Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Monday, October 2, 2017

ஒரு ராக்கெட்டும் 104 சேட்டிலைட்களும்

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.

அரசியல்வாதிகள் நமது மானத்தை வாங்கிக் கொண்டிருக்கும் போது, நம் காலரைத் தூக்கி விட வைப்பது இஸ்ரோ (ISRO) வின் வழக்கம். பிப்ரவரி 15ஆம் தேதி அன்றும் இந்தியர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள் இஸ்ரோவின் இந்திய விஞ்ஞானிகள்.

அன்றைய தினம் இந்திய நேரப்படி காலை 9.28 க்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கிளம்பிய பிஎஸ்எல்வி விண்கலம், அடுத்த அரை மணி நேரத்திற்குள், ஏற்றிச் சென்ற 104 செயற்கைக்கோள்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக, திட்டமிட்ட விண்வெளிச் சுற்றுப்பாதையில் இறக்கி, தன் வேலையைச் சிறப்பாகச் செய்து முடித்துள்ளது. ஆம், நீங்கள் வாசித்தது சரிதான். 104 செயற்கைக்கோள்கள்.

2014 இல் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், பத்தில் ஒரு பங்கு எனக் குறைந்த செலவில் செவ்வாய்க்கு மங்கல்யான் அனுப்பிய இஸ்ரோ, இம்முறை அதே போல் குறைந்த செலவில் 104 சேட்டிலைட்களை ஒரு விண்கலம் மூலம் விண்வெளியில் கொண்டு நிறுத்தியிருக்கிறார்கள்.

இதற்கு முன்பு, ரஷ்யா 37 சேட்டிலைட்களையும், அமெரிக்கா 29 சேட்டிலைட்களையும் ஒரு ராக்கெட்டில் அனுப்பியதே அதிகபட்சமாக இருந்தது. அதையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்வது போல், ஒரே ராக்கெட்டில் 104 சேட்டிலைட்களை எடுத்துச் சென்று, அவை அனைத்தையும் பிசிறில்லாமல் விண்வெளிச் சுற்றுப்பாதையில் நிறுவி உலக, இல்லை பிரபஞ்ச சாதனை படைத்திருக்கிறார்கள் இந்திய நாட்டு விஞ்ஞானிகள்.

பிஎஸ்எல்வி ஏவுகலம், இதுவரை மொத்தம் 122 செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுவி இருக்கிறது. அதில் 79 செயற்கைக்கோள்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தது. இதோ, இந்த முறை ஒரே பாய்ச்சலில் 104 செயற்கைக்கோள்களைச் சுமந்துச் சென்று விண்வெளி செஞ்சுரி அடித்திருக்கிறது இஸ்ரோ. இதில் அமெரிக்கா, ஸ்வீஸ், நெதர்லாந்து, கஜகஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்களும் அடக்கம்.

இஸ்ரோவிற்கு விண்வெளியில் செஞ்சூரி போட வேண்டுமென்று எந்த முன்திட்டமும் கிடையாது. இந்தியாவின் மூன்று சேட்டிலைட்களைத் தவிர, மேலும் பிற நாடுகளின் 101 சேட்டிலைட்களை எடுத்துச் செல்லும் திறன் இருந்ததால், அவையும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்தத் திட்டத்தின் செலவில் பாதிப் பங்கு, இஸ்ரோவிற்கு மிச்சமாகி உள்ளது.

இந்திய விண்வெளிப் பயணத்தின் ஆரம்ப வருடங்களில் ரஷ்யாவின் உதவியைப் பெற்று வந்த இந்தியா, இன்று பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுவ உதவுகிறது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளை விட அதிகச் செயற்கைக்கோள்களை ஒரே தடவையில் குறைந்த செலவில் அனுப்பிச் சாதனை புரிய முடிகிறது.

