Sunday, November 6, 2011

நூலகம் போகத்தான் வேண்டுமா?

நூலகம் செல்வது எனக்கு பிடித்த விஷயம். என்னை பொறுத்தவரை, அது மலரும் நினைவுகளாகிப் போன விஷயம். நூலக அனுபவங்களை ஏற்கனவே இங்கு பதிந்திருக்கிறேன்.

டென்வரில் சந்திந்த சில இந்திய நண்பர்கள், என்னிடம் இங்கிருக்கும் லைப்ரரிக்கு போய் வர சொல்வதுண்டு. நான் ஆர்வம் காட்டாமல் இருந்தேன். சில காரணங்கள் - பஸ் பிடித்து சென்று வர வேண்டும். ஆங்கில புத்தகங்களாவே இருக்கும். அது கொஞ்சம் நமக்கு கசப்பான விஷயம். ஏற்கனவே சீப்பாக கிடைத்ததே என்று வாங்கிய சில ஆங்கில புத்தகங்கள் அலமாரியில் உறங்கிக்கொண்டிருக்கிறது.

ஆனால் எனக்கு தெரிந்த சில இந்திய குடும்பங்களை, குடும்பத்தலைவர்களை பாராட்ட வேண்டும். விடுமுறை தினங்களில் அவர்களது குழந்தைகளை கூட்டிக்கொண்டு, லைப்ரரி சென்றுவிடுவார்கள். கை நிறைய புத்தகங்கள் எடுத்து வந்து, பிறகு சில வாரங்கள் கழித்து திரும்ப கொடுப்பார்கள்.

இங்குள்ள அரசாங்க அமைப்புக்கள் நூலகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம். நான் பொதுவாக நகரத்தின் மையப்பகுதிகளுக்கும், சில பெரிய கடைகளுக்கும் சென்று வர, அரசு பேருந்துகளில் சென்று வருவேன். ஒன்றிரண்டு வழித்தடங்கள் தான் இருக்கும். அதில் சென்று வரும் போதே, நான் மூன்று நூலகங்களைப் பார்த்திருக்கிறேன்.

ஆனாலும், புத்தகங்களை எடுக்க இருமுறை பேருந்துகளிலும், திரும்ப கொடுக்க இருமுறை பேருந்துகளிலும் செல்ல வேண்டுமே! என்று சோம்பல் பட்டுக்கொண்டு, அங்கு செல்ல முயற்சி எடுத்ததே இல்லை.

---

சில தினங்களுக்கு முன்பு, என்னிடம் ஒரு பேச்சிலர் நண்பர், வாரயிறுதியில் லைப்ரரி சென்று வந்ததாக கூறினார். ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அவருடைய பற்றி எனக்கு தெரியும்.

“போயி?” ஆச்சரியத்துடனேயே கேட்டேன்.

“நாலைஞ்சு டிவிடி எடுத்துட்டு வந்தேன்.”

“டிவிடியா? என்ன டிவிடி?”

“படம் தான். சில இங்கிலீஷ் படங்கள்.”

அதானே பார்த்தேன்?!!!

இருந்தாலும், ‘அதான், எல்லாம் இண்டர்நெட்டில் கிடைக்கிறதே?’ என்று கூறிவிட்டு வந்தேன்.

---

நேற்று டென்வர் ஆர்ட் மியூசியம் சென்று வந்தேன். கலையில் அவ்வளவு ஆர்வமா? என்று கேட்காதீர்கள். மற்ற நாட்களில் பதிமூன்று டாலர்கள். நேற்று இலவசம். கொஞ்சம் நேரம் சுற்றிவிட்டு வெளியே வந்தப்போது, பக்கத்தில் நகரின் தலைமை நூலகம் இருந்தது.



உடன் வந்த நண்பர், இந்த ஊரில் இருந்த சாட்சிக்காக, லைப்ரரி கார்டு வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்றார். காசா, பணமா - வாங்கிக்கொள்ளலாம் என்று சென்று வாங்கிக்கொண்டோம்.



பெரிய லைப்ரரி. முழுக்க கணிணிமையமாக்கப்பட்டது. முன்னால் இருந்த கணிணிகளில் எங்கள் தகவல்களைப் பதிந்துக்கொள்ள, அங்கிருந்த அலுவலகர் லைப்ரரி கார்டு கொடுத்தார். கணிசமான மக்கள் கூட்டம் இருந்தது. வகைக்கேற்ப நிறைய ஹால்கள். ஒவ்வொரு ஹாலிலும் வகைக்கேறப நிறைய பிரிவுகள்.

நாம் முதலில் எங்கு செல்வோம்? டிவிடிகள் இருக்கும் ஹாலுக்குள் நுழைந்தோம். நிறைய ஆங்கில படங்கள். வேறு என்ன மொழிகள் இருக்கிறது என்று பார்வையை ஓட்டினேன். ஹிந்தி கண்ணில் பட்டது. சீனி கம், சாந்தினி சவுக்... கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. பிறகு ஆட்டோமேட்டிக்காக தமிழை தேடி கண்கள் ஓடியது. தெலுங்கு கண்ணில் பட்டது. ஸ்டாலின்... அடுத்தது, தமிழ் இருந்தது! கன்னத்தில் முத்தமிட்டால்...

ஒன்றிரண்டு படங்கள் தான் இருந்தாலும் எனக்கு அது வியப்பு தான். டென்வர் எங்கோ இருக்கிறது. தமிழ்நாடு எங்கோ இருக்கிறது. இது தமிழ் மொழியின், தமிழ் சினிமாவின் வீச்சா? அல்லது, இங்கிருக்கும் நூலக அமைப்பின் ஆர்வ தேடலா? தெரியவில்லை.

பிறகு மற்ற பகுதிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். மறக்காமல், எந்த புத்தகத்தையும் எடுக்காமல் வந்தோம்.

சுலபமாக சென்று வர ஒரு வழி செய்துவிட்டு, பிறகு தான் இந்த பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்.

.

No comments: