Thursday, December 29, 2011

2011யும் திரைப்படங்களும்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வெளிவரும் எல்லா படங்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னொரு சமயம், பார்க்க வேண்டும் என்று நினைத்த படங்களையும், பரிந்துரைக்கப்பட்ட படங்களையும் தேடி சென்று பார்த்துக்கொண்டிருந்தேன். தற்சமயமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றாலும், திரையரங்கு சென்று பார்ப்பது என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய சொற்ப அளவில். இங்கு திரையிடப்படும் படங்கள் மிகவும் குறைவு. அதிலும் சில ஆறிப்போய் வரும்.



திரையரங்கு சென்று பார்த்தால் தான், படம் பார்த்ததாக ஒரு உணர்வு. இணையத்தில் பார்ப்பது தவறு என்றாலும், வேறு வழி இல்லாமல் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இது தவறு என்பதாலும், இப்படி பார்த்துவிட்டு படத்தை பற்றி எழுதுவதற்கு எந்த தகுதியும் கிடையாது என்பதாலும், படங்கள் பற்றிய பதிவுகளை பெரும்பாலும் இந்த வருடம் எழுதவில்லை. (பெரும்பாலும் எழுதுவதே இல்லை என்பதும் சரிதான்.)

---

வருடதொடக்கத்தில் இந்தியாவில் இருக்கும் போது, பொங்கலுக்கு வந்த எல்லாப்படங்களையும் பார்த்தேன். ஆடுகளம், சிறுத்தை, காவலன். சிலக்காரணங்களால் இந்த படங்களை இருமுறை பார்க்க வேண்டி இருந்தது.

அதன்பிறகு டென்வர் வந்தப்பிறகு, இங்கு பார்த்த முதல் திரைப்படம் - அவன் இவன்.

தெய்வத்திருமகள் மிகவும் தாமதமாக வந்ததால், திரையரங்கு சென்று பார்க்கவில்லை.

அதன்பிறகு, மங்காத்தா. தீபாவளிக்கு ஏழாம் அறிவு.

நடுவில் இந்தியா சென்றிருந்தபோது, முதல் சமயம் ‘எங்கேயும் எப்போதும்’ படமும் தற்சமயம் ‘ராஜபாட்டை’யும் பார்த்தேன். எ.எ. பார்த்தது லேட் என்பதால் எழுதவில்லை. ராஜபாட்டை? ம்க்கும்! (ஆனாலும் சுசிந்திரன் மதனிடம் ஓப்பனாக தான் காம்பரமைஸ் செய்தது பற்றி பேசியது பிடித்திருந்தது.)

----

நான் இந்தியாவில் இருந்தவரைக்கும் இணையத்திலோ, டிவிடியிலயோ உக்கார்ந்து படங்களைப் பார்த்ததில்லை. தற்சமயம், வேறு வழியில்லாமல் பார்த்தாலும், பல அசவுகரியங்கள் இதில் இருக்கிறது. மட்டமான க்வாலிட்டி, சில சமயம் தொடர்ச்சியாக பார்க்க இயலாமல் போவது, சில நல்ல லோ-பட்ஜெட் படங்கள் காணக்கிடைக்காதது என்று தொல்லைகள் பல. இப்படி பார்க்கும் போது, சரியான மூடும் செட் ஆகாது. இப்படி பார்ப்பதையெல்லாம் கணக்கிலே எடுத்துக்கொள்ள முடியாது.

மொத்தத்தில் படங்கள் விஷயத்தில், இந்த வருடம் எனக்கு இழப்பே. (நான் படம் பார்த்துக்கொண்டிருந்த தியேட்டர்களுக்கும் தான்!)

.

கேமரா ஜூம்

ஒருமுறை இங்கிருக்கும் ராக்கி மலைத்தொடருக்கு சென்றிருந்த போது, டிரைவர் போகும்வழியில் பஸ்ஸை நிறுத்தி எல்லோரையும் கீழே இறக்கிறார். அங்கு தூரத்தில் தெரிந்த காட்டு மான்களை காட்டினார்.

உடன் வந்த பயணிகள் அனைவரும், அந்த மான்களுக்கு ஏதோ டைனோசர் லெவலுக்கு பில்டப் கொடுத்து பார்த்தார்கள். தூரத்தில் தெரிந்த அந்த மான்களை, போட்டோ வேறு எடுத்துக்கொண்டார்கள்.

நானும் முயற்சி செய்தேன். முடியவில்லை. நம்ம கேமராவுக்கு அந்தளவுக்கு திறமையில்லை. அப்போது முடிவு செய்துக்கொண்டேன். அடுத்தது, சூப்பர் ஜூம் கேமரா தான் வாங்க வேண்டும் என்று.

இந்த கேமரா நன்றாக இருக்க, அடுத்த கேமரா எப்போது வாங்குவோமோ? என்று நினைத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தேன். நாம எப்போதும் தேய தேய ஒரு பொருளை தேய்ஞ்ச பிறகுதான் அடுத்தத வாங்குற ஆளு!!!

அந்த பயணத்தின் போதே, மனைவி பனியை கண்ட ஆர்வக்கோளாறில், ஒரு உருண்டைப்பிடித்து, ஆசையாக என் மீது எறிய, அது கேமராவில் பட்டு, கேமரா உயிரைவிட, என் ஆசை நிறைவேறியது. உயிர் விட்டது என்றால், ஒரேடியாக விடவில்லை. எடுக்கும் படங்களில் எல்லாம் குறுக்கே கோடுகள்.

அது தான் என்னுடைய முதல் கேமரா. ஆயிரக்கணக்கில் புகைப்படங்கள் எடுத்து தள்ளிய கேமரா. கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இன்னொரு கேமரா வாங்கும் வாய்ப்பு கிடைத்ததால், சமாதானம் ஆனேன்.

இதுதான் புது கேமரா வாங்குவதற்கான காரண காரியம் நிகழ்ந்த சம்பவம்.

இதையடுத்து, சமீபத்தில் Canon SX 40 வாங்கினேன். எதிர்பார்த்த விஷயம், பிடித்த விஷயம், இதிலுள்ள ஜூம் தான்.

சமீபத்தில் எடுத்த இந்த வீடியோ, இதை விளக்கும்.



யூ-ட்யூபில் இது போல் பல வீடியோக்கள் காணக்கிடைக்கிறது. நிலாவைக்கூட ஜூம் செய்து போட்டிருக்கிறார்கள். வடை சுட்ட பாட்டியைத்தான் தெரியவில்லை!

.

Wednesday, December 28, 2011

வாழ்வின் சிறந்த நாள்

சென்ற வாரத்தில், என் வாழ்வின் சிறந்த நாட்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன். சென்ற வாரம், எனக்கு மகள் பிறந்தாள்.



---

சிலர் உசுப்பேற்றிவிட, பலர் ஆச்சரியப்பார்வை பார்க்க, மனைவியின் பிரசவத்திற்கு இந்தியா பயணித்தேன். கிளம்பும் சமயம், ஒரு சோக செய்தி வந்து சேர, பயணம் குழப்பத்துடன் அமைந்தது. இந்தியா வந்து சேரவும், நிம்மதியான செய்தி வர, குழப்பம் பயணத்துடன் சேர்ந்து முடிவு பெற்றது.

---

சென்ற சமயம், இந்தியா வந்திருந்த போது, வீட்டினர் அனைவருக்கும் சில பல பொருட்கள் வாங்கி வந்ததால், இந்த முறை அது இல்லை. ஆனால், இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் அமெரிக்காவில் இருந்து சில பொருட்களையும், அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் இந்தியாவில் இருந்து சில பொருட்களையும் வாங்கி வர சொல்லியிருந்ததால், குருவியாகி போனேன்.

---

என் மகள் எனக்காக காத்திருந்தாள் போலும். அப்படித்தான் பலர் சொன்னார்கள். நான் சென்று ஒருநாள் கழித்து அவள் பிறந்தாள். பிரசவ அறைக்கு வெளியே காத்திருக்கும் போது, முன்பும் பின்பும் நடக்க தோன்றியது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். உள்ளே குழந்தை அழுகை சத்தம் கேட்டதும், அடக்க மாட்டாமல் கதவருகே வந்து நின்றுக்கொண்டேன்.

நர்ஸ் வெளியே வந்து குழந்தையை என் கையில் கொடுக்கும் போது, நான் அடைந்த உணர்வை சொல்ல எனக்கு தெரியவில்லை. தாயிற்கும், சேயிற்கும் எந்த குறையும் இல்லாமல் பிரசவம் நிகழ்ந்தது.

---

அந்த பகுதி குளிர் பிரதேசம் என்பதால், குழந்தையை எல்லா பக்கமும் துணியால் சுற்றி கையில் கொடுத்தார்கள். அதுதான் அங்குள்ள வழக்கமாம். குழந்தையை தூக்க வசதியாக இருந்தது. முதலில், என்ன இது, குழந்தை கையை காலை அசைக்க முடியாமல் இப்படி கட்டி வைத்திருக்கிறார்களே? என்று தோன்றியது. பிறகு, அது தான் அவளுக்கு வசதி, சுகம் என்று புரிந்தது.

---

என்னை மாதிரியா? அல்லது, என் மனைவி மாதிரியா? நாங்கள் கேட்காமலேயே குழந்தையை பார்க்க வந்திருந்த பலரும் தெளிவாக ஒரு தெளிவில்லாத பதிலை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ரெண்டு மூணு மாசம் ஆகணும் என்று முடிவில் ஒரு கருத்து தெரிவித்து சென்றார்கள்.

எனக்கென்னமோ என்னை போல் ஒரு சிந்தனைவாதியாக (!!!) வருவாள் போல் தெரிந்தது. விழித்திருக்கும் பெரும்பாலான நேரம், கண்களை உருட்டி கொண்டு, ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போலவே எங்காவது பார்த்துக்கொண்டிருக்கிறாள். :-)

---

”குமரனுக்கு மவா பொறந்திருக்கா.” “உன் மொவா என்ன சொல்றா?” என்பன போன்ற வார்த்தைகள் மனதிற்கு குளிர்ச்சியை கொடுத்தது.

---

ஒரு வாரம் எப்படி சென்றது என்று தெரியவில்லை. சுகமான நினைவுகளுடன் இங்கு திரும்பி இருக்கிறேன். அப்பாவான பிறகு, வேறு மாதிரி மாற வேண்டுமா என்று தெரியவில்லை. அதே போல் தான் இருக்கிறேன். என்னையறியாமலேயே மாறி விடுவேன் என்று நினைக்கிறேன்.

---

அடுத்து பெயர் தேடும் படலம் ஓடிக்கொண்டிருக்கிறது. பல நிபந்தனைகளுக்கு உட்பட்ட பெயராக இருக்க வேண்டும். இதில் எவ்வளவு கம்ப்ரமைஸ் செய்ய வேண்டி இருக்கிறதோ? குழந்தை பிறக்கும் போதே, ஒரு பெயரை சொல்லிக்கொண்டு வந்தால், எவ்வளவு நல்லாயிருக்கும்?

---

குழந்தை வளர்ப்பில் இருக்கும் இனிமையையும், சவால்களையும் எதிர் நோக்கி காத்திருக்கிறேன். அவளிடம் இருந்து கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன், அவளின் வருகைக்காக.

.

Monday, December 12, 2011

கேமரா புதுசு

என்ன தான் போட்டோ எடுக்க, திறமை முக்கியம் என்றாலும், கேமரா சரியில்லாவிட்டால் அவ்வளவுதான். அது போல, குருட்டாம்போக்கில் எடுத்தாலும், சில கேமராவில் எடுக்கும் போது, புகைப்படங்கள் அழகாக தெரியும்.

சென்ற வாரம், புதிதாக வாங்கிய கேமராவை வைத்து, வீட்டிலிருந்து எடுத்த சில புகைப்படங்களைப் பார்க்கும் போது, அப்படி தான் தோன்றியது.













ஒரு வேளை, புது கேமரா மீதான பாசத்தால், எனக்கு தான் இந்த புகைப்படங்கள் அழகாக தெரிகிறதோ என்னவோ?

Wednesday, December 7, 2011

குளிரும் பஜ்ஜியும் - ஆட்டோபிக்‌ஷன் சிறுகதை



சிறிது தூரம் தான் வெளியில் நடக்க வேண்டியிருந்தாலும், குளிரில் உடல் ப்ரிஸ் ஆகிறது. இந்த குளிரில் சூடாக காபியும், மிளகா பஜ்ஜியும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்? நினைக்கவே உச்சந்தலையில் சுர்ரென்றது.




வீட்டுக்குள் நுழைந்ததும், பேக்கை கழட்டி வைத்து, கை காலையை அலம்பிவிட்டு, கிச்சனுக்கு சென்று, கீழ்கண்டவற்றை எடுத்தேன்.

ஒரு கப் கடலை மாவு
சிறிது அரிசி மாவு
சிறிது மைதா
கொஞ்சம் மிளகாய் பொடி
உப்பு
லைட்டா ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்

இவையனைத்தையும் தண்ணீர் விட்டு கலந்தேன்.



அடுப்பில் வாணலியில் எண்ணையை காய வைத்தாயிற்று.

ப்ரிட்ஜில் இருந்து இரண்டு மிளகாயும், கூடைக்குள் இருந்து ஒரு வெங்காயமும், ஒரு உருளைக்கிழங்கும் எடுத்து நறுக்கினேன்.



ஸ்லைஸாக நறுக்கி, கலந்து வைத்த மாவில் முக்கி, சூடான எண்ணெய்யில் போட்டேன்.



அடுப்பில் அது கிடைக்கும் வேளையில், சூடாக ஒரு காபி தயார். இந்த பக்கம், பஜ்ஜியும் ரெடி.



நேற்று இரவு வைத்த தேங்காய் சட்னி, ப்ரிட்ஜில் இருப்பது நினைவுக்கு வர, ஏதோ முன் ஜென்ம பிறப்பின் ரகசியத்தை அறிந்துக்கொண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.



ஒரு கையில் சூடான காபி, இன்னொரு கையில் சட்னியில் முக்கிய பஜ்ஜி. ஹாட்!!!

இன்னும் நாலு க்ளைமாக்ஸ் இருக்கு. அப்புறம் சொல்றேன்.

---

அப்புறம் இத பாத்தீங்களா?

.

Tuesday, December 6, 2011

மதன் டாக்ஸ்

நேற்றைய பதிவில், பாக்யராஜ் ‘பேசலாம்’ என்று சொல்லிவிட்டு அவரே பேசிக்கொண்டு இருக்கிறார் என்று சொன்னேன். இன்று ஜெயா டிவியில் வந்த ‘மதன் டாக்ஸ்’ நிகழ்ச்சியை பார்த்தேன். டாக்ஸ் என்று இருந்தாலும், இவர் செல்வராகவனை அதிகம் பேசவிட்டார்.



செல்வராகவன் பேசியதில் சில,

”என்னால் மூன்று படங்களை, ஒரே நேரத்தில் எடுக்க முடியும்.”

”என் வாழ்க்கையே ஒரு குழப்பம். அமைதின்னா என்ன, சந்தோஷம்ன்னா என்ன? அப்படின்னு ரொம்ப சுத்தி தேடி, அலைஞ்சி திரிஞ்சு, நொந்து நூலான்னுந்துக்கப்புறம் பாத்தா, இங்க தான் பக்கத்துல இருக்கு.”

”நிம்மதியா இருக்கிறத, போர்’ன்னு நினைச்சுக்கிறோம்.”

”ஒழுக்கமாக இருப்பது தான், வாழ்க்கையில் நிம்மதி.”

”படத்தை ஒரு go'ல பாக்கணும். ப்ரேக்குக்கும், கதைக்கும் என்ன சம்பந்தம்?”

”இன்னைக்கு படத்தோட நீளம் 2:20 என்பதால், அதோடு நிறுத்தியிருக்கிறேன்.”

”எடிட்டிங் ரூம்ல படம் பார்த்து அழுதிருக்கிறேன்.”

”தனுஷ் மேலிருந்து விழுவதை ஆக்ஸிடெண்ட் என்றும் எடுத்துக்கொள்ளலாம், தற்கொலை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.”

”என் கதைய யாராச்சும் திருடுனாலும், என்னால ஒண்ணும் பண்ண முடியாது. வீட்ல உட்கார்ந்து அழ வேண்டியது தான். படத்துல காட்டுற மாதிரி நாங்க எல்லாம் ஹீரோ இல்ல, பயந்தாங்குளி தான்.”

”ஸ்கிரிப்ட்ல தனுஷ் அந்த போட்டோக்கிராபரை பீச்ல அடிக்கிற மாதிரி சீன் இருக்கு. ஆனா, என்னால அதை எடுக்க முடியல.”

”I don't want to give justification. I don't want to follow any rules.”

”கருத்து சொல்றதுக்கு எனக்கு எந்த தகுதியும் கிடையாது.”

”பாட்டி முகத்தில பார்த்த புன்னகைக்கும், முகத்தில விழுற இலைக்கும் ஒரே அர்த்தம் தான்.”

பாருங்க... பேசவிட்டா எவ்ளோ பேசுகிறார்?

மதனும் ”ஒரு விமர்சகர், இயக்குனருக்கு ஆலோசனை சொல்வது மோசமானது. இருந்தாலும் சொல்கிறேன்.”ன்னு சொல்லிவிட்டு, ஐடியா கொடுத்தார். செல்வராகவன் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. என் படம், அப்படித்தான் எடுப்பேன் என்பதுபோல் பேசினார். அதையும் முடிவில் மதன் பாராட்டினார்.

மதன் பேசுவதையும் சில நேரங்களில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. வேலாயுதம் விமர்சனத்தில் ராஜாவிடம் கேட்ட கேள்விகளில் சிலதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த வாரம், இயக்குனர் சார்பாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் கதை, திரைக்கதை சம்பந்தமாக பதிலளித்தது கவர்ந்தது.

---

இந்த வாரம், மதன் சாப்ளின் பற்றி கூறிய ஒரு தகவல் சுவாரஸ்யமானது.

சாப்ளின் இறந்த பிறகு, அவர் உடலை சிலர் களவாடி, பிறகு அது கணடுபிடிக்கப்பட்டு, திரும்ப திருடப்படாதபடி புதைக்கப்பட்டது, சுவையான தகவல்.

.

Monday, December 5, 2011

வாங்க பாக்யராஜ் பத்தி பேசலாம்

விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக பாக்யராஜ் படங்களை விமர்சனம் செய்யும் நிகழ்ச்சியாக ‘வாங்க சினிமா பத்தி பேசலாம்’ என்றொரு ப்ரோக்ராம் வருகிறது. சென்ற வாரம், வித்தகன். இந்த வாரம் - மயக்கம் என்ன.



