Saturday, July 16, 2016

இந்திய தரிசனம் - 2016

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.

http://www.panippookkal.com/ithazh/archives/8674



நான் அமெரிக்காவில் கம்பெனி மாறியவன். பெங்களுர் ஏர்போர்டில், என்னை அமெரிக்காவிற்கு அனுப்பிய, நான் பணிபுரிந்த முந்தைய நிறுவனத்தின் வரவேற்பு விளம்பரத்தைப் பார்த்த போது, "வாடா மவனே வா" என்று எனக்காகவே வைத்ததை போல் மற்றும் வைவதை போல் இருந்தது.


பெங்களூர் ஏர்போர்ட்டில் வை-ஃபை தேவையென்றால், அதற்கு நாம் நமது மொபைல் நம்பரைக் கொடுத்து, அதில் அவர்கள் அனுப்பும் OTPயை எடுத்து எண்டர் செய்து, அதை அவர்கள் சரி பார்த்து, பிறகு இலவச வை-பை கொடுக்கிறார்கள். எந்த நாட்டு மொபைல் நம்பராக இருந்தாலும் OTP அனுப்பி வைக்கிறார்கள். ஏர்போர்ட்டில் வை-ஃபைக்கும் இவ்வளவு செக்யூரிட்டியா? என்று நினைத்துக்கொண்டேன்.


விமான பயணங்களில் பொதுவாக ஒரு பயம் வரும். அதற்கு மேலான பயம், பெங்களுர் சாலைகளில் பைக்கில் செல்லும் போது வருகிறது. நாம் தான் பைக்கில் சாலையின் ஓரமாக இடது பக்கம் செல்கிறோம் என்று நினைத்து சென்று கொண்டிருக்கும் போது, நமக்கு இடது பக்கம் சடாரென ஒரு எஸ்யூவி செல்லும்.


அமெரிக்க சாலைகளில் தட்டுப்படும் அனைத்து ப்ராண்ட் நேம்களும், பெங்களுர்  சாலைகளில் காணக் கிடைக்கின்றன. மோசமாகப் பிரதியெடுத்த அமெரிக்க நகரமாகத் தான், பெங்களூர் காட்சித் தருகிறது. பல வருடங்களாகவே, பிஸ்ஸா ஹட், டாமினோஸ், சப்வே இருக்கின்றன. ஜந்து வருடங்களுக்கு முன்பு, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி, பேஸ்கின் ராபின்ஸ் போன்றவைகள் வந்தன. மூன்று வருடங்களுக்கு முன்பு, பர்கர் கிங், டேகோ பெல்ஸ், பாப்பா ஜோன்ஸ் போன்றவைகளைப் பார்த்தேன். தற்சமயம்,  ஆவ் போன் பெய்ன் (Au Bon Pain), டனான் (Danone) வகையறாக்களைக் கண்டேன். இந்த வெளிநாட்டு உணவகங்கள், இத்தாலிய , அமெரிக்க, மெக்சிகன், ப்ரென்ச் உணவுகளை விற்றாலும், அதில் இந்திய சுவையைப் புகுத்தி, லோக்கல் கஸ்டமைசேஷன் செய்து இந்தியாவில் கடை பரப்புவது கவனிக்க வேண்டியது. அமெரிக்காவில் இந்திய உணவகங்கள் இருந்தாலும், அவை எல்லாம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களையே முக்கிய வாடிக்கையாளர்களாக கொண்டது. ஏன் இன்னமும் அமெரிக்கர்களை, மற்ற நாட்டினரை டார்க்கெட் செய்யும் இந்திய சார் சங்கிலி உணவகங்கள் வரவில்லை? என்ற கேள்விக்கான பதில், பெரும்பாலான இந்தியர்களின் குணாதிசயத்தோடு சம்மந்தப்பட்டது.


H & R Block, Kumon நிறுவன போர்டுகளையும் பார்த்தேன். முன்பு, உலகமயமாக்கலின்  பயனாக இந்தியாவுக்குள் நிதியின் வரவு தெரிந்தது. தற்சமயம், நம்மவர்களின் பாக்கெட்டில் இருந்து வெளியே செல்லும் செலவுகள் தெரிகின்றன. ஒரு கை இந்திய மார்க்கெட்டில் பணத்தைப் போட, இன்னொரு கை எடுத்துக் கொண்டு இருக்கிறது. அதே சமயம், இந்த மாதிரியான வெளிநாட்டு நிறுவனங்களின் பிஸினஸ் மாடலை நெருங்கி கவனித்து, அதனுடன் போட்டியிட்டு, நம் நாட்டு நிறுவனங்களும் வெளிநாடுகளில் வளர வாய்ப்பு பெருகியுள்ளது.


