Sunday, July 10, 2011

பாபநாசம்

என்னுடைய பால்ய கால நண்பன் ஒருவன் பேசினால், சுற்றி இருப்பவர்கள் அனைவரும் சிரித்துக்கொண்டே இருப்போம். டைமிங்கில் பின்னுவான். பள்ளி காலம் வரை ஒன்றாகவே சுற்றி வருவோம். கல்லூரிக்காலத்திற்கு பிறகு, நான் ஊர் செல்லும் போது மட்டும் சந்தித்து பேசுவோம். அவனுக்குள் ஒரு காதல் இருந்தது. கல்யாணம் பற்றி யோசிக்காத, சந்தோஷ தருணங்களை மட்டுமே கொண்ட காதல் அது. எல்லாம் நன்றாகவே சென்றுக்கொண்டிருந்தது.

ஒருமுறை நான் ஊர் சென்ற போது, அவன் ஆஸ்பத்திரியில் இருந்தான். அப்பெண்டிசிடிஸ் ஆபரேஷனுக்காக. அப்பெண்டிசிடிஸ் தானே? என்று பெரிதாக எங்களுக்குள் எந்த வருத்தமும் இருக்கவில்லை. அச்சமயம் நான் ஊரில் இருந்தவரை, மதியம் ஆஸ்பத்திரி சென்று அவனிடம் பேசிக்கொண்டிருப்பேன். வயிற்றில் வலி கடுமையாக இருந்தாலும், சிரித்து பேசிக் கொண்டிருப்போம்.

அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில், அவனுடைய அம்மா ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். இந்த அப்பெண்டிசிடிஸ் தவிர, அவனிடம் இன்னொரு பிரச்சனையும் இருக்கிறதாம். ஏதோ மருத்துவ பெயரில் ஒரு நோயைச் சொன்னார்கள். ரத்தத்தில் இருந்து கழிவுகளைப் பிரிக்கும் சிறுநீரகம், சிறுநீருடன் கழிவுகளை மட்டும் அனுப்பாமல், ரத்தத்தில் இருக்கும் உடலுக்கு தேவையான சமாச்சாரங்களையும் சேர்த்து அனுப்பும் குறைப்பாடு சம்பந்தப்பட்டது. என்னால் இதற்கு மேல் அதை புரிந்துக்கொள்ள முடியவில்லை.

இப்பிரச்சினைக்கு மூலக்காரணம் என்று எதுவும் கிடையாது. எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத என் நண்பனுக்கு இப்பிரச்சினை வந்தது - கொடுமையானது.

அதன்பிறகு, ஏகப்பட்ட மருத்துவமனைகளுக்கு சென்றார்கள். பத்திய உணவு மட்டுமே சாப்பிட்டு, மாத்திரைகள் எடுத்துக்கொண்டான். அவனுடைய அப்பாவின் ரிட்டயர்மெண்ட் பணம், மருத்துவத்திற்கே செலவானது. பின்பு, சென்னைக்கு குடி மாறினார்கள். பயணம் செய்ய முடியாததால், வேலைக்கும் அவனால் செல்ல முடியவில்லை.

எப்போதாவது போன் செய்வேன். அந்நிலையிலும் ஏதேனும் ஜோக் சொல்லி சிரிப்பான்.

ஒருநாள் அதிகாலை எங்கள் குருப்பில் இருக்கும் இன்னொரு நண்பன் போன் செய்தான். அதிகாலை போன், எப்போதும் கெட்ட செய்திகள் தான் கொண்டு வருமோ, என்னமோ! நான் தூக்கக்கலக்கத்தில் இருந்து சுதாரிப்பதற்குள், அந்த செய்தியைச் சொன்னான்.

அவன் இறந்துவிட்டான்.

---

எல்லாம் முடிந்து ஒரு வருடத்திற்குள், அவனுடைய குடும்பத்தில் சில காரணங்களுக்காக அவனுடைய தம்பிக்கு திருமணம் நிச்சயித்தார்கள். என் நண்பனுக்கு பிடித்த பாபநாசத்தில் கல்யாணம் என்று முடிவு செய்தார்கள்.

அவனுக்கு ஏன் பாபநாசம் பிடித்தது என்று தெரியவில்லை. ஊரில் இருக்கும் போது, அடிக்கடி செல்வான். என்னுடைய மற்ற நண்பர்களும், அவனுடன் சென்றிருக்கிறார்கள். கடைசிக்காலத்திலும், அங்கு செல்ல விருப்பப்பட்டிருக்கிறான். ஆனால், ஆசை நிறைவேறவில்லை.

---

கல்யாணத்திற்கு முந்திய தினம், நான் பாபநாசத்தில் இறங்கிய போது, மணி பதினொன்று இருக்கும். கோவில் முன்னாடி தான், பஸ் ஸ்டாப். அந்நேரத்திற்கு யாருமே இல்லை. முன்னமே வந்து தங்கிய நண்பர்களுக்கு போன் செய்து வரச் சொன்னேன்.

லாட்ஜ் போன்ற ஒன்றில் அறைகள் எடுத்து தங்கியிருந்தார்கள். அறைகள் அனைத்தும் மட்டமாக இருந்தது. ஆனால், யாருக்கும் எதுவும் குறையாக தெரியவில்லை. இரவு வெளியே வராதீர்கள். காட்டு பன்றிகள் வரும் என்று வாட்ச்மேன் எச்சரித்திருந்தார். அறைக்குள் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். அன்றும் அவனைப் பற்றி தான் எங்கள் பேச்சு இருந்தது. இரவு நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.

---

காலையில் திருமணம், கோவிலுக்கு அருகே இருக்கும் ஒரு மண்டபத்தில் நடந்தது. கோவிலுக்கு சென்று வந்து, திருமணத்தில் கலந்துக்கொண்டோம்.



அங்கு ஒரு இறுக்கமான சூழலே இருந்தது. யாரும் சிரித்துக்கொள்ளவில்லை. கொண்டாட்ட மனவுணர்வு எங்கும் இல்லை. அப்படி ஒரு திருமணத்தை நான பார்த்தது கிடையாது.கலந்துவிட்டு வீடு திரும்பினோம்.

---

அங்கு எடுத்த புகைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம், ஒரு இறுக்கமான உணர்வே தெரிகிறது. பசுமை, பழமை, நீரோட்டம், ஆட்டின் பார்வை என எல்லாவற்றிலும் சோகம் தெரிகிறது. இது எனக்கோ, எங்களுக்கோ மட்டுமானதாக இருக்கலாம். இதோ, அவை உங்கள் பார்வைக்கும்.















.

Saturday, July 9, 2011

அமெரிக்காவில் கொத்து பரோட்டா

இந்தியாவில் இருந்து கிளம்பும் போது, வீட்டை விட்டு பிரிந்து வருகிறோம் என்ற வருத்தத்திற்கு அடுத்தபடியாக இருந்த வருத்தம் - ‘இனி கொத்து பரோட்டா சாப்பிட முடியாதோ?’ என்பது தான்.

ஆனால், அந்த வருத்தம் ரொம்ப காலம் நீடிக்கவில்லை.

நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே, ஒரு இந்திய ரெஸ்டாரெண்டில் கொத்து பரோட்டாவை மெனுவில் பார்த்ததும், ஒரு நிம்மதி வந்தது. அங்கே பணியாற்றிக்கொண்டிருந்தவர், தமிழகத்தை சேர்ந்தவர். அதுவும், தேனியை சேர்ந்தவர். கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் கொடுத்து, கொத்து பரோட்டா பார்சல் வாங்கி கொண்டுவந்து சாப்பிட்டோம். நன்றாக இருந்தாலும், அந்த விலையை கருதி, அதன் பிறகு அங்கு செல்லவில்லை.

---

அமெரிக்காவில் இருக்கும் இந்திய பலசரக்கு கடைகளில் உள்ள பெரிய ப்ரிட்ஜ்களில், இந்திய உணவு ஐட்டங்கள் அனைத்தும் ப்ரிஸ் செய்யப்பட்ட நிலையில் இருக்கும். இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா, நான் என்று உடனே சமைக்கும் வகையில் அனைத்தும் இருக்கும். எனக்கு இப்படி ரெடிமேடாக கிடைக்கும் ஐட்டங்கள் மேல் பெரிதாக ஆரம்பத்தில் அபிப்ராயம் இருந்ததில்லை. ஆனால், பரோட்டாவை மட்டும் அப்படி விட்டு தள்ள முடியவில்லை. வாங்கி வந்தாயிற்று.

---

அன்று எங்கள் வீட்டில் சிக்கன் குழம்பு. இரவு சாப்பிடும் முன்பு, ஒரு யோசனை. நாமே கொத்து பரோட்டா செய்தால் என்ன?

எப்படி செய்வது என்ற கேள்வியே எழவில்லை. இத்தனை வருடங்களாக, எத்தனை ஊர்களில், எத்தனை கடைகளில், கொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பேன்? எத்தனை முறை, அதை கடைகளில் செய்வதை பார்த்திருப்பேன்? பாட்ஷாவில் சொல்வது போல், நாடி, நரம்பு, ரத்தம் இதிலெல்லாம் கொத்து பரோட்டாவை பற்றிய நினைப்புடனே வாழ்பவனுக்கு, இதையெல்லாம் சொல்லி தர வேண்டுமா?

வெங்காயம், தக்காளி, மிளகாய் (தேவையேயில்லை), கருவேப்பிலை வெட்டியாச்சு!



பரோட்டா கவரை பிரிச்சாச்சு!



இதுதான் அந்த ரெடிமேட் பரோட்டா...



ரெண்டு நிமிஷம் திருப்பி, திருப்பி போட்டு வாட்டினா, பரோட்டா ரெடி!



பரோட்டாவை பிச்சு போட்டு ரெடியா வைச்சுட்டு, எண்ணையில் வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கி, அப்புறம் தக்காளியையும் சேர்த்து வதக்கிட்டு...



நல்லா வதங்கிய பிறகு, பரோட்டா, கறிக்குழம்பு, முட்டையைப் போட்டு கொத்த வேண்டியது தான்...



தேவையென்றால் மசாலா பொடி சேர்த்துக்கொள்ளலாம். டேஸ்ட் பார்த்து உப்பு சேர்த்துக்கலாம். பிடிச்சிருந்தா, மிளகு பொடியும் சேர்த்துக்கலாம். கொத்தி முடிந்தப்பிறகு, கொத்தமல்லி சேர்த்தால், சுவையான கொத்து பரோட்டா ரெடி!!!



ஹைய்யா! ஜாலி!!!

.

Friday, July 8, 2011

தெலுங்கு சினிமா

ஒரு நண்பருடன் தினமும் காரில் அலுவலகம் செல்ல, அவர் போகும்போதும் வரும்போதும் தினமும் தெலுங்கு பாடல்களையே போட, எனக்கு அந்த நாட்களின் போது, தெலுங்கு சினிமாவே கதியானது. அந்த காரில் வரும் மற்ற நண்பர்களும், ஆந்திராக்காரர்கள். ஆந்திரா அரசியல் ரொம்ப டல்லாக செல்வதால், முழு பேச்சும் - சினிமாதான். இவர்களுடன் பேசி பேசி, தெலுங்கு சினிமா ரொம்ப நெருக்கமாகிவிட்டது.



அவர் விரும்பி கேட்பது, மாடர்ன் இசையை. தேவி ஸ்ரீ பிரசாத், மணிசர்மா போன்றோர் படங்களில் பொதுவாக மாடர்ன் இசை தான் இருக்கும். அப்படியே ஏதேனும் கிராமிய வாடை கொஞ்சம் அடித்தாலும், பாட்டை மாற்றிவிடுவார்.

சமீப காலங்களில் தமன் பல தெலுங்கு படங்களில் இசை அமைத்து வருகிறார். தமிழில் இன்னமும் சின்ன படங்களுக்கே இசையமைத்து கொண்டிருப்பவர், தெலுங்கில் இசையமைப்பது எல்லாம் பெரிய பேனர்களுக்கு தான். இது எப்படி என்பது என் தெலுங்கு நண்பரின் சந்தேகம். ஒருவேளை கண்டசாலாவின் பேரனாக இருப்பதாலா என்று கேட்டுக்கொள்வார். ஆனால், எல்லா படங்களிலும் ஒரே மாதிரி இசையமைக்கிறார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு.

நாகர்ஜூனா நடித்த ரகடாவில், இந்த பாடல் எனக்கு பிடித்திருந்தது.



இப்படி காரில் கேட்கும் பாடல் ஏதேனும் மனதில் இருந்தால், வீட்டில் வந்து வீடியோ பார்ப்பேன். மனைவி என்னை ஒரு மாதிரியாக பார்ப்பாள்.

நாகர்ஜூனாவின் பையன் நடித்த 100% லவ் படத்தில் வரும் இன்பக்சுவேஷன் பாடலும் என்னை கவர்ந்தது. அட்னன் சாமி பாடியது. தமிழ் படங்களில் உதித் நாராயண் பாடும் போது வரும் குற்றசாட்டுக்கள், தமிழ்நாட்டிற்கு மட்டும் உரியது அல்ல. ஆந்திராவிலும் உண்டு.



இந்த பாடலில் அட்னன் சாமி தெலுங்கை கொலை செய்திருக்கிறார் என்றார் நண்பர். கேட்டு பாருங்கள். அவர் ஆங்கிலத்தையும் கொலை செய்வார் போலும். ப்ளஸ் என்பதை எப்படி சொல்கிறார்?

அதேப்போல், வாரிசுகளின் சினிமா ஆதிக்கம் அங்கேயும் அதிகம் தான் போலும். நாகர்ஜூனா மகன், சிரஞ்சீவி மகன் என்று அங்கேயும் அப்படிதான். மகதீரா என்ற ஹிட்டைக் கொடுத்த ராம் சரண், கமர்ஷியல் ரூட் மட்டுமே போதும் என்றில்லாமல், வேறு மாதிரியும் ட்ரை பண்ணுவோம் என்று பொம்மரில்லு பாஸ்கர் இயக்கிய ஆரஞ்ச் என்ற படத்தில் நடித்திருக்கிறார். படம் பப்படம். இந்த படத்தில் நடித்த ஜெனிலியாவைப் பற்றி சொல்லும்போதெல்லாம், நண்பருக்கு கோபத்தில் முகம் சிகப்பாகும்.

மகதீராவின் இயக்குனர் ராஜமௌலி தான், தற்போது தெலுங்கின் டாப் இயக்குனர். தொடர்ந்து எட்டு வெற்றிப்படங்களை எடுத்திருக்கிறார். தற்போது, ஈ’யை ஹீரோவாகப் போட்டு ஈகா என்றொரு படம் எடுத்து வருகிறார். சண்டைக்காட்சிகளை எடுப்பதில் வல்லவர் என்றும், மணிரத்னம், ஷங்கர் போன்று ஒரு brand'ஆக உருவாகிவருகிறார் என்றும் நண்பர் சொன்னார்.

மகதீரா தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனப்பிறகு, அதன் நிலவரத்தைப்பற்றி கேட்பார். தெலுங்கு மீடியாவில் அப்படம் வெற்றிப்பெற்றுள்ளதாக வந்துள்ள செய்திகளை சொன்னார். சும்மா சொல்லுவாங்க என்றேன்.

அதன் பிறகு எனக்கு சந்தேகம் வந்தது. சில டப் செய்யப்பட்ட தமிழ்ப்படங்களும் தெலுங்கில் பெரும்வெற்றி என்பார்களே? உண்மைதானா என்று? கேட்டதற்கு உண்மை என்றே சொன்னார். ரஜினிக்கு பெரிய மாஸ் உண்டென்றார். கமல் ரசிகர்களும் இருக்கிறார்களாம். ஆனால் இந்தியனுக்கு பிறகு கமல் படம் எதுவும் தெலுங்கில் பெரிதாக ஓடவில்லை என்றார்.

தெலுங்கு பாடல்களைக் கேட்கும் போது, அவர் அந்தந்த படங்களைப் பற்றி சொல்வார். நிறைய படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருக்கும். மற்ற மொழிகளிலும் ஆகியிருக்கும். தெலுங்கில் ரெடி படம் பிரம்மானந்தத்தின் காமெடியால் மட்டுமே ஓடியதாகவும், தமிழ் (உத்தமப்புத்திரன்), கன்னடம் (ராம்), ஹிந்தி (ரெடி) எதிலும் அப்படி ஒரு காமெடி நடிகர் இல்லாததால், எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றும் கூறினார். தொடர்ந்து, இப்படி கேட்க கேட்க, தெலுங்கு கதையாசிரியர்கள் தான் நன்றாக கதையெழுதுவார்களோ? என்றே தோன்றிவிட்டது. சில நாட்கள் கழித்து, அவருடைய போனை காரில் இணைக்க முடியாததால், என்னுடைய போனை இணைத்து, எனது மொபைலில் இருக்கும் தமிழ் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தோம்.

காரில் வரும் மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்பதற்காக, தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட தமிழ்ப்படங்களின் பாடல்களாக போடுவேன். கஜினி, எந்திரன், சிங்கம், மன்மதன் அம்பு, ஈரம், ஆயிரத்தில் ஒருவன், பையா, விண்ணைத்தாண்டி வருவாயா, ராவணன் என்று லிஸ்ட் ரொம்ப பெருசு. இப்ப, கிட்டத்தட்ட அனைத்து தமிழ்ப்படங்களும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுவிட்டதாக அவர்களுக்கு தோன்றிவிட்டது.

---

அப்புறம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட சிங்கம், இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது. அதன் ட்ரெய்லர் இங்கே. ஆக்‌ஷன் காட்சிகள், செம காட்டமாக வந்திருக்கிறது.



.

Tuesday, July 5, 2011

டென்வர் சட்டசபை

போன பதிவில் சொன்ன கடை தெருவுக்கு பக்கத்திலேயே தான், டென்வர் இருக்கும் கொலராடோ மாநிலத்தின் சட்டசபை இருக்கிறது.



இதன் வடிவமைப்பு, வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தை ஒத்தது என்று நான் சொல்லவில்லை. இரண்டையும் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.





இதன் முன்பக்கம் ஒரு சின்ன பார்க் இருக்கிறது. அதன் புல்தரையெங்கும் புறாக்கள் கூட்டம். யார் பக்கம் வந்தாலும், கண்டுக்கொள்ளாமல் அதன் வேலையை அவை பார்க்கின்றன.



வார நாட்களில் சென்றால், இந்த சட்டசபைக்கு உள்ளே செல்ல முடியுமாம். நான் வாரயிறுதியில் சென்றதால், அதற்கு வாய்ப்பில்லாமல் போனது.





ஏற்கனவே சொன்னது போல், இங்கும் சுற்றி சுற்றி நிறைய சிற்பங்கள்.





டென்வர் வரும் சுற்றுலா பயணிகள் பார்க்கும் இடங்களில் ஒன்று இது. நிறைய டூரிஸ்ட் பேருந்துகளைக் காண முடிந்தது.



ஒரு நடுத்தர வயதுக்காரர் தள்ளு வண்டியில் ஐஸ் விற்றுக்கொண்டிருந்தார். மேங்கோ குச்சி ஐஸ். அதில் மிளகாய் தூள் தூவி. உறைப்பு மாங்காய் சாப்பிட்டது போல் இருந்தது.

Monday, July 4, 2011

டென்வர் கடைவீதி

ஊர் சுற்றி பார்க்கலாம் என்று முடிவு செய்தவுடன், முதலில் கடைத்தெருவை தான் காண சென்றோம். வீட்டில் இருந்து ஈஸியாக செல்ல பஸ் வசதி இருந்தது ஒரு காரணம்.






கோயமுத்தூருக்கு க்ராஸ் கட் ரோடு போல, பெங்களூருக்கு எம்ஜி ரோடு போல, டென்வருக்கு 16th street mall. பக்கத்தில் இருக்கும் 15, 14 தெருக்களும், கடைத்தெருக்கள் தான் என்றாலும், ஏனோ இந்த ஊரில் இது கொஞ்சம் ஸ்பெஷல்.



இந்த தெருவின் ஒரு பக்கத்தில் இன்னொரு பக்கம் செல்வதற்கு, இலவசமாக பஸ்கள் ஓட்டப்படுகின்றன. நடந்து செல்லும் தூரத்தில் இருக்கும் இத்தெருவில், இந்த பஸ்கள் மெதுவாக நின்று நின்று செல்கின்றன.



இந்த தெருவில் ஒரு இந்திய கடையை பார்த்தோம். இந்திய சாமியார் ஐட்டங்கள் நிறைய வைத்திருந்தார்கள். வெண்கல சிலைகளை நம்மூரிலேயே யானை விலைக்கு விற்பார்கள். இங்கு டைனோசர் விலையை எழுதி வைத்திருந்தார்கள்.



டென்வர் ரொம்ப பழமையான ஊர் அல்ல. பெரிய ஊர் என்றும் சொல்ல முடியாது. ஊருக்குள் இருக்கும் வானுயர்ந்த கட்டிடங்கள் சொற்பம். ஆனால், ஆங்காங்கே அழகான சிற்பங்கள் நிறைய வைத்திருக்கிறார்கள்.





சாலையின் ஓரத்தின் நின்று கிட்டார், பேக்-பைப்பர் வைத்து வாசித்து, காசு சம்பாதிக்கும் ஆசாமிகளைக் காண முடிந்தது.



சாலையின் ஒரு இறுதியில் பஸ் நிலையமும், இன்னொரு இறுதியில் ஒரு ஆறும் இருக்கிறது. ஒரு ஓரத்தில் இருந்து இன்னொரு ஓரத்திற்கு நடந்தால், ஒரிரு மணி நேரங்கள் சுலபமாக ஸ்வாஹா ஆவதால், இன்னொரு பொழுது போகாத நாளில் இங்கு செல்லலாம் என்றிருக்கிறேன்.