இந்தியாவின் விண்வெளி விஞ்ஞானம், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அவ்வளவு செலவு பிடித்ததில்லை. ஹாலிவுட் படப் பட்ஜெட்டினைக் காட்டிலும், குறைந்த செலவில் தான் விண்வெளித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்குக் குறைந்த செலவிலான மனித வளம் மட்டும் காரணமல்ல, செலவுகளைக் குறைக்கும் திட்டமிடலும் தான் காரணம். சாதனங்களின் எடையைக் குறைத்து, அதே சமயம் அவற்றின் திறனில் எந்தச் சமரசமும் செய்துக்கொள்ளாமல் தங்களது தேவையை அடைவது மூலமும் செலவு குறைகிறது. அதிலும் இம்மாதிரி மற்ற நாடுகளின் விண்வெளித் தேவையைப் பூர்த்திச் செய்வதன் மூலம் இஸ்ரோவின் செலவுகளின் ஒரு பகுதியை அதுவே ஈட்டி கொள்கிறது.

இம்முறை எடுத்துச் சென்ற செயற்கைக்கோள்களில் முதன்மையானது, இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய CartoSat-2D. இது பூமியைக் கண்காணிக்க உதவும் செயற்கைக்கோள். இதில் இருக்கும் இருக்கும் புகைப்படச் சென்சார்கள், பூமியில் இருக்கும் நிலப்பரப்பு, கடற்பரப்பு, நீர் வினியோகம், சாலை இணைப்புகள் ஆகியவை பற்றி ஆராய உதவும்.

அடுத்து INS - 1A என்ற நேனோ வகைச் சேட்டிலைட். இது நிலப்பரப்பில் இருந்து பிரதிபலிக்கும் சூரிய ஓளியை ஆராய உதவும் செயற்கைக்கோள். இது எதிர்கால மாணவ ஆராய்ச்சிகளுக்கும் உதவும்.

இதற்கு அடுத்துச் சுற்றுப்பாதையில் இறக்கிவிடப்பட்ட அடுத்தச் செயற்கைக்கோள், INS - 1B. இது ஒரு சோதனைக்கட்ட புகைப்படக் கருவி கொண்ட செயற்கைக்கோள். சிறிய கட்டமைப்பில் அதிக உயர்தரப் புகைப்படங்கள் எடுக்க உதவும் கருவிகள் இதில் உள்ளன.

இந்த இந்தியச் செயற்கைக்கோள்களுக்கு அடுத்ததாக, அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ப்ளானெட் (Planet) என்ற நிறுவனத்தின் 88 செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இறக்கப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் அனைத்தும் பூமியைத் தொடர்ச்சியாகத் தினமும் புகைப்படங்கள் எடுக்கும். இவை வணிக ரீதியிலும், இயற்கைப் பேரிடர்களிலும் நிறுவனங்களுக்கு உதவும்.

இதற்கு அடுத்ததாக, ஸ்பையர் க்ளோபல் (Spire Global) என்னும் அமெரிக்க நிறுவனத்தின் 8 Lemur-2 சேட்டிலைட்கள் விண்வெளியில் நிறுவப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள்களின் மூலம் கடல்வெளியில் இருக்கும் கப்பல்களைக் கண்காணிக்க முடியும். கடல் சார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு, இது அளிக்கும் தகவல்கள் மிகவும் முக்கிய முடிவுகளை எடுக்க உதவும். இது தவிர, தட்பவெப்ப நிலை குறித்த தகவல்களையும் இவை அளிக்கும்.

அமெரிக்க நிறுவனங்களின் இந்த வணிகச் செயற்கைக்கோள்களுக்கு அடுத்து, நெதர்லாந்தின் PEASSS, ஸ்விட்சர்லாந்தின் DIDO-2, இஸ்ரேலின் BGUSat, கஜகஸ்தானின் Al-Farabi 1, அரபு நாட்டின் Nayif-1 ஆகிய செயற்கைக்கோள்களும் இந்திய பிஎஸ்எல்வி மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் சில செயற்கைக்கோள்கள், அந்நாட்டு மாணவர்களால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை பல்வேறு வகை ஆராய்ச்சிகளுக்குப் பயன்படும்.

இது போன்ற திட்டங்கள், எதிர்காலத்தில் இந்திய விண்வெளித்துறைக்கு இருக்கும் பிரகாசமான வணிக வாய்ப்புகளுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளன. இஸ்ரோ, பிற வணிக நிறுவனங்களுடன் இணைந்து இது போன்ற முயற்சிகளில் ஈடுபடும் திட்டங்களும் உள்ளன. இதன் மூலம் இந்தியா வணிகரீதியில் விண்வெளித்துறையில் முதன்மையான இடத்தை அடையும்.

