Wednesday, July 4, 2012

அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டம் - ஒரு அனுபவம்

இன்று அமெரிக்க சுதந்திர தினம். அமெரிக்காவுக்கே சுதந்திரமா? என்று எண்ண தோன்றும். என்ன செய்ய? அவர்களும் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் வாங்கி தான் தனி கடை போட்டிருக்கிறார்கள். பாவம், இந்த பிரிட்டன் மக்கள்!!! அவர்களுக்கு தான் சுதந்திர தினமே கிடையாது. லீவும் கிடையாது. ஒரு வேளை, தாங்கள் சுதந்திரம் கொடுத்த நாடுக்களுக்காக சுதந்திர தினம் கொண்டாட ஆரம்பித்தால், பிரிட்டனில் தினமும் கொண்டாட்டம் தான்.

ஓகே. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வருவோம். இங்கு, டென்வர் நகரின் மையப்பகுதியில் நேற்று மாலை ஒரு இசை கச்சேரியும், வாண வேடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போவதற்கு ரொம்பவும் யோசனையாக இருந்தது. பார்க்கிங் இடம் கிடைக்காது, ரொம்ப கூட்டமாக இருக்கும், மழை பெய்வது போல் இருக்கிறது என்று பல தயக்கங்கள் நண்பர்களால் கிளப்பி விடப்பட்டது. பாப்பாவுடன் செல்ல வேண்டி இருந்ததால், நானும் யோசிக்க வேண்டியதாக இருந்தது. பிறகு, போவோம், சிரமமாக இருந்தால் அப்படியே திரும்பி விடலாம் என்று முடிவெடுத்தப்படி கிளம்பினோம்.

---

நகரின் மையப்பகுதியில் ஒரு பார்க் இருக்கிறது. அதை பற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.

அங்கு தான் இசைக்கச்சேரியும், வண்ண வாண வேடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ’கொலரடோ சிம்பொனி’ என்று குழு, அருமையான இசை தொகுப்பை வழங்கினார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன், நண்பர்களுடன் அமர்ந்து இசையை கைத்தட்டி ரசித்து கொண்டிருந்தார்கள்.




டென்வர் சிட்டி அண்ட் கவுண்டி பில்டிங் எனப்படும் (நம்மூர் ரிப்பன் கார்ப்பரேஷன் பில்டிங் போன்றது) கட்டிடத்தை அலங்கரித்து அதன் முன்பு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதை சுற்றிலும் மக்கள் வெள்ளம்.



தூங்கிக்கொண்டிருந்த எங்க பாப்பா எந்திரிக்க, அவளுக்கு முன்பு அவ்வளவு கூட்டம், சத்தம். என்னவென்றே புரியாமல் அழ தொடங்கிவிட்டாள். பிறகு, ஓரமாக, கூட்டம் இல்லாத, சத்தம் குறைவாக இருந்த இடத்திற்கு கூட்டி சென்று சமாதானம் செய்ய வேண்டியதாகிவிட்டது. பிறகு, ஒரு மிரட்சியுடனே இருந்தாள். முதல் முறை அல்லவா?



இசை நிகழ்ச்சி ஆரம்பித்தது, இரவு எட்டு மணிக்கு. இங்கு இப்போதெல்லாம், எட்டரைக்கு தான் சூரியன் மறைகிறது. ஒன்பதரை மணி வாக்கில், வாண வேடிக்கை தொடங்கியது. கட்டிடத்தை அலங்கரித்திருந்த வண்ண விளக்குகள், வானத்தில் வெடித்த பட்டாசுகள், சிம்பொனி இசை - இவை மூன்றுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பு இருந்தது, ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது.



தொடர்ந்து பத்து-பதினைந்து நிமிடங்களுக்கு வாண வேடிக்கை தொடர்ந்தது. நான் இவ்வளவு நேரம் இருக்கும் என்று நினைக்கவில்லை. இங்கு நடக்கும் வாணவேடிக்கைகளைப் பற்றி கூறிய அனைவரும் இதுவரை வேறு மாதிரி கூறியிருந்தார்கள். இந்த முதல் பத்தியை பாருங்கள்.





பாப்பாவுக்கு ரொம்ப புதிதாக இருந்திருக்கும். என்ன மாதிரி ரியாக்ட் செய்வது என்றே புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். எல்லாம் முடிந்த பிறகு, கொஞ்ச அழுது வைப்போம் என்று அவள் அழ, எங்களுடைய லைட்டான சமாதானத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி, பிறகு ஜாலியாகி விட்டாள்.




சுற்றி வந்ததில், சில சுவாரஸ்ய மனிதர்களைக் காண முடிந்தது. கூட்டம் நடுவே ஆட்டம் போட்ட ஜோடிகள், டிக்கிலோனா வகை விளையாட்டுக்கள் விளையாடிய யுவ-யுவதிகள், முழுக்க கண்ணாடிகளாலான உடையணிந்த ஒரு மனிதர், அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வமுடன் நின்ற குழந்தை முதல் பெரியோர்கள் என கச்சேரி-வாண வேடிக்கை தவிர வேறு சில விஷயங்களும் பொழுதை போக்க உதவின.

வாண வேடிக்கை முடிந்தவுடன், ஒரு ஆரவார சத்தத்தை எழுப்பிவிட்டு, மொத்த கூட்டமும் கலைந்தது. நாங்களும் வீடு திரும்பினோம்.


 .

7 comments:

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல தகவல்


நன்றி,
~ஜோ
எங்கள் வலைத்தளத்தை (http://www.ezedcal.com/ta) பயன்பாடுத்தி உங்கள் வலைப்பூவின் தலையங்கம் காலண்டரை எளிதாக நிர்வகித்து கொள்ளாலம். விருப்பமானால் உங்கள் வலைப்பூவில் அதை எளிதாக வெளியிடலாம்.

Anonymous said...

மிகவும் அருமையான பகிர்வு .. சுதர்ந்திர தினம் கொண்டாடும் அமெரிக்க மக்களுக்கு வாழ்த்துக்கள் !

Anonymous said...

பாப்பாவுக்கு என்ன பேரு சரவணன்...

சம்பத் குமார்

சரவணகுமரன் said...

ந்ன்றி ஜோ

சரவணகுமரன் said...

நன்றி இக்பால் செல்வன்

சரவணகுமரன் said...

சம்பத்,

பாப்பா பேரு நித்திலா...

சரவணகுமரன் said...

நன்றி Swapna