Friday, October 1, 2010

எந்திரன் - கனவு நிறைவேறியது



நான் ரஜினி ரசிகனானதற்கு ஒரு வகையில் எங்க அண்ணன் தான் காரணம். எங்களுக்குள் வயது இடைவெளி அதிகம். நான் சிறுவனாக இருந்த காலத்தில், அவர் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டார். அவருடைய ஆரம்பகால சம்பாத்தியத்தில், எனக்காக நிறைய சினிமா செலவு செய்திருக்கிறார். அவர் ஒரு கமல் ரசிகர். ஆனாலும், ரஜினி படம் ரிலீஸ் ஆகும் அன்று என்னைக் கூட்டிக்கொண்டு படத்திற்கு சென்று விடுவார். ஒரு படத்தையும் முதல் நாளில் விட்டது கிடையாது. அண்ணனின் நண்பர்கள் யாராவது அடித்து பிடித்து டிக்கெட் எடுத்துக்கொடுத்துவிடுவார்கள். உள்ளே செல்வது தான் கொஞ்சம் சிரமமான விஷயம். சில தியேட்டர்களில் போலீஸும், சில தியேட்டர்களில் ரவுடிகளும் பந்தோபஸ்து கொடுப்பார்கள். நெருக்கி தள்ளுவார்கள். அதிலும், என்னை எப்படியாவது பாதுகாத்து உள்ளே சென்றுவிடுவார்.

பிறகு, அண்ணன் துணையில்லாமல் படம் பார்க்க துவங்கிய போது, நண்பர்கள் எப்படியாவது டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிடுவார்கள். பெங்களூர் வந்த பிறகு, முதல் நாள் ரஜினி படம் பார்ப்பது சுலபமானது. நிறைய தியேட்டர்களில் வரும். எங்க ஊரில் இருப்பது போன்ற அடிதடி எல்லாம் இருக்காது. ரிசர்வேஷன் இல்லாத சிங்கிள் ஸ்கிரின் தியேட்டர்கள் இருக்கின்றன. கவுண்டரில் கொடுக்காவிட்டாலும், ப்ளாக்கில் 50 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்க வேண்டி இருக்கும்.

தற்போது, இன்னும் நிறைய தியேட்டர்கள் என்பதால் முதல் நாள் பார்க்க வேண்டும் என்கிற பலருடைய கனவு நிறைவேறுகிறது. குடும்பம், குழந்தைகளுடன் வருகிறார்கள். இதெல்லாம் முன்பு சாத்தியமில்லை.

தற்சமயம் அலுவலகத்திற்கு மதியம் மேல் சென்று இரவு வருவதால், பர்ஸ்ட் ஷோவோ, செகண்ட் ஷோவோ பார்க்க சாத்தியமில்லை. மார்னிங் ஷோ போகலாம் என்று பத்து மணிக்கு சென்றால், அதிகாலை ஆறு மணிக்கே ஒரு காட்சி ஆரம்பமாகிவிட்டது. அதற்கு முன்பு இருந்ததா என்று தெரியவில்லை. கவுண்டரிலேயே டிக்கெட் விலை 100, 150. இதற்காகவே புதுசாக டிக்கெட் அடித்திருந்தார்கள். நாலு போலீஸ்காரர்களுக்கு இன்று இங்குதான் டூட்டி போலும். வேலைக்கு லேட்டாக வந்தார்கள். வந்திருந்த கூட்டத்தால், கொஞ்சம் ட்ராபிக் ஜாம் ஆனது. அந்த போலீஸ்காரர்கள் ஏதும் வேலை பார்த்த மாதிரி தெரியவில்லை. படத்தைத்தான் முழுவதும் பார்த்தார்கள். ரஜினி படத்தை முதல் நாள் ஓசியில் பார்ப்பவர்கள் இவர்களாகத்தான் இருக்கும்.

---

“முதல் நாளே பார்க்கணுமா?”

“நான் இதுவரை பாபா மட்டும் தான் இரண்டாம் நாள் பார்த்தேன். ஒரு சென்டிமெண்ட் தான். பாவம், படம் ஓடாம போயிடுச்சுன்னா?”

“அடேங்கப்பா! சரி, குசேலன் எப்ப பார்த்த?”

“முதல் நாள் தான்”

?

“அது பசுபதி படம்ப்பா!!!”

---

தியேட்டர் கேட்டை திறந்ததற்கே, ஆரவாரம் ஓவர். படத்திற்கு கேட்க வேண்டுமா? ஆனால், எல்லோரும் பொங்கி எழ வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இடைவேளைக்கு பிறகு, அரை மணி நேரம் படம் ஓடியிருக்கும். திடீரென வாய்ஸ் மட்டும் வரவில்லை. கூச்சல் ஆர்ப்பாட்டமானது. காட்சி நிறுத்தப்பட்டது.

என்னலாமோ ட்ரை செய்தார்கள். மைனா பட ட்ரைய்லர் போட்டு, சவுண்ட் செக் செய்தார்கள். சத்தம் வரவே இல்லை. கூட்டம் வெறியேறி, பெப்ஸி பாட்டில்கள் உடைப்பட, திரை சின்னதாக கிழிக்கப்பட, படம் திரும்ப முதலில் இருந்து போடப்பட்டது. மக்கள் கொஞ்சம் அமைதியாக, அந்த கேப்பைப் பயன்படுத்தி, சவுண்ட் சிஸ்டம் சரி செய்யப்பட்டது.

முதல் நாள் ஒரே டிக்கெட்டில் அனைவரும் இரண்டு முறை படம் பார்த்தார்கள்.

---

படத்தை பற்றி, ரஜினி ரசிகன் நான் என்ன சொல்ல? எந்திரன் பற்றிய விமர்சனங்களை பார்க்காமல் படம் பார்க்கவும். இன்னும் பார்க்காதவர்கள், இதற்கே மேல் படிக்கக்கூட வேண்டாம்.



ரஜினி இந்த படத்தில் ‘பத்து வருஷ கனவு’ என்று சொல்லும்போதெல்லாம், ஷங்கர் தான் தெரிந்தார். அவருடைய பத்து வருஷ கனவு, ரஜினியால், ரஜினி என்ற நடிகனுக்கு இருக்கும் மார்க்கெட்டால், அந்த மார்க்கெட்டினால் சாத்தியமான பட்ஜெட்டால், அந்த பட்ஜெட் கொடுத்த பிரமாண்டத்தால் நிறைவேறியிருக்கிறது.

ரொம்ப காலத்திற்கு பிறகு, பில்-டப் இல்லாமல் ரஜினி அறிமுகம். ஆங்காங்கே பழைய ரஜினி போல் நடக்கிறார். பேசுகிறார். ஆடு போல் கத்துவது எல்லாம் அமர்க்களம். போதும்! ரஜினி புகழ் பாடாமல், வேறு விஷயங்கள் பேசலாம்.

மாஸ்க் போடப்பட்டு, கிராபிக்ஸ் செய்யப்பட்டு ரஜினி வேகமாக நடனம் ஆடுவதாகவும், பறந்து சுற்றி சுழண்டு சண்டை போடுவதாகவும் காட்டியிருக்கிறார்கள். பார்க்க நன்றாக இருந்தாலும், ரஜினியை இத்தனை வருஷம் தொடர்ந்து பார்த்துவருவதால், நாம் பார்ப்பது ரஜினி இல்லை என்று தெரிந்து, அவருடைய வயது நினைவுக்கு வந்து, கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. :-(

‘என் இனிய இயந்திரா’வில் ஆங்காங்கே இருக்கும் பொறிகள், கமர்ஷியல் திரைப்பட வடிவத்திற்கேற்ப மாற்றமடைந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராயிடம் சிட்டி கேரக்டர் முத்தம் கேட்கும்போதும், ரோபோ பார்ட் பார்ட்டாக பிய்த்தெறியும் போதும் எனக்கு ஜீனோ தான் நினைவுக்கு வந்தது.

ஆனந்த விகடனில் ஜீனோ இப்படி கழட்டப்பட்ட அத்தியாயம் வந்த வாரத்திற்கு பிறகு, சுஜாதாவிற்கு நிறைய கடிதங்கள் சோகமாக எழுதப்பட்டதாம். பல வருடங்கள் கழித்து, அதே உணர்வு ரசிகர்களுக்கு இன்று வந்திருக்கும்.

தரமான கிராபிக்ஸால், பல உழைப்பு சார்ந்த விஷயங்கள் கண்டுக்கொள்ளாமல் போகக்கூடும். எந்த சீனில் எல்லாம் இரண்டு ரஜினிகள் வருகிறார்களோ, எல்லாம் கிராபிக்ஸ். கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளிலும் இருவரும் வருகிறார்கள். சில காட்சிகளில், நூறு பேர் வருகிறார்கள்!

எனக்கு இரண்டாம் பாதியை விட முதல் பாதியே ரொம்ப பிடித்தது. முதல் பாதியில் வசனம் ரொம்ப ஸ்ட்ராங். இரண்டாம் பாதி கிராபிக்ஸ் மேளா, எனக்கு லேசாக சலிப்பு தட்டியது. அதிலும் சாதா போலீஸ்களை, சகட்டுமேனிக்கு பெரிய காரணமில்லாமல் சும்மா சுட்டுத்தள்ளுவது கவரவில்லை.

முதல் நாள் பார்க்கும் போது, இருக்கும் கூச்சலால் நிறைய விஷயங்கள் கவனிக்க முடியாது. வசனங்கள், பின்னணி இசை போன்றவை டிடிஎஸ் ஸ்பிக்கரில் இருந்து வந்தாலும், நம்மவர்களின் விசில் சத்ததிற்கு முன் அதெல்லாம் செல்லுபடியாகாது. திரும்ப பார்க்காமலா விட போறோம்? அப்ப, கவனித்துக்கொள்ளலாம்.

முடிவாக, ரஜினிக்கு ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி, ஷங்கருக்கு கனவு ப்ராஜக்ட், கலாநிதி மாறனுக்கு க்ளோபல் வசூல், ரசிகனின் மூன்று வருட காத்திருப்பு என பல பேருடைய கனவு இன்று நிறைவேறியுள்ளது.

.

8 comments:

TechShankar said...

Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

by
TS



டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

superappu

Anonymous said...

ROBOT (HINDI)- SUPER FLOP. No one bothered about this movie in North India. Really its a Boring Movie.
-Siva

KrishnaDeverayar said...

@ Siva i think ur dreaming to say no one is bothered.First time tamil movie getting super reviews from the north. I don't know where u get ur information from.

Look here at reviewgang. Its same as USA rottentomatoes.com
And its all Hindi reviews.

http://www.reviewgang.com/movies/110-Robot-Reviews

Mohan said...

உங்கள் விமர்சனம் அருமை

Anonymous said...

Intha padatjirkku kandeepaha RAJINI tevaiyillai. Sila pdangalai oru silar pannumpothu thaan pidikirathu.. Udharanam... Mudhalvan .. athu rajinikkenre uruvakkappatta padam.. athe pola Indhian .. kamalai thavira veru yaraiyum antha pathirathil ninaithu kooda parka mudiyavillai.. athe pola robo virkkum.. kamal thaan.. chitti kadapatjirathil.. kamalai ninaithu parththal... appappa....

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

Anonymous said...

super pathivu.