உலகமெங்கும் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டிருக்கும் இஸ்ரோவிற்கும் அதன் கிளை வணிக நிறுவனமான ஆண்ட்ரிக்ஸிக்கும் (Antrix) எதிர்ப்புகளும் விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. 104இல் பெரும்பாலானவை நேனோ வகைதானே?, இந்திய அரசு அளிக்கும் சலுகைகள் ஏன்?, இவற்றால் விண்வெளியில் கழிவு எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் தானே? என்பது போன்ற கேள்விகளை இவர்கள் எழுப்புகிறார்கள். இவை இஸ்ரோ, பிற நாட்டின் நிறுவனங்களுக்குப் பலத்த போட்டியைக் கொடுப்பதால் வரும் எரிச்சலாலும் இருக்கலாம்.

எப்படி இருப்பினும், உலகத் தொழில்நுட்ப மேடையில் இந்திய விஞ்ஞானிகளுக்கு இருக்கும் இடம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. உலக எலைட் கிளப்பில் இந்தியாவிற்குக் கிடைக்கும் மதிப்பிற்கு, அவர்கள் காரணகர்த்தாவாக என்றென்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய மக்களின் ஆதரவு என்றும் தேவை. என்றும் இருக்கும்.

மேலும் தகவலுக்கு - http://www.isro.gov.in/

.

வீட்டுக்கொரு ஜீனோ

பனிப்பூக்களில் வெளிவந்த கட்டுரை.



எழுத்தாளர் சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா', 'மீண்டும் ஜீனோ' ஆகிய கதைகளின் ரசிகர் என்றால், இன்னமும் ஜீனோ என்ற பொம்மை நாய்க்குட்டியை மறந்திருக்க மாட்டீர்கள். நாயகியுடன் எப்போதும் இருக்கும் நாய்க்குட்டி, புத்தகங்களை வாசித்துக் கொண்டு நாயகிக்கு பல தகவல்களையும், அறிவுரைகளையும் அள்ளிக் கொடுத்துக் கொண்டு வரும்.


வரும் நாட்களில், நம் வீட்டிலும் இது போன்ற ஒரு ஜீனோ வரலாம்.


முன்பெல்லாம் ராஜா, ரவி, ரமேஷ் என்ற பெயரில் வீட்டுக்கு ஒருவர் இருப்பார். வருங்காலத்தில், இதே போல் வீட்டுக்கு ஒரு அலெக்ஸா, ஜார்விஸ் இருப்பார்கள். இதெல்லாம் யார் என்று கேட்டீர்களானால், உங்களுக்கான கட்டுரை தான் இது.


இவர்களெல்லாம் ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் எனப்படும் ஏ.ஐ. டெக்னாலஜியின் குழந்தைகள். மேலும், தொடர்வதற்கு முன்பு ஏ.ஐ. பற்றிப் பார்த்து விடலாம்.


செயற்கை நுண்ணறிவு என்றழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பம் ஒன்றும் சமீபத்திய வரவல்ல. இது பல ஆண்டுகளாக உள்ளது தான். ஏற்கனவே, இதன் வளர்ச்சியின் பலன்களை நாம் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதைப் பின்புலமாகக் கொண்டு சமீப காலமாக, மார்க்கெட்டில் களமிறக்கி விடப்பட்டுள்ள மற்றும் வர போகும் சாதனங்களைப் பற்றியதே இக்கட்டுரை.


செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனைப் போல், ஒரு சாதனத்தைச் சிந்திக்க வைப்பது. மனிதன் எப்படிச் சிந்திக்கிறான்? தன்னிடம் உள்ள தகவல்களைக் கொண்டு. தான் பெற்ற அனுபவங்கள் கொண்டு. அது போலவே, ஒரு சாதனத்தையும் தகவல்களைத் திரட்டி, அதை முன்மாதிரியாகக் கொண்டு முடிவெடுக்க வைப்பதே செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானிகளின் தொடர் வேலையாக உள்ளது.


இதோ, இந்தக் கட்டுரையை அலைப்பேசியில் உள்ள தமிழ் விசைப்பலகை மூலமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் தமிழை எப்படிக் கோணல்மாணலாக எழுதினாலும், அதற்குரிய தமிழ் எழுத்துகளை எடுத்துக் கொண்டு கட்டுரையை உருவாக்கி விடுகிறது. முதலில் அதற்குச் சரியாகப் புரியாத எழுத்துகளை, போகப் போக நான் சரி செய்வதை வைத்து, நாளடைவில் அதுவே சரி செய்து விடுகிறது. நான் தவறுகளைத் திருத்துவதைக் கொண்டு, அதற்கு எது சரி, எது தவறு என்று தெரிய போய், பிறகு அதுவே என் எழுத்துகளைத் திருத்தி விடும். இதைத் தான் செயற்கை நுண்ணறிவு என்கிறார்கள்.


நமது அலைபேசியில் இருக்கும் பாடல் கேட்க உதவும் செயலியில், நீங்கள் இதைக் கவனித்திருக்கிறீர்களா? பாடல்களை உணர்வுகளின் வழியே, வகைப் பிரிக்கும் நிரல் இருக்கும். Happy தேர்வு செய்தோமானால், சந்தோஷமான குத்துப் பாடல்களும், Sad என்றால் சோக கீதங்களும் இசைக்கும். இனி அடுத்தக் கட்டமாக, நாம் தேர்வு செய்யத் தேவையில்லாமல், அதுவே நமது உணர்வுகளைப் புரிந்து கொண்டு பாடும்.


இப்போது, செயற்கை நுண்ணறிவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இயற்கையாக அமைந்திருக்கும் மனிதனின் சிந்திக்கும் திறனை, எந்நாளும்
செயற்கை நுண்ணறிவால் மிஞ்சவோ, தொடவோ முடியாது என்பது என் எண்ணம். எந்தளவுக்கு அதை நெருங்குகிறோம் என்பதில் தான் இதன் வளர்ச்சி இருக்கப் போகிறது. மனிதனின் சிந்தனைப் போக்கு எண்ணிலடங்கா வழிகளில் இருப்பதால், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் தொடர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.


சரி, இப்போது நாம் எங்கு இருக்கிறோம்? சென்ஸர் (sensor), கேமரா (camera), வாய்ஸ் ரெகனைசேஷன் (voice recognition) போன்றவற்றில் இருக்கும் வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவுக்கு மேலும் உதவுகிறது. எப்படி நமது கண், காது போன்ற உறுப்புகள், நமது சிந்தனைக்கு உதவுகிறதோ, அது போல் இந்த நுண் வன்பொருட்கள், செயற்கை சிந்தனைக்கு உதவுகின்றன.


கடந்த சில வருடங்களாக, நிறைய மின்னணு உதவியாளர்கள், மனிதனுக்கு உதவியாகச் சில வேலைகளைச் செய்ய உருவாகி வருகிறார்கள். ஒவ்வொருவராய் பார்க்கலாம்.


அலெக்ஸா என்பது அமேசானின் கணினி குரல் சேவை. இந்தச் சேவையை எந்தச் சாதனத்துடனும் இணைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கியுள்ளனர். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு, அமேசான் எக்கோ ஸ்பீக்கர் பற்றித் தெரிந்துக் கொள்ளலாம். இந்த ஸ்பீக்கர், ஒரு அசிஸ்டென்ட் போல, நாம் கேட்கும் தகவலைக் கொடுக்கும். நமது ஆணைக்காக எப்போதும் இதிலிருக்கும் மைக் காத்திருக்கும். உதாரணத்திற்கு, நேரம் கேட்டால் சொல்லும். தட்பவெப்பம் கேட்டால் சொல்லும். ஏதாவது பாட்டைக் கேட்டால் பாடும். காலையில் எழுப்பி விடச் சொன்னால், எழுப்பி விடும். ஆனால், இதற்கு எப்போதும் இணையம் இருக்க வேண்டும். இந்தக் குரல் சேவை, அதற்கான தகவல்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து தருவிக்கப்பட்டு, ஸ்பீக்கர் மூலமாகப் பேசப்படுகிறது.


