Tuesday, November 3, 2009

சாமிகிட்ட சொல்லி வெச்சு...

மகேந்திரனிடமிருந்து...

---

என் அன்பை பொய் என்று சொல்...
அப்போதுதான் உன்னை இன்னும்
பிரியமாய் தொட முயல்வேன்...!!


பூமா ஈஸ்வர மூர்த்தியின் இந்த கவிதை எனக்கு மிகப்பிடித்தமான ஒன்று...

உன் மீதான என் அன்பை நீ சந்தேகப்படுவது கூட எனக்கு பிடிக்கும். அது என்னை மீண்டும் ஒருமுறை உன்னிடம் நிரூபிப்பதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கிறது... வெளிப்படுத்தப்படாத அன்பு எத்தனை தூய்மையானதென்று தெரியுமா? என் சிரிப்பு எதிரே வருபவரையும் தொற்றிக்கொள்வதை போல எளிதானதில்லை, என் அன்பை உனக்கு விளங்க வைப்பது. ஆனாலும் அந்த சிரமம் சுகமானது..

உனக்கான என் அன்பை மொத்தமும் வெளிப்படுத்த ராஜாவின் இந்த பாடலைப்போல வேறு ஏதேனும் கிடைக்குமா?

1992 ம் வருடம், மலையாள இயக்குனர் பரதன் இயக்கத்தில் வெளியான "ஆவாரம்பூ" படத்தின் பாடல்கள் மிக நேர்த்தியாக, ராஜாவின் பெயர் சொல்பவை.



வினீத், நந்தினி (வைதேகி) நடிப்பில் மிக இயல்பான அழகில் படமாக்கப்பட்ட "சாமிகிட்ட சொல்லி வெச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே..."

பரதனின் முதல் தமிழ்ப்படமான இது, "தகர" என்ற மலையாளப்படத்தின் தழுவல்.

எனக்கே சிலமுறை தோன்றும்... எத்தனை முறை ஜானகியை பற்றி சிலாகித்து சொல்வதென்று.. எத்தனை முறை சொன்னாலும் தீராதது அவரின் குரலினிமை. கங்கை அமரனின் வரிகளை இசையின்றி எஸ்.பி.பி துவங்குவார். பின்பு இசையோடு துவங்கும் பாடலின் அனுபல்லவியில் "முத்துமணியே... பட்டுத்துணியே..." என்று ஜானகி நுழைவார். காண்பதற்கும் மிக அழகான கடற்புரத்தில் படமாக்கப்பட்டிருக்கும் பாடல். ஒப்பனையில்லாத நாயகியின் தெளிவான முகம் வெகு அழகாய் இருக்கும்.

முதல் சரணத்தில், ஆதாரம் அந்த தேவன் ஆணை என்ற வரியை முடிந்தால் ஸ்வரமாக்கி பாருங்கள்... "ஆணை" என்ற ஒரு வார்த்தைக்கு மட்டும் ராஜா பிரயோகித்திருக்கும் ஸ்வரங்களும், அதை ஜானகி பாடியிருக்கும் வேகமும் அற்புதமாயிருக்கும்.

அதன்பின்பு "வந்த துணையே... வந்து அணையே..." ஜானகி என்பதெல்லாம் மறந்து நமக்கு மிகவிருப்பமான ஒருவர் நம் கைப்பற்றி அழைப்பது போல் இருக்கும்.

இரண்டாவது சரணத்திற்கு முன்பு ஒரு தனித்த வயலின் பகுதி.. அதோடு போட்டியிடும் குழலிசை, இறுதியில் இரண்டும் இணையுமிடத்தில் ஜானகி துவங்கும் "காவேரி அணை மீதேறி நதி..." பாடல் முழுவதுமே, "தயவு செய்து என் அன்பை புரிந்து கொள்ளேன்" என்கிற ரீதி தொனிக்கும்...

இந்த முறை பாடல் முடிவுறும் போது, நீங்கள் மீண்டும் முதலிலிருந்து கேட்கத்துவங்குவீர்கள் என்று நினைக்கிறேன்...!!



சாமிகிட்டச்சொல்லி வெச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக்கதையே...
முத்துமணியே... பட்டுத்துணியே...
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்துவந்த சித்திரமே...

கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே...
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேர தெளிந்தேனே...
ஆதாரம் அந்த தேவன் ஆணை, சேர்ந்தாய் இந்த மானை...
நாவார ருசித்தேனே தேனை, தேர்ந்தேன் இன்று நானே...
வந்த துணையே... வந்து அணையேன்...
அண்டமுள்ள சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே...

காவேரி அணை மீதேறி நாடி ஓடோடிவரும் வேகம்...
பூவான எனை நீ சேரும் விதி மாறாத இறைவேதம்...
பூலோகம் அந்த வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்...
வாழ்நாளில் சுகம்தானிது போலே வாழும் வழி கேட்டேன்...
வன்னக்கனவே... வட்ட நிலவே...
எண்ண எண்ண இன்பம் தரும் வண்ணம் வரும் கற்பனையே...

சாமிகிட்டச்சொல்லி வெச