Monday, May 13, 2013

ஜூராசிக் பார்க் - 3D

ஒரு பழைய படத்தை தியேட்டரில் போய் பார்த்து, எவ்வளவு நாளாகிறது? ஜுராசிக் பார்க் 3டியை, தியேட்டரில் போய் பார்க்க 3டி பெரிதாக ஈர்க்கவில்லை. படம் பார்த்த பழைய நினைவே தூண்டியது.


இது எனக்கு எப்போதுமே பிடித்த படம். 20 வருடங்களுக்கு முன்பு சிறு வயதில் இதற்கு முன்பு தியேட்டரில் பார்த்த படம் என்றால், டெர்மினேட்டர், டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்றவை நினைவுக்கு வருகிறது. இந்த படங்கள் எல்லாம் லேட் ரிலீஸ்கள். அதில் டென் கமாண்ட்மெண்ட்ஸ், எங்கள் ஊரில் இருக்கும் கிருஸ்துவ பள்ளிகளைக் கணக்கில் கொண்டு ‘கிளியோபட்ரா’வில் ரிலீஸ் செய்யப்பட்டது. எப்போது சீன் படங்களையே போடும் ‘காரனேஷன்’க்கு பள்ளி குழந்தைகளை அழைத்துவர செய்த படம், ஜூராசிக் பார்க்.

பள்ளியில் இருந்து நடத்திக்கூட்டி வந்து படம் காட்டினார்கள். சாலையில் வரிசையாக பேசிக்கொண்டு நடந்துவந்தோம். தியேட்டரைப் பற்றி எங்களுக்குள் குசுகுசுவென பேசிக்கொண்டோம். தியேட்டரில், எதற்கெடுத்தாலும் கத்திக்கொண்டு இருந்தோம். இருட்டு, ஆசிரியர்கள் மேலான பயத்தை மறைத்திருந்தது.

அதற்கு பிறகு ஒரு காலத்தில், எப்போது ஸ்டார் மூவிஸில் இந்த படத்தை போட்டாலும், உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். மின்சார வேலி
பக்கம் இரு கார்களை துவம்சம் செய்யும் காட்சி, பாட்ஷா இண்டர்வெல் காட்சி போல், போர் அடிக்கவே அடிக்காது.

எனக்கு மட்டுமல்ல, என் மனைவிக்கும் அப்படி தான் போல. அவள் இன்னும் சிறுவயதில் பார்த்தது. பல முறை பார்த்த படம் என்றாலும், கடைசி முறை பார்த்து நாட்களாகியிருந்தால், இன்னொரு முறை பார்க்க சில நாட்களுக்கு முன்பே முடிவெடுத்தோம். தள்ளி சென்றுக்கொண்டே இருந்தது. அடுத்த வாரம், தூக்கிவிடுவார்கள் போல தெரிந்தது. அதனால், இந்த வாரயிறுதியில் செகண்ட் ஷோ போய் பார்த்தோம்.

சில மாதங்களுக்கு முன்பு, சூட்-அவுட் நடந்திருந்த தியேட்டர். படம் பார்க்கும் த்ரில்லை விட, இந்த தியேட்டரில் படம் பார்க்கும் த்ரில், ராத்திரியில் அதிகமாயிருந்தது. இரண்டு போலிஸ்காரர்கள், வாசலிலேயே நின்று நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். அரங்கிற்குள் நுழைந்தால், நாங்கள் மட்டும் தான்.

நம்மூரில் ஆள் சேராவிட்டால், தியேட்டரில் என்ன செய்வார்கள் என்று பேசிக்கொண்டிருந்தோம். இங்கே எங்கள் இருவருக்காக படம் போட்டார்கள். பாப்பா தூங்கிக்கொண்டிருந்தாள்.

படம் பார்க்கும்வரை, இது பழைய படம் என்ற நினைப்பே இருக்கவில்லை. படத்தில் வரும் ட்ரஸ்களைப் பார்த்தபிறகு தான், 20 வருட பழையப்படம் என்ற நினைப்பு வந்தது. ஆரம்ப காட்சிகளில், டைனோசரைக் காட்டாமலே, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பயம் காட்ட தொடங்குவார். டைனோசர்கள் மட்டுமில்லாமல், படத்தில் மேலிருந்துவிழும் கார், மின்சார கம்பி என்று மற்ற காட்சிகளிலும் பரபரப்பு இருக்கும். இதற்கு மேல், குழந்தைகளே பிடிக்காத ஒரு மனிதன், இறுதி காட்சியில் இரு குழந்தைகளும் தோளில் சாய ஹெலிகாப்டரில் செல்லும் காட்சி சொல்லும், இம்மாதிரியான படங்கள் ஜெயிக்க காரணமாக இருக்கும் மனித உணர்வை.

அமெரிக்காவில் டூர் அடித்த அனுபவத்தில் இப்படத்தை பார்க்கும் போது, இன்னும் பார்க் டூர், விசிட்டர் செண்டர் போன்ற காண்டெக்ஸ்ட் புரிகிறது.

எந்திரன் பட விமர்சனத்தில், அது எப்படி ஒரே சயிண்டிஸ்ட் இரு உதவியாளருடன் சேர்ந்து இப்படி ஒரு ரோபோ தயாரித்தார்? என்று பலர் கேள்வி கேட்டு இருந்தார்கள். இந்த படத்தில் இரு சாப்ட்வெர் இஞ்னியர்கள், ஒரு பாதுகாப்பு காவலர் என அவ்வளவு பெரிய பார்க்கிற்கு இவ்வளவு தான் கதாபாத்திரங்கள்.

அப்போது அவ்வளவு பிரமாண்டமாக தெரிந்த படம், இப்போது பட்ஜெட் படமாக தெரிகிறது. பெரிய கதவு, சிறியதாக தெரிகிறது. அப்போது அவ்வளவு தத்ரூபமாக தெரிந்த படம், இப்போது கொஞ்சம் பொம்மை டைனோசர் படமாக தெரிகிறது. ஆனாலும், அந்த ஸ்க்ரீன்ப்ளே இன்னும் ப்ரஷ். எத்தனை படங்கள், இதே திரைக்கதை பாணியில் வந்திருக்கிறது?

அந்த வகையில் இது சந்தேகமேயில்லாமல் க்ளாசிக்.

.

Sunday, May 12, 2013

கிடா வெட்டு


சாப்ட்வேர் வேலைக்காக வெளிநாட்டுக்கு வருபவர்கள் பெரும்பாலோருக்கு வேலை பிடித்து போய், இல்லை இடம் பிடித்து போய், இல்லை கிடைக்கிற சம்பளம் பிடித்து போய், இங்கேயே இருக்க ஆசைப்படுவார்கள். விசாக்காலம் முடிந்து ஊருக்கு கிளம்புவார்கள், அல்லது நிரந்தர குடியுரிமை தேடி செல்வார்கள்.

இது ஒருபுறம் என்றால், இன்னொரு பக்கம் வேலை பிடிக்காமல், இடம் பிடிக்காமல், வந்து சில நாட்களில் இந்தியா திரும்பி செல்பவர்களும் இருக்கிறார்கள். அல்லது, வேறு சில குடும்ப தேவைகளுக்காக உடனே திரும்பி செல்வார்கள். எங்கள் டீமில் அப்படி ஒருவன். பெயரை பிரதீப் என்று வைத்துக்கொள்ளலாம்.

பிரதீப் சமீபத்தில் தான் அமெரிக்கா வந்தான். திருமணம் ஆகி சில வாரங்களில், அமெரிக்கா வந்திருந்தான். தனியாக. மனைவியை சில மாதங்களுக்கு பிறகு கூட்டிவருவதாக ப்ளான் செய்திருந்தான். சில நாட்களிலேயே, இந்தியா திரும்ப வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான். கேட்டதற்கு, தங்கைக்கு திருமண ஏற்பாடு செய்ய வேண்டும் என்றான். மாப்பிள்ளை பார்ப்பதில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமாம். அதை எல்லாம் இங்கிருந்தே போன் மூலம், இண்டர்நெட் மூலம், அங்கிருக்கும் உறவினர்கள், நண்பர்களை வைத்து செய்யலாமே என்றதற்கு, இல்லை நான் தான் போக வேண்டும் என்றான்.

இதற்கிடையில், அவனது மாமியாருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதய ஆபரேஷனும் செய்யப்பட்டது. இப்போது கண்டிப்பாக செல்ல வேண்டும் என்றான். எங்கள் மேனேஜரிடமும் சொன்னான். அவர் என்னிடம் பேச சொல்லிவிட்டார். என்னிடமும் சமாதானம் செய்து, சமாளிக்க சொன்னார். அணியில் சீனியர் என்பதால், இந்த வேலையும் எனக்கு எக்ஸ்ட்ரா. நமக்கு அவ்வளவு சமாளிப்பு திறன் கிடையாது. ரொம்ப பேசவும் மாட்டோம்.

யாராவது நான் சொல்வதற்கு எதிராக எதையாவது எதையாவது சொன்னால், என் தரப்பு நியாயத்தை சொல்லிப்பார்ப்பேன். ரொம்பவும் சச்சரவுக்குள் போக மாட்டேன். நான் சொல்வதை கேட்காவிட்டால், ஏதாவது பிரச்சினை நேரும் என்று தோன்றினால், அதையும் பாதிக்கப்பட போவோரிடம் சொல்லிவைப்பேன். அவ்வளவு தான். முதல் பாதிப்புக்கு பிறகு, நம் பேச்சை கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இப்படிப்பட்ட நான் என்ன சமாதானம் சொல்வது? அவன் பக்கம் கொஞ்சம் நியாயமும் இருக்கிறது. அதனால், லைட்டாக என்ன செய்யலாம், இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கலாம் என்று ப்ரண்ட்லியாக சொல்லி பார்த்தேன். அவனும் அதன்படி அவன் வீட்டினரிடம் பேசிப்பார்த்தான். சில நாட்கள் ஒன்றும் பிரச்சினை இல்லாமல் போனது. திரும்ப வேதாளம் முருங்கைமரம் ஏறியது. எனக்கும் புரிந்தது. திருமணம் முடிந்து சில நாட்களில் மனைவியை விட்டு வந்தவனிடம், பெண் வீட்டினர் என்ன சொல்வார்கள்? வந்து கூட இரு என்றிருக்கிறார்கள். தவிர, பெண்ணின் அம்மா வேறு படுத்த படுக்கையாக இருக்கிறார்.

எனக்கும் சரி என்று தான் பட்டது. இப்ப போனால், திரும்ப நினைத்தவுடன் வர முடியுமா? அதனால் ஒன்றும் பாதிப்பு இல்லையே? என்று அந்த கோணத்தில் யோசித்துவிட்டு முடிவெடுத்துக்கொள் என்று முடித்துக்கொண்டேன். இதற்கு மேல், மேனேஜருடன் பேசிக்கொள் என்றேன்.

எங்கள் மேனேஜர் லீவில் கிளம்புகிறார். புதிதாக இன்னொரு மேனேஜர் வந்திருந்தார். இவர்கள் இருவரும் அவனுடன் என்னையும் சேர்த்துக்கொண்டு மீட்டிங் வர சொன்னார்கள்.

அங்கேதான் கிடா வெட்டு. சுற்றி வளைத்தார்கள். அப்படி பண்ணலாமே? இப்படி பண்ணலாமே? என்றார்கள். சொந்த கதையை சொல்லி பார்த்தார்கள். அவன் எதை சொன்னாலும், அழகாக, ப்ரொபஷனலாக, எமோஷனலாக, செண்டிமெண்டலாக சமாளித்தார்கள். அவனால் எதையும் சொல்ல முடியாதபடி செய்தார்கள். முடிவில், அவனுடைய காசில் இரு வாரங்கள் இந்தியா சென்று குடும்பத்தை சமாளிக்க சொல்லி, அதை ப்ளானை ஏற்க செய்தார்கள். அடப்பாவிகளா!!! என்று நினைத்துக்கொண்டேன். எங்கிருந்து இதை கற்றுக்கொண்டார்களா?

ஆன்-சைட் வருபவர்கள் ஊரில் ஹவுசிங் லோன் எடுத்துவிட்டு வந்திருந்தால்,  அதை அடைத்துவிட்டு செல்லவே விரும்புவார்கள். கடனை அடைக்கும் வரை, எப்படியாவது இங்கேயே இருந்துவிட பிரயத்தனப்படுவார்கள். இவனுக்கு ஊரில் சொந்த வீடு இருந்ததால், அந்த பிரச்சினை இல்லை.

மீட்டிங் முடியும் போது, ஒரு மேனேஜர் அவனிடம் அக்கறையுடன் ஒரு அட்வைஸ் சொன்னார்.

”லீவுக்கு ஊருக்கு போகும் போது, ஏதாவது சொத்து வாங்கி போடு!!!”.

அதானே?
அப்படி போடு....!!!!

.

Sunday, May 5, 2013

யெல்லோஸ்டோன் வீடியோ

யெல்லோஸ்டோனில் வெவ்வேறு இடங்களில் எடுத்த வீடியோ துணுக்குகளை இணைத்து, பின்னணியில் இசை சேர்த்து வீடியோ படமாக்கியிருக்கிறேன். பார்த்துவிட்டு கருத்து சொல்லவும்.

நிறைய இடங்களில் ஷேக் ஆகியுள்ள வீடியோ, கண் வலியை ஏற்படுத்தும். எச்சரிக்கை.


.

யெல்லோஸ்டோனுக்கு ஒரு சாலை பயணம் - 6

இன்று நிறைவு நாள். அமெரிக்காவின் தொழிலாளர் தினம் - செப்டம்பர் மூன்றாம் தேதி. இது அந்த விடுமுறை சமயம் சென்ற பயணம். ஒரு நாள் கூடுதல் விடுப்பு எடுத்து பயணித்தது.

அந்த கூடுதல் தினம் இன்று தான். இன்று அலுவலகத்தில் மற்றவர்கள் வேலை பார்க்க, நாம் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் என்ற குறுகுறுப்பே ஸ்பெஷல் தான். பள்ளிக்காலங்களில் இருந்து இன்றும் இந்த குறுகுறுப்பு தொடர்ந்து வருகிறது.

நாங்கள் தங்கியிருந்த விடுதியின் மேலாளர், ஒரு இந்தியர். குஜராத்தியன். அவன் கூட கொஞ்சம் பேசியதில், மோடி அபிமானி என்று தெரிந்தது. மோடி புகழ் பாடிக்கொண்டிருந்தான்.

தோசை சுடுவது போல, அங்கிருந்த மெஷினில் சுட சுட பேன் கேக் (Pan Cake) செய்ய சொல்லிக்கொடுத்தான். சாப்பிட்டுவிட்டு திரும்ப, இரவு வந்த வழியே கிளம்பினோம். முந்திய தினம் தரவிறக்கிய ‘நீதானே என் பொன் வசந்தம்’ கேட்டுக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.



இன்று செல்லும் இடம் - கிராண்ட் டெடான் தேசிய பூங்கா. செல்லும் வழியில் ஏதோ வேலை நடந்துக்கொண்டிருந்ததால், சாலையின் ஒரு பகுதியில் ட்ராபிக்கை நிறுத்தி, ஒரு சமயம் ஒரு பக்க ட்ராபிக் என்று அனுப்பிக்கொண்டிருந்தார்கள். ஒருபக்க ட்ராபிக்கை வழி நடத்த ஒரு சிறு வண்டி வைத்திருந்தார்கள்.

கிராண்ட் டெடான், யெல்லோஸ்டோனுக்கு அருகிலேயே இருக்கும் மற்றொரு தேசிய பூங்கா. யெல்லோஸ்டோனில் அபூர்வ ஊற்றுகள் இருக்கிறதென்றால், இங்கு அழகிய ஏரிகளும், மலைத்தொடர்களும்.


யெல்லோஸ்டோனில் வெப்பத்துடன் கூடிய ரசாயன அனல் ஊற்றுகளைத் தொடர்ந்து பார்த்த கண்களுக்கு க்ராண்ட் டெடானின் ஜாக்சன் ஏரியும் அதன் பின்னணியில் இருக்கும் மலைத்தொடர்களும் குளிர்ச்சியைக் கொடுத்தது.


ஜாக்சன் ஏரி படகு பயணத்திற்கு முதலில் சென்றோம். ஆனால், சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே படகு பயணம் இருந்தது. எங்கள் நேரத்திற்கு அது சரிப்பட்டு வராததால் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு கிளம்பினோம். அங்கு நிறையவே நேரத்தை விரயம் செய்தோம். சாப்பிட சென்ற நண்பர்கள் திரும்ப வர ரொம்பவே நேரமாகியது. நான் மனைவி குழந்தையுடன் அங்கிருந்த கடைகளைச் சுற்றி வந்துக்கொண்டிருந்தேன்.


அடுத்து அங்கு இருந்த அணையின் பக்கம் கொஞ்சம் நேரத்தை செலவழித்தோம்.


யெல்லோஸ்டோன் அனல் பறக்கும் ஆக்ஷன் படமென்றால், கிராண்ட் டெடான் டூயட் பாடல்கள் கூடிய ரொமான்ஸ் படம்.


டூயட் பாடல்கள் எடுக்க ஏற்ற இடம்.


வாக்கிங் செல்ல நடை பாதைகள், குதிரை சவாரி வழிகள் என்று பொழுதை ரம்மியமாக கழிக்க சிறந்த இடம்.


மாலை வரை அங்கிருக்கும் ஏரிகளுக்கு ஏறி இறங்கி சென்று வந்தோம். மாலையானதும் ஊருக்கு கிளம்ப தொடங்கினோம். அங்கிருந்து மாலை கிளம்பினால் தான் நடுராத்திரி அல்லது அதிகாலைக்கு முன்பு ஊர் வந்து சேர முடியும். அடுத்த நாள், அலுவலகம் வேறு செல்ல வேண்டும்.

கிளம்பும் சமயம், வெளியே வரும் இடத்தில் சின்ன ட்ராபிக். சாலையின் ஓரத்தில் கார்கள் பார்க் செய்யப்பட்டு, மக்கள் ஆர்வத்துடன் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு பக்கத்தில் நிறுத்த இடம் எதுவும் இல்லையென்பதால், நானும் மனைவியும் அங்கே இறங்கிக்கொள்ள, நண்பர் காரில் முன்னே பார்க் செய்ய சென்றார்.

 

அங்கு நின்றுக்கொண்டிருந்தது, மூஸ் எனப்படும் மான். இங்கு இருக்கும் ஸ்பெஷல் மான். அதன் கொம்பு டிசைன் தான், இதன் சிறப்பம்சம்.


சுற்றி இத்தனை பேர் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாலும், அசராமல் அதன் வேலையைப் பார்த்துக்கொண்டு, போஸ் கொடுத்துக்கொண்டிருந்தது. நாங்களும் புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்பினோம்.

செல்லும் வழியில் ஒரு இடத்தில் டீ, காபியும், இன்னொரு இடத்தில் இரவு உணவும் சாப்பிட்டுவிட்டு, டென்வரில் வீட்டை வந்து சேரும் போது மணி இரண்டு இருக்கும். குறைந்த நேரத்தில் முடிவெடுத்துவிட்டு கிளம்பிய பயணம், ஒருவித குறைந்த திட்டமிடலுடன் சிறப்பாகவே முடிந்தது.

.