Thursday, May 14, 2009

ஞானகுரு

ஆங்கிலத்தில் கதையின் வாயிலாக வாழ்க்கை தத்துவங்களை எளிமையாக கூறி வெற்றி பெற்ற புத்தகங்கள் பல உண்டு. விகடனின் ‘ஞானகுரு’ தமிழில் அப்படிப்பட்ட ஒரு புத்தகம். ஆசிரியர் - எஸ்.கே.முருகன்.

சில வருடங்களுக்கு முன்பு, ஜுனியர் விகடனில் தொடராக வந்தது ஞானகுரு. பிறகு, 2007இல் விகடன் பதிப்பகம் இதை புத்தகமாக வெளியிட்டது. தொடராக வெளிவந்தபோது, என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஆனால், படித்த ஒவ்வொரு வாரமும் என்னை கவர்ந்தது. அப்போதே நினைத்து வைத்திருந்தேன், புத்தகமாக வந்தால் வாங்க வேண்டும் என்று. சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கி விட்டேன்.

கதை மூலம் தத்துவம் சொல்வது, தத்துவம் படிக்க விரும்பாதவர்களையும் படிக்க வைக்கும் என்றாலும் எனக்கு இதில் பிடித்தது ஊர் சுற்றும் அந்த நாடோடி சாமியாரின் மாறுபட்ட பார்வை, நறுக் பதில்கள், வெளிப்படையாக போட்டுடைத்து பேசும் பேச்சு.

புத்தகத்தில் இருந்து சில ஞான துளிகள்...

ஆத்திகம் நாத்திகம் பற்றி,

கடவுளைக் கும்பிட உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அவ்வளவு உரிமை அவருக்கு மறுக்கவும் இருக்கிறது. இந்த உலகில் முழுமையான ஆத்திகர், முழுமையான நாத்திகர் என்று யாரும் கிடையாது. கடவுள் நம்பிக்கையில் ஆழமாக இருப்பவர்கள் ஏமாற்றம், தோல்வி வரும்போது ‘உண்மையில் கடவுள் இருக்கிறாரா?” என்று மனதில் ஓரத்தில் விசனப்படுவதுண்டு. அப்படியேதான் நாத்திகர்களும் சோதனை ஏற்படும்போது, கடவுள் லீலையோ என்று பயப்படுவதுண்டு. இதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று எவரும் இல்லை, எவரும் திருந்தவேண்டிய அவசியமும் இல்லை.

கடவுள் இல்லை என்பது தானே அறிவியல் என்று கேள்விக்கு,

அதுதான் உனக்கு சந்தோஷம் என்றால் அப்படியே வைத்துக்கொள். இந்தப் பூமியை சூரியன் சுற்றி வருகிறது என்று அந்தக் காலத்து விஞ்ஞானிகள் சொன்னார்கள். பிறகு பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்கிறார்கள். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பையும் முழு உண்மையென்று சொல்ல முடியாது. ஒருவேளை இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே, வேறு ஏதாவது ஒரு பிரபஞ்சத்தைச் சுற்றுகிறது என்பது போல் எதையாவது இன்னும் பல வருடங்கள் கழித்துக் கண்டுபிடிக்கலாம். அறிவியல் நிலையானது அல்ல. நாளுக்கு நாள் மாற்றமடையக் கூடியது. ஆனால், கடவுள் விஷயம் அப்படியல்ல.

இந்திய பெண்கள் பற்றி,

நான் பார்த்தவரையில், பெண்தான் பெரிய சுயநலவாதி. ஆனால், தன்னைப் பற்றி நினைப்பதில் அல்ல. தன்னையும் தாண்டி தன் குழந்தைகளைப் பற்றி முன்னுரிமை கொடுப்பதில் அவள் மிகப்பெரிய சுயநலவாதி! உலகின் மற்ற எல்லா உறவுகளுக்கும் இரண்டாம் இடம் கொடுத்துவிட்டு, குழந்தைகளுக்காக எதையும் செய்யத் தயாராகிற சுயநலவாதி. அதனால்தான், உலகம் முழுவதும் குடும்பங்கள் நெருக்கமும் சகிப்புத் தன்மையும் இல்லாமல் தவிக்கும் போதும்... நம் தேசத்தில் உறவுகளுக்கான மகிமை மாறாமல் இருக்கிறது.

ராணுவ வீரனிடம்,

உன் மனைவி மக்களை நீ நேசிப்பதைப் போலத்தானே உன்னால் கொல்லப்பட்ட எதிரியும் அவனது மனைவி மக்களை நேசித்திருப்பான். ஆக, உங்கள் இருவருக்குமே அன்பும் இருக்கிறது... கொலை வெறியும் இருக்கிறது. தவறு உன்னிடமில்லை. ராணுவம் என்ற அமைப்பின் மீதான தவறுதான் இது. இது போன்ற அமைப்பே தேவையில்லை என்பது தான் என் போன்ற பிச்சாண்டியின் ஆசை.

விபச்சாரியிடம்,

ஆண்கள் இருக்கும்வரை உங்களைப் போன்ற பெண்களை உருவாக்கவே செய்வார்கள். காமத்தில் தோல்வி கண்ட ஆண்கள்தான், வெவ்வேறு பெண்களிடம் இன்பம் தேடி அலைகிறார்கள். அவர்களது ஒவ்வொரு முயற்சியும் தோல்வியைத்தான் தழுவுகிறது. ஏனென்றால், பெண்னை வெற்றிகொண்டு இன்பம் அனுபவிக்க எந்த ஆணாலும் முடியாது.

குற்றாலத்துல குளிச்சா பைத்தியம் தெளியுமா?

மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாதாரண நபர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கிறது தெரியுமா? நீங்கள் நினைப்பதை எல்லாம் பேசவும், செய்யவும் முடியாது. ஆனால் நினைப்பது போல் எல்லாம் வாழ்பவர்களைத்தான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்கிறோம். மக்கள் தொகை எண்ணிக்கையில் நாம் அதிகமாகவும், அவர்கள் குறைவாகவும் இருப்பதால் நாம் தெளிவான மனநிலை உள்ளவர்கள் என்று நினைத்துக்கொண்டு, அவர்களை மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்கிறோம். குற்றாலத் தண்ணீர் கொண்டு அவர்களது சுதந்திரத்தை பறிக்க நினைப்பது பரிதாபம்தான்.

நாய் வளர்ப்பவர்களுக்கு,

மனிதர்கள் நாய் வளர்ப்பது பாசத்தைக் காட்டுவதற்கு அல்ல... பிறரை அடிமையாக்கும் ஆசையின் மிச்சம்தான் அது.

ஒரு கார்ப்பரேட் சாமியாரிடம்,

“ஆத்மா, பரமாத்மா போன்ற கண்ணுக்கு தெரியாத சங்கதிகளும், சொர்க்கம், நரகம் போன்ற கற்பனைகளும் இன்றைய மனிதர்களுக்குத் தேவையில்லாதவை. அதுபோன்றே உடலைத் தொந்தரவு செய்யும் யோகா, தியானம் போன்றவைகளைவும் விட்டு ஒழியுங்கள்.”

“அப்படியானால் கடவுள்...”

“கடவுள் பற்றிய கவலை மனிதர்களுக்கு வேண்டாம். மனிதனைப் பற்றிய கவலை மட்டுமே மனிதனுக்குப் போதும்.”

“நாங்கள் மனிதர்களுக்கு உதவுவதையே முக்கிய கடமையாகச் செய்கிறோம். கடவுள் பெயரைச் சொல்லி, ஏழைகளுக்கு உதவுகிறோம் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்.”

“இந்த உலகத்தில் விளைவும் பொருட்களை சரியாக பங்கீடு செய்தால், உலக மக்கள் அனைவருமே பசி, பட்டினி, ஏழ்மை என்பதை சந்திக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், ஒரு பக்கம் மிதமிஞ்சிய ஏழ்மையும், இன்னொரு பக்கம் மிதமிஞ்சிய செல்வமுமாக இருப்பதற்குக் காரணமே அரசுகள் தான். ஏழைகளுக்கு உதவிகள் செய்வதாகச் சொல்லி அரசு செய்யும் தவறையே நீங்களும் செய்கிறீர்கள்”

“அப்படி என்றால், ஜனநாயகம் சரியில்லை என சொல்கிறீர்களா?”

“ஜனநாயகம் மட்டுமில்லை, மன்னராட்சி, கம்யூனிஸம், முதலாளித்துவம் என்று இதுவரை உண்டான அத்தனை புரட்சிகளும் மாற்றங்களும் வலிமை குறைந்த மக்களுக்கு நல்லது செய்யவில்லை. மேலும் இன்றைய உலகம் முழுமையான முதலாளித்துவத்தை நோக்கித்தான் போய்க்கொண்டு இருக்கிறது. அதனால், இன்னும் அதிகமான ஏழைகள் உண்டாவர்கள். நீங்களும் அதிக அளவில் சேவை செய்யலாம்.”


காதலை பற்றி,

காதல் என்பது நீ உன்னைப் பற்றி எண்ணாமல், உன் அன்புக்குரியவனின் நலனைச் சிந்திப்பது. இன்னொருத்தியை மணந்துகொண்டால், காதலன் சந்தோஷமாக இருப்பான் என்று தெரிந்தால் அவனையே விட்டுக்கொடுக்கவும் தயாராக இருப்பது அதுதான் காதல்!. நீ என்னை நன்றாக வைத்துக்கொண்டால் மட்டுமே உன்னை நான் திருப்திப்படுத்துவேன் என்று கட்டுப்பாடு விதிப்பது காதல் அல்ல. ’நான் உன்னை நேசிக்கிறேன். அதற்காக உன் விஷயத்தில் தலையிடமாட்டேன், உன் எந்த விருப்பத்துக்கும் தடை போடமாட்டேன்’ என்று நேசம் காட்டுவதுதான் காதல். பேராசை, பொறாமை, மிரட்டல், அதிகாரம் இருக்கும் இடத்தில் காதல் வளராது.

இன்னும் எக்கச்சக்கமா இருக்குது. அனுபவத்தால் பெறும் நிறைய விஷயங்கள் எழுத்தில் உள்ளது. படித்து முடிந்தபின்பு, எனக்கு வியப்பெல்லாம் ஞானகுரு மேல் இல்லை. எஸ்.கே.முருகன் மீது தான்.

5 comments:

வினோத் கெளதம் said...

ஒவ்வொரு கருத்தும் அருமைங்க..
யாருங்க அந்த ஞானகுரு..

சரவணகுமரன் said...

வினோத், இது ஒரு புனைவுங்க...

ramya said...

ellaa karuthum okay, but kadaisiya sonnatha thaan ethukka mudiayala,

kaadalukkaaga ethayum elakalaam, aana kadala elakakudathu.., ithu theriyaatha,
possesivenessum,naama virumburavanga mela vechi irukka urimaiyum thaan kaadal. atha yaarukagavum vitutharakoodathu.

jeeva said...

ella karuthum okay,

but kadaisiya sonna karutha ethuka mudiyala,

kaadalna thanakku mattum sonthamnu nenaikkira possesiveness thaan, atha eppadi vittukodukka mudiyum.

சரவணகுமரன் said...

Ramya - Jeeva,

உங்க கருத்திற்கு நன்றி.

இதே மனப்பான்மை தான், சில நேரங்களில் காதலின் தோல்விக்கு காரணமாக அமைகிறது.