ஒரு நாள் பெங்களுர் மன்யதா டெக் பார்க் செல்ல வேண்டி இருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு, அவுட்டர் ரிங் ரோடு என்பது வெறும் சாலை தான். சுற்றிலும் வெட்டவெளி. பிறகு, கடைகள், அலுவலகங்கள் பெருகின. ட்ராபிக் அதிகரிக்க, ஒவ்வொரு சிக்னலிலும் பாலங்கள், கீழ் வழி பாதைகள் உருவாக்கப்பட்டன. தற்சமயம், வெகு சொற்ப சிக்னல்களே இருந்தாலும், ட்ராபிக் ப்ளோ ஒன்றும் ஃப்ரியாக இருப்பதில்லை. வெயில் + ட்ராபிக் + பொல்யூசன் என்ற டெர்ரிஃபிக் காம்போவுக்கு பயந்து, பதினொரு மணி அப்பாயிண்ட்மெண்ட்டுக்கு, காலையில் ஏழு மணிக்கே கிளம்பி சென்றேன். அன்றைய தினம், ஒரு மணி நேரத்தில் சென்றது நன்றாகவே இருந்தது. அலுவலக ஏசி ரிசப்ஷனில் அன்றைய செய்தித்தாள்களை ஒரு மணி நேரமாக வாசித்தது, நேர விரயமாகப் படவில்லை. இன்னொரு முறையும் செல்ல வேண்டி இருந்தது. அந்த சமயம், பத்தரைக்கு தான் கிளம்பு முடிந்தது. அன்று இரண்டரை மணி நேரம் ஆனது. ஸப்பா!! ஒரு மாதம் இருந்தால், இந்த ட்ராபிக் எல்லாம் பழகி ஜென் நிலைக்கு சென்றுவிடுவோம்.


நெடுஞ்சாலைப் பயணங்களில் எளிய மனிதர்களின் சாலையோரக் கடைகள் தான், ட்ரைவ் இன். ஊரின் சிறப்பிற்கேற்றாற்படி, நொங்கு, மாம்பழம், திராட்சை, பனங்கிழங்கு, பதனி, கருப்பட்டி, நவ்வாப்பழம், கொய்யாபழம், இளநீர் என ப்ரெஷ்ஷாக கிடைக்கின்றன. என்று வளர்ச்சி என்ற பெயரில் இவர்களையும் விரட்டியடிப்பார்களோ, தெரியாது.


2016 இந்திய விலைவாசி குறிப்பு - அடையார் ஆனந்த பவனில் மினி டிபன் எண்பது ரூபாய், காப்பி இருபத்து ஐந்து ரூபாய். 3ஜி 1 ஜிபி டேட்டா தோராயமாக 150 ரூபாய். பெங்களுர் - தூத்துக்குடி தனியார் பஸ் கட்டணம், தொள்ளாயிரம் ரூபாய். பஸ்ஸில் ப்ரீ வை-பை (வித் ஃபுல் ஆப் இன்ட்ரப்சன்ஸ்). மட்டன் கிலோ ஐநூறு ரூபாய். சிக்கன் நூற்றைம்பது ரூபாய். திண்டுக்கல் தலப்பாக்கட்டியில் அரை ப்ளேட் பிரியாணி, இருநூறு ரூபாய். லெவிஸ் ஷோரூமில் ஜீன்ஸ் ஸ்டார்டிங் ப்ரைஸ் இரண்டாயிரத்து ஐநூறாம். டாலரில் கால்குலேட் செய்தால் மட்டுமே கொஞ்சம் நிம்மதி வந்தது. பல பொருட்கள் அமெரிக்காவில் வாங்கிக் கொள்ளலாம் எனத் தோன்றும் அளவுக்கு இந்திய விலைவாசி இருந்தது. வளர்ச்சி!!


எலக்ஷன் ரிசல்ட் பற்றி நண்பர்களிடம் கேட்டபோது, பெரும்பாலோர் சொன்னது. ஆண்ட கட்சிகள் ஜெயிக்கக் கூடாது. மற்றவர்கள் கவனிக்கத்தக்க இடங்களில் வெல்வார்கள் என்று எதிர்பார்த்ததாகக் கூறினார்கள். ரிசல்ட் ஆச்சரியம் அளித்ததாகக் கூறினார்கள். நான் சென்ற பல வீடுகளில் மிக்ஸி, ஃபேனில் அம்மாவின் ஸ்மைல்லிங்கைப் பார்த்த போது, வெற்றியின் ரகசியம் கொஞ்சம் புலப்பட்டது. தமிழர்கள் நன்றி மறக்கவில்லை போலும். அவ்வளவு ஏன், ஒரு பெங்களூர் சாட் கடையில் கூட, இப்புன்னகையை அங்குள்ள டிவி, ஃபேனில் கண்டேன். கர்நாடகத்திற்குள்ளும் கூடிய விரைவில் வாரோம்.


எங்கெங்கு காணிலும் சிசிடிவி கேமராக்கள் மயம். தெருமுனை இருபதுக்கு  பத்து டீக்கடையில் நான்கு சிசிடிவி. ஜெராக்ஸ் கடையில் சிசிடிவி. மொபைல் ரீசார்ஜ் கடையில் சிசிடிவி. கல்யாண மண்டப சமையல் கட்டில் சிசிடிவி. தீவிரவாத கண்காணிப்பு என ஆரம்பித்தது, பெட்டிக்கடை திருட்டை கண்காணிப்பதில் வந்து நிற்கிறது. அடுத்து, அப்பா சட்டைப்பை திருட்டைக் கண்காணிப்பிலும் முக்கிய பங்கை ஆற்றும் நாள், வெகு தொலைவில் இல்லை. பிறகு, விசாரித்ததில், காவல் துறை ரெக்யூர்மெண்ட்டாம் அது. எனக்கென்னமோ, சிசிடிவி கம்பெனிக்களின் வேலை என்று தோன்றுகிறது.


வெயில் - இதைச் சமாளிக்க, யூட்டா நேஷனல் பார்க்கில் ஒதுங்க இடம் இல்லாமல் நடந்து சென்ற அனுபவத்தை நினைவுபடுத்திக் கொண்டேன். பரவாயில்லை என இருந்தது. மினசோட்டா குளிரை நினைத்தேன். ரொம்ப பரவாயில்லை எனத் தோன்றியது. வெளியில் செல்லும் வேலைகளை, காலையில் சீக்கிரம் தொடங்குவதும் அல்லது மாலையில் முடித்துக் கொள்வதும் உதவிகரமாக இருந்தன. மே மாத இறுதியில் ஆங்காங்கே மழை பொழிந்து, வெப்பத்தைத் தணித்தது.


ஓய்வு விடுமுறையில் தூங்குவது கூட ப்ரொடக்டிவ் வேலைதான். இருந்தாலும், ரொட்டின் பழக்கத்தில் தினமும் ஆறு, ஏழு மணிக்கே விழிப்பு தட்டியது. பல ஊர்களுக்கிடையே அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருந்தது. பெரும்பாலும், தனியார் ஸ்லீப்பர் பேருந்துகளில் பயணம். வழக்கம் போல், ஆறு மணிக்கோ அல்லது அதற்கு முன்போ விழிப்பு வரும். நம்மூர் அழகை அதிகாலையில் ரசிக்கும் வாய்ப்பாக அது இருக்கும். பிறகு, ஊருக்கு சென்று சேரவும், அடுத்த வேலையைப் பார்க்கவும் சரியாக இருக்கும். பயணக் களைப்பு இருக்காது. ஒரே ஒரு முறை, கர்நாடக அரசு பேருந்தில் பயணம் செய்தேன். அது ஸ்லீப்பர் பஸ். இரவு மூணு மணிக்கு எழுப்பி விட்டார்கள். ஹெட்லைட் எரியவில்லையாம். அதனால், வேறு பஸ் மாறச் சொன்னார்கள். அது செமி ஸ்லீப்பர். ஏனோ, அதற்கு பிறகு, தூக்கம் வரவில்லை. வீட்டுக்கு சென்ற பிறகு அன்று மதியம் வரை தூக்கம். சரி, ரிடர்ன் செல்லும் போது, கர்நாடக அரசு பேருந்தை விட பெட்டரான தனியார் சேவை எது என்று விசாரித்ததற்கு, அரசு பேருந்தே பெட்டர் என்றார்கள். தமிழ்நாட்டு நிலை வேறாக இருக்கும்.


நான் முன்பு பெங்களுரில் இருந்த சமயம், அச்சமயம் ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டு இருந்த பல கட்டுமான வேலைகள் முடிவுற்று, தற்சமயம் மக்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. புதிதாக பல வேலைகள் தொடங்கப்பட்டு, நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன. சில பல   இடங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயுள்ளன. எம்.ஜி. ரோடு என்றாலே காதல் தேசம் படத்தில் காட்டப்படும் இளமையான சாலை தான், என் மனப்பதிவில் இருந்தது. இப்போது மெட்ரோ பில்லர்கள் சேர்ந்து உருமாறி போய், திருமணம் ஆகி இரு குழந்தை பெற்று விட்ட பெண்ணிடம், பழைய காதலியைத் தேடும் நிலைக்கு உள்ளாகிறது நமது கண்கள்.


உபெரும், ஓலாவும் இந்திய வாடகை சவாரி போக்குவரத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டாலும், ஆட்டோக்களுக்கான இடம் அதற்குரிய எக்ஸ்க்ளுசிவ் தேவைக்காக, இன்னமும் இருப்பதாக தெரிகிறது. மற்ற வகை டாக்ஸிக்களுக்கு தான் பாதிப்பு இருப்பதாக தெரிகிறது. பொபைல் ஆப் டாக்ஸி சேவை இல்லாத இடங்களில், இது போன்ற சிறு உள்ளூர் சேவைகள் உள்ளன. ஆனால், பெரும்பாலும் தெரிந்த ட்ரைவர்களுக்கு போன் செய்து, அழைத்து செல்கிறார்கள். ஏர்போர்டில், இவ்வகையான ஆப் சார்ந்த சேவை வாகனங்களுக்கு தனி இடம் ஒதுக்கி உள்ளார்கள். சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்களுக்கு உள்ளே உற்று நோக்கினால், டாஷ்போர்டில் ஸ்மார்ட் போன் மாட்டப்பட்டு மேப் ஆப் செயல்பட்டுக் கொண்டு இருக்கும்.  கண்டிப்பாக, சார்ஜ் இல்லாமல் சார்ஜ் ஏற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். ஸ்மார்ட்போனும், மொபைல் மேப்ஸ் ஆப்களும் சேர்ந்து, இந்தியாவில் ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டத்திற்கான மார்க்கெட்டைப் பிடித்து வைத்திருக்கின்றன. முகவரியை இணைக்கும் சிக்கலை, கோ-ஆர்டினேட்ஸ் கொண்டு சமாளிக்கிறார்கள். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், வண்டியை நிறுத்தி, ரோட்டில் செல்லும் யாரை வேண்டுமானாலும் வழி மறித்து, வழி கேட்டுச் செல்லும் வசதியை, எந்த ஜிபிஎஸ் சிஸ்டமும் கொண்டு வர முடியாது!!


மொபைல் போன் வளர்ச்சியால், எங்கும் எஸ்டிடி பூத்தே கண்ணில் படவில்லை. கூடிய விரைவில், ஸ்மார்ட்போன் புண்ணியத்தில் ப்ரவுசிங் செண்டர்களும் மூடப்படும். ப்ரிண்டிங், போட்டோ காப்பி தயவு தேவையிருக்கும். தெருவெங்கும் மொபைல் போன் சர்வீஸ் ரீசார்ஜ் கடைகள் என்றால், டூரிஸ்ட் தலங்களில் டிவைஸுக்கும் ரீசார்ஜ் கடைகள்.


முன்பு கையால் முற்றம் தெளித்த அம்மா, தற்சமயம் ஹோஸ் பைப்பில் தண்ணீர் அடிக்கிறார். போட்ட ரோடு மேலேயே ரோடு போட , சாலை உயர்ந்து கொண்டே போகிறது. சாலையில் இருந்து வீட்டின் உயரம், வீட்டின் வயதைக் காட்டும் அறிகுறியாகி விட்டது. வீட்டை இடிக்காமல் உயர்த்திக் கட்டும் டெக்னாலஜிக்கள் வந்துவிட்டதால், அடுத்து அதுதான் டிரெண்டாக இருக்கும். முன்பு, முன்பக்கம் இடம் விட்டு வீடு கட்டினார்கள். இப்ப, விட்ட இடங்களிலும் கான்கிரீட் கூரைகள்.


ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, பெருச்சாளி, யானை, பாம்பு, மயில் ஆகியவற்றை Zooக்கு செல்லாமல் சாலைகளிலோ அல்லது வீட்டிலேயே காண முடிந்தது. ஐம்பது ரூபாய்க்கு யானை சவாரி, வீட்டு படிக்கட்டில் கிடைக்கிறது. பெங்களூர் புறநகர் பகுதிகளில், பாம்புகள் சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டு, ஹாயாகச் சுற்றுகிறனவாம். பின்ன, அவுங்க ஏரியாவுல நாம வீடு கட்டுனா, என்ன செய்யும்? என்று கேட்டு விட்டு, கழற்றிப்போடப்பட்ட சட்டைகளை ஒதுக்கிவிட்டு செல்கிறார்கள் புறநகர்வாசிகள்.


ஊரில் யாரைப் பார்த்தாலும், சுகர், பிபி என்று மாத்திரையும், கையுமாக தான் சுற்றுகிறார்கள். அது எந்த லெவலில் இருந்தாலும், மாத்திரை போட்டுக்கொள்ளலாம் என்று இன்னொரு பக்கம் சுவையாகச் சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். நம்மூர் உணவு ரசனையைப் பற்றி சொல்லவா வேண்டும்? பதனியில் நொங்கைப் பிச்சுப் போடுவது, மாம்பழத்தை வெட்டி போடுவது, பரோட்டாவை சால்னாவில் ஊறவிடுவது, தோசைக்குள் கறியை ஒளித்து வைப்பது என அபாரமான சமையல் ரசனைவாதிகள்.


சனிக்கிழமை மதியம் ஆன்லைனில் ஒரு மொபைல் வாங்கினால், ஞாயிற்றுக்கிழமை காலை வந்து டெலிவரி செய்துவிட்டு போகிறார்கள். எதிர்பார்ப்புகளைச் சமயங்களில் எகிறியடித்து செல்கிறார்கள். எனக்கு நேர்ந்தது, விதிவிலக்குகளாக கூட இருக்கலாம். நல்ல விதிவிலக்குகளில் நாம் இருப்பது நமது அதிர்ஷ்டம் என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான். இந்த டெலிவரி மக்கள், ஒரு குட்டி வேனில் எடுத்து செல்லக்கூடிய அளவுக்கு பொருட்களை முதுகில் சுமந்து செல்லும் வகையில் அமைந்த விநோத பைகளைத் தோளில் மாட்டிக்கொண்டு, டெலிவரி கங்காருங்களாக பைக்கில் சல்லென வந்து செல்கிறார்கள்.


எங்கும் இருப்பது போல், மக்கள் கால் வைக்கா இடங்களில் உச்சக்கட்ட அழகு மிச்சம் இருக்கிறது. அப்படி அழகான இடங்களில், ஆக்கிரமிக்க நினைக்கும் மனிதன் நுழைந்தவுடன் ஒரு சிலையை வைத்து விடுகிறான். இடங்கள் பிரபலமடைகின்றன. மனிதர்கள் படையெடுக்கிறார்கள். கடவுளுடன் சேர்ந்து, இயற்கையையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பிறகு, அந்த இயற்கை அழகை சீரழிக்க தொடங்குவது தான் துரதிஷ்ட நிகழ்வாகி போகிறது. இருந்தாலும், அந்த மிச்ச சொச்ச அழகே கண்களுக்கு பெருவிருந்தாகி போகிறது.


அவ்வப்போது, வழமையான அலுவல்களில் இருந்து விடுபட்டு, புது இடங்களுக்கு சென்று வருகிற பயணங்கள், சலிப்புற்ற வாழ்வில் புத்துணர்ச்சியைக் கொடுக்கவல்லது. அதேப்போல், வெளியூர்களில் இருந்து, வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு, சொந்த ஊருக்கு சென்று வருகிற அனுபவம், நமது மறந்த நினைவை மீட்டுவதாகவும், மறந்துக்கொண்டு இருக்கும் குறிகோள்களை நினைவுப்படுத்துவதாகவும் அமைகின்றன. பல ஆண்டுகளுக்கு கழித்து செல்பவர்களுக்கு, சொந்த ஊர் பயணம், அவர்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய திருப்புமுனைப் பயணமாகக் கூட அமையக்கூடும். நாம் தான் தினமும் கஷ்டப்பட்டு வாழ்கிறோம் அல்லது நாம் சுகவாசியாக வாழ்கிறோம் என்ற இருவேறு எண்ணங்களையுமே மறுபரிசீலனைக்கு உட்படும் தருணங்களை, இந்திய பயணங்கள் ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

.

No comments: