Saturday, November 24, 2012

விரதம்

சென்ற வாரம் கந்த சஷ்டி வந்ததல்லவா? அதற்கு ஆறு நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். நானல்ல, என் தந்தை இருப்பார். திருச்செந்தூருக்கு நடந்தும் செல்வார். தற்சமயம், வயதின் காரணமாக செல்வது இல்லை. நான் இதற்கு என்று இல்லை. பொது பிரச்சினைக்களுக்காக கூட விரதம் இருந்ததில்லை. இருக்க தோன்றியதும் இல்லை.



திருமணத்திற்கு முன்பு, என் மனைவி நிறைய முறை விரதம் இருந்திருக்கிறாளாம். இந்த முறை, இங்கு விரதம் இருக்கலாம் என்று முடிவு செய்தாள். எதற்கு, முடியுமா, வேண்டாம் என்றெல்லாம் லைட்டாக சொல்லிப்பார்த்தேன். ஒரு தடவை முடிவெடுத்துவிட்டால் என் பேச்சே நானே கேட்க மாட்டேன் என்று பன்ச் பேசாவிட்டாலும், அதுதானே மனைவிகளின் தத்துவம்? இருந்தார்.

தினமும் எதுவும் சாப்பிடாமல், எனக்கு மட்டும் வீட்டிலும், அலுவலகத்திற்கும் சமையல் செய்துக்கொடுத்தாள். அவ்வப்போது, எலுமிச்சை சாறுடன், வெல்லம் கலந்து குடித்து வந்தாள். சில சமயம், பழங்களும் சாப்பிடுவாள். விதவிதமாக சமைத்து சாப்பிட விட்டாலும், அவள் விரதமிருக்க, நான் மட்டும் கட்டுகட்டு என கட்டுவது சமயங்களில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தினாலும், என்ன செய்ய? கட்டி வந்தேன்.

சென்ற வெள்ளிக்கிழமை என்ன தோன்றியதென்றால், வாரயிறுதியில் நாமும் சாப்பிடாமல் இருந்தால் என்ன? என்று. விரதம், டயட் என்று இல்லாமல், விரதம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு ஆர்வம்.

பொதுவாக, எனக்கு சாப்பிடும் நேரம் கொஞ்சம் தள்ளி சென்றாலே, பசி வயிற்றை கிள்ள, சிறிது நேரத்தில் தலைவலி வந்துவிடும். வீட்டில் இருக்கும் போதும் சரி, படிக்கும் காலத்தில் ஹாஸ்டலில் இருக்கும் போதும் சரி, நேரா நேரத்திற்கு மணியடித்து சாப்பாடு போடுவார்கள். குறிப்பாக, ஹாஸ்டல் சாப்பாட்டைப் பற்றி சொல்ல வேண்டும். கல்லூரி எட்டரைக்கு என்றால், என் கல்லூரி நண்பர்கள் எட்டே காலுக்கு எழுந்து கிளம்பி கல்லூரிக்கு வருவார்கள். நானோ எட்டு மணிக்கே ஹாஸ்டல் மெஸ்ஸை நோக்கி நடந்து செல்வேன்.

காரணம் சிம்பிள். காலை உணவு முக்கியம் என்று என்றோ வாசித்தது. இரவு உணவிற்கு பிறகு, நாம் நீண்ட நேரம் உண்ணாமல் இருப்பதால், காலை உணவு அந்த விரதத்தை முடித்து வைக்கும் காரணத்தாலே, அதற்கு ‘ப்ரெக்பாஸ்ட்’ என்று பெயர் என்றும், காலை உணவை சாப்பிடாமல் விட்டோமானால், உணவை செரிக்க உதவும் திரவத்தாலேயே உடலுக்கு தீங்கு என்றும் படித்ததாலே, எதற்கு தேவையில்லாமல் வம்பை விலைக்கொடுத்து வாங்க வேண்டும் என்று காலை உணவு எவ்வளவு கேவலமாக இருந்தாலும் லைட்டாகவாவது சாப்பிட்டு விடுவேன்.

சமீபத்தில் ஒருநாள் காலையில் பதினொரு மணி இருக்கும். என் கல்லூரி நண்பனுடன் போனில் பேசிக்கொண்டு இருந்தேன். ’சாப்டாச்சா?’ என்று கேட்டதற்கு ’இல்லை... இனிதான்’ என்றான். திரும்ப அவன், ’நீ?’ என்று கேட்டவன், அவனாகவே, ‘அந்த ஹாஸ்டல் காலை சாப்பாட்டையே விடாமல் சாப்பிட்டவன், இப்ப வீட்டு சாப்பாடு. சாப்பிடாமல் இருப்பியா? சாப்பிட்டு இருப்பே!! அப்புறம்?’ என்று அடுத்த டாபிக்கிற்கு அவனாகவே சென்று விட்டான்.

அப்படிப்பட்ட நான், இரு நாட்கள் விரதம் இருக்க போகிறேன், என்பது எனக்கே ‘நான் என்னவாவேன்’ என்ற ஆர்வத்தை கிளப்பியது.

சனிக்கிழமை மதியம் வயிறு லைட்டாக ‘சாப்பாடு போடுடா!’ என்று நினைவுப்படுத்தியது. சிறிது நேரத்தில், அதுவாகவே அமைதியாகியது. அதன் பிறகு, உடல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், மனரீதியாக சில கேள்விகள்.

நாம் எதற்கு விரதம் இருக்கிறோம்? நமக்கு இது தேவையா? சாப்பிட்டு விடலாமா? என்பது போன்ற கேள்விகள். பிறகு, முடிவெடுத்துவிட்டோம். அதற்காக இருந்தே ஆகவேண்டும் என்று விரதத்தைத் தொடர்ந்தேன்.

இரவில் கொஞ்சம் எலுமிச்சை சாறும், ப்ளாக் பெர்ரி சிறிதும் சாப்பிட்டேன்.

இன்னொரு பிரச்சினை. பொதுவாக, விடுமுறை நாட்களில் வேறு ஏதும் முக்கியமான வேலை இல்லாவிட்டால், வீட்டில் சமைப்பது உண்டு. சமையலுக்கு உதவுவது உண்டு. இந்த இரு நாட்களில் வெளியே செல்லும் வேலையும் இல்லை. வீட்டில் சமையலும் இல்லையென்பதால், ஒரே போர். எவ்வளவு நேரம், லாப்டாப்பை கட்டிக்கொண்டு அழுவது? தூங்கிவிட்டேன்.

ஞாயிறு அன்று, எங்கள் அப்பார்ட்மெண்டில் தீபாவளி கொண்டாட்டம் இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமையல் ஐட்டம் செய்துக்கொண்டு வர வேண்டும். எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஐட்டம் - இட்லி. சட்டி நிறைய இருந்தாலும், தொட்டு பார்க்க மட்டும் தான் முடிந்தது.

அன்று சாயங்காலம், விரதத்தை முடித்துவிட்டு தான், இட்லியை வாயில் போட முடிந்தது. முதலில் இருநாட்கள் பெரிதாக தெரிந்தாலும், கடந்தபிறகு அவ்வளவே என்று தோன்றியது. சாதித்தது என்னவென்றால், இரு நாட்கள் (ஆக்சுவல்லி, ஒன்றரை நாள் தான்) என்னால் சாப்பிடாமல் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது தான்.

இனி, அடுத்த சஷ்டிக்கு இன்னும் நாட்களைக் கூட்ட முடியுமா? என்று பார்க்க வேண்டும். உடல்நலன் சார்ந்து செய்ய வேண்டும்.

 
.

Sunday, November 18, 2012

துப்பாக்கி

துப்பாக்கி, இங்கு நேற்று தான் வந்தது. இரண்டே காட்சிகள் தான். அது ஏனோ தெரியவில்லை. விஜய் படங்களின் திரையிடுகள், இங்கு அசிங்கப்படுகிறது. தீபாவளிக்கு வந்திருந்தால், கோவில், இனிப்பு, வடை, வெடி ஆகியவற்றுடன் இந்த படமும் சேர்ந்து என் தீபாவளி முழுமையடைந்திருக்கும்.

---




வெள்ளி இரவு ஒரு காட்சி, ஞாயிறு மதியம் ஒரு காட்சி என இரண்டே காட்சிகள். வீணாப்போன தாண்டவமே, இங்கு ஒரு வாரத்திற்கு மேல் திரையிட்டார்கள். மாற்றானும் அப்படியே. விஜய் படங்களுக்கு ஏன் இப்படி என்று தெரியவில்லை. டிஸ்ட்ரிப்யூட்டர்கள் அப்படி வாய்க்கிறார்களோ? தாண்டவத்தை யூ-டிவியும், மாற்றானை யூரோஸும் வெளியிட்டு இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

---

ஒன்பது மணி காட்சிக்கு, எட்டேக்காலுக்கு கிளம்பி சென்றோம். எப்போதும் பர்ஸில் கார்ட் இருக்கும் என்பதால், பணம் எவ்வளவு இருக்கும் என்று கவனிப்பதேயில்லை. எல்லா இடங்களிலும், கார்ட் ஒத்துக்கொள்வார்கள் என்பதால். இங்கு சென்று பார்த்தால், ஒரு டேபிள் போட்டு, இரு தமிழர்கள் டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தார்கள். டேபிளில் டிக்கெட் சுருள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. கார்ட் கிடையாது, வெளியே இருக்கும் ஒரு கடையில் ஏடிஎம் இருக்கிறது, அங்கு சென்று பணம் எடுத்து வாங்க என்றார்கள். ஏற்கனவே டிக்கெட் எடுத்தவர்கள், உள்ளே செல்வதற்கு க்யூவில் நின்றுக்கொண்டிருந்தார்கள். நான் சென்று எடுத்து வருவதற்குள், க்யூ வளர்ந்திருந்தது.

உள்ளே வேறு ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது போல. க்யூவில் சுமார் இருபது நிமிடங்கள் நிற்க வேண்டியிருந்தது. இப்படி ஒரு படத்திற்கும் இங்கு நின்றதில்லை. நேரம் ஆக, ஆக, கூட்டம் கூடியது. நல்ல கூட்டம்.

என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் வேறு மாநில நண்பர்களும் வந்திருந்தார்கள். மாற்றான் போனபோது அதிர்ச்சி கொடுத்த அந்த தமிழ் பெண்ணும், ஒரு சின்ன பெண்ணுடன் வந்து அதிர்ச்சி கொடுத்தார்.

தியேட்டர் சுமார் தான். இங்கு தான், அவன் இவன் பார்த்தேன். இம்முறையும் சவுண்ட் அதிகம் வைக்கவில்லை. தியேட்டர் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. விஜய், காஜல் அறிமுக காட்சிகளுக்கு நல்ல கைத்தட்டல். உடன் வந்த ஆந்திர நண்பருக்கு ஆச்சரியம். இப்படித்தான் எல்லா தமிழ்ப்படங்களுக்கும் இருக்குமா? என்று வினவினார். யோசித்துப்பார்த்தேன். சூர்யா படங்களுக்கு அப்படி ஒன்றும் கைத்தட்டல் இருந்ததில்லை. அஜித் படங்களுக்கு, நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும்.

துப்பாக்கியில் பல காட்சிகளுக்கு, வசனங்களுக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் இருந்தது.உதாரணத்திற்கு, ஐ யம் வெயிட்டிங்கை சொல்லலாம்.

படத்தில் வரும் ஸ்லீப்பர் செல்ஸ் போல சமூகத்தில் நிறைய அன்ட்டி-விஜய் பேன்ஸும் ஊடுருவிவிட்டார்கள். பொதுவாக பார்த்தோமானால், விஜய்யை நக்கல் அடிப்பவர்களே அதிகம் இருக்கிறார்கள். நேற்று தியேட்டரிலும் அப்படித்தான். எங்களுக்கு பின்னாடி இருந்தவர்கள், ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். எரிச்சலாக இருந்தது.

---

இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கம்மியே. இந்த வருட பெரிய பட்ஜெட் படங்களின் தொடர் தோல்வி, ஒரு காரணம். விஜய், முருகதாஸ் மேலான அவநம்பிக்கை, இன்னொரு காரணம். படத்தின் வெற்றிக்கு, இக்காரணங்களும் காரணமே.

முருகதாஸ் புத்திசாலித்தனமான காட்சிகள் அமைத்திருக்கிறார் என்று சொல்ல ஆசைத்தான். கொஞ்ச நாள் போகட்டும். இது எந்த இங்கிலிஷ் படம் என்று யாரும் எதுவும் சொல்லாமல் இருந்தால் சொல்கிறேன்.

காவலனுக்கு முன்பு வந்த ஐந்து விஜய் படங்களை, படம் வந்த போது, ஹிட் என்றார்கள். முடிவில், ஐந்தும் தோல்வி என்றார்கள். காவலன், வேலாயுதம், நண்பன் வந்த போது நிஜமாகவே நன்றாக இருந்ததாக சொன்னார்கள். முடிவில், ரிசல்ட் ஆவரெஜ் என்றார்கள். இது என்னவாகுமோ?

கூகிள் பாடல் என்னை பொறுத்தவரை ஹிட் சாங். தினமும் கேட்கும் பாடல். என்னுடன் அலுவலகம் வரும் மற்ற மொழி நண்பர்களுக்கும் பிடித்த பாடல்.

படம் எனக்கு பிடித்திருந்தது. க்ளைமாக்ஸ் தவிர. முருகதாஸ் படங்களில் ரமணா தவிர அனைத்து படங்களிலும், க்ளைமாக்ஸ் சுமார்தான். படங்களின் க்ளைமாக்ஸிற்கு முந்தைய காட்சிகள் கொடுக்கும் விறுவிறுப்புக்கு, ஈடுக்கொடுக்க முடியாததாக இருக்கும். இதுவும் அப்படியே.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் மற்றவர்கள் போல் வித்தியாச கோணங்களில் வித்தை காட்டாமல், காட்டப்படும் காட்சிகளில் டீடெயிங்கில் வித்தை காட்டியிருக்கிறார்.

ஹீரோவின் பணியை தவிர, வேறெதற்கும் சம்பந்தமில்லாமல், இறுதியில் போடும் டெடிக்கேஷனுக்கு ஏமாந்து திரையரங்கில் கைத்தட்டினார்கள். முருகதாஸ் நினைத்தது நடந்துவிட்டது. ஜாலியாக போய் ஹிந்தி படமெடுப்பார்.

விஜய்யின் ட்ராக் சேஞ்ச் முடிவு, நல்ல பலன்களை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறது. மீண்டும் தொடர் வெற்றிகள் கொடுக்க வாழ்த்துக்கள்!!! படம் வெளிவரும் அன்று, இங்கு திரையிட்டால் நான் மகிழ்ச்சியடைவேன்.

---

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஒரு தீபாவளி நிகழ்ச்சியில் விஜய்யும், முருகதாஸும் கலந்துக்கொண்டார்கள். விஜய்யை பற்றி முருகதாஸுடன் கேட்டபோது, வழக்கம் போல் எல்லோரும் சொல்வதை சொன்னார். முடிவில் ஒரு பஞ்ச் வைத்தார்.

“விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருப்பார். ஷாட் எடுக்கும் போது, வேறு மாதிரி, காட்சிக்கு ஏற்றாற்ப்போல் துள்ளலுடன் இருப்பார். எது பெர்ஃபார்மன்ஸ் என்றே தெரியாது.”

கடைசி வரியை சொன்ன போது, முருகதாஸை பார்த்து  விஜய் ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார் பார்க்கணும். சூப்பர்...

 
.

Monday, November 5, 2012

சான்டா மோனிகா பீச்

இந்த பதிவின் தொடர்ச்சி.
 
பெவர்லி ஹில்ஸ் சென்ற பேருந்து, நாங்கள் ஏறிய சான்டா மோனிகா பீச்சிலேயே வந்து இறக்கிவிட்டது.
 
காரை கொஞ்சம் தள்ளி வேறு ஒரு இடத்தில் பார்க்கிங் செய்துவிட்டு வந்திருந்தோம். இந்த பீச்சிற்கு உள்ளே சென்று விட்டு, பிறகு வெளியே வந்து, அங்கு சென்று காரை எடுக்க, எப்படியும் கொஞ்சம் அதிகமாக நேரமாகும் என்று தோன்றியது. ஏனெனில், அடுத்து நாங்கள் செல்ல வேண்டியது, லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட் தான். எங்காவது கொஞ்சம் நேரமாகிவிட்டால், சிரமமாகிவிடும் என்பதால், முதலில் காரை எடுத்துக்கொண்டு பக்கத்திலேயே வைத்துக்கொள்வோம் என்று நினைத்து காரை எடுத்து வந்தோம்.
 
பீச்சை கடந்து செல்லும்போது, பார்க்கிங் ஃபுல் என்று முன்னால் ஒரு போர்டு இருந்தது. உள்ளே பார்த்தால், நிறைய பார்க்கிங் இடங்கள் இருப்பது போல் தெரிந்தது. அங்கு இருந்த செக்யூரிட்டியிடம் கேட்டேன். அவர் அது வேறு பார்க்கிங் என்று சொன்னார். வழியை கேட்டதற்கு, வேறு ஒரு பக்கம் கையை காட்டினார்.
 
அந்த பார்க்கிங் செல்லும் வழியை, ஜிபிஎஸ்ஸில் பார்த்தால், அது இந்த மெயின் வழியை காட்டியது. இந்த மெயின் வழியில், பார்க்கிங் இல்லை என்று ஒரு போர்டு. என்னடா இது சிக்கல் என்று மொபைலை உதவிக்கு எடுத்தேன். மொபைல் சரியான வழியைக் காட்டியது. 
 

இங்கு உள்ள பார்க்கிங்கில் காரை போட்டு உள்ளே சென்றோம். இந்த பீச்சில் உள்ள சிறப்பம்சம், Pier என்றழைக்கப்படும் கடல் தண்ணீருக்கு மேல் மரத்தினால் அமைக்கப்பட்டிருக்கும் தளம் தான். ரொம்ப பழமையான மரத்தளம். நூறு ஆண்டுகளுக்கு மேலான கட்டுமானம் இது.



கடைகள், உணவகங்கள், ஒரு கேளிக்கை பூங்கா அனைத்தும் இதன் மேல் இருக்கிறது.


அப்படியே ஒரு வாக் சென்றோம். கடல் மணலில் கொஞ்ச தூரம் வரை, பலகை போட்டிருந்தால், பாப்பாவை ஸ்ட்ராலரிலேயே கூட்டி சென்றோம். அதன் பிறகு, பாப்பாவை கையில் எடுத்துக்கொண்டு, ஸ்ட்ராலரை மணலில் இழுத்துக்கொண்டு சென்றோம். பாப்பாவுக்கு முதல் கடல் அனுபவம். இதற்கு முன்பு திருச்செந்தூர் சென்றிருந்தாலும், கடல் பக்கம் சென்றதில்லை. கரையில் கால் நனைய நிற்க வைத்தோம். வித்தியாசமா இருக்கிறதே என்பது போல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.



இங்குள்ள மக்கள் சூரிய குளியல் எடுத்துக்கொண்டும், கடல் குளியல் எடுத்துக்கொண்டும் இருந்தார்கள்.



குழந்தைகள், மணலில் குழி தோண்டி, தங்களை தாங்களே புதைத்துக்கொண்டு இருந்தார்கள். சில பெற்றோர்கள், உதவி செய்துக்கொண்டு இருந்தார்கள். குழந்தைகளுக்கான மணல் அள்ளும் உபகரணங்கள் ப்ளாஸ்டிக்கில் கிடைப்பதால், அதனுடன் ரெடியாக வந்திருந்தார்கள்.



ஒரு ஹெலிகாப்டர் அந்த பக்கம் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. ஒரு பறவை அதற்கு பின்னணியில் தெரிய, இரண்டும் கிட்டத்தட்ட ஒரு அளவில் இருக்க, ஒரு க்ளிக்.


இந்த மரக்கட்டுமானத்திற்கு கீழும் சிலர் சுற்றிக்கொண்டு, விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அலைகள், தூண்களை நனைத்துக்கொண்டு இருந்தது.


 

இது நன்றாக பலமாக இருக்க வேண்டும். பின்ன, மேலே ஒரு விளையாட்டுத்தளமே இருக்கிறதல்லவா?


ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கவில்லை. நேரமில்லா காரணத்தால், அப்படியே சுற்றி பார்த்துவிட்டு, பக்கத்தில் இருந்த பப்பா கம்ப் என்னும் ரெஸ்டாரெண்டில் சாப்பாடு வாங்கிவிட்டு கிளம்பினோம். கடை முழுக்க ஏதாவது வாசகங்கள் எழுதிய பலகைகள். எங்கு விட்டு வைக்கவில்லை. இங்கு இறால் உணவு வகைகள் பிரபலம். இருப்பதிலேயே காரமாக இருப்பது எது என்பதை கேட்டு தெரிந்துக்கொண்டு, அதை பார்சல் கட்டிக்கொண்டோம். அப்பத்தான் இனிப்பாக இல்லாமல், நமக்கேற்ற மாதிரி மொஞ்சமாவது உப்பு காரத்துடன் இருக்கும்.


அங்கிருந்து ஏர்போர்ட் பக்கம்தான். நார்மலாக 15 ஆகலாம் என்று கூகிள் மேப்ஸ் சொல்லியது. இருந்தாலும், ஒரு மணி நேரம் என்று ஓவராக கணக்கு வைத்துக்கொண்டு கிளம்பினோம். எங்கள் ஓவர் கணக்கு, சரியாகவே ஆனது.

போன பாதை, நகரின் நடுவே இருந்ததால், ஏகப்பட்ட சிக்னல்கள். பெரிதாக ட்ராபிக் இல்லையென்றாலும், நிறைய சிக்னல்கள் இருந்ததால், நேரம் பிடித்தது. இந்த சிக்னல் கேப்பிலேயே உணவை முடித்துவிட்டோம். முதலில் காரை வாடகை எடுத்த இடத்தில் விட்டுவிட்டு, பிறகு அங்கிருந்து அவர்களுடைய பேருந்தில் ஏர்போர்ட் செல்ல வேண்டும்.

காரை விடும் இடத்திற்கு செல்லவே, ஒரு மணி நேரம் ஆனது. அங்கே கணக்கை செட்டில் செய்துவிட்டு, லைட்டாக ரெப்ஃரெஷ் செய்துவிட்டு, ஏர்போர்ட் சென்றோம். காரை வாடகை எடுக்கும் போது, எவ்வளவு ஆகும் என்று ஒரு எஸ்டிமேட் கொடுத்தார்கள். திரும்ப விடும்போது, அதை விட அதிகமாக சொன்னார்கள். அந்த எஸ்டிமேட்டை எடுத்துக்காட்டி விளக்கம் கேட்க, எஸ்டிமேட்டை விட குறைவாக பிறகு சொன்னார்கள். எப்பவும் எஸ்டிமேட் வாங்குவது முக்கியம் என்று புரிந்தது.

ஏர்போர்ட் சென்று, செக்யூரிட்டி முடித்து, ப்ளைட் டைமை பார்த்தால், ப்ளைட் திரும்பவும் லேட். இந்த Frontier எப்பவும் இப்படிதான் போலும்!!! கிளம்பும் போதும், இதே பிரச்சினைதான். டென்வரில் இருக்கும் நண்பர் போன் செய்து, ப்ளைட் டைமை கேட்டார். வந்து பிக்-அப் செய்வதாக சொன்னார். இரவு 11 மணி ஆகும் என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ப்ளைட் இன்னும் லேட்டாகியது. இரவு உணவாக ஒரு சாலடை வாங்கி, ஏர்போர்ட்டிலேயே உண்டோம்.

ப்ளைட்டில் ஏறி உட்கார்ந்தது தான் தெரியும். நல்ல தூக்கம். அவ்வளவு அலைச்சல். அவ்வளவு களைப்பு.

டென்வரில் இறங்கியபோது இரவு ஒரு மணி இருக்கும். ஒரு டாக்ஸி கிடைக்க, வீடு வந்து சேர்ந்த போது, மணி இரண்ரை- மூன்று இருக்கும். அப்படியே பெட்டில் படுத்து சுருள, லாஸ் ஏஞ்சல்ஸ் பயணம் முற்றுப்பெற்றது.

.

Sunday, November 4, 2012

எந்த மரம் நல்ல மரம்?

PIT தளம், எனக்கு பிடித்த தளங்களில் ஒன்று. போட்டிகளில் கலந்துக்கொள்வது இல்லையென்றாலும், தொடர்ந்து நான் தொடரும் தளங்களில் ஒன்று. முன்பொரே ஒருமுறை கலந்துக்கொண்டு சிறப்பு செய்தது உண்டு. பிறகு, பிரமித்துப்போய் பெருமூச்சுவிடுவது மட்டுமே உண்டு.

தற்சமயம், கொஞ்சம் கேமரா கையுமாக சுற்றுவது என்றிருப்பதாலும், நம்மையும் ஒரு போட்டோகிராபர் என்று சில அப்பாவிகள் நம்புவதாலும், இம்மாத போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பு செய்யலாம் என்றிருக்கிறேன்.

இம்மாத போட்டிக்கான தலைப்பு - மரங்கள்/மரம்.

சமீபகாலங்களில் இந்த தலைப்புக்கு பொருத்தமான புகைப்படங்கள் நிறைய எடுத்திருக்கிறேன் என்பதால், புதிதாக எடுக்க தேவையில்லாமல், எடுத்ததில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அனுப்பினால் போதுமானதாக இருக்கிறது.

எதை அனுப்புவது என்பதில் தான் குழப்பம். (நீ புடுங்குனது பூரா...!!! நோ... நோ... நோ...)

பதிவுலக நண்பர்கள், ஐடியா மணிக்களாய் இருக்கும்போது என்ன குழப்பம்? ஒரு பதிவைப்போட்டா ஆச்சு!

கேள்வி - கீழ்க்கண்ட நான்கு புகைப்படங்களில் ஒன்றை தேர்வு செய்? (நல்லதாய் பார்த்து!!!)

ஒன்று:

இங்கு இருக்கும் அனைத்து புகைப்படங்களும், சமீபத்தில் இவ்வருட இலையுதிர் காலத்தின் போது எடுத்தது. இந்த புகைப்படம் இங்கே இருக்கும் சீஸ்மேன் பார்க் என்னும் பார்க் சென்றபோது, அருகே இருந்த தெரு இப்படி கலர்புல்லாய் அழகாய் இருக்க, உடனே எடுத்தது.


இரண்டு:

இது அந்த சீஸ்மேன் பார்க்கில் எடுத்தது. ஒரு மரம் மட்டும் தனியே வேறு கலரில் வித்தியாசமாய் இருக்க, க்ளிக்கியது.

 
மூன்று:
 
இந்த படம், ஒரு மாதத்திற்கு முன்பு ஆஸ்பென் என்ற ஊருக்கு ட்ரிப் சென்றபோது, அங்கு இருக்கும் மெரூன் பெல்ஸ் என்ற மலைப்பகுதியில் எடுத்த புகைப்படம். போஸ்ட் கார்ட், வால்பேப்பர் என்று மட்டுமே பார்த்த சில இடங்களை இங்கே தரிசிக்க முடிந்தது. இடங்களைப் பற்றிய பதிவுகள், விரைவில். இப்போதைக்கு, இது அங்கு எடுத்த படம் என்ற தகவல் மட்டும்.
 



நான்கு:

போன புகைப்படத்தில் பார்த்த அதே மரங்கள் தான். வேறு ஆங்கிளில்.


