Wednesday, September 3, 2008

இசையருவியின் “தமிழ் இசை விருது”

கலைஞர் டிவி ‘விடுமுறை தின’ சிறப்பு நிகழ்ச்சி விளம்பரம் கோமாளித்தனமாக இருந்தாலும், அன்று ஒளிப்பரப்பான “தமிழ் இசை விருது” நிகழ்ச்சி, தமிழ் திரைப்பட இசையை கவனித்து ரசித்து வருபவர்களுக்கு வித்தியாசமாகவும், தங்களுக்கு பிடித்த இசை கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதை கண்டு சந்தோஷமடைய ஒரு வாய்ப்பாகவும் இருந்தது.



பொதுவா விருது வழங்கும் விழாக்களில் இசை சம்பந்தமாக சிறந்த இசையமைப்பாளர், பாடகர், பாடகி, கவிஞர் என்று நாலு விருது வழங்குவார்கள். ஆனால் இந்த விழாவில், சென்செஷனல் ஆல்பம், கிரேஸி சாங், ரீ-மிக்ஸ் சாங் என்று எக்கச்சக்கமான விருதுகள் கொடுத்தார்கள். அதனால் ஒரே விழாவில் ரஹ்மான், ஹாரிஸ் என்று பலரும் கலந்து கொண்டார்கள்.

ஹாரிஸுக்கு விருது வழங்கும் ஜீவாவின் மனைவி



ஸ்ருதி கமலஹாசன் “அன்பே சிவம்… அன்பே சிவம்…” பாடலை பாடினார். எல்லோரும் ஆஹா ஒஹோ என்று புகழ்ந்தார்கள். எனக்கென்னமோ, அப்பா பாடியதை குதறிய மாதிரி தான் தெரிந்தது. ஒருவேளை, நம்ம ஞானம் அவ்வளவுதான் போலிருக்கு. கேட்க, கேட்க பிடிக்குமாயிருக்கும்.



விருதுகளுக்கு நடுவே குத்து ஆட்டம் (ஸ்னிக்தா, மேக்னா நாயுடு) போட்டத்திற்கு பதிலாக, இசையமைப்பாளர்களை இசையமைக்கவோ, பாடகர்களை பாடவோ வைத்திருக்கலாம்.



விஷுவலுக்காக ஷங்கருக்கு விருது



ஹாரிஸ் ஜெயராஜ், இசையமைப்பாளர் ஆன பிறகு, தற்போதுதான் ரஹ்மானை சந்திப்பதாக கூறினார்.



ரஹ்மான் பேசும்போது தனக்கு குமுதம் கேள்வி-பதிலில் அதிகமான கேள்விகள், “ஏன் முன்புபோல் இப்போது மெலடி அதிகம் இல்லை?”, “ஏன் ரீ-மிக்ஸ் செய்கிறீர்கள்?” என்று வருவதாகவும், இது இசையமைப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் உள்ள இடைவெளியைக் காட்டுவதாக கூறினார். இதை வருங்காலத்தில் தவிர்க்க முயலுவேன் என்றும் கூறினார்.