நிகழ்ச்சியின் பெயராக ‘வாங்க சினிமா பத்தி பேசறேன்’ என்று வைத்திருக்கலாம் என்ற தோன்றும் அளவுக்கு பாக்யராஜ் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். பாக்யராஜ் நூறு வரிகள் பேசினார் என்றால் தனுஷும், செல்வராகவனும் சேர்ந்தே 10 வரிகள் தான் பேசியிருப்பார்கள்.

எனக்கு பாக்யராஜ் மேல் பெரும்மதிப்பு உண்டு. அவருடைய பழைய படங்கள் அப்படி. ரொம்ப பிடித்த படங்கள். டிவியில் எப்ப போட்டாலும் பார்க்கலாம். காமெடியையும், செண்டிமெண்டையும் கலந்து புத்திசாலித்தனமாக காட்சியமைப்பதில் ‘இந்தியாவின் நம்பர் 1’ திரைக்கதையாசிரியர் என்று புகழப்பட்டவர்.

ஆனால், இப்போது அவர் படங்களைப் பார்க்கும் போது, சில வசனங்கள் ரொம்ப பிற்போக்குத்தனமாக தோன்றும். பெண்களைப் போற்றும் விதமாக காட்சியோ, வசனமோ இருந்தாலும், ஆண் ஒருபடி மேலிருந்தே அதை செய்வான். இன்னும் நிறைய உண்டு. எப்படி காலம் மாறினாலும், எடுத்த படங்கள் மாறதோ, அதுபோல் அந்த படங்களை எடுத்த படைப்பாளியும் மாறாமல் இருந்தால், படைப்பாளிக்கும் நஷ்டம். படைப்பாளியின் ரசிகர்களுக்கும் நஷ்டம். இங்கு பாக்யராஜ் பெர்பெக்டாக மேட்ச் ஆகிறார்.

அவர் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கும் விஷயங்கள் பல காலாவதியாகிவிட்டது.

இந்த வார நிகழ்ச்சியில் அவர் படத்தின் குறையாக சொன்ன விஷயம் - படத்தின் இரண்டாம் பாதியில் காமெடி குறைந்துவிட்டது. அது மட்டுமில்லாமல், காமெடி காமெடி என்ற அளவுகோலுடனேயே இந்த படத்தை மதிப்பீடு செய்தார். படத்தின் மையக்கருத்தான மனித உறவுகளை பற்றியோ, உணர்ச்சிகளையோ பற்றியோ ஒன்றுமே சொல்லவில்லை. தனுஷின் நடிப்பை புகழ்ந்தவர், ரிச்சா நன்றாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்றார்.

தனுஷுடன் ‘நாய் போல் வேலை பார்’ காட்சியைப் பற்றி பேசும் போது, ”நீங்கள் ஏன் முட்டிப்போட்டு நான்கு கால்களுடன் நடந்துக் காட்டவில்லை?” என்றார். என்ன பாக்யராஜ் சார் இது?

சென்றவாரம், வித்தகன் விமர்சனத்தின் போது, பல இடங்களில் இதை அப்படி எடுத்திருக்கலாம், அதை இப்படி எடுத்திருக்கலாம் என்று பாக்யராஜ் சொல்ல, பார்த்திபனும் ஆமாம் என்பது போல் ஒத்துக்கொண்டு தலையாட்டினார். (மதனுடனான நிகழ்ச்சியிலும் பார்த்திபன் இவ்வாறே பரிதாபமாக காட்சியளித்தார்) செல்வராகவன் அப்படியெல்லாம் இல்லாமல், ரொம்ப தன்னம்பிக்கையுடன் அது அப்படிதான் என்று பேசினார். (”தலைல பாட்டில் உடைக்கிறதுக்கூட காமெடித்தான்!!!”)

படைப்பாளியின் பலமும் பலவீனமும் தெரியும் இடங்கள் இவை.

.

Saturday, December 3, 2011

ஐஸ்

இடம்: டென்வர், யூ.எஸ்.

எங்கள் அலுவலகத்தில் மாதமொரு நடக்கும் ஒரு மீட்டிங்கில், எல்லோரையும் பேச விட, முதலில் ஒரு கேள்வி கேட்பார்கள். அதற்கு அனைவரும் பதில் சொல்ல வேண்டும். ஒருமுறை பிடித்த திரைப்படம் எது என்று கேட்டார்கள். அமெரிக்கர்களும், பெரும்பாலான இந்தியர்களும் பல ஆங்கில படங்களை கூறினார்கள். ஒரு ஆந்திரக்காரர் மட்டும் சக்தே இந்தியா என்றார். என் முறை வருவதற்கு முன்பே யோசித்துக்கொண்டிருந்தேன். நமக்கு பிடித்த படம் எது? நிறைய இருக்கிறது. எதை சொல்ல?

முறை வந்தது. ‘நான் இந்திய படங்களையே அதிகம் பார்க்கிறேன். இந்திய நடிகர் ரஜினிகாந்த் நடித்த பல படங்கள் எனக்கு பிடித்த படங்கள்’. நிறைய பேருக்கு ரஜினி பற்றி தெரிந்திருந்தது. புன்னகைத்தார்கள். இன்னொரு முறை, பிடித்த ஸ்வீட் பற்றி கேட்டார்கள். குலோப் ஜாமூன் என்றேன். அடுத்த முறை, பிடித்த இடம் பற்றி கேட்டார்கள். எனக்கு ஜில்லென்று இருக்கும் எல்லா இடங்களும் பிடிக்கும் என்றேன். உதாரணத்திற்கு இந்தியாவில் ஊட்டி என்றேன்.

இது அனைத்துமே என் மனத்திற்கு முதலில் தோன்றிய பதில்கள். இதுதான் உண்மையானதும் என்பது என் நம்பிக்கை.

தென் தமிழகத்தின் கடலோரப்பகுதியில் பிறந்து வளர்ந்த எனக்கு குளிர்ச்சி என்றாலே மகிழ்ச்சி தான். வெக்கை வாடிக்கையானது. எங்காவது குளிரான இடத்திற்கு போக மாட்டோமா? என்று இருக்கும். அதனாலேயே ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்கள் பிடிக்கும். சிறுவயதில் ஊட்டி, கொடைக்கானலில் ஜஸ் மலை இருக்கும் என்று சொல்வதை கேட்டு நம்பி ஏமாந்திருக்கிறேன். இமயமலை போவதை ஒரு பெரிய லட்சியக்கனவாகக்கூட வைத்திருந்தேன்.

அந்த மீட்டிங்கில் நான் அப்படி சொன்னதை கேட்டதும், ஒருவர் கேட்டார். ‘நீ டென்வரில் குளிர்காலத்தில் இருந்தது இல்லையே?’ என்று. ‘இருக்குடி மவனே உனக்கு’ என்ற டோனில்.



இருந்தாலும் நாம் இதை என்ஜாய் செய்வோம் என்று உறுதியாக நம்பினேன்.

---

டென்வர் வந்த புதிதில், தூரத்தில் தெரியும் ஒரு பனிமலையைப் பார்க்கும்பொழுதெல்லாம் ரொம்ப மகிழ்வாக இருக்கும். அப்போது ஒருமுறை என் மேனேஜருடன் இந்த ஊரில் சுற்றிப்பார்க்கும் இடங்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, என்னுடைய கேள்வி - பனிமலையை பற்றியே இருந்தது. அவர் அதற்கு சலிப்புடன், குளிர்காலத்தில் ஊர் முழுக்க பனியாகத்தான் இருக்கும். பாத்துக்க என்றார்.

---

இதோ குளிர்காலம் வந்துவிட்டது. நேற்று மூன்றாவது முறையாக பனி பெய்தது. ஊர் முழுக்க படர்ந்திருக்கும் வெளீர் பனியை பார்க்கும்போது, நான் பார்க்க நினைத்த சொர்க்கபூமியை பார்த்துவிட்ட உணர்வு வருகிறது.



முதல் இருமுறை ’பனி பெய்தால் அலுவலகம் வர வேண்டாம்’ என்று முந்திய நாளே சொல்லிவிட்டார்கள். நம்மூர் போல் இல்லாமல், ஒரளவுக்கு வானிலை அறிக்கையில் சொல்வது போல், வெயில் அடிக்கிறது. மழை பெய்கிறது. பனி பொழிகிறது. (எத்தனை இன்ச் பனி பெய்யும் என்று குறிப்பிடுவார்கள்.) இம்முறை பனி பெய்துக்கொண்டிருந்தபோதே, காரில் அலுவலகம் சென்றோம். நல்ல அனுபவமாக இருந்தது. இம்மாதிரி நேரங்களில் வீட்டிலிருந்தே வேலையை பார்ப்பது உசிதம் என்று புரிந்துக்கொண்டேன்.



இந்த ஊரில் வெயில் கூட கூட மகிழ்ச்சி கூடுகிறது. ஏனென்றால், அப்பொழுது தான் அவர்களால் வெளியே செல்ல முடிகிறது. அரசாங்கத்தால் மரமாத்து வேலைகளை அப்பொழுதுதான் செய்ய முடிகிறது.



குளிர்காலத்தில் இவர்கள் படும் அவஸ்தை இப்பொழுதுதான் புரிகிறது. பனி பொழிந்து, பாதை வழுக்கிறது. நடந்தால் கால் வழுக்கும். ஓட்டினால் கார் வழுக்கும். ஒரு இடம் போய் சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. கார் டயர் தேய்ந்துபோய் இருந்தால், அவ்வளவுதான். அங்கிங்கு என்று நம் பேச்சைக் கேட்காமல், நம்மை இழுத்துக்கொண்டு செல்லும். டேன்ஜர்தான்.

---

இந்த ஊரில் பனிசறுக்கு பிரபலம். அமெரிக்காவின் பல இடங்களில் இருந்து, இங்கு வந்து சறுக்குவார்கள். நாங்களும் செல்லலாம் என்று இருக்கிறோம். அலுவலகத்தில் அவ்வப்போது பேசிக்கொள்வோம்.

இந்த வாரம், அடுத்த வாரம் என்று சென்றுக்கொண்டு இருக்கிறது. நேற்று ஆபிஸ் வந்த நண்பர், ‘நான் சறுக்கினேன்’ என்றார்.

நாங்க என்னடா நம்மிடம் இந்தாளு சொல்லாமல் கொல்லாமல் சென்று விட்டாரே? என்று ‘எப்ப பாஸு?’ என்றோம்.

‘அட போங்க பாஸூ. வீட்டுக்கிட்ட வழுக்கி விழுந்துட்டேன்’ என்றார் பாவமாக.

‘இதுக்குன்னு ஏதோ ஷூ இருக்குன்னு சொன்னாங்களே?’

‘அத போட்டுக்கிட்டு தான் விழுந்தேன்’

‘அப்புறம்?’

‘அப்புறம் என்ன? யாராவது பார்த்தாங்களா’ன்னு சுத்திமுத்தி பார்த்தேன். யாரும் இல்லை. தட்டிவிட்டுக்கிட்டு எந்திரிச்சிட்டேன்.’



அதனால இது ஒரு பிரச்சினை. எங்க சறுக்கும்’ன்னே தெரியாது. பனி அப்படியே உறைந்து, தரையோடு ஜஸ்ஸாகி, சரிவான பகுதியில் நன்றாக வழுக்கும். பிடிக்க ஏதும் இல்லையென்றால், அரோகரா தான்.


---

என்ன இருந்தாலும், ஜஸ் இன்னும் பிடித்தமானதாகவே இருக்கிறது. தேவதைகளுக்கு நம்மூர் இயக்குனர்கள் வெள்ளை உடை அணியவிடுவார்கள். குளிர்காலத்தில் இந்த ஊரும் வெள்ளை உடையணிந்துக்கொண்டு, ஒரு தெய்வீக லுக்குடன் தான் இருக்கிறது. வாகனங்கள் செல்லும் பாதைகளில் தான், ஒருமாதிரி புறக்கணிக்கப்பட்ட நிலையில் கருமையாக சாலைகளில் பனி அலைக்கழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.



குளிர் 20-25 பாரான்ஹூட் என்று காட்டும். யோசித்து பார்த்தால் தான், நாம் மைனஸ் டிகிரியில் இருக்கிறோம் என்று புரியும்.



எனக்கு தெரிந்து எல்லோருமே, இங்கு பனி என்றால் ஒருவித சலிப்புடன்தான் இருக்கிறார்கள். நான் தான் நடுங்கிக்கொண்டு இருந்தாலும், ஒருவித குதூகலத்துடனேயே சுற்றிக்கொண்டு இருக்கிறேன்.

---

குறிப்பு: புகைப்படங்கள் ஓடும் காரில், மொபைலில் எடுத்தது. சுமாராகத்தான் இருக்கும்.


வந்த புதிதில் இங்கிருக்கும் ராக்கி மவுண்டெயின் சென்றபோது எடுத்த வீடியோ. அது கோடைகாலம். இப்ப குளிர்காலத்தில் அந்த பாதையை மூடிவிடுவார்கள் என்று கேள்விப்பட்டேன். பஸ் ஓட்டுனர் போகும்பாதையை விளக்கிகொண்டு வந்தார். அவர் வாய்ஸ் இருக்கும்.



.

Wednesday, November 9, 2011

கிப்ட் கொடுத்த அந்த வள்ளல் யாரு?

போன பதிவில் ஓசி என்பதால் ஆர்ட் மியூசியம் சென்று வந்தேன் என்று கூறியிருந்தேன் அல்லவா? அதை பற்றி சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது.



போரடிக்கிறது என்பதாலும், அனுமதி இலவசம் என்பதாலும், ஒரு ஆர்வ கோளாறில் சென்று விட்டோம். ஆனால், அங்கு இருக்கும் ஓவியங்களையோ, சிலைகளையோ முழுவதுமாக பொறுமையாக நின்று பார்க்கும் ஆர்வமில்லை. மொத்தம் ஏழு மாடிகள். ஆறாவது மாடியில் இருந்த போது, ‘ஹைய்யா! இன்னும் ஒரு மாடி தான்’ என்று மகிழ்ச்சியில் கூறிகொண்டோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.



ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு ரகம். எங்களை கவர்ந்தது ஆசிய கலை பொருட்கள் இருந்த தளம் தான். ஏனெனில் அங்கு தான் இந்திய கலை சிற்பங்கள், ஓவியங்கள் இருந்தன. இந்த பதிவு அதை பற்றி தான்.

நாங்கள் இங்கு வருவதற்கு முன்பே, மற்ற தளங்களில் இருந்த சில சிலைகளைப் பார்த்து, ‘இதில் என்ன இருக்கிறது? நம்ம ஊரில் இருக்கும் ஒரு சாதாரண கோவிலிலேயே எப்படிப்பட்ட சிலைகள் இருக்கிறது?’ என்று சொல்லிக்கொண்டு வந்தோம்.

நம்மூர் ஐட்டங்கள்(!) இருந்த தளத்தில் எல்லாம் சாமி சிலைகள், ஓவியங்கள், கோவில் கதவுகள். எந்த ஊர் கோவிலில் இருந்தோ பெயர்த்துக்கொண்டு வந்தது போல் இருந்தது.

ஒவ்வொரு சிலைக்கும் கீழே, அந்த சிலையைப் பற்றிய குறிப்புகள் இருந்தது. எந்த சாமி, எந்த ஊர் சிலை, யார் கொடுத்தது என்று. இதோ நீங்களே பாருங்கள்,



























சில வள்ளல்கள் அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்கள். வள்ளல்கள், நம்மூர் சிற்பிகளிடம் ஆர்டர் கொடுத்து செய்திருப்பார்களோ? பார்த்தால், அப்படி தெரியவில்லையே!!!

அதிலும் சிலவற்றை அனானிகள் கொடுத்திருக்கிறார்கள். எப்படி மியூசியம் வாசலில் வைத்துவிட்டு பெயர் சொல்லாமல் போய்விட்டார்களோ? இல்லை, எதற்கு இந்த பெருமை என்று தன்னடக்கத்துடன் பெயர் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களோ?

எனக்கென்னமோ, எதை பார்த்தாலும், எங்கோ ஆட்டையைப் போட்டு வந்தது போல் தோன்றியது. எப்படி இருந்தாலும், நல்லா இருந்தா சரி. எங்கிருந்தாலும் வாழ்க! (அப்படி நாமே வைத்திருந்தாலும் நல்லா பராமரிச்சு இருப்போம் பாருங்க?!!!)


---

அடுத்த அறையில் சீன சிற்பங்களும், ஓவியங்களும் இருந்தது. ஒன்றைத் தேடி அலைந்தேன். ம்ஹூம்.

அங்கு போதிதர்மர் இல்லவே இல்லை. :-(

பாருங்க, சீனர்கள் போதிதர்மரை எப்படி பாதுகாக்கிறார்கள் என்று?

.

Sunday, November 6, 2011

நூலகம் போகத்தான் வேண்டுமா?

நூலகம் செல்வது எனக்கு பிடித்த விஷயம். என்னை பொறுத்தவரை, அது மலரும் நினைவுகளாகிப் போன விஷயம். நூலக அனுபவங்களை ஏற்கனவே இங்கு பதிந்திருக்கிறேன்.

டென்வரில் சந்திந்த சில இந்திய நண்பர்கள், என்னிடம் இங்கிருக்கும் லைப்ரரிக்கு போய் வர சொல்வதுண்டு. நான் ஆர்வம் காட்டாமல் இருந்தேன். சில காரணங்கள் - பஸ் பிடித்து சென்று வர வேண்டும். ஆங்கில புத்தகங்களாவே இருக்கும். அது கொஞ்சம் நமக்கு கசப்பான விஷயம். ஏற்கனவே சீப்பாக கிடைத்ததே என்று வாங்கிய சில ஆங்கில புத்தகங்கள் அலமாரியில் உறங்கிக்கொண்டிருக்கிறது.

ஆனால் எனக்கு தெரிந்த சில இந்திய குடும்பங்களை, குடும்பத்தலைவர்களை பாராட்ட வேண்டும். விடுமுறை தினங்களில் அவர்களது குழந்தைகளை கூட்டிக்கொண்டு, லைப்ரரி சென்றுவிடுவார்கள். கை நிறைய புத்தகங்கள் எடுத்து வந்து, பிறகு சில வாரங்கள் கழித்து திரும்ப கொடுப்பார்கள்.

இங்குள்ள அரசாங்க அமைப்புக்கள் நூலகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம். நான் பொதுவாக நகரத்தின் மையப்பகுதிகளுக்கும், சில பெரிய கடைகளுக்கும் சென்று வர, அரசு பேருந்துகளில் சென்று வருவேன். ஒன்றிரண்டு வழித்தடங்கள் தான் இருக்கும். அதில் சென்று வரும் போதே, நான் மூன்று நூலகங்களைப் பார்த்திருக்கிறேன்.

ஆனாலும், புத்தகங்களை எடுக்க இருமுறை பேருந்துகளிலும், திரும்ப கொடுக்க இருமுறை பேருந்துகளிலும் செல்ல வேண்டுமே! என்று சோம்பல் பட்டுக்கொண்டு, அங்கு செல்ல முயற்சி எடுத்ததே இல்லை.

---

சில தினங்களுக்கு முன்பு, என்னிடம் ஒரு பேச்சிலர் நண்பர், வாரயிறுதியில் லைப்ரரி சென்று வந்ததாக கூறினார். ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அவருடைய பற்றி எனக்கு தெரியும்.

“போயி?” ஆச்சரியத்துடனேயே கேட்டேன்.

“நாலைஞ்சு டிவிடி எடுத்துட்டு வந்தேன்.”

“டிவிடியா? என்ன டிவிடி?”

“படம் தான். சில இங்கிலீஷ் படங்கள்.”

அதானே பார்த்தேன்?!!!

இருந்தாலும், ‘அதான், எல்லாம் இண்டர்நெட்டில் கிடைக்கிறதே?’ என்று கூறிவிட்டு வந்தேன்.

---

நேற்று டென்வர் ஆர்ட் மியூசியம் சென்று வந்தேன். கலையில் அவ்வளவு ஆர்வமா? என்று கேட்காதீர்கள். மற்ற நாட்களில் பதிமூன்று டாலர்கள். நேற்று இலவசம். கொஞ்சம் நேரம் சுற்றிவிட்டு வெளியே வந்தப்போது, பக்கத்தில் நகரின் தலைமை நூலகம் இருந்தது.



உடன் வந்த நண்பர், இந்த ஊரில் இருந்த சாட்சிக்காக, லைப்ரரி கார்டு வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்றார். காசா, பணமா - வாங்கிக்கொள்ளலாம் என்று சென்று வாங்கிக்கொண்டோம்.



பெரிய லைப்ரரி. முழுக்க கணிணிமையமாக்கப்பட்டது. முன்னால் இருந்த கணிணிகளில் எங்கள் தகவல்களைப் பதிந்துக்கொள்ள, அங்கிருந்த அலுவலகர் லைப்ரரி கார்டு கொடுத்தார். கணிசமான மக்கள் கூட்டம் இருந்தது. வகைக்கேற்ப நிறைய ஹால்கள். ஒவ்வொரு ஹாலிலும் வகைக்கேறப நிறைய பிரிவுகள்.

நாம் முதலில் எங்கு செல்வோம்? டிவிடிகள் இருக்கும் ஹாலுக்குள் நுழைந்தோம். நிறைய ஆங்கில படங்கள். வேறு என்ன மொழிகள் இருக்கிறது என்று பார்வையை ஓட்டினேன். ஹிந்தி கண்ணில் பட்டது. சீனி கம், சாந்தினி சவுக்... கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. பிறகு ஆட்டோமேட்டிக்காக தமிழை தேடி கண்கள் ஓடியது. தெலுங்கு கண்ணில் பட்டது. ஸ்டாலின்... அடுத்தது, தமிழ் இருந்தது! கன்னத்தில் முத்தமிட்டால்...

ஒன்றிரண்டு படங்கள் தான் இருந்தாலும் எனக்கு அது வியப்பு தான். டென்வர் எங்கோ இருக்கிறது. தமிழ்நாடு எங்கோ இருக்கிறது. இது தமிழ் மொழியின், தமிழ் சினிமாவின் வீச்சா? அல்லது, இங்கிருக்கும் நூலக அமைப்பின் ஆர்வ தேடலா? தெரியவில்லை.

பிறகு மற்ற பகுதிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். மறக்காமல், எந்த புத்தகத்தையும் எடுக்காமல் வந்தோம்.

சுலபமாக சென்று வர ஒரு வழி செய்துவிட்டு, பிறகு தான் இந்த பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்.

.

விஜய்க்கா இந்த நிலைமை?




இதுல என்ன இருக்கு?’ன்னு நினைச்சிங்கன்னா, போன பதிவ பாருங்க...

---

அப்புறம் படம் எனக்கு பிடிச்சிருந்தது. உடன் பார்த்த தெலுங்கு நண்பர், ‘ஆமாம், டைரக்டர் யோசிச்சிருக்காரு!’ என்றும் படம் முழுக்க ஆசாத்தின் ரீமேக் இல்லை என்றும் ஒத்துக்கொண்டார்.

.

Sunday, October 30, 2011

ஏழாம் அறிவு

தியேட்டர் சென்று பார்க்க மாட்டேன் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். சனிக்கிழமை போரடித்தால் செல்லலாம் என்றொரு எண்ணம் இருந்ததால், லேப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்த நண்பர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.

ஏனோ தெரியவில்லை. நண்பருக்கு படம் பிடித்திருந்தது. சூர்யாவை புகழ்ந்துக்கொண்டிருந்தார்.

இன்று மதியம் அவரிடம் ‘ஏழாம் அறிவு போறேன். வாரீங்களா?’ என்றேன். எப்படியும் பார்த்தாச்சே! வர மாட்டார் என்றேண்ணினேன். ‘கண்டிப்பா வருவேன்’ என்று ஆச்சரியம் கொடுத்தார்.



இங்கு மூணு மணி ஷோவுக்கு சென்றோம். வெளியே சென்று ரொம்ப நாள் ஆவதால், எங்காவது செல்லலாம் என்று முடிவெடுத்து, இந்த படத்துக்கு சென்றோம்.

---

படத்தை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. வந்த நாளே பார்த்திருந்தால், அதை பற்றி சொன்னால் ஏதேனும் பிரயோஜனம் இருக்கும். டோங்லீ நாய்க்கு போட்ட கிருமி மாதிரி அதான் நல்லா பரவிடுச்சே!

இந்த படத்தின் மைனஸ் என்றால் அது படத்திற்கு கொடுத்த பில்டப் தான். அட்லீஸ்ட், போதிதர்மரையாவது கொஞ்சம் சஸ்பெஸ்சாக வைத்திருக்கலாம். அவரைப் பற்றி படம் வருவதற்கு முன்பே எல்லா சானல்களிலும் டாகுமெண்டரி ஒளிபரப்பி பெப்பை குறைத்துவிட்டார்கள்.

விமர்சனஃபோபியாவுக்கு பயந்து முன்ஜாக்கிரதையோடு இருப்பேன். இனி, பில்டப்ஃபோபியாவுக்கும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் போல?

பில்டப்பும் வித்தியாசமான பில்டப். அடக்கமாக கையை கட்டிக்கொண்டே பில்டப் கொடுத்தார்கள்.

முன்பு, நீதி உபதேசக்கதைகளில் தன்னடக்கம் முக்கியம், தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும் என்பது போல் நீதி வைத்து இருப்பார்கள். ஆனால், அப்ரைசல் வந்து விட்டால், நாம் அப்படியா இருக்கிறோம்? அதை செய்தோம், இதை செய்தோம் என்று பில்டப் கொடுப்போம் இல்லையா? அப்படி தான் எங்கும் ஆகிவிட்டது. பிழைக்க வேண்டும் என்றால் இப்படியொரு விளம்பரம் அவசியமாகிவிட்டது இக்காலத்தில். மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜி!

---

இங்கு ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிட்டு இருந்தார்கள். சைனீஸ் கவர்மெண்ட் என்று வரும் இடங்களை, சைனீஸ் என்றே படத்தில் சொல்கிறார்கள். சப்-டைட்டிலுக்கு சென்சார் கிடையாதே!

கமல் பொண்ணு என்பதால் சில இடங்களில் கேமரா சுட்டதை கிராபிக்ஸ் துணைக்கொண்டு கண்ணியம் காத்திருக்கிறார்கள். தமிழகத்தின் பெருமையை இவருடைய டமிழைக் கொண்டு சொல்கிறார்கள்.

ஏதாச்சும் பெருசா பண்ணனும், பண்ணனும் என்று யதார்த்ததை பல இடங்களில் விட்டுவிட்டு படம் செய்திருக்கிறார்கள். திரைக்கதையில் உருவாக்கிய பல பிரச்சினைகளுக்கு முடிவு சொல்லாமல் படத்தை அம்போவென்று முடித்தது போல் இருக்கிறது.

---

நண்பருக்கு திரும்ப பார்த்தாலும், படம் பிடித்திருந்தது. ஆச்சரியமான விஷயம் தான். அதற்கு காரணம், தியேட்டரில் பார்த்தது தான். வீடு வரும்வரை புகழ்ந்துக்கொண்டு வந்தார்.

படம் சுமார் தான் என்று சொன்ன பிறகும், தியேட்டர் சென்று காசு செலவழித்து படம் பார்த்த எனக்கு எவ்வளவு பெரிய மனசு? என்னைப்போல் ரசிகர்கள் இருக்கும் வரை, தமிழ் சினிமா அழியாது. தமிழ் சினிமாவை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம். (அது என்னமோ தெரியவில்லை. இந்த படத்தின் எபெக்ட். பில்டப் அதுவாக வருகிறது!!!)

.

Wednesday, October 26, 2011

தீபாவளி - 2011

ஊருக்கு செல்லாத தீபாவளி என்று எதுவும் இருந்ததில்லை. முதல் முறையாக, தீபாவளி அன்று வீட்டைவிட்டு தள்ளி இருக்கிறேன்.

---

இங்கு பனிகாலம் இன்றைய முதல் பனி பெய்தலுடன் இன்று ஆரம்பித்து இருக்கிறது.

ஊர் முழுக்க சோப்பு நுரையை அப்பிவிட்டது போல் இருக்கிறது.



(Image URL - http://photos.denverpost.com/mediacenter/2011/10/first-snow-hits-metro-denver/#8)

---

தீபாவளி அன்று ஜாலியாக எண்ணெய் தேய்த்து குளித்து, சாமி கும்பிட்டு, இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டு, காலையில் வடை இட்லியும், மதியம் கறி சாப்பாடும் சாப்பிட்டு விட்டு, வாங்கி கொடுத்த வெடிகளை வீட்டின் சிறுவர்கள் வெடிப்பதைப் பார்த்துவிட்டு, ஒரு தீபாவளி ரிலீஸ் படம் பார்த்து விட்டு அன்றைய தினம் சிறப்பாக முடியும்.

இந்த முறை முற்றிலும் வேற மாதிரி. தீபாவளி அன்று அலுவலகம் போக வேண்டிய நிலை.

நல்லவேளை, பனி தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால், அலுவலகம் வர வேண்டாம். வீட்டிலிருந்தே வேலை பாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இன்னமும் பனி பெய்துக்கொண்டிருக்கிறது.

பருப்பு வடையும், ரவை கேசரியும் ட்ரை செய்தேன். வடை நன்றாக வந்தது. கேசரி கொஞ்சம் கட்டி பிடித்து சொதப்பி விட்டது. சாமி முன் வைத்து கும்பிட்டேன். ‘இதுக்கு நீ சும்மாவே கும்பிட்டு இருக்கலாம்’ என்று போட்டோவில் இருந்த முருக பெருமான் சொன்னது போல் இருந்தது.

‘ஒகே’ என்று நானும் சொல்லிவிட்டு, அவருக்கு வைத்ததை கொஞ்சம் எடுத்து சாப்பிட்டுவிட்டு, வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

---

படம் பார்க்கலாம் என்றால் பனி பெய்துக்கொண்டிருக்கிறது. அதையும் மீறி மாலை சென்றுவிட்டால், ‘ஆபிஸ் போக முடியாதாம். ஆனா, படத்துக்கு போக முடியுமாம்!’ என்று நாலு பேரு நாக்கில் நரம்பில்லாமல் பேசுவார்கள். அதனால், வாரயிறுதியில் செல்லலாம் என்று இருக்கிறேன்.

இங்கு தமிழிலும், தெலுங்கிலும் ‘7ஆம் அறிவு’ ரிலீஸ் ஆகியிருக்கிறது. படம் பார்த்தவர்கள் சொல்வதைக் கேட்டால், பனிரெண்டு டாலரை சேமிக்கலாமா? என்று யோசிக்கிறேன். ரஜினிக்காக ‘ரா-ஒன்’ பார்க்கலாம் என்றால், யூ-ட்யுபில் இருக்கும் வீடியோவைப் பார்த்தால், அது ரஜினி போலவே இல்லை. அது ரஜினி நடையே இல்லை. இந்த உட்டாலங்கடிக்கு ரஜினி ஏன் சம்மதித்தார் என்று தெரியவில்லை. ரஜினியிடம் ஷாருக் சிவாஜி பாணியில், ”நீங்க வந்தா மட்டும் போதும்” என்று சொல்லியிருப்பார் போலும்.

---

7ஆம் அறிவை விட வேலாயுதம் பெட்டராக இருக்கும் போல் தெரிகிறது. இதை தான், “ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது” என்று சொல்கிறார்களோ?

---

எனது முந்தைய தீபாவளி பதிவுகளை வாசித்துப்பார்த்தேன். தீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்கான டிக்கெட்டுக்கான அடிதடியை பற்றியே இருக்கிறது.

இதுவரை ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் பிரச்சினையாக இருந்தது. இப்ப அது இல்லை. அதான், ஊருக்கு செல்வதே பிரச்சினையாக இருக்கிறதே?

---

அனைவருக்கும் எனது தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். :-)

.

Sunday, October 23, 2011

சொந்த சமையல்

எனக்கு உணவின் மீது இருக்கும் காதலைப் போல, சமையலின் மீதும் உண்டு. உணவின் மீதான காதலை, எப்பொழுதுமே வெளிப்படுத்தி, அனுபவித்திருக்கிறேன். ஆனால், சமையல் மீதான காதல் சமீப காலம் வரை கைக்கூடியதில்லை.



நான் சிறுவனாக இருக்கும்போதே சமையல் மீது ஆசை உண்டு. சிறுவயதில், பயோரியோ பல் பொடி டப்பாவை, சிறு கற்கள் மீது வைத்து, அடியில் ஒரு சின்ன மெழுகுவர்த்தியை வைத்து, அதனுள் அரிசியையும், தண்ணீரையும் விட்டு ஒலை வைத்திருக்கிறேன். போட்ட அரிசி, எடுக்க எடுக்க, டப்பாவை மீறி சாதமாக வந்தது, அவ்வயதில் ஆச்சரியம்.

இப்படியெல்லாம் விளையாடிக் கொண்டிருந்த நான், பின்பு வாசிக்க தொடங்கியப்பிறகு, சமையல் பகுதிகளை விடாமல் வாசித்திருக்கிறேன். சமையறை அதிகாரம் கிடைக்காத வயதென்பதால், வாசிப்போடு சரி. ஒரே மாதிரி சிக்கன் சமைக்கப்படும் என் வீட்டில், நண்பன் வீட்டில் வாசித்த சிக்கன் ரெசிப்பியை, அம்மாவிடம் கொடுத்து, சமைக்க செய்து, வீட்டில் சிக்கன் புதுமையை புகுத்திய அனுபவமும் உண்டு.

என் அண்ணனுக்கும் இதுப்போல் சமையல் ஆர்வம் உண்டு. வீட்டில் அம்மாவும், அப்பாவும் ஊருக்கு போய் விட்டால், ஹோட்டலில் போய் சாப்பிட சொல்வார்கள். அச்சமயங்களில், என் அண்ணன், அவருடைய நண்பரை அழைத்து வந்து அசைவ உணவு சமைக்க சொல்வார்கள். அவர் கேட்டரிங் துறையில் அனுபவம் உள்ளவர் என்பதால், ஏதேனும் புதிதாக ட்ரை செய்வார்.

பள்ளி காலத்தின் இறுதியில், மைதா, வனஸ்பதி, பால், சர்க்கரை போட்டு பர்பி செய்யும் செயல்முறையை எதிலோ படித்து, வீட்டில் அனுமதி வாங்கி, செய்து, பாராட்டு பெற்றிருக்கிறேன். கிடைத்த பாராட்டால், ஈஸியாக செய்யலாம் என்பதால், பல முறை அதை செய்து, பர்பி என்றாலே வீட்டினர் வெறுத்து, தெறித்து ஓட வைத்திருக்கிறேன்.

கல்லூரி சென்ற காலத்தில், சமையலுக்கும் எனக்கும் பெரிய இடைவெளி. அதன் பிறகு, வேலைக்கு சென்ற காலத்திலும், வீட்டில் இருந்து சென்றதால், அந்நேரத்தில் மற்றவர்களுக்கு வாய்க்கும் வாய்ப்பு (தொல்லை?) எனக்கு வாய்க்கவில்லை.

எப்பொழுதுவாவது வீட்டில் ஊருக்கு செல்லும் போது, அந்நேரத்தில் பெங்களூரில் எங்கள் வீட்டின் அருகில், தமிழ் கடைகள் ஏதும் இல்லாத காரணத்தால், வீட்டில் சமைப்பதுண்டு. வீட்டில் ஒரு வாரத்திற்கு போதுமான, தோசை மாவு இருக்கும். 2-3 நாட்களுக்கு போதுமான சாம்பார் இருக்கும். அதையும் அவ்வப்போது நூடுல்ஸ் செய்தும் சமாளிப்பேன். பிறகு, வீட்டின் அருகில் தமிழ் உணவகங்கள் வந்தப்பிறகு, நிறைய கடைகளைப் பற்றி தெரிந்த பிறகு, வெளியே சென்று விடுவேன்.

நண்பர் கணேஷுக்கு நன்கு சமைக்க வரும். அவருடைய அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாத சமயம், அவர் அம்மா சொல்லிக்கொடுக்க, இவர் சமைத்து, அவருடைய அம்மாவின் கை பக்குவம் இவருக்கு வந்துவிட்டது. அதனால், சமயங்களில் இவரும் வீட்டுக்கு வந்து, சமையல் செய்வார். இப்படி இவர் வந்துவிட்டால், என் வேலை, காய்கறி நறுக்குவதும், பாத்திரங்களை கழுவுவதும் என்று சென்றுவிடும்.

கணேஷ் சமையல் பிரமாண்டமானது. அவருக்கு சாதாரணமாக செய்ய தெரியாது. முந்திரியை கொட்டி, சிக்கன் க்ரெவி வைப்பார். தேங்காயை அரைத்து, கெட்டியாக மீன் குழம்பு வைப்பார். ஒருமுறை தெரியாமல், அவித்த கடலை கேட்டுவிட்டேன். மாலையில், வெங்காயம், தேங்காய் துறுவல் போட்டு தாளித்து அதை ரெடி செய்துவிட்டார். நான் சாப்பிட நினைத்தது, ஒரு தட்டு அளவுக்கு. அவர் ஒரு சட்டி நிறைய செய்து வைத்திருந்தார். அப்புறம் என்ன செய்வது? பக்கத்து வீடுகளுக்கு சப்ளை செய்தோம்.

காலை சமையல் முடித்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மதிய சமையலைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம். மதிய சாப்பாட்டின் போது, இரவு வேளைக்கான திட்டங்கள் தீட்டப்படும்!

அதனால், அச்சமயங்களில், என் வயிற்றுக்கான தீனி நன்றாக கிடைத்துக்கொண்டிருந்தாலும், என் சமையல் ஆர்வத்திற்கான தீனி கிடைக்கவில்லை.

பிறகு, திருமணம் நடந்தது. இப்ப, இன்னுமா தீனி கிடைக்காமல் இருக்கும்? இரண்டுக்குமே தீனி கிடைத்தது.

சமையல் ஆர்வத்திற்கு, சாப்பாட்டு ஆர்வம் தேவை. சாப்பாட்டு ஆர்வத்திற்கு, சமையல் ஆர்வம் தேவை. உண்மையோ, பொய்யோ, வைரமுத்துவின் வரிகள் போல், இப்பதிவிற்கும் இரு வரிகள் கிடைத்துவிட்டது. (ரொம்ப யோசிக்காதீங்க!)

ஒரே மாதிரி சாப்பிடாமல், வித விதமாக சாப்பிடும் ஆர்வமும், அதற்கான பொறுமையும் இருப்பதால், இணையத்தில் கிடைக்கும் பலவித சமையல் குறிப்புகளை, மனைவிடம் சொல்லி, வீட்டில் பலவித சமையல் நடக்கும். நல்லவேளை, மனைவிக்கும் இதில் ஆர்வம் இருந்தது. நானும் இம்முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதால், திட்டோ, சலிப்போ இல்லாமல், மனைவி செயல்வடிவம் கொடுத்துவிடுவார்.

ஒவ்வொரு ஆணுக்கும் சமைக்க தெரிய வேண்டும். அட்லீஸ்ட், அதற்கான ஆர்வம் இருக்க வேண்டும். மனைவியின் பிறந்தநாளின் போது, காலையிலேயே அவருக்கு முன்பு எழுந்து, ஏதோ கேசரி போன்ற ஒரு ஸ்வீட்டை செய்து, பிறகு மனைவிக்கு அதை ஆச்சரியத்தோடு காண்பித்து உண்ண வைப்பது, எவ்வளவு சந்தோஷம்?

இப்பொழுது தனியாக இருப்பதால், வேறு வழியே இல்லாமல், நான் தான் சமைக்க வேண்டும். உடன், ஒரு நண்பர் வந்து சேர்ந்திருக்கிறார். அவரும் சமைப்பார் என்றாலும், வேகமாக, விரைவாக சாப்பிட வேண்டும் என்ற சமையல் தேர்ச்சி பெற்றவர் அவர். நம்முடையது கொஞ்சம் நேரம் எடுக்கும் சமையல் முறை கொண்டது. என் சமையல், அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. கடந்த ஒருவருடமாக சமைத்துக்கொண்டிருந்தவர் என்றாலும், இப்பொழுது அவர் எது சமைத்தாலும், என்னிடம் ஆலோசனை பெறும் அளவுக்கு, என் சமையல் ஏதோ மதிப்பு கொடுத்து இருக்கிறது.

என் நளபாகத்திற்கு பெரும் பின்னணியாக இருப்பது - சமையல் குறிப்புகள் தான். இணையத்தில் சமையல் குறிப்புகளை எழுதி தள்ளும் அனைத்து அன்னையர்களுக்கும், சகோதரிகளுக்கும் என் நன்றிகள். ஒரு ஐட்டத்தை எத்தனை முறை செய்தாலும், ஒவ்வொரு முறையும் இக்குறிப்புகளை பார்த்தே செய்வேன். ப்ராசஸ் முக்கியமல்லவா? அப்பொழுது தான் எனக்கு கன்ஸிஸ்டன்ஸி வருகிறது.

இங்கு அவ்வப்போது பாட்லக் (Potluck) எனப்படும் கூட்டஞ்சோறு முறை, இந்திய சமூகத்தினரிடம் நடைபெறும். மனைவியுடன் செல்லும் போது, மனைவி சமைத்து கொண்டு வருவார். இப்பொழுது நான் மட்டும் செல்வதால், என்னிடம் எதையும் சமைத்து எடுத்து வர சொல்ல மாட்டார்கள். நானும் போய் நன்றாக கட்டிவிட்டு, பிறகும் பார்சலும் கட்டிக்கொண்டு வருவேன்.



சென்ற வாரம், பாட்லக்கிற்கு செல்லும் போது, மனைவியின் தோழி கேட்டார்.

“சமைக்கிறீங்களா? ஒழுங்கா சாப்பிடுறீங்களா? காலையில என்ன சாப்பிட்டீங்க?”

“பொங்கல், வடை, சட்னி” (முந்திய தினம், இன்னொரு வடை எக்ஸ்பெர்ட் நண்பர் வந்து செய்து கொடுத்துவிட்டு சென்றார்)

அவருக்கு ஆச்சரியம்.

“ஆஹா!!! என்னங்க இது? அடுத்த முறை, உங்களுக்கும் ஒரு ஐட்டம் கொடுக்க போறோம்...”

இப்பொழுது என் வாழ்க்கையில் மூன்றே மூன்று தினசரி நடவடிக்கைகள் தான் நடைபெறுகிறது. அலுவலக வேலை, வீட்டுக்கும் நண்பர்களுக்கும் போன், சமையல். இதுவரை செய்யாத ஒரு ஐட்டத்தை முதல்முறை செய்து முடிக்கும் போது, பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. போன வாரம் ஒருநாள், வத்தக்குழம்பு. நேற்று, மீன் குழம்பு. இதோ, இன்று சிக்கன் செய்ய வேண்டும்.

காலையில் ஒரு உறவினரிடம் போனில் பேசிக்கொண்டிருந்தேன்.

”தனியா இருக்கோம்ன்னு சாப்பிடமா இருக்காதே? எதையாவது செஞ்சு சாப்பிடு! சரியா?”

“சரி”. மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.

.

Saturday, October 15, 2011

இந்திய விசிட்

சென்ற வாரம் இந்தியா வந்து திரும்பினேன். குறுகிய கால விசிட். ஒரு வாரம் தான் இருக்க முடிந்தது. இருந்தாலும், ரொம்ப மகிழ்வாக இருந்தது.



வீடு, உறவினர்கள், நண்பர்கள், குலதெய்வம் கோவில், இந்திய உணவுகள் என அனைத்தும் சந்தோஷத்தை கொடுத்தது. நிறைய இடங்களுக்கு செல்ல வேண்டும், பல நண்பர்களை பார்க்க வேண்டும், சில படங்கள் பார்க்க வேண்டும் என டார்கெட்டுகள் இருந்தாலும், அதுவெல்லாம் முழுமை பெறவில்லை.

---

டென்வரில் இருந்து பெங்களூர் வரும் வரை எந்த சோர்வும் தெரியவில்லை. பெங்களூர் ஏர்போர்ட்டில் இருந்து வீடு செல்வதற்குள் டயர்டாகிவிட்டோம். முன்பு, இப்படி யாராவது சொல்லும் போது, (இருக்கும் இடத்தை மட்டம் தட்டுவது போல்) நானே கடுப்பாவேன். என் அனுபவ பகிர்வே, இப்போது அப்படி தான் இருக்கும் போல.

என்ன இருந்தாலும், சொர்க்கமே என்றாலும்....

பெங்களூரில் இன்னமும் பாலம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு இடத்தில் ரெடியானால், அடுத்த இடத்தில் குழி தோண்ட தொடங்கிவிடுகிறார்கள். 2003 இல் பெங்களூர் வந்தபோது, ஊருக்குள் பல இடங்களில் பாலம் கட்டிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது புறநகர் பகுதிகளில். அவுட்டர் ரிங் ரோடு, புது ஏர்போர்ட் ரோடு போன்றவை உருவானபோது, அந்த ஏரியாக்கள் வெறிச்சோடி இருக்கும். இப்போது அந்த சாலைகள் நெரிசலை தாங்க முடியாமல்,ஒவ்வொரு சந்திப்பிலும் பாலங்கள் கட்டப்படுகின்றன. ரொம்ப நாட்கள் கூட ஆகவில்லை. என்ன காரணம்? சரியான தொலைநோக்கு பார்வை இல்லாததாலா? இல்லை, தொலைநோக்கையெல்லாம் அடிச்சி நகட்டும் வேகமான நம்மூர் விரிவாக்கமா?

---

எங்கேயும் எப்போதும், முரண், வாகை சூட வா, சதுரங்கம் என பல படங்கள் இம்முறை பார்க்க தூண்டியது. எங்கேயும் எப்போதும் மட்டுமே பார்த்தேன். அதுவும் நேரமே கிடைக்காமல் செகண்ட் ஷோ சென்று பார்த்தேன்.

சுவாரஸ்யமான காட்சிகள், அதிர வைக்கும் ஒலி என்று இருந்தாலும், எனக்கு தூக்கம் கண்ணை சுழட்டியது. அவ்வளவு சோர்வு. இதையெல்லாம் மீறி, ஆசைக்கு ஒரு படம் பார்த்தாச்சு!