இனி உங்க டர்ன். எது நல்லா இருக்கு? சொல்லுங்க.

வேணும்னா, புகைப்படங்களைக் கிளிக்கி பெரிசா பார்த்து சொல்லுங்க. டவுன்லோட் செஞ்சு, உட்கார்ந்து, படுத்து பார்த்து பொறுமையா ஆராஞ்சு யோசிச்சும் சொல்லலாம். (மக்கா, டவுன்லோடி உங்க பேருல அனுப்பி ஆப்பு வச்சுறாதீங்கப்பு!!!)

எதுவுமே நல்லா இல்லையென்றாலும், கூச்சப்படாம சொல்லுங்க. நான் வெட்கப்படாம, பிங்கி பிங்கி பாங்கி போட்டு ஏதாச்சும் ஒண்ணை அனுப்பிடுவேன்!!!

ஒரு ரகசிய கேள்வி. இந்த PIT நடுவர்கள் எந்த மாதிரி படங்களை தேர்ந்தெடுப்பாங்க? யாருக்காச்சும் தெரியுமா?

(PIT  நடுவர்களே வந்து நேரடி பெயரிலோ அல்லது புனைப்பெயரிலோ வந்து கருத்து சொல்லலாம். ஆட்சேபனை இல்லை. ரகசியம் காக்கப்படும்!!!)

பயப்புள்ள ஒருத்தரும் ஒண்ணும் சொல்லல? அப்பவும், முன்சொன்ன அதே விதிமுறை கடைப்பிடிக்கப்படும். பிங்கி பிங்கி பாங்கி.

.

Friday, November 2, 2012

லேப்டாப் ஸ்க்ரீன் - சாண்டி

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு சுபயோக தினத்தில், என் மனைவி போன் பேசி விட்டு அதை திறந்திருந்த லேப்-டாப்பின் கீ-போர்ட் மீது வைத்து விட்டு, வேறு வேலையில் மூழ்க, எங்க வீட்டு பாப்பா ஏதோ அவளுக்கு இருக்கும் கொஞ்சுண்டு தெம்போடு, லேப்-டாப்பை கொஞ்சம் வேகமாக மூட, லேப்-டாப் ஸ்கிரீன் பணால். முதல் போணியே, நல்ல பெரிய போணிதான்.



மேலே எதுவும் தெரியவில்லை. ஆன் செய்தால், உள்ளே இருக்கும் எல்ஈடி ஸ்க்ரீன் க்ரக் விட்டிருப்பது தெரிந்தது. பாதிப்பு ஸ்க்ரீனுக்கு மட்டும் தான் என்று தெரிந்தது. அதை தவிர, இந்த லேப்டாப்பை வைத்து, நான் பார்க்கும் பல வெட்டி வேலைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது!!!

என்ன செய்யலாம் என்று யோசித்து, இணையத்தில் விசாரித்ததில், பக்கத்திலேயே ஒரு சர்வீஸ் சென்டர் இருப்பது தெரிந்தது. நல்ல திறமையான ஆள் தான் என்று வாசித்த ரீவ்யூஸ்களும் சொல்லியது. சரி, அவரிடம் எடுத்து சென்று கேட்போம் என்று சென்றேன்.

லேப்டாப்பை கொடுத்துவிட்டு, இதை சரி செய்ய எவ்வளவு ஆகும் என்று கேட்டேன். லேபர் சார்ஜ் எவ்வளவு ஆகும் என்று வேண்டுமானாலும் சொல்கிறேன். எந்த ஸ்க்ரீன் இதற்கு சரிபடும் என்பதை திறந்துப் பார்த்துவிட்டு தான் சொல்ல முடியும் என்றார்.

சரி, லேபர் சார்ஜ் உங்களுக்கு எவ்வளவு என்று கேட்டதற்கு தொண்ணூறு டாலர் என்றார். எச்சில் முழுங்கிவிட்டு, இந்த ஸ்க்ரீன் குத்துமதிப்பாக எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா என்று கேட்டேன். HP ஒரிஜினல் இருநூறு, முன்னூறு ஆகும். அதைபோல் வேறு நிறுவன பாகம் என்றால், எண்பதில் இருந்து நூற்றியம்பது வரை இருக்கும் என்றார்.

கூட்டி கழித்து பார்த்ததில் இருநூறு டாலருக்கு குறைவில்லாமல் வேட்டு வைக்க ரெடியாக இருப்பது தெரிய வந்தது. அவரை சொல்லி குற்றம் இல்லை. இங்கு இப்படி தான். சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் கதைதான்.

சில நாட்களுக்கு முன்பு, இப்படி தான் இன்னொரு சம்பவம். நண்பர் ஒருவர் ஆன்லைனில் எது எங்கு எப்ப சீப்பாக கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டே இருப்பார். ஒருநாள் ஒரு வாட்சைக்காட்டி, இது 20 டாலர் தான். வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். நமக்கு அச்சமயம் அது தேவையாக இருந்ததால், வாங்கிவிட்டேன்.

பார்சல் வீடு வந்த பிறகு, கையில் போட்டு பார்க்கும் போது தான் தெரிந்தது. செயின் நீளமாக இருந்தது. எனது கைக்கு சரியாக இருக்க வேண்டுமானால், இரண்டு இணைப்புகளைக் கழட்ட வேண்டியிருந்தது.

நம்மூர் பக்கம் என்றால் மசூதி பக்கம் இருக்கும் காம்ப்ளக்ஸிற்கு சென்றால், நிறைய வாட்ச் ரிப்பேர் பார்க்கும் கடைகள் இருக்கும். சரி செய்ய சொன்னால், 10 ரூபாய் கேட்பார்கள். இங்கே, 10 டாலர்கள் கேட்பார்களாம். பக்கமிருந்த ஒரு கடையில், நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு தான் 15 டாலர் கொடுத்து இதுபோல் சரிசெய்திருந்தாராம்.

என்னடா, இது வம்பா போச்சே! என்று நினைத்துக்கொண்டேன். பின்ன, 20 டாலர் வாட்சிற்கு, 15 டாலர் செலவு செய்து ரிப்பேர் கூட இல்லை, செயினை சரி பண்ணுவதா என்று வேறு வழிமுறைகளை யோசித்தேன்.

இருக்கவே இருக்கிறது, யூ-ட்யூப் என்று அதில் இந்த வேலையை எப்படி செய்வது என்று பார்த்தேன். சின்ன குண்டு பின், கத்தி போன்றவற்றை வைத்தே, இதை சரி செய்ய வழிமுறைகள் சொல்லி நிறைய வீடியோக்கள் இருந்தன. நாலைந்து வீடியோக்கள் பார்த்து, நானே சரிசெய்துவிட்டேன். போலவே, நண்பர் அவருடைய காருக்கான லைட்டை யூட்யூப் வீடியோ பார்த்தே மாற்றினார்.

லேப்டாப்பிற்கு இது போல் ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசித்தேன். நான் அந்த லேப்டாப்பை வாங்கியது, சுமார் 500 டாலருக்கு. இப்ப, ரிப்பேர் செய்ய கேட்பது, சுமார் 200 டாலர். எனக்கு தெரிந்த ஒருவர் சமீபத்தில் தான், 350 டாலர் கொடுத்து, ஒரு நல்ல லேப்டாப் வாங்கியிருந்தார். 200 டாலருக்கு ரிப்பேர், 350 டாலருக்கு புது லேப்டாப் என்று ஒரு ’நீயா நானா’ உள்ளூக்குள் ஓடியது.

சரி, யூ-ட்யூப் பார்ப்போம் என்று பார்த்தால், இதே மாடல் லேப்டாப்பை திறந்து ஸ்க்ரீனை சரி செய்ய பல பேர் வழி சொல்லுகிறார்கள். லேப்டாப் கழுத்தில் கத்தியை வைக்க தைரியம் வந்தது.

இரண்டு மூன்று வீடியோக்கள் பார்த்துவிட்டு, அது போலவே ஸ்க்ரூக்களை கழட்டினேன். ஸ்க்ரீனையும் கழட்டி பார்க்க முடிந்தது. அந்த மாடல் எல்ஈடி ஸ்க்ரீனை, இணையத்தில் தேடினேன். நாற்பது-ஐம்பது டாலருக்கு கிடைத்தது. ஆன்லைனில் ஆர்டர் கொடுக்க, மூன்று நாட்களில் வீடு வந்து சேர, அதை லேப்டாப்பில் இணைக்க, இதோ லேப்டாப் ரெடி!!! ஒரு பதிவும் ரெடி!!!

நான் எழுதுவதற்கு இடையூறாக எத்தனை தடங்கல்கள்? அதையெல்லாம் முறியடித்து, அதை வைத்தே எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

யூ-ட்யூப் புரட்சி வாழ்க!!! நூற்றியம்பது டாலரை தண்டம் அழாமல் காப்பாற்றியதற்கு யூ-ட்யூப்பிற்கு நன்றி. யாருப்பா அது? சிறு தொழில்களை, யூ-ட்யூப் அழிக்கிறது என்று போராட்டம் பண்றது?!!!

---

நியூயார்க் பக்கம் சுழற்றியடித்த சாண்டியால், நியூயார்க் பங்கு சந்தை இரு தினங்களாக மூடபட, அதனால் ஏகப்பட்ட பிரச்சினைகள் எனக்கு.

பங்குசந்தை சம்பந்தமான மென்பொருள் செயலிகளை பராமரித்து/மராமத்து செய்து வருவதால், அலுவலகத்தில் பல்வேறு பிரச்சினைகள். இதுவரை இந்த மாதிரி ஆனதே இல்லை என்பதால், புதிது புதிதாக சரித்திரத்தில் இதுவரை பாராத பிரச்சினைகள். அந்த லட்சணத்தில் செயல்பட்டன, அந்த செயலிகள்.

இரண்டு நாட்களாக நிறைய வேலை செய்தும், ஒரு கஸ்டமர் அனுப்பியிருந்த இரண்டு மியூச்சுவல் பண்ட் ஆர்டர்கள் எக்ஸ்சேஞ்ச் போய் சேரவில்லை. ஒருநாள் கழித்தே அனுப்ப முடிந்தது. ஆனாலும், அந்த கஸ்டமருக்கு மகிழ்ச்சி. அடுத்த நாள், மார்க்கெட் ஏறியிருந்தது. லாபம் என்பதால், கம்ப்ளையிண்ட் எதுவும் இல்லை. நாங்கள் தப்பித்தோம்.

 
.

Wednesday, October 24, 2012

தூத்துக்குடி மாவட்டம் - 25

தூத்துக்குடி மாவட்டம் பிறந்து 25 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி, ஊருக்குள் பல விழாக்கள் நடந்திருப்பதாக தெரிகிறது.

அனுராதா ஸ்ரீராமின் கச்சேரி, விவேக் உள்ளிட்ட திரையுலக கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி, ஆங்காங்கே நடைபெற்ற விளையாட்டு போட்டிகள், உணவு திருவிழா என நான் வாசித்த கடந்த வார செய்திகளில், தூத்துக்குடி வெள்ளி விழா கொண்டாட்டங்கள் அடிபட்டுக்கொண்டே இருந்தது.

இந்த கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஒரு அனிமேஷன் பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள். பாடலை பார்க்கும் போது, எந்த கட்-பேஸ்ட் வேலையும் இல்லாமல், மெனக்கெட்டு உழைத்திருப்பது தெரிகிறது.

கொஞ்சம் பக்கத்து மாவட்ட ஊர் பெருமையையும் சேர்த்திருக்கிறார்கள்!!!

இருந்தாலும், ஊர் பெருமையை ஒரே பாட்டில், அனைவருக்கும் சுலபமாக புரியும்வகையில், குறிப்பாக குழந்தைகளுக்கு, உருவாக்கியிருப்பதற்கு பாராட்டுக்கள்.



இப்பாடலை உருவாக்கிய அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!

Saturday, October 20, 2012

பெவர்லி ஹில்ஸ் நகர்வலம்

இந்த பதிவின் தொடர்ச்சி.

அடுத்தது நாங்கள் சென்றது சான்டா மோனிகா பீச். இங்கு இருக்கும் பல பீச்களில் ஒன்றையாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்றது.

கடற்கரைக்கு போவதற்கு முன் இன்னொரு வேலை இருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸில் பல இடங்களை சுற்றி காட்டும்விதமாக, டபுள் டக்கர் பஸ்கள் கொண்டு டூர் நடத்தும் சர்வீஸ்கள் இருக்கின்றன.

அப்படி ஒரு டபுள் டக்கர் பஸ்ஸில் எங்காவது கொஞ்சம் போக வேண்டும் என்று ஒரு ஆசை. சான்டா மோனிகா பீச்சிற்கு எதிர்புறம் இருந்து கிளம்பும் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம்.

பெவர்லி ஹில்ஸ் எனப்படும் கலிபோர்னியாவின் பணக்கார நகர் வரை சென்று வரும் பஸ் அது.

லாஸ் ஏஞ்சல்ஸில் பனை மரங்களை அதிகம் பார்க்கலாம். இதுவரை கிராமப்புறங்களிலேயே, பனை மரங்களைப் பார்த்து வந்த எனக்கு, நகர பின்னணியில் இது வித்தியாசமாக தெரிந்தது. பனை மரங்கள், இங்கு ஒருவித ராயல் லுக்கை கொடுத்தது.

 
 
பஸ்ஸில் பதிவு செய்யப்பட்ட ஆடியோவை போட்டுக்கொண்டு வந்தார்கள். நாங்கள் கடந்து செல்லும் பாதையில் இருக்கும் முக்கிய இடங்களைப் பற்றியது அந்த ஆடியோ.
 

போகும் வழியில் பெவர்லி ஹில்டன் என்ற இந்த ஹோட்டலைக் கடந்து சென்றோம். இங்கு தான் வருடா வருடம், கோல்டன் க்ளோப் அவார்ட் கொடுத்துவருகிறார்கள்.


ஊரில் ஆங்காங்கே வைத்திருந்த நீருற்றுகள் அழகாக இருந்தன.


வெயில் கொஞ்சம் அதிகம் தான். உயர்ந்த கட்டிடங்களின் நிழலால், வெயிலில் இருந்து சிறிது தப்பிக்க முடிந்தது.



நடுநடுவே, ரோட்டின் மத்தியில் வைத்திருந்த மரங்களும் நிழலை கொடுத்தது.



பெவர்லி ஹில்ஸில் இருக்கும் ரோடியோ ட்ரைவ் எனப்படும் தெரு, இங்கிருக்கும் லார்டு லபக்குதாஸ்களின் ஷாப்பிங் ஏரியா. ஹாலிவுட்டின் பெரும்பாலான நட்சத்திரங்கள் தங்கியிருப்பது, பெவர்லி ஹில்ஸில் தான் என்பதால், அவர்கள் ஷாப்பிங் செய்ய இங்கே தான் வருவார்களாம்.

நட்சத்திரங்களைக் காண ஆசைப்படும் மக்களும், அப்படியே இங்கே வருவார்களாம்.


இங்கே இருக்கும் கடைகள் அனைத்தும் பெரிய பெரிய ப்ராண்டுகளுடையது. உலகில் இருக்கும் பெரிய பெரிய பேஷன் ப்ராண்டுகள் அனைத்தும் இங்கே கிடைக்குமாம்.


நட்சத்திரங்கள் மேலான மோகம், நம்மூருக்குடையது மட்டுமல்ல. உலகம் முழுவதும் நடிகர்கள் மேல் வெறிக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். நடிகர்களின் வீடுகளை மட்டுமே சுற்றி காட்டும் டூர்கள் பற்றி கேள்விப்பட்ட போது, நம்மூர் பரவாயில்லை என்று தோன்றியது.


பஸ்ஸில் ஓடிக்கொண்டிருந்த ஆடியோவிலும், அவ்வப்போது ‘இந்த நடிகை, அவருடைய நாலாவது கணவருடன் இந்த வீட்டில் தங்கியிருந்தார். அந்த நடிகர், அவருடைய மூன்றாவது மனைவியுடன் இந்த வீட்டில் தங்கியிருந்தார்.’ என்ற ரீதியில் சில வீடுகளைக் கடக்கும் போது சொல்லிக்கொண்டு வந்தார்கள்.

நம்மூர் பரவாயில்லை தானே?


எங்காவது இறங்கி, ஒரு வாக் சென்றுவிட்டு, திரும்ப இந்த பஸ்ஸில் ஏறி, பீச் வரலாம் என்று தான் ப்ளான் இருந்தாலும், நேரமாகிக்கொண்டே இருந்ததால், பெவர்லி ஹில்ஸில் உடனே அடுத்த பஸ்ஸில் ஏறி திரும்பிவிட்டோம்.


சுருக்கமாக ஊரில் இருக்கும் வெவ்வேறு பகுதிகளைப் பார்க்க நினைத்தால், அப்படியே இம்மாதிரி பஸ்ஸில் ஏறி சென்றால், ஒரு கழுகு இல்லையில்லை, காக்கா பார்வையில் ஊரின் பல பகுதிகளைக் காணலாம்.

.
 

Wednesday, October 17, 2012

இங்கிலிஷ் விங்கிலிஷ்

இதுவும் பட விமர்சனமல்ல. படம் பார்த்த அனுபவமுமல்ல. எனக்கு இங்கிலிஷுடனான தொடர்பு பற்றிய பதிவு. படத்தை பற்றி முடிவில் கொஞ்சம்.

நான் படித்தது முழுக்க மெட்ரிக்குலேஷன் என்றாலும், பள்ளியை விட்டு வெளியே வரும் வரை, ஆங்கிலத்தில் உரையாடியதே கிடையாது. மூன்றாம் வகுப்பில் தான், ஏபிசிடியை முழுதாக மனப்பாடம் செய்தேன். எங்கள் பள்ளியிலும் ஆங்கில கண்டிப்பாக பேச வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் கிடையாது. அதுவே எங்கள் ஊரில் இருக்கும் ஹோலி க்ராஸ் என்னும் பெண்கள் பள்ளியில் நேரெதிர் சட்டத்திட்டங்கள். ரோட்டில் போகும் போது கூட, ஆங்கிலத்தில் பேச வேண்டும். இதனாலேயே, அப்பள்ளியில் படிக்கும் பெண்கள், ஹோலி ஏஞ்சல்ஸ் போல் போய் வந்துக்கொண்டிருந்தார்கள்.

இப்படி ஆங்கிலம் பேசாமல் வளர்ந்த வளர்ப்பு, ஆங்கிலம் என்றாலே கசக்க வைத்தது. இன்ஜினியரிங் முதலாம் ஆண்டில் ஆங்கிலம் ஒரு வகுப்பு இருக்கும். முதல் வகுப்பிலேயே, எங்களுக்கு வந்த ப்ரபசர், ஒரு திட்டம் சொன்னார். அதாவது, ஒவ்வொரு மாணவரும் ஒருநாள் ஒரு தலைப்பில் பேச வேண்டும். முக்கியமாக, ஆங்கிலத்தில் பேச வேண்டும். சீட்டு குலுக்கி போட்டு, ஒரு நம்பர் எடுக்க, முதல் நம்பரே என் ரோல் நம்பர். தலைப்பிற்கு இன்னொரு சீட்டு குலுக்கல். வந்த தலைப்பு - டிஸ்சிப்ளின்.

என்ன பேசினேன் என்று தெரியாது. தத்தக்காபித்தக்காவென்று ஏதோ உளறிக்கொட்டினேன். தயாராக நேரம் கொடுக்காததால், உளறினேன் என்று மற்றவர்கள் நினைத்திருப்பார்கள். எவ்வளவு நேரம் கொடுத்தாலும், அப்படி தான் உளறியிருப்பேன் என்பது எனக்கு தான் தெரியும்.

முதல் நாளே, எனது முறை முடிந்ததால், அதற்கு பிறகு மற்றவர்கள் படும் பாட்டை ஜாலியாக  பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த தொல்லைக்காகவே, பேப்பர் ப்ரசண்டேஷன் எதற்கும் சென்றது இல்லை. இறுதியாண்டு ப்ராஜக்ட் ப்ரசண்டேஷனில் எங்கள் அணிக்குள் யார் என்ன பேச வேண்டும் என்று பேசி வைத்து, பிறகு அதை பேசி சமாளித்தேன்.

வேலை தேடும் காலத்தில் தான், ஆங்கிலத்தின் அருமை புரிந்தது. நான் போன  முதல் வேலைக்கான தேர்வில் இருந்தே, எழுத்து முறையிலான முதல் கட்ட தேர்வில் தேர்ச்சியடைய தொடங்கினேன். நேர்முக தேர்விலும் தொழில்நுட்ப கேள்விகளுக்கு சரியாக பதிலளித்துக்கொண்டிருந்தேன். இதிலும் கடைசிக்கட்ட நேர்காணலிலும் பிற கேள்விகளுக்கு பதிலளிப்பதில் தான், தத்தக்கா பித்தக்கா ஆங்கிலத்தினால் சொதப்பிக்கொண்டிருந்தேன். ஒரே ஒருமுறை மட்டும், ஒரு நிறுவனத்தில் குரூப் டிஸ்கஷனில் கலந்துக்கொண்டு, ‘யாரடி நீ மோகினி’ தனுஷ் போல் ‘ஆ... ஊ...’ என்று நான் ஏதாவது சொல்ல தொடங்க, மற்றவர்கள் அதை கண்டுக்கொள்ளாமல் சண்டைப்போட்டு கொண்டு இருந்தார்கள். எனக்கு இப்படி அடித்துக்கொள்வது பிடிக்காததால் விட்டுவிட்டேன்!!!

அதன் பிறகு, ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதை கற்க தொடங்கினேன். பள்ளியில் படித்த போது வாங்கிய ரென் & மார்ட்டின் என்னும் புத்தகம், அப்படியே புதிதாக இருக்க, அதில் அடிப்படைகளை (இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்) வாசித்து ரிப்ரெஷ் செய்தேன். ஆங்கில பத்திரிக்கைகளை எப்போதுமே ஒரு பார்வை பார்ப்பேன் என்றாலும், அப்போது கூர்ந்து வாசிக்க தொடங்கினேன். ’டைம்ஸ் ஆப் இந்தியா’ என்னும் குஜால் பத்திரிக்கையை படித்தால் நல்ல ஆங்கிலம் தெரிந்துக்கொள்ள முடியாது. ஹிந்து ஓகே என்று பலர் சொன்னார்கள் அப்போது.

நான் தான் இப்படி. என் தந்தை ஆங்கிலத்தில் பொளந்துக்கட்டுவார். இந்த காலத்திலும் கடிதங்கள் மேல் பெரும் நம்பிக்கை கொண்டவர். அவர் ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்கள், அவ்வளவு ப்ரொபஷனலாக இருக்கும். எதற்கெடுத்தாலும், ஒரு லெட்டர் எழுதிவிடுவார். ஹிந்துக்கு வாசகர் கடிதம் போடும் ஆள். பேங்கில் போய் பணம் கட்டினால், அதனுடனேயே ஒரு கடிதம் எழுதி, அதில் மேனேஜர் கையெழுத்தை வாங்கி வைத்துக்கொள்வார். ஏதாவது ஒரு அதிகாரி இதை இப்படி செய்தால் இப்படி ஆகும், அப்படி செய்தால் அப்படி ஆகும் என்று கூறினால், ஒரு உத்தரவாதத்திற்கு, அதையே கடிதமாக எழுதி, அவரை கையெழுத்து போட சொல்வார். அப்படி அவர் எழுதும் கடிதங்களை சுமாராக ஆங்கிலம் தெரிந்தவர்கள், ஒரு டிக்‌ஷனரியுடன் படித்தால் தான் புரியாத சில வார்த்தைகளை புரிந்துக்கொள்ளலாம். அப்படிப்பட்டவருக்கு மகனாக பிறந்தும், நான் ‘பீட்டராக’ இல்லாமல், தமிழ் குமரனாகவே இருந்தேன். (அதற்காக தமிழிலும் புலமை பெற்றவன் என்று சொல்லமுடியாது. ஒற்றுப்பிழைகளைக் கவனிங்கள்!!!)

பிறகு, என்டிடிவி ஆங்கில செய்திகளைத் தினமும் பார்ப்பேன். ப்ரணாய் ராய் வாசிப்பது பிடிக்கும். ரொம்ப கேஷுவலாக சிம்பிள் ஆங்கிலமாக தான் இருக்கும். ஆங்கிலத்தில், நண்பர்களுக்குள் டம்மி இண்டர்வியூக்கள் நடத்திப்பார்த்தோம். இருந்தாலும், ஆங்கிலத்தின் மேலான தயக்கம் அப்படியே இருந்தது. எனது அண்ணனின் நண்பர் ஒருவர், ஆங்கிலம் - ஒரு தொடர்புக்கான மொழிதான் - என்று ஒருநாள் கொடுத்த ஊக்கமிக்க பேச்சு, கொஞ்சம் வேலை செய்தது. தப்பாக பேசினாலும், அதை தைரியமாக பேச தொடங்கினேன். வேலையும் சீக்கிரமே கிடைத்தது.

வேலைக்கு போன பிறகு, ஆங்கிலத்தில் பேச வேண்டுமே? முதலில் டீமுடன் அவ்வப்போது ஏதாவது பேச வேண்டுமே? அன்றன்றைக்கு செய்திகளில் வரும் சுவாரஸ்ய செய்தியை வாசித்துவிட்டு போய் புகைய விடுவேன். சமயங்களில் அது பத்திக்கொண்டு எறியும்.

ஆரம்பத்தில் வெளிநாடு போக பெரிதும் ஆர்வமில்லாததற்கு, ஆங்கிலமும் ஒரு காரணமாக இருந்தது. பிறகு வந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளால், வெளிநாடு வந்தாலும், ஆங்கிலம் அப்படியே தான் இருக்கிறது. சரளமாக அரை மணி நேரம் எல்லாம் பேச முடியாது. நடுநடுவில், சில வார்த்தைகள் சரியாக வராமல், மாற்று வார்த்தைகளைப் போட்டு சமாளிப்பேன்.

என்னை பொறுத்தவரை, ஆங்கிலம் ஒரு தொடர்புக்கான மொழி என்பதால், அதை ஸ்டைலாக பேச முயலுவதே இல்லை. ஜஸ்ட் பேசிக் இங்கிலிஷ் தான். சரியாக கம்யூனிகேட் செய்ய வேண்டும் என்பதற்காக, எதையுமே முதலில் டாகுமெண்ட், ஈமெயில் என்று எழுத்தில் கொண்டு வருவேன். ஒரு கோர்வை இருக்க வேண்டும் என்பதற்காக, சரியான தகவல்களுடன் ஆரம்பிக்க, எங்கிருந்தோ ஆரம்பித்து மெனக்கெடுவேன். சொல்ல வந்ததில் பெரும் பகுதியை சுலபமாக சொல்லிவிடலாம் என்பதால், பல படங்களைப் போட்டு தள்ளுவேன்.

இதற்கு மேலே ஒரு சமாச்சாரம் இருக்கிறது. ஒன்றை எழுதும்போது, யார் என்ன நினைப்பார்கள், அவர்களுக்கு என்ன கேள்வி எழும் என்று நினைக்க தோன்றும். அதற்கெல்லாம் பதிலை ஆங்காங்கே எழுதிவிட்டு போவேன். இதற்கு பெரிதும் உதவியது, இந்த ப்ளாக் தான்.சாதாரணமாக இங்கே எதையும் எழுதிவிட்டு போய் விட முடியாது. எதை எழுதினாலும் கவனமாக எழுத வேண்டும். அதற்கு பயிற்சியளித்தது, இணையத்தில் எழுதியது தான்.

இதற்காகவே, என்னைப்பொறுத்தவரை என் ஆங்கிலம் நொண்டியடிப்பதாக எனக்கு தோன்றினாலும், ஆங்கிலம் மட்டுமே தெரிந்த க்ளையண்டுகள் உள்பட, பலர் எனக்கு நல்ல கம்யூனிகேஷன் என்று பாராட்டவும் செய்திருக்கிறார்கள். அப்படியே பொழப்ப ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்.

சிலர் நவீனமாக பேசுகிறேன் என்று வாயை ‘நாணி கோணி’ பேசும்போது, போலியாக தோன்றும். அது அவரவர் ஸ்டைல் என்று நினைத்துக்கொண்டு, ஒன்றும் சொல்லாமல் விட்டுவிடுவேன்.

பேசும் விஷயத்தில் ஸ்ட்ராங்காக இருந்தோமானால், ஆங்கிலம் ஒன்றுமே இல்லை என்பது தான் இதுவரை நான் கற்றுக்கொண்டது.

...

இனி லைட்டா படம் பார்த்த கதை.



இங்கு சண்டே மலிவு விலை டிக்கெட் என்பதாலும், படம் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டியது என்று பலர் கூற கேட்டதாலும், போன வாரம் சண்டே ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ சென்றேன்.

படத்தைப் பற்றி கூற வேண்டுமானால், எல்லோரும் கூறியது தான். பீல் குட் பிலிம். விதவிதமான சுவாரஸ்யமான குணாதிசயங்கள் கொண்டவர்கள் உள்ள க்ளாஸ் என்பதால், நல்ல டைம் பாஸ். செண்டிமெண்ட், குடும்பத்திற்கான நீதி போதனை போன்றவை இருப்பதால், நல்ல படம் பார்த்த உணர்வும் கிடைக்கிறது. குடும்பத்தில் லவ்வும், ரெஸ்பெக்ட்டும் முக்கியம் என்று கதையின் நாயகி ஸ்ரீதேவி முடிவில் கூறுகிறார். இதற்கு அடிப்படையான ’அண்டர்ஸ்டாண்டிங்’கும் முக்கியம் என்பதையும் இயக்குனர் சொல்லியிருக்கலாம். (இது ஒரு புது வியாதி. டைரக்டர் ஒரு மாதிரி எடுத்தால், அதை அப்படி எடுத்திருக்கலாம். நான் வேறு மாதிரி எடுப்பேன் என்று சொல்வது!!!)

ஏன் இந்த படத்தை பற்றி யாரும் இன்னமும், ஆணாதிக்கம், பெண்ணடிமை, அமெரிக்க கோர முகம், இந்திய அடிமைத்தனம் என்றெல்லாம் எழுதவில்லை என்று தெரியவில்லை. யாராவது எழுதியிருந்தால் சொல்லவும். படிக்க ஆர்வமுடன் இருக்கிறேன்!!!

 இந்தி பதிப்பில் ஸ்ரீதேவி அமிதாப்புடன் ப்ளைட்டில் ஒயின் குடிக்கிறார். தமிழில் இல்லை. அஜித் வாழ்க!

இந்த படத்தில் நடித்த பல பேரை எங்கேயோ பார்த்த ஞாபகம். எந்தெந்த படங்களில் என்று தான் தெரியவில்லை.

சப் டைட்டில் இல்லாவிட்டாலே, இந்த படம் புரியும் என்றாலும், சப் டைட்டிலுடன் திரையிட்டதால், வரி தவறாமல் படத்தை புரிந்துக்கொள்ள முடிந்தது. இதே நிலை தொடருமானால், ஹிந்தி படங்களின் விமர்சனங்களை இந்த தளத்தில் நீங்கள் காணும் அபாயம் நேரலாம்.

.

Sunday, October 14, 2012

மாற்றான்

இது விமர்சனம் அல்ல. நான் படம் பார்த்த அனுபவத்தையே, எப்போதும் போல் சொல்ல போகிறேன்.

பொதுவாக, இங்கு வெளியாகும் படங்களை ஒரு வெப்சைட்டைப் பார்த்து தெரிந்துக்கொள்வேன். பில்லா-2 வுக்கு பிறகு, அந்த சைட்டில் ஒரு அப்டேட்டும் இல்லை. நானும் எதுவும் தமிழ் படம் வருவதில்லை என்று நினைத்து விட்டுவிடுவேன். இண்டர்நெட்டில் யூ-ட்யூபில் டிவிடி ப்ரிண்ட் வரும்வரை வெயிட் பண்ணி பார்ப்பேன்.

சென்ற வாரம், எதெச்சையாக கூகிள் மூவிஸ் சைட்டில் உலாவிக்கொண்டிருந்தபோது தான், டென்வரில் ‘தாண்டவம்’ படம் ஓடிக்கொண்டிருந்ததே தெரியவந்தது. அதுவும் அலுவலகத்தில் இருந்து ஆபிஸ் போகும் வழியிலேயே, அந்த தியேட்டர் இருந்தது. பாருங்க, போஸ்டர் கலாச்சாரம் இல்லாவிட்டால், என்னவெல்லாம் பிரச்சினை ஏற்படுகிறது என்று?

யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ் எனப்படும் குரூப்பின் திரையரங்கு அது. தாண்டவத்துடன் இங்கிலிஷ் விங்கிலிஷ், பர்பி என பார்க்க நினைத்த ஹிந்திப்படங்களும் ஓடிக்கொண்டு இருந்தது.

எப்படியும் மாற்றான் இந்த திரையரங்கில் வரும் என்ற நம்பிக்கையில் அவ்வப்போது இந்த வாரம் இந்த திரையரங்கின் தளத்திற்கு சென்று பார்த்துவந்தேன். நான் இதுவரை பார்த்துவந்த மற்ற திரையரங்கில் வியாழக்கிழமை மாலை முதல் காட்சியாக தமிழ் படங்களை வெளியிடுவார்கள். அதாவது, நம்மூர் நேரத்திற்கு வெள்ளி அதிகாலை ஆறு மணியளவில்.  படத்தின் ரிசல்ட் தெரியாததால், ப்ரெஷ்ஷாக சென்று ஒரு நல்ல அனுபவமோ, அல்லது ஒரு நல்ல பல்ப்போ பெற்று வருவேன்.

ஆனால், இந்த திரையரங்கில் வெள்ளி மதியத்தில் இருந்தே புதுப்படங்களின் காட்சிகள் தொடங்குகிறது. நம்மால் மாலை அல்லது இரவே செல்ல முடியும். இணையத்தை நெருங்கினோம் என்றால் ரிசல்ட் தெரிந்துவிடுகிறது. அப்படியே இல்லையென்றால், நெட்டில் ரிவ்யூ படித்துவிட்டு, படம் நல்லாயில்லையாமே என்று துக்கம் விசாரிக்க நண்பர்கள் நேரில் வந்துவிடுகிறார்கள்.

என்னதான் ரிசல்ட் தெரிவது, காசை மிச்சப்படுத்தும் விதத்தில் நல்லது என்றாலும், வெள்ளிக்கிழமை, புதுப்படம், ஹைப், ஆசை, ஆர்வ குறுகுறுப்பு என்று எனக்கென்று இருந்த ஒருவித உணர்வை போட்டுத்தாக்குகிறது. தாண்டவம் பலர் மொக்கை என்றாலும் சிலர் ரசித்ததாக தெரிகிறது. கண்டிப்பாக அது பார்க்கவே முடியாத படமாக இருக்காது என்று நினைக்கிறேன். ஆனாலும், சிலர் மொக்கை என்று சொல்லிவிட்டபிறகு, அந்த முன்முடிவுடன் பணம் செலவளிக்க தோன்றுவதில்லை.

தமிழ் படம் திரையரங்கில் பார்த்து நாளாகிவிட்டதால், அதற்காகவே, இந்த படம் எப்படி இருந்தாலும், திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். வெள்ளி மாலையில் இருந்து காட்சிகள். 8 மணி காட்சிக்கு செல்வதாக முடிவு.

இன்னொரு விநோத விஷயமும் தெரியவந்தது. நம்மூரில் ஞாயிற்றுக்கிழமைதான் திரையரங்கில் டிக்கெட் விலை அதிகம் வைத்து விற்பார்கள். இங்கு இந்த திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் ரேட் கம்மி. அஞ்சு டாலர்கள். மற்ற நாட்களில், பத்து டாலர்கள். Fandango தளம் மூலம் டிக்கெட் எடுக்கும் போதும், இன்னும் மிச்சம் பிடிக்கும் வழிமுறைகள் தெரிய வந்தது.

எப்படி இருந்தாலும், இந்த காசு மிச்சம் பிடிப்பதில்லை, வெள்ளிக்கிழமையே செல்வது என்று சென்று வந்தாயிற்று.

...

இம்முறையும் படம் சுமார் என்ற முடிவு, படம் பார்க்கும் முன்பே தெரியவந்துவிட்டது. அதனால் பெரிய எதிர்பார்ப்பு இல்லை.

டிக்கெட்டை காட்டிவிட்டு, திரையரங்கை நோக்கி செல்லும் போது, ஒரு பெண் குரல். ”லாஸ்ட் ஷோ இன்னும் முடியலை.”

திரும்பி பார்த்தால், ஒல்லியாக, வளத்தியாக, சுருள் முடியை விரித்துவிட்டவாறு, குளிர்காலத்திற்குரிய மாடர்ன் ட்ரெஸ் அணிந்துக்கொண்டு ஒரு பெண். அட, தமிழ் பெண்.

பார்த்தால், இந்திய பெண் என்று சொல்வதே கடினம். தமிழ் என்று யூகிக்கவே முடியாது. ஆச்சரியத்தோடு, புன்னகையுடன் நன்றி சொல்லிவிட்டு, அங்கேயே நின்றுக்கொண்டோம்.

சிறிது நேரத்தில், எனக்கு பொறுமையில்லாமல், மனைவியை குழந்தையுடன் அங்கேயே இருக்க சொல்லிவிட்டு, நான் மட்டும் அந்த அரங்கை பார்க்க சென்றேன். 12 அரங்குகள் பக்கம் பக்கம் இருந்தாலும், ஒரு சத்தமும் வெளியில் கேட்கவில்லை. அரங்குகளின் ஒலியமைப்புகள் ஒரு காரணமென்றாலும், இங்கு சத்தம் அதிகம் வைப்பதில்லை என்பது இன்னொரு காரணம். இது எனக்கு முன்பு பெரும் குறையாக இருந்தது. இப்போது, நிம்மதியாக இருக்கிறது. பாப்பா, டிவி பார்ப்பது போல் அசராமல் படம் பார்க்கிறாள். தூக்கம் வந்தால், அழாமல் அவளது ஸ்ட்ராலரில் தூங்கிவிடுகிறாள். இடைவேளையின் போது தான், சத்தம் இல்லாமல், என்னவோ குறைகிறதே என்பது போல் எழுந்துவிடுகிறாள்!!!

அரங்குகளின் வாசலில் யாரும் இருந்து காவல் காப்பதில்லை. உள்ளே சென்று பார்த்தால், சூர்யா சோகமாக யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். கிளைமாக்ஸாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அரங்கில் மொத்தமே, 8 வரிசைதான். நாலு பேர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஐயோ, பாவம் என்று வெளியே வந்துவிட்டேன்.

அப்புறம், அந்த நாலு பேரும் படம் முடிந்து வெளியே வரும்போது, எங்களை ஐயோ, பாவம் என்பதுபோல் பார்த்துவிட்டு சென்றார்கள்!!!

விளம்பரங்கள் மற்றும் கரண் ஜோகர் படம், ராம் கோபால் வர்மா படம் என்று யூரோஸ் வெளியிடும் படங்களின் ட்ரெய்லர்களை 20 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக போட்டுவிட்டு, பின்பு படத்தை போட்டார்கள்.

...

படத்தை பற்றி சுருக்கமாக.



கே.வி.ஆனந்தின் படங்களை பார்க்கும் போது, ஒரு நாவல் படிக்கும்போது வரும் உணர்வு வரும். சுபாவின் பங்களிப்பினால் இருக்கும். இதிலும் இருக்கிறது.

முதல் பாதி நன்றாக செல்கிறது. காமெடி நடிகர்கள் இல்லையென்றாலும், அவ்வப்போது அகிலன் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் சிரிக்க வைக்கிறது. ”குண்டு குண்டா புக்க படிச்சிட்டு, அவ மேல ஏண்டா வாந்தி பண்றே?”

ஆனால், கடைசி ஒரு மணி நேரம், ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல், குழப்பமாக செல்கிறது. சின்ன சின்ன விஷயங்களில் லாஜிக் பார்த்தவர்கள், பெரிய பெரிய விஷயங்களை கற்பனை செய்து, அது நமக்கு ஒட்டாமல் போய்விடுகிறது.

பாரதி ஓவியம், அந்த ரஷ்ய நாடு, அந்த நாட்டு அணி ஒலிம்பிக்ஸில் கலந்துக்கொண்டு வெற்றி பெறுவது போன்ற விஷயங்களை தைரியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

சூர்யாக்களின் அப்பாவாக வரும் வட இந்திய நடிகருக்கு நல்ல வாய்ப்பு.

டபுள் ஆக்டிங் படங்களைப் பார்க்கும் போது, இது எப்படி எடுத்திருப்பார்கள் என்று யோசித்தவாறே சிறுவயதில் இருந்தே படம் பார்ப்பது வழக்கம். இதில் அடுத்தக்கட்டம் சென்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இதில் விமலனின் தலை மட்டும் சூர்யாவுடையது என்பது என் யூகம். சில காட்சிகளில், அந்த தலை மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறது. இருந்தாலும், பல்லிளிக்கிறது என்று இந்த முயற்சியை சொல்ல முடியாது.

