Wednesday, October 26, 2011

தீபாவளி - 2011

ஊருக்கு செல்லாத தீபாவளி என்று எதுவும் இருந்ததில்லை. முதல் முறையாக, தீபாவளி அன்று வீட்டைவிட்டு தள்ளி இருக்கிறேன்.

---

இங்கு பனிகாலம் இன்றைய முதல் பனி பெய்தலுடன் இன்று ஆரம்பித்து இருக்கிறது.

ஊர் முழுக்க சோப்பு நுரையை அப்பிவிட்டது போல் இருக்கிறது.



(Image URL - http://photos.denverpost.com/mediacenter/2011/10/first-snow-hits-metro-denver/#8)

---

தீபாவளி அன்று ஜாலியாக எண்ணெய் தேய்த்து குளித்து, சாமி கும்பிட்டு, இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டு, காலையில் வடை இட்லியும், மதியம் கறி சாப்பாடும் சாப்பிட்டு விட்டு, வாங்கி கொடுத்த வெடிகளை வீட்டின் சிறுவர்கள் வெடிப்பதைப் பார்த்துவிட்டு, ஒரு தீபாவளி ரிலீஸ் படம் பார்த்து விட்டு அன்றைய தினம் சிறப்பாக முடியும்.

இந்த முறை முற்றிலும் வேற மாதிரி. தீபாவளி அன்று அலுவலகம் போக வேண்டிய நிலை.

நல்லவேளை, பனி தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால், அலுவலகம் வர வேண்டாம். வீட்டிலிருந்தே வேலை பாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இன்னமும் பனி பெய்துக்கொண்டிருக்கிறது.

பருப்பு வடையும், ரவை கேசரியும் ட்ரை செய்தேன். வடை நன்றாக வந்தது. கேசரி கொஞ்சம் கட்டி பிடித்து சொதப்பி விட்டது. சாமி முன் வைத்து கும்பிட்டேன். ‘இதுக்கு நீ சும்மாவே கும்பிட்டு இருக்கலாம்’ என்று போட்டோவில் இருந்த முருக பெருமான் சொன்னது போல் இருந்தது.

‘ஒகே’ என்று நானும் சொல்லிவிட்டு, அவருக்கு வைத்ததை கொஞ்சம் எடுத்து சாப்பிட்டுவிட்டு, வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

---

படம் பார்க்கலாம் என்றால் பனி பெய்துக்கொண்டிருக்கிறது. அதையும் மீறி மாலை சென்றுவிட்டால், ‘ஆபிஸ் போக முடியாதாம். ஆனா, படத்துக்கு போக முடியுமாம்!’ என்று நாலு பேரு நாக்கில் நரம்பில்லாமல் பேசுவார்கள். அதனால், வாரயிறுதியில் செல்லலாம் என்று இருக்கிறேன்.

இங்கு தமிழிலும், தெலுங்கிலும் ‘7ஆம் அறிவு’ ரிலீஸ் ஆகியிருக்கிறது. படம் பார்த்தவர்கள் சொல்வதைக் கேட்டால், பனிரெண்டு டாலரை சேமிக்கலாமா? என்று யோசிக்கிறேன். ரஜினிக்காக ‘ரா-ஒன்’ பார்க்கலாம் என்றால், யூ-ட்யுபில் இருக்கும் வீடியோவைப் பார்த்தால், அது ரஜினி போலவே இல்லை. அது ரஜினி நடையே இல்லை. இந்த உட்டாலங்கடிக்கு ரஜினி ஏன் சம்மதித்தார் என்று தெரியவில்லை. ரஜினியிடம் ஷாருக் சிவாஜி பாணியில், ”நீங்க வந்தா மட்டும் போதும்” என்று சொல்லியிருப்பார் போலும்.

---

7ஆம் அறிவை விட வேலாயுதம் பெட்டராக இருக்கும் போல் தெரிகிறது. இதை தான், “ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது” என்று சொல்கிறார்களோ?

---

எனது முந்தைய தீபாவளி பதிவுகளை வாசித்துப்பார்த்தேன். தீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்கான டிக்கெட்டுக்கான அடிதடியை பற்றியே இருக்கிறது.

இதுவரை ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் பிரச்சினையாக இருந்தது. இப்ப அது இல்லை. அதான், ஊருக்கு செல்வதே பிரச்சினையாக இருக்கிறதே?

---

அனைவருக்கும் எனது தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். :-)

.

10 comments:

மருதநாயகம் said...

கேசரி கொஞ்சம் கட்டி பிடித்து சொதப்பி விட்டது///

நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய

Sridharan said...

தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

Yaathoramani.blogspot.com said...

இன்றுதான் குமரன் குடிலுக்குள் நுழைந்தேன்
பதிவுகள் இயல்பாகவும் சிறப்பாகவும் உள்ளன
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

மாணவன் said...

இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்!

அமுதா கிருஷ்ணா said...

கேசரி என்ன கலரில் செய்தீர்கள்? அடுத்த வருடம் சூப்பரா தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்.

சரவணகுமரன் said...

வாங்க மருதநாயகம்

சரவணகுமரன் said...

நன்றி ஸ்ரீதரன். வாழ்த்துக்கள்.

சரவணகுமரன் said...

நன்றி ரமணி. தீபாவளி வாழ்த்துக்கள்.

சரவணகுமரன் said...

வாழ்த்துக்கள் மாணவன். நன்றி.

சரவணகுமரன் said...

நன்றி அமுதா கிருஷ்ணா.

கேசரி ஆரஞ்ச் கலரில் கேசரி பவுடரை தண்ணீரில் கலந்து ஊற்றி தான் செய்தேன். சூடு அதிகம் இருந்திருக்கும் போல. சீக்கிரம் வெந்துவிட்டது. எனக்குதான் திருப்தி இல்லை. நண்பர்கள் நன்றாக இருந்ததாக கூறினார்கள்.