Wednesday, February 20, 2008

Tax மேல Tax

பட்ஜெட் வரபோகுது. என்னென்ன வரி போட போறாங்களோ? அதுக்கு முன்னாடி வரி பத்திய ஒரு ஜோக். ஆனா உண்மைதான். இது இணையத்தில் படித்தது.

இந்தியாவில் வரி கட்டமைப்பு

கேள்வி: நீங்க என்ன பண்ணுறீங்க?
பதில்: தொழில் செய்யுறேன்.
அப்ப ப்ரொபஷனல் டேக்ஸ் கட்டுங்க!!!

கேள்வி: என்ன தொழில் செய்யுறீங்க?
பதில்: பொருட்கள் வாங்கி விக்குறேன்.
அப்ப விற்பனை வரி கட்டுங்க!!!

கேள்வி: எங்க இருந்து பொருட்கள் வாங்குறீங்க?
பதில்: வெளிமாநிலங்கள இருந்தும் வெளி நாட்டுல இருந்தும் வாங்குறேன்.
அப்ப மத்திய விற்பனை வரியும் கஸ்டம்ஸ் டியுடியும் கட்டுங்க!!!

கேள்வி: பொருட்கள் வித்தா?
பதில்: லாபம் கிடைக்கும்.
அப்ப வருமான வரி கட்டுங்க!!!

கேள்வி: நீங்க எதாவது பொருட்கள் தயாரிக்கிறீங்களா ?
பதில்: ஆமாம்.
அப்ப EXCISE DUTY கட்டுங்க!!!

கேள்வி: உங்களுக்கு அலுவலகம், தொழிற்சாலை எதாச்சும் இருக்குதா?
பதில்: ஆமாம்.
அப்ப முனிசிபாலிட்டி வரி கட்டுங்க!!!

கேள்வி: உங்களுக்கு கீழ யாராச்சும் வேல பாக்குராங்களா?
பதில்: ஆமாம்.
அப்ப STAFF PROFESSIONAL TAX கட்டுங்க!!!

கேள்வி: உங்க தொழில் கோடிகளில் நடக்குதா?
பதில்: ஆமாம்.
அப்ப TURNOVER TAX கட்டுங்க!!!

கேள்வி: நீங்க வங்கில இருந்து 25000 ரூபாய் எடுத்தீங்களா?
பதில்: ஆமாம். சம்பளத்துக்காக.
அப்ப CASH HANDLING TAX கட்டுங்க!!!

கேள்வி: நீங்க உங்க வாடிக்கையாளரை உணவுக்காக எங்க கூட்டிட்டு போவிங்க?
பதில்: ஹோட்டல்லுக்கு தான்.
அப்ப FOOD & ENTERTAINMENT TAX கட்டுங்க!!!

கேள்வி: நீங்க வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்களா?
பதில்: ஆமாம்.
அப்ப FRINGE BENEFIT TAX கட்டுங்க!!!

கேள்வி: நீங்க எதாவது ஒரு சேவையை பெறவோ கொடுக்கவோ செய்கிறீர்களா?
பதில்: ஆமாம்.
அப்ப சேவை வரி கட்டுங்க!!!

கேள்வி: உங்களுக்கு எப்படி இவ்வளோ பணம் கிடைத்தது?
பதில்: பிறந்த நாள் பரிசா கிடைத்தது.
அப்ப GIFT TAX கட்டுங்க!!!

கேள்வி: உங்ககிட்ட எதாச்சும் சொத்து இருக்கா?
பதில்: ஆமாம்.
அப்ப சொத்து வரி கட்டுங்க!!!

கேள்வி: டென்சன் ஆகிட்டிங்களா? டென்சன் ஆனா எங்க போவிங்க?
பதில்: எதாச்சும் படத்துக்கு போவேன்.
அப்ப கேளிக்கை வரி கட்டுங்க!!!

இதுக்கு மேல அந்த ஆளு உயிரோட இருப்பாருன்னா நினைக்குறீங்க. :-)

ஒரு நாட்டுக்கு வரி என்பது ரொம்ப முக்கியம். நம்ம நாட்டுல வரி அதிகமா? இல்ல குறைவா? என்பதல்ல கேள்வி. சமீபத்துல, ஒரே மேடையில முகேஷ் அம்பானியும், ப. சிதம்பரமும் இருக்கும் போது முகேஷ்கிட்ட "நீங்க நிதியமைச்சர்கிட்ட எதாச்சும் கேக்குரதுன்ன கேட்கலாம்"ன்னு சொன்னாங்க. அப்ப அவர் நிதியமைச்சர்கிட்ட வரி அதிகமா இருக்கு, குறைங்க..ன்னாரு. பாருங்க, நாட்டுல எவ்வளவு சம்பாதிச்சாலும் வரி கட்ட கஷ்டமா இருக்கு. அதே மாதிரி வரி எவ்வளவு இருந்தாலும் கட்ட கஷ்டமா தான் இருக்கும்.

பார்ப்போம்... நம்ம நிதியமைச்சர் எப்படி பட்ஜெட் போடுராருன்னு. அவரு எப்படி பட்ஜெட் போட்டாலும், நம்ம அரசியல்வாதிகள்கிட்ட இருந்து எப்படி அறிக்கை வரும்னு உங்களுக்கு தான் தெரியுமே? காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் ஆஹா ஓஹோ ன்னு சொல்லுவாங்க... பிஜேபி கூட்டணியும் ஜெயலலிதாவும் சேச்சே ன்னு சொல்லுவாங்க... ஆனா நியாயமா வரி கட்டுகிற மக்கள் ஒண்ணும் பண்ண முடியாம பார்த்துட்டு இருப்பாங்க.

எது எப்படியோ, நிதியமைச்சர் எந்த அரசியலும் இல்லாம நாட்டுக்கு நல்லது பண்ணுற பட்ஜெட்டை தாக்கல் பண்ணினால் நமக்கு நல்லது தான்.

Monday, February 11, 2008

பாவப்பட்ட தமிழ் பட தயாரிப்பாளர்கள்

தமிழ் படம் தயாரிக்க என்ன தேவை? திரைப்பட ரசனை! ரசிகனின் எதிர்பார்ப்பு பற்றிய அறிவு! இப்படி எதுவும் தேவை இல்லை. ஒரு படம் தயாரிக்க வேண்டிய அளவு பணம் தேவையா? அதுவும் இல்லை. ஒரு அளவுக்கு பணத்தை புரட்டி, பூஜை அன்னிக்கி விநியோகஸ்தர்கள், டிவி, வெளிநாட்டு உரிமை என்று விற்று, சரியான தேதியில் ரிலிஸ் பண்ணினால் எதாவது தேறலாம். அப்படியே அந்த படம் ஓடினால், லாபம் பார்க்கலாம். இல்லாட்டி? கஷ்டம் தான்.

நான் இங்கே தயாரிப்பு வேலைகளை மட்டும் செய்யும் தயாரிப்பாளர்களை பற்றி சொல்கிறேன். பட தயாரிப்புக்களில் ஈடுபடும் நடிகர், இயக்குனர்களை விட்டுவிடலாம். ஏனென்றால் இவர்கள் ஒரு சில படங்களை மட்டுமே தயாரிப்பார்கள். மற்றவற்றை வெளியாரை கொண்டு தயாரிக்க செய்து அதில் நடிக்கவோ அல்லது இயக்கவோ மட்டும் செய்வார்கள். அதற்கு காரணம், அந்த ஒரு சில படங்களில் அவர்கள் கொண்ட நம்பிக்கை. நம்பிக்கை கொஞ்சம் குறைந்தாலும் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். விவரமானவர்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வரலாறை பார்க்கும் போது, படங்களை மட்டுமே தொடர்ந்து தயாரித்து செல்வத்தை பெருக்கியதாக யாரும் தெரியவில்லை. ஆரம்ப காலத்தில் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டவர்களில் மெய்யப்ப செட்டியாரின் ஏவிஎம், வாசனின் ஜெமினி ஆகியவை குறிப்பிட தக்கவை. அதில் ஜெமினி பட தயாரிப்பில் இருந்து விலகி ரொம்ப நாட்கள் ஆகிறது. ஏவிஎம், எண்பதுகளில் நிறைய வெற்றி படங்களை கொடுத்து, உச்ச நடிகர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தாலும் தற்போது தொலைக்காட்சி தொடர்களின் மூலமாகவே செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இவர்கள் பேரழகன் படத்தின் விழாவின் போது, இனிமேல் பட தயாரிப்பில் ஈடுபடுவதில்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாயின. ஆனால் அதன் பின்பும் ஏவிஎம் குடும்பத்தினரின் இளைய தலைமுறையினரால் படங்களை தயாரித்து வருகின்றனர். அதே சமயம், ஏவிஎம் முன்பு போல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே படங்களை எடுத்து வருவதாக தெரிகிறது.

அதேபோல் வெற்றி படங்களை தந்த பாலாஜி, கலைப்புலி தாணு, ராவுத்தர், ஜீவி போன்றவர்களும் தொடர்ந்து படங்களை எடுத்ததில்லை. இதில் ஜீவி பொருளாதார சூழ்நிலையால் தற்கொலை செய்து கொண்டார். தாணு, திமுகவில் இருந்து வைகோவுடன் விலகி மதிமுகவில் இருக்கிறார். இதனால் சன் டிவியுடன் மோதல் கொண்டு, இவருடைய படங்கள் எதுவும் சன் டிவியில் வருவதில்லை. தற்போது, தன் மகனை வைத்து ஒரு படம் தயாரித்து வருகிறார். அதேபோல், தொடர்ந்து புது முகங்களுக்கு வாய்ப்பளித்து பல வெற்றி படங்களை வழங்கி வந்த ஆர். பி. சௌத்திரியும் பட தயாரிப்புகளை பெருமளவு குறைத்து விட்டார். தன் இரு மகன்களையும் நடிகராக்கியதால், அதுவே போதும் என்று நினைத்து விட்டார் போல?

தற்போது, பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருவதில் முன்னிலையில் இருப்பவர்கள், ஏ. எம். ரத்னமும் ஆஸ்கர் ரவிச்சந்திரனும். ஏ. எம். ரத்னம் நிறைய மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர். ஆனால், நாயக் (இந்தியில் முதல்வன்), பாய்ஸ் (உபயம்: ஷங்கர்), உனக்கு 20 எனக்கு 18 (உபயம்: அவரின் சொந்த மகன்) போன்ற படங்களின் நஷ்டத்தினால், அதன் பின் வெளிவந்து வெற்றி பெற்ற ரன், தூள், 7 ஜி படங்களின் லாபத்தை கொண்டும், வட்டி மட்டும் கட்டி வருவதாக செய்தித்தாள்கள் மூலம் கேள்விபடுகிறேன். தற்போது வெளிவந்த பீமாவும் இவரின் கையை கடித்து இருக்கும். ஆஸ்கர் ரவிச்சந்திரன் சென்ற இரண்டு மூன்று வருடங்களில் நிறைய வெற்றி படங்களை தயாரித்து, விநியோகித்து இருந்தார். இவர் வெளிவர சிரமப்பட்டு இருந்த பல படங்களை வாங்கி, வெளியிட்டு லாபம் அடைந்தார். இந்த வருடம் தசாவதாரம் படத்தை பிரமாண்டமாக வெளியிட இருக்கிறார்.

ஒரு படத்திற்கு தயாரிப்பாளர்கள் தான் முதலாளிகள். ஆனால், ஒரு நடிகரோ இயக்குனரோ இசையமைப்பாளரோ திரைப்பட தொழில் மூலம் வசதியடைந்தது போல் எந்த ஒரு தயாரிப்பாளரும் வசதியடைந்ததாக தெரியவில்லை. இருந்ததை இழந்தவர்கள் தான் இங்கே அதிகம். இல்லாவிட்டால் இருப்பதை இழக்காமல் இருப்பதற்காக வாழ்க்கையில் மூச்சு முட்ட ஓடுகிறார்கள்.

இதற்கு என்ன காரணமாக இருக்க கூடும்?

திரைப்படம் கூறித்த ரசனையின்மையா? ரசிகனின் எதிர்பார்ப்பு பற்றிய தெளிவின்மையா? அதை அறிந்து கொள்ளாமல் இருக்கும் ஆர்வமின்மையா? வெற்றியடைந்த ஒரு படத்தை போல் தொடர்ந்து படமெடுக்கும் குருட்டு துணிச்சலா? கதையை நம்பாமல் நடிகனை முதலாளியாக்கும் அடிமைத்தனமா? பண நிர்வாகத்தில் தேர்ந்து இருக்க வேண்டியவர்கள், ஒழுங்கற்ற முறையில் செயல்படுவதாலா? வெற்றி பெற்றவர்களை இணைத்தால் மட்டுமே வெற்றி பெற்றிவிடலாம் என்ற நப்பாசையா? அது எதுவானாலும் அதை ஆராய்ந்து திருத்துவதற்கு இந்த துறையில் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. ஏனேன்றல், அவர்கள் இங்கே மிக பெரும் அளவிலான பணத்தை கொண்டு ஆடுகிறார்கள். ஒரு முறை தோல்வி அடைந்தாலும் அது அவர்கள் கழுத்தில் ஒரு பாறையை சங்கிலி கொண்டு மாட்டிவிடும். அதன் பின் அடையும் ஒவ்வொரு தோல்வியும் பாறையின் எடையை தான் கூட்டும்.

தற்பொழுது, திரைப்பட தயாரிப்பு துறையில் செயல் பட பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வர துவங்கியுள்ளன. இவர்கள், நிர்வாக பணியில் சிறப்பாக செயலாற்றினாலும், மேலே கூறியுள்ள மற்றவற்றில் கவனமில்லாமல் இருந்தால், இவர்களின் நிலையும் அதுவே. ஒரே வித்தியாசம் என்னவென்றால் இவர்களுக்கு நஷ்டத்தை பங்கு போட பங்குதாரர்கள் இருப்பார்கள்.