இந்தியாவின் பெஸ்ட் செல்லர், சேத்தன் பகத், இன்றைய (04-04-2010) டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்திய பணக்காரர்களிடம் இருந்து பணத்தை உருவுவது எப்படி? என்று. ஷங்கர் படத்தில் வருவது போல், இதுவும் அறிவுபூர்வமாக இல்லாவிட்டாலும், படிக்க ஜாலியாக இருந்தது. அது இங்கே தமிழில்...
---
சமீபத்தில் நடந்த ஐபிஎல் அணி ஏலத்தில், இரு புது அணிகளை அடுத்த பத்து ஆண்டு கால உரிமைக்கு, ரூபாய் 1700 கோடிக்கு மேல் விற்ற ஐபில் தலைமை பாராட்டுக்குரியது. மூன்றே ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய கேளிக்கை வர்த்தகத்தை உண்டாக்கியதற்கு மட்டுமல்லாமல், வாங்கியவர்களால் திரும்ப சம்பாதிக்கவே முடியாத பெரும் தொகைக்கு விற்றதற்கு!
என்னத்தான் இணையத்தில் விதவிதமாக கணக்கு போட்டாலும், இந்த அணிகளை வாங்கியவர்கள், ஒரு சீசனுக்கு கிட்டத்தட்ட 170 கோடி கொடுக்க வேண்டும். இது தவிர, வீரர்கள் சம்பளம், நிர்வாக செலவு இத்யாதிகளுக்காக மேலும் 45 சி கொடுக்க வேண்டும். அதனால், இவர்கள் லாபம் பார்க்கவேண்டுமானால், வளரும் பண மதிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டாலும், இந்த அணியை வாங்கியவர்கள் ஒரு சீசனில் 215 கோடிக்கு மேல் ஐபிஎல் மூலம் வருமானம் பார்க்க வேண்டும்.
ஆனால், இதுவரை ஒரு அணி உரிமையாளரால், அதிகபட்சம் 110 கோடிக்கு மேல், சம்பாதிக்க முடிந்ததில்லை. அதனால், இந்த புது அணிகளை வாங்கியவர்கள், வாங்குவதற்கு ரொம்ப ‘ஓவராக’ கொடுத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க எந்த வணிகவியல் நிபுணரும் தேவையில்லை. குழந்தையும் சொல்லிவிடும்.

அணிகளின் மூலம் சம்பாதிக்க வேறு வழிகளும் இருக்கின்றன என்பதை ஒத்துக்கொண்டாலும், அதை தடுப்பதற்கு சில தடைக்கற்களும் உருவாகி இருக்கின்றன என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வணிகம் முழுக்க முழுக்க பார்வையாளர்களை சார்ந்தது. எளிதில் கணிக்க இயலாதது. மேலும் புது புது அணிகளை சேர்ப்பது, பார்வையாளர்களிடையே ஆர்வத்தை குறைக்கக்கூடும். ஒரு சமீபத்திய ஆய்வின்படி, ஐபிஎல் கிரிக்கெட்டை பார்ப்பவர்களை விட, அதைவிட குறைந்த செலவில் தயாரிக்கப்படும் வேறு சில தொலைக்காட்சி தொடர்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் என தெரியவந்துள்ளது.
இருந்தும், இந்தியாவின் மிகப்பெரிய வியாபார சாம்ராஜ்யங்கள், பணத்தை இதில் கொட்ட ஆர்வமாக இருக்கிறார்கள். சாதாரணமாக நமக்கே தெரியும் கணக்குகள், அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? அவர்களிடம் இல்லாத நிபுணர்களா? தெரிந்தும் எப்படி இதற்கு செலவழிக்கிறார்கள்?
இது வெறும் லாப நோக்கத்தை சார்ந்தது அல்ல. அதையும் தாண்டி, வேறு சில விஷயங்கள் இருக்கிறது. உடனடி புகழ் வெளிச்சம். இதை அவ்வளவு சுலபமாக வாங்கிவிட முடியாது. உங்களிடம் கோடி கோடியாக பணம், வங்கி கணக்கில் கொட்டிக்கிடக்கலாம். அதற்காக, உங்களால் பாலிவுட் பெரும் தலைகளுடன், கவர்ச்சி கன்னிகளுடன் உட்கார்ந்துக்கொண்டு கிரிக்கெட் பார்க்க முடியுமா? ஒவ்வொரு முறையும் பவுண்டரி அடிக்கும் போது, ஆஸ்திரேலியா முன்னணி வீரர்களுடன் கைக்குலுக்கிக்கொள்ள முடியுமா? விளையாட்டிற்கு பிறகான பார்ட்டியில், சியர்லீடர்ஸ்களுடன் சியர் சொல்லிக்கொள்ள முடியுமா? இதை எல்லாவற்றையும் விட, இதையெல்லாம் நீங்கள் அனுபவிப்பதை உலகமே பார்க்கும் சந்தர்ப்பத்தைத்தான் உங்களால் ஏற்படுத்த கொள்ள முடியுமா?

இவை எதுவும் இல்லாமல், உங்களிடம் எண்ணெய் கிணறு இருந்தால் என்ன? விமானங்கள் இருந்தால் என்ன? கடுப்பை கிளப்பும் முதலீட்டாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் லாபம் சம்பாதித்துக்கொடுப்பது மட்டுமா உங்கள் வேலை? பாஸு, உங்ககிட்ட பணம் இருக்குது. அது இருக்கு’ன்னு உலகத்துக்கு காட்ட வேண்டாமா? ’எரிவாயு நிறுவனம்’ வைத்திருக்கிறேன் என்று சொல்வதை விட, ‘கொச்சி குளுமை’யை வைத்திருக்கிறேன் என்று சொல்வதற்காக, ஆண்டுக்கு 100 கோடி செலவழித்தால் தான் என்ன?
அது தான் உண்மை. ஒரு ஐபிஎல் அணியை வாங்குவதின் மூலம், இன்ஸ்டண்ட் புகழ், கவர்ச்சி, இளமை, துடிப்பு இவையனைத்தையும் வாங்குகிறீர்கள். வாழ்வை தாண்டிய இமேஜை கிடைக்க பெறுகிறீர்கள். இதற்காக, வேறெந்த வரமோ, திறமையோ தேவையில்லை. பணம். அது ஒன்றே போதும்.
ஐபிஎல் மூலம் வேறு சில வணிக பாடங்கள் கிடைத்தாலும், எனக்கு இந்திய பணக்காரர்களிடம் இருந்து பணம் பெறுவது குறித்த புரிதல் கிடைக்கிறது. மேல்நாட்டினர் போலில்லாமல், இந்திய செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தில் மிக குறைந்த சதவிகிதத்தையே பொது சேவைக்கு அளிக்கிறார்கள். இது அவர்களது சொந்த ஆர்வத்தை பொறுத்ததாக இருக்கலாம். நிறைய தன்னார்வ அமைப்புகள், இவர்களிடம் இருந்து மிக சிரமப்பட்டே உதவி பெறுகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு செலவிடுவதின் மூலம், எவ்வித லாபமும் நிறுவனங்களுக்கு ஏற்பட போவதில்லை என்பது காரணமாக இருக்கலாம். ஆனால், இதே போல், லாபம் ஈட்டி தராத கிரிக்கெட் அணிகளுக்கோ, மகிழ்ச்சியுடன் தங்கள் பர்ஸில் இருந்து பெரும் தொகையை எடுத்துக்கொடுக்கிறார்கள். லாபமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுடைய கௌரவத்தை கட்டி காத்தால் போதுமானதாக இருக்கிறது.

இப்படி இவர்களுடைய இமேஜை மேம்படுத்தி காட்டுவதில் எனக்கொன்றும் வருத்தமில்லை. இது போல, நம்மிடம் இதற்கான வாய்ப்புகள் ஏராளம் இருக்கிறது. இவர்களுடைய பெயர்களை பாலத்திற்கு வைக்கலாம், ரோட்டிற்கு வைக்கலாம், ரயிலுக்கு வைக்கலாம், ரயில்வே ஸ்டேஷனுக்கு வைக்கலாம். (சுடுகாட்டுக்கு கூட வைக்கலாம்.) இதற்கான ஏலத்தை நடத்தி, இவர்களிடம் பணம் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஒரு அழுத்தமான போட்டியை உருவாக்கிவிட்டால் போதும். அடுத்த நாள் பேப்பரில் பெயர் வருவதற்காக, ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு ஏலத்தில் ஜெயிக்க முயலுவார்கள். இப்படி வரும் பணம், சில நல்ல காரியங்களுக்காக பயன்படுமானால், இதில் என்ன தவறு?
இன்னும் பெரும் பணத்தை பெற, அரசு இவர்கள் பெயரை சிறிது காலத்திற்கு நாணயத்திலோ, ரூபாய் நோட்டிலோ போடலாம். சில அரசு கல்லூரிகளுக்கும் இவர்கள் பெயரை வைக்கலாம். பணத்திற்காக மட்டுமில்லாமல், தங்கள் பெயரில் இருக்கும் கல்லூரியின் தரத்தை உயர்த்த இவர்கள் முயலுவார்கள் என்பதற்காகவும். பின் தங்கள் பெயரில் இருக்கும் கல்லூரி, மோசமான கல்வி அளிப்பதை யார் தான் விரும்புவார்கள்?
குறைந்த அதிகாரம் படைத்த 'டம்மி’ பதவிகளை உருவாக்கி, அதையும் ’லம்ப்’பாக விற்கலாம். ’இரண்டாம் துணை ஜனாதிபதி’ என்பது போல ஒரு பெயர், இவர்களுக்கு ‘உர பாக்டரி அதிபர்’ என்ற பெயரை விட பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும்.
இந்த ஐடியாக்கள் கேனத்தனமாக தெரிந்தாலும், சொல்ல வருவது புரிந்திருக்கும். ஈகோ என்பது ஒரு மனிதனுக்குள் இருக்கும் மிருகம். அவன்/அவள் எதை சாதித்திருந்தாலும், இந்த மிருகத்திற்கு தீனி தேவை. அதை சரியாக குறி வைத்து அடித்து, அணியின் மதிப்பை விட பல மடங்கு விலைக்கு விற்றதற்காகவும், அப்படி வாங்கியவர்களையும் மகிழ்ச்சியோடு சிரிப்புடன் வைத்திருப்பதற்காகவும், மோடியும் ஐபிஎல் தலைமை குழுவில் மற்றவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள். இது போல், மற்ற அமைப்புகளும், அரசும், ’பெத்த பேர்’களை பெரும் தொகைக்கு விற்று, வேறு நல்ல காரியங்களுக்கு அதை பயன்படுத்த முன் வர வேண்டும்.
அதே சமயம், உங்களிடம் 1700 கோடி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வருந்தாமல் உங்களுடைய ராசிக்கு நன்றி சொல்லுங்கள். பணம் அதிகம் இருந்தாலும் சமயங்களில் நல்லதிற்கல்ல. அது முட்டாள்தனமான காரியங்களை செய்ய தூண்டும். அதற்கு பதில், குதிக்கும் சியர்லீடர்ஸை டிவியில் பார்ப்பது பெட்டர்.
.