Thursday, June 28, 2012

கிச்சனில் கலைவண்ணம் கண்டாய்!

போன பதிவில் சமைப்பதில் பிஸியாக இருந்ததால், முன்பு நிறைய எழுத முடியாமல் போனது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அப்படி என்னவெல்லாம் செய்து கிழித்தேன் என்று இந்த பதிவில் பார்க்கலாம். என் சாதனைகளை நானே மறந்துவிட கூடாதென்பதாலும் இவை இங்கே.

----

தயங்கி தயங்கி ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்து, எதையும் விட்டு வைக்காமல், செய்ய நினைத்த எல்லாவற்றையும் செஞ்சு பார்த்தாச்சு!!!

பெங்களூரில் இருக்கும் போது, அலுவலகத்தில் இரவு வீட்டிற்கு செல்ல நேரமாகும். அதனால், சாயங்கால வேளையில் வயிற்றுக்குள் எதையாவது தள்ளவேண்டி இருக்கும்.

அலுவலகத்தை விட்டு வெளியே வந்தால், வடை, பஜ்ஜி, போண்டா, சாட் வகையறாக்கள் என்று பல ஐட்டங்கள் கிடைக்கும். அந்த பழக்கத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட முடியுமா? இங்கே அலுவலகத்தை விட்டு வந்த பிறகு, தனியாக என்ன செய்ய?

எதையாச்சும் செஞ்சு சாப்பிட வேண்டியது தான்.

உளுந்த வடை, பருப்பு வடை, பஜ்ஜி, சுண்டல் என்று நம்மூர் சாலையோர பலகார மணம் எங்கள் வீட்டு கிச்சனிலும் அடிக்கும்.







இது தவிர, சண்டே என்றால், மூளை மிகவும் வேலை. என்ன செய்யலாம் என்று? சிக்கனா, மட்டனா, மீனா, இறாலா என்று முடிவு செய்து வேலையில் இறங்கிவிட்டால், முடிக்க மணி மூன்றாகிவிடும். சில நாட்களில், சில காம்பினேஷனுக்கு ஆசைப்பட்டு, வேலையில் இறங்கினால், கை, கால் வலியெடுக்க தொடங்கிவிடும். அசதியில் சாப்பிட்டுவிட்டு, தூங்கினால், எழும்போது இரவாகிவிடும். சண்டே ஓவர்.

அப்படி ஒருநாள் செய்த சிக்கன் பிரியாணியும், மட்டன் சுக்காவும்.



திஸ் இஸ் மட்டன் சூப்!!!



வீட்டுக்குள் இருந்த திறமை, ஒருநாள் வெளிஉலகிற்கும் தெரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அலுவலகத்தில் ஒருநாள் கூட்டாஞ்சோற்றிற்கு (Potluck) ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு மமதையில் குலோப்ஜாமூன் என்று சொல்லிவிட்டேன். ட்ரை பண்ணலாம், சரியாக வராவிட்டால், போயி கடையில் வாங்கி வந்துவிடலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டேன்.

என்னவொரு ஆச்சரியம். அற்புதமாக வந்தது. என்ன சைஸ் தான், கொஞ்சம் ஓவராக இருந்தது. அதனால் என்ன? நமது புகழ் குலோப் ஜாமூன் வடிவில், அலுவலகத்தையும் சென்றடைந்தது.



அலுவலகத்தில் சாப்பிட்ட ஒரு நண்பர் வீட்டிற்கு சென்று, அவருடைய மனைவியிடம், ஜாமூன் புகழ் பாட, அவர் மனைவி என் மனைவியிடம் பேச்சு வாக்கில் இதை சொல்ல, என் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் பொறாமையுடனேயே இதை என்னிடம் சொன்னார். ஒன்று புரிந்தது. கணவன் நன்றாக சமைத்தால், மனைவிக்கு பிடிப்பதில்லை.

எப்போது இப்படி ஆரவாரமான கமர்ஷியல் உணவுகள் என்றில்லை. அவ்வப்போது, யதார்த்தமான முயற்சிகளும் உண்டு. இதோ இந்த கேப்பை கூழும் அப்படிப்பட்ட ஒன்று தான்.



கெலாக்ஸ், ப்ரெட் போன்றவற்றை விட, எனக்கு பிடித்த பிரெக்பாஸ்ட் இதுதான்.

9 comments:

இராஜராஜேஸ்வரி said...

"கிச்சனில் கலைவண்ணம் கண்டாய்!"

பாராட்டுக்கள்..!!

துளசி கோபால் said...

சூப்பர் சமையல்!!!

இனிய பாராட்டுகள்.

ஆமாம்........ சமைச்சா மனைவி கண்ணில் காமிக்க மாட்டீங்களா?

நண்பரின் மனைவி மூலமாக சேதி தெரிஞ்சால் மனைவிக்குப் பிடிக்காதுதான்:(

சரவணகுமரன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி

சரவணகுமரன் said...

ஹா ஹா... :-)

துளசி மேடம், நானும் சொல்லினேன் தான். :-)

அது எப்படி அவராகவே ருசியாக செய்து சாப்பிடலாம்? நாமல்லவா ருசியாக சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மனைவி நினைப்பது இயல்பாக இருக்கலாம்!

எது எப்படியோ இப்போதெல்லாம் கிச்சன் பக்கம் விடுவதேயில்லை.

துளசி கோபால் said...

//எது எப்படியோ இப்போதெல்லாம் கிச்சன் பக்கம் விடுவதேயில்லை. //

யாரை? மனைவியையா??????

சரவணகுமரன் said...

என்னை’ங்க!!!

Anonymous said...

Kamarshil vunavugal and yadhartha muyarchi... Super!

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் கணவன் சமைப்பது மனைவிக்கு பெரிய தலைவலி.என்ன செய்தாலும் உடனே தப்பு கண்டுபிடிச்சுடுவாங்க.போட்டதை சாப்பிட மாட்டாங்க. அதான் மனைவிகளுக்கு பிடிக்கவில்லை.

சரவணகுமரன் said...

சரியா சொன்னீங்க அமுதா கிருஷ்ணா. ஆனா, நான் எதுவும் சொல்றதில்லைங்க!!!