Tuesday, February 26, 2013

ஒரு உடலின் கதை


நான் பள்ளியில் படித்தக்காலத்தில், தனுஷ் போல ஒல்லியாக இருந்தேன். எடையைக் கூட்ட என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த காலம் அது. அசைவ உணவின் மீது பெரிய ஈடுபாடில்லாத அந்த காலத்தில், உடலில் கொஞ்சம் சதை வர ஆசைப்பட்டு, அசைவ உணவு ஒரு ஆர்வத்துடன் உண்ண ஆரம்பித்தேன். இருந்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை.

கல்லூரியில் சேர்ந்தபிறகும் அதே நிலை. முட்டை தோசை சாப்பிட்டால், உடல் பருக்கும் என்று கூட இருந்த ஒரு விஞ்ஞானி கூற, ஹோட்டல் செல்லும்போதெல்லாம் நான் உண்ணும் உணவானது, முட்டை தோசை.

கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் சிறிதாக முன்னேற்றம் ஏற்பட தொடங்கியது. பிறகு, வேலைக்கு சேர்ந்த பிறகு, இன்னும் கொஞ்சம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நிறைய ’கொஞ்சம்’கள் சேர்ந்தால் என்ன ஆகும்? குண்டாகும்.

அதற்காக நான் குண்டு என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. 5’10’’ உயரத்திற்கு 70-72 கிலோக்கள் என்பது BMI தத்துவத்தின்படி நல்ல எடை என்பதால், அதற்கு மேல் செல்லக்கூடாது என்பது நோக்கமானது. இந்த காலக்கட்டத்தில் எடையைக் கூட்ட வேண்டும் என்ற எண்ணம், கட்டுப்படுத்த வேண்டும் என்று எண்ணத்திற்கு மாறியது.

70 இல் இருந்து 72 ற்கு ஊசலாடிய எடையை, அவ்வப்போது சைக்கிளிங், ரோப் எக்சசைஸ் என்று கட்டுக்குள் வைத்திருந்தேன். பொதுவாக, கல்யாணம் ஆவதற்கு முன்பு இளைஞர்கள் எடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே அது இருந்தது.

கல்யாணம் ஆனது. இம்மாதிரியான நடவடிக்கைகள், எம்மாதிரியான உடன்படிக்கைகளும் இல்லாமல் நின்று போனது. அமெரிக்க உணவு பழக்கமும் சேர்ந்துக்கொள்ள, சீஸ்ஸை பீட்ஸாவில் அள்ளிப்போட்டால், கேள்விக்கேட்காமல் தின்ன தொடங்க, எடை சைலண்டாக கூடியது. 75 வரை ஒகே என்று இருந்த மனம், 76 தொட்டபோது ஆலாரம் அடித்தது. முதல் முறையாக, எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வர தொடங்கியது.

எண்ணம் தான் வந்ததே ஒழிய, எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. குழந்தை பிறந்த பிறகு, மனைவிக்கும் எடை ஒரு பிரச்சினையாக, அவர் சில பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். விரதமிருந்துக்கொண்டு சமைத்தாலும், நான் வக்கனையாக சாப்பிட்டுக்கொண்டு வந்தேன்.

சில வாரங்களுக்கு முன்பு, யாரோ நல்ல ரிசல்ட் தருகிறது என்று  சொன்னார்கள் என்று ஜிஎம் வெயிட் லாஸ் டயட் பற்றி சொன்னார். நான் இந்த பெயரைக் கேள்விப்பட்டதில்லை என்றாலும், நான் முதலில் பணியாற்றிய அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிந்தவர், இந்த முறையை பின்பற்றி வந்தது, இன்னமும் நினைவில் இருந்தது.



இணையத்தில் இதை பற்றி நிறைய இருந்தாலும், சுருக்கமாக சில வரிகள் இங்கே. இது ஒரு ஏழு நாட்கள் டயட் ப்ரோகிராம். முதல் நாள், பழங்கள் மட்டும். இரண்டாம் நாள், காய்கறிகள் மட்டும். மூன்றாம் நாள், பழமும் காய்கறியும். பிறகு, பாலும், வாழைப்பழமும் என்று இப்படி செல்லும். இதை கடைப்பிடித்தால், ஒரு வாரத்தில் நாலைந்து கிலோக்கள் குறையும் என்று பலபேர் வாக்குறுதி கொடுத்திருந்தார்கள்.

இதன் நம்பகத்தன்மை பற்றி நிலையான தகவல் எங்கும் இல்லை. இது, சும்மா புரளி என்றும் உடலுக்கு நல்லதில்லை எனவும் இணையத்தில் பலதரப்பட்ட பக்கங்கள் இருக்கின்றன. இப்படி சாப்பிடுவதால், ஒரு வாரத்தில் எடை குறைந்தாலும், பிறகு ரெகுலராக சாப்பிட ஆரம்பிக்கும்போது, வழக்கம்போல் எடை கூடி விடும் என்று பலர் கூறியிருந்தனர். இதனால், எனக்கும் இதன் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், மனைவி கடைப்பிடிக்க போவதாக கூறியதும் எதற்கு அவநம்பிக்கையைத் தெளிக்கவேண்டும் என்று ஒன்றும் சொல்லவில்லை. நான் மட்டும் நேரா நேரத்திற்கு நன்றாக சாப்பிட்டு வந்தேன்.

நடுவில் ஒருநாள் Papa Johns நடத்திய ஒரு போட்டியில் வென்று, ஒரு பீட்சா ப்ரீயாக வீட்டுக்கு வந்தது. மனைவிக்கு பீட்சாவை கண்டதும், கட்டுப்பாடு தவிடுபொடியானது. ஐந்தாம் நாளில் கைவிட்டுவிட்டார். பெரிதாக எடைகுறைவு ஒன்றுமில்லை.

அதற்கு பிறகு, இரண்டு வாரங்கள் கழித்து திரும்பவும் ஒரு வாரம் இதை ஃபாலோ செய்ய போவதாக கூறினார். இதை கூறிய சமயம், எனக்கு வயிறு புடைப்பாக இருக்க, நான் சேர்ந்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டேன். கம்பெனி கொடுத்தால் சிறப்பாக செல்லும் என்பதும் அதற்கு ஒரு காரணம். ஆனால், எடை குறையும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. வயிறும், உடலும் சுத்தமாகும் என்பதில் நம்பிக்கை இருந்தது.

சென்ற திங்கள் கிழமை, சோதனை தொடங்கியது. அதற்கு முந்தைய வாரயிறுதியில் நிறைய பழங்கள், காய்கறிகள், ப்ரௌன் ரைஸ் போன்றவை வாங்கி ரெடியாக இருந்தோம்.

முதல் நாள், பழங்கள். அன்று விடுமுறை நாள். ஆப்பிள், தர்பூசணி, அன்னாசி சாப்பிட்டோம். இரவுக்குள் எனக்கு வெறுத்துப்போனது. இரவு படுக்கும்போது, தலை கொஞ்ச பாரமாக இருந்தது போலவும் இருந்தது. மாலை சிறிது தூங்கியிருந்ததால், இரவு படுத்தவுடன் உறக்கம் வரவில்லை. வயிறு காலியாக இருந்ததும் ஒரு காரணம். புரண்டு புரண்டு படுத்து, ஒரு வழியாக தூங்கினேன்.

காலையில் இது நமக்கு தேவையா என்றொரு நினைப்பு வந்தாலும், எடை பார்க்கும்போது கொஞ்சம் குறைந்திருந்தது ஆறுதலளித்தது. ஒரு உருளைக்கிழங்கை அவித்து, உப்பும் மிளகும் போட்டு சாப்பிட்டு விட்டு அலுவலகம் சென்றேன். அலுவலக வேலையில், இந்த நினைப்பு அதிகம் இல்லை. மதியம், சாலட். ஆடு மாதிரி மென்றுவிட்டு, திரும்ப வேலையில் மூழ்கினேன். வயிற்றில் என்னமோ மிஸ்ஸிங் என்பது போலவே இருந்தது. மாலையில், கொஞ்சம் கொண்டைகடலை அவித்து சாலடில் போட்டு சாப்பிட்ட பிறகு, ஒரு திருப்தி வந்தது. இப்படி சாப்பிட கூடாது என்றாலும், ஒரு ஆறுதல் தேவைப்பட்டது.

அடுத்த நாள் எடை, 74 க்கு வந்தது. கொஞ்சம் மகிழ்ச்சியுடன், மூன்றாம் நாளை தொடங்கினேன். காலையில் ஆப்பிளும், கிவியும். மதியம், கொண்டைகடலை, மாங்காயுடன் சாலட். நம்மூர் பீச் சுண்டல் பீலிங். திரும்பவும் வயலேஷன். இரவு, உப்பு கார பொடியுடன் சோளம். இதையும் சாப்பிட யாரும் சொல்லவில்லை. சுவைக்காக இதை உண்டேன்.

எடை 73 சொச்சத்திற்கு வந்தது. அடுத்த நாள், பாலும், வாழைப்பழமும். மதியம், மனைவி ஒரு சூப் வைத்துக்கொடுத்தார். அதற்கு பெயர், வொண்டர் சூப்பாம். மூன்று நாட்களுக்கு, பிறகு ஒரு சமைத்த உணவு. நல்லாவே இருந்தது.  எடை 73க்கு வந்தது. ஐந்தாம் நாள், காய்கறிகளை ப்ரவுன் ரைஸுடன் போட்டு, எண்ணெய் இல்லாமல், எந்த வதக்குதலும் இல்லாமல், ஒரு உணவு வகை. நான்கு நாட்களுக்கு பிறகு அரிசி என்பதால், நன்றாக உள்ளே இறங்கியது. 72 சில்லறைக்கு எடை சென்றது. அடுத்த நாளும், இது போன்ற அரிசி உணவு, பழங்களுடன் உள்ளே சென்றது. தொடர்ந்து, அரிசி என்பதாலோ என்னவோ, அதற்கு பிறகு எடையில் பெரிய இறக்கம் இல்லை.

எடை 72.2 செல்ல, ஏழாம் நாளில் எனக்கு இதற்கு மேல் இதை கடைப்பிடிக்க தோன்றவில்லை. நன்றாக சாப்பிடவேண்டும் என்று ரெகுலர் உணவை ஆரம்பித்தால், அதையும் நன்றாக சாப்பிட முடியவில்லை. அடுத்த நாளும், அதே எடையில் நின்றது.

 
அவ்வளவுதான். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாலும், அதை முழுமையாக கடைப்பிடிக்க முடியவில்லை. எல்லா நாட்களிலும், தொடர்ச்சியாக எப்போதும்போல் ஜிம் சென்று லைட்டாக வாக்கிங் போய் வந்தேன். ஒவ்வொரு நாளும், அடுத்த நாள் நிறுத்திவிட வேண்டும் என்று தோன்றினாலும், குறைந்து வந்த எடை, இன்னொரு பக்கம் மோடிவ்வேட் செய்துவந்தது. உடலை லைட்டாக உணர்கிறேன்.

எப்படியும் சில நாட்களில் பழையபடி சாப்பாட்டை ஒரு கட்டு கட்டி, பழைய எடைக்கு வந்துவிடுவேன் என்றாலும், இந்த ஒரு வார பரிசோதனை, உடல் எடை கட்டுப்பாட்டின் மீதான நம்பிக்கையை கொடுத்தது.

இது சரியான வழிமுறையா, இல்லையா என்பதும் எனக்கும் தெரியாது. ஆனால், பட்டினி கிடக்காமல், வயிறு முட்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடலாம் என்பதால், பெரிதாக கெடுதல் இருக்காது என்பது என் நினைப்பு. எண்ணெய் சேர்க்காமல், எதையும் பொறிக்காமல் ஒரு வாரம் உண்பது என்பது நல்லதே என்று நினைக்கிறேன்.

இந்த முறையை கடைப்பிடிக்கும் போது, அந்த வாரத்தில் எந்த விசேஷமும் இல்லாமல் இருப்பது போல் பார்த்துக்கொள்வது அவசியம். இல்லாவிட்டால், அதனால் ஏற்படும் மனக்குழப்பங்கள், பெரிய தொல்லை. இப்படிதான் போன வாரம் ஒருநாள் அலுவலகத்தில் ஒரு மீட்டிங் வைக்க, அதில் எனக்கு முன்பு நிறைய சமோசாக்கள் அடுக்கி வைக்க, ரொம்ப கஷ்டப்பட்டு போனேன். என் நண்பர்கள் எல்லாம் ஆளுக்கு ரெண்டு மூன்று என்று எடுத்த உண்ண, எனக்கு நானே உள்ளூக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டேன். (குமரா, சமோசாதானே? அடுத்த வாரம், கடைக்கு போய் நாலு சமோசா வாங்கி சாப்பிடுறோம்!!)

பழையபடி, ஒரு நல்ல BMI  இடைவெளிக்குள் வந்துவிட்டேன். இன்னும் சில வாரங்களோ, மாதங்களோ கழித்து ஒரு வாரம் மீண்டும் இருக்க வேண்டும். எடைக்காக இல்லாவிட்டாலும், ஒரு சுத்திகரிப்புக்காக. அப்ப, மனம் என்ன சொல்கிறதோ, தெரியவில்லை!!!

.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா..ஹா... நல்ல அனுபவம்... என்ன செய்வதென்று உங்கள் மனதிற்கு தெரிந்துள்ளது... மனஉறுதி தான் மேம்பட வேண்டும்... அவ்வளவே...

ANaND said...

ஹா ஹா ,, பாஸ் நானும் இந்த GM டயட்ட டவுன்லோட் பண்ணிவச்சிகிட்டு ட்ரை பண்ணலாமா வேணாமான்னு ஒரு ஆறுமாசமா யோசிசிகிட்டு இருந்தன்.... நீங்க சொன்னதுக்கு அப்பறம் கண்டிப்பா ட்ரை பண்ண போறேன்

Giri Ramasubramanian said...

நல்ல விஷயம். படிக்க சுவாரசியமா இருக்கு. பின்பற்றுதல் ரொம்ப சிரமம்.

உங்க பதிவு படிச்ச பாதிப்புல வாரம் ஒருநாள் இயற்கை உணவுன்னு மாறிக்க உந்துதல் ஏற்படுது. தொடர்ந்து கடைபிடிச்சேன்னா உங்களுக்கு சொல்றேன்.

நன்றி

சரவணகுமரன் said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

சரவணகுமரன் said...

பண்ணிட்டீங்களா, ஆனந்த்?

சரவணகுமரன் said...

என்னாச்சு, கிரி?