Showing posts with label நிதி. Show all posts
Showing posts with label நிதி. Show all posts

Monday, February 13, 2012

இலக்கிய பரோட்டா - நகலும் அசலும்

நகலும் அசலும்



---

நகல்

பஞ்சாப்பில் உருவான மைதாவும், பெல்லாரியில் விளைந்த வெங்காயமும், நாமக்கல்லில் போடப்பட்ட முட்டையும் இங்கே என் இலையில் சங்கமித்திருக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு இந்தியனின் பசியை நீக்க, ஒன்றிணைந்த இந்திய ஒருமைப்பாடா?

அசல்

பரோட்டா வெறும் உணவில்லை அது ஒரு கலாச்சாரக் குறியீடு, பரோட்டா சாப்பிடாதவர்களே இல்லை எனும்படி அது தமிழகம் எங்கும் பரவியிருக்கிறது,


---

நகல்

புரோட்டா வட இந்திய உணவு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். முகலாய படையெடுப்பின் மூலம் இந்திய பிரதேசத்திற்குள் அறிமுகமான உணவு இது. புரோட்டா பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து நம்மிடம் வந்திருக்கிறது. அதனிடம், எந்த முகலாய பேரரசர் இதை சொல்லி அனுப்பினார்?

அசல்

பஞ்சாபில் இருந்து பரோட்டா எப்படி தென்னிந்தியாவிற்குள் வந்தது, தமிழ்மக்கள் அதை எப்படி ஏற்றுக் கொண்டார்கள், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு எவ்வாறு பரோட்டா அறிமுகமானது, அங்கு பரோட்டா அடைந்த உருமாற்றங்கள் என்ன என்பதை முழுமையாக விவரித்திருக்கிறார் ஷாநவாஸ், மொகலாய மன்னர்களின் உணவுபட்டியலில் பரோட்டா இடம் பெற்றிருப்பது வரை மனிதர் தேடித்துருவி ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார்.


---

நகல்

மாஸ்டர் அதை தயார் செய்து கொண்டிருந்தது, அவருடைய இரும்பு கரண்டி, கல்லில் எழுப்பும் ஒலியின் மூலம் எனக்கு தெரிந்தது. அது ஒரு வன்முறையின் ஒலியாக எனக்கு கேட்டது. கண்ணுக்கே தெரியாத, புரோட்டாக்கள், முட்டைகள், தக்காளிகள், வெங்காயங்கள், கறிவேப்பிலைகள், ’உனக்காக நாங்கள் மரணிக்கிறோம்’ என எழுப்பும் மரண ஒலியாக அது என்னை வந்தடைந்தது.

சிறிது நேரத்தில் ஒலியின் அளவு குறைந்தது. இரும்பு கரண்டியின் வன்முறையை தாங்க முடியாத உணவு பொருட்கள், அதற்கு அடங்கி, கொத்து புரோட்டாவாக உருவெடுத்திருக்கும் நேரம் அது.


அசல்

பள்ளிவயதில் பரோட்டா போடும் மாஸ்டரின் லாவகத்தை வியந்து பார்த்துக் கொண்டிருப்பேன், பரோட்டாவை பிய்த்துப் போட்டு அதில் சால்னா ஊற்றுவது ஒரு கலை, அது போலவே கொத்து பரோட்டா போடும் கல்லின் தாள ஒசை தனியான லயம் கொண்டது.

---

எது எப்படியோ, ”ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும்” - நான் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகம் என்றாகிவிட்டது.

தூத்துக்குடி பரோட்டா பற்றி வாசிக்க, இங்கே செல்லுங்கள்.

.

Sunday, December 5, 2010

கடனுக்கு மரியாதை



என்னுடைய நண்பர் ஒருமுறை ஊருக்கு போவதற்காக, பெங்களூர் மடிவாளாவில் இருக்கும் தனியார் பேருந்து நிறுவன அலுவகங்களில் ஏறி இறங்கினார். கடைசி நேரம் என்பதால், எதிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஒரே ஒரு பஸ்ஸில் மட்டும் ஒரு டிக்கெட் இருந்தது. இவரும் மகிழ்ச்சியாக பர்ஸைத் திறந்து, பணத்தை எடுத்தவாறே, ‘எவ்வளவு?’ என்று கேட்க, பணத்தைப் பார்த்த பேருந்து நிறுவன ஊழியர், “சார், இது இண்டர்நெட் டிக்கெட். கிரெடிட் கார்டு வேணும்.” என்றிருக்கிறார்.

இவரிடம் கிரடிட் கார்டு அந்நேரம் கிடையாது. எவ்வளவு சொல்லியும் பணத்திற்கு அந்த டிக்கெட்டைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? என்பது போல் கேட்டுவிட்டு, இன்னொரு நண்பரை அழைத்து, அவரிடம் இருந்து கிரெடிட் கார்டை, கிரெடிட்டில் வாங்கி, நண்பர் பிறகு டிக்கெட்டை வாங்கினார்.

