Friday, May 28, 2010

சிங்கம் - இன்னொரு சாமி

ஹரி தனது மசாலா பார்முலாவில் இருந்து சிறிதும் அச்சு பிறழாமல் எடுத்திருக்கும் கார காவியம் தான் - சிங்கம். சில நாட்களுக்கு முன்பு எழுதிய ஹரி பற்றிய பதிவைப் பார்த்தால் தெரியும். அப்படியே இருக்கிறது.

கிட்டத்தட்ட அனைத்துக்காட்சிகளுமே, ஏதோவொரு ஹரி படத்தில் பார்த்ததுபோல் தான் இருக்கிறது. ஆரம்பக்காட்சி ‘ஐயா’வை, தொடங்கி இறுதிக்காட்சி ‘ஆறு’, ‘சாமி’ வரை. படத்தின் இரண்டாம் பாதியை விட, முதல் பாதி எனக்கு பிடித்திருந்தது. குறிப்பாக, சூர்யாவுக்காக ஊர் மக்கள் பிரகாஷ்ராஜுடன் சீறும் காட்சி. இதிலும் பேருக்கு சில காட்சிகள் தூத்துக்குடியில் எடுத்துவிட்டு, காரைக்குடி சென்றுவிட்டார். அந்த பாண்டியன் தியேட்டர் எந்த ஊரு?



சூர்யா படம் முழுக்க விறைத்துக்கொண்டு, நரம்பு புடைக்க சுற்றிக்கொண்டிருக்கிறார். ஆக்ரோஷ வசனங்கள் பேசி, மனித சிங்கமாகவே சீறுகிறார். இப்படிபட்டவருக்கு அனுஷ்கா அறிவுரை சொல்லி, வீரம் வருவது கொஞ்சம் ஓவர். சூர்யா-அனுஷ்கா ஜோடிக்காட்சிகளில் அவர்களின் உயர இடைவெளி சமாளிப்பைப் பார்ப்பதிலேயே நேரம் போய்விடுகிறது. அனுஷ்காவின் தங்கையாக வருவது, விஜய் டிவி கனா காலங்களில் வருபவரா?!!!

விவேக் நீண்ட இடைவெளிக்கு பிறகு, சிறிது சிரிக்க வைத்திருக்கிறார். படம் முழுக்க கெட்ட வார்த்தைகளை இவர் பேசாமல், படம் பார்க்க வந்தவர்களை பேச வைத்திருக்கிறார். பத்மஸ்ரீக்கு நல்லா பெருமை சேர்க்கிறார்.

தகவல்கள் சேர்த்து சேர்த்து வசனங்களை அமைத்திருப்பதால், ஹரி நிறைய இடங்களில் கைத்தட்டல் பெற்றார். உதாரணத்திற்கு, பேசியே நிழல்கள் ரவியை ரோட்டுக்கு தள்ளி வரும் காட்சி. ‘ஒன்றரை டன் வெயிட்’ வசனத்தை டிவியில் போடாமல் இருந்திருந்தால், இன்னும் வெயிட்டாக இருந்திருக்கும்.

படமெடுத்துக்கொண்டிருக்கும் போது, இது சாமி மாதிரி இருக்குமா, காக்க காக்க மாதிரி இருக்குமா? என்று கேட்டதற்கு புது மாதிரியாக இருக்கும் என்றார்கள். இது சாமி மாதிரி தான். ஒரு தேவையில்லாத என்கவுண்டர் காட்சி மட்டும் 'காக்க காக்க’வை நினைக்க வைத்தது.

வருஷம் பூரா மசாலா படங்கள் வந்தாலும், ஹரி படங்கள் மட்டும் எப்படி ஒரளவுக்கு எடுபடுகிறது என்று யோசித்து பார்த்தால், அவர் வைக்கும் குடும்பக்காட்சிகள், கொஞ்சம் புத்திசாலித்தனமாக அமைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் காரணங்களாக தெரிகிறது. ஆக்‌ஷன், காமெடி, காதல், குடும்ப செண்டிமெண்ட், பாடல்கள் என்று வழக்கம்போல் எல்லா மசாலாவும் இதிலும் இருக்கிறது.

கிளைமாக்ஸில் ஹீரோவுக்கு கோபம் தலைக்கேறி வில்லனைப் போட்டு தள்ளுவதற்கு காரணமாக, ஹீரோ சைடில் ஒரு கேரக்டரைப் போட்டு தள்ளுவார். இதில் ஹரிக்கு அப்படி மாட்டியிருப்பது - போஸ்.

கிளைமாக்ஸ் பெரிதாக இம்ப்ரஸ் செய்யாவிட்டாலும், மாஸ் எண்டர்டெயின்மெண்ட் ரசிப்பவர்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்.

.

Thursday, May 27, 2010

பார்பேக்யு நேஷன்

'பார்பேக்யு நேஷன்' (Barbeque Nation) என்றொரு ரெஸ்டாரெண்ட், இந்தியா முழுக்க கடை விரித்திருக்கிறார்கள். பெங்களூரில் மட்டும் மூன்று இடங்களில் இருக்கிறது. இவர்களுடைய ஸ்பெஷல் - க்ரில்டு உணவு என்றழைக்கப்படும் ‘கம்பியில் சொருகி அனலில் காட்டிய’ உணவு வகைகள். சைவ, அசைவ வகைகள் இரண்டையுமே இந்த வகையில் பரிமாறுகிறார்கள். பப்ஃபே சிஸ்டம்.



இது நிறைய ரெஸ்டாரெண்டுகளில் இருப்பது தான். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், ஒவ்வொரு டேபிளிலும் ஒரு அடுப்பை வைத்திருக்கிறார்கள். நாம் டேபிளில் உட்கார்ந்தவுடன், ஒரு கனல் சட்டியை வைத்து அடுப்பை உருவாக்கிவிடுகிறார்கள். பிறகு, ஒவ்வொரு ஐட்டமாக அதில் வைக்கிறார்கள். எல்லாம் ஏற்கனவே சமைக்கப்பட்டது தான். இருந்தாலும், ஒரு ஷோவுக்காக இப்படி.



பக்கத்திலேயே சின்ன சின்ன கிண்ணங்களில், பல்வேறு சாறுகள் வைத்திருக்கிறார்கள். கூடவே, பெயிண்ட் அடிக்கும் சின்ன ப்ரெஷ்கள். ப்ரெஷ் மூலம் கம்பியில் சொருகி இருக்கும் ஐட்டங்களுக்கு பெயிண்ட் அடித்து, பெயிண்ட் அடித்து சாப்பிடலாம்.

அன்லிமிடட் என்பதால், கம்பிகள் வந்துக்கொண்டே இருக்கிறது. பேபி கார்ன், மஷ்ரூன், காலி ப்ளவர், வெள்ளரி, பன்னீர் போன்றவை சைவப்பிரியர்களுக்கும், சிக்கன், மட்டன், மீன், இறால் போன்றவை அசைவப்பிரியர்களுக்கும் கம்பியில் பரிமாறப்படுகிறது. நண்டு கேட்டால், இப்படி இல்லாமல் தட்டில் கொடுக்கிறார்கள். கூடவே ஒரு கொறடும். (அதான் ஸ்க்ரூ கழட்ட உதவுமே?)



இதிலேயே பாதிப்பேருக்கு வயிறு நிறைந்துவிடும். ஆனால், இதற்கு மேல் தான் மெயின் கோர்ஸ். பிறகு டெசர்ட்ஸ். அதுகளும் இதற்கு சளைத்தல்ல. இருப்பினும் ஸ்பெஷல் - கம்பியில் கோர்த்து வைத்த ஐட்டங்கள் தான்.

வாரயிறுதிகளில் ஹவுஸ்புல்லாகவே இருக்கிறது. புக் செய்யாமல் போக முடியாது. மற்ற நாட்களில் எப்படி என்று தெரியவில்லை.

பில்லை பார்த்தால், அனலில் காட்டிய உணவை விட, பர்ஸ் தீய்ந்து போய் இருக்கும். இருந்தாலும், கொடுக்கிற சாப்பாட்டுக்கு பரவாயில்லை என்கிறார்கள் சிலர்.

ஆனாலும், இப்படி சாப்பிடுவது என்னைப் பொறுத்தவரை அராஜகம் தான். ஆபிஸில் டீம் அவுட்டிங் கூப்பிடுகிறார்கள் என்றால் ஓகே. ஆனால் அப்படி சென்ற பிறகு, உங்கள் வீட்டினரையும் கூட்டி செல்ல தோன்றும்.

மேலும் தகவல்கள் இங்கே.

பின்குறிப்பு - ரொம்ப பிசியாக இருந்ததால் புகைப்படங்கள் அதிகம் எடுக்கவில்லை!

.

Wednesday, May 26, 2010

பெங்களூர் டைம்ஸ்

பசங்களை விட பொண்ணுங்க நல்லா படிப்பாங்க என்பது உலக நியதியாகிவிட்டது. பெங்களூரிலும் தான். இங்கு பத்தாவதிற்கு பிறகு பியுசி. இதற்கான கட்-ஆப் மார்க்கை கல்லூரிகள் முடிவு செய்வதற்கு, எங்கு ரூம் போட்டு யோசித்தார்கள் என்று தெரியவில்லை. பையன்களை விட பொண்ணுகளுக்கு கட்-ஆப் மார்க் அதிகம் வைத்துவிட்டார்கள். ஒரு பெண்ணை விட, ஒரு பையன் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தாலும், அவனுக்கு இடம் கிடைத்துவிடும். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், பசங்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்க மாட்டேங்கிறதாம்.

