசிரையும் போக வைத்திருக்கிறது - கார்த்திக் பாடியிருக்கும் ‘உசிரே போகுதே’ பாடல். வேகமாக நிறைய பேர் மொபைலில் காலர் ட்யூனாகி இருக்கிறது. பாடல் வரிகளை விவாதிக்கும் வழக்கம், நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பிருக்கிறது. மணிரத்னம் - வைரமுத்து - ரஹ்மான் கூட்டணியிலேயே இது அதிகம் நிகழுகிறது. மணிரத்னம் முழு பாடல்களையும் எழுதும் வாய்ப்பை வழங்க, ரஹ்மான் இசை நல்ல ரீச் கொடுக்க, வைரமுத்துவின் வரிகள் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது.

அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிருசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கரும் தேக்குமர காடு வெடிக்குதடி!


அடுத்ததாக, என்னை கவர்ந்த பாடல் - ‘காட்டு சிறுக்கி’. பாடல் வரிகள் அனுராதா ஸ்ரீராமின் குரலில் வழிந்தோட, சங்கர் மகாதேவர் எஸ்.பி.பி ஸ்டையில் கணீரென்று பாட, ரஹ்மானின் இசையை நீங்கள் நல்ல சுற்று அமைப்புடன் இருக்கும் ஸ்பீக்கர்களில் கேட்க வேண்டும். திரும்ப, திரும்ப கேட்க தூண்டும்.

ஏர்கிழிச்ச தடத்துவழி
நீர் கிழிச்சு போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு


ஸ்ரேயா கோஷலின் ‘கள்வரே’ பாடல், தமிழ் படம் என்பதற்கு சம்பந்தமில்லாமல் தூய தமிழில் இருக்கிறது!!! இதனால் தான் என்னவோ, டப்பிங் பட பாடல் போல இருக்கிறது. இசையும் அதற்கேற்ப ஹிந்தி ஸ்டைலிலேயே இருக்கிறது. ஆனாலும், ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பாடல்.

வலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே...
வலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள் தங்களுக்கு தெரிகின்றதா?...


வைரமுத்து இப்படி அவ்வப்போது சினிமா பாடல்கள் மூலம் தமிழ் இலக்கணம் சொல்லித்தருவார். ஜீன்ஸ் பாட்டு கேட்டுத்தான், சிலருக்கு ‘இரட்டைக் கிளவி’ புரிந்தது.

ரஹ்மான் இசையில், நிறைய பீட்ஸ்களுடன் உடைய பாடல்கள் கொண்ட ஆல்பம் வந்து நாளாகிவிட்டது. இதில் ‘கள்வரே’ பாடலைத் தவிர, மற்ற அனைத்துமே அதிரடி பாடல்கள். ‘கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு’, ‘கோடு போட்டா’, ‘வீரா’ என அனைத்துமே ‘காட்டுத்தனமான’ பாடல்கள். அதாவது, காடு என்ற உணர்வை எங்காவது தெளிக்கும் பாடல்கள்.

வைரமுத்து ஸ்பெஷலாக தந்த பாடல் வரிகளுக்கு, ரஹ்மானும் ஸ்பெஷல் இசையை கொடுத்திருக்கிறார். மணிரத்னம் அதை எப்படி திரையில் சிறப்பாக தருகிறார் என்று இன்னமும் இரு வாரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். வசனகர்த்தாவை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது.

.

Wednesday, June 2, 2010

பழைய புத்தகக்கதை

இந்த காலத்து அக்காக்கள் போல அல்ல, அந்த கால அக்காக்கள். வார பத்திரிக்கைகளை படித்துவிட்டு தூக்கி எறியாமல், தங்களுக்கு பிடித்த தொடர்கதையை, வார வாரம் புத்தகத்தில் இருந்து கிழித்து எடுத்து, சேர்த்து வைத்து விட்டு, முடிவில் இவர்களே எந்த பதிப்பகத்தின் துணையும் இல்லாமல் பைண்டிங் செய்து ஒரு நாவல் தயாரித்துவிடுவார்கள். இவர்கள் தொகுத்து வைத்த கதை நன்றாக இருக்கிறதோ, இல்லையோ, அந்த புத்தகத்தில் இருக்கும் துணுக்குகள், ஜோக்குகள், அரைகுறை பேட்டிகள், விளம்பரங்கள் போன்றவை பெரும் சுவாரஸ்யத்தை கொடுக்கும். அவ்வப்போது எடுத்து பார்வையை மேயவிட்டு விட்டு வைத்துவிடலாம்.

இது போல் தயாரித்த புத்தகத்தில், பல வருடங்களுக்கு முன்பு ‘உடல் உயிர் ஆனந்தி’ கதை படித்தது நினைவில் இருக்கிறது. பிறகு, நெடுங்காலத்திற்கு இம்மாதிரி புத்தகங்கள் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இடையில் ஒரு நண்பர், எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துணையெழுத்தை’ இப்படி கொடுத்தார். சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பழைய புத்தகக்கடையில், தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தப்போது, சுஜாதா எழுதிய ‘கனவுத் தொழிற்சாலை’ கதை இந்த வடிவத்தில் கிடைத்தது. இந்த கதை கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறம் என்றால், யாரோ உருவாக்கி வைத்திருந்த பொக்கிஷமாக இது கிடைத்தது அதைவிட பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. ஆனந்த விகடனில் தற்போது பழைய படைப்புகளை ‘பொக்கிஷம்’ என்று வெளியிடுகிறார்கள் அல்லவா? அப்படியென்றால், இதுவும் பொக்கிஷம் தானே? இந்த பொக்கிஷத்தை தற்போதைய விகடனை விட குறைவான விலைக்கு வாங்கினேன்.



கதை - திரைத்துறையில் பணியாற்றும் சில மனிதர்களைப் பற்றியது. புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, கீழே இருந்து சல்லேன்று மேலே செல்பவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள், ஒரு சீனில் தலைக்காட்டுவதற்கு கடக்கவேண்டிய சங்கடங்கள், நேர்மையான முயற்சிக்கு விளையும் முடிவு என செல்லுலாய்ட் உலகை கவனித்து சுஜாதா எழுதிய இந்த கதை வெளிவந்த ஆண்டு - 1979. சினிமா உருவாக்கத்தில் பணிபுரிபவர்களின் வெவ்வேறு பிரச்சினையை பேசுகிறது இக்கதை. நான் பிறப்பதற்கு முன்பே, இந்த கதை வந்துவிட்டாலும், தற்போது தான் வாசிக்க வாய்த்திருக்கிறது. ஆனால், பல படங்களில் இந்த களத்தை பார்த்துவிட்டதால், கதையில் பெரிய ஈடுபாடு ஏற்படவில்லை.

இந்த கதைக்கான படங்களை ஜெயராஜ் வரைந்திருக்கிறார். என்ன சொல்லி வரைய சொன்னார்களோ? எல்லா வாரமுமே, ஓவியங்கள் ஒரு ’டைப்’பாகத்தான் இருக்கிறது. வெறும் படங்களை மட்டும் பார்த்தால், புஷ்பா தங்கதுரை எழுதிய கதைக்கு வரைந்து போல் இருக்கிறது. அந்த வார பகுதியில் ‘தூங்கினாள்’ என்று ஒரு வார்த்தை இருந்தால் போதும். ஏடாகூடமான பொஸிசனில் தூங்கினாற்போல் படம் வரைந்துக்கொடுத்திருக்கிறார் ஓவியர். சில இடங்களில் படத்தை பார்த்துவிட்டு வாசிக்கும்போது, இவர்களே படத்திற்கேற்ப எழுத்தாளரை ஒரிரு வாக்கியங்களை சேர்க்க சொல்லியிருப்பது போல் தோன்றியது.



சாதாரணமாகவே, விளம்பரங்களை விரும்புபவன் நான். அதாவது, விளம்பரங்களைப் பார்க்க பிடிக்கும்! அப்போது வந்த விளம்பரங்களில் இருந்த நிறுவனங்கள் பல இப்போது இல்லை. இருக்கும் நிறுவனங்கள் நிறைய மாற்றங்களுடன் இருக்கிறது. அன்று HMV நிறுவனம் 514 ரூபாய்க்கு ரெக்கார்டு ப்ளேயர் விற்றிருக்கிறது. இன்று ஸ்ரேயாவை வைத்து விளம்பரம் செய்யும் தூத்துக்குடி விவிடி எண்ணெய் நிறுவனம், அன்று யாரோ அடையாளம் தெரியாதவரை வைத்து விளம்பரம் செய்திருக்கிறது. நிறைய மாத்திரை விளம்பரங்கள் காணக்கிடைக்கிறது. சிவராஜ் வைத்தியசாலையின் சித்த வைத்திய மேதை தமிழகமெங்கும் போகும் சுற்றுப்பயணத்திட்ட விளம்பரம் அன்றும் இருந்திருக்கிறது. தற்போது, இவருடைய மகன் தந்தையின் பாதையில் செல்கிறார்.

