Showing posts with label இயக்குனர் நாடித்துடிப்பு. Show all posts
Showing posts with label இயக்குனர் நாடித்துடிப்பு. Show all posts

Monday, July 23, 2012

ஷங்கர் vs ராஜமௌலி

தமிழ் தெலுங்கு படங்களை தொடரும் ரசிகர்களுக்குள் தற்போது எழுந்திருக்கும் கேள்வி. ஷங்கர் - ராஜமௌலி, இவர்களில் யார் பெஸ்ட்?

ஷங்கரை நமக்கு நன்றாக தெரியும். ராஜமௌலியை இப்போது தெரிந்திருக்கும். இருந்தாலும், கொஞ்சம் பேக்ரவுண்டுடன் ஆரம்பிப்போம்.




இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயதுக்கட்டத்தில் தான் இருக்கிறார்கள். ராஜமௌலி சினிமாவுடன் சம்பந்தமுள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர். ஷங்கருக்கோ, அப்படி எந்த பின்புலமும் இல்லை. இருந்தாலும், ஷங்கரின் முதல் படம், ராஜமௌலியின் முதல் படம் வருவதற்கு எட்டு வருடங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்டது.

இருந்தாலும், அதன் பிறகு வேகமாக ஷங்கரின் பட எண்ணிக்கையை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார் ராஜமௌலி. ஷங்கர், இதுவரை பதினொரு படங்களை இயக்கி இருக்கிறார்.  ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்திருப்பவை, ஒன்பது படங்கள். ஷங்கர் அளவுக்கு படமெடுக்க நேரமெடுக்காதது, இதற்கொரு காரணம்.

சக்சஸ் ரேட் என்று பார்த்தால், ராஜமௌலி தான் முன்னணி என்று சொல்ல வேண்டும். இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி படங்களே. ஷங்கர் கணக்கில் இரண்டு தோல்வி படங்கள் இருக்கின்றன. ஷங்கர் ஹிந்தியில் இயக்கிய தமிழ் முதல்வனின் ரீமேக்கான ‘நாயக்’கும், அதன் பிறகு தமிழில் இயக்கிய ‘பாய்ஸு’ம் ஷங்கருக்கு தோல்வியை காட்டிய படங்கள். இதில் பாய்ஸ் தெலுங்கில் வெற்றியே.

வெற்றி முதலில் இருந்தே இருவருக்கும் கிடைத்தாலும், வெற்றியின் பலனை முதலில் இருந்தே அனுபவித்தது ஷங்கர் தான். மூன்று படங்களுக்குள் இந்தியா முழுக்க அறிந்த இயக்குனராகியவர், ஷங்கர்.  ஆனால், மூன்று படங்களுக்கு பிறகு தான், ராஜமௌலி நல்ல இயக்குனராக அறியப்பட்டார்.

திறமைக்கான அங்கீகாரம், படத்தின் வெற்றியில் கிடைத்தாலும், இயக்குனரின் பங்காக ராஜமௌலி பெற்றது குறைவே. தனக்கான அங்கீகாரத்தை பெறவே, சில படங்களை அவர் எடுக்க வேண்டி இருக்கிறது. காமெடியனை ஹீரோவாக, ஈயை ஹீரோவாக என அவரது சில முயற்சிகள், இதற்கே போய்விடுகிறது.

ஷங்கர் அப்படியில்லாமல், ஆரம்பத்தில் இருந்தே சிறந்த இயக்குனராக மக்களிடமும், மற்ற மொழி திரைத்துறையினரிடமும் அறியப்படுகிறார். இதற்கு சில காரணங்களை கூறலாம். ரசிக கூட்டம் இல்லாத அர்ஜூன், பிரபுதேவா, பிரசாந்த் போன்றவர்களை வைத்து ஆரம்ப ஹிட் கொடுத்து, பிறகு ரஜினி, கமல், விக்ரம் போன்றவர்களை இயக்கிய படங்களிலும் ஷங்கருக்கான எதிர்பார்ப்பு இருந்தது. அவரும் அதை பெருமளவு பூர்த்தி செய்தார். ராஜமௌலிக்கோ, ஏழு படங்களுக்கு பிறகு இதை நிருபிக்க வேண்டி வந்தது. அழுத்தமாக நிருபித்தும் விட்டார்.

ஷங்கரின் புகழுக்கு என்னென்ன காரணங்கள் என்று பார்க்கலாம். சமூக பிரச்சினை சார்ந்த கதைகள், பேண்டஸி கலந்த சுவாரஸ்யமான திரைக்கதை, கதைக்கேற்ற நடிகர்கள், நடிகர்களுக்கேற்ற காட்சியமைப்புகள், காமெடி, செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என சரிவிகிதத்தில் கமர்ஷியல் மசாலா, இவையனைத்திற்கும் மேல் புதிய தொழில்நுட்பங்களை சரியாக கையாள தெரிந்த முதல் இந்திய இயக்குனர் என்று ஷங்கரை கூறலாம். புது புது தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் என தமிழர்கள் பெருமைபட்டுக் கொள்ளலாம்.

இதில் ராஜமௌலி எவ்வாறு வேறுபடுகிறார்? இவர் படங்களின் கதையும், அதற்கு இவர் அமைக்கும் திரைக்கதைகளும் சுவாரஸ்யமானவையே. அனைத்துமே சரிவிகித மசாலா கொண்டவையே. ஆக்‌ஷன் காட்சிகள், இவருடைய கைவண்ணத்தில் இன்னும் ஸ்பெஷலானவை. ஹைப்பை கொஞ்ச கொஞ்சமாக கூட்டி, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மட்டுமில்லாமல், சுற்றியிருக்கும் அனைவரின் உணர்ச்சிகளையும் காட்சியில் கொண்டு வந்து, பார்க்கும் ரசிகனை சீட்டின் நுனிக்கு கொண்டு வருவதில் ராஜமௌலி வித்தகர். இவருடைய சமீபகால திரைப்படங்களில், தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்.

சரி, இனி யார் எதில் முந்துகிறார்கள், சரிகிறார்கள் என்று பார்ப்போம். ஷங்கரின் ப்ளஸ் என்று சமூக பிரச்சினை சார்ந்த கதை & திரைக்கதையம்சத்தை தேர்ந்தெடுக்கும் திறனை சொல்லலாம். ஆனால், இதுவே இவருடைய மைனஸ் என்றும் கூறப்படுகிறது. அதாவது, ஒரே விதமான கதை/திரைக்கதை என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. அதற்கு அவரை மட்டும் குறைச்சொல்ல முடியாது. அவர் எடுக்கும் வேறுவிதமான கதையம்சம் கொண்ட கதைகள், சமூக நீதி போதனை கதைகள் கொண்ட படங்கள் அளவு வெற்றி பெறுவதில்லை. நிச்சய வெற்றி வேண்டி அவரும் வெற்றி பாதையையே தேர்ந்தெடுக்கிறார் என்று நினைக்கிறேன்.

