Friday, April 17, 2015

ஒகே கண்மணி - ஒகேவான மணிரத்னம்



பல நாட்களாக ஒரு ஆசை. மணிரத்னம் உட்கார்ந்து பார்க்குற மாதிரி ஒரு படம் எடுத்துற மாட்டாரா? என்று. ஆசையை இன்று நிறைவேற்றிவிட்டார்.

எத்தனை ப்ளாப் கொடுத்தாலும், மணிரத்னத்தை ரசிப்பவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். நம்பிக்கை வைத்து, முதல் நாளே செல்கிறார்கள். நான் எதிர்பார்க்கவேயில்லை. எங்கூர் (மின்னியாபோலிஸ்) தியேட்டர் இப்படி நிரம்பி கிடக்கும் என்று. நானும் நண்பரும் குடும்பத்துடன் சென்றிருந்தோம். கொஞ்சம் லேட்டாக சென்றதால், இடம் கிடைக்காமல் மனைவிமார்கள் தனியாக உட்கார, நாங்கள் தனியாக உட்கார்ந்தோம். இம்மாதிரி நடந்தது முதல் முறை.

கதை ஏற்கனவே வைரமுத்து சொன்னது தான். லிவிங் டூகெதர் பற்றியது. அதை சிரமப்படாமல், மணிரத்னத்திற்கே உரிய ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்.

படம் எனக்கு பிடித்திருந்தது. நான் எதிர்பார்ப்பே இல்லாமல் சென்றிருந்தேன். என்னை உட்கார்ந்து நெளியாமல் பார்க்க வைத்தால் போதும் என்பது தான் எனது அதிகபட்ச எதிர்பார்ப்பு. அதை படம் நிறைவேற்றிவிட்டது.

சிறிய நடிக பட்டாளம். அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள். மணிரத்னம் டெம்ப்ளேட் புரிந்தவர்களுக்கு, யார் யார் எதற்கு எதற்கு திரைக்கதையில் உதவ போகிறார்கள் என்று கதாபாத்திர அறிமுகங்களின் போதே தெரிந்திருக்கும். அலைபாயுதேவில் கொஞ்ச நேரம் வரும் அரவிந்த்சாமி என்றால் இதில் படம் முழுக்க வரும் பிரகாஷ்ராஜ். யாரையும் போட்டு தாக்காமல், பில்குட்டுடனே படம் முடிகிறது.

படம் வருவதற்கு முன்பு 'மெண்டல் மனதில்' பாடல் மட்டுமே கேட்க பிடித்திருந்தது. படத்தில் கேட்க, அனைத்து பாடல்களும் நன்றாக இருந்தது. 'பறந்து செல்லவா' முதலில் கேட்கும் போது, என்னடா இதுவென்பது போல் இருந்தது. படத்தில் லூபி ஆப் பற்றி சொல்லிவிட்டு வரும்போது, ரஹ்மான் இசையின் மேஜிக் தெரிந்தது. அது யாருப்பா? பிஜிஎம்மில் ரஹ்மானுடன் பங்கு போட்டுக்கொண்டது?

பொதுவாக மணிரத்னம் படங்களில் ரஹ்மான் பாடல்கள் நன்றாக படமாக்கப்படும் என்பது போல், வேஸ்ட் செய்யப்படுவதும் நடக்கும். இந்த படத்தில் நன்றாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரஹ்மான் மகன் பாடல் கூட சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பி.சி. ஸ்ரீராம் கேமராவை ஆட்ட வேண்டிய இடத்தில் ஆட்டி, நனைக்க வேண்டிய இடத்தில் நனைத்து, நம்மை காட்சிக்குள் கொண்டு செல்கிறார்.

படமாக்கத்தில் பணிபுரிந்திருக்கும் அனைத்து கலைஞர்களும் லெஜண்ட்ஸ் என்றாலும் லைட்டாக, ஜாலியாக ஒரு படம் எடுத்திருக்கிறார்கள்.

ரயில், கடற்கரை, புறா என்று மணிரத்னம் க்ளிஷே இல்லாமல் இல்லை. அதெல்லாம் சேர்ந்ததுதானே 'ஏ மணிரத்னம் பிலிம்'.

யூகிக்கக்கூடிய திரைக்கதை, அழுத்தமில்லா காட்சிகள் என்று இருந்தாலும் போதிய நடைச்சுவையுடன் சலிப்பில்லாமல் செல்லும் படம் என்பதால் ஒகே கண்மணி ஓகே ஓகே.

மணிரத்னம் 80-90களில் ஸ்கோர் செய்த படங்களினால், இப்பொழுதும் அவர் படங்களுக்கு மார்க் போட ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர் தான் தயாரில்லாமல் இருந்தார். இதோ, இப்பொழுது இன்று மார்க் வேண்டி ரசிகர்களின் தேவைக்கேற்ப படம் எடுத்திருக்கிறார். ரசிகர்கள் மார்க் கேரண்டி.

மணிரத்னத்தின் அடுத்த 10 படங்களுக்கும் கூட்டம் தயார்.

.

No comments: