Showing posts with label புகைப்படம். Show all posts
Showing posts with label புகைப்படம். Show all posts

Friday, September 23, 2016

லிட்டில் மெக்காங்க்


பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.

தென்கிழக்காசிய நாடுகளான சீனா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா,
வியாட்நாம், லாவோஸ் ஆகியவற்றின் இடையே ஓடுவது, மெக்காங்க் ஆறு. இந்த நாடுகளுக்கிடையான வணிக மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களில், இந்த ஆறு முக்கியப் பங்கு வகிக்கிறது.



இந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் வசித்து, வணிகம் புரியும் இடமான, செயிண்ட் பால் நகரில் உள்ள யூனிவர்சிட்டி அவின்யூவில், மெக்காங்க் ஆற்றின் பெயரில் வருடம் தோறும் ‘Little Mekong Night Market’ என இரவுச் சந்தை நடத்துகிறார்கள். இந்த ஆண்டு, ஜூலை 23ஆம் தேதியும், 24 தேதியும் இச்சந்தை நடைபெற்றது.
இந்த நிகழ்வின் நோக்கம், மினியாபோலிஸ், செயிண்ட் பால் நகரங்களைச் சார்ந்த பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, அதன் மூலம் தென்கிழக்காசிய மக்களின் கலாச்சார அம்சங்களை எடுத்துக் கூறவும், இவர்களது வணிக வளர்ச்சியைக் கூட்டுவதற்கும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்துவதே. கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்த நிகழ்வை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், இந்த நிகழ்வு அதிகக் கவனத்தைப் பெற்று, பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.
யூனிவர்சிட்டி அவின்யூவில் மெக்குபின் (Mackubin) சாலையில் இருந்து கல்டியர் (Galtier) சாலை வரை ஆசிய நாட்டு உணவு விடுதிகளும், பல சரக்கு வணிக வளாகங்களும் பெருமளவில் உள்ளன. இந்தப் பகுதியை லிட்டில் மெகாங்க் என்றழைக்கிறார்கள். இவற்றைப் பற்றி அறிந்திராத, நகரின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, ஒர் அறிமுகமாகவும், அவர்களை இப்பகுதிக்கு வரச் செய்யும் நோக்கிலும், இந்த நிகழ்வு ஒரு விழாவாக AEDA (Asian Economic Development Association) என்ற அமைப்பினரால் நடத்தப்படுகிறது.
AEDA அமைப்பு, 2006ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது. அந்த ஆண்டு நகர ரயில் பாதையை நீட்டிக்கும் திட்டத்தில் ‘க்ரீன் லைன்’ துவங்கப்பட்டது. க்ரீன் லைன், யூனிவர்சிட்டி அவின்யூ வழியாக மினியாபோலிஸ் டௌன்டவுன், செயிண்ட் பால் டௌன்டவுனையும் இணைக்கும் ரயில் பாதை. அச்சமயம், இத்திட்டத்தால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட, அவர்களது நலன் காக்க உருவாக்கப்பட்டது தான் - ஏசியன் எகனாமிக் டெவலப்மெண்ட் அசோசியஷன் என்ற இந்த அமைப்பு. இந்த அமைப்பு, இங்கிருக்கும் தென்கிழக்காசிய நாட்டுச் சிறு வியாபாரிகளுக்கும், அரசு மற்றும் பிற அமைப்புகளுக்கும் ஓர் இணைப்புப்பாலமாகச் செயல்பட்டு வருகிறது.
இரவுச் சந்தைகள், ஆசிய நாடுகளில் பிரசித்தி பெற்றவை. அதை இங்குக் காட்சிப் படுத்தும் விதமாக, ஜூலை 23 ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த இரவுச் சந்தை, இரவு 12 மணி வரை நடந்தது. 24 ஆம் தேதி, இரவு பத்து மணி வரை நடந்தது. இச்சந்தையில் தென்கிழக்காசிய நாடுகளின் உணவுகள், கலைப்பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டன. இது தவிர, மூன்று மேடைகளில், கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. இதில் ஆசிய மக்களுடன், அமெரிக்க மற்ற பிற நாட்டு மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். AEDA அமைப்பு, இந்த நிகழ்ச்சிக்காக உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து. காவல்துறை துணையுடன் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
வாரயிறுதியில் வித்தியாசமான உணவு வகைகளைச் சுவை பார்க்கவும், நேரடியாகத் தென்கிழக்காசிய நாட்டுக் கலை வடிவங்களைக் கண்டு களித்து, அந்தக் கலைஞர்களுடன் கலந்துரையாடவும், நல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது, இந்த நிகழ்வின் வெற்றியாகக் கூறலாம்.














.

Sunday, May 5, 2013

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 6

இன்று நிறைவு நாள். அமெரிக்காவின் தொழிலாளர் தினம் - செப்டம்பர் மூன்றாம் தேதி. இது அந்த விடுமுறை சமயம் சென்ற பயணம். ஒரு நாள் கூடுதல் விடுப்பு எடுத்து பயணித்தது.

அந்த கூடுதல் தினம் இன்று தான். இன்று அலுவலகத்தில் மற்றவர்கள் வேலை பார்க்க, நாம் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் என்ற குறுகுறுப்பே ஸ்பெஷல் தான். பள்ளிக்காலங்களில் இருந்து இன்றும் இந்த குறுகுறுப்பு தொடர்ந்து வருகிறது.

நாங்கள் தங்கியிருந்த விடுதியின் மேலாளர், ஒரு இந்தியர். குஜராத்தியன். அவன் கூட கொஞ்சம் பேசியதில், மோடி அபிமானி என்று தெரிந்தது. மோடி புகழ் பாடிக்கொண்டிருந்தான்.

தோசை சுடுவது போல, அங்கிருந்த மெஷினில் சுட சுட பேன் கேக் (Pan Cake) செய்ய சொல்லிக்கொடுத்தான். சாப்பிட்டுவிட்டு திரும்ப, இரவு வந்த வழியே கிளம்பினோம். முந்திய தினம் தரவிறக்கிய ‘நீதானே என் பொன் வசந்தம்’ கேட்டுக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.



இன்று செல்லும் இடம் - கிராண்ட் டெடான் தேசிய பூங்கா. செல்லும் வழியில் ஏதோ வேலை நடந்துக்கொண்டிருந்ததால், சாலையின் ஒரு பகுதியில் ட்ராபிக்கை நிறுத்தி, ஒரு சமயம் ஒரு பக்க ட்ராபிக் என்று அனுப்பிக்கொண்டிருந்தார்கள். ஒருபக்க ட்ராபிக்கை வழி நடத்த ஒரு சிறு வண்டி வைத்திருந்தார்கள்.

கிராண்ட் டெடான், யெல்லோஸ்டோனுக்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு தேசிய பூங்கா. யெல்லோஸ்டோனில் அபூர்வ ஊற்றுகள் இருக்கிறதென்றால், இங்கு அழகிய ஏரிகளும், மலைத்தொடர்களும்.


யெல்லோஸ்டோனில் வெப்பத்துடன் கூடிய ரசாயன அனல் ஊற்றுகளைத் தொடர்ந்து பார்த்த கண்களுக்கு க்ராண்ட் டெடானின் ஜாக்சன் ஏரியும் அதன் பின்னணியில் இருக்கும் மலைத்தொடர்களும் குளிர்ச்சியைக் கொடுத்தது.


ஜாக்சன் ஏரி படகு பயணத்திற்கு முதலில் சென்றோம். ஆனால், சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே படகு பயணம் இருந்தது. எங்கள் நேரத்திற்கு அது சரிப்பட்டு வராததால் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு கிளம்பினோம். அங்கு நிறையவே நேரத்தை விரயம் செய்தோம். சாப்பிட சென்ற நண்பர்கள் திரும்ப வர ரொம்பவே நேரமாகியது. நான் மனைவி குழந்தையுடன் அங்கிருந்த கடைகளைச் சுற்றி வந்துக்கொண்டிருந்தேன்.


அடுத்து அங்கு இருந்த அணையின் பக்கம் கொஞ்சம் நேரத்தை செலவழித்தோம்.


யெல்லோஸ்டோன் அனல் பறக்கும் ஆக்ஷன் படமென்றால், கிராண்ட் டெடான் டூயட் பாடல்கள் கூடிய ரொமான்ஸ் படம்.


டூயட் பாடல்கள் எடுக்க ஏற்ற இடம்.


வாக்கிங் செல்ல நடை பாதைகள், குதிரை சவாரி வழிகள் என்று பொழுதை ரம்மியமாக கழிக்க சிறந்த இடம்.


மாலை வரை அங்கிருக்கும் ஏரிகளுக்கு ஏறி இறங்கி சென்று வந்தோம். மாலையானதும் ஊருக்கு கிளம்ப தொடங்கினோம். அங்கிருந்து மாலை கிளம்பினால் தான் நடுராத்திரி அல்லது அதிகாலைக்கு முன்பு ஊர் வந்து சேர முடியும். அடுத்த நாள், அலுவலகம் வேறு செல்ல வேண்டும்.

கிளம்பும் சமயம், வெளியே வரும் இடத்தில் சின்ன ட்ராபிக். சாலையின் ஓரத்தில் கார்கள் பார்க் செய்யப்பட்டு, மக்கள் ஆர்வத்துடன் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு பக்கத்தில் நிறுத்த இடம் எதுவும் இல்லையென்பதால், நானும் மனைவியும் அங்கே இறங்கிக்கொள்ள, நண்பர் காரில் முன்னே பார்க் செய்ய சென்றார்.

 

அங்கு நின்றுக்கொண்டிருந்தது, மூஸ் எனப்படும் மான். இங்கு இருக்கும் ஸ்பெஷல் மான். அதன் கொம்பு டிசைன் தான், இதன் சிறப்பம்சம்.


சுற்றி இத்தனை பேர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாலும், அசராமல் அதன் வேலையைப் பார்த்துக்கொண்டு, போஸ் கொடுத்துக்கொண்டிருந்தது. நாங்களும் புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்பினோம்.

செல்லும் வழியில் ஒரு இடத்தில் டீ, காபியும், இன்னொரு இடத்தில் இரவு உணவும் சாப்பிட்டுவிட்டு, டென்வரில் வீட்டை வந்து சேரும் போது மணி இரண்டு இருக்கும். குறைந்த நேரத்தில் முடிவெடுத்துவிட்டு கிளம்பிய பயணம், ஒருவித குறைந்த திட்டமிடலுடன் சிறப்பாகவே முடிந்தது.

.

Monday, April 29, 2013

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 5

அடுத்து சென்ற இடம் - ஓல்ட் ஃபெய்த்புல் (Old Faithful). 

1870இல் ஆய்வுக்கு சென்ற குழுவினர், முதன் முதலில் பார்த்த வெந்நீர் நீருற்று இது தான். பீறிட்டுக்கொண்டு அடித்த நீருற்று, கொஞ்ச நஞ்ச உயரத்தில் அல்ல... நூற்றி இருபத்தி ஐந்து அடி உயரத்திற்கு அடித்திருக்கிறது.

அவர்கள் அங்கிருந்த நேரத்தில் ஒன்பது முறை பீறிட்டு அடித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் அடித்திருக்கிறது. சொல்லிவைத்த மாதிரி சரியான நேரத்திற்கு பீறிட்டு அடிக்க, இதற்கு பெயராக ‘பழைய நம்பிக்கை’ என்று வைத்தார்கள்.

இன்னமும் இந்த நீருற்று யாரையும் ஏமாற்றவில்லை. ஒவ்வொரு 91 நிமிடத்திற்கு ஒருமுறை பீறிடுகிறது. இதுதான் உலகில் கணிப்பு அதிகம் பொய்க்காத புவியியல் அம்சம்.


இங்கு இருக்கும் அரங்கம், வணிக வளாகங்கள் போன்றவற்றில், அடுத்த முறை எப்போது நீர் பீறிடும் என்பதை கணித்து எழுதி வைத்திருந்தார்கள். நாம் அதற்கெற்ப ஷாப்பிங் முடித்துக்கொண்டு, உணவருந்திக்கொண்டு செல்லலாம்.

நாங்கள் சென்ற போது, கேமரா சகிதம் பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர். அங்கிருந்த இருக்கைகள் நிறைந்திருந்தன. 



இதுதான் இங்குள்ள ஸ்டார் நீருற்று. அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட நீருற்று.

புகைந்து கொண்டிருந்தது, கணித்தது போலவே, சில நிமிடங்களில் பீறிட தொடங்கியது.


சுற்றி இருந்த கேமராக்கள் அனைத்தும், கண்கொள்ளா காட்சியாக  இந்த காட்சியை சுட்டுத் தள்ளியது.


ஏறக்குறைய மூன்று-நான்கு நிமிடங்கள் இருந்திருக்கும்.  இரு நிமிடங்கள் குறைய தண்ணீர் வந்தால், இடைவெளி 90 நிமிடங்களில் இருந்து 60 நிமிடங்களாகிவிடுமாம்.


முடியும் போது, லைட்டாக கைத்தட்டி விட்டேன். உடனே, பக்கத்தில் இருப்பவர்கள் தொடர, முடிவில் மொத்த கூட்டமும் கைத்தட்டியது. ‘அடப்பாவிங்களா, அங்கே என்ன வித்தையா காட்டுனாங்க?!!!’ என்று கமெண்ட் விட்டபடி கிளம்பினோம்.


