Thursday, May 20, 2010

ஏஏஏப்...

இந்த மாதம் போட்ட பதிவுகளை பார்த்தால், ரொம்ப சைவமாக இருக்கிறது. இவை எல்லாம் இரு மாதங்களுக்கு முன்பு, கோவில் கோவிலாக சுற்றிய போது எடுத்த படங்கள். இன்னும் சில கோவில்கள் இருக்கிறது. அதையும் தொடர்ந்து போட்டால், ’இந்த மாதம் கோவில்கள் மாதம்’ என்றாகிவிடும்.

அதனால இப்ப வேற!

---

உணவு மீதான ஆர்வம் வந்ததே, காலெஜ் ஹாஸ்டலில் சேர்ந்த பிறகு தான். நிறைய பேருக்கு அப்படி தான். அதுவரை வீட்டு சாப்பாட்டை குறை சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கு, அதையே தேவாமிர்தமாக மாற்றிக் காட்டும் போதி மரம், அனைத்து கல்லூரி ஹாஸ்டல் மெஸ்களிலும் கண்ணுக்கு தெரியாமல் நின்றுக்கொண்டு இருக்கிறது.

அடிக்கடி ஊருக்கு போயிட்டு வராமல், அவ்வப்போது செமஸ்டர் லீவுக்கு மட்டும் ஊருக்கு போகுபவர்கள், போய்விட்டு வரும்போது, வெயிட் அதிகமாக இருப்பார்கள். கொஞ்சம் மெருகேறி இருப்பார்கள். பிறகு, அடுத்த செமஸ்டர் லீவுக்குள் தேய்ந்துவிடுவார்கள்.

இந்த அனுபவக்காரணமோ என்னமோ, ஊருக்கு போனாலே சாப்பாட்டு கண்ட்ரோல் தளர்ந்துவிடும். இது சொந்த ஊர் என்றில்லாமல், எந்த ஊர் என்றாலும் என்றாகிவிட்டது.

---

இப்பவும் இரண்டு மூன்று வாரங்களாக, ஊர் ஊராக சுற்றிக்கொண்டு தான் இருக்கிறேன். எல்லாம் கேளிக்கை உலாவுவதல். நண்பர்கள் யாரையாவது பார்ப்பதற்காக செல்லும் ஜாலி ட்ரிப்கள்.

இப்படி சுற்றும் போது, சாப்பாடே பிரதான வேலையாகிவிடுகிறது. ஒருவேளை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, அடுத்த வேளைக்கான சாப்பாட்டு திட்டமிடல் நடந்துக்கொண்டிருக்கும். இம்முறை, போன இடங்களில் எல்லாம் விதவிதமாக, ஸ்பெஷல் ஸ்பெஷலாக சாப்பாடு. போன ஊர்களில் எல்லாம், ஸ்பெஷல் உணவு கிடைக்கும் இடங்களுக்கு கூட்டி செல்லும் நண்பர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.

---

வெளியூர்காரர்களுக்கு தான் ‘திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி’ பேமஸாக தெரியும். உள்ளூர்காரர்கள் திண்டுக்கல்லில் போய் விழுவது, வேணு பிரியாணி கடையில் தான். சண்டே - கூட்டமோ கூட்டம்.



ஹாப் பிரியாணியா, புல் பிரியாணியா என்று கேட்டுவிட்டு ஒரு கிண்ணத்தில் கொண்டு வந்து கொஞ்சமா பிரியாணி வைக்கிறார்கள். ஆட்களின் சுற்றளவைப் பொறுத்து, கிண்ணம் கிண்ணமாக இறங்கிறது. கொஞ்சம் காஸ்ட்லிதான். பட், ரொம்ப டேஸ்டி. அவ்வப்போது, நாம் கேட்காமலேயே, விசாரித்துவிட்டு மட்டன் கோலா உருண்டைகளை பரிமாறுகிறார்கள். கரண்டி என்றழைக்கப்படும் முட்டை பணியாரங்களை பரிமாறுகிறார்கள். வாவ். கேட்டால், மூளைகள், காடைகள், முயல்கள் எல்லாம் உங்களை நோக்கி படையெடுக்கும்.

ஆனால், இப்படி வாயை பிளப்பது எல்லாம் சாப்பிட இடம் கிடைத்தப்பிறகு தான். கூட்டமாக இருக்கும் சமயம், அவர்கள் சர்வீஸை பார்த்து ஓடி விடுவீர்கள்.



பெரு நகரங்களில் இருப்பது போன்ற, கூட்டமாக இருக்கும் சமயங்களில் பெயரை எழுதிக்கொண்டு பிறகழைக்கும் சம்பிராயம் எல்லாம் இங்கு இல்லை. நீங்களாக ஒரு டேபிளை தேர்வு செய்துக்கொண்டு, அதை சுற்றி வளைக்க வேண்டும். அவர்கள் சாப்பிடும் இலையை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை அவர்கள் எக்ஸ்ட்ரா பிரியாணி வாங்கும் போது, நீங்கள் பெருமூச்சு விட வேண்டும். அவர்கள் ரசத்துக்கோ, தயிருக்கோ செல்லும் போது, நீங்கள் கைகளை குலுக்கிக்கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கைக்கழுவ எழுந்தவுடனே, நீங்கள் அவர்கள் இடத்தை ஆக்ரமிப்பு செய்துவிட வேண்டும். இப்படிப்பட்ட வீர தீர செயலுக்கு பிறகு சாப்பிடும் பிரியாணியின் சுவையே, தனி சுவை தான்.

பிறகு, சரித்திரம் திரும்பும். நீங்கள் சுற்றி வளைக்கப்படுவீர்கள். சுற்றிலும் கண்கள், உங்கள் இலையை மேயும். இதுக்கெல்லாம் பீல் பண்ணவா முடியும்? வந்த வேலையை மட்டும் பார்த்துட்டு போக வேண்டியது தான்.

---

அடுத்து சென்னை சம்பவம். ஒரு வேலை விஷயமாக, நள்ளிரவு வரை சுற்றி கொண்டிருந்தோம். யாருமே இரவு உணவு சாப்பிடவில்லை. காரணம், மதிய சாப்பாடு. அதை பற்றி அடுத்து!

இரவு இரண்டு மணிக்கு பசி எடுத்தது. சும்மா தூங்கலாம் என்றால், நண்பனொருவன் கூடவே கூடாது என்று சொல்லிவிட்டான். எவ்வளவு தூரமென்றாலும் சென்று, நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமாம். விசாரித்ததில், தி-நகரில் ஒரு ஹோட்டல் இரவு இரண்டோ மூன்றோ மணி வரை திறந்திருக்குமாம். நாங்கள் சென்ற நேரம் அதையும் மூடிவிட்டார்கள்.

திரும்ப விசாரித்ததில், தி-நகர் ரெஸிடென்ஸி டவரில் மிட்-நைட் பபே கிடைக்கும் என்றார்கள். இதெல்லாம் ஓவர் என்று தோன்றினாலும், “ஸ்டார்ட் பண்ண மாட்டோம். பண்ணிட்டா...” என்கிற பஞ்ச் காரணமாக சென்றோம்.



அருமையான இண்ட்டிரியர். அந்த இண்ட்டிரியருக்கு சம்பந்தமே இல்லாமல் ஒருவர் பொடி தோசை சுட்டுக்கொண்டிருந்தார். இந்த நேரத்திலுமா, இவ்வளவு பேர் சாப்பிடுகிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. இட்லி, தோசை, பிரியாணி, சிக்கன் கறி, முட்டை குழம்பு என்று அர்த்த ராத்திரியில் மக்கள் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். தமிழ் சினிமாவின் முக்கியமான எடிட்டர் ஒருவரும், கர்ம சிரத்தையாக இரு இளம் பெண்களுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

---

இப்ப, அந்த மதிய சாப்பாடு பத்தி. அடப்பாவி, விட மாட்டியா என்கிறீர்களா? இத மட்டும் சொல்லிட்டு முடிச்சிரலாம்.

கதீட்ரல் சாலையில் இருக்கும் கோகோனட் லகூனுக்கு (Coconut lagoon) கூட்டி சென்றான் மீன் பிரிய நண்பன். யார் வந்தாலும், இங்கு தான் இழுத்து வருவானாம். கேரளா, மங்களூர், கோவா சிறப்பு உணவு வகை கிடைக்குமென்றான். மெனுவையே பார்க்கவில்லை. அவனாகவே ஆர்டர் செய்தான்.



அதனால் ஐட்டம் பெயர் எல்லாம் தெரியவில்லை.

வாழை இலைக்குள், மசாலா தடவிய முழு மீன் ஒன்றை அவித்துக் கொண்டு வந்தார்கள். அது சூப்பர். அப்புறம், கேட்க கேட்க ஆப்பம் சுட்டுக்கொடுத்து கொண்டிருந்தார்கள். மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் அதுவும் சூப்பர். இன்னும், நண்டு, இறால் என்று என்னலாமோ வந்திறங்கியது. எல்லாமே சூப்பர்.

வெளி இடங்களில் மீன் சாப்பிடுவது என்பது என்னை பொறுத்தவரை ரிஸ்க் எடுக்கும் சமாசாரம். கடல் இருக்கும் ஊர் என்றால் பரவாயில்லை. இல்லாவிட்டால், சிரமம் தான். இங்கு அந்த சிரமம் கிடையாது. இவர்கள் பெங்களூரிலும் கிளை வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன். இனி தான், கண்டுப்பிடிக்க வேண்டும்.

---

அவ்வளவு தானா என்றால் இல்லை.

இரவு மன்ஹட்டன் ஹோட்டல் மொட்டை மாடி ரெஸ்டாரெண்ட் கூட்டி சென்றான். எல்லாம் சரக்கடிக்கும் கூட்டம். உணவு சுமார் தான். சுற்றி பார்த்தால், பாதி சென்னை தெரிகிறது. இரவென்பதால், சரியாக தெரியவில்லை.

பகலில் செல்லலாம் தான். என் உச்சி மண்டை சுர்ருங்குமே!

.

15 comments:

Tech Shankar said...

super "ஏஏஏப்..."

துளசி கோபால் said...

ரெஸிடன்ஸி டவர்ஸ் நல்லாதான் இருக்கு. அங்கேதான் வழக்கமா தங்கறோம். ஆனால் ஒரு நாள் கூட மிட்நைட் பஃபே போகலையேப்பா:(

அந்த அம்ராவதி...... ரொம்ப சுமார். ஒருவேளை வெறும் வெஜ் தின்னதால் இருக்குமோ!!!

பொன் மாலை பொழுது said...

நல்ல சாப்பாட்டு பிரியர் என்பது தலைப்பை கண்டாலே தெரிகிறது.
ரசித்து எழுதி இருக்கிறீர்கள்.இனம் இனத்தோடு தானே !!

KANAGU said...

இந்த பதிவை படித்த பிறகு , என் நாக்குல எச்சி ஊறுது...
எஎஎஎப் ... இது பசி ஏப்பம் பாஸ்,... :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோயில் கோயிலா சுத்தி உண்டக்கட்டி, அன்னதானம் சாப்பிட்டு பழகினதால இப்ப கோயிலுக்கு போகாம சாப்பாட்டு கடைக்கு போறீயளோ?

VISA said...

Good one!!!

Kartheeswaran said...

நானும் உங்கள் இனம் தான்... எந்த ஊருக்கு போனாலும், அங்கு உள்ள ஸ்பெஷல் சாப்பாட்டு வகைகளை ஒரு பிடி பிடித்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன்... அதனாலதான் என்னவோ என் இளம் தொப்பையை control பண்ண முடியலே...?!!?!

சரவணகுமரன் said...

நன்றி ஷங்கர்

சரவணகுமரன் said...

:-) நன்றி துளசி அம்மா...

நான் சொன்ன Coconut lagoon அமராவதி பக்கத்தில் இருந்தது. ரெண்டும் ஒன்றா என்று தெரியவில்லை.

சரவணகுமரன் said...

ஹி ஹி ஆமாம், கக்கு மாணிக்கம்!

சரவணகுமரன் said...

கனகு, போயி ஒரு கட்டு கட்டுங்க...

சரவணகுமரன் said...

ஹலோ ரமேஷ், என்ன நக்கலா?

சரவணகுமரன் said...

நன்றி விசா

சரவணகுமரன் said...

கார்த்தீஸ்வரன்,

ஊருக்கு போன சமயம் தவிர மத்த நேரம், கண்ட்ரோல் பண்ணுங்க...

Kartheeswaran said...

ம்ம்ம்... முயற்சி பண்ணுறேன்...ஆனா முடியும்னு தோணலே... :)