Tuesday, May 19, 2009

இனம் - பணம் - என் மனம்

அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளை.

“சரியா வளைச்சி போட்டுட்டாங்க, போல?” என்றபடி வந்தமர்ந்தார் ஒரு ஆந்திர நண்பர்.

எதிரில் அமர்ந்திருந்த ஒரு தமிழ் உணர்வாளர் அவரை முறைத்தபடி பொறித்து தள்ளிவிட்டார். “எதுவும் தெரியாம பேச கூடாது. அமைதியா சாப்பிடுங்க” என்று கடைசியில் முடித்தார்.

அவரை சொல்லி குற்றவில்லை. ஈழத்தை பற்றிய புரிதல் நம் மக்களிடையே அவ்வளவுதான். அட, மற்ற மாநிலத்தவரை விடுங்கள். நம்மிடையேதான் எத்தனை பேருக்கு இந்த உணர்வு இருக்கிறது?

---

இனத்தை விட பணம் தான் முக்கியம் போல?

தேர்தலுக்கு முன்னால் யாருக்கு ஓட்டு போட? என்று சிலரிடம் கேட்ட போது, ‘போர் நடந்தால் யார் என்ன செய்ய முடியும்? காங்கிரஸ் வந்தால் பொருளாதார சீர்திருத்தம் இருக்கும். நம்ம வேலைக்கு நல்லது. வரி குறையும்’ என்று தான் கருத்து சொன்னார்கள். மத்தவன் செத்தா என்ன, இருந்தா என்ன? முதல்ல நாம நல்லா இருப்போம் என்பது தான் பெரும்பாலோரது மனநிலை.

தேர்தலின் போதும் வைகோ, சீமான், பாரதிராஜா போன்றவர்களோட உணர்வுபூர்வமான பிரச்சாரங்களை மீறி இருநூறு ரூபாய் மீதான சத்தியத்திற்கு கட்டுப்பட்டுதான் பலர் ஓட்டு போட்டார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக நம் மனதை பாதிக்கும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும், செய்திதாளை (முக்கியமாக வட இந்திய) அதிகம் ஆக்கிரமித்து இருந்தது, சென்செக்ஸில் எகிறியடித்திருந்த இரண்டாயிரம் பாயிண்ட்கள்.

இப்படி தொடர்ந்து இன உணர்வை மீறியபடி பண உணர்வு.

---

நிறைய ஆய்வு கட்டுரைகள் வர தொடங்கிவிட்டது. தோல்விக்கு காரணம் என்ன என்று?

போன வழி சரியா? எடுத்த முடிவுகள் சரியா? என்று விவாதங்கள். ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகிற கடந்த கால நிகழ்ச்சிகள்.

வெற்றி பெற்றிருந்தால் இதெல்லாம் வெற்றிக்கான காரணம் ஆகிருக்கும்.

எது எப்படி இருந்தாலும் இங்கு எப்போதும் வெற்றி பெற்றவன் பேச்சு தான் நியாயமானது. உண்மையானது. சரியானது.

வெற்றி பெற்றவன் உளறினால் கூட அது பொன்மொழி.
சொல்லுபவன் தோல்வியடைந்தால் சொல்வது பொன்மொழியாக இருந்தாலும் கூட அது உளறல்.

---

ஆளாளுக்கு ஒரு கோட்பாடு. ஒரு சித்தாந்தம்.

இவர்களது இந்த நிலைப்பாடால், இதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாதவர்கள், எதை பற்றியும் அறிந்திராத குழந்தைகள் பாதிக்கப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

வாழ்ந்தால் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதும் முக்கியம். எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்று எண்ணும் ஜீவன்களுக்கு சுதந்திரம் கொடுப்பதும் அவசியம்.

6 comments:

Anonymous said...

//வாழ்ந்தால் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதும் முக்கியம்.//
அதே எண்ணத்தில் இங்குள்ளவர்களும் ஓட்டுப் போட்டிருக்கலாம்.

//அட, மற்ற மாநிலத்தவரை விடுங்கள். நம்மிடையேதான் எத்தனை பேருக்கு இந்த உணர்வு இருக்கிறது?
//உங்களுக்கு உங்கள் சொந்த மக்களைப் பற்றிய அளவீடு அவ்வளவுதானா

//தேர்தலின் போதும் வைகோ, சீமான், பாரதிராஜா போன்றவர்களோட உணர்வுபூர்வமான பிரச்சாரங்களை மீறி இருநூறு ரூபாய் மீதான சத்தியத்திற்கு கட்டுப்பட்டுதான் பலர் ஓட்டு போட்டார்கள்.//

இவர்களின் கருத்துக்கள் பிடிக்கவில்லையென்றால் 200ரூபாய் என்று பொருளா

கார்த்திகைப் பாண்டியன் said...

//நம்மிடையேதான் எத்தனை பேருக்கு இந்த உணர்வு இருக்கிறது?//

உண்மைதான்.. வேதனைக்குரிய விஷயம்..

DHANS said...

வாழ்ந்தால் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதும் முக்கியம். எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்று எண்ணும் ஜீவன்களுக்கு சுதந்திரம் கொடுப்பதும் அவசியம்.//

miga sirappu.... ennul iruntha mananilaiyai intha pathivil velikkondu vanthuvitteergal

சரவணகுமரன் said...

//அதே எண்ணத்தில் இங்குள்ளவர்களும் ஓட்டுப் போட்டிருக்கலாம்.//

யாருடைய சுதந்திரத்திற்காக?

//உங்களுக்கு உங்கள் சொந்த மக்களைப் பற்றிய அளவீடு அவ்வளவுதானா//

ஆமாம்

//இவர்களின் கருத்துக்கள் பிடிக்கவில்லையென்றால் 200ரூபாய் என்று பொருளா//

அப்படிபட்டவர்களின் ஓட்டால்தான் தேர்தல் முடிவு பெருமளவு தீர்மானிக்கப்படுகிறது

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி கார்த்திகைப் பாண்டியன்

சரவணகுமரன் said...

நன்றி DHANS