அடுத்த முறைக்கு, கடிகாரங்கள் திருப்பி வைக்கப்பட்டன.


அன்று இரவு தங்குவதற்கு, நாங்கள் ஏற்பாடு செய்திருந்த லாட்ஜ், அங்கிருந்து 120 மைல்கள் தொலைவில் இருந்தது. சாயந்திர நேரமானதால், அப்போதே கிளம்பினோம்.


சென்ற நேரம் நன்றாக இருட்டிவிட, நாங்கள் சென்ற வழியில் ஏதோ வேலை நடக்க, வண்டியை ஓட்ட சிரமமாகிவிட்டது. காரை மெதுவாக ஓட்ட, இன்னமும் நேரமாக நடு ராத்திரி போய் சேர்ந்தோம். அங்கு சென்று சாப்பிடலாம் என்று நினைத்திருக்க, அங்கு எந்த உணவகமும் இல்லை. கைவசம் இருந்த கொஞ்சம் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு தூங்கினோம்.

இது எவ்வளவு பழைய நிகழ்வு என்பதற்கு ஒரு சம்பவம். அப்போது தான், ‘நீதானே என் பொன் வசந்தம்’ பாடல்கள் வெளியாகி இருந்தது. தூங்குவதற்கு முன்பு, என் போனில் டவுன்லோடிவிட்டு தூங்கினேன்.

.

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 4

பயணத்தை தொடருவதற்கு முன்பு, கொஞ்சம் சொந்த கதை.

---

இந்த பயணத்தொடரை சீரியஸாக தொடர்ந்து வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். பின்ன, நாலு நாள் போயிட்டு வந்த டூரை பத்தி நாலு மாத இடைவெளியில் கதை விட்டு கொண்டு இருந்தால்?!!  அதான்...

ஜனவரியில் இருந்தே அலுவலகத்தில் வேறு வேலை. அதை கற்றுக்கொண்டு வேலையை முடிப்பதற்கு, சில சமயம் வீடு வந்தும் வேலை செய்ய வேண்டி இருந்தது. வீட்டில் மனைவியுடன் உரையாடாமல், குழந்தையுடன் விளையாடாமல், அலுவலக வேலைக்காக லேப்டாப்பை பார்த்துக்கொண்டு இருப்பதே ஓவர். இதில் ப்ளாக்கர், பேஸ்புக், ட்விட்டர் இத்யாதிகளை ஓப்பன் செய்வது பெரும் பாவமாகப்பட்டதால், கைவசம் எழுத ஏகப்பட்ட சமாச்சாரங்கள் வந்து தேங்கினாலும், எழுதவில்லை.



நான் ப்ளாக்கர் பக்கமே வராவிட்டாலும், சில நல்லவர்கள் ‘குமரன் குடில்’ க்கு வருகை புரிவது மகிழ்ச்சியே என்றாலும், ப்ளாக்கரில் புள்ளிவிவரங்கள் எடுப்பதில் ஏதேனும் Bug இருக்கிறதோ என்ற சந்தேகத்தையும் கிளப்புகிறது.

----

பயணத்தைத் தொடருவோம். எங்கே விட்டோம்? ரீ-கேப்.

...முன்பு அபார்ட்மெண்ட் வீடாக இருந்ததை விடுதியாக மாற்றியிருந்தார்கள். இரண்டு பெட்ரூம்கள், ஒரு கிச்சன், ஹால் என்று இரு குடும்பங்கள் தங்குவதற்கு ரொம்ப வசதியாக இருந்தது. அன்றைய தினம் தங்குவதற்கு செய்திருந்த ஏற்பாடுகள் சொதப்பினாலும், ஏதோ நல்ல நேரத்திற்கு ஒரு நல்ல இடம் கிடைக்க, நிம்மதியுடன் தூங்கினோம். ஆன்லைனில் புக் செய்யும் போது, இனி கவனமாக இருக்க வேண்டும் என்ற அனுபவம் அந்த தினம் கிடைத்தது.....

இதுதான் நாங்கள் தங்கியிருந்த இடம். காலையில் வெளிச்சத்தில் பார்த்தபோது, மலையடிவாரத்தில் ரொம்ப ரம்மியமாக இருந்தது.




திரும்ப வடக்கு நுழைவுவாயில் வழியாக யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்குள் நுழைந்தோம்.


மேலுள்ள படத்தில் A'யில் இருந்து B’க்கு, கிட்டத்தட்ட 135 மைலை, முதல் நாளில் கடந்திருந்தோம். இன்று கடக்க வேண்டிய தூரம் - 175 மைல்கள். (படத்தில் B இல் இருந்து C)

போகும் வழியில் இருப்பவை தான், நாம் இன்று காணப்போவது. கிளம்பும்போதே, தங்கியிருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த சப்வேயில் ப்ரெக்ஃபாஸ்ட்டை முடித்தோம். வடக்கு நுழைவுவாயிலுக்கு வெகு அருகிலேயே. இதோ வடக்கு நுழைவுவாயில்.



ஆரம்பத்தில், யெல்லோஸ்டோன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கட்டப்பட்டது. ரூஸ்வெல்ட் ஆர்ச்.



முதலில் சென்ற இடம் - நொரிஸ் ஹாட் ஸ்ப்ரிங்ஸ்.

 சென்ற வழியில், நிறைய இடங்களில் மரங்கள் கருகி சாய்ந்து கிடந்தன.  யெல்லோஸ்டோனில் வருடம்தோறும் காட்டுத்தீ உருவாவது உண்டு. போன நூற்றாண்டின் ஆரம்பத்தில் காட்டுத்தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருந்தது. பின்பு, இந்த காட்டுத்தீயும் இந்த வனசூழலுக்கு தேவையான இயற்கையான ஒன்று என்ற புரிதல் ஏற்பட்ட பிறகு, காட்டுத்தீயால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்ப்பது, காட்டைவிட்டு வெளியே பரவுவதை தடுப்பது போன்றவை மட்டுமே அரசாங்கத்தின் நோக்கமானது. ஆனாலும், 1988 ஆண்டு வந்த தீ, ரொம்பவே ஆட்டம் காட்டிவிட்டதாம்.



அதனால், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மரங்கள் அங்கேயே அப்படியே இருந்து மக்கி, பிறகு புது மரங்கள் வளர்வது என முடிந்தவரை வனச்சூழலை அப்படியே பாதுகாக்கிறார்கள். மரக்கட்டைகளை அடுக்கி கொண்டு வரிசையாக செல்லும் லாரிகளை காண முடியவில்லை. :-(


நொரிஸ் ஹாட் ஸ்ப்ரிங்ஸில் எனக்கொன்றும் விசேஷமாக தெரியவில்லை. வழக்கம்போல், ஆங்காங்கே புகைந்துக்கொண்டு, கொதித்துக்கொண்டு இருந்தது. இப்படி ஒரு ஆச்சரியமான விஷயம், இங்கே விசேஷமாக தெரியாத அளவுக்கு, யெல்லோஸ்டோனில் நிறைய இடங்களில் இயற்கையின் புதிர்கள்.

ஒரு இடத்தில், இந்த நீருற்றுகள், எரிமலைகள் பற்றியெல்லாம் சுலபமாக புரிந்துக்கொள்ளும் வகையில் பலகை வடிவமைப்புகள் இருந்தன. குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சம்பந்தமான படிப்புகளில் ஆர்வமேற்பட உதவும்.


உலகில் எங்கெங்கெல்லாம் இம்மாதிரி இருக்கிறது என்று காட்டும் ஒரு படமும் அதில் இருந்தது. இந்தியா அதில் இல்லை. ஆனால், இந்தியாவிலும் வட இந்தியாவில், இமய மலை அருகில், வெந்நீர் ஊற்றுகள் இருப்பதாக அறிகிறேன்.



சுற்றி சுற்றி வந்தோம். நடப்பதற்கு மர பலகைகள் அமைத்திருந்தார்கள். அதை விட்டு, கீழே இறங்கி வேண்டாம் என்று எச்சரிக்கை வேறு. என் பொண்ணு, கையில் வைத்திருந்த கண் கண்ணாடியை கீழே போட்டு விட, எதற்கு ரிஸ்க் என்று அப்படியே விட்டு விட்டு வந்தோம். ஏதோ, எங்களால் முடிந்த இயற்கைக்கு உபத்திரவம்.



இங்கு எடுத்த வீடியோக்களை எல்லாம், மொத்தமாக சேர்த்து ஒண்ணு செஞ்சு வச்சுருக்கேன். அப்புறமா காட்டுறேன்.


போகும் வழியில் ஒரு ஏரியை காண, அதில் கப்பல் விட்டு, இயற்கை சூழலில் குப்பையை சேர்த்தோம். சொல்லி பார்த்தேன். ஒரு சின்ன பேப்பரால் ஒன்றும் ஆகாது என்று சாக்கு சொல்லப்பட்டது. ஆமாம், பேப்பர் தானே!!!


அடுத்து சென்ற இடம் - ஓல்ட் ஃபெய்த்புல் (Old faithful). கொஞ்சம் விலாவரியாக, அடுத்த பதிவில் பார்ப்போம்.

.

Sunday, January 20, 2013

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 3

அதிகாலையிலேயே கிளம்பியிருந்ததால், அதுவும் லைட்டாகத்தான் சாப்பிட்டு இருந்ததால், எல்லோரும் பசியாக இருந்தார்கள். கைவசம் சாப்பாட்டு பொட்டலங்கள் இருந்தாலும், வழியில் ஒரு உணவகத்தைப் பார்த்ததால், வண்டியை அங்கேயே போட்டோம்.

பெரிதாக ஒன்றும் இல்லை. சாலட் வாங்கினோம். ஜில்லென்று இருந்தது. ஒருவழியாக முடித்தோம்.

அங்கே சின்சியராக சாப்பிட்டுக்கொண்டிருந்த மூத்த தம்பதியினர்...


சாப்பிட்டு விட்டு கிளம்பிய வழியில் ’பைசன்’ என்றழைக்கப்படும் அமெரிக்க எருமை மாடுகளைப் பார்த்தோம். கூட்டமாக நின்று மேய்ந்துக்கொண்டிருந்தது. வண்டியை விட்டு இறங்கி, அருகே சென்று பார்த்தோம். பார்க்க சாதுவாகத்தான் இருந்தது. இருந்தாலும், புதுவகை மிருகத்தை முதல்முறையாக நேரில் பார்க்கும்போது, கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது. எப்ப, என்ன பண்ணும் என்று யாருக்கு தெரியும்? ரொம்பவும் அருகே சென்றால் தாக்கும் என்றார்கள். அசைவதே டெரராக இருக்கும் போது, தாக்குதலா?


பயணத்தை மேலும் உள்ளே தொடர, தேடி வந்த ஊற்றுகள் ஒவ்வொன்றாக வந்தது.  தேங்கி கிடந்த தண்ணீர் கொதித்துக்கொண்டிருந்தது, நீர் குமிழிகளுடன். விதவித அளவுகளில் சுற்றும் முற்றும் அந்த வட்டாரம் எங்கும் கொதித்துக்கொண்டிருந்தது. சல்பர் வாடை தூக்கலாகவே இருந்ததால், குழந்தைகளை அருகே அழைத்து செல்லவில்லை.


1800களில் இந்த பகுதிகளில் பழங்குடியினர் மட்டுமே புழங்கினர். அமெரிக்கர்கள் நடமாட்டம் கிடையாது. வேட்டையாட செல்லும் சிலர், இது போன்ற ஊற்றுகளை கண்டு, வெளியே வந்து சொல்லும்போது, யாரும் எதையும் நம்பவில்லையாம்.

நினைத்துப் பாருங்கள்... இப்பவே நம்ப முடியவில்லை. குகை போல் சில இடத்தில் இருந்து புகை வருகிறது. களிமண் போன்ற இடங்கள் பொங்குகிறது. இப்பவாவது பரவாயில்லை. ஏதாவது அறிவியல் காரணங்கள் சொல்லுகிறார்கள். முழுமையாக புரியவில்லை என்றாலும் நம்பி தொலைக்க முடிகிறது. இப்படி தானே அறிவியல் படித்தோம்?


இருந்தாலும், எனக்குள்ளே ஒரு டவுட் இருந்துக்கொண்டே தான் இருந்தது. முதன்முறையாக நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்து வைத்தபோது, நாசா வெளியிட்ட போட்டோக்களை, பல்வேறு காரணங்களை சொல்லி டகால்டி என்பார்களே? அதுபோல், இங்கேயும் சுற்றுலா வருமானத்திற்காக ஏதாவது டகால்டி வேலை செய்கிறார்களோ என்று எனக்குள்ளே டவுட். அப்படியெல்லாம் ஏமாற்ற மாட்டார்கள் என்று பிறகு எனக்கு நானே சமாதானம் செய்துக்கொண்டேன்!!! :-)


சில நேரம் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும், தொடர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருந்தால், கொஞ்சம் நேரத்திலேயே சலிப்பு ஏற்பட்டுவிட்டது. பார்த்துக்கொண்டிருப்பதே மட்டும் ஆச்சரியத்தை குறைப்பது இல்லை. எப்படி இது உருவாகிறது என்று தெரிந்துக்கொள்வதும் ஆச்சரியத்தைக்குறைத்து புரிந்துக்கொள்ள உதவும். முன்பே சொன்னது போல், இந்த நிலப்பரப்பின் கீழே உஷ்ணமான ஒரு எரிமலை உறங்கிக்கொண்டு இருக்கிறது. மேலே இருந்து பாறைகளின் இடைவெளி மூலம் உள்ளே செல்லும் நீர், உஷ்ணத்தால் சூடாகி, மேலே எழும்ப, அங்கே உருவாகும் அழுத்ததால், மேலும் வேகத்துடன் பீறிட்டுக்கொண்டு, பூமியின் மேற்பரப்பிற்கு வந்து சேர்கிறது. வரும் வழியில் மண் சேர்ந்துக்கொள்ள, சில இடங்களில் களிமண் கொதிக்கிறது.

அங்கு எடுத்த சில வீடியோக்கள். (முதல் வீடியோவில் சில பெர்சனல் வசனங்களை கட் செய்ய வேண்டி இருந்ததால், ஆங்காங்கே சத்தம் வராது)







இவ்வகை இடங்கள் இயற்கை அதிசயம் மட்டுமே. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பதில்லை. ஆனால், இதை தாண்டி போகும் வழியெங்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.


பிறகு, சில அருவிகளைப் பார்த்தோம். சில அருவிகளைப் பார்த்தோம் என்று சொல்வதற்கு பதில், ஒரு அருவியை வெவ்வேறு கோணங்களில் பார்த்தோம் என்று சொல்லலாம். அந்த பாயிண்ட், இந்த பாயிண்ட் என்று சொல்லி வெவ்வேறு இடங்களில் நின்று பார்த்தோம். சில இடங்களுக்கு நடந்து செல்ல வேண்டி இருந்ததால், குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு நடக்க வேண்டி இருந்ததால், களைப்பால் அந்த இடங்களுக்கு செல்லும் எண்ணத்தை கழட்டி விட்டோம். பேச்சிலர் கும்பலாக இருந்தால், ஏறி குதித்து அங்கு இங்கு என்று சென்று இருக்கலாம்.


இந்த அருவிதான், யெல்லோஸ்டோனில் அதிகளவில் படமெடுக்கப்படும் லொக்கேஷனில் இரண்டாம் இடத்தில் இருப்பது. முதலிடத்தில் இருப்பதை வரப்போகும் பதிவுகளில் ஒன்றில் பார்ப்போம்.

இதையெல்லாம் பார்த்ததில் மதியம் மணி மூன்றாகிவிட்டது. போகும் வழியில் ஒரு இடத்தில் உட்கார்ந்து சாப்பிட இடவசதி செய்திருந்தார்கள். நிழல் உள்ளே விழாத அளவுக்கு, வளர்ந்த மரங்களால சூழப்பட்ட இடம். ஆங்காங்கே கரடி வரும் ஜாக்கிரதை என்று எழுதியிருந்தார்கள். கரடி வந்தால், அதற்கு உங்கள் உணவை கொடுக்காதீர்கள் என்று எழுதிவைத்து இருந்தார்கள். ’நாங்க ஏன்யா அதுக்கு கொடுக்க போறோம்?’ என்று நினைத்துக்கொண்டோம்.

இந்த வனாந்திர சூழலை, உள்ளே வரும் மனிதர்கள் கெடுத்து வைக்க கூடாது என்பதற்காக பல ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தார்கள். உதாரணத்திற்கு, இந்த உணவருந்தும் இடத்திற்கு பக்கத்தில் பெரிய இரும்பு கண்டெயினர்களை வைத்திருந்தார்கள். மிச்சமாகும் உணவு, சாப்பிட்ட ப்ளேட்டுகள், குடித்து முடித்த தண்ணீர் பாட்டில்களைப் போட்டு வைப்பதற்கு. மேல்பக்கமாக திறந்து டைட்டாக மூடும் வகையில் இந்த பெரிய குப்பைத்தொட்டிகள் இருந்தது. அதாவது காட்டு மிருகங்களால், திறக்க முடியாதபடி, உணவு வாசம் வெளியே வராதபடி.

அடுத்ததாக, மாலை நேரத்தில் மம்மொத் ஹாட் ஸ்ப்ரிங்ஸ் என்னும் இடத்திற்கு சென்று சேர்ந்தோம். வென்னீர் ஊற்றில் வெளியேறிய நீர் குளிரில் காய்ந்து, கால்சியமாக அடுக்காக ஒருவகை வெளீர் நிறத்தில் இருந்தது. முதலில் பார்த்தபோது, விஷால் நடித்த ’சத்யம்’ படத்தில் ’என் அன்பே’ பாடலில் நயன்தாரா ஆடும் இடம் போல் இருந்தது. ஆனால், அது அடுக்கடுக்காக இருக்கும் ஐஸ் என்று நினைக்கிறேன். இங்கு அதேப்போல் ஆனால் வெப்பத்தால் புகை வந்துக்கொண்டு இருந்தது. இந்த அடுக்குகளின் மேல் ஏறி நடந்து சென்று பார்ப்பதற்கு வசதியாக மரப்பலகைகளால் வழி ஏற்படுத்தி வைத்து இருந்தார்கள். ஒரு ரவுண்ட் சென்று வர ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னதால், திரும்பவும் களைப்பை நினைத்து அங்கிருந்தே பார்த்துவிட்டு கிளம்பினோம். குடும்பஸ்தனாலே எவ்வளவு கஷ்டம்ப்பா...!!!



இந்த இடத்தின் சுற்றுவட்டாரம், ஒரு சின்ன அதேசமயம் செழிப்பான ஊர் போல இருந்தது. இங்கு இருக்கும் அலுவலகர்களுக்கான தொகுப்பு வீடுகள் இங்கே கட்டப்பட்டிருந்தன. இடமும் ரம்மியமாக இருந்தது. ஆங்காங்கே மான்கள் மேய்ந்துக்கொண்டிருக்க, இங்கே வசிப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்று நினைத்துக்கொண்டோம். அவர்கள் என்ன நினைத்து வாழ்கிறார்களோ?


இந்த இடம் வடக்கு நுழைவுவாயிலுக்கு அருகே உள்ளது. வடக்கு நுழைவுவாயில் இருப்பது, பக்கத்து மாநிலமான மொன்டானாவில். வாயிலின் அருகிலேயே இருக்கும் கார்டினர் என்னும் ஊரில் இரவு தங்குவதற்கு இரு வீடுகளை ஆன்லைனில் புக் செய்திருந்தோம். (குவிஸ் கேள்வி - கார்டினர் பக்கத்தில் நம்மூர் நடிகர் பெயரில் ஒரு ஊர் இருக்கிறது. யார் அந்த நடிகர்? பதில் - லிவிங்ஸ்டன்!!!)

இங்கிருந்து அந்த இடத்திற்கு செல்லும் வழியில் ஒரு ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் சிறப்பம்சம் என்னவென்றால், சுடு நீரும், குளிர் நீரும் அந்த ஆற்றில் ஒரு இடத்தில் கலக்கிறது. அந்த இடத்தில் போய் நின்றோம் என்றால், நமது உடலில் ஒரு பக்கம் சுடும், இன்னொரு பக்கம் குளிரும். எப்பூடி?

இருட்டி விட்டதென்றால், நாங்கள் அங்கே குளிக்கவில்லை. நாங்கள் சென்ற அதேசமயம், அங்கு சென்ற, எங்களுக்கு தெரிந்த சில பேச்சிலர்கள் அதில் குளித்து வந்த அனுபவத்தை கூறினார்கள்.

கார்டினர் சென்று சேர இரவாகிவிட்டது. நாங்கள் புக் செய்திருந்த அறைகளைச் சென்று பார்த்தால், நான்கு குடும்பங்கள் அங்கு தங்குவதற்கு வசதியாக இல்லை. ரொம்ப பழையதாகவும் இருந்தது. அதனால், திரும்ப லாட்ஜ் தேட, நல்ல வேளையாக ஒரு இடத்தில் கிடைத்தது.

முன்பு அபார்ட்மெண்ட் வீடாக இருந்ததை விடுதியாக மாற்றியிருந்தார்கள். இரண்டு பெட்ரூம்கள், ஒரு கிச்சன், ஹால் என்று இரு குடும்பங்கள் தங்குவதற்கு ரொம்ப வசதியாக இருந்தது. அன்றைய தினம் தங்குவதற்கு செய்திருந்த ஏற்பாடுகள் சொதப்பினாலும், ஏதோ நல்ல நேரத்திற்கு ஒரு நல்ல இடம் கிடைக்க, நிம்மதியுடன் தூங்கினோம். ஆன்லைனில் புக் செய்யும் போது, இனி கவனமாக இருக்க வேண்டும் என்ற அனுபவம் அந்த தினம் கிடைத்தது.

.