Friday, June 17, 2011

அவன் இவன்

ரெண்டு நாளு முன்னாடி எழுதிய பதிவில் தான் சொல்லியிருந்தேன். தியேட்டரில் படங்கள் பார்க்காததால், இனி படங்களை பற்றி எழுத போவதில்லை என்று. அதற்கு இவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவு வரும் என்று நினைக்கவில்லை.



நீண்ட நாட்களுக்கு பிறகு, நான் வந்த பிறகு முதல்முறையாக, இங்கே டென்வரில் ஒரு தமிழ்ப்படம் ரீலிஸ் ஆகியது. அமெரிக்க திரையரங்கில், தமிழ்ப்படத்தை பார்க்கும் அனுபவத்தைப் பார்க்கவே முக்கியமாக சென்றேன்.

இங்கு மொத்தமே ரெண்டு காட்சிகள் தான். இன்று வியாழன் இரவுக்காட்சியும், ஞாயிறு இரவுக்காட்சியும்.

நான் இந்தியாவில் பத்து படங்கள் பார்க்கும் காசைக் கொடுத்து, இந்த ஒரு படத்தைப் பார்த்தேன். இனி ரொம்ப கண்டிப்பாக படம் வேண்டும் என்று நினைக்கும் படத்தை மட்டும் தான் தியேட்டர் சென்று பார்க்க வேண்டும்.

திரையரங்கு சிறியது தான். முப்பது நாற்பது பேர் இருந்திருப்போம். ஏதோ ஒரு இந்திய குரூப், இரு காட்சிகளுக்கு ஒரு திரையரங்கை வாடகைக்கு எடுத்து, படத்தை வெளியிடுகிறார்கள்.

இந்தியாவில் இண்டர்வெல் இல்லாத ஆங்கிலப்படத்திற்கு இண்டர்வெல் கொடுப்பார்கள். இங்கே இண்டர்வெல் இருக்கும் தமிழ்ப்படத்திற்கு இண்டர்வெல் கொடுக்க மாட்டேங்கிறார்கள்.

இரண்டே கால் மணி நேரம் எந்திரிக்காமல், ஒரு படத்தை பார்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

இனி படத்தை பார்ப்போம்.

---



பாலாவிற்கு ஜாலியாக ஒரு படம் எடுக்க ஆசை. ஆனால், அந்த ஆசை படத்தை முடிக்கும் வரை இல்லை போலும். இல்லை, அவருக்கு தெரிந்த ஒரே முடிவு இதுவாகத்தான் இருக்கும் போல. டெம்ளேட் கிளைமாக்ஸ்.

முதல் பாதி நன்றாக இருந்தது. காட்சிகள் பல, செயற்கையாக இருந்தாலும், ரசித்து சிரிக்க முடிந்தது. சிரிக்க வைத்த பல வசனங்கள் நாற்றமடித்தது.

விஷாலுக்கு ஒரு நேஷனல் அவார்ட் வாங்கி கொடுத்துவிட வேண்டும் என்ற வெறி, பாலாவிடம் தெரிகிறது. ரொம்பவும் போராடியிருக்கிறார். இதற்காகவே பல காட்சிகளை அமைத்து விஷாலையும், நம்மையும் கொடுமைப்படுத்தியிருக்கிறார். நவரசம் காட்சி, எனக்கு ஓவராக தெரிந்தது. விஷால் நடிப்பு நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக, சூர்யா, ஆர்யா, துணை நடிகர்கள், யுவன் என்று அனைவரும் பாடுபட்டுயிருக்கிறார்கள்.

விஷாலும் அதற்காக தன்னை ஒப்படைத்து, முயற்சி செய்திருப்பதற்கு பாராட்டுக்கள்.

இரண்டாவது ஹீரோவாக ஆர்யா. இரண்டு நாயகர்களுக்கு ஏற்ற கதை என்று சொல்லமுடியாவிட்டாலும், இரு ஹீரோக்கள் ஸ்கீரினைப் பங்கு போடுவதை பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. விஷாலுக்காக ஆர்யா நிறைய விட்டு கொடுத்திருக்கிறார்.

சூர்யா ஒரு காட்சியில் வருகிறார். சூர்யாவை வைத்து பாலா படத்திற்கு வெயிட் கொடுக்க நினைக்க, பாலா படத்தில் அகரத்திற்கு விளம்பரம் செய்துவிட்டு சென்றுவிட்டார் சூர்யா.

பொதுவாக, பாலா தனது படத்தின் ஹீரோக்களை போல ஹீரோயின்களையும் அழுக்காக்கி காட்டுவார். இதில் வரும் இரு ஹீரோயின்களும் தப்பித்துவிட்டார்கள். படத்தின் கதை நடக்கும் இடத்திற்கு பொருத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்.

ஜாலியாக செல்லும் கதை, இறுதியில் வழக்கம் போல் ட்ராஜெடியாக முடிகிறது. ஒரு பெரியவரை போட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். இந்த படத்திற்காக அவரை இப்படி கஷ்டப்படுத்தியிருக்க வேண்டுமா? அந்த பெரியவர் ஏன் அவ்வப்போது சோகமாக இருக்கிறார் என்ற கதையும் தெரியவில்லை.

என்னுடன் வந்த அனைவருக்கும் படம் பிடித்திருந்தது. எனக்கு முடிவு பிடிக்கவில்லை. பாலாவின் வழக்கமான முடிவு.

.

Wednesday, June 15, 2011

டென்வர் பற்றி...

நான் தற்போது தங்கியிருக்கும் டென்வர் பற்றி சில வார்த்தைகள்.



டென்வர் ஒரு குறிஞ்சி பிரதேசம். அதாங்க, மலையும் மலை சார்ந்த பகுதியும்...

தூரத்தில் மலை தெரியுது, பாருங்க! இன்னும் கிட்ட போயி பார்க்கலை.



குளிரும், வெப்பமும் மாறி மாறி வருமாம். இரண்டும் இரு ஓரத்தை தொடுமாம்.

நான் சென்ற ஆரம்ப நாட்களில் குளிரடித்தது. சில நாட்கள் பனியும் பெய்தது.



இப்போது வெயில் பட்டையை கிளப்புகிறது. ஆனாலும், நம்மூர் மாதிரி வராது.



மக்கள் வெளியே சுற்றுவது இந்த காலத்தில் தான். அரசாங்கமும் பராமரிப்பு பணிகளை, இச்சமயத்தில் தான் செய்கிறது.



நான் வேலை செய்யும் இடம், பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி, ஐடிபில் போன்றது. அதாவது ஊரின் எல்லையில் இருக்கிறது. தங்கியிருக்கும் இடம் - மடிவாளா, மாரத்தஹள்ளி போன்றது. அதாவது, பழைய எல்லையில் இருக்கிறது.



ஆரம்ப நாட்களில், அலுவலகத்திற்கு ரயிலில் சென்று வந்து கொண்டிருந்தேன். இப்போது ஒரு தெலுங்கு நண்பருடன் காரில் சென்று வருகிறேன். இவர் காரில் தெலுங்கு பாடல்களைக் கேட்டு கேட்டு, இவருடன் தெலுங்கு சினிமா, அரசியல் பற்றி பேசி பேசி, சுந்தர தெலுங்கனாக மாறி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. அதைப் பற்றி இன்னொரு பதிவில்.



ஊருக்குள் சென்று வர ரயில், பஸ் இரண்டுமே இருக்கிறது. ஆரம்பத்தில் நிறைய பயணங்கள், ரயிலில் செய்தேன். தற்போது, பஸ்ஸில். உள்ளூர் கவரேஜ் அதிகம், பஸ்ஸில் தான்.

பஸ், ரயில் - இரண்டிலும் கட்டணம் ஒன்றே தான். மற்ற விஷயங்களை விட, இது கொஞ்சம் அதிகம் தான். ஒரு டிக்கெட் கட்டணத்தில், இரண்டு ஆப்பிள்கள் வாங்கி சாப்பிட்டு விடலாம். இரண்டு ரூபாய்க்கு டிக்கெட் கொடுக்கும் தமிழக போக்குவரத்து கழகம் வாழ்க! (இன்னமும் கொடுக்கிறார்களா?)

தமிழ் படங்கள் வரும் தியேட்டர்கள் இருக்கின்றன. இருந்தாலும், நான் வந்தப்பிறகு, இதுவரை எந்த தமிழ்ப்படமும் வந்ததில்லை. அதனால், படங்களை இணையத்தில் தான் பார்க்கிறேன். (திருட்டு விசிடி என்றே ஒரு சைட் இருக்கிறது, தெரியுமா?) இவ்வளவு நாட்கள், திரைப்படங்களை ஆதரிக்கும்விதமாக, அனைத்து படங்களையும் தியேட்டரில் பார்த்து வந்த எனக்கு இந்நிலை. அதனால், இப்படி படம் பார்க்கும் நான், அப்படங்களை பற்றி பதிவு எழுத கூடாது என்ற தீர்மானத்திற்கு வந்திருக்கிறேன்.

ஒரே ஒரு ஆங்கிலப்படம், தியேட்டர் சென்று பார்த்தேன். பைரேட்ஸ் ஆப் த கரீபியன். இங்குள்ள தியேட்டரை பார்க்கலாம் என்று சென்றேன். படத்தை பார்த்து பாதியில் தூங்கிவிட்டேன். அப்புறமா எந்திரிச்சி, ஒரு வழியாக பார்த்து முடித்தேன்.

இங்கிலிஷ் படங்களுக்கு இண்டர்வெல் இல்லையே? அப்ப, அங்கு கேண்டீன் இருக்காதா? தம் அடிக்க வெளியே போக மாட்டார்களா? டாய்லெட் போக மாட்டார்களா? என்று பல கேள்விகள் என் மனதில் இந்தியாவில் இருக்கும்போது இருந்தது. சில பதில்கள் கிடைத்தது.

நான் பார்த்த தியேட்டரில், இருக்கைக்கு முன்பு ஒரு சுவிட்ச் இருந்தது. அதை அழுத்தினால், வந்து ஆர்டர் எடுக்கிறார்கள். படம் பார்த்துக்கொண்டே சாப்பிடலாம். இந்த வசதி, நம்மூர் மல்டிப்ளெக்ஸ்களிலும் தற்போது இருக்கிறது. தம், டாய்லெட் - படத்தின் நீளம் காரணமாக அடக்கிக்கொள்கிறார்கள் போலும்!



நான் தற்போது தங்கியிருக்கும் இடத்தில் நிறைய இந்திய மளிகை கடைகள், உணவகங்கள் இருக்கிறது.



இது தவிர, சைனா, கொரியா, அரபு நாட்டு கடைகளும் இருக்கிறது. பல நாட்டு உணவு வகைகளை சுவைத்து பார்க்க பலமான வசதிகள் இருந்தாலும், ’உள்நாட்டு’ சதியால் அதையெல்லாம் இன்னும் செய்யவில்லை. என்னுடைய பிரியமான ‘கொத்து பரோட்டா’வை, இனி கண்ணில் காண முடியாதோ என்று பயந்திருந்தேன். நல்லவேளை, அப்படியெல்லாம் எதுவும் துரதிஷ்டவசமாக நடக்கவில்லை.

அது பற்றி, அடுத்த பதிவில்.

.