அப்புறம் ஆசைக்கு இரு நாட்கள் தூத்துக்குடி புரோட்டாவும் ஆச்சு.

---

தூத்துக்குடியில் சும்மாவே வெயில் பட்டையை கிளப்பும். இப்ப, பகலில் மூன்று மணி நேரம் பவர் கட் வேறு. சும்மா ஜிவ்வென்று இருந்தது. இதற்காகவே, பகலில் தூங்கிவிடுவேன். சாயங்காலமும் வெக்கைக்கு குறைச்சல் இருக்காது.

அதுவே, கிராமப்புறம் பக்கம் சென்றபோது, அங்கிருக்கும் மரங்களால் சில்லென்ற காற்று, சுகமாக இருந்தது. விட்டால், அப்படியே படுத்து அங்கேயே உருளலாம் போல இருந்தது.

---

டென்வர், வாஷிங்டன், துபாய், சென்னை, பெங்களூர் என ஐந்து ஏர்போர்ட்களை இந்த பயணத்தின் போது கண்டேன். டென்வர் சிறியது. சுற்றிலும் வெட்டவெளி. வாஷிங்டன், பகலில் மேலிருந்து பார்க்கும் போது அழகாக இருந்தது. வீடுகள் அழகாக வரிசையாக கட்டப்பட்டிருந்தது, வெவ்வெறு வடிவத்தை காட்டியது. ஆனால், இரவில் ஒளி வெளிச்சம் அவ்வளவாக இல்லை. துபாய் இரவில் மேலிருந்து பார்க்கும் போது அழகாக இருந்தது. இரவிலும் வெதுவெதுப்பாக இருந்தது.

சென்னை ஏர்போர்ட் தற்சமயம் ஊருக்கு மத்தியில் வந்துவிட்டது. எங்கும் வீடுகள். சிறிது சிறிதாக. நெருக்கமாக. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தென்னை மரத்தை பார்க்க முடிந்தது. ஆனால், ஏர்போர்ட் மோசமாக இருந்தது, சென்னையில் தான்.

விமான நிலைய கட்டிடத்திற்கு கூட்டி செல்லும் பஸ், ரொம்ப மட்டமாக இருந்தது. தீய்ந்த டயர் வாடை வந்தது. குப்பைகள். ஒழுகும் பைப்கள். வெளியூர், வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு, மோசமான வரவேற்பாக இருக்கும். புது கட்டிட கட்டுமான வேலை நடப்பதால், இப்படி இருக்கலாம். ஒவ்வொரு ஹாலின் ஓரத்திலும், நமது பாரம்பரிய சிலைகளை வைத்திருந்தது, நல்ல விஷயம். ஆனாலும், பெரிய கவர்மெண்ட் ஆபிஸாகவே, இந்த ஏர்போர்ட் இருக்கிறது.

---

கிட்டத்தட்ட வெளிநாட்டு ப்ராண்டுகள், அனைத்தும் இந்தியாவில் கடைவிரித்துவிட்டதாக தெரிகிறது. மெக் டொனால்டு, கேஎப்சி, பிஸ்ஸா ஹட், டகோ பெல்ஸ், பாப்பா ஜோன்ஸ், சப்வே, ரீபோக், நைக், அடிடாஸ் என அனைத்தையும் காண முடிகிறது. ஐட்டங்கள் இந்திய ப்ளேவரில் கிடைப்பது விசேஷம். உதாரணத்திற்கு, செட்டிநாடு பிஸ்ஸா என ஒரு விளம்பரத்தை பாப்பா ஜான்ஸில் காண முடிந்தது. மெக் டொனால்ட்ஸை கிருஷ்ணகிரி பக்கமும் ஹைவேயில் பார்த்ததாக ஞாபகம்.

---

ரோடு ரூல்ஸ் எல்லாம் எல்லா பக்கமும் ஒன்று தான் போல. அமெரிக்காவில் இருப்பது போன்ற சாலை குறியீடுகள் தான், இங்கும் இருக்கிறது. ஆனால், ஒரே வித்தியாசம். நாம் அதை கவனிப்பதில்லை. சாலையில் நாம் ரூல்ஸ்களுக்காக கவனிப்பது - ட்ராபிக் போலீஸை மட்டும் தான். நம்மூரில் சாலையில் பயணம் செய்ய, விசேஷ திறமை தேவை. அது அதாகவே ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருப்பது, இன்னும் விசேஷம்.

---

டென்வருக்கு திரும்பும் போது, நான் மட்டும் தான் வந்தேன். தனிமையின் பலன் - எழுதி கிழிக்கலாம் என்றிருக்கிறேன். ஐயோ பாவம்! நான் உங்களை சொன்னேன். :-)

.

Friday, September 2, 2011

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.



கொஞ்சம் லேட். இப்பதான் கொழுக்கட்டை ரெடியாச்சு!



.

Thursday, September 1, 2011

மங்காத்தா


சினிமா என்பது ஒரு வியாதிதான். அதுவும் படங்களைப் பற்றி நண்பர்களுடன் பேசுவது தமிழர்களுக்கே உரிய ஒரு வியாதி. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். எழுத எவ்வளவோ விஷயங்கள் கிடைத்தாலும், அதையெல்லாம் எழுதாமல், சினிமா பார்த்ததை எழுத கை பரபரக்கிறது.



---

அஜித், விஜய் படங்கள் இனி ரொம்ப சூப்பராக எல்லாம் இருக்க வேண்டியதில்லை. பார்க்கும்படி இருந்தாலே ஹிட்டாகிவிடும். (அந்தளவுக்கு நம்மை தயார் செய்து வைத்திருக்கிறார்கள்!) வெங்கட் பிரபுவுக்கே உரிய காமெடி கலந்த ட்ரீட்மெண்ட்டில் இதுவும் பார்க்கும்படி இருப்பதால், ஹாட்ரிக் மிஸ் செய்தவருக்கு, இப்பொழுது மெகா விக்கெட்.




---

“படத்துல ஐந்து பேரு! அதுல நாலு பேரு கெட்டவனுங்க. இன்னொருத்தன் ரொம்ப கெட்டவன்” - இந்த லைன கேட்டு தல இந்த படத்துல நடிக்க ஆர்வம் தெரிவிச்சாராம். என்ன ஒரு ஹீரோ? அதுவும் ஹிட்டடிக்கும் போது, தல இந்த பார்முலாவை விடுவாரா? நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும்.

---



இந்த படத்திற்கான ஓப்பனிங் பற்றி கேட்டப்போது, ”அடடே! இந்த படம் பார்க்க, நாம இந்தியாவில இல்லையே?”ன்னு கொஞ்சம் வருத்தமா இருந்தது. ஆனா, இங்கேயும் விசில், கைத்தட்டல் என ஜாலியாகத்தான் இருந்தது. கேவலமான கமெண்ட்ஸ் கூட அடிக்கிறார்கள்.

---

இறுதியில் எல்லோரும் செத்துவிழுவது, சலிப்பைத்தான் தருகிறதே தவிர, கொஞ்சம் கூட சோகத்தை இல்லை. ஏன் சிரிப்பு கூட வருகிறது. அதுதான் வெங்கட் பிரபு. பொதுவாக எல்லா இயக்குனர்களும், அஜித்திற்கு பில்டப் கொடுத்து, ரொம்ப தள்ளி வைத்துவிடுவார்கள். இதில் இயக்குனர் அஜித்தை நெருங்க வைத்திருக்கிறார்.



---

”வாடா... பின்லேடா...” பாடல் ஆரம்பத்தில் கேட்கும்போதே பிடித்திருந்தது. படமாக்கமும் நன்றாக இருக்கிறது. இந்த கான்செப்ட்டை ஏதோ விளம்பரத்தில் பார்த்த ஞாபகம்.

---

எவ்வளவு ப்ளாப் கொடுத்தாலும், அஜித் படத்திற்கு எப்படி இவ்வளவு ஓப்பனிங் கிடைக்கிறது? அதுவும் மன்றங்களை கலைத்து அறிவிப்பு கொடுத்தவருக்கு? அரசியல் ஆசை காட்டாதவருக்கு?



தமிழக மக்களுக்கு ஒரு நடிகரை பிடிக்க வேண்டுமென்றால், சினிமாவில் நன்றாக நடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நிஜ வாழ்வில், ஒரு நல்லவராக மனதில் பதிய வேண்டும். திறமையை காட்டுபவரை விட, நல்லவராக காட்டுபவரையே, உயரத்தில் வைப்பார்கள். எந்த திட்டமிடலும் இல்லாமல், அஜித்திற்கு அது அதுவாகவே நடக்கிறது.

---



முன்பெல்லாம் நூறாவது படம் தான் பெரிய மைல்கல்லாக இருக்கும். இப்போது இருக்கும் நிலைமைக்கு, அது ஐம்பதாக குறைந்துவிட்டது. பொதுவாக மைல்கல் படங்கள், ஹிட்டாக அமைவதில்லை. (விஜயகாந்த் - விதிவிலக்கு). தவிர, அஜித்திற்கு ஹிட்டே அமைவதில்லை. ஆச்சரியம் என்னவென்றால், அஜித்திற்கு மைல்கல் படம் - ஹிட்டாகியிருக்கிறது. மைனஸ் இண்டு மைனஸ் ப்ளஸ்ஸாகிவிட்டது. :-)


.