Friday, March 13, 2015

ப்ளோரிடா ப்ளான்

எனக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நினைக்கவே இல்லை. குளிர் சலித்து, வெயிலைத் தேடி ஒரு ட்ரிப் போவேன் என்று என்றும் நினைத்ததில்லை.

மின்னியாபொலிஸ் குளிரைப் பற்றி பலர் சொல்லியிருந்தார்கள். அதுவும் சென்ற வருடம், ரொம்பவே ஓவர் என்று சொல்லியிருந்தார்கள். எப்படின்னா, வெளியே சென்று, ஒரு டம்ளர் தண்ணீரை கீழே ஊற்றினோம் என்றால், அது ஐஸாக கீழே விழும் என்றார்கள். கேட்க நல்லாத்தான் இருக்கிறது. இந்த குளிரில் வெளியே சென்று வரவேண்டுமே?

இந்த வருடம் அவ்வளவு இல்லை என்றாலும் செல்ஸியஸில் மைனஸ் 20, மைனஸ் 25 டிகிரி என்று சென்றது. இதை சமாளிப்பது ஒன்றும் பெரிய சிரமம் கிடையாது. ஒரு பெரிய ஜாக்கெட்டுக்குள் ஒளிந்துக்கொண்டு, பஸ்ஸில் அல்லது காரில் கிளம்பி, அலுவலகத்துக்கோ, கடைக்கோ செல்வோம். அபார்ட்மெண்ட்டில் அண்டர்கிரவுண்ட் கார் பார்க்கிங் இருப்பதால், காரைப் பனியில் இருந்து துடைக்க தேவையில்லை. அது ஒரு நல்ல விஷயம். எப்படி இருந்தாலும், காரை விட்டு, பஸ்ஸை விட்டு, ஒரு நிமிடமாவது வெளியில், இந்த குளிரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டி வரும்.

பனிக்குளிர் ஒரு சைலண்ட் கில்லர். சந்திக்கும் முதல் நொடி சமாளிக்கும்படி இருக்கும். அடுத்தடுத்த நொடிகள், தனது இருப்பைக் காட்டும். உடல் முழுக்க மூடியிருப்போம். வாய், மூக்கு உட்பட. கண்ணை மூட முடியாதல்லவா? சில குளிர் நாட்களில், கண்களை திறக்க சிரமப்பட வேண்டியிருக்கும். க்ளவுஸ் போட்டிருந்தாலும், சில நிமிடங்களில் கைகளுக்கு குளிர் பரவியிருக்கும். இதை சமாளிக்க க்ளவுஸ் போட்டுக்கொண்டு, கைகளை ஜாக்கெட் பாக்கெட்டுகளில் விட்டிருப்பேன். ஐந்து-பத்து நிமிடங்களுக்குள் கடைக்குள்ளோ, அலுவலகத்துக்குள்ளோ நுழைந்திருப்போம். அதற்கு மேல் இருக்கவேண்டுமென்றால், வேறு வழியில்லாமல் தான் இருக்க வேண்டும். அப்படி இருக்கவேண்டி இருந்தால், குளிரில் நடுங்க மாட்டோம். இது அதற்கு மேல!!! கை கால் விரல்கள் விறைத்து, வலி எடுக்க தொடங்கும். ஒரு உறைவிடத்தை அடைந்தபிறகு, கைகளைத் தேய்த்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

ஸோ, சமாளிப்பது ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், இப்படியே இரண்டு மூன்று மாதங்கள் என்றால்? போரடித்து விடாது? குளிர் சலித்துவிடாது? அதற்கு பயந்து, அடங்கி வீட்டிற்குள்ளே அல்லவா முடங்கி கிடப்போம்! குளிர், ஒரு சர்வாதிகாரமாவது இப்போது தான்.

இந்த சர்வாதிகாரத்தில் இருந்து விடுதலை தேடி, இம்முறை ப்ளோரிடா செல்ல முடிவெடுத்தேன்.

பிப்ரவரி இறுதியில் இருந்து, மார்ச் முதல் சில நாட்கள் வரை ட்ரிப். ப்ளோரிடாவில் வருடம் முழுக்க வெயில் தான்.சம்மரில் கொளுத்தும் என்பதால், இந்த சமயத்தில் செல்வது, ஒரு வகையில் நல்லது.

இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், ப்ளோரிடாவில் இருக்கும் தீம் பார்க், சுற்றுலா தலங்கள் அனைத்திலும் உலகம் முழுக்க இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் இருக்கும். இச்சமயம் கொஞ்சம் ஓகேவாக இருக்கும்.

இது தான் ப்ளோரிடா ப்ளான்,

முதல் நாள் - ஒர்லண்டோ - டிஸ்டிலேண்ட்
இரண்டாம் நாள் - ஒர்லண்டோ - சீ வேர்ல்ட்
மூன்றாம் நாள் - மியாமி பீச்
நான்காம் நாள் - கீவெஸ்ட் ட்ரைவ்
ஐந்தாம் நாள் - ஒர்லண்டோ - யுனிவர்சல்

ஐந்து நாட்கள் என்ன, பத்து-இருபது நாட்கள் இருந்தாலும், ஒர்லண்டோவிலே சுற்றலாம். அவ்வளவு எண்டர்டெயிண்ட் இருக்கிறது. ஆனால், எனக்கு தான் எத்தனை நாட்கள் தீம் பார்க்கிலேயே சுற்றுவது? இயற்கை அன்னையையும் தரிசிக்க வேண்டுமே? என்றெண்ணி மியாமி, கீவெஸ்ட் போன்ற இடங்களையும் பயணத்தில் சேர்த்திருந்தேன்.

ஒரு புதன் சாயங்காலம் வீட்டில் இருந்து கிளம்பினோம். பஸ் பிடித்து, ரயில் பிடித்து, ஏர்போர்ட் சென்றோம். பயணத்தின் ஆரம்பத்திலேயே பஸ், ரயில்வே ஸ்டேசனுக்கு சில தொலைவு முன்பே ப்ரெக் டவுண் ஆனது. சரி, பயணம் சிறப்பாக இருக்க போகிறது என்று நினைத்துக்கொண்டேன். நடந்து, ஓடி சென்று ரயிலைப் பிடித்தோம். ரயில் சரியான நேரத்தில், ப்ரெக் டவுண் ஆகாமல் செல்ல, ப்ளைட்டை பிடிக்க முடிந்தது.

இப்பொழுதெல்லாம் ப்ளைட் பயணங்கள் என்றாலே, ஒரு திகிலோடு தான் செல்ல வேண்டியிருக்கிறது. நடக்கும் போதோ, காரில் போகும் போதோ, வழுக்குகிறதே, இந்த ப்ளைட்டுக்கு வழுக்காதா? என்றெல்லாம் நினைப்பு ஓடிக்கொண்டிக்கிறது. நல்லவேளை, அப்படியெல்லாம் வழுக்கவில்லை. ஒழுங்காகவே டேக் ஆஃப் ஆனது. நானும் இரண்டு மணி நேரங்கள் தூங்கிவிட்டேன். அதற்கு பிறகு, ஒரு ஆட்டம் காட்டினார்கள் பாருங்க? ஒரு நொடி, பைலட் அனைவரையும் தன்னிச்சையாக நிற்கவிட்டார். பயணிகள் அனைவரும் "ஊ" என்று கத்தினார்கள். ("பரமா, சாவு பயத்தை காட்டிடாங்கடா!") பிறகு, அவ்வப்போது குலுக்கிவிட்டார்கள். பக் பக் என்று இருந்தது. கடவுள்கள் நினைக்கப்பட்டார்கள்!!!

பிறகு, லேண்டிங் வரை தூக்கமா, எதுவுமே வரவில்லை. லேண்டிங் ஆனவுடன் பைலட் சொன்னார் - "வெல்கம் டூ ஒர்லண்டோ, வி ஹவ் ஷொன் யூ டிஸ்னி ரைட் பிபோர் லேண்டிங்". நல்லா காட்டுனீங்க என்று நினைத்துக்கொண்டேன்.

(தொடர்ந்தாலும் தொடருவேன்)

3 comments:

Jana said...

thodarunga thala...

சரவணகுமரன் said...

நன்றி ஜனா...

Unknown said...

அருமை! அனுபவம்! தொடரத் தொடர்வேன்!