ராஜமௌலி படங்கள் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கமர்ஷியல் மசாலா திரைப்படங்களே. சினிமாவில் நீதி சொல்ல வேண்டுமா? என்றால் அவசியமில்லை எனலாம். ஆனால், என்னை பொறுத்தவரை ஷங்கர் படங்கள் நாட்டில் உள்ள சில பிரச்சினைகள் குறித்து அட்லீஸ்ட் படம் பார்த்த ஒரிரண்டு நாட்களோ,  குறைந்தது படம் பார்க்கும் 3 மணி நேரத்திலோ சிந்திக்க தூண்டுபவை. இதனாலேயே, ரெகுலர் சினிமா ரசிகர்கள் தவிர மற்றவர்களின் கவனத்தை கவருபவை ஷங்கரின் படங்கள்.

ராஜமௌலி ப்ளஸ் என்ன? ஷங்கர் போல அல்லாமல், வேறு வேறு விதமான கதைகள். அனைத்தும் கமர்ஷியல் கதைகள் தான் என்றாலும், ரசிகனை கட்டிப்போடும் திரைக்கதை சூட்சமத்தை கொண்டவை. தொழில்நுட்பத்தை கதையின் தேவைக்கேற்ப பயன்படுத்துவதில் ராஜமௌலி முன்னிலை பெறுகிறார். பிரமாண்ட செட், கலக்கல் கிராபிக்ஸ் எல்லாம் ஷங்கர் பெரும்பாலும் பாடலுக்கு மட்டுமே பயன்படுத்துவார். (எந்திரன் விதிவிலக்கு) ராஜமௌலியோ, தொழில்நுட்பம் தேவைப்படும் கதைகளிலேயே, தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார்.

ஷங்கரின் தொழில்நுட்ப கூட்டணியும் பிரமாண்டமானவை. அன்றைய தேதியின் டாப் தொழில்நுட்ப கலைஞர்களை கூட்டணிக்கு அமைத்துக்கொண்டு, அவர்களின் பெஸ்ட்டை திரைக்கு கொண்டு வருவார். ராஜமௌலியோ, எப்போதும் ஒரே கூட்டணி. இதில் எது சரி, எது சிறப்பு என்று கூற முடியாது. ரசிகனுக்கு கிடைக்கும் ட்ரீட்டை கொண்டு மதிப்பிட்டால், நான் ஷங்கர் பக்கம்.

இவர்களுக்கு இருக்கும் மொழி தாண்டிய வரவேற்ப்பை பார்க்கலாம். ஷங்கருக்கு  முதல் படத்தில் இருந்தே தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. முதல் படமே, ஹிந்தியில் ரீ-மேக் செய்யப்பட்டது.  அனைத்து படங்களுமே இந்திய அளவில் கவன ஈர்ப்பு பெற்றவை. ராஜமௌலியின் பெரும்பாலான படங்கள், மற்ற மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்டாலும், இயக்குனராக அவர் அறியப்படுவது தற்சமயமே. ஷங்கர் படங்கள், அதிகமாக டப் செய்யப்படுகின்றன. ராஜமௌலி படங்கள், அதிகமாக ரீ-மேக் செய்யப்படுகிறது. இதை எப்படி கூறலாம் என்றால், மொழி தாண்டிய ரசனைக்குரிய அம்சங்கள் ஷங்கர் படங்களில் அதிகமாக இருக்கிறது எனலாம். அல்லது, ஷங்கர் படங்களை ரீ-மேக் செய்வது சிரமம் என்றோ, ஷங்கர் படங்கள் மற்ற மொழிகளுக்கு பொறுத்தமில்லாதது என்றோ கூறலாம். பொறுத்தமில்லாதது என்று என்னால் சொல்ல முடியாது.

ஒரு முடிவுக்கு வரலாம். யார் பெஸ்ட்? இந்த கேள்வி அவசியமில்லாதது என்றாலும், இப்படி ஒரு கேள்வி வந்தால்,  அதற்கு பதிலளிக்கும் முயற்சியே இப்பதிவு. இதுநாள் வரை, இருவரும் வெவ்வேறு களங்களில் இருந்ததால், இப்படி ஒரு கேள்வியை எழவில்லை. தற்போது, ராஜமௌலியும் ஷங்கரின் ஏரியாவான கிராபிக்ஸ் கலந்த பேண்டஸி கதைகளை எடுத்து தள்ளுவதால், இக்கேள்வி எழும்பியுள்ளது. கேள்விக்கான காரணமே, ஒரு வகையில் பதிலை சொல்லுகிறது. ஷங்கர், இந்த ஏரியாவில் முன்னோடி. ராஜமௌலி தற்போது ரேஸிற்கு வந்திருக்கிறார்.

இந்த களத்திலோ, அல்லது பொதுவான இயக்கத்திலோ, யார் சிறந்தவர் என்றால் அதற்கு இன்னும் சிறிது காலம் நாம் பொறுக்க வேண்டும்.

அதே சமயம், நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.  உழைப்பில் கொஞ்சம் கூட சமரசம் செய்து கொள்ளதவர்கள் இருவரும். அவரவர் மொழி கமர்ஷியல் திரையுலகில், நம்பர் ஒன் இவர்கள் இருவரும். உடன் பணியாற்றியவர்கள் அனைவரும் மறுக்காமல் கூறுவது, இவர்கள் இருவரும் எந்நிலையிலும் தரையில் கால் பதித்தபடி இருக்கும் நல்ல மனிதர்கள்.

நீங்க என்ன சொல்றீங்க?

.

Wednesday, September 29, 2010

இயக்குனர் நாடித்துடிப்பு - ஷங்கர்

எங்க ஊரில் தியேட்டரில் கூட்டம் அதிகமாகி, டிக்கெட் இல்லை என்று திரும்பி வர வேண்டியதே இல்லை. உள்ளே சீட் இல்லாவிட்டாலும், வெளியே டிக்கெட் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இதனால், எவ்ளோ பெரிய ஸ்டார் படமாக இருந்தாலும், முதல் நாள் படம் பார்ப்பது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. எக்ஸ்ட்ரா சேர் போட்டோ அல்லது தரையில் உட்கார்ந்தோ எப்படியோ பார்த்து விடலாம். ஆனால், ஒரு படத்திற்கு இரண்டு மூன்று முறை சென்றும் டிக்கெட் கிடைக்காமல், வீடு திரும்ப வேண்டி இருந்தது. அது அப்பொழுதுதான் கட்டப்பட்ட ஒரு நேர்மையான தியேட்டர். ஆனால், டிக்கெட் கிடைக்காததற்கு அது மட்டும் காரணம் அல்ல. படம் அப்படி. ஜென்டில்மேன். அதே போல், ஒரு தீபாவளி அன்று ஒரு இயக்குனரின் திரைப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்தது முதல்வனுக்கு.

இன்று ஜென்டில்மேன் பிரமாண்டமான படமாக தெரியாது. ஆனால், அன்றைய காலக்கட்டத்தில் ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து ஸ்டண்ட் காட்சி அமைத்த (முதல்?) படம் அது. பட டைட்டிலுடன் ‘சம்திங் ஸ்பெஷல்’ என்ற tag லைனுடன் வந்த முதல் படம். எலியை கடிப்பது, இருதயம் ரோட்டில் துடிப்பது என ரசிகர்களுக்கு பல பகீர்களைக் கொடுத்த படம். டபுள் மீனிங் தூக்கலாக வந்த படம். இது எல்லாவற்றையும் தாண்டி, இன்றும் பரவலாக விவாதிக்கப்படும் சமூக விஷயமான இட ஒதுக்கீட்டை (சரியோ, தவறோ) மையமாக கொண்டு வந்த படம்.

எனக்கு அந்த சமயம் அப்படத்தினுடைய மையக்கருத்தின் அரசியலெல்லாம் புரியவில்லை. ஒவ்வொரு முறையும் கொள்ளையடிக்க ஹீரோ போடும் புத்திசாலித்தனமான திட்டமும், ஆக்‌ஷன் காட்சிகளும், இசையும், நகைச்சுவையும் மட்டுமே புரிந்தது. பிடித்தது. பிறகு, சில காலம் கழித்து, பத்திரிக்கைகளில் சில கட்டுரைகளை வாசித்த போது, இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் விதமாக அதில் கருத்து சொல்லப்பட்டு இருந்தது லேட்டாக புரிந்தது. எது சரி, எது தவறு என்பது இப்போது விவாதமல்ல. ஒரு முக்கியமான விஷயத்தை, முதல் படத்தில் கருவாக வைத்த தைரியம். சொல்ல வந்த கனமான விஷயத்தை, கமர்ஷியல் கலந்து, இலகுவாக ரசிகனின் மண்டையில் ஏற்றி வெற்றி பெற்றது போன்றவை படத்தின் இயக்குனர் மேலான ஈர்ப்பை கூட்டியது.



ஷங்கர். விமர்சனங்கள் இருந்தாலும் இவர் மேலான ஈர்ப்பு, தமிழகத்திற்கு இன்னமும் குறையவில்லை. 17 வருடங்கள். இதுவரை எட்டே எட்டு தமிழ் படங்கள் இவரின் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது. பத்தாவது படம், இந்த வாரம் வெளியாகிறது. படத்தில் ரஜினி நடித்திருந்தாலும், இது ஷங்கர் படம். இந்த ஒரு வரி போதும், இவர் பெருமை கூற.

முதல் படத்தில் இருந்து இப்போது வரை எடுத்துக்கொண்டால், ஷங்கர் நிறைய மாறி வந்திருக்கிறார். முன்பு போல, காட்டமான அரசியல் விமர்சனம் இருப்பதில்லை. இவருக்கான ரசிகர் வட்டம் கூட கூட, ஆரம்பத்தில் இருந்த டபுள் மீனிங் தற்போது இருப்பதில்லை. பாய்ஸை விட்டுவிடலாம். அது அவர் யதார்த்தமாக எடுக்க நினைத்து, கலாச்சார காவலர்களிடம் பதார்த்தமாக மாட்டிக்கொண்டது.

ஷங்கர் படங்களின் பலம், அவருடைய திரைக்கதை. ‘ஊருக்கு நல்லது செய்யும் ஹீரோ’ கதையை எத்தனை முறை எடுத்தாலும், தமிழ் ரசிகர்கள் அவரை கைவிடவில்லை. காரணம், அவருடைய ட்ரீட்மெண்ட். அதை போன்ற கதையை, எத்தனை பேர் எடுத்தாலும், ஷங்கர் மட்டுமே வெற்றி பெறுகிறார். (விதிவிலக்கு-முருகதாஸ். ஆனாலும், ரமணாவில் ஷங்கர் படங்களின் ரிச்னெஸ் மிஸ்ஸிங்.) காரணம், திரைக்கதையில் கடைசி வரை அவிழ்க்காமல் ஒரு முடிச்சை வைத்திருப்பார். கிளைமாக்‌ஸுக்கு கொஞ்சம் முன்பு தான், அதை அவிழ்ப்பார். அது வரை அதை வைத்து ரசிகர்களை கட்டிப்போடுபவர், அதற்கு பிறகு கிளைமாக்ஸை வைத்து ரசிகர்களைக் கட்டிப்போடுவார். அந்தியன் நேரத்தில் கதை ரீதியாக அவரிடம் சலிப்பு வந்துவிட்டாலும், அதிலும் மூன்று பேரை ஒரே ஆள் என எப்படி காட்டப்போகிறார் என்ற சஸ்பென்ஸை வைத்து சுவாரஸ்யம் கூட்டியிருந்தார்.



படத்தின் ஒவ்வொரு காட்சியும் முக்கியமானதாக இருக்கும். அதையும் இண்ட்ரஸ்டிங்காக கொடுக்க பாடுபடுவார். உதவி இயக்குனர்களை நன்றாக கவனிக்கும் இயக்குனர் இவர். இவர் வழியை தொடர்ந்து, இவருடைய சிஷ்யர்களால் வெற்றியை கொடுக்கமுடியவில்லை. பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், காந்தி கிருஷ்னா, அறிவழகன் என இவர்களுடைய வழி வேறானது. இன்னமும் ஷங்கரின் வழி தனியானதாக இருக்கிறது. அந்தந்த காலக்கட்டத்தின் முக்கியமான திறமையான கலைஞர்களை தனது படத்தில் பயன்படுத்தி, அவர்களது முழுத்திறமையையும் கொண்டுவர வைத்துவிடுவதால், படத்தின் மேக்கிங் தரமானதாக இருந்துவிடும்.

அவருடைய எந்த படத்தின் கிளைமாக்ஸும் சாதாரணமாக முடியாது. ஒரு பைட்டை வைத்து, மகிழ்ச்சியாக நடிகர்கள் எல்லோரையும் சிரிக்க வைத்து முடிக்க மாட்டார். வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமாக இருக்கும். ஆனாலும், அதில் ஆக்‌ஷன் இருக்கும். ரசிகனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் முடிவு இருக்கும்.

நான் ஷங்கரை ஆரம்பத்தில் வெறும் மசாலா இயக்குனராகதான் பார்த்து வந்தேன். முன்பே சொன்னது போல், சிலருடைய விமர்சனங்களை படித்தப்பிறகு தான், அவர் ஒரு அதிபுத்திசாலி இயக்குனராக தெரிந்தார். இதற்கு காரணம், அந்த விமர்சகர்கள் தான். ஷங்கர் அப்படியெல்லாம் யோசித்து எடுத்தாரோ இல்லையோ, அவர்கள் கூறிய குற்றசாட்டுகள் - ‘இவர் இப்படியெல்லாம் கூட நினைச்சு எடுப்பாரா?’ என்று ஷங்கர் மீதான மதிப்பைக் கூட்டியது!



தொழில்நுட்ப ரீதியாக பல விஷயங்களை, தமிழ் சினிமாவில் முயன்று பார்த்தவர். கௌதமி மேல் அனிமேஷன் அம்பு விடுவது, பிரபுதேவாவின் கோட்-சூட்-தொப்பி தனியே ஆடுவது, தத்ரூப தாத்தா மேக்கப், ஒரு பிரசாந்த் இன்னொரு பிரசாந்தை கட்டிப்பிடித்து அழுவது, ஒரு ஜனக்கடலையே நடிக்க வைப்பது, ஒரு ஸ்டில்லை 360 டிகிரியில் சுற்றிக்காட்டுவது, ரஜினியை வெள்ளையாக்குவது என டெக்னாலஜி மூலம் வெள்ளித்திரையில் மேஜிக் காட்டுபவர்.

ஆஸ்கருக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் படங்களில், ஹிந்திக்கு அடுத்துப்படியாக அதிகம் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டது தமிழ்ப்படங்கள். இந்த தேர்ந்தெடுப்பு முறையில் படத்தின் தரத்திற்கு அடுத்தப்படியாக முக்கியத்துவம் பெறுவது, படைப்பாளிகளின் செல்வாக்கு. தற்போது, இப்படி செல்வாக்காக இருப்பவர் - அமீர்கான். தமிழில் இருந்து இதுவரை 8 படங்கள் ஆஸ்கருக்கு சென்று இருக்கிறதென்றால், அதற்கு காரணம் சில படைப்பாளிகள். கமல் (இவரால் தமிழ்படங்கள் மட்டுமின்றி, ஹிந்தி, தெலுங்கு படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது) , மணிரத்னத்திற்கு அடுத்தப்படியாக ஷங்கர். இவருடைய இருப்படங்கள் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவருடைய படங்களில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட தேவையிருக்கிற கச்சாப்பொருள் இருக்கிறதா என்று வேறு விஷயம். இது இந்திய அளவில், தமிழகத்தை சேர்ந்த ஒரு படைப்பாளிக்கு இருக்கும் செல்வாக்கை காட்டுகிறது.

ஒவ்வொரு படத்திலும் தனது முந்தைய படத்தின் பிரமாண்டத்தை, வியாபாரத்தை தாண்டியவர் ஷங்கர். அவர் அடுத்ததாக ‘3 இடியட்ஸின்’ தமிழ்/தெலுங்கு ரீமேக்கை இயக்க போவதாக வரும் செய்திகள், எனக்கு மகிழ்வை கொடுக்கவில்லை. விஜய்/மகேஷ் பாபு என இரு பெரிய பிராந்திய மொழி ஹீரோக்களை வைத்து இயக்க வேண்டி இருப்பதை தவிர்த்து, ஷங்கருக்கு பெரிய வேலை இருப்பதில்லை. அவருக்கே உரிய ஜிகினா வேலைகளை செய்தாலும், அது அந்த கதைக்கு பொருத்தமாக இருக்குமா என்பது கேள்விக்குறி. அதற்கு பதில், வேறெதாவது பெரிதாக முயலலாம்.

கமர்ஷியலாக, பிரமாண்டமாக, தரமாக படமெடுப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. அதை வெற்றிக்கரமாக்குவது என்பது எளிதான வேலையல்ல. ஆனாலும், இச்சவாலை பலமுறை முடித்து காட்டியவர், ஷங்கர். வேண்டுமானால், பிறருடைய கதையை, பிறருடைய உதவியுடன் கூடிய திரைக்கதையை பயன்படுத்திக் கொள்ளலாம். எளிமையாக படமெடுக்க தமிழில் பலர் இருக்கிறார்கள். ஆனால், அவருடைய தனித்திறமையான பிரமாண்ட டெக்னிக்கல் எக்ஸிக்யூசன் திறமையை கைவிடாமல், அதற்கு பொருத்தமான கதைக்களனுடன் கூடிய படங்களை அவர் தொடர்ந்து படமாக்க வேண்டும் என்பதே ஒரு ரசிகனாக என்னுடைய ஆசை.

.

Monday, May 24, 2010

இயக்குனர் நாடித்துடிப்பு - ஹரி

சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த பத்திரிக்கை செய்தி இது. இயக்குனர் ஹரி நடிகர் விஜய்யிடம் ஒரு கதை சொல்ல, அதை நிராகரித்து அனுப்பிவிட்டார் இளைய தளபதி என்றது அந்த செய்தி. எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இப்போது நாம் கேள்விப்படும் செய்தி உண்மை என்று உறுதியாக சொல்லமுடியும். விஜய் படங்கள் ஏற்படுத்திய நஷ்டத்தை ஈடுகட்ட, ஹரியின் படத்தை வெளியிடுகிறார்கள்.



தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த ஹரி, முதலில் இயக்குனர் பாலசந்தரிடம் சேர்ந்து, பிறகு இயக்குனர் சரணிடம் ‘அல்லி அர்ஜூனா’ வரை பணியாற்றினார். முதல் படம் - ‘தமிழ்’. முதல் படத்தை மதுரை பேக்ட்ராப்பில் எடுத்தவர், அடுத்தடுத்து தனது படக்குழுவினரையும், பிறகு திரையரங்கில் ரசிகர்களையும் ஊர் ஊராக தமிழகம் முழுக்க கூட்டி சென்றார். பேரரசு, படத்தலைப்புக்கு ஒரு ஊரை முடிவு செய்துவிட்டு மற்றதை கவனிப்பார் என்றால், ஹரி கதைக்களத்திற்கு ஒரு ஊரை முடிவு செய்துவிட்டு மற்றதை பிறகு கவனிப்பார். படம் முழுக்க, ஊர் சம்பந்தப்பட்ட விஷயங்களை கதாபாத்திரங்கள் மூலம் பேசவிடுவார். படத்தலைப்பிலேயே ஒரு பாஸிட்டிவ்னெஸ் இருக்கும்.