“கிரெடிட் கார்ட் என்பது ஒரு கடனட்டை. கையில் வைத்திருந்த பணத்திற்கு இல்லாத மதிப்பு, கடன் காசுக்கு இருக்கிறது.” என்று அவரை புலம்ப வைத்துவிட்டார்கள்.

---

நான் அடிக்கடி ரயிலில் டிக்கெட் புக் செய்வதால், ஒரு பேங்கில் இருந்து போன் செய்து, ட்ரெயின் டிக்கெட் விலையில் சலுகை தரும் கிரெடிட் கார்டு வேணுமா? என்று கேட்டப்போது, சரியென்று சொல்லிவிட்டேன்.

ஒரு வருடம் கழித்து, வருட சந்தா என்று 300 ரூபாய் சார்ஜ் செய்தார்கள். யோசித்துப் பார்த்தேன். 300 ரூபாய் கொடுக்கும் அளவுக்கு, அதில் ஒன்றும் நான் சலுகைப் பெற்றுவிடவில்லை. அதனால், பேங்கை அழைத்து கார்டை கேன்சல் செய்யச் சொன்னேன்.

“ஏன் சார்?”

“அந்தளவுக்கு நான் ஒன்றும் ட்ரெயின் டிக்கெட் எடுத்து சலுகைப் பெறவில்லை.”

“இருந்தாலும், மற்ற இடங்களில் பயன்படுத்தலாம் அல்லவா?”

“அதற்கு என்னிடம் இலவச ஆயுள் சந்தா கொண்ட கார்டு இருக்கிறது. இது வேண்டாம்.”

“வருட சந்தாவை கேன்சல் செய்தால், எங்கள் கார்டை தொடருவீர்களா?”

“ஒகே”. சார்ஜ்ஜை கேன்சல் செய்துவிட்டார்கள்.

---

கிரெடிட் கார்டை ரொம்பவும் கவனமாகப் பயன்படுத்தவேண்டும் என்று பயன்படுத்தும் அனைவரும் சொல்வார்கள். உண்மைதான். சரியாகப் பயன்படுத்தினால், நமக்கு தான் லாபம். ஓசிப்பணம் என்று நினைக்காமல், அடுத்த மாதம் எவ்வளவு கட்ட முடியுமோ, அவ்வளவுக்கு மட்டுமே பயன்படுத்தினால், பிரச்சினையில்லாதது மட்டுமில்லாமல் சில பலன்களும் கிடைக்கும்.

நாம் செய்யும் செலவுக்கு ஏற்ப, பாயிண்ட்ஸ் கொடுப்பார்கள். அதன் மூலம், நமக்கு ஏதேனும் கிப்ட் கிடைக்கலாம். எனக்கு இதுவரை ஒரு வாட்ச், ஒரு புத்தகம், ஒரு எலக்ட்ரானிக் தெர்மாமீட்டர் கிடைத்திருக்கிறது. போன வாரம், ரூபாய் 1250 மதிப்புள்ள ஒரு உணவகத்தின் கிப்ட் வவுச்சர்கள் கிடைத்தது. உணவகம் - மெயின்லாண்ட் சைனா. அங்கு ஒருமுறை அலுவலத்தில் இருந்து அழைத்து சென்றிருக்கிறார்கள்.

விசாரித்ததில் அங்கு லன்ச் பபே - தலைக்கு கிட்டத்தட்ட அறுநூறு ரூபாயாம். கூட ஒரே ஒரு ஆளைக் கூட்டி செல்லலாம். யாரை கூட்டி செல்லலாம் என்று யோசித்தேன். இதுவரை அங்கு செல்லாத, 600 ரூபாய்க்கு கொடுத்தால், 1000 ரூபாய்க்கு சாப்பிட கூடிய ஆளாக இருக்க வேண்டும். இந்த க்ரைட்டிரியாவில் மேட்ச் ஆன ஒரு நண்பனை அழைத்து சென்றேன்.

ரிசப்ஷனிலேயே கிப்ட் வவுச்சரைக் காட்டி விசாரித்துக்கொண்டேன். வாங்குவீர்களே தானே என்று. அப்புறம், சாப்பிட்டப்பிறகு, நாட்டாமை விஜயக்குமார் மாதிரி ’செல்லாது செல்லாது’ என்று சொல்லிவிடக்கூடாதே!

அன்று கடல் உணவு திருவிழாவாம். முதலில் சூப்பும்,சிக்கன் ஸ்டார்ட்டர்ஸும் கொடுத்தார்கள். அதில் எனக்கு சிக்கன் மெமொ பிடித்துப்போனது. அது நம்மூர் கொழுக்கட்டை போன்றது. என்ன, நடுவில் சிக்கன் இருக்கும். அப்புறம் சிக்கன் நூடுல்ஸ், இறால் ப்ரைட் ரைஸ், நண்டு, இறால் அப்பளம், தொட்டுக்க ஏதேதோ மீன், சிக்கன், மட்டன் வெரைட்டிகளை எலக்ட்ரிக் இன்டக்ஷன் அடுப்பில் வைத்திருந்தார்கள். முடிவில் பழ வகைகள், கேக், ஐஸ்கிரீம்.

என்னால் ஒருக்கட்டத்திற்கு மேல் முடியவில்லை. நண்டு சாப்பிட்டு உடல் முழுக்க பெருத்துபோன ஒருவனுடைய கதையை சமீபத்தில் தான் கேட்டிருந்ததால், ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், கூட வந்திருந்தவன் ஒன்றையும் விடவில்லை. ஒருமுறையிலும் விடவில்லை. முன்பே சொல்லியிருந்ததால், தயாராக வந்து இருந்தான். ரெஸ்ட் எடுத்து, ரெஸ்ட் எடுத்து சாப்பிட்டான். கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஆனது, நாங்கள் சாப்பிட்டு முடிக்க. இனிமேல், என் பெயருக்கு இம்மாதிரி கிப்ட் வவுச்சர்கள் அனுப்ப மாட்டார்கள் என நினைக்கிறேன்.

---

இப்பொழுதெல்லாம் கிரடிட் கார்டிற்கு நிறைய சலுகைகள் கொடுக்கிறார்கள். படத்திற்கு சென்றால், ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொன்று இலவசம். இதில் உள்ள உள்குத்து என்னவென்றால், இந்த சலுகை எல்லாம் நாம் போக முடியாத நேரத்தில் இருக்கும். அதாவது, புதன்கிழமை காலைக்காட்சி, செவ்வாய்க்கிழமை மதியக்காட்சி என்று இருக்கும்.

அப்புறம் ஏதேனும் பொருட்கள் வாங்கினால், அதில் கொஞ்சம் டிஸ்கவுண்ட் கொடுப்பார்கள். இது எல்லாமே வலைதான். எவனாவது சிக்குவானா என்று பார்த்துதான். எந்த மாதமாவது கட்ட முடியாமல், அல்லது தாமதமாக கட்டி மாட்டினால், இந்த சலுகைக்கு எல்லாம் சேர்த்தாற்போல் வட்டியும், முதலுமாக பிடிங்கிவிடுவார்கள். அதனால், நாம் கட்டுப்பாடாக இருந்தால் தான், கார்டு நமது கட்டுப்பாடில் இருக்கும்.

சில டிப்ஸ்...

1. அடுத்த மாதம் எவ்வளவு கட்டமுடியுமோ, அதற்கேற்ப செலவழிக்கவும்.
2. அந்தளவு செலவாகிவிட்டால், கார்டை பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, வெளியே செல்லவும்.
2. கார்டு இருக்கிறதே என்று வாங்காமல், காசிருந்தால் எது வாங்குவோமோ, எது தேவையோ, அதை மட்டும் வாங்கவும்.
3. கட்ட வேண்டிய நாளுக்குள், பணத்தை கட்டவும்.
4. கட்டுவதற்கு முன், அந்த மாதம் செய்த செலவுகளைப் பார்த்து, கணக்கு சரிப்பார்த்து கட்டவும்.
5. ரிவார்ட் பாயிண்ட் கொடுத்தால், அவ்வப்போது அதை சரிப்பார்க்கவும். அப்படியே விட்டு வைத்தால், ஏதாவது காரணம் சொல்லி அதை அமுக்கிவிடும் வாய்ப்புண்டு.
6. கிரடிட் உச்ச வரம்பை குறைத்து வைத்துக்கொள்ளவும்.
7. ஒரு கார்டே போதுமானது. இரு கார்டுகள் 15 நாட்கள் இடைவெளியில் ஸ்டேட்மெண்ட் நாட்கள் வருவது போல் வைத்திருந்தால், நீண்ட கிரடிட் அவகாசம் எப்பொழுதும் இருக்கும்வாறு வசதி உண்டு.
8. பெரிய தொகை ஏதேனும் இருந்து, கட்ட முடியாமல் போனால், அதை மாதம் தோறும் கட்டுவதாக (EMI) மாற்றி அமைக்கலாம்.
9. கிரடிட் கார்டு ஸ்லிப்களை தூக்கி ஏறியாமல், இரு மாதங்களாவது வைத்திருக்கவும்.
10. எவ்வித சலுகையும் இல்லாவிட்டால், பணம் இருக்கும்பட்சத்தில், இதை உபயோகப்படுத்தாமல் இருப்பதே நல்லது.

.