வாரா வாரம் ’ரெட்டைவால் ரெங்குடு’, ‘முன்ஜாக்கிரதை முத்தண்ணா’, ’வீட்டு புரோக்கர் புண்ணியகோடி’, ’சிரிப்புத்திருடன் சிங்காரவேலு’ போன்ற கேரக்டர்களை வைத்து தனது கார்ட்டூன் மூலம் ஜோக்குகளை விளாசி தள்ளியிருக்கிறார் மதன். இந்த கேரக்டர்கள் இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு தீம் வைத்து தனது கார்ட்டூனால் ஜோக்கடித்திருக்கிறார். இவருடைய ஜோக்குகள் வெறும் கார்ட்டூனாகவோ, அல்லது ஓரிரண்டு வரிகளுடன் வருகிறது. இரண்டையுமே சேர்த்து பார்த்தால் தான் புரிகிறது. சிரிப்பும் வருகிறது. உ.ராஜாஜி என்ற வாசகர் எழுதியிருந்த ஜோக்,

“லேடி டைப்பிஸ்டோட நான் திருப்பதிக்கு போன விஷயம் எப்படியோ ஹெட் கிளார்க்குக்கும் மானேஜருக்கும் தெரிஞ்சு போச்சு...!’

“ஐயையோ! அப்புறம்?”

“குடைஞ்சு எடுத்துட்டாங்க... எனக்கு எங்கே லட்டு... எனக்கு எங்கே லட்டுன்னு!”


அடுத்தது, துணுக்குக்களை பார்ப்போம். சாலவாக்கம் கே.சுந்தர் என்ற வாசகர் எழுதியிருந்த துணுக்கு.

”செங்கல்பட்டு அங்கமுத்து திரையரங்கத்தில் 1978-ம் ஆண்டு தீபாவளி அன்று தப்புத்தாளங்கள், தாய் மீது சத்தியம், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய 3 படங்கள் 2 காட்சிகள் வீதம் ஒரே நாளில் வெளியிடப்பட்டன. மறுபடி இந்த வருடப்பொங்கலை முன்னிட்டு 12-ந் தேதியிலிருந்து அவள் என் உயிர், ஆயிரம் வாசல் இதயம், பவுர்ணமி நிலவில் ஆகிய 3 படங்கள் ஒரே நாளில் 2 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டன. இது போல் வேறெங்காவது 3 திரைப்படங்கள் ஒரே தியேட்டரில் வெளியாகியிருக்கின்றனவா?”

இப்ப மூன்று படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாவதே பெரிசு. இதில் ஒரு தியேட்டரில் என்பது ஓவரு. வேண்டுமானால், முப்பது தியேட்டரில் ஒரு படம் ரிலீஸாகும். இருந்தாலும் கே.சுந்தருக்கு அவர்களுக்கு தியேட்டர் பற்றி எழுதும் தொடரில் எனக்கு தெரிந்த பதிலை சொல்லுகிறேன்!

வாரப்பத்திரிக்கைகளில் தொடர்கதைகள் என்பதே காணாமல் போனபிறகு, இந்த காலத்து அக்காக்கள் எங்கு சென்று இப்படி கதை தொகுத்து புத்தகம் போட முடியும்? அவர்களும் சீரியல், ப்ளாக், பேஸ்புக் என்று பிஸியாகிவிட்டார்கள். எனக்கு சில சமயம் தோன்றும். ஏதேனும் கட்டுரை தொடரை, இப்படி தொகுத்து வைக்கலாம் என்று. பிறகு எப்படியும் இவர்களே தொகுத்து புத்தகம் போடுவார்கள், அப்போது வாங்கிக்கொள்ளலாம் என்று என்னுடைய சோம்பேறித்தனத்தால் விட்டுவிடுவேன். நானும் தொடர்ந்து விகடனோ, குமுதமோ வாங்குவதில்லை. தொடராக வரும்போது நினைத்து வைத்துக்கொண்டு, பிறகு புத்தகங்கள் வந்தபோது சிலவற்றை வாங்கியிருக்கிறேன். சில கட்டுரை தொடர்கள், பிடிஎப் வடிவத்திலும் எனக்கு கிடைத்துள்ளது. இருந்தாலும், பைண்டிங் செய்யப்பட்ட தொகுப்பு போல் வருமா?

குறைந்துக்கொண்டே செல்லும் இந்த பழக்கம், கூடிய விரைவில் காணாமல் போகக்கூடும். வளர்ந்து வரும் இணைய வசதிகள், அதற்கு ஆவண செய்யும்.

.