Wednesday, March 18, 2015

ப்ளோரிடா சீவேர்ல்ட்


சென்ற முறை கலிபோர்னியா சென்றபோது, சாண்டியாகோ சீவேர்ல்ட்  செல்ல முடியவில்லை. எங்கேனும் சீவேர்ல்ட் டால்பின் சர்க்கஸ் காட்சிகளைக் காணும்போதெல்லாம், அது ஒரு ஏக்கமாகவே கடந்து செல்லும். அதனால் அடுத்த முறை சீவேர்ல்ட் இருக்கும் ஊருக்கு சென்றால், சீவேர்ல்ட் போகாமல் வர கூடாது என்று முடிவு செய்திருந்தேன்.

அன்றைய தினம், சீவேர்ல்டையும், நாசாவையும் பார்ப்பதாக திட்டம். இரண்டையும் பார்க்கமுடியுமா? என்று ஒரு பக்கம் யோசனை. பார்க்கமுடியுமானால், முதலில் எதற்கு செல்வது என்று இன்னொரு யோசனை. நாசா சென்று பிறகு சீவேர்ல்ட் வருவது என்றால், கொஞ்சம் வெட்டி அலைச்சல். தவிர, அன்று இரவு மியாமி நோக்கி பயணம் என்பதால், முதலில் சீவேர்ல்ட் சென்று விட்டு, பிறகு நேரமிருந்தால், நாசா செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.

இவ்வளவு ப்ளான் இருந்ததால், எங்கள் அறையில் இருந்து வெகு சீக்கிரமே கிளம்பிவிட்டோம். ரொம்பவும் தூரத்தில் இல்லையென்பதால், உடனடியாக சீவேர்ல்ட் வந்து சேர்ந்தோம். 9 மணிக்கு பார்க் திறக்கும் நேரத்திலேயே வந்து சேர்ந்தோம். கூட்டம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. பார்க் மேப் பார்த்து ஒரு ரூட் போட்டுக்கொண்டேன்.



சீவேர்ல்ட் என்பது கடல் வாழ் உயிரினங்கள் சார்ந்த தீமில் அமைந்த பார்க். இங்கு ஒர்லண்டோவில் பெயருக்கேற்றார் போல், ஒவ்வொரு தீம் பார்க்கிற்கும் ஒரு தீம் இருக்கிறது. ஒஹோ! அதனால் தான் இவற்றை தீம் பார்க்குகள் என்று கூறுகிறார்களோ என இங்கு வந்து புரிந்துக்கொள்ள முடிந்தது.

சீவேர்ல்ட் குழுமத்தில் ஏகப்பட்ட தீம் பார்க்குகள் ப்ளோரிடாவிலும், வேறு சில நகரங்களிலும் இருக்கின்றன. எதுவுமே பார்த்தது இல்லை என்பதால், அவர்களது சிக்னேச்சர் தீம் பார்க்கான சீவேர்ல்ட் தீம் பார்க்கையே பார்ப்பது என்று முடிவு செய்திருந்தோம். டிக்கெட்டுகளை இணையத்திலேயே வாங்கி விட்டோம். என்னென்ன ஷோக்கள், என்னென்ன நேரத்தில் நடக்கிறது என்று தெரிந்துக்கொண்டோம். முக்கியமாக, டால்பின் ஷோவான ப்ளூ ஹரிஸான் மற்றும் திமிங்கில ஷோவான ஒன் ஓஷன் நிகழ்ச்சிகளைத் தவறவிடக்கூடாது என்று முடிவு செய்திருந்தோம். இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, பிறகு மற்றவற்றை கவர் செய்ய எண்ணி, உள்ளே புகுந்தோம்.



முன்பே சொன்னது போல், இது கடல்சார் உயிரினங்கள் தீமில் அமைந்த பார்க் என்பதால், இங்குள்ள ரைடுகளும் அப்படியே வடிவமைக்கப்பட்டிருந்தது. உதாரணத்திற்கு, மண்டா என்னும் ரைடு, மண்டா ரே என்னும் உயிரினம் போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் டிசைனும், அது செல்லும் ஸ்டைலும் அப்படி இருந்தது. வெளியே சென்று பார்க்கும் போது, கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. பார்க் உள்ளே நுழைந்தவுடன் இருந்த ரைடு, கூட்டமே இல்லாமல் இருந்ததால், உள்ளே சென்று விட்டேன். இதில் சிறு குழந்தைகள் அனுமதி இல்லை. அது செல்லும் தினுசைப் பார்த்து, மனைவியும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.



எனக்கும் அதை முதலில் பார்க்கும் போது, பயமாகத்தான் இருந்தது. உயரத்தில் இருந்து கீழே பார்த்து பயந்தால், ஏதோவொரு போபியா என்பார்களே? எனக்குக் கூட அந்த போபியா இருப்பதுண்டோ என்று யோசிப்பதுண்டு. ஊரில் வீட்டில் கருவேப்பிலை பறிக்க சுவர் மேல் ஏறிய காலத்திலேயே வந்த நினைப்பு அது. ஆனால், இம்மாதிரி ரைடுகளில் முதலில் அம்மாதிரி பயம் வந்தாலும், உடனே லாஜிக்கலாக யோசித்து (இவ்வளவு பேர் போகிறார்களே!, என்னவாகிவிடும்?, அதான் இப்படி சுற்றி டைட்டாக கட்டி வைக்கிறார்களே!, அப்படியே பயமாக இருந்தால் கண்ணை மூடிக்கொள்ள வேண்டியது தான்!!!) வண்டியேறிவிடுவேன்.

இம்மாதிரி ரைடு எனக்கு முதல்முறை என்று சொல்லவேண்டும். வளைத்து, வளைத்து, தலைக்கீழாக, தலைக்குப்புற, சுழற்றியடித்து என திகிலாக இருந்தாலும், ஏறிய பிறகு எஞ்சாய்மெண்ட் தான். முடித்தப்பிறகு இன்னொரு முறை போனால் என்ன? என்று தோன்றுமே... அப்படித்தான் தோன்றியது.



அதன் பிறகு, முதல் ஷோவாக, ப்ளூ ஹரிஸான்ஸ் சென்றோம். இது டால்பின்கள் கொண்டு நடத்தப்படும் ஷோ. அரைவடிவத்தில் ஒரு ஸ்டேடியம். பெயர் - டால்பின் தியேட்டர். கூட்டம் கொஞ்ச கொஞ்சமாக சேர தொடங்கி, முழுவதும் நிறைந்தது. நட்ட நடுவில், சீட்டுகள் எம்டியாக இருந்தது. என்னவென்று பார்த்தால், ரிசர்வ் செய்யப்பட்ட சீட்டுகளாம். நல்ல அம்சமான இடம் தான். இம்மாதிரி ரிசர்வ் செய்யப்பட்ட சீட்டுகளுக்கு, தனி கட்டணம். நாங்கள் சீக்கிரமே சென்றதால், ரிசர்வ் செய்யப்பட்ட வரிசைக்கு ஒரு வரிசை பின்னால் இடம் பிடித்துக்கொண்டோம்.







ஒரு கதையைச் சொல்லி, அதில் டால்பின்களை வித்தைக் காட்டவிட்டார்கள். நாய்க்குட்டியைப் பழக்கி வைத்திருப்பதைப்போல பழக்கி வைத்திருக்கிறார்கள். தண்ணீரில் டால்பின்கள் நீந்தும் வேகம் செம. டால்பின் வித்தை 40% என்றால், மனித வித்தை 60% எனலாம். உயரத்தில் இருந்து தண்ணீருக்குள் குதிப்பது, பறவைப்போல் கயிறு கட்டிக்கொண்டு பறப்பது என்று ஒரு கலவையில் இருந்தது. ஒவ்வொரு முறை டால்பின்கள் துள்ளிக் குதிக்கும் போதும், கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரித்தது.