இப்போதைக்கு ஸ்பீக்கர் போல் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. போகப் போக, பல்வேறு டிசைன்கள் வரலாம். ஜீனோ வடிவில், ஒரு நாள் தமிழிலும் பேசும். அமேசான் ஆரம்பித்து வைத்த இந்த விளையாட்டில், தற்சமயம் கூகிளும் சேர்ந்துள்ளது. ஹோம் என்ற பெயரில் கூகிள் வெளியிட்டுள்ள ஒலிப்பானுக்குக் கூகிளாண்டவரின் நேரடி அருள் இருப்பதால், இது மேலும் ஃபிலிம் காட்டும்.


இணையத்தில் டைப் செய்து தேடுவதற்குப் பதில், குரல் வழியே கேள்விகளை அனுப்புகிறோம், அவ்வளவுதானே? என்று கேட்கலாம். இது வெறும் குரல் வழி தேடல் மட்டும் அல்ல. அடுத்தடுத்து நாம் கேட்கும் கேள்விகளைப் புரிந்துக் கொண்டு, அதனிடையே இருக்கும் தொடர்பைப் புரிந்துக் கொண்டு பதிலளிக்கும். எளிய உதாரணத்திற்கு, "இன்னைக்கு எவ்ளோ வெயிலடிக்கும்?” என்று கேட்டால், அன்றைய தினத்தின் தட்பவெப்பத்தைச் சொல்லும். "நாளைக்கு?” என்று கேட்டால் போதும். அடுத்தத் தினத்தின் நிலவரத்தைக் கூறும் . "நாளைக்கு எவ்ளோ வெயிலடிக்கும்?” என்று நீட்டி முழக்க தேவையில்லை. கேள்விக்கு முன்பு, 'அலெக்ஸா’ என்றோ, ‘ ஹாய் கூகிள்' என்றோ மட்டும் கூறிப்பிட வேண்டும். அப்போது தான் அதற்குக் கேள்வி கேட்பது தம்மிடம் என்று புரியும்.


இதை ஒரு உதவியாளர் போலப் பயன்படுத்தலாம். நம்முடைய தினசரி அப்பாயிண்மெண்ட் என்ன, அலுவலகத்திற்குச் செல்ல எவ்வளவு நேரம் எடுக்கும், ஒரு பாட்டு பாடுறீ என்று தகவலும் கேட்கலாம், பொழுது போகாமல் மொக்கையும் போடலாம். இதற்கு மேல், இவற்றை நம் வீட்டில் இருக்கும் மற்ற சாதனங்களை இயக்கவும் பயன்படுத்தலாம். கேட்க மேஜிக் போல இருக்கிறதல்லவா? அதுவும் சாத்தியம். ஸ்மார்ட் ஹோம் டெக்னாலஜி பற்றி இன்னொரு கட்டுரையில் காணலாம்.


இப்படி அமேசானும், கூகிளும் ஹோம் அசிஸ்டெண்ட் டெக்னாலஜியில் கலக்கிக் கொண்டிருக்க, ஃபேஸ்புக்கும் ஜார்விஸ் என்ற பெயரில் களம் இறங்க போகிறது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், தனது 2016 ஆண்டின் குறிக்கோள் என்று ஜார்விஸ் என்னும் ஏ.ஐ. உதவியாளனை உருவாக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறார். இது மார்கன் ஃப்ரீமேன் குரலில் நமது கட்டளைக்குக் கட்டுப்படுமாம். வந்திருப்பவர் முகத்தைப் பார்த்தே கதவைத் திறந்து விடுவது, குழந்தைக்குப் பாட்டு பாடியே தூங்க வைப்பது, பசிக்கிறது என்றால் ப்ரெட் சுட்டு தருவது, டி-சர்ட் தேர்ந்தெடுத்துக் கொடுப்பது (இது எதுக்கு மார்க்குக்கு? எப்படியும் ஒரே கலர்ல தான் டி.சர்ட் போடுவாரு!!) எனப் பல வேலைகளைச் செய்யும் என்று மார்க் சொல்லுகிறார். நமது சுற்றம் அனைத்தும் ஃபேஸ்புக்கில் கிடப்பதால், அவர்கள் வீட்டு லைட்டையும் நாமே அணைக்கும் நிலை வருவதற்கு அதிக நாட்கள் எடுக்காது.


இவை அனைத்தும் பில் கேட்ஸ்க்கும், அம்பானிக்குமான டெக்னாலஜியாக மட்டும் இருக்கப் போவதில்லை. சாமானியருக்கும் இவ்வசதிகள் கிடைக்கும் என நம்பலாம். சாமானியர்க்கும் பயன்படும் விதத்தில் இருக்கும் போது தான், விஞ்ஞானத்தின் பலன், மானுட குலத்திற்குப் பயன்படுகிறது என்று எடுத்துக் கொள்ள முடியும். இது போன்ற சாதனங்கள், மாற்று திறனாளிகளுக்கும், வயதானவர்களுக்கும் அளிக்கக்கூடும் பலன்களை நினைத்துப் பாருங்கள்.

அதே சமயம், இவை வெறும் கேளிக்கை சாதனங்களாகவும், சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கும் இடியட் இயந்திரங்களாகவும் மட்டும் நின்று விடக் கூடாது. மனிதனின் அன்றாட வேலைகளைச் சுலபமாக்கி, அவன் தனது கவனத்தை மேலும் பல முக்கியச் சமூகத்திற்குத் தேவையான சிந்தனைகளில், செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள உதவ வேண்டும். அவ்வாறு உதவுமானால், இச்சாதனங்களை இரு கை கூப்பி வரவேற்பதில் தவறேதும் இல்லை.

.

Friday, September 23, 2016

தமிழில் இணையதளப் பெயர்கள்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.