பசங்களா, மார்க் அதிகம் வரலை’ன்னு வருத்தப்பட வேண்டாம். உங்களுக்காக, திட்டமிட இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.

---

பெங்களூர் மடிவாளா ஐயப்பன் கோவில் அருகே அண்டர் பாஸ் அமைக்கிறார்களாம். திடீரென அந்த வழியை அடைத்துவிட, இன்று அந்த ஏரியா முழுக்க ட்ராபிக் ஜாம். இரண்டு கிலோமீட்டரை சர்வ சாதாரணமாக இரண்டு மணி நேரம் எடுத்துக் கடக்க வேண்டியிருந்தது. ஒரு வழிப்பாதையாக இருந்த மடிவாளா மார்க்கெட் சாலையை, இரு வழியாக மாற்றும்போதே மைல்டாக டவுட் வந்தது.

இன்று க்ளியர் செய்து விட்டார்கள். அந்த பக்கம் போகும் ஐடியா இருந்தால், மாற்றுக்கொள்ளுங்கள். குறைந்தது, மூன்று மாதத்திற்கு.

---

இந்த வாரயிறுதியில், பெங்களூரில் எஸ்.வி.சேகரின் ‘ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி’ நாடகமும், ’வால் பையன்’ நாடகமும் நடைபெறுகிறது.

மேலும் விவரங்கள் மற்றும் டிக்கெட் புக் செய்ய, இங்கு செல்லவும்.

.

Tuesday, May 25, 2010

ராமேஸ்வரம்

ஒரு அதிகாலை வேளையில் ராமேஸ்வரம் வந்திறங்கினேன். எல்லா நேரங்களிலும், மக்கள் வந்திறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். கோவிலைச் சுற்றிலும் லாட்ஜுகள், விதவிதமான பெயர்களில், விதவிதமான வசதிகளுடன். வட இந்தியர்கள் அதிகம் வரும் இடமென்பதால், அந்தந்த மாநிலத்தவர்கள் நடத்தும் விடுதிகளும் உண்டு. இது எதுவுமே வேண்டாம். கடவுள் இருக்கிறார், கடல் இருக்கிறது என்று வெளிப்புறத்திலேயே உறங்குபவர்களும் உண்டு.



ராமேஸ்வரம் ஒரு தனித்தீவு. சாலை வசதி, ரயில் வசதி இரண்டுமே இருப்பதால், அந்த எண்ணம் ஏற்படுவதில்லை. இந்த ஊர் சொல்லும் புராணக்கதை சூப்பரானது. பேமஸானது. சர்ச்சைக்குள்ளானது. அதாவது ராமர் இங்கிருந்து தான் இலங்கைக்கு சென்று ராவணனுடன் போரிட்டு, சீதை மீட்டு வந்தார். அதற்காக, அவர் இலங்கைக்கு அமைத்த பாலம் இங்கிருந்து தான். பாலம் கட்ட உதவிய அணிலை, பரிவுடன் தடவி கொடுக்க, அதன் முதுகில் ஏற்பட்ட மூன்று கோடுகளைப் பற்றி தெரிந்திருக்குமே? அந்த அணிலுக்கு சொந்த ஊர், இதுதான்.



போரில் ராவணன் என்ற பிராமணனைக் கொன்றதால் உண்டான தோஷத்தைக் கழிக்க, இங்கு ஒரு லிங்கத்தை அமைத்து, பூஜிக்க வேண்டிய அவசியம் ராமனுக்கு ஏற்பட்டது. இதற்காக லிங்கத்தை கொண்டு வர அனுமனை ராமர் அனுப்ப, அவர் திரும்பி வர நேரமாகிவிட்டது. இந்த நேரத்தில், தன் கையாலேயே கடற்கரை மண் கொண்டு ஒரு லிங்கத்தை சீதை உருவாக்க, அந்த லிங்கத்திற்கே பூஜை செய்தார். திரும்பி வந்த அனுமனுக்கு வருத்தம்.

நம்ம கொண்டு வந்த லிங்கத்தை கண்டுக்கொள்ளவில்லையே? என்று. இதனால், அவர் தன் மன வருத்தத்தை ராமனிடம் சொல்ல, ராமன் அந்த மண் லிங்கத்தை அசைத்து பார்க்க சொல்ல, அனுமன் அசைத்து பார்த்து முடியாமல் போக, சீதை உருவாக்கிய மண் லிங்கத்தின் அருமை புரிந்தது. அது தான் ராமேஸ்வர கோவிலில் இருக்கும் லிங்கமாம். அனுமன் கொண்டு வந்த லிங்கமும் பக்கத்தில் இருக்கிறது.

இந்த கதையை கோவிலில் பெரிய பெரிய வண்ணப்படங்களாக வரைந்து வைத்துள்ளார்கள். ஸ்பான்சர்களுடன் தான். இந்த மாதிரி கோவிலில் படம் வரைந்து கதை சொல்லும் உத்தி எனக்கு பிடித்த விஷயம்.



கோவில் முழுக்க, ஊர் முழுக்க வட இந்தியர்கள் தான். அதுவும், வந்திருந்த பெரும்பாலோர் வசதியானோர் அல்ல. கூட்ட கூட்டமாக சென்றனர். இங்கிருந்து தனுஷ்கோடிக்கு சொற்ப பஸ்களே ஓடுகிறது. இவர்களுடைய ஒரு கேங் ஏறினால், பஸ் நிறைந்து விடுகிறது. கண்டக்டர், செக்கிங் இன்ஸ்பெக்டர், தெருவோர விற்பனையாளர்கள் அனைவரும் ஹிந்தி பேசுகிறார்கள். கண்டக்டர், வட இந்தியர்களை உதாரணம் காட்டி, நம்மவர்களை பஸ்ஸில் ஒழுங்காக நிற்க சொல்கிறார். இந்த ரூட் பஸ்ஸை கொஞ்சம் அதிகம் விடலாம். அட்லீஸ்ட், தேவையான நேரங்களில் இருக்கும் கூட்டத்திற்கேற்ப. கூட்டமாக இருக்கிறதே என்று ஒரு பஸ்ஸை விட்டுவிட்டு, அடுத்த பஸ்ஸிற்காக இரண்டு மணி நேரம் காத்திருந்தேன்!



தனுஷ்கோடி. நமக்கு சமீபத்தில் வந்த சுனாமி பற்றி தான் தெரியும். இதே போல், 1964 வருட டிசம்பரிலும் ஒரு சுனாமி தமிழகத்தை தாக்கியது. அதில் தாக்குண்டு வெறும் மண் மேடாகி போன ஊர் தான், தனுஷ்கோடி. இந்த அழிந்த ஊரை சுற்றி பார்க்க, ஜீப்கள் வாடகைக்கு கிடைக்கிறது. இங்கு ஒரு பாழடைந்த தேவாலயத்தைக் காணலாம். இந்த ஊர் போகும் வழியில், சாலையில் இரு பக்கமும் கடலை காணலாம்.



பாம்பன் பாலம் என்றாலே அதை கட்ட உதவிய சிமெண்ட் தான் பலர் நினைவுக்கு வரும். அவர்கள் தான் அந்த பாலத்தை விளம்பரம் மூலம் பிரபலம் செய்தவர்கள். சமீபத்தில் மும்பை கடலில் கட்டப்பட்ட ராஜீவ் காந்தி பாலத்திற்கு, அன்னை இந்த இந்திரா காந்தி பாலம். பக்கத்திலேயே இருக்கும் ரயில் பாதை, பெரிய கப்பல்கள் செல்ல ஏதுவாக ஏற்றி இறக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் சென்றதால், இங்கு இறங்கி பார்க்க முடியவில்லை. பஸ்ஸில் இருந்தே எடுத்த போட்டோ.



இந்தியாவில் தரிசிக்க வேண்டிய 12 லிங்கங்களில், தமிழகத்தில் இருக்கும் ஒரே லிங்கம் ராமேஸ்வரத்தில் உள்ள கோவிலில் தான் அமைந்துள்ளது. மற்ற ஊர்களுக்கு போக முடிகிறதோ, இல்லையோ, பக்கத்தில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு போயிட்டு வந்துடுங்க.

சேது சமுத்திர திட்டத்திற்காக, அது தென் மாவட்டங்களுக்கு கொண்டு வரும் என்று சொல்ல பட்ட தொழிற் வாய்ப்புக்களுக்காக, எப்போது ஆரம்பிக்கும், நிறைவு பெறும் என்று துவக்கத்தில் எதிர்ப்பார்த்திருந்தேன். பிறகு, அதனால் கடலின் சுற்றுசுழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி சொல்லப்பட்டது. இன்னமும், அது பற்றிய உண்மை நிலை தெரியவில்லை. ஆனால், விஞ்ஞான ரீதியாக சொல்லப்படும் காரணங்களால் நிறுத்த முடியாமல் போன திட்டம், ராமர் பெயரை சொல்லி நிறுத்தப்பட்டிருக்கிறது. கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ, எல்லா அரசுகளுமே கடவுளுக்கு பயப்படுகிறது. அட்லீஸ்ட், ஓட்டு வங்கி நம்பிக்கைக்காக.

.

மாஞ்சா வேலு

"படத்துக்கு போலாமா?”

“ம். போலாம்.”

“என்ன படம்?”

“கனகவேல் காக்க”

“டேய்! என்னடா ஆச்சு உனக்கு? கரண் படத்துக்கா?”

“ஆமாடா. படத்துக்கு வசனம் ஒரு எழுத்தாளர். அதான். நல்லா இருக்குமேன்னு... நீ என்ன சொல்ற?”

”மாஞ்சா வேலு போலாம்.”

“அடப்பாவி!”

“மலை மலை டீம். அந்த படம் நல்லா இருந்தது. அதுக்கு தான்”

இவ்வளவு நாள், அந்த டீம் மட்டும் தான் அதை வெற்றிப்படம் என்று சொல்லி வருகிறார்கள் என்று நினைத்தேன். இப்பொழுது இன்னொருவனையும் பார்த்தேன். நான் கூட, சமீபத்தில் டிவியில் பார்த்தேன். சந்தானம் காமெடி நன்றாக இருந்தது. ஆனாலும், எதையும் முடிவெடிக்கவில்லை. பெங்களூரில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் ரிலீஸாகும் போது, இரண்டு படங்கள் இரு இரு காட்சிகளாக ஒரே திரையரங்கில் வெளியாகும். நாம் எந்த படம் பார்க்கலாம் என்று ஆபரேட்டர் முடிவெடுக்கட்டும் என்று கிளம்பினோம்.

ஆபரேட்டர் முடிவு செய்தது - மாஞ்சா வேலு. போஸ்டரைப் பார்த்துவிட்டு, நண்பன் சொன்னான்.

“கவலைப்படாதே! இந்த படத்துக்கும் ஒரு எழுத்தாளர் தான் வசனம்.”

வசனம் - பட்டுக்கோட்டை பிரபாகர்.

---



படத்தில் எனக்கு பிடித்தது - நடிகர்கள் தேர்வு. தொண்ணுறில் வந்த படத்துக்கு, தேர்வு செய்தது போல். ஹீரோ அருண் விஜய். அவருக்காக தான் இந்த படமே. அவருக்கு அண்ணன் - கார்த்திக். அப்பா - விஜயக்குமார். வில்லன் - சந்திரசேகர். கிளைமாக்ஸில் வரும் டிஜிபி - பிரபு. நீண்ட இடைவெளிக்கு பிறகு, ராவணனில் ஒன்று சேர்கிறார்கள் பிரபு-கார்த்திக் என்ற எதிர்ப்பார்ப்பை தள்ளிவிட்டு விட்டு இது வெளியாகிவிட்டது. ராவணன் கூட இந்த படத்தையும் சேர்த்து சொல்வது காலக்கொடுமை என்றாலும், ராவணனில் கார்த்திக் செய்திருப்பதை விட முக்கியமான கேரக்டராக இது இருக்கிறது என்று சொல்லிவிடலாம். எல்லாம் மணிரத்னத்தின் மேல் நம்பிக்கை தான்.

ரொம்ப நாள் கழித்து, கார்த்திக்கை பார்ப்பதால் ப்ரெஷாக இருக்கிறது. மனிதர் போலீஸ் வேடத்தில் அதிரடியாக இண்ட்ரோ கொடுக்கிறார். ’ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா...’ பாடலுக்கு அதே ஸ்டெப்ஸ் போடுகிறார். கார்த்திக் ஏன் இன்னும் ஹீரோவாக நடிக்கவில்லை என்று தோன்றும்படி அவரை காட்டியிருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ். ஆனால், ஜோடியாக அனுஹாசனை போட்டு கார்த்திக்கை கொஞ்சம் வயதானவராக காட்டிவிட்டார்! ரொம்ப புத்திசாலித்தனமாக கார்த்திக் கதாபாத்திரத்திற்கு ‘சுபாஷ் சந்திர போஸ்’ என்று பெயர் வைத்துள்ளார். ம்... நடத்துங்க... படத்தின் ஆறுதலான ஒரே விஷயம் - கார்த்திக். நல்லவேளை, நிறைய காட்சிகளில் வருகிறார்.

அருண் விஜய்யை அதிர்ஷ்டமில்லாதவர் என்று சொல்லக்கூடாது. கலைக்குடும்பத்தில் பிறந்திருக்கிறார். அதைவிட பெரிய அதிர்ஷ்டம். இம்மாதிரி படத்தை பிரமாண்டமாக எடுக்க, ஒரு சூப்பர் மாமனார் கிடைத்திருக்கிறார். அருணும் என்னலாமோ செய்து பார்க்கிறார். ஒண்ணும் தேற மாட்டேங்கிறது. இதில் ரஜினி போல், விஜய் போல் எல்லாம் நடித்திருக்கிறார். எல்லாமே ஒரு மாதிரி செயற்கையாக இருக்கிறது.

சந்தானம் - கஞ்சா கருப்பு - மனோகர் - சிங்கமுத்து கூட்டணி, இரண்டு இடங்களில் தியேட்டரை குலுங்க வைத்திருக்கிறது. மனோகரை ரெடிமெட் அடுப்பாக யூஸ் பண்ணும் இடத்திலும், நாடோடிகள் பாணியில் (சம்போ சிவ சம்போ) ஷகிலாவை அஸாம் லாரியில் ஏற்றி அனுப்பும் இடத்திலும்.

ஹீரோயினை எங்க பிடித்தார்கள் என்று தெரியவில்லை. படம் சும்மாவே இருட்டாக தெரிந்தது. இவர் ரொம்ப இருட்டாக தெரிந்தார். ஒளிப்பதிவு ப்ராப்ளமா, தியேட்டர் ப்ராப்ளமா என்று தெரியவில்லை. நான் முதலில் பார்த்த போது, காமெடி நடிகர் சாமுக்கு ஜோடி நடிகை என்று நினைத்தேன்!

இயக்குனர் தீவிர முருக பக்தர் போல. எல்லா படங்களிலும் வேல்’லையே காட்டுகிறார். படம் வேகமாக இருக்க வேண்டும் என்பதற்காக வசனங்கள் வேகமாக பேசப்படுகிறது. காட்சிகள் வேகமாக மாறுகிறது. கதாபாத்திரங்கள் வேகமாக ஓடுகிறார்கள். இது எல்லாவற்றையும் விட வேகமாக, அடுத்தது என்ன என்று ரசிகர்களுக்கு தெரிந்துவிடுகிறது!

படம் முடிந்தப்பிறகு, நண்பன் சொன்ன தீர்ப்பு - “மலை மலை அளவுக்கு இல்லைடா”. என்னது, அந்த அளவுக்கு கூட இல்லையா? பின்ன, அத பெஞ்ச்மார்க்கா வைச்சு படமெடுத்தா? அதே சமயம், இந்த படம் வெளியான நாளில் உலக அளவுல வெளியான ’பட்டங்கள்’ (Kites) படத்துக்கு ’மாஞ்சா’ பரவாயில்லை’ன்னு ரெண்டும் பார்த்தவுங்க சொல்றாங்க!

.

Monday, May 24, 2010

இயக்குனர் நாடித்துடிப்பு - ஹரி

சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த பத்திரிக்கை செய்தி இது. இயக்குனர் ஹரி நடிகர் விஜய்யிடம் ஒரு கதை சொல்ல, அதை நிராகரித்து அனுப்பிவிட்டார் இளைய தளபதி என்றது அந்த செய்தி. எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இப்போது நாம் கேள்விப்படும் செய்தி உண்மை என்று உறுதியாக சொல்லமுடியும். விஜய் படங்கள் ஏற்படுத்திய நஷ்டத்தை ஈடுகட்ட, ஹரியின் படத்தை வெளியிடுகிறார்கள்.



தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த ஹரி, முதலில் இயக்குனர் பாலசந்தரிடம் சேர்ந்து, பிறகு இயக்குனர் சரணிடம் ‘அல்லி அர்ஜூனா’ வரை பணியாற்றினார். முதல் படம் - ‘தமிழ்’. முதல் படத்தை மதுரை பேக்ட்ராப்பில் எடுத்தவர், அடுத்தடுத்து தனது படக்குழுவினரையும், பிறகு திரையரங்கில் ரசிகர்களையும் ஊர் ஊராக தமிழகம் முழுக்க கூட்டி சென்றார். பேரரசு, படத்தலைப்புக்கு ஒரு ஊரை முடிவு செய்துவிட்டு மற்றதை கவனிப்பார் என்றால், ஹரி கதைக்களத்திற்கு ஒரு ஊரை முடிவு செய்துவிட்டு மற்றதை பிறகு கவனிப்பார். படம் முழுக்க, ஊர் சம்பந்தப்பட்ட விஷயங்களை கதாபாத்திரங்கள் மூலம் பேசவிடுவார். படத்தலைப்பிலேயே ஒரு பாஸிட்டிவ்னெஸ் இருக்கும்.

சாமியில் திருநெல்வேலியையும், கோவிலில் நாகர்கோவிலையும், அருளில் கோயமுத்துரையும், ஐயாவில் தென்காசியையும் காட்டியவர், ஆறில் சென்னைக்கு வந்தார். அதற்கு பிறகு எடுத்த தாமிரபரணி, வேல், சேவல் படங்களுக்காக திரும்ப தெற்கேயே சென்றார். தற்போது, சிங்கமும் தூத்துக்குடி, திருநெல்வேலி வட்டாரங்களிலேயே எடுத்துள்ளார். தென்மாவட்டங்களில் அவருக்குரிய பரிச்சயங்களாலேயே, தொடர்ந்து அங்கு படமெடுப்பதாக காரணம் கூறியிருக்கிறார் ஹரி. (கவனிக்க: கதைக்களம் தான் வெவ்வேறு ஊர்கள். பெரும்பாலும் ஷூட்டிங் ஸ்பாட் - காரைக்குடி தான்.)

இதுவரை இவர் எடுத்த ஒன்பது படங்களில் சில தோல்வி படங்கள் இருந்தாலும், பெரும்பாலானவை வெற்றிப்படங்களே. தோல்விகளும் பெருமளவு தயாரிப்பாளர்களை பாதித்திருக்காது. ஏனெனில் திட்டமிட்டு படமெடுப்பதில் வல்லவர் இவர். சொன்ன தேதியில் படத்தை முடித்து, வெளியிடும் திறன் கொண்ட சொற்ப இயக்குனர்களில் ஒருவர் இவர்.

தயாரிப்பாளர்களிடையே, விநியோகஸ்தர்களிடயே நல்ல பெயர் இருந்தாலும், தீவிர தமிழ்ப்பட ரசிகர்களிடம் பிரபலமாக இருந்தாலும், பெரும்பாலோரின் பார்வையில் படாமல் இருக்கும் முன்னணி இயக்குனர் இவர். ஒருவகையில், இவருக்கு இது நல்லதாகவே அமைந்திருக்கிறது. இவர் படங்கள் அமைதியாக வெளியாகி, ஆர்பாட்டமாக ஓடும். சமீப காலங்களில், இது மாறி வருகிறது.

கலைஞர்கள் தங்கள் படைப்புகளைத் தாண்டி, மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது அவர்களது சில தனிப்பட்ட பண்புகளால் தான். ஹரியைப் பற்றி சொல்லும்போது, ஒருவர் விடாமல் அனைவரும் சொல்லும் விஷயம் - உழைப்பு & வேகம். ஒரு வேலையை எடுத்துக்கொண்டால், ராத்திரி பகல் என்று சிரமம் பார்க்காமல் செய்வது. இதனால் தான், தயாரிப்பாளர்கள் விரும்பும் இயக்குனராக தொடர்ந்து ஹரியால் இருக்க முடிகிறது. “பணம் முதலீடு செய்பவர்களை சந்தோஷப்படுத்தினால், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்த முடியும்” என்பது ஹரியின் எண்ணம். ரசிகர்களையும், முதலாளிகளையும் ஒருசேர திருப்தி செய்ய வேண்டுமென்பது நல்ல விஷயம் தானே?

கமர்ஷியல் படம் எடுப்பது ஒன்றும் தப்பான காரியமோ, சாதாரண காரியமோ அல்ல. அதற்கும் திறமை தேவை. ரசிகர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்ற எண்டர்டெயின்மெண்ட் லாஜிக் தெரிய வேண்டும். ஒரு மசாலா படமென்றால், சரியான விகிதத்தில், சரியான நேரத்தில் ஆக்‌ஷன் என்கிற காரத்தையும், காமெடி என்கிற இனிப்பையும், செண்டிமெண்ட் என்கிற உப்பையும் சேர்க்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில் இதை சரியாக செய்பவர் ஹரி.

ஆறு படத்தில் அதிக காரத்தையும், சேவல் படத்தில் அதிக உப்பையும் சேர்த்துவிட்டதே அப்படங்களின் தோல்விக்கு காரணம். எப்பேர்ப்பட்ட சமையல்காரர் என்றாலும், சமயங்களில் கூட குறைய ஆகத்தானே செய்யும்?



இன்றைய தேதியில் எந்தவொரு ஹீரோவையும் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் சிறப்பாக கூட்டி செல்லும் ஆற்றல் உள்ள இயக்குனர் - ஹரி. விஷால் ஒரு பேட்டியில் தன்னை தமிழ்நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் கொண்டு சென்றது ஹரி தான் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும், ஹரி இன்னமும் அடக்கமாக, புகழ் வெளிச்சத்தில் தலையை காட்டாமல், ஒளிந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்.

அவர் சமீபத்தில் ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருப்பது, “ஹரி டைரக்‌ஷனை நம்பி யாரும் படம் பார்க்க வர்றதில்லை. ஹீரோக்களை நம்பித்தான் வர்றாங்க. நான் அவங்க முதுகுக்குப் பின்னாடி பதுங்கிட்டு பில்ட்-அப் கொடுக்குறேன்... அவ்வளவுதான். நான் பாரதிராஜா, பாலா, அமீர், செல்வராகவன் மாதிரி இல்லை. என்னை மட்டும் வெச்சுக்கிட்டு ஜெயிக்க என்னால் முடியாது. நான் காவிய டைரக்டர் கிடையாது. பெரிய கிரியேட்டரும் கிடையாது. அதனால கமர்ஷியல் படம் பண்றேன்.”

உண்மைதான். இன்னொரு உண்மை. இவரை வைத்து படம் பண்ணும் தயாரிப்பாளர்கள் அனைவரும், இவரை வைத்து அடுத்து ஒரு படம் எடுக்கவும் தயாராக இருப்பார்கள். இது எல்லா இயக்குனர்களுக்கும் அமைவதில்லை.

இவர் தன்னை பெரிய கிரியேட்டர் இல்லையென்று சொன்னாலும், இவருடைய திரைக்கதை சோர்வில்லாமல், வேகமாக செல்லும். சின்ன ட்விஸ்ட்டுகள், பின்பகுதியில் அமையும் முடிவுகளுக்கு ஏதுவாக முன்பகுதியில் வைக்கும் சம்பவங்கள் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.

அதே சமயம், குறைகள் இல்லாமல் இல்லை. வசனங்கள் கவனம் பெற வேண்டும் என்பதற்காக இவர் அமைக்கும் வசனங்கள், ஆரம்பத்தில் செம பஞ்ச் ரகமாக இருந்து, சமீப காலங்களில் லொட லொடவென்று மாறியிருக்கிறது. ”ஒருச்சாமி, ரெண்டு சாமி” வசனத்திற்காக, ரஜினியை கைத்தட்ட வைத்தவராயிற்றே? (ரஜினி ஹரியிடம் கதை கேட்டார் என்றும், ஐயா கதையை தான் ஹரி ரஜினியிடம் சொன்னார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஹரியின் மாஸ்டர் பீஸ் என்று நான் கருதுவது, ஐயாவைத் தான்)

இன்னொரு குறை - இவர் படங்களின் பாடல்கள். சிறந்த ட்யூனை, தன் இசையமைப்பாளர்களிடம் இருந்து கறப்பவரல்ல ஹரி. அதுவா அமைந்தால் உண்டு என்ற ரகம் தான். இவருடைய வேகமே, இது போன்ற விஷயங்களில் நெகட்டிவ் காரணமாக அமைந்துவிடுகிறது என்று நினைக்கிறேன். தற்போது, பாடல்கள் வேறு எழுத ஆரம்பித்து இருக்கிறார்.

இவருடைய அனைத்து படங்களுக்கும் ப்ரியன் தான் ஒளிப்பதிவு. எந்த குறையும் சொல்லமுடியாத ஒளிப்பதிவாளர். விஜயக்குமார் வீட்டு மாப்பிள்ளை என்பதால், இவர் படங்களில் விஜயக்குமார் கண்டிப்பாக இருப்பார். சகலை ஆகாஷையும் காணலாம். அருண் விஜய்? ம்ஹும்! அதுக்கு இன்னும் காலமிருக்கு.

’அருவா இயக்குனர்’ என்னும் விமர்சனத்திற்கு, இவருடைய பதில் - ”கிராமத்து மக்களின் வன்முறை வெளிப்பாடு அருவாள்” என்பது தான். ஆனாலும், இவர் படங்களில் சண்டைக்காட்சிகளின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும். என்ன! சில படங்களில், ரத்தம் கொஞ்சம் ஓவராக சிந்தும். இவர் படங்களில் பறக்கும் கார் ஆக்‌ஷன் சீன்களுக்கு நான் ரசிகன். கார் வெடித்து மேலே பறக்காமல், ஐயா படத்தில் பக்கவாட்டில் பறந்து ஒரு பனை மரத்தில் மோதும். என்னே திங்கிங்! எனக்கும் தான் என்னே ரசனை!

எது எப்படியோ, பொழுதுபோக்கு படம் கொடுப்பதில் முக்கியமான இயக்குனர் - ஹரி. அதை மாஸ் எண்டர்டெயினராக கொடுப்பதில் முக்கியமானவர் - இயக்குனர் ஹரி.

பல வருடங்களுக்கு முன்பே, என் ப்ரொபைலில் ஹரியின் பெயரைப் போட்டுவிட்டு, இன்னமும் அவரைப் பற்றி ஒரு பதிவு போடாமல் இருந்தால் எப்படி? பதிவு போட்டாச்சு!

கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்குனர் நாடித்துடிப்பு இங்கு.

.

Thursday, May 20, 2010

ஏஏஏப்...

இந்த மாதம் போட்ட பதிவுகளை பார்த்தால், ரொம்ப சைவமாக இருக்கிறது. இவை எல்லாம் இரு மாதங்களுக்கு முன்பு, கோவில் கோவிலாக சுற்றிய போது எடுத்த படங்கள். இன்னும் சில கோவில்கள் இருக்கிறது. அதையும் தொடர்ந்து போட்டால், ’இந்த மாதம் கோவில்கள் மாதம்’ என்றாகிவிடும்.

அதனால இப்ப வேற!

---

உணவு மீதான ஆர்வம் வந்ததே, காலெஜ் ஹாஸ்டலில் சேர்ந்த பிறகு தான். நிறைய பேருக்கு அப்படி தான். அதுவரை வீட்டு சாப்பாட்டை குறை சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கு, அதையே தேவாமிர்தமாக மாற்றிக் காட்டும் போதி மரம், அனைத்து கல்லூரி ஹாஸ்டல் மெஸ்களிலும் கண்ணுக்கு தெரியாமல் நின்றுக்கொண்டு இருக்கிறது.

அடிக்கடி ஊருக்கு போயிட்டு வராமல், அவ்வப்போது செமஸ்டர் லீவுக்கு மட்டும் ஊருக்கு போகுபவர்கள், போய்விட்டு வரும்போது, வெயிட் அதிகமாக இருப்பார்கள். கொஞ்சம் மெருகேறி இருப்பார்கள். பிறகு, அடுத்த செமஸ்டர் லீவுக்குள் தேய்ந்துவிடுவார்கள்.

இந்த அனுபவக்காரணமோ என்னமோ, ஊருக்கு போனாலே சாப்பாட்டு கண்ட்ரோல் தளர்ந்துவிடும். இது சொந்த ஊர் என்றில்லாமல், எந்த ஊர் என்றாலும் என்றாகிவிட்டது.

---

இப்பவும் இரண்டு மூன்று வாரங்களாக, ஊர் ஊராக சுற்றிக்கொண்டு தான் இருக்கிறேன். எல்லாம் கேளிக்கை உலாவுவதல். நண்பர்கள் யாரையாவது பார்ப்பதற்காக செல்லும் ஜாலி ட்ரிப்கள்.

இப்படி சுற்றும் போது, சாப்பாடே பிரதான வேலையாகிவிடுகிறது. ஒருவேளை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, அடுத்த வேளைக்கான சாப்பாட்டு திட்டமிடல் நடந்துக்கொண்டிருக்கும். இம்முறை, போன இடங்களில் எல்லாம் விதவிதமாக, ஸ்பெஷல் ஸ்பெஷலாக சாப்பாடு. போன ஊர்களில் எல்லாம், ஸ்பெஷல் உணவு கிடைக்கும் இடங்களுக்கு கூட்டி செல்லும் நண்பர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.

---

வெளியூர்காரர்களுக்கு தான் ‘திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி’ பேமஸாக தெரியும். உள்ளூர்காரர்கள் திண்டுக்கல்லில் போய் விழுவது, வேணு பிரியாணி கடையில் தான். சண்டே - கூட்டமோ கூட்டம்.



ஹாப் பிரியாணியா, புல் பிரியாணியா என்று கேட்டுவிட்டு ஒரு கிண்ணத்தில் கொண்டு வந்து கொஞ்சமா பிரியாணி வைக்கிறார்கள். ஆட்களின் சுற்றளவைப் பொறுத்து, கிண்ணம் கிண்ணமாக இறங்கிறது. கொஞ்சம் காஸ்ட்லிதான். பட், ரொம்ப டேஸ்டி. அவ்வப்போது, நாம் கேட்காமலேயே, விசாரித்துவிட்டு மட்டன் கோலா உருண்டைகளை பரிமாறுகிறார்கள். கரண்டி என்றழைக்கப்படும் முட்டை பணியாரங்களை பரிமாறுகிறார்கள். வாவ். கேட்டால், மூளைகள், காடைகள், முயல்கள் எல்லாம் உங்களை நோக்கி படையெடுக்கும்.

ஆனால், இப்படி வாயை பிளப்பது எல்லாம் சாப்பிட இடம் கிடைத்தப்பிறகு தான். கூட்டமாக இருக்கும் சமயம், அவர்கள் சர்வீஸை பார்த்து ஓடி விடுவீர்கள்.



பெரு நகரங்களில் இருப்பது போன்ற, கூட்டமாக இருக்கும் சமயங்களில் பெயரை எழுதிக்கொண்டு பிறகழைக்கும் சம்பிராயம் எல்லாம் இங்கு இல்லை. நீங்களாக ஒரு டேபிளை தேர்வு செய்துக்கொண்டு, அதை சுற்றி வளைக்க வேண்டும். அவர்கள் சாப்பிடும் இலையை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை அவர்கள் எக்ஸ்ட்ரா பிரியாணி வாங்கும் போது, நீங்கள் பெருமூச்சு விட வேண்டும். அவர்கள் ரசத்துக்கோ, தயிருக்கோ செல்லும் போது, நீங்கள் கைகளை குலுக்கிக்கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கைக்கழுவ எழுந்தவுடனே, நீங்கள் அவர்கள் இடத்தை ஆக்ரமிப்பு செய்துவிட வேண்டும். இப்படிப்பட்ட வீர தீர செயலுக்கு பிறகு சாப்பிடும் பிரியாணியின் சுவையே, தனி சுவை தான்.

பிறகு, சரித்திரம் திரும்பும். நீங்கள் சுற்றி வளைக்கப்படுவீர்கள். சுற்றிலும் கண்கள், உங்கள் இலையை மேயும். இதுக்கெல்லாம் பீல் பண்ணவா முடியும்? வந்த வேலையை மட்டும் பார்த்துட்டு போக வேண்டியது தான்.

---

அடுத்து சென்னை சம்பவம். ஒரு வேலை விஷயமாக, நள்ளிரவு வரை சுற்றி கொண்டிருந்தோம். யாருமே இரவு உணவு சாப்பிடவில்லை. காரணம், மதிய சாப்பாடு. அதை பற்றி அடுத்து!

இரவு இரண்டு மணிக்கு பசி எடுத்தது. சும்மா தூங்கலாம் என்றால், நண்பனொருவன் கூடவே கூடாது என்று சொல்லிவிட்டான். எவ்வளவு தூரமென்றாலும் சென்று, நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமாம். விசாரித்ததில், தி-நகரில் ஒரு ஹோட்டல் இரவு இரண்டோ மூன்றோ மணி வரை திறந்திருக்குமாம். நாங்கள் சென்ற நேரம் அதையும் மூடிவிட்டார்கள்.

திரும்ப விசாரித்ததில், தி-நகர் ரெஸிடென்ஸி டவரில் மிட்-நைட் பபே கிடைக்கும் என்றார்கள். இதெல்லாம் ஓவர் என்று தோன்றினாலும், “ஸ்டார்ட் பண்ண மாட்டோம். பண்ணிட்டா...” என்கிற பஞ்ச் காரணமாக சென்றோம்.



அருமையான இண்ட்டிரியர். அந்த இண்ட்டிரியருக்கு சம்பந்தமே இல்லாமல் ஒருவர் பொடி தோசை சுட்டுக்கொண்டிருந்தார். இந்த நேரத்திலுமா, இவ்வளவு பேர் சாப்பிடுகிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. இட்லி, தோசை, பிரியாணி, சிக்கன் கறி, முட்டை குழம்பு என்று அர்த்த ராத்திரியில் மக்கள் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். தமிழ் சினிமாவின் முக்கியமான எடிட்டர் ஒருவரும், கர்ம சிரத்தையாக இரு இளம் பெண்களுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

---

இப்ப, அந்த மதிய சாப்பாடு பத்தி. அடப்பாவி, விட மாட்டியா என்கிறீர்களா? இத மட்டும் சொல்லிட்டு முடிச்சிரலாம்.

கதீட்ரல் சாலையில் இருக்கும் கோகோனட் லகூனுக்கு (Coconut lagoon) கூட்டி சென்றான் மீன் பிரிய நண்பன். யார் வந்தாலும், இங்கு தான் இழுத்து வருவானாம். கேரளா, மங்களூர், கோவா சிறப்பு உணவு வகை கிடைக்குமென்றான். மெனுவையே பார்க்கவில்லை. அவனாகவே ஆர்டர் செய்தான்.



அதனால் ஐட்டம் பெயர் எல்லாம் தெரியவில்லை.

வாழை இலைக்குள், மசாலா தடவிய முழு மீன் ஒன்றை அவித்துக் கொண்டு வந்தார்கள். அது சூப்பர். அப்புறம், கேட்க கேட்க ஆப்பம் சுட்டுக்கொடுத்து கொண்டிருந்தார்கள். மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் அதுவும் சூப்பர். இன்னும், நண்டு, இறால் என்று என்னலாமோ வந்திறங்கியது. எல்லாமே சூப்பர்.

வெளி இடங்களில் மீன் சாப்பிடுவது என்பது என்னை பொறுத்தவரை ரிஸ்க் எடுக்கும் சமாசாரம். கடல் இருக்கும் ஊர் என்றால் பரவாயில்லை. இல்லாவிட்டால், சிரமம் தான். இங்கு அந்த சிரமம் கிடையாது. இவர்கள் பெங்களூரிலும் கிளை வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன். இனி தான், கண்டுப்பிடிக்க வேண்டும்.

---

அவ்வளவு தானா என்றால் இல்லை.

இரவு மன்ஹட்டன் ஹோட்டல் மொட்டை மாடி ரெஸ்டாரெண்ட் கூட்டி சென்றான். எல்லாம் சரக்கடிக்கும் கூட்டம். உணவு சுமார் தான். சுற்றி பார்த்தால், பாதி சென்னை தெரிகிறது. இரவென்பதால், சரியாக தெரியவில்லை.

பகலில் செல்லலாம் தான். என் உச்சி மண்டை சுர்ருங்குமே!

.

Monday, May 17, 2010

தாராசுரம்

தாராசுரம். ரொம்ப பெரியதாகவும் இல்லாமல், சிறியதாகவும் இல்லாமல் அளவோடு அழகாக இருக்கும் கோவில். ஸ்பெஷல் கோவிலுக்கு, நண்பர் மகேந்திரனின் ஸ்பெஷல் வர்ணனைகளுடன் புகைப்படங்கள்.

----

அது யாரையுமே ஒரு நிமிடம் அயர வைக்குமொரு சோழனின் சுவடு... தாராசுரம்... தினம் பல வெளிநாட்டவர் வியப்புடன் வாய் திறந்து நோக்கியும், வழக்கம் போல் நம்மவர் சூடம் கொளுத்தி எண்ணெய் துடைக்க இடம் தேடுமொரு அற்புத தலம்.



கும்பகோணத்திலிருந்து வெறும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நகரத்தின் ஜன சந்தடியிலிருந்து ஒதுங்கி நிற்கும் ஊர் தாராசுரம். இரண்டாம் ராஜராஜனால் (கி.பி 1146 -1173) பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயில். தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரத்தை விட அளவில் சிறிய ஆனால், அவற்றின் நுணுக்கத்துக்கு சற்றும் குறை சொல்ல முடியாத கோயில் தற்போது UNESCOவின் உபயத்தில் மிளிர்கிறது.



வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று இன்றளவும் கருதப்படும் இந்த தலம் வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டு, இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் மூலத்தலத்தின் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், நாங்கள் சென்ற போது வந்திருந்த ஒரு அயல்நாட்டு தம்பதியிடம் உடன் வந்திருந்த வழிகாட்டி, ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பதாய் சொல்லி, அவர்கள் முகத்தை பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். இதிலென்ன இருக்கு என்ற ரீதியில் அவர்கள் அடுத்த தூணுக்கு நகர்ந்து கொண்டிருந்தனர்.



கோயிலின் உட்பகுதி, சமதளத்தை விட சற்றே தாழ்ந்திருக்கிறது, நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் இசைத்தூண்கள் மற்றுமொரு சிறப்பு. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள் தட்டும்போது சுரங்களை கொடுப்பது வெகு அழகு. இதே போன்ற தூண்களை மதுரை, ராமேஸ்வரம் மற்றும் சிதம்பரத்திலும் கண்டிருக்கிறேன். அவையெல்லாம் மக்கள் தட்டி தட்டி இப்போது கவுண்டமணி கேட்டு செந்தில் வாசிக்கும் "நலந்தானா?" போல ஒலிக்கிறது. மதுரையில் மட்டும் தொடமுடியாதவாறு கம்பிவலை போட்டு பாதுகாக்கிறார்கள்.



குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்திருக்கிறது. தூண்களில் நர்த்தன கணபதி உள்ளங்கை அகல சிற்பமாக நிற்கிறார். நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும் சில சென்டிமீட்டர் அளவிலேயே தெளிவாக செதுக்கப்பட்டுள்ளன. எத்தனை சிற்றுளிகள், எத்தனை விரல்கள், எத்தனை நாட்களாய் ஒரு தவமென செய்திருக்குமிதை என்று உணர முடிகிறது. கோபுரத்தை சுற்றி வருகையில் பின்புற சுவரில் மங்கிப்போன ஓவியங்கள் தென்படுகின்றன. கோபுரம் ஐந்து நிலை மாடங்களுடன் 85 அடி உயரமாய் நிமிர்ந்து நிற்கிறது.



ஒருபுறத்தில் யானையாகவும், எதிர்புறத்தில் காளையாகவும் தோன்றுமொரு சிற்பம், இதை திருபுவனத்திலும் பார்த்தது போல நினைவு. ஒரு தலை இடுப்புவரை, இடம், வலம், மேலென மூன்று புறமும் கால்கள் அந்த உடலுடன் இணையும் சிற்பம், ஒரு கழைக்கூத்தாடி பெண்ணை நினைவுபடுத்துகிறது. கோயில் தூண்களில் கழைக்கூத்தாடியின் சிற்பம், கலைகளுக்கு மதிப்பளித்த ராஜராஜனின் விசாலமான மனதை காட்டுகிறது.



இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜபுரம் என்று பெயரிடப்பட்டு, இராராசுரமாகி இன்று தராசுரமென நிற்கிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி. இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம் வந்து இங்கு லிங்க வழிபாடு செய்ததால் இறைவனின் பெயர் ஐராவதேஸ்வரர். யமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்கு நீராடி விமோசனம் பெற்றதால், இங்கு தீர்த்தம் "யமதீர்த்தம்".



2004 ம் வருடம் UNESCO வினால் உலக புராதான நினைவிடமாக (world heritage monument ) அறிவிக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு சுற்றிலும் புல்வெளியும், பசுந்தரையுமாய் இருக்கிறது. இருந்தும் உள்ளூர் வாசிகள் கூட எட்டிப்பார்க்க மறுக்கிறார்கள்.



எப்போதும ஒன்றிரண்டு அயல் நாட்டவர் தென்படுவதும் அவரை நம்மவர் பின்தொடர்வதும் இங்கு வாடிக்கை. நாங்கள் சென்றிருந்த நாளில் வந்திருந்த அயல்நாட்டு பெண்மணி, அங்கிருந்த ஒரு இளம்பெண்ணிடம், அவள் திருமணத்திற்கு யார் மணமகனை தேர்ந்தெடுப்பார்களென்றும், தந்தை தேர்ந்தெடுக்கும் மணமகன் அவளுக்கு விருப்பமில்லை எனில் என்ன செய்வாள் என்றும் கவலையோடு விசாரிக்க, அதை வழிகாட்டி மொழி பெயர்த்துக்கொண்டிருந்தார். அந்த யுவதி இறுகப்பற்றிய கைகுட்டையால் வியர்வையை மட்டுமே துடைத்து வெட்கத்தை துடைக்க முடியாமல் விழித்தது - அந்த வெயில் நேரத்தில் குறுங்கவிதை.



ஊரில் சௌராஷ்டிர மக்கள் அதிகமிருப்பதால் விதிகளில் பளபளக்கும் பட்டு நூல் காய்கிறது. சுற்று பிரகாரங்களில் அமைக்கப்பட்ட வரிசையான சிறு நந்திகளின் தலைகளும், ரதத்தில் பிணைக்கப்பட்ட குதிரைகளின் முகமும் இறை மறுப்பாளர்களால் சிதைக்கப்பட்டிருப்பதை பார்க்கையில் மிகுந்த வேதனையளிப்பதாய் இருக்கிறது. இவர்கள் இறையை மறுக்கிறார்களா இல்லை கலையை மறுக்கிறார்களா என்றொரு கேள்வி வருகிறது. இதையே யோசிக்காமல் செய்திருக்கும் இவர்களின் பகுத்தறிவு மெச்ச வைக்கிறது...!!

---

நன்றி மகேந்திரன்.

.

Thursday, May 13, 2010

திருவலஞ்சுழி

இந்த ஊர் கும்பகோணம் பக்கத்தில் இருக்கிறது. சுவாமிமலையில் இருந்து நடந்து போகும் தூரத்தில். இப்படி ‘நடந்து போகும் தூரத்தில்’ என்று சொல்வதற்காகவோ என்னவோ பஸ் இருந்தும் ஒரு புண்ணிய ஆத்மா என்னை நடத்தி கூட்டி சென்றது!



காவிரி இந்த ஊர் பக்கத்தில், வலதுபுறம் சென்று திரும்புவதால், இந்த ஊருக்கு இப்படி ஒரு பெயராம். இந்த கோவிலில் இருக்கும் விநாயகரின் தும்பிக்கையும் வலது பக்கமாக இருக்கிறது.



இந்த ஊர் பிள்ளையார் வெள்ளை நிறத்தில் இருக்கிறார். பாற்கடல் நுரையால் உருவான பிள்ளையார் என்பது அதற்கான புராணக்கதை.



கோவிலில் கூட்டமே இல்லாததால், ரொம்ப அமைதியாக இருக்கிறது. எப்போதுமே கூட்டம் வருவதில்லை போலும். ஆனால், கோவில் பெரிய கோவில். சோழர் காலத்துக் கோவில்.



ஐந்து அடுக்கு கோபுரம், ஐந்து பிரகாரங்கள், நுண்ணிய கலைநயத்துடன் கூடிய தூண்கள் என கோவில் அழகாக இருக்கிறது. பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.



ஒரே கல்லில் செய்யப்பட்ட ஜன்னல் போன்ற சிற்பங்கள், இக்கோவிலின் மற்றொரு சிறப்பு.



கும்பகோணம், சுவாமிமலை போய்விட்டு, இங்கு போகாமல் வந்துவிடாதீர்கள்.



ஊர் கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் இருக்கிறது. ரொம்ப சின்ன ஊர் தான். கொஞ்சம் மனிதர்களும், ஒரு யானையும் தான் இருக்கிறது. கோவிலுக்குள் ஒரு பசுவையும் பார்த்தேன்.

.

Wednesday, May 12, 2010

தஞ்சை - பிரகதீஸ்வரர் கோவில்

முதலாவதோ, இரண்டாவதோ படிக்கும் போது சென்றது. அதன் பிறகு, தஞ்சைக்கு இப்போது தான் செல்கிறேன்.



நான் சென்ற தினம், நல்ல கூட்டம். எல்லாம் பக்தி வரவழைத்த கூட்டம்.



கோவில்கள் வெறும் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. முக்கியமாக, நம்முடைய முன்னோர்களின் திறமையை பறைசாற்றும் சின்னங்கள்.



நிறைய சிறப்புகளை கொண்ட கோவில் இது. உயரமான கோபுரம், பெரிய லிங்கம், பெரிய நந்தி, தரையில் விழாத கலச நிழல் என.



இது போட்டோ ஷாப்பில் மெருகேற்றிய புகைப்படம்.



கோவிலில் நூதனமுறையில் இளநீர் சுமந்து செல்லும் ஒருவர்.



மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுதுறையின் வசம் இருப்பதால், கோவில் சுத்தமாக இருக்கிறது. புல் தரையில் மல்லாந்து படுத்து கிடந்து, கோபுரத்தை பார்ப்பதில் என்னா சுகம்?




கோவிலின் கோபுரத்தில் ஏறிய அனுபவத்தை ஒருவர் இங்கு பகிர்ந்திருக்கிறார். பாருங்கள்.

.

Wednesday, May 5, 2010

சுறா - விஜய்க்கு மைல்கல்

சுறால ஒண்ணும் ஸ்பெஷலா கிடையாது. வேட்டைக்காரன் மாதிரிதான் என்று விஜய்யே சொன்ன பின்னாடி, படத்தை குறை சொல்வதில் அர்த்தமில்லை.

---



எந்த படம் வெளியானாலும், பதிவுலகத்தில் விமர்சன பதிவுகள் பொளந்து கட்டும். இதற்கு எதிர்பார்த்ததை விட கம்மி தான். ஒருவேளை, நிஜமாவே அவ்வளவு வரவேற்பு இல்லையோ? என்று நினைத்தால், தியேட்டர்களில் கூட்டமாக தான் இருக்கிறது. அதனால, படம் பார்த்துட்டு பார்த்தத வெளியே சொல்ல மக்கள் தயங்குறாங்க’ன்னு நினைக்குறேன். இப்படியொரு தனித்துவமான நிலையை இப்படம் தோற்றுவித்திருக்கிறது.

அப்படியே படம் பார்த்து, பதிவு எழுதியவர்களும் “ஏன் இந்த படம் பார்த்தோம்?” என்று முதலில் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்கிறார்கள். பிறகே, படத்தை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார்கள். ஏதோ இயற்கைக்கு புறம்பான காரியத்தை செய்த குற்ற உணர்ச்சி, இவர்கள் எழுத்தில் தெரிகிறது.

இன்னொரு விஷயம். முன்ன, விஜய் படங்கள் வந்தவுடன் பார்த்தால், ஆச்சரியத்துடன் கேட்பார்கள். “(அதுக்குள்ள) பார்த்தாச்சா?” என்று. இப்பவும், அதே “பார்த்தாச்சா?” கேள்விதான். ஆனால், ஆச்சரியத்திற்கான காரணம் தான் வேறாக இருக்கிறது. சிலர், கூடவே அதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறார்கள்.

இப்படி பல வகையில், மாற்றங்கள் வந்து சேர்ந்திருக்கிறது, விஜய் படங்களுக்கு. விஜய்க்கு. விஜய்யின் திரையுலக வரலாற்றில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய மாற்றம். ஒரு மைல்கல்.

கிளாஸ் படங்கள் மட்டுமே பார்க்கும் பெண்களுக்கும், விஜய் பிடித்த நடிகராக இருந்தார். சமீபகாலமாக, விஜய் படங்களில் பயமுறுத்தும்படி வில்லன்கள் வருவதால், அழகான பெண்கள் தியேட்டர் செல்ல பயந்து தயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது இந்த படமென்று இல்லை. கொஞ்ச காலமாகவே இருக்கிறது. இவர்கள் “விண்ணைத்தாண்டி வருவாயா” பார்த்துவிட்டு, அடுத்தது “ராவண”னுக்காக வெயிட் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தியேட்டர் வர, விஜய் ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படியெல்லாம் வெளி உலகில் நடந்தாலும், தியேட்டரில் கூட்டம் தாறுமாறாகவே இருக்கிறது. ஒரு வார நாளில், செகண்ட் ஷோவுக்கு கூட பெங்களூரில் நான் பார்த்த தியேட்டரில் கூட்டமாகவே இருந்தது.

தியேட்டர் முன்னால் ஒட்டியிருந்த போஸ்டரில், பால் வடிந்த சுவடு, பால் அபிஷேகம் நடந்ததற்கு அத்தாட்சியாக இருந்தது. பேனரில் மேலே ரஜினி, சிரஞ்சிவி, ராஜ்குமார் ஆகியோர் இருந்தனர். ராஜ்குமார் காலைத் தொட்டு வணங்கும் விஜய்யை பேனராக வைத்திருந்தார்கள்.

---

இனி, படத்தில் விஜய்யை பற்றி....

1) படத்தில் விஜய் நன்றாக நீச்சல் அடித்திருக்கிறார்.
2) நன்றாக மீன் குழம்பு வைக்கிறார்.
3) வழக்கம்போல், நன்றாக ஆடியிருக்கிறார். விஜய் ரசிகர்களுக்காக, ஸ்பெஷல் போனஸாக. உருண்டு புரண்டு கஷ்டப்பட்டு ஆடவேண்டியதை, அநாயசமாக ஆடியிருக்கிறார்.
4) க்ளோசப் காட்சிகளில், விஜய் முகம் உருண்டையாக இருக்கிறது.

விஜய் நிறைய சென்டிமெண்ட் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். தனது வெற்றிப்படங்களில் இருந்த விஷயங்களை, தற்போது வரும் ஒவ்வொரு படங்களிலும் வைத்து பார்க்கிறார்.

---

டைட்டிலில் விஜய் பெயரையும், கலாநிதி மாறன் பெயரையும் ஒரே மாதிரி போடுகிறார்கள். கூடிய விரைவில், கலாநிதி மாறனுக்காக ஸ்பெஷல் டைட்டில் கிராபிக்ஸ் ரெடி செய்து விடுவார்கள் போலிருக்கிறது.

விளம்பரங்களில் கலாநிதி மாறனின் ‘க’ என்ற எழுத்தின் அளவுக்கு தான், விஜய்யின் முழு பெயர் அளவே இருக்கிறது.

---

எனக்கு படத்தில் பிடித்தவை,

1) கோர்ட் சீனில் விஜய், டீ.ஆர். போல் ”டண்டனக்கா டணக்குனக்கா” வசனம் பேசியது.
2) வெண்ணிற ஆடை மூர்த்தி மேடையில் பாடும்போது, வடிவேலு கீழே இருந்து கொடுக்கும் சைகை.
3) வில்லன் தமன்னாவை கடத்திக்கொண்டு வைத்துவிட்டு, போனில் வெறித்தனமாக பேசிக்கொண்டிருக்கும் போது, ஒண்ணும் தெரியாத பாப்பாவாக படிக்கட்டில் தமன்னா அமர்ந்திருப்பது.
4) படகை ரோட்டில் குறுக்காக நிறுத்தி வைத்துவிட்டு, ‘ஐயய்யோ! இது எப்படி இங்க வந்தது?’ என்று வடிவேலு அதிர்வது.

கையில இன்னும் ஒரு விரல் மிச்சமிருக்கு.

---

தெலுங்கில் ‘பொம்மாயி’ பாட்டை பார்த்தேன். தமன்னா இடுப்புக்காக தான், அந்த டவுசர் டான்ஸ் என்று நினைத்தேன். அனுஷ்காவுக்கும் அதே டான்ஸ் தான்.

---

பழைய தலைவர்களுக்கும், புது தலைவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

பழைய தலைவர்கள், ஒரு பேச்சுக்காவது “உங்களுக்காக உயிரை கொடுப்பேன்.” என்பார்கள். இப்ப, “எனக்காக உயிரைக்கொடுக்க ஒரு கூட்டம் இருக்கிறது” என்று தான் சொல்கிறார்கள்.

---

1) தியேட்டருக்கு வெளியே மசாலா மாங்காய் விற்றவருக்கு, எல்லாம் விற்று தீர்ந்ததில் சந்தோஷம்.
2) டிக்கெட் க்யூவுக்கு பக்கத்தில் உட்கார்ந்து, பார்வை இழந்த ஒருவர் பானையைத் தட்டி பாடிய பாடல்களுக்காக, அவர் முன் இருந்த துண்டில் நிறைய சில்லறைகள் விழுந்தது.
3) ரிலீஸான முதல் மூன்று நாட்களிலும், 50 ரூபாய் டிக்கெட்டை 100 ரூபாய்க்கும், 100 ரூபாய் டிக்கெட்டை 200 ரூபாய்க்கும் விற்று, ப்ளாக்கில் டிக்கெட் விற்பவர் மகிழ்ச்சியாக இருந்தார்.
4) தியேட்டரில் முட்டை பப்ஸ் விற்றவர், நிறைய விற்றதில் மகிழ்ச்சியாக இருந்தார்.

நாலு பேருக்கு நல்லதுன்னா, எதுவும் தப்பில்லை.

.

Sunday, May 2, 2010

பாண்டிய துறைமுகம் - கொற்கை

கொற்கை, பாண்டிய ராஜ்யத்தின் துறைமுக நகரம் என்று தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைவரும் பாடப்புத்தகம் மூலம் படித்திருப்போம்.ஆனால் எத்தனை பேருக்கு அந்த ஊரின் தற்போதைய நிலை தெரியும்? கொற்கை, தற்போது ஒரு சிறிய கிராமம். நான் சிறு வயதில் இருந்து, பல முறை அந்த ஊருக்கு அருகே வரை சென்றிருக்கிறேன். ”கொற்கை - 3 கி.மீ.” என்று எழுதியிருக்கும் பலகையை பலமுறை கடந்தும், அந்த ஊருக்கு இதுவரை சென்றதில்லை.

சமீபத்தில் மீண்டும் ஒருமுறை அந்த 3 கி.மீ. போர்ட்டை கடக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இம்முறை கண்டிப்பாக அந்த ஊரில் என்ன தான் இருக்கிறது? என்று பார்த்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

போன வேலையை முடித்துவிட்டு, பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். எங்கே என்று கேட்டவர்களிடம், கொற்கை என்றால், அங்கு என்ன இருக்கிறது? என்பது பதில் கேள்வியாக இருந்தது. ”பழைய காலத்து ஊராச்சே, என்ன இருக்கிறது என்று பார்க்க போகிறேன்” என்றால், “அங்கு ஒன்றும் இல்லை” என்பது பதிலாக இருந்தது. இருந்தாலும், போகாமல் சும்மா இருக்க பிடிக்கவில்லை. அப்படி என்ன தான் அங்கு ஒன்றும் இல்லை என்று பார்க்க கிளம்பிவிட்டேன்!

---

கொற்கை முன்பு துறைமுகமாக இருந்தாலும், இன்று கடல் பக்கத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது எப்படி துறைமுகமாக இருந்தது என்பது என் பழைய ஆச்சரியம். இணையத்தில், தமிழ்நாட்டு கடற்புர மாற்றங்களை வாசித்தப்போது சிறிது புரிந்தது. எவ்வளவு மாற்றங்கள்? இன்னும், எவ்வளவு மாறுமோ?

முன்பு, கொற்கை பக்கமாக தாமிரபரணி பாய்ந்து கொண்டிருந்ததாம். ஆறு வழியாக, கடலுக்கு பாதை. இன்று ஆறும் இல்லை. கடலும் இல்லை. ஆனால், ஊரில் எந்த இடத்தை தோண்டினாலும், கடல் இருந்ததற்கு அத்தாட்சியாக சிப்பிகள், சங்குகள் கிடைக்கிறதாம்.

---



போகும் வழி, வாழைத் தோட்டங்களால் நிறைந்திருந்தது. மண் வாசம் அருமையாக இருந்தது. கொற்கைக்குள் வந்துவிட்டேன். வழக்கமான கிராமமாகத்தான் இருந்தது.

ஒரு பெரியவர் அருகே சென்று நிறுத்தி விசாரித்தேன். அவர் சொன்னது,

“பழைய காலத்து அம்பு, வில், பானை பொருட்களை காட்சிக்கு வைத்து காட்ட ஒரு இடம் இருந்தது. ஒரு ஆபிசரும் இருந்தார். ஆனா, இப்ப கொஞ்ச நாள் முன்னாடி, யாரும் இங்கு வருவதில்லை என்பதால் அது திருநெல்வேலிக்கு இடம் மாறியது. இப்ப, இங்க எதுவும் கிடையாது. கொஞ்ச தூரம் போனா, ஒரு பழைய பிள்ளையார் கோவில் இருக்கிறது. அவ்வளவுதான்.”

அந்த கோவிலுக்கு வண்டியை விட்டேன். சின்ன கிராமத்து சாலை. இடது பக்கம், வழக்கம் போல் வாழைத்தோட்டம். வலது பக்கம், நீர் இல்லாத குளம் போல் இருந்தது.



சிறிது தூரத்தில், வாழைத்தோட்டத்துக்கிடையே, எப்போது வேண்டுமானாலும் கீழே விழும்வாறு, ஒரு சிறிய வளைவு இருந்தது. அதில் “பழமையான கொற்கை அக்காசாலை ஸ்ரீஈஸ்வரமுடையார் திருக்கோவில் விநாயகர் ஆலயம்” என்று எழுதியிருந்தது. இதிலேயே ‘பழமையான’ என்று எழுதியிருந்தாலும், இந்த வளைவே ரொம்ப பழமையாக இருந்தது! வளைவின் இரு பக்கமும் பாண்டிய ராஜ்ஜியத்தின் சின்னமான மீன் இருந்தது.



உள்ளே இருந்த கோவில், மதிய நேரமென்பதால் சாத்தியிருந்தது. சிறிய கோவில் தான்.



வாசல் முன்பு, தோட்டத்தில் வேலை செய்பவர்கள், மதிய உணவருந்திக்கொண்டிருந்தனர். பிரதான வாசல் மூடியிருந்தாலும், வலது பக்கம் கோவில் வளாகத்திற்குள் நுழைய ஒரு வழி இருந்தது. இதை முன்னால் இருந்தவர்கள் சொன்னார்கள்.



ஏரியாவே அமைதி. கோவிலுக்குள் இன்னமும் அமைதி. பசுமை சூழ்ந்த ஒரு கோவிலுக்குள், அமைதியான சுழலில் நான் மட்டும். புராதன கோவில் என்று சொல்ல முடியாது. சிறியதாக இருந்ததை சுற்றி எழுப்பியிருக்கலாம். முன்பக்க சுவர் முழுக்க, கல்வெட்டுக்கள்.



பின்புறம் ஒரு பாதி மரம் இருந்தது. கேட்க கேள்விகள் நிறைய இருந்தாலும், பதில் சொல்ல ஆளில்லாததால், கேள்விகளை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன்.





---



திரும்பி வந்துக்கொண்டிருந்த போது, எதிரே ஒரு பாட்டி வந்துக்கொண்டிருந்தார். அவரிடம் கொஞ்சம் பேசினேன். அவர் குளம் போல் இருந்ததை காட்டி, இது தான் பாண்டிய காலத்தில் தோணித்துறையாக இருந்ததாக நம்பிக்கை என்றார்.



அதனுள் ஒரு கோவில் இருந்தது. அம்மன் கோவில். பாட்டி இந்த கோவிலும் பழமையானது என்றார். ஆனால், பார்க்கும்போது அப்படி தெரியவில்லை. நான் போன நேரம், இந்த கோவிலும் பூட்டி கிடந்ததால், உள்ளே செல்ல முடியவில்லை.



கோவில். கோவிலைச் சுற்றி தண்ணீர் இல்லாத குளம். ஒரு பெரிய மரம். மரத்தடியில் பெண்கள் கூட்டம் ஒன்று உட்கார்ந்து ஏதோ சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார்கள். மரம் என்றதும் நினைவுக்கு வருகிறது. இந்த ஊரில் 2000 ஆண்டுகள் பழைமையான ஒரு வன்னி மரம் இருப்பதாக படித்திருக்கிறேன். ஆனால், அதை நான் பார்க்க, கேட்க மறந்துவிட்டேன். ஒருவேளை, பார்த்திருக்கலாம். வன்னி மரம் எதுவென்று தெரியாததால், உறுதி செய்ய முடியவில்லை.

---

”என்னடா, கொற்கை பார்த்தியா? என்ன இருந்துச்சு?”

“முன்ன, ஒரு ஆபிசரும் பழைய காலத்து பொருட்களும் வச்சிருந்தாங்களாம். இப்ப, யாரும் வருறது இல்லன்னு, திருநெல்வேலிக்கு கொண்டு போயிட்டாங்களாம்.”

“ஆமா! இப்ப யாரு அதையெல்லாம் பாக்குறா? தமன்னா வந்திருக்கா’ன்னு சொல்லு, எங்கிருந்துனாலும் ஓடி வருவானுங்க!”

---

செல்லும் வழி - தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் பஸ்ஸில் ஏறினால், முக்காணியில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும். இங்கிருந்து ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் இருக்கும். மினி பஸ் இருக்கும் என நினைக்கிறேன். முக்காணி வழியில் ஏரல் செல்லும் பஸ்ஸில் ஏறினால், உமரிக்காடு என்னும் ஊரில் இறங்கி செல்லலாம்.

.