இங்கு இதைப் பார்த்துக்கொண்டு இருக்கும் போது, சில எண்ணங்கள் வந்தது. பொதுவாக, அமெரிக்காவில் மிருகக்காட்சிச்சாலைகள் வெளியே, அமைதியாக சிலர் பேனர் பிடித்துக்கொண்டு போராட்டம் செய்துக்கொண்டிருப்பார்கள். ப்ளு கிராஸ் போன்ற அமைப்புகளாக இருக்கும். முதல்முறை இம்மாதிரி போராட்டங்களைப் பார்த்தப்போது, கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. மிருகக்காட்சிச்சாலைகளில் மிருகங்கள் பாவமாக இருக்கும், பார்த்ததுண்டு. ஆனால், அதற்காக போராட்டம் என்பது நான் பார்த்திராதது. (நம்மூரில் உள்ளே செல்லும் மக்களே அவற்றை துன்புறுத்துவதைக் கண்டும், சமீபத்தில் டெல்லியில் ஒரு மனிதனை புலி கொன்றபோது, புலியை ஏன் சுட்டுக்கொள்ளவில்லை என்று கேள்வி கேட்டவர்களைக் கடந்தும் வந்ததால் இருக்கலாம்.) அவர்களது கோரிக்கை என்னவாக இருக்கும்? மிருகக்காட்சிச்சாலைகளை மூடுவதாக இருக்கும். உலகம் முழுக்க இருக்கும் மிருகக்காட்சிச்சாலைகளை, சர்க்கஸுக்களை, மிருகங்களைக்கொண்டு எடுக்கப்படும் படங்களைத் தடைச் செய்ய முடியுமா? நமக்கு ஜஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மட்டும் தான் என்றாலும், இவை இல்லாத உலகம் சாத்தியமா? அப்புறம் எங்கே தான், எப்போது தான் மிருகங்களைப் பார்ப்பது? என்று கேள்விக்கு அப்படி பார்ப்பது அவசியமா? என்ற கேள்வி தான் ஒரே பதிலாக இருக்க முடியுமா? எனிவே, லெட்ஸ் வாட்ச் திஸ் அவுட் பர்ஸ்ட்.





டால்பின்கள் பார்க்க, நல்ல பிள்ளையாட்டம், பயிற்சியாளர்கள் குழு சொல்வதைக் கேட்டு டைவ் அடித்தது, அவர்களை சுமந்துக்கொண்டு நீந்தியது, சத்தமிட்டது, முத்தமிட்டது. வந்திருந்த குழந்தைகள், இந்த ஷோவை ஆர்வமுடன் கண்டுக்களித்தார்கள்.



அடுத்ததாக, பென்குயினை ஒரு சில்லிடும் செட்டப்பில் பார்த்தோம். இன்னும் சில ரைடுகளில் சென்றோம். சில ரைடு/அரங்கு மூடியிருந்தது.



அன்று காலையில் ஒன்றும் சாப்பிடாததால், பசியெடுக்கவே, ஒரு இட்டாலியன் கடையில் வெஜ் கார்டன் 'லசான்யா' வாங்கினோம். அதான்யா விஜய் டிவியில் அடிக்கடி சொல்லுவாங்களே!! வெள்ளிக்கிழமை என்பதால், வெஜ் தானாம். உள்துறை உத்தரவு.

அடுத்த ஷோ துவங்கும் நேரமென்பதால், உணவுடன் ஷோ நடக்கும் ஷாமு ஸ்டேடியத்திற்கு விரைந்தோம். போன முறை, சீக்கிரம் சென்றதால், நல்ல இடம் கிடைத்தது. இந்த முறை, லேட்டாக சென்றதால். அதுவரை ரிசர்வ் சீட்டுகளைப் பாதுகாத்தவர், நிகழ்ச்சி தொடங்கியபிறகும், அவ்விடங்களுக்கு யாரும் வராததால், அதனை ஓபன் செய்துவிட்டுக் கிளம்பினார்.

ஷாமு, இங்கு முதல்முறையாக தன் திறமையைக் காட்டிய திமிங்கலத்தின் பெயர். அது இறந்து 45 ஆண்டுகள் ஆனாலும், அதற்கு பிறகு வந்த மற்ற முன்னணி நட்சத்திர திமிங்கலங்களுக்கும் அதே பெயரைச் சூட்டி, இந்த ஸ்டேடியத்திற்கும் அதே பெயரைச் சூட்டிவிட்டார்கள். ஷாமு போல் ஒரு ராமும் இருக்கிறதாம்.



திமிங்கலமும் டால்பினும் ஒரே குடும்பம் தான். என்ன, திமிங்கலங்கள் சோவாறிகள். பெரியவை. மனிதர்களுடன் அவ்வளவாக ஒத்து போகாது. நாம் நினைப்பது போல் இல்லாமல், ரெண்டுமே ஒரே அளவு அறிவாளிகள் தான்.