சாமியில் திருநெல்வேலியையும், கோவிலில் நாகர்கோவிலையும், அருளில் கோயமுத்துரையும், ஐயாவில் தென்காசியையும் காட்டியவர், ஆறில் சென்னைக்கு வந்தார். அதற்கு பிறகு எடுத்த தாமிரபரணி, வேல், சேவல் படங்களுக்காக திரும்ப தெற்கேயே சென்றார். தற்போது, சிங்கமும் தூத்துக்குடி, திருநெல்வேலி வட்டாரங்களிலேயே எடுத்துள்ளார். தென்மாவட்டங்களில் அவருக்குரிய பரிச்சயங்களாலேயே, தொடர்ந்து அங்கு படமெடுப்பதாக காரணம் கூறியிருக்கிறார் ஹரி. (கவனிக்க: கதைக்களம் தான் வெவ்வேறு ஊர்கள். பெரும்பாலும் ஷூட்டிங் ஸ்பாட் - காரைக்குடி தான்.)

இதுவரை இவர் எடுத்த ஒன்பது படங்களில் சில தோல்வி படங்கள் இருந்தாலும், பெரும்பாலானவை வெற்றிப்படங்களே. தோல்விகளும் பெருமளவு தயாரிப்பாளர்களை பாதித்திருக்காது. ஏனெனில் திட்டமிட்டு படமெடுப்பதில் வல்லவர் இவர். சொன்ன தேதியில் படத்தை முடித்து, வெளியிடும் திறன் கொண்ட சொற்ப இயக்குனர்களில் ஒருவர் இவர்.

தயாரிப்பாளர்களிடையே, விநியோகஸ்தர்களிடயே நல்ல பெயர் இருந்தாலும், தீவிர தமிழ்ப்பட ரசிகர்களிடம் பிரபலமாக இருந்தாலும், பெரும்பாலோரின் பார்வையில் படாமல் இருக்கும் முன்னணி இயக்குனர் இவர். ஒருவகையில், இவருக்கு இது நல்லதாகவே அமைந்திருக்கிறது. இவர் படங்கள் அமைதியாக வெளியாகி, ஆர்பாட்டமாக ஓடும். சமீப காலங்களில், இது மாறி வருகிறது.

கலைஞர்கள் தங்கள் படைப்புகளைத் தாண்டி, மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது அவர்களது சில தனிப்பட்ட பண்புகளால் தான். ஹரியைப் பற்றி சொல்லும்போது, ஒருவர் விடாமல் அனைவரும் சொல்லும் விஷயம் - உழைப்பு & வேகம். ஒரு வேலையை எடுத்துக்கொண்டால், ராத்திரி பகல் என்று சிரமம் பார்க்காமல் செய்வது. இதனால் தான், தயாரிப்பாளர்கள் விரும்பும் இயக்குனராக தொடர்ந்து ஹரியால் இருக்க முடிகிறது. “பணம் முதலீடு செய்பவர்களை சந்தோஷப்படுத்தினால், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்த முடியும்” என்பது ஹரியின் எண்ணம். ரசிகர்களையும், முதலாளிகளையும் ஒருசேர திருப்தி செய்ய வேண்டுமென்பது நல்ல விஷயம் தானே?

கமர்ஷியல் படம் எடுப்பது ஒன்றும் தப்பான காரியமோ, சாதாரண காரியமோ அல்ல. அதற்கும் திறமை தேவை. ரசிகர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்ற எண்டர்டெயின்மெண்ட் லாஜிக் தெரிய வேண்டும். ஒரு மசாலா படமென்றால், சரியான விகிதத்தில், சரியான நேரத்தில் ஆக்‌ஷன் என்கிற காரத்தையும், காமெடி என்கிற இனிப்பையும், செண்டிமெண்ட் என்கிற உப்பையும் சேர்க்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில் இதை சரியாக செய்பவர் ஹரி.

ஆறு படத்தில் அதிக காரத்தையும், சேவல் படத்தில் அதிக உப்பையும் சேர்த்துவிட்டதே அப்படங்களின் தோல்விக்கு காரணம். எப்பேர்ப்பட்ட சமையல்காரர் என்றாலும், சமயங்களில் கூட குறைய ஆகத்தானே செய்யும்?



இன்றைய தேதியில் எந்தவொரு ஹீரோவையும் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் சிறப்பாக கூட்டி செல்லும் ஆற்றல் உள்ள இயக்குனர் - ஹரி. விஷால் ஒரு பேட்டியில் தன்னை தமிழ்நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் கொண்டு சென்றது ஹரி தான் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும், ஹரி இன்னமும் அடக்கமாக, புகழ் வெளிச்சத்தில் தலையை காட்டாமல், ஒளிந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்.

அவர் சமீபத்தில் ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருப்பது, “ஹரி டைரக்‌ஷனை நம்பி யாரும் படம் பார்க்க வர்றதில்லை. ஹீரோக்களை நம்பித்தான் வர்றாங்க. நான் அவங்க முதுகுக்குப் பின்னாடி பதுங்கிட்டு பில்ட்-அப் கொடுக்குறேன்... அவ்வளவுதான். நான் பாரதிராஜா, பாலா, அமீர், செல்வராகவன் மாதிரி இல்லை. என்னை மட்டும் வெச்சுக்கிட்டு ஜெயிக்க என்னால் முடியாது. நான் காவிய டைரக்டர் கிடையாது. பெரிய கிரியேட்டரும் கிடையாது. அதனால கமர்ஷியல் படம் பண்றேன்.”

உண்மைதான். இன்னொரு உண்மை. இவரை வைத்து படம் பண்ணும் தயாரிப்பாளர்கள் அனைவரும், இவரை வைத்து அடுத்து ஒரு படம் எடுக்கவும் தயாராக இருப்பார்கள். இது எல்லா இயக்குனர்களுக்கும் அமைவதில்லை.

இவர் தன்னை பெரிய கிரியேட்டர் இல்லையென்று சொன்னாலும், இவருடைய திரைக்கதை சோர்வில்லாமல், வேகமாக செல்லும். சின்ன ட்விஸ்ட்டுகள், பின்பகுதியில் அமையும் முடிவுகளுக்கு ஏதுவாக முன்பகுதியில் வைக்கும் சம்பவங்கள் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.

அதே சமயம், குறைகள் இல்லாமல் இல்லை. வசனங்கள் கவனம் பெற வேண்டும் என்பதற்காக இவர் அமைக்கும் வசனங்கள், ஆரம்பத்தில் செம பஞ்ச் ரகமாக இருந்து, சமீப காலங்களில் லொட லொடவென்று மாறியிருக்கிறது. ”ஒருச்சாமி, ரெண்டு சாமி” வசனத்திற்காக, ரஜினியை கைத்தட்ட வைத்தவராயிற்றே? (ரஜினி ஹரியிடம் கதை கேட்டார் என்றும், ஐயா கதையை தான் ஹரி ரஜினியிடம் சொன்னார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஹரியின் மாஸ்டர் பீஸ் என்று நான் கருதுவது, ஐயாவைத் தான்)

இன்னொரு குறை - இவர் படங்களின் பாடல்கள். சிறந்த ட்யூனை, தன் இசையமைப்பாளர்களிடம் இருந்து கறப்பவரல்ல ஹரி. அதுவா அமைந்தால் உண்டு என்ற ரகம் தான். இவருடைய வேகமே, இது போன்ற விஷயங்களில் நெகட்டிவ் காரணமாக அமைந்துவிடுகிறது என்று நினைக்கிறேன். தற்போது, பாடல்கள் வேறு எழுத ஆரம்பித்து இருக்கிறார்.

இவருடைய அனைத்து படங்களுக்கும் ப்ரியன் தான் ஒளிப்பதிவு. எந்த குறையும் சொல்லமுடியாத ஒளிப்பதிவாளர். விஜயக்குமார் வீட்டு மாப்பிள்ளை என்பதால், இவர் படங்களில் விஜயக்குமார் கண்டிப்பாக இருப்பார். சகலை ஆகாஷையும் காணலாம். அருண் விஜய்? ம்ஹும்! அதுக்கு இன்னும் காலமிருக்கு.

’அருவா இயக்குனர்’ என்னும் விமர்சனத்திற்கு, இவருடைய பதில் - ”கிராமத்து மக்களின் வன்முறை வெளிப்பாடு அருவாள்” என்பது தான். ஆனாலும், இவர் படங்களில் சண்டைக்காட்சிகளின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும். என்ன! சில படங்களில், ரத்தம் கொஞ்சம் ஓவராக சிந்தும். இவர் படங்களில் பறக்கும் கார் ஆக்‌ஷன் சீன்களுக்கு நான் ரசிகன். கார் வெடித்து மேலே பறக்காமல், ஐயா படத்தில் பக்கவாட்டில் பறந்து ஒரு பனை மரத்தில் மோதும். என்னே திங்கிங்! எனக்கும் தான் என்னே ரசனை!

எது எப்படியோ, பொழுதுபோக்கு படம் கொடுப்பதில் முக்கியமான இயக்குனர் - ஹரி. அதை மாஸ் எண்டர்டெயினராக கொடுப்பதில் முக்கியமானவர் - இயக்குனர் ஹரி.

பல வருடங்களுக்கு முன்பே, என் ப்ரொபைலில் ஹரியின் பெயரைப் போட்டுவிட்டு, இன்னமும் அவரைப் பற்றி ஒரு பதிவு போடாமல் இருந்தால் எப்படி? பதிவு போட்டாச்சு!

கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்குனர் நாடித்துடிப்பு இங்கு.

.

Thursday, March 5, 2009

இயக்குனர் நாடித்துடிப்பு - கே.எஸ்.ரவிக்குமார்

ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த இயக்குனர்களால், ரசிகர்கள் ரசிக்கும்வகையிலான படங்களைக் கொடுக்க முடிவதை போல், இயக்குனர்களின் நாடித்துடிப்பை ரசிகர்கள் அறிந்து கொண்டால், எவ்வித தவறான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவ்வியக்குனர்களின் படங்களை ரசிக்க முடியும். இப்பதிவு, தற்போதைய காலக்கட்டத்தில் ரசிகர்களின் மனநிலையை அதிகம் புரிந்து கொண்டதாக கூறப்படும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரைப் பற்றியது.

ரவிக்குமாரின் அப்பா பெரிய தொழிலதிபர். உதவி இயக்குனராக இருந்த காலத்தில், ரவிக்குமார், அப்போது இருந்த மற்ற உதவி இயக்குனர்கள் போல பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கவில்லை. பைக்கில்தான் ஷூட்டிங் ஸ்பாட் வருவாராம். உதவி இயக்குனராக இருக்கும்போதே ஒரு பாக்டரி ஆரம்பித்தார். இயக்குனராக வெற்றி பெற முடியவில்லையென்றால் அந்த தொழிலை தொடரலாம் என்ற எண்ணம். துரதிஷ்டவசமாக, இந்திய தொழில் துறை ஒரு தொழிலதிபரை இழந்தது. பட வாய்ப்பு கிடைக்க தொடங்கிய உடனே, பாக்டரிக்கு பூட்டு போட்டு விட்டார்.

வாழ்க்கையில் பொருள் ஈட்டுவதின் முக்கியத்துவம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அதனாலேயே, படம் வெற்றி பெற என்ன தேவையோ, அதையே தொடர்ந்து செய்து வருகிறார். தயாரிப்பாளரின் வருமானத்தை முக்கியமாக கருதி படங்களை இயக்கி வருகிறார்.

இவர் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இவர் எந்த படத்தில் பணியாற்றினாலும் அந்த படம் வெளிவராதாம். புது வசந்தம் படத்தில் இவர் இணை இயக்குனர். அந்த படத்தில் தான் அவரும் விக்ரமனும் முதலும் கடைசியுமாக இணைந்து பணியாற்றியது. விக்ரமன் ரவிக்குமாருக்கு சீனியர் என்றெல்லாம் கிடையாது. சௌத்ரிக்காக ரவிக்குமார் பணியாற்றிய படம் அது. அந்த படத்தில் நடிக்கும் போது சார்லி ரவிக்குமாரை கவனித்து விட்டு அவர் மேனேஜரிடம் சொன்னாராம், ‘ரவிக்குமார் ஒர்க் பண்ற படம். ஒழுங்கா சம்பளத்தை முதலிலே வாங்கிடு’. மனுசனுக்கு எவ்ளோ கோபம் வரும்? அந்த கோபம் தான் மனுசனை வெற்றியை நோக்கி தள்ளிவிட்டிருக்கிறது.

இவருடைய முதல் படமான ’புரியாத புதிர்’ ஒரு திரில் படம். ஒரு கன்னட படத்தை பார்த்து ஆர்.பி.சௌத்ரி ரவிக்குமாரை ஸ்கிரிப்ட் ரெடி பண்ண சொல்லியிருக்கிறார். அவரும் ஆர்வத்துடன் செய்து கொடுத்திருக்கிறார். அவரிடமே, படத்தை இயக்க சொல்லியிருக்கிறார் சௌத்ரி. ரவிக்குமாரோ, இது சரி வராது என்றிருக்கிறார். சௌத்ரியோ பிடிவாதமாக படத்தை இயக்க சொல்லி வற்புறுத்தி, இயக்கினால்தான் அடுத்த பட வாய்ப்பு என்றிருக்கிறார். அடுத்த படம் என்பதற்காகவே அவர் இயக்கிய முதல் படம், புரியாத புதிர். படம் தியேட்டர் ரிலீஸில் தோல்வி என்றாலும் சன் டிவி ரிலீஸில் வெற்றிதான்.

அந்த படத்தின் தோல்வியில் அவர் கற்ற பாடம், திரில் படங்கள் ஒரு சிறு பிரிவையே கவரும். ஒரு படம் வெற்றியடைய வேண்டுமென்றால் பெருவாரியான மக்களை சென்றடைய வேண்டும். அனைவரையும் கவர வேண்டும் என்றால் நகைச்சுவையும் செண்டிமெண்டும் அவசியம். அவர் அன்று கற்ற பாடத்தை இன்று வரை செயல்படுத்தி வருகிறார்.

அதன் பின்பு, சரத்குமார் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்க, ரவிக்குமார் இயக்கிய படம், ‘சேரன் பாண்டியன்’. அதில் ஆரம்பித்தது அவர் வெற்றி பயணம். கிராமத்து படங்கள் எடுப்பதில் எக்ஸ்பர்ட் ஆனார். கிராம படங்கள் மட்டுமில்லாமல், எல்லா வகையான படங்களும் எடுத்தார். படம் வெற்றியடைகிறதோ இல்லையோ, கண்டிப்பாக தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுப்பதில்லை.

அவருடைய பத்தாவது படமான நாட்டாமை அவருக்கு மெகா ஹிட் பம்பர் பரிசை அளித்தது. அந்த படத்தின் வெற்றி, அவருக்கு ரஜினியை வைத்து முத்து படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தது. முத்து, ரவிக்குமாரை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக ஆக்கியதோடு மட்டுமில்லாமல், ரஜினியையும் ஜப்பான் வரை கொண்டு சென்றது. ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவதையே வாழ்நாள் சாதனையாக எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர்கள் மத்தியில், ரஜினியை வைத்து இரண்டு படங்கள் இயக்கியது மட்டுமில்லாமல், அவருடைய நெருங்கிய நண்பராகவும் ஆனார், ரவிக்குமார்.

ரவிக்குமார் போன்ற கமர்ஷியல் இயக்குனரை ரஜினி நம்புவது பெரிய விஷயமில்லை. சினிமாவின் ஒவ்வொரு இடுக்கையும் அறிந்து வைத்திருப்பவரும், தமிழ் சினிமாவின் பெருமையாக இருக்கும் கமலும் நம்புவது, கண்டிப்பாக ரவிக்குமாரின் சாதனை. அவ்வை சண்முகியில் ஆரம்பித்து தசாவதாரம் வரை நான்கு படங்கள் கமலை வைத்து இயக்கியிருக்கிறார். என்னதான் தசாவதாரம் வெற்றியில் கமல் பிரமாண்டமாக முன்னணியில் இருந்தாலும், பின்னணியில் ரவிக்குமாரின் பங்கை யாராலும் மறுக்க முடியாது. படம் வெளிவருவதற்கு முன்பே, படத்தின் வெற்றியின் மேல் பெரும்பாலோர் வைத்திருந்த நம்பிக்கைக்கு காரணம், ரவிக்குமார். இந்த படத்தை இதை விட குறைவாக ரவிக்குமாரை தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது என்று படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறியிருந்தார். அதுதான் ரவிக்குமாரின் பலம். ரஜினிக்கு நண்பர் என்றால், கமல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரவிக்குமாரை சகோதரன் என்றழைத்தார்.

நடிகர் சரத்குமாரும் இவரும் சினிமாவில் ஒன்றாக வளர்ந்தவர்கள். அதனாலயோ என்னவோ, இவர்களது காம்பினேஷன் நன்றாக ஒர்க அவுட் ஆகும். சிறு வயதில், கே.எஸ். ரவிக்குமார் அவருடைய நண்பர்களுடன் ஒரு பெண்ணை டாவடித்திருக்கிறார். இவர்களுக்கு பயந்து பெண்ணின் வீட்டார், தங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் வாட்டசாட்டமான நபரை துணைக்கு பஸ் ஸ்டாண்ட் வரை அனுப்பி இருக்கிறார்கள். பஸ் ஸ்டாண்டில் ரவிக்குமாரும் அவர் நண்பர்களும், ’அங்கிள் அங்கிள்’ என்று அந்த ‘வாட்டசாட்டத்துடன்’ பேசியிருக்கிறார்கள். கலாய்த்திருக்கிறார்கள். பின்னாளில் இயக்குனராகி சரத்குமாரை இயக்கி கொண்டிருக்கும்போது தான் அவருக்கு நினைவுக்கு வந்திருக்கிறது, அந்த அங்கிள் சரத் தான் என்று. மறுபடியும், கலாய்க்க தொடங்கி விட்டார்.

ரஜினி, கமல், விஜய், அஜித் என இரு தலைமுறையின் முன்னணி நடிகர்களை வைத்து படமெடுத்தவர் இவர் ஒருவரே. நடிக்கும் நடிகரை சரியாக, முழுமையாக பயன்படுத்துவார். நன்றாக வேலை வாங்குவார். அஜித் நடித்த வில்லன், வரலாறு, இரண்டு படங்களிலுமே அவரை வித்தியாசமான வேடத்தில் நடிக்க வைத்திருந்தார். சிம்பு வளவளவென்று பேசுவார் இல்லையா? அவரை வைத்து எடுத்த சரவணா படத்தில், பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை தேடி செல்வதை பற்றி ஒரு நீளமான வசனத்தை கோவிலில் ஜோதிகாவுடன் பேச வைத்திருப்பார். சிம்பு, ஓவரா பேசியும் மக்கள் ரசித்த காட்சி அது.

அவர் ஆரம்பக்காலத்தில் எடுத்த படங்களில் பஞ்சாயத்து, தண்டனை, மாலை பறந்து வந்து நாயகன் மேல் விழுவது, தாலி பறந்து சென்று நாயகி மேல் விழுவது போல செண்டிமெண்டாக அமைந்திருந்த காட்சிகள், இளைஞர்களை கவராவிட்டாலும் தாய்குலங்களை பெரிதும் கவர்ந்தது. அதே படங்களில் கவுண்டமணி நடித்திருந்த காட்சிகள் இளைஞர்களை கவர்ந்தது. இப்படி அவர் படங்கள் அனைவரையும் கவரும் விதத்தில் பேலன்ஸ்டாக இருக்கும். ஆனால் இன்னமும் அவர் படங்களில் ஒரு கற்பழிப்பு காட்சி வந்துவிடுவது கடுப்பான விஷயம்தான்.

என்னதான் கலவை ஒன்றுப்போல இருந்தாலும், படத்தின் கதை வேறு வேறு மாதிரியாக இருக்க காரணம், கதையை இவர் எழுதுவது இல்லை. படத்தின் மேக்கிங்கும் ஒரே மாதிரி என்று சொல்ல முடியாது. இவர் பலதரப்பட்ட கலைஞர்களுடன் சுலபமாக ஒன்றிணைந்து பணியாற்றுவார். ஒரு படத்தில் தேவா, இன்னொரு படத்தில் வித்யாசாகர், இன்னொன்றில் ரஹ்மான், மற்றொன்றில் யுவன். இளையராஜாவில் இருந்து யுவன் வரை, இப்படி போய் கொண்டே இருப்பார். அதேப்போல் தான் நகைச்சுவை நடிகர்களுடன் பணியாற்றிய விதமும். ஆரம்பத்தில் கவுண்டமணி இவர் படங்களின் ப்ளஸ் பாயிண்டாக இருந்தார். பின்பு, வடிவேலு, விவேக் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை. ரமேஷ் கண்ணா கண்டிப்பாக இருப்பார். நாட்டாமை படத்தின் போது, அவர் போட்ட சத்தத்தில், படத்தின் ஒளிப்பதிவாளர் பயந்து ஓடிவிட்டாராம். ரவிக்குமார் எதற்கும் தயங்கவில்லை. கேமராவை அவரே இயக்க ஆரம்பித்து விட்டாராம். படத்தில் அந்த சண்டைக்காட்சி சிறப்பாக வந்திருந்தது.

காட்சி ஒழுங்காக வரவேண்டும் என்பதற்காக மோதிர கையால் குட்ட மாட்டார். கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்து விடுவார். சிவாஜி, ரஜினி என்று இரு இமயங்களை ஒன்றாக வைத்து படையப்பா படத்தை இயக்கியது அவரது வாழ்நாள் சாதனை. படையப்பா படத்தில் சிவாஜி படிக்கட்டில் இருந்து வேலுடன் இறங்கி வருவது போல ஒரு காட்சி. விடியகாலை அது. எடுத்து கொண்டிருந்த போது, முக்கால் வாசி படிக்கட்டுகள் இறங்கிய பின்பு தான் பின்னணியில் யாரோ நிற்பதை ரவிக்குமார் கவனித்தாராம். திரும்ப எடுக்க வேண்டுமென்றால் சிவாஜி திரும்பவும் மேலே ஏற வேண்டும். பின்னணியில் ஒரு ஆள் நிற்பதை கவனிக்காத ஒளிப்பதிவாளர் மேல் ரவிக்குமாருக்கு கடும் கோபம். கண்டபடி திட்ட ஆரம்பித்து விட்டார். திட்டி முடிந்து திரும்பி பார்க்க, அங்கே சிவாஜி பழையபடி மேலே சென்றிருக்கிறார். அதற்கு பிறகு, சிவாஜி ரஜினியிடம் கேட்டிருக்கிறார். ‘எங்கையா இவன பிடிச்ச?’. ரஜினி அதற்கு ரவிக்குமாரை பற்றி விளக்கி சொல்லியிருக்கிறார். இப்போது, ரவிக்குமார் நிறையவே மாறியிருக்கிறார்.

ஒரு படத்தின் கேப்டன் டைரக்டர் என்று சொல்வார்கள். அதற்கு, ரவிக்குமார் ஒரு உதாரணம். பிரச்சினைகளின் போது முன்னால் நிற்பவர்களில் ஒருவர் அவர். சமுத்திரம் படத்தின் மைசூர் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட பிரச்சினையின் போது முன்னால் நின்று அனைவரையும் வண்டியேற்றி விட்டு, கடைசியாக அந்த இடத்தில் இருந்து வந்தவர் இவர்.

ரிசல்ட் முக்கியம் என்று நினைப்பவர். பாட்ஷா படத்தை காண்பித்து விட்டு, ரவிக்குமாரின் கருத்தை கேட்டு இருக்கிறார் ரஜினி. அப்போது ரவிக்குமார் அவ்வளவு பிரபலம் இல்லை. ஆனால், ரஜினி கவனித்து கொண்டே வந்திருக்கிறார். ”படம் பிரமாதம் சார். தம்பி, தங்கச்சிகள் பெரிசான பிறகும் ஹீரோ இளைஞனா இருப்பது லாஜிக்கலா ஒரு குறை. ஆனா, ரசிகர்கள் அதை கவனிக்க மாட்டாங்க சார்”.

இவரது வளர்ச்சி படிப்படியானது. சிறு கதாநாயகர்களை வைத்து இயக்கத்தை ஆரம்பித்தவர், தமிழின் உச்ச நடிகர்களை சிறப்பாக கையாளுபவர் என்று பெயரெடுக்கும் அளவுக்கு திரையுலகில் முன்னேற்றத்தை கண்டவர். இளைஞர்களுக்கு நகைச்சுவை, பெண்களுக்கு செண்டிமெண்ட் என்று வெற்றி படங்களாக, தவறும் பட்சத்தில், ஆவரேஜ் படங்கள் என கொடுத்து வருகிறார். முத்துராமனுக்கு எப்படி ரஜினியோ, அது போல் ரவிக்குமாருக்கு சரத்குமார். தசாவதார பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, தற்போது சரத்குமாருடன், ரஜினிக்கு தயார் செய்த ஜக்குபாய் படத்தை இயக்கி வருகிறார். அதற்கு அடுத்தாற் போல், சூர்யா, விக்ரம் என தொடர்ந்து நட்சத்திர படங்கள் வரவிருக்கின்றன.

‘ஏன் இப்படி கமர்ஷியல் படமாக எடுத்து கொண்டு வருகிறீர்கள்?” என்று கேட்டால் அவர் சொல்லும் பதில், “நான் தோல்வியடைந்த தயாரிப்பாளர்கள் பலரை கண்டிருக்கிறேன். அவர்கள் முகம் எப்போதும் என் கண் முன்னால் வரும். என்னால் யாரும் அந்த நிலைக்கு வர வேண்டாம். அந்த சூழ்நிலையை நான் உருவாக்க மாட்டேன்.” நல்ல நோக்கம் தானே? புதியதாக தன் முயற்சியை பரிசோதித்து பார்க்கவும், தன் ரசனைக்கு படம் எடுக்கவும் ஏன் இன்னொருவரை பலிகடாவாக்க வேண்டும்?