Saturday, October 15, 2011

இந்திய விசிட்

சென்ற வாரம் இந்தியா வந்து திரும்பினேன். குறுகிய கால விசிட். ஒரு வாரம் தான் இருக்க முடிந்தது. இருந்தாலும், ரொம்ப மகிழ்வாக இருந்தது.



வீடு, உறவினர்கள், நண்பர்கள், குலதெய்வம் கோவில், இந்திய உணவுகள் என அனைத்தும் சந்தோஷத்தை கொடுத்தது. நிறைய இடங்களுக்கு செல்ல வேண்டும், பல நண்பர்களை பார்க்க வேண்டும், சில படங்கள் பார்க்க வேண்டும் என டார்கெட்டுகள் இருந்தாலும், அதுவெல்லாம் முழுமை பெறவில்லை.

---

டென்வரில் இருந்து பெங்களூர் வரும் வரை எந்த சோர்வும் தெரியவில்லை. பெங்களூர் ஏர்போர்ட்டில் இருந்து வீடு செல்வதற்குள் டயர்டாகிவிட்டோம். முன்பு, இப்படி யாராவது சொல்லும் போது, (இருக்கும் இடத்தை மட்டம் தட்டுவது போல்) நானே கடுப்பாவேன். என் அனுபவ பகிர்வே, இப்போது அப்படி தான் இருக்கும் போல.

என்ன இருந்தாலும், சொர்க்கமே என்றாலும்....

பெங்களூரில் இன்னமும் பாலம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு இடத்தில் ரெடியானால், அடுத்த இடத்தில் குழி தோண்ட தொடங்கிவிடுகிறார்கள். 2003 இல் பெங்களூர் வந்தபோது, ஊருக்குள் பல இடங்களில் பாலம் கட்டிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது புறநகர் பகுதிகளில். அவுட்டர் ரிங் ரோடு, புது ஏர்போர்ட் ரோடு போன்றவை உருவானபோது, அந்த ஏரியாக்கள் வெறிச்சோடி இருக்கும். இப்போது அந்த சாலைகள் நெரிசலை தாங்க முடியாமல்,ஒவ்வொரு சந்திப்பிலும் பாலங்கள் கட்டப்படுகின்றன. ரொம்ப நாட்கள் கூட ஆகவில்லை. என்ன காரணம்? சரியான தொலைநோக்கு பார்வை இல்லாததாலா? இல்லை, தொலைநோக்கையெல்லாம் அடிச்சி நகட்டும் வேகமான நம்மூர் விரிவாக்கமா?

---

எங்கேயும் எப்போதும், முரண், வாகை சூட வா, சதுரங்கம் என பல படங்கள் இம்முறை பார்க்க தூண்டியது. எங்கேயும் எப்போதும் மட்டுமே பார்த்தேன். அதுவும் நேரமே கிடைக்காமல் செகண்ட் ஷோ சென்று பார்த்தேன்.

சுவாரஸ்யமான காட்சிகள், அதிர வைக்கும் ஒலி என்று இருந்தாலும், எனக்கு தூக்கம் கண்ணை சுழட்டியது. அவ்வளவு சோர்வு. இதையெல்லாம் மீறி, ஆசைக்கு ஒரு படம் பார்த்தாச்சு!

அப்புறம் ஆசைக்கு இரு நாட்கள் தூத்துக்குடி புரோட்டாவும் ஆச்சு.

---

தூத்துக்குடியில் சும்மாவே வெயில் பட்டையை கிளப்பும். இப்ப, பகலில் மூன்று மணி நேரம் பவர் கட் வேறு. சும்மா ஜிவ்வென்று இருந்தது. இதற்காகவே, பகலில் தூங்கிவிடுவேன். சாயங்காலமும் வெக்கைக்கு குறைச்சல் இருக்காது.

அதுவே, கிராமப்புறம் பக்கம் சென்றபோது, அங்கிருக்கும் மரங்களால் சில்லென்ற காற்று, சுகமாக இருந்தது. விட்டால், அப்படியே படுத்து அங்கேயே உருளலாம் போல இருந்தது.

---

டென்வர், வாஷிங்டன், துபாய், சென்னை, பெங்களூர் என ஐந்து ஏர்போர்ட்களை இந்த பயணத்தின் போது கண்டேன். டென்வர் சிறியது. சுற்றிலும் வெட்டவெளி. வாஷிங்டன், பகலில் மேலிருந்து பார்க்கும் போது அழகாக இருந்தது. வீடுகள் அழகாக வரிசையாக கட்டப்பட்டிருந்தது, வெவ்வெறு வடிவத்தை காட்டியது. ஆனால், இரவில் ஒளி வெளிச்சம் அவ்வளவாக இல்லை. துபாய் இரவில் மேலிருந்து பார்க்கும் போது அழகாக இருந்தது. இரவிலும் வெதுவெதுப்பாக இருந்தது.

சென்னை ஏர்போர்ட் தற்சமயம் ஊருக்கு மத்தியில் வந்துவிட்டது. எங்கும் வீடுகள். சிறிது சிறிதாக. நெருக்கமாக. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தென்னை மரத்தை பார்க்க முடிந்தது. ஆனால், ஏர்போர்ட் மோசமாக இருந்தது, சென்னையில் தான்.

விமான நிலைய கட்டிடத்திற்கு கூட்டி செல்லும் பஸ், ரொம்ப மட்டமாக இருந்தது. தீய்ந்த டயர் வாடை வந்தது. குப்பைகள். ஒழுகும் பைப்கள். வெளியூர், வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு, மோசமான வரவேற்பாக இருக்கும். புது கட்டிட கட்டுமான வேலை நடப்பதால், இப்படி இருக்கலாம். ஒவ்வொரு ஹாலின் ஓரத்திலும், நமது பாரம்பரிய சிலைகளை வைத்திருந்தது, நல்ல விஷயம். ஆனாலும், பெரிய கவர்மெண்ட் ஆபிஸாகவே, இந்த ஏர்போர்ட் இருக்கிறது.

---

கிட்டத்தட்ட வெளிநாட்டு ப்ராண்டுகள், அனைத்தும் இந்தியாவில் கடைவிரித்துவிட்டதாக தெரிகிறது. மெக் டொனால்டு, கேஎப்சி, பிஸ்ஸா ஹட், டகோ பெல்ஸ், பாப்பா ஜோன்ஸ், சப்வே, ரீபோக், நைக், அடிடாஸ் என அனைத்தையும் காண முடிகிறது. ஐட்டங்கள் இந்திய ப்ளேவரில் கிடைப்பது விசேஷம். உதாரணத்திற்கு, செட்டிநாடு பிஸ்ஸா என ஒரு விளம்பரத்தை பாப்பா ஜான்ஸில் காண முடிந்தது. மெக் டொனால்ட்ஸை கிருஷ்ணகிரி பக்கமும் ஹைவேயில் பார்த்ததாக ஞாபகம்.

---

ரோடு ரூல்ஸ் எல்லாம் எல்லா பக்கமும் ஒன்று தான் போல. அமெரிக்காவில் இருப்பது போன்ற சாலை குறியீடுகள் தான், இங்கும் இருக்கிறது. ஆனால், ஒரே வித்தியாசம். நாம் அதை கவனிப்பதில்லை. சாலையில் நாம் ரூல்ஸ்களுக்காக கவனிப்பது - ட்ராபிக் போலீஸை மட்டும் தான். நம்மூரில் சாலையில் பயணம் செய்ய, விசேஷ திறமை தேவை. அது அதாகவே ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருப்பது, இன்னும் விசேஷம்.

---

டென்வருக்கு திரும்பும் போது, நான் மட்டும் தான் வந்தேன். தனிமையின் பலன் - எழுதி கிழிக்கலாம் என்றிருக்கிறேன். ஐயோ பாவம்! நான் உங்களை சொன்னேன். :-)

.

6 comments:

மதுரை சரவணன் said...

eluthungka ... nalla anubava pathivu... penkaloor innum maarappovathillai... angkulla arasiyalum puthumai thaan.. saami mun saththiyam seiyum thalaivarkal athikam..

Sukumar said...

கிளாசிக் சரவணகுமரன் பிளாக் போஸ்ட்..!! குமரன் குடில் டைரிக்குறிப்புகளை மிஸ் பண்றோம்.. ஏதோ பார்த்து பண்ணுங்க தல

Sukumar said...

Follow up

சரவணகுமரன் said...

நன்றி மதுரை சரவணன்

சரவணகுமரன் said...

நன்றி சுகுமார். எழுதலாம் என்று தான் இருக்கிறேன்.

Thozhirkalam Channel said...

தமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/