டால்பினை விட எடை அதிகமாக இருந்தாலும், துள்ளிக் குதிப்பதில் அதற்கு இது சளைத்ததில்லை. இந்த ஸ்டேடியத்தில், முதல் பத்து பதினைந்து வரிசைகள், ஈரமாகும் இடங்கள் என்று வகைமைப்படுத்தி, நிகழ்ச்சித் தொடங்கும் முன்பு, அவ்வப்போது எச்சரிக்கைப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அங்கு உட்கார்ந்து இருந்தவர்கள் எல்லாம், மழைக்கு அணியும் ப்ளாஸ்டிக்கிலான உடைகளை அணிந்திருந்தார்கள். கையில் உணவு இருந்ததால், அங்கு உட்காரவில்லை.



ஷோவின் போது, இந்த திமிங்கலங்கள் துள்ளிக் குதிக்கும் போதெல்லாம், இந்த பார்வையாளர்கள் மீது தண்ணீர் சிதறியது. அது மட்டுமில்லாமல், இந்த திமிங்கலங்கள் வாலை கொண்டு, குறி வைத்து, பார்வையாளர்கள் தண்ணீரை அடித்துவிட்டுக்கொண்டே இருந்தது. அங்கிருந்தவர்கள் எல்லாம் எஞ்சாய் செய்துக்கொண்டு இருந்தார்கள். சிலர் மட்டும் நனைந்தது போதும் என்று கிளம்பி, வேறு இடங்களுக்கு பெயர்ந்தார்கள்.



இதன் பிறகு, வீட்டு பிராணிகளை வைத்து ஒரு ஷோ. அதில் ஒன்றும் பெரிதாக விசேஷமில்லை. ஆனால், அந்த மிருகங்கள் மிகுந்த தேர்ச்சியுடன் தங்கள் திறமைகளைக் காட்டியது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு சிறப்பு.

அதற்கு பிறகு, வேறு சில ரைடுகளுக்கும், ஒரு 360 டிகிரி 3டி படமும் பார்த்தோம். அப்போது பிற்பகல் ஆகியிருந்தது. மெல்ல மழை பொழிய தொடங்கியது. சில சின்ன சின்ன ரைடுகள் மிச்சமிருந்தன. யோசித்தோம். சரி, தற்சமயம், நாசாவின் கென்னடி ஸ்பேஸ் செண்டர் செல்ல சரியான நேரம் என்று நினைத்து, அங்கிருந்து கிளம்பினோம்.

கிளம்புவதற்கு முன், சீவேர்ல்ட் மேலிருக்கும் சில புகார்கள் பற்றி. எனக்கு இல்லைங்க, சமூக ஆர்வலர்களுக்கு. (யாரு? நீயா நானாவிலும், செய்தித் தொலைக்காட்சிக் கலந்துரையாடல்களிலும் வருவார்களே! அவர்களா?)



சீவேர்ல்ட்டில் பல இடங்களில் குறிப்பிடப்படுவது - இங்கிருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் தத்தெடுக்கப்பட்டவை, விபத்தில் இருந்து, ஆபத்தில் இருந்து மீட்கப்பட்டவை, அவை இங்கு நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது என்று. ஆனால், சீவேர்ல்ட்டை எதிர்ப்பவர்கள் அதை மறுக்கிறார்கள். இவை அனைத்தும் பொய். இந்த உயிரினங்கள் கடத்தப்பட்டவை, கடலில் இருந்து அதன் குடும்பத்தில் இருந்து, இயற்கை சூழலில் இருந்து, நிறுவனங்களின் லாபத்திற்காக பிரிக்கப்பட்டு, இங்கிருக்கும் டேங்குகளில் மோசமாகப் பராமரிக்கப்படுகிறது என்கிறார்கள்.

தவிர, அவை தாக்கி, இங்கிருக்கும் பணியாளர்கள், பார்வையாளர்கள் காயமடைந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இணையத்தில் இது பற்றிய தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

அவர்கள் விடுக்கும் வேண்டுகோள் - சீவேர்ல்டை மூட வேண்டும். மக்கள் அதைப் புறக்கணிக்க வேண்டும்.

எனக்கு முன்னமே தெரிந்திருந்தால், புறக்கணிக்க யோசித்திருப்பேன்! இப்ப லேட். நாசா கிளம்பலாம்.

(தொடர்ந்தாலும் தொடருவேன்)

.

No comments: