Monday, December 5, 2011

வாங்க பாக்யராஜ் பத்தி பேசலாம்

விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக பாக்யராஜ் படங்களை விமர்சனம் செய்யும் நிகழ்ச்சியாக ‘வாங்க சினிமா பத்தி பேசலாம்’ என்றொரு ப்ரோக்ராம் வருகிறது. சென்ற வாரம், வித்தகன். இந்த வாரம் - மயக்கம் என்ன.



நிகழ்ச்சியின் பெயராக ‘வாங்க சினிமா பத்தி பேசறேன்’ என்று வைத்திருக்கலாம் என்ற தோன்றும் அளவுக்கு பாக்யராஜ் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். பாக்யராஜ் நூறு வரிகள் பேசினார் என்றால் தனுஷும், செல்வராகவனும் சேர்ந்தே 10 வரிகள் தான் பேசியிருப்பார்கள்.

எனக்கு பாக்யராஜ் மேல் பெரும்மதிப்பு உண்டு. அவருடைய பழைய படங்கள் அப்படி. ரொம்ப பிடித்த படங்கள். டிவியில் எப்ப போட்டாலும் பார்க்கலாம். காமெடியையும், செண்டிமெண்டையும் கலந்து புத்திசாலித்தனமாக காட்சியமைப்பதில் ‘இந்தியாவின் நம்பர் 1’ திரைக்கதையாசிரியர் என்று புகழப்பட்டவர்.

ஆனால், இப்போது அவர் படங்களைப் பார்க்கும் போது, சில வசனங்கள் ரொம்ப பிற்போக்குத்தனமாக தோன்றும். பெண்களைப் போற்றும் விதமாக காட்சியோ, வசனமோ இருந்தாலும், ஆண் ஒருபடி மேலிருந்தே அதை செய்வான். இன்னும் நிறைய உண்டு. எப்படி காலம் மாறினாலும், எடுத்த படங்கள் மாறதோ, அதுபோல் அந்த படங்களை எடுத்த படைப்பாளியும் மாறாமல் இருந்தால், படைப்பாளிக்கும் நஷ்டம். படைப்பாளியின் ரசிகர்களுக்கும் நஷ்டம். இங்கு பாக்யராஜ் பெர்பெக்டாக மேட்ச் ஆகிறார்.

அவர் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கும் விஷயங்கள் பல காலாவதியாகிவிட்டது.

இந்த வார நிகழ்ச்சியில் அவர் படத்தின் குறையாக சொன்ன விஷயம் - படத்தின் இரண்டாம் பாதியில் காமெடி குறைந்துவிட்டது. அது மட்டுமில்லாமல், காமெடி காமெடி என்ற அளவுகோலுடனேயே இந்த படத்தை மதிப்பீடு செய்தார். படத்தின் மையக்கருத்தான மனித உறவுகளை பற்றியோ, உணர்ச்சிகளையோ பற்றியோ ஒன்றுமே சொல்லவில்லை. தனுஷின் நடிப்பை புகழ்ந்தவர், ரிச்சா நன்றாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்றார்.

தனுஷுடன் ‘நாய் போல் வேலை பார்’ காட்சியைப் பற்றி பேசும் போது, ”நீங்கள் ஏன் முட்டிப்போட்டு நான்கு கால்களுடன் நடந்துக் காட்டவில்லை?” என்றார். என்ன பாக்யராஜ் சார் இது?

சென்றவாரம், வித்தகன் விமர்சனத்தின் போது, பல இடங்களில் இதை அப்படி எடுத்திருக்கலாம், அதை இப்படி எடுத்திருக்கலாம் என்று பாக்யராஜ் சொல்ல, பார்த்திபனும் ஆமாம் என்பது போல் ஒத்துக்கொண்டு தலையாட்டினார். (மதனுடனான நிகழ்ச்சியிலும் பார்த்திபன் இவ்வாறே பரிதாபமாக காட்சியளித்தார்) செல்வராகவன் அப்படியெல்லாம் இல்லாமல், ரொம்ப தன்னம்பிக்கையுடன் அது அப்படிதான் என்று பேசினார். (”தலைல பாட்டில் உடைக்கிறதுக்கூட காமெடித்தான்!!!”)

படைப்பாளியின் பலமும் பலவீனமும் தெரியும் இடங்கள் இவை.

.

1 comment:

SathyaPriyan said...

Wow... Looks like my views about the show are exactly same as yours..... Sorry for typing in English. I am using my phone. Please read when you have time.

http://sathyapriyan.blogspot.com

:-)