உங்கள் கணினி இணைய உலாவியில் (browser), என்றேனும் www.panippookkal.com என்பதற்குப் பதில் பனிப்பூக்கள்.com என்று தட்டச்சுச் செய்து, பின்பு திருத்தியிருக்கிறீர்களா? இனி திருத்த வேண்டாம். அதுவும் உங்களைப் பனிப்பூக்கள் தளத்திற்குச் சரியாகக் கொண்டு வந்துவிடும்.
அதாவது, இணையத்தளங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், தமிழ் போன்ற மற்ற உலக மொழிகளிலும் வைப்பதற்கு வழிவகைகள் இருக்கின்றன. இனி, அழகுத்தமிழிலேயே இணையதளங்களுக்குப் பெயர் வைக்கலாம். அவ்வாறே, உலாவியில் தமிழில் குறிப்பிட்டு, அத்தளங்களுக்குச் சென்று அடையலாம்.
இது எப்படிச் செயல்படுகிறது?
முதலில், பொதுவாக இணைய தளங்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம். உதாரணத்திற்கு, நீங்கள் பனிப்பூக்கள் தளத்திற்கு வர, www.panippookkal.com என்று தட்டச்சு செய்கிறீர்கள். இதற்குப் பின்னால், என்ன நடக்கிறது? (இதெல்லாம் தெரிந்த டெக்கீஸ், கீழே இருக்கும் புகைப்படத்திற்கு அருகே நேராகச் சென்று விடலாம்)
நாம் மனிதர்கள் ஒன்று சேர்ந்து வாழும் இடமான இந்த உலகம் போல், இணையம் (Internet) என்பது இணைய தளங்களின் கூட்டு மெய்நிகர் உலகம். நாம் வாடகை வீட்டிலோ, அல்லது சொந்த வீட்டிலோ இருப்பது போல், இணைய தளங்களின் வீடுகள் - Server எனும் வகையைச் சார்ந்த கணினிகள்.
அடுத்து, நமது வீட்டுக்கு யாரேனும் வர வேண்டுமென்றால், நாம் நமது வீட்டு முகவரியைக் கொடுப்போம். அதில் சில எண்கள், எழுத்துகள் இருக்கும். உதாரணமாக, 250, 310/A இப்படி இருக்கும். கணினிகள் உலகில், அதன் ஐபி (IP) அட்ரஸ்கள் தான் அதன் முகவரி. அது 192.168.0.1 என்பது போல் இருக்கும்.
சில வீடுகளுக்குப் பெயர்கள் இருக்கும். அன்னை இல்லம், வேதா நிலையம், கணேஷ் பவனம், ராம் நிவாஸ் என்பது போல. அப்படியே இல்லாவிட்டாலும், முனுசாமி வீடு, வாத்தியார் வீடு, பாய் வீடு என்று கேட்டே சில வீடுகளை அடையாளம் காணலாம். அதாவது, சில எண்களை நினைவு கொண்டு அடையாளம் காண்பதை விட, பெயர்கள் கொண்டு அடையாளம் காண்பது எளிது அல்லவா? இணையத்தில், இணைய தளங்களின் பெயர்கள் (Domain name) இது போல் தான் சௌகரியம் அளித்து உதவுகின்றன.
உதாரணத்திற்கு, ஃபேஸ்புக் தளம் பல சர்வர்களில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும். ஒவ்வொரு சர்வருக்கும், ஒரு ஐபி அட்ரஸ் இருக்கும். ஃபேஸ்புக் பார்க்க வேண்டும் எனில், அதன் ஐபி அட்ரஸ் தெரிந்திருக்க வேண்டும் என்றால் அது எவ்வளவு சிரமத்தைக் கொடுக்கும்!! அந்தக் கஷ்டத்தைத் தீர்ப்பதே, டொமைன் (Domain) எனப்படும் இணைய தளப் பெயர்கள்.
இணைய உலாவியில், ஒரு தளத்தின் பெயரை அடித்தவுடன், அந்தத் தளம் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் சர்வரின் ஐபி அட்ரஸ் உலாவிக்குக் கிடைக்கும். யார் கொடுப்பார்கள்? ஏற்கனவே சென்ற இணைய தளம் என்றால் உலாவிக்கே தெரிந்திருக்கலாம், அல்லது உங்கள் கணினிக்குத் தெரிந்திருக்கலாம். அப்படித் தெரியாத பட்சத்தில், உங்களுக்கு இணையச் சேவை தரும் நிறுவனத்திற்கு (ISP - Internet Service Provider) தெரிந்திருக்கும். இணையச் சேவை நிறுவனத்திடம் இருக்கும் DNS (Domain Name System) எனப்படும் இணையத் தகவல் கிடங்கில் இருந்து இந்த ஐபி அட்ரஸ் தகவலை எடுத்துக் கொடுக்கும். DNS என்பது டெலிஃபோன் டைரக்டரி போன்றது. ஒரு இணைய தளப் பெயரைக் கொடுத்தால், அது அந்த இணைய தளத்திற்கான ஐபி அட்ரஸைக் கொடுக்கும். எப்படி ஒரு நபரின் பெயரைக் கொண்டு, அவரது தொலைபேசி எண்ணைக் கண்டு பிடிப்போம், அது போல.
உலகில் இருக்கும் அனைத்து இணைய தளங்களின் ஐபி அட்ரஸ்களும், ஒரு DNSக்கு தெரிந்திருக்காது என்பதால், அது அதற்குத் தெரிந்த இன்னொரு DNSஇடம் கேட்க சொல்லும். அதற்கும் தெரியாவிட்டால், இன்னொன்றுக்கு. இப்படியே தொடர் சங்கிலி போல் கேட்டு, எப்படியாவது கண்டுபிடித்து விடும்.

சரி, கட்டுரையின் சங்கதிக்கு வரலாம். இணையம் உருவான காலத்தில் இருந்தே, இணைய தளங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் தான் இருந்து வருகிறது. ஏனெனில், கணினிகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழியான ASCIIயில் எண்களையும், ஆங்கில எழுத்துகளையும், சில குறியீட்டு வடிவங்களையும் தான் குறிப்பிட முடியும். பிறகு, மற்ற மொழிகளின் வடிவங்களையும் கணினியில் பயன்படுத்த, யூனிகோட் முறை உருவானது.
யூனிகோட் முறை வந்தபின்பு, கணினி மற்றும் இணையத்தில், தமிழிலும், மற்ற மொழிகளிலும் எழுத முடிந்தாலும், இணைய தளங்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும் தான் பெயர் வைக்க முடிந்தது. தொண்ணூறுகளின் இறுதியில் IDN (Internationalized Domain Name) உருவாகிய பின், மற்ற மொழிகளிலும் இணைய தளங்களுக்குப் பெயர் வைக்கலாம் என்ற நிலை உருவாகியது.
உலக மொழிகளில் இணைய தளங்களின் பெயரை டைப் செய்ய, நாம் பயன்படுத்தும் உலாவியும் IDN புரிந்த செயலியாக இருக்க வேண்டும். நாம் உள்ளீடு செய்யும் ஒவ்வொரு யூனிகோட் எழுத்தும், அதற்குரிய ப்யூனிகோட் (Punycode) எழுத்துகளாக உலாவி மாற்றும். உதாரணத்திற்கு, நாம் '' என்று எழுதினால், உலாவி 'xn--vkc' என மாற்றும். 'xn--' என்று தொடங்கினால், அது ப்யூனிகோட் என்று புரிந்துக்கொள்ளலாம். Unicode ASCIIஆக மாற்ற, Punycode பயன்படுகிறது.
'' என்ற யூனிகோட் எழுத்து, 'xn--vkc' என்ற அதற்கு இணையான ப்யூனிகோட் ஆக மாறும்போது, இந்த ப்யூனிகோடில் இருக்கும் x, n, - போன்ற எழுத்துகள் எல்லாம் வேறென்றும் இல்லை, ASCII தான். நமது உலாவியிலேயே தமிழ் இணைய தளப் பெயர்கள், அதற்கு இணையான ASCII எழுத்துகளாக மாற்றம் அடைந்த பிறகு, அதற்கு அடுத்துப் பின்னால் நடைபெறும் செயல்களில் ஏதும் மாற்றம் கிடையாது. DNS என்று முன்னால் நாம் பார்த்த டைரக்டரியில், இந்த ப்யூனிகோட் இணைய தளப் பெயர்களுக்கு உரிய ஐபி அட்ரஸ் இருக்கும். அதன் மூலம் நாம் செல்ல நினைத்த தளங்களுக்கு நம்மை உலாவி எடுத்துச் செல்லும்.
ஏன் இதில் இவ்வளவு சிக்கல்? எல்லாவற்றையும் யூனிகோட் என்று மாற்றினால், ப்யூனிகோட், பிறகு ASCII என்று இவ்வளவு மாற்றங்கள் தேவையில்லை எனத் தோன்றும். ஆனால், இணையத் தொழில்நுட்பத்திற்கு முக்கியப் பின்புலனாக இருக்கும் HTTP நெறிமுறை ASCII சார்ந்தது. எனவே, இது போன்ற இடைநிலை மொழி மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு என்ன சாதித்தோம்?
இன்னமும், தமிழில் இது பெருமளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்னமும் பலரை இது சென்று சேரவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இது நல்ல வளர்ச்சியை அடையும் போது, இதன் பலன்கள் கண்கூடும் வாய்ப்பு வரும். அவரவர் சொந்த மொழியில் இணைய தளங்களுக்குப் பெயர் வைக்கும் போது, இணையம் மேலும் பாமர மக்களிடம் சென்று சேர வாய்ப்பு அதிகமாகும். கடை முகப்பில், தமிழில் பெயர் பலகை வைத்திருக்கும் நிறுவனங்கள், அது போலவே இணையத்திலும் கடையின் பெயரையே, இணையக்கடைக்கும் பெயராக வைக்கலாம். மின்னஞ்சல் முகவரியும் முழுமையாகத் தமிழில் சாத்தியம் ஆகும். மொபைல் ஃபோனும், அதில் இருக்கும் தமிழ் கீ-போர்டும் ஏற்கனவே பலரை இணையத் தொடர்பில் இணைத்து விட்டிருப்பதைக் காண்கிறோம். இது போன்ற மேலும் தமிழ் மயமாக்கத்திற்கான வாய்ப்பு அதிகரிக்கும் போது, அது மென்மேலும் இணையப் பயன்பாட்டை அதிகரிக்கும் என நம்பலாம்.
மேலும் தகவல்களுக்கு,
http://computer.howstuffworks.com/dns.htm
https://en.wikipedia.org/wiki/Internationalized_domain_name
https://www.w3.org/International/articles/idn-and-iri/

.