Thursday, February 9, 2012

முதலும் முடிவும்

துர்காவை தொட்டவுடன் சுபாஷ் அடைந்த உணர்வை என்னவென்று சொல்ல முடியும்? நாம் தண்ணீர் ஊற்றிய செடியில் பூத்த முதல் மலரை தொடும் போது ஏற்படும் சிலிர்ப்பை விட நூறு மடங்கு பெரியது அது. வேரில்லாமல் விதையில் பூத்த அதிசய முதல் மலர் - துர்கா.

ஆம். துர்காவை டாக்டர் சுபாஷ் டெஸ்ட் ட்யூப் முறையில் படைத்திருந்தார்.

---

பத்திரிக்கையாளர்களிடம் இந்த சாதனையை அறிவித்தார் டாக்டர் சுபாஷ். செய்தி பரவ, அரசாங்கம் சுபாஷை அழைத்தது. “எப்படி செய்தாய், இந்த சாதனையை? உன்னால் எப்படி முடிந்தது? சொல்!” ஒரு வல்லுனர் குழுவை அமைத்தது, மேற்கு வங்காள அரசு.

---

வல்லுனர் குழுவின் முன் சுபாஷ்.

“எங்கு அந்த கருவை வைத்திருந்தாய்?”

சொன்னார். “எப்படி?” என்று அடுத்த கேள்வி. அடுத்தடுத்த எப்படிகளுக்கு பதில் கூறினாலும், எப்படிகள் நின்றபாடில்லை. சுபாஷால் சமாளிக்க முடியவில்லை.

வல்லுனர் குழு சொன்ன தீர்ப்பு - “இது போர்ஜரி!”.

---

தனது முயற்சியையும், முடிவுகளையும், ஆய்வு கட்டுரையாக எழுத நினைத்து விடுமுறைக்கு விண்ணப்பித்தார் சுபாஷ். விடுமுறை நிராகரிக்கப்பட்டது.

தனது முயற்சியை பற்றி விவாதிக்க, ஜப்பான் செல்ல வேண்டியிருந்தது. பயணம் நிராகரிக்கப்பட்டது.

முடிவில், கண்ணியல் துறை பேராசிரியராக பணி மாற்றம் செய்யப்பட்டு, கல்லூரிக்கு அனுப்பப்பட்டார்.

---

சுபாஷ் உருவாக்கிய முதல் இந்திய டெஸ்ட் ட்யூப் குழந்தை பிறந்ததற்கு 67 நாட்களுக்கு முன்பு தான், உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை இங்கிலாந்தில் பிறந்திருந்தது. அதை உருவாக்கிய லண்டன் டாக்டர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துக்கொண்டிருக்க, அதற்கு மாற்றான முறையில், குறைந்த வசதிகளை கொண்டு அச்சாதனையை உருவாக்கிய இந்திய டாக்டருக்கு அடி மேல் அடி விழுந்துக்கொண்டு இருந்தது.



1981 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி, தனது அறையில் தன் முடிவை நிகழ்த்திக் கொண்டார் சுபாஷ். இந்தியாவின் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தையை உருவாக்கிய மருத்துவ பிரம்மா, அதிகாரவர்க்கத்தின் நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்துக்கொண்டார்.

தொடங்கிவைத்தவருக்கு முடித்துவைப்பதில் என்ன கஷ்டமிருக்கப் போகிறது?

---

1986இல் டாக்டர் ஆனந்தின் மருத்துவ முயற்சியின் மூலம் பிறக்கப்பட்ட குழந்தையே, பல காலம் இந்தியாவின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபி என்றழைக்கப்பட்டது. நம்பப்பட்டது. பின்னர், சுபாஷின் ஆய்வு கட்டுரைகளை வாசிக்க நேர்ந்த அதே டாக்டர் ஆனந்த், 1997இல் டாக்டர் சுபாஷ் முகோபாத்யாவின் சாதனையை உலகிற்கு அறிய செய்தார்.

2010 இல் உலகின் முதல் குழந்தையை உருவாக்கிய இங்கிலாந்து டாக்டர் ராபர்ட்டிற்கு, அவருடைய சாதனைக்கான அங்கீகாரத்தின் உச்சமாக மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. பரவாயில்லை, இந்தியாவிற்கு அதற்குள் அதன் உண்மையான சாதனை டாக்டரைப் பற்றி தெரிந்துக்கொள்ளவாவது முடிந்ததே? என்ன, உடனடியாக அவருக்கு முடிவுரை எழுதியது, இந்தியாவின் சாதனை!

---

இந்தியாவிற்கு அறிவுரை சொல்லுமளவுக்கு அப்பாடக்கர் இல்லை என்றாலும், அங்கீகாரத்தின் அவசியத்தை புரிந்துக்கொள்ள வேண்டியது நமக்கு மிக அவசியம். இந்திய சமூகத்தில் அங்கீகாரம் அவ்வளவு சீக்கிரம் எதற்கும் கிடைத்துவிடாது. ”இது என்ன பெரிய விஷயமா?” என்ற மனோபாவம் தான் இதற்கு காரணம்.

நம்மை சுற்றி நடக்கும் சிறு சிறு முயற்சிகளுக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களிடம் நமது பாராட்டுகளை கொண்டு சேர்க்கும்போது, ஏதோ நம்மால் ஆன அளவில் ஒரு சின்ன மாற்றம் நிகழ வாய்ப்பிருக்கிறது. நமது வீட்டில் இருந்து, அலுவலகத்தில் இருந்து இதை நாம் தொடங்கலாமே?

முதல் முயற்சிகளை தொடங்கி வைத்த அனைத்துத்துறை இந்தியர்களுக்கும் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

---

டிஸ்கி - கீழ்க்கண்ட இணைப்புகளில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

இணைப்புகள்:-http://drsubhasmukhopadhyay.blogspot.com/
http://www.drsubhasmukherjee.com/
http://en.wikipedia.org/wiki/Subhash_Mukhopadhyay_(physician)

.

2 comments:

Kartheeswaran said...

மிகவும் பயனுள்ள தகவல்... நண்பா..

சரவணகுமரன் said...

நன்றி கார்த்தீஸ்வரன் :-)