சூர்யாவின் அப்பா, ஒரு காட்சியில் அம்பு, அதை விட்டவன், அது இது என்று ஒரு டயலாக் விடுவார். அது வரை, படம் நல்லா போகிறது. அதற்கு பிறகு வரும் காட்சிகளால், மொத்தப்படமும் பாதிக்கப்படுகிறது.

எந்தவொரு படத்திற்கும் கிளைமாக்ஸ் ரொம்ப முக்கியம். கிளைமாக்ஸ் வரை ரசிகனை ஆர்வத்துடன் உட்கார வைப்பதே, படத்தை ரசிக்க செய்யும். இல்லாவிட்டால், அதுவே மொத்தப்படத்தையும்  சுமார், மொக்கை, கொடுமை என்று சொல்லவைத்துவிடும்.

மாற்றானுக்கு அதுதான் நேர்ந்திருக்கிறது.

.

Sunday, October 7, 2012

வால்ட் டிஸ்னி இசையரங்கம்

பாதியில் நிற்கும் இந்த பதிவின் தொடர்ச்சி.

லாஸ் ஏஞ்சல்ஸ் பயணப்பதிவு தொடரை தொடர்ந்து வாசித்து வந்தவர்கள் மன்னிக்கவும்.

தொடர்ச்சியாக வேறு சில பயணங்கள் இருந்ததால், ஒரு பெரிய இடைவெளி.

டென்வரில் பனிக்காலம் தொடங்கிவிட்டது. இனி வெளியே செல்வது, மிகவும் சொற்பமாக தான் இருக்கும். அதனாலேயே, அனைத்து பயணங்களையும் எல்லோரும் பனிக்காலம் வருவதற்கு முன்பே முடித்துவிடுவார்கள். நாங்களும் அப்படியே.

சரி. லாஸ் ஏஞ்சல்ஸ் பயணத்தை தொடரலாம்.

---

மெஷின்கள், கணினிகள் மனிதனை எப்படி சோம்பேறியாக்குகிறது, முட்டாளாக்குகிறது என்பது அவை இல்லாவிட்டால் நமக்கு தெரிகிறது. கால்குலேட்டர் பக்கம் இல்லாவிட்டால், சின்ன கணக்கு போடக்கூட எப்படி சிரமப்படுகிறோம்?

அமெரிக்க வணிக கடைகளில் ஒரு விஷயத்தை நான் அடிக்கடி கவனிப்பேன். உதாரணத்திற்கு, ஒரு கடையில் 9 டாலர் 12 செண்ட்களுக்கு ஏதேனும் வாங்குகிறேன் என்றால், நான் பத்து டாலர் கொடுப்பேன். உடனே, கல்லாவில் இருப்பவர், கணினியில் வரவு பத்து என்று அடிக்க, அது மிச்சம் 88 செண்ட்கள் என்று காட்டும். நான் நம்மூரில் கொடுப்பது போல, சில சமயங்களில் பத்து டாலரும், 12 செண்ட்களும் கொடுப்பேன். ரவுண்டாக மீதி 1 டாலரை எதிர்பார்த்து. இப்படி நான் கொடுத்தால், அவ்வளவுதான். கடைக்காரரின் ரியாக்‌ஷனை பார்க்க வேண்டுமே? ஏன், இவன் இப்படி கொடுத்தான்? எதற்கு? என்று புரியாமல், அதை கணினியில் உள்ளீட்டு, பிறகே மீதி 1 டாலர் கொடுக்க வேண்டும் என்ற கணக்கு புரிந்து தருவார்கள். அந்தளவு கணினியை சார்ந்து இருக்கிறார்கள்.

எதற்கு இதை சொல்கிறேன் என்றால், நானும் ஜிபிஎஸ்ஸை எந்தளவு சார்ந்து இருக்கிறேன் என்பதை யுனிவர்சல் ஸ்டூடியோஸில் இருந்து திரும்பும் போது புரிந்துக்கொண்டேன்.

திடீரென்று ஜிபிஎஸ் செயலிழக்க, என்னால் கொஞ்சம் தூரம் கூட காரை செலுத்த முடியவில்லை. உடனே, வண்டியை ஓரங்கட்ட... எமர்ஜென்சி சமயம் மட்டுமே ரோட்டின் ஓரம் இங்கே வண்டியை நிறுத்தலாம்... என்பதால், அதற்கு அடுத்து வந்து எக்ஸிட் எடுத்து, ஒரு கடையோரம் நிறுத்தி, ஜிபிஎஸ்ஸை சரி செய்தேன். ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. எதற்கோ ஹேங்காகிவிட்டது. ஜஸ்ட், ரீ-ஸ்டார்ட் பிரச்சினை.

சைனா டவுண் செல்ல நேரமாகிவிட்டது. அங்கு தெருவே வெறிச்சோடி இருக்க, அங்கிருந்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பினோம். இரவு உணவுக்கு, பிஸ்ஸா ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு உறங்கினோம்.

---

மறுநாள் காலை, நாங்கள் சென்ற இடம் - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப்பகுதிக்கு. அங்கு இருக்கும் டிஸ்னி கன்சர்ட் ஹாலை, புகைப்படங்களில் பார்த்து அசந்துபோயிருக்கிறேன். அதனால், அதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அங்கு சென்றேன்.

நகரின் மையப்பகுதியில் எது சாலை, எது கட்டிடம் என்றே தெரியாத வகையில் எல்லாம் மாறி மாறி வந்தது. பாதாளத்தில் இருக்கும் பார்க்கிங் தளங்கள் மட்டும் ஏழு.



இசைக்கச்சேரிகள் நடத்தப்படும் இந்த ஹால், வால்ட் டிஸ்னியின் மனைவி கொடுத்த நன்கொடையால் கட்ட தொடங்கப்பட்டது. ஸ்டீல் கொண்டு அமைத்தது போல் ஒரு ஸ்டைல். நாங்கள் சென்ற அன்று, உள்ளே அழைத்து சென்று காட்டப்படும் டூர் இல்லையென்பதால், உள்ளே சென்று பார்க்க முடியவில்லை.



வெளிப்புற அழகே, நிறைந்த திருப்தியை கொடுக்க, அப்படியே சாலையில் ஒரு வாக் சென்றோம். நகரின் மையப்பகுதி என்பதால், பெரிய பெரிய வானுயர்ந்த கட்டிடங்கள் நிறைந்து இருக்க, சாலையோ பெரியளவில் ட்ராபிக் நெரிசல் இல்லாமல் அமைதியாக இருந்தது.



பக்கத்தில் இருந்த பூங்காவில், ஒரு பெரிய நீரூற்று இருந்தது. பக்கத்திலேயே ஒரு காபி ஷாப். அருகே இருந்த கட்டிடங்களில் வேலைப்பார்க்கும் பணியாளர்கள், இங்கே வந்து இளைப்பாறிக்கொண்டு இருந்தார்கள்.




பள்ளிக்கூடம் இருக்கும் தினத்தில், நாம் லீவ் போட்டு விட்டு, யாராவது ஸ்கூலுக்கு போவதை பார்க்கும்போது, ஒரு உணர்வு வருமே? அதேப்போன்ற ஒரு உணர்வு, அங்கிருந்தவர்களைப் பார்க்கும்போது எனக்கு தோன்றியது.







அந்த சாலையில் இருந்த ஒரு ஆபிரகாம் லிங்கன் சிலைக்கு பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்து ஏதோ எழுதிக்கொண்டு இருந்தார். அந்த சிலையை படமெடுக்க நான் செல்ல, என்னை கண்ட அவர் அந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டார். பிறகு, நான் அங்கிருந்து நகர, அந்த சிலையை சில நிமிடங்கள் கூர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் ஏதோ எழுத தொடங்கினார். லிங்கனுடன் ஏதோ தொடர்புக்கொண்டது போல் இருந்தார்.



சிறிது நேரம், அங்கிருந்துவிட்டு, பிறகு சண்டா மோனிகா கடற்கரைக்கு கிளம்பினோம்.

.

Friday, October 5, 2012

இதய கோவில்

மணிரத்னத்தின் படங்களை பட்டியலிட்டால், பலரால் விடுபடும் படம் இதய கோவிலாகத்தான் இருக்கும்.


1985இல் ஒரு சாதாரண இயக்குனராக மணிரத்னத்தின் இயக்கத்தில் கோவைத்தம்பியின் தயாரிப்பில் வெளிவந்த படம் - இதய கோவில். இதயம் ஒரு கோவில் என்ற டைட்டில் போடுவது - எம்ஜியாருக்கு.

இப்ப மாதிரி யாரை கூப்பிட்டாலும் வந்துவிடும் மவுசு, அன்று இல்லாததால், எண்பதுகளின் ரெகுலர் நடிகர்களை மணிரத்னம் வைத்து எடுத்த படம். ஆக்சுவல்லி, மணிரத்னத்தை வைத்து கோவைத்தம்பி எடுத்த படம் என்று சொல்ல வேண்டும்.

கதை ரொம்ப சாதாரணக்கதை. சுமாரான மேக்கிங். பாடல்கள் மட்டும் தாறுமாறு.

கல்லூரியில் படிக்கும் ராதா, ஒரு தேர்தல் போட்டிக்காக பாட்டு நிகழ்ச்சி நடத்த, பாடகரான மோகனை அழைக்க, அவர் வீட்டிற்கு செல்கிறார். மோகனோ, ஒரு மொடாக்குடிக்காரர். மோகனுடன் சண்டையில் ஆரம்பிக்கும் பழக்கம், அவருடைய ப்ளாஷ்பேக் பற்றி தெரிந்துக்கொள்ள உதவுகிறது. ப்ளாஷ்பேக்கில் கிராமத்து பாடகரான மோகனும், அம்பிகாவும் காதலிக்கிறார்கள். சென்னைக்கு சினிமா சான்ஸ் தேடி மோகன் வர, வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணத்தை மறுத்து அம்பிகா மோகனைத் தேடி வர, வரும் இடத்தில் ரவுடிகள் விரட்ட, அவர்களிடம் இருந்து கற்பைக் காப்பாற்ற, தூக்கில் தொங்குகிறார் அம்பிகா. இது மோகன் குடிக்காரரான சரித்திரம்.

ப்ளாஷ்பேக் கேட்டு ராதாவுக்கு மோகன் மேல் லவ் வர, ஏற்கனவே கல்லூரியில் கபில்தேவ் ராதாவை, ஒரு தலையாக காதலிக்க, யார் யாரை கைப்பிடிக்கிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க என்று சொல்ல ஆசை தான். ஆனால், இனி நீங்கள் எங்கே வெள்ளித்திரையில் காண? நானே சொல்கிறேன்.

மோகன் ராதாவிடன் ஒரு சமரசம் பேசுகிறார். நீ கபில்தேவை கட்டிக்கோ. நான் சரக்கடிப்பதை விட்டுவிடுகிறேன் என்று. டீல் பெரிதாக பிடிக்காவிட்டாலும், ராதா சம்மதித்து, தாலி கட்டும் சமயம், விஷம் குடித்து, மோகனும் பல்ப் கொடுக்கிறார். கபில்தேவுக்கு பெரிய பல்ப். பிறகென்ன? அம்பிகா சமாதிக்கு பக்கத்தில் மோகன் தனக்கென்று வாங்கிப்போட்டிருந்த இடத்தில், ராதாவுக்கு சமாதி எழுப்பி் இளையராஜாவின் ஹிட் சாங்கை பாட, வணக்கம் போடுகிறார்கள். ஏ பிலிம் பை மணிரத்னம் என்பதெல்லாம் இல்லை.

மோகன், மைக் மோகன் என்றைழைக்கப்பட, இப்படம் ஒரு முக்கிய காரணம். பாடகர் என்பதால், மைக்கும் பிறகு பாட்டிலும் கையுமாக அலைகிறார்.

மணிரத்னத்திற்கு ‘சூர்யா’ என்ற பெயரில் என்ன ஈர்ப்போ? தளபதியில் ரஜினியின் பெயர், சூர்யா. சரவணன் என்ற சிவகுமாரின் புதல்வருக்கு, மணிரத்னம் வைத்த பெயர், சூர்யா. இந்த படத்தில் ராதாவின் பெயரும் சூர்யா.

இந்த கபில்தேவ் என்ற பெயரை டைட்டிலில் பார்த்ததும், இவர் அபிலாஷாவுடன் இணைந்து ஒரு மேட்டர் படத்தில் நடித்திருக்கிறார் என்று எந்த காலத்திலோ படித்த பத்திரிக்கை துணுக்கு, ஞாபக அடுக்கில் இருந்து விழுந்தது. என் வீணா போன ஞாபக சக்தியை மெச்சுவதா, மனித மூளைக்கு இருக்கும் ஆற்றலை எண்ணி வியப்பதா என்று தெரியாமல் படத்தை குழப்பத்துடனேயே பார்த்தேன். கபில்தேவ், தற்போதைய அஜ்மல் போலவே இருக்கிறார்.

விக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் காம்பினேஷன் படங்களில் ஒரு பாடல், படம் முழுக்க பல இடங்களில் வருமே? அந்த படங்களுக்கு இது இன்ஸ்பிரேஷனாக இருக்கலாம்.

எத்தனை முறை வந்தாலும், பாடல்கள் சலிக்கவில்லை. இதயம் ஒரு கோவில், கூட்டத்திலே கோவில் புறா, யார் வீட்டில் ரோஜா, வானுயர்ந்த சோலையிலே, நான் பாடும் மௌன ராகம், பாட்டு தலைவன் பாடினால்... என்று இந்த படப்பாடல்கள் மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. என் மனதிற்கு நெருக்கமான பாடல்கள். ஏனென்று தெரியவில்லை. பால்யத்தில், பலமுறை கேட்டதால் இருக்கலாம். போலவே, உதயகீதமும்.

பாடல்கள், இசை பற்றி நிறைய சொல்லலாம். அது மகேந்திரன் ஏரியா என்பதால், அதை விடுகிறேன்.

 
இயக்கம் - மணிரத்னம் என்று போடாவிட்டால், இது மணிரத்னம் படம் என்று சொல்ல முடியாது. தெரிந்து பார்த்தால், ஆங்காங்கே சொற்பமாக தெரியும். உதாரணத்திற்கு, காலேஜ் பாடலுடன் படம் ஆரம்பிப்பதை சொல்லலாம்.

கதை - செல்வராஜ். வசனமும் திரைக்கதையும் - வல்லபன். அதனால், மணிரத்னத்தின் ட்ரெட்மார்க்கான சுருக்-நறுக் வசனங்கள், இதில் இல்லை. விக்ரமன் டைப் ’லாலா லாலா’ காதல் தத்துபித்து வசனங்கள் தான். ஒளிப்பதிவிலும் ஸ்பெஷலாக சொல்ல எதுவும் இல்லை. லொக்கேஷன்களில் சின்னதாக இயக்குனர் தெரிகிறார். படத்திற்கு சம்பந்தமில்லாத, கவுண்டமணியின் 80களின் ரெகுலர் காமெடி ட்ராக்கிற்கு, வழக்கம்போல் வீரப்பன் வசனமெழுதியிருக்கிறார்.

டைட்டில் காட்டாமல், இந்த படத்தின் இயக்குனர் யார் என்று என்னிடம் யாராவது கேட்டிருந்தால், ஆர். சுந்தரராஜன் என்று சொல்லியிருப்பேன்.

.

Thursday, October 4, 2012

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் நானும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், என்னை ஏதேனும் விதத்தில் பாதிக்கும் என்று தோன்றியதே இல்லை. இன்று என்னை பாதித்தது. பெரிதாக ஒன்றும் இல்லை. என் தினசரி அலுவலக வேலையில் ஒரு சின்ன பாதிப்பு.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் ஒரு அங்கமாக, இரு வேட்பாளர்களும் ஒரே மேடையில் விவாதம் நடத்துவார்கள் என்று நம்மூர் செய்தித்தாளில் படித்து கேள்விப்பட்டிருக்கேன். அவ்வித முதல் விவாதம் இன்று டென்வரில் நடந்தது. நடந்த இடம், நான் அலுவலகம் செல்லும் சாலையில் இருக்கும் ஒரு யூனிவர்சிட்டியில்.

ஒருவாரம் முன்பே இந்த சாலை இன்றைய தினத்தில் மாலை நேரத்தில் அடைக்கப்படும் என்று தகவல் வந்து சேர்ந்தது. அந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும் என்றில்லை. ஆனால், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் சீக்கிரமே சாயங்காலம் அலுவலத்தில் இருந்து கிளம்ப சொல்லிவிட்டார்கள்.

அப்புறம் என்ன, வீட்டிற்கு வந்து மீதி வேலையை பார்த்தேன். அவ்வளவுதான்!!!

----

யூ-ட்யூபில் நேரடி ஒளிப்பரப்பில் இந்த விவாதத்தைப் பார்க்க நேர்ந்தது.





அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர், சும்மா பேச்சாளராக இருந்தால் மட்டும் போதாது. விவரம் தெரிந்த பேச்சாளராக இருக்க வேண்டும் என்று புரிந்தது. என்னதான், இவர்களுக்கு பின்னால் இருக்கும் தேர்ந்த அணிகள் பிரச்சார யுக்தி அமைக்கும் என்றாலும், இம்மாதிரி விவாதத்தில் மேடையில் இருக்கும் வேட்பாளர்களுக்கு பொருளாதாரம், வணிகம், மருத்துவ காப்பீட்டு, வெளியுறவு கொள்கை போன்ற மக்களைப் பாதிக்கும் விஷயங்கள் பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், கிழித்து எறிந்துவிடுவார்கள்.

எனக்கு ரொம்ப புரியவில்லை என்றாலும், விவாதம் ஆர்வம் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.

எனக்கு புரிந்த வகையில், ரோம்னியின் கொள்கைகள், ஒபாமாவை விட சிறப்பானதாக இல்லை என்றாலும்,  ஒபாமாவை விட ரோம்னி நன்றாக பேசியது போல் இருந்தது. ஆட்சியில் இல்லாதவர்கள், ஆட்சியில் இருக்கும் குறைகளை சொல்லி அதிபரை தொங்க விடலாம். தாங்கள் ஆட்சிக்கு வந்தால், எதை வேண்டுமென்றாலும் செய்வோம் என்று புருடா வாக்குறுதி கொடுக்கலாம். அதுவே ஆட்சியில் இருப்பவர்களால், தங்கள் கொள்கைகளை பற்றி அதுபோல் கூற முடியாது. லட்சணம் ஏற்கனவே தெரிந்திருக்கும். இது போன்ற காரணங்களால், ரோம்னி பெட்டராக பேசியது போல் தெரிந்திருக்கலாம்.

---

கொஞ்சம் கூட கோபப்படாமல், உணர்ச்சிவசப்படாமல் பேசுகிறார்கள். தாக்கும்போது கூட, முகத்தில் சினேக புன்னகையுடன் தாக்குகிறார்கள். நடுவராக இருப்பவர் கொடுக்கும் நேரத்திற்கு பேசி, நடுவர் பேச்சுக்கு மதிப்பளிக்கிறார்கள். (”President, please tell about this in 2 minutes...”) அடுத்தவர் பேசும்போது, சீரியஸாக பேனாவால் நோட்ஸ் எடுத்து, அதற்கு பதிலளிக்கிறார்கள். அவ்வப்போது அசட்டு ஜோக்கும் அடிக்கிறார்கள். இறுதியில் குடும்பத்துடன் இணைந்து, குசலம் விசாரிக்கிறார்கள்.

இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும், முதன்முதலாக நேரடி ஒளிபரப்பில் கண்டது - நல்ல அனுபவம்.

இருந்தாலும், நான் நம்மவர்களை விட்டுக்கொடுக்க மாட்டேன். அமெரிக்கர்கள் போலியானவர்கள். எதிராளியை தோற்கடிக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாலும், வெளியில் போலியாக நட்பு பாராட்டுகிறார்கள். ஆனால், நம்மாட்கள் அப்படி இல்லை. மனதிற்குள் என்ன நினைக்கிறார்களோ, அதையே வெளியேயும் காட்டுகிறார்கள். பேச்சிலும் காட்டுகிறார்கள்.

---

சென்ற மாதம் விழுப்புரத்தில் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கொடுத்த ஒரு பதிலடி, சாம்பிளுக்கு....

"தினமும் கோர்ட்டில் வாய்தா வாங்குபவர், தன்மானம் பற்றி பேசுவதா? அரசு பொருளை விலை கொடுத்து வாங்கியது தவறென, கோர்ட் சுட்டிக்காட்டும் அளவிற்கு நடந்துள்ளீர்கள். அட தன்மானமே, உன் நிலைமை இப்படி ஆயிற்றே?

200 முறை வாய்தா வாங்குவது, நீதிபதி மேல் புகார் கூறுவது, 68 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மானம் போகவில்லையா...????கருணாநிதிக்கா தன்மானம் போயிற்று. தன்மானம் என்றால் என்ன பொருள் என, உனது தமிழாசிரியர் கூறுவார். எல்லாம் எனக்கு தெரியும். அதற்குரியவர் யார் என, ஒரு நாள் விவாதம் நடத்திப் பார்க்கலாமா... சட்டசபையில் தேவையில்லை; பொது மண்டபத்தில் பேசலாமா... பட்டிமன்றத்தில் தகராறு வந்து விடாது. பயம் வேண்டாம். ஆணும், பெண்ணும் வாதிடும்போது கைகலப்பு நேராது. அதனை நான் விரும்பவும் இல்லை. இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள், தம்பிமார்களை தட்டிவிட்டால் பிரச்னை எங்கேயோ போய் விடும்."

 
.

Saturday, September 15, 2012

இளையராஜா - வெறுப்பும் ரசிப்பும்


நான் எல்லா இசையமைப்பாளர்கள் பாடலையும் கேட்பேன். எண்பதுகளில் இருந்து தற்போதைய காலக்கட்ட பாடல்கள் வரை எந்த குறையும் சொல்லாமல், எல்லா பாடல்களையும் கலந்து கேட்பேன்.

இதில் பெருவாரியாக இருப்பது, இளையராஜாவின் பாடல்கள் தான். சில பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. சில சமயங்களில், சில பாடல்கள் ரொம்ப பிடித்து போய், அதே பாடலை திரும்ப திரும்ப கேட்டிருக்கிறேன். அவை இளையராஜா பாடலாகத்தான் இருக்கும். எனக்கு மட்டுமல்ல, தமிழ் மொழி தெரியாதவர்களையும் இப்படி கவர்பவை, இளையராஜாவின் பாடல்கள். அந்த வகையில் தமிழர்களின் பெருமை, இளையராஜா.

ஆனால், அதே சமயம், இளையராஜா தலைகனம் பிடித்தவர், கர்வம் கொண்டவர் என்ற பேச்சும் உண்டு. ஒருவர் உண்மையிலேயே மிக சிறந்த பங்களிப்பை அளிக்கும்போது, அதன் மீது கர்வம் பிறப்பது வாடிக்கை. அதை உள்ளுக்குள் அடக்கும் போது, அல்லது அதை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் போது, அவருடைய தன்னடக்கம் மீதான மரியாதை பிறக்கிறது. இல்லாவிட்டால், கர்வம் கொண்டவர் என்று ஏச்சு-பேச்சுகள் கிளம்புகிறது.

இளையராஜாவுக்கு தலைகனமா, கர்வமா என்றெல்லாம் ஆராய்ச்சி வேண்டாம். அவர் ஜீனியஸ் என்பதில் யாராலும் சந்தேகம் கிளப்ப முடியாது. ஆனால், அவர் பேச ஆரம்பிக்கும் போது தான், அவர் மீதான மரியாதை குலைகிறது.




சமீபத்தில், கவுதம் வாசுதேவ மேனனுடன் சேர்ந்து இளையராஜா அளித்த ஜெயா டிவி பேட்டியில் இளையராஜாவை ரசிக்க நிறைய விஷயங்கள் இருந்தது. இருந்தாலும், பொதுவாகவே இளையராஜாவுக்கு எதிரில் இருப்பவரை பம்ம வைப்பதில் ஒரு ஆர்வம் இருக்கும். அது இந்த பேட்டியிலும் பளிச்சென்று தெரிந்தது.

சென்ற வார குமுதத்தில் வந்த அவருடைய கேள்வி-பதில் பகுதியான ‘இளையராஜாவைக் கேளுங்கள்’ பக்கங்களை வாசித்த போது, எழுந்த எண்ணமும் இதுவாகத்தான் இருந்தது. பொதுஜனத்தை நெருங்கவிடாமல், அடித்து விரட்டும் வெறுப்பே பல பதில்களில் தெரிந்தது. டி.எம்.எஸ்., ரஜினி பற்றிய பிரபலங்கள் குறித்த கேள்விகள் தவிர்த்து, மற்ற அனைத்து கேள்விகளுக்கும் ஏதோ கடுப்பில் பதில் சொன்னது போலவே இருந்தது.

உதாரணத்திற்கு சில,

தனக்குரிய பாதை எது என்பதை எப்படித் தேர்ந்தெடுப்பது? அதை விட்டு விலகாமல் செல்வது எப்படி?

ஆர்.சிவக்குமார், கோவை

இந்தக் கேள்வியை வந்து என்கிட்டேயா கேட்கறது நீங்க? எனக்குரிய பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அதேபோல் உங்களுக்குரிய பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் நானா உங்களுக்கு யோசனை சொல்ல முடியும்?

இந்த படத்திற்கு நாம் இசையமைக்காமலே இருந்திருக்கலாம் என்று எப்போதாவது தோன்றியது உண்டா?

எஸ். விவேகானந்தன், உசிலம்பட்டி

எப்போதாவது என்ன! ஒன்றா இரண்டா எத்தனை படங்களை நான் சொல்வது? நீங்கள் ஒருமுறை பார்த்துவிட்டு ச்சீ... என்ன படமெடுத்திருக்கிறான் என்று சொல்லுகின்ற படத்தை நான் நான்கு ஐந்து முறை பார்த்தாக வேண்டும்.

தேனொழுகும் பாடல்கள் தித்திக்கத் தந்துபுகழ் வானுயரம் கொண்ட இசைஞானி - ஆன்மிகந்தான் தங்களின் வாழ்வில் தங்கிய நிகழ்வெதுவோ? தங்கமே பதிலெமக்குத் தா.

பாரதி மணி, மதுரை

வெண்பா வடிவில் கேள்வி கேட்டிருக்கிறார். இதிலேயே இலக்கணப் பிழை இருக்கு. தங்களின் ‘வாழ்வில்’னு வர்றதால அடுத்து ‘தங்கிய’னு வராது. அது தேமானு முடிந்திருக்கறதால ‘புளிமாங்காய்’ என்று முடிந்திருக்கணும். ‘தங்கிய நிகழ்வெதுவோ’ங்கிறதிலும் தப்பு இருக்கு. தங்கியனு வந்தால் கூவிளம். விளம் முன் நேர் வரணும். இந்த தப்பான வெண்பாவிற்கு, நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

(இந்த கேள்வியை கேட்கும் போது, மதுரை பாரதி மணி சரக்கடித்திருந்தாரா என்று தெரியவில்லை. பதிலை படித்துவிட்டு, உடனே டாஸ்மாக் சென்று ஒரு கல்ப் அடித்திருப்பார் என்று அனுமானிக்கிறேன்.)

இளையராஜாவை முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால், அவர் இசையமைத்த பாடல்களை தவிர்த்து, அவரை பத்திரிக்கை, பேட்டி என்று வேறெதிலும் தொடர கூடாது போலும்.

----

‘நீதானே என் பொன் வசந்தம்’த்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எனக்குள்ளேயேயும். காரணம் - இளையராஜா, இன்றைய இளம் இயக்குனர்களுடன் இணைந்து இசையமைப்பது குறைவு.  அப்படியே இசையமைக்கிறார் என்றால் அது யாரோ பெயர் தெரியாத இயக்குனர், தன் பெயர் வெளியே தெரிய, இளையராஜாவை நாடியிருக்கிறார் என்றே இருக்கும். பிரபல இயக்குனர்கள் என்றால் பாலா, சுசிந்தீரன், மிஷ்கின், பிரகாஷ்ராஜ் ஆகியோரைச் சொல்லலாம். இதில் இளைஞர்களுக்கான இளமை துள்ளும் கதையுடன் யாரும் இளையராஜாவைத் தேடி செல்லவில்லை. எனக்கு திரும்பவும் ‘அக்னி நட்சத்திர’ இளையராஜாவை கேட்க ஆசை. கவுதம் மேனன், இளையராஜாவுடன் இணைகிறார் என்றவுடன், எனக்கு என் ஆசை நிறைவேறிவிடுமோ என்று தோன்றியது. அதனாலேயே இந்த எதிர்பார்ப்பு.

எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தவிர, இனி எதிர்பார்க்கவும் கூடாது என்பதை உணர்த்தியது.

(என் நண்பன் இந்த பில்-டப்புடன் பாடல்களைக் கேட்டுவிட்டு கூறிய ஒரு வரி விமர்சனம் - தங்க திருவோடு் பழமொழியை தான்)

அதற்காக, நான் பாடல்கள் மோசம் என்று சொல்ல மாட்டேன். ‘சாய்ந்து சாய்ந்து’, ‘என்னோடு வா வா’, ’காற்றைக் கொஞ்சம்’ பாடல்களை தினமும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். இருந்தாலும், நான் எதிர்பார்த்த இளையராஜாவை கேட்க முடியவில்லை.

அவருடைய சாயலை, இனி இளம் இசையமைப்பாளர்களிடம் கேட்டு ரசிக்க வேண்டியதுதான். உதாரணத்திற்கு, கும்கி படத்தில் உள்ள ‘அய்யய்யோ ஆனந்தமே’ பாடலை சொல்லலாம். இந்த இமான் பாடலில் இளையராஜா இருக்கிறார். நீதானே என் பொன் வசந்தம் ஆல்பத்தில் இருக்கும் எந்த பாடலை விடவும், கும்கியின் இந்த பாடல் எனக்கு பிடித்திருக்கிறது. இதற்கு காரணமும், இளையராஜா தான். இளையராஜாவின் பிண்ணனி இசையை கேட்கும் போது அடையும் உணர்ச்சியை, இந்த பாடலின் இசை அளிக்கிறது. அதனால், இனி, நான் எதிர்பார்த்த இளையராஜாவை இளம் இசையமைப்பாளர்களிடம் தான் தேட போகிறேன்.

.

Monday, September 10, 2012

ஹாலிவுட் ஷூட்டிங் ஸ்பாட்

யுனிவர்சல் ஸ்டுடியோஸில் முக்கியமாக பார்க்கவேண்டியது, ஸ்டுடியோ டூர். ஒரு வண்டியில் கூட்டி சென்று, ஸ்டுடியோவை சுற்றி காட்டுவார்கள். சில சர்ப்ரைஸ் விஷயங்களுடன்.
 
இங்கிருக்கும் ரைடுகள், ஷோக்களை விட, நான் எதிர்ப்பார்த்து சென்றது இதற்கு தான். ஆங்கில படங்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் ஹாலிவுட்டில் இருக்க, அந்நிறுவனங்கள் அனைத்தும் பொதுஜனத்திற்கு ஸ்டுடியோவை சுற்றி காட்டும் டூர் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
 
ஆனால், வார்னர் ப்ரதர்ஸ், பாரமவுண்ட், சோனி போன்றவற்றில் என்ன பிரச்சினை என்றால் குழந்தைகளை அழைத்து செல்ல முடியாது. இது ஏமாற்றமாக இருந்தது. ஆனால், காரணத்தை கொஞ்சம் புரிந்துக்கொள்ள முடிந்தது. டால்பி தியேட்டரிலேயே, பேட்ரிக் ஒவ்வொன்றாக விளக்கும் போது, எங்க பாப்பா கூடவே சேர்ந்து பேச ஆரம்பித்துவிட்டாள். என்ன செய்ய? மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்று நாங்கள் தள்ளி இருந்து கேட்டோம். இது தவிர, குழந்தைகள் ஓடுகிறார்கள் என்றால் இன்னும் பிரச்சினை தான்.
 
நல்லவேளையாக, யுனிவர்சல் ஸ்டுடியோஸில் அந்த பிரச்சினை இல்லை. குழந்தைகளை அனுமதிக்கிறார்கள். திறந்தவெளி வேன் போன்ற மூன்று வண்டிகளை இணைத்து அழைத்து செல்கிறார்கள். ஒரு பெண் முன்னால் அமர்ந்து ஸ்டுடியோஸைப் பற்றி விளக்கி சொல்லிக்கொண்டு வந்தார்.
 
 
ஹாலிவுட் இருப்பது மலை சார்ந்த பிரதேசத்தில். அதில் யுனிவர்சல் இருப்பது ஒரு மலையில். மேல் தளம், கீழ் தளம் என இரு தளங்கள் இருக்கின்றன. இவர்கள் சுற்றி காட்ட, அழைத்து செல்லும் வழியும், ஒரு மலை பாதைதான்.
 
இங்கிருந்து பார்த்தால், வார்னர் பிரதர்ஸ் தெரிகிறது.
 
 
 
இந்த மலை தளங்களில் சில செட்களை நிரந்தரமாக போட்டுவைத்திருக்கிறார்கள். படமெடுப்பதற்காகவும், இப்படி வருபவர்களை சுற்றிக்காட்டுவதற்காகவும்.

இதோ இது ஒரு செட் தான்.



இந்த செட் எந்த படத்தில் வருகிறது என்பதையும் வண்டியில் இருக்கும் டிவியில் காட்டுகிறார்கள்.



 



அமெரிக்காவின் முக்கிய இடங்களின் செட்கள் இங்கே இருக்கின்றன. தத்ரூபமாக. நியூயார்க்கில் கதை நடக்கிறது என்றால், நியூயார்க் செல்ல வேண்டியது இல்லை. ஹாலிவுட் வந்தால் போதும்.

இந்த புகைப்படத்தில் பின்னால் இருப்பது அட்டை கட்-அவுட். எங்களை பின்புறமும் அழைத்து சென்று காட்டினார்கள்.


பல்வேறு படங்களில் நடித்த கார்கள், இங்கே பார்க் செய்யப்பட்டிருந்தன. எனக்கு தெரிந்தது ஜூராசிக் பார்க் ஜீப்பும், பாஸ்ட் அண்ட் ப்யுரியஸ் காரும் தான்.


ஆக்‌ஷன் காட்சிகளில் கார்கள் எப்படி  வெடித்து சிதறுகின்றன என்பதை செயல்முறை விளக்கத்துடன் செய்து காட்டினார்கள்.  காரை டான்ஸ் ஆட கூட வைக்கிறார்கள்.



பிறகு, ஒரு கிராமத்திற்குள் அழைத்து சென்றார்கள். ஊரில் திடீரென்று மழை பொழிய வைத்தார்கள். ஆறு ஓட வைத்தார்கள். வெள்ளத்தையும் கொண்டு வந்து, வந்தவர்களை நனையவிட்டார்கள்.



 
ஏவிஎம்மிற்கு எஸ்.பி.முத்துராமன் போல, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், யுனிவர்சல் ஸ்டுடியோஸின் டைரக்டர் போலும். அவர் பெயரில் ஒரு தெரு இருந்தது. சும்மா செட்டுக்காகவா அல்லது நிஜமாகவேவா என்று தெரியவில்லை.




வண்டியை ஒரு கட்டிட செட்டிற்கு உள்ளே கொண்டு போனார்கள். அங்கே ஒரு பாதாள ரயில் நிலைய செட் இருந்தது. இங்கே நிலநடுக்கம் வந்தால் எப்படி இருக்கும்,  வெள்ளம் வந்தால் எப்படி இருக்கும், ட்ரெயின் ஆக்ஸிடெண்ட் ஆனால் எப்படி இருக்கும், தீப்பிடித்தால் எப்படி இருக்கும் என்று எல்லாவற்றையும் கண்முன்னால் செய்து காட்டினார்கள்.



அந்த மலை பிரதேசம் முழுக்க பல்வேறு படங்களுக்கு போடப்பட்ட செட் கட்டிடங்கள், நகரங்கள், காலனிகள் என்று அது ஒரு கற்பனை உலகம். வண்டியில் இருக்கும் டிவியில் அந்த செட் ப்ராப்பர்டிகள் நடித்த காட்சிகளைப் போட்டு காட்ட, எல்லாம் தெளிவாக புரிந்தது.

ஒரு உலகம் இடத்தில் ஒரு பெரிய சைஸ் விமானம் ஆக்ஸிடண்டாகி கிடந்தது. ’வார் ஆப் த வோர்ட்ஸ்’ படத்திற்காக போடப்பட்ட செட்.


இதற்கு நடுவே, ஒண்ணும் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு இண்டோர் செட்டிற்கு கூட்டி சென்றார்கள். முதலிலேயே 3டி கண்ணாடி கொடுத்திருந்தார்கள். அதை இங்கு அணிய சொன்னார்கள். முழுவதும் இருட்டு. கண்ணை மூடி திறப்பதற்குள், நாம் பழைய காலத்திற்கு சென்று விட்டோம். நம் முன்னால் டைனோசர்கள் சண்டை போடுகிறது. நமக்கு முன்னால் வந்து கத்துகிறது. கத்துவதில் நமது முகம் ஈரமாகிறது. இந்த பக்கம் திரும்பி பார்த்தால், கிங்-காங் டைனோசர்களை போட்டு துவம்சம் பண்ணுகிறது. முன்னால் சென்றுக்கொண்டிருந்த வண்டியை டைனோசர் இழுந்துக்கொண்டு மேலேயிருந்து கீழே விழ, நாமும் விழ போக, கிங்-காங் நம்மை காப்பாற்றுகிறது. எனக்கு பயம் - சத்தத்தை கேட்டு என் மடியில் இருந்த பாப்பா அழுதது தான். ரொம்ப புது அனுபவம். அருமையாக இருந்தது.

யாரோ ஒரு நல்லவர் இதை வீடியோ எடுத்து போட்டுயிருக்கிறார்.



இது முடிந்த பிறகு, ஜூராசிக் பார்க், மம்மி, ட்ரான்ஸ்பார்மர் போன்ற விளையாட்டுகளுக்காக கீழ் தளம் செல்ல வேண்டி இருந்தது. கீழ் தளம் என்றால் நான் ஏதோ கொஞ்சம் கீழே இருக்கும் என்று நினைத்தேன். அதுவோ மலையில் இருந்து கீழே இறங்கும் தூரம். அவ்வளவு பெரிய லிப்ட்டை பார்த்ததில்லை. குழந்தையை கையில் வைத்துக்கொண்டு, ஸ்ட்ரால்லரை பிடித்துக்கொண்டு போனது, முதலில் திகிலாக தான் இருந்தது. லிப்டின் ஒரு பகுதி இங்கே.


இங்கு இருக்கும் விளையாட்டுகளுக்கு செல்ல, குழந்தையுடன் வந்திருக்கும் பெற்றோர்களுக்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். என்னவென்றால், இந்த விளையாட்டுக்களுக்கு குழந்தைகளை எடுத்து செல்ல முடியாது. போட்டு குலுக்கு குலுக்கு என்று குலுக்குவார்கள். சத்தம் காதை கிழிக்கும். 3டி 4டி என்று அவர்கள் விடும் கரடி கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த விளையாட்டுகளுக்கு செல்ல காத்திருக்கும் கூட்டமும் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த மாதிரி இருக்கும் போது, ஒவ்வொரு பெற்றோரும் தனிதனியே செல்ல வேண்டி இருக்கும். அப்பா தனியாக, பிறகு அம்மா தனியாக. இப்படி ஒவ்வொருவரும் தனித்தனியாக வெயிட் செய்தால் ரொம்ப நேரமாகுமல்லவா? அதனால் ‘சைல்ட் ஸ்விட்ச்’ எனப்படும் காத்திருத்தல் மூலம், முதலில் ஒரு பெற்றோர் செல்ல மற்றொரு பெற்றோர் குழந்தையுடன் ஒரு அறையில் காத்திருக்கலாம். அந்த அறையில் குழந்தைகள் விளையாட, நிறைய விளையாட்டு பொருட்கள் இருக்கும். உதாரணத்திற்கு, அப்பா சென்று வந்தபிறகு, அம்மா எந்தவொரு காத்திருத்தலும் இல்லாமல் உடனே சென்று வந்துவிடலாம். இப்படி ஜூராசிக் பார்க், மம்மி போன்றவற்றுக்கு சென்று வந்தோம்.

யூ-ட்யூபில் இதன் வீடியோக்கள் காணக்கிடைக்கின்றது.



 
எட்டு மணிக்கு கடையை சாத்துகிறார்கள். முடித்துவிட்டு மெதுவாக வெளியே வந்தோம். சிட்டி வாக் ஜொலித்தது. எங்களிடமும் சார்ஜ் இல்லை, கேமராவிலும் இல்லை. மொபைலில் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.

ஜூராசிக் பார்க் பேக்ரவுண்ட் இசை காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.




லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் சைனா டவுணில் சாப்பிடலாம் என்று முடிவு செய்துக்கொண்டு கிளம்ப, பாதி தூரம் வரை ஜிபிஎஸ் சரியாக வழிக்காட்டி கொண்டு வர, திடீரென்று நடுரோட்டில் தனது செயல்பாட்டை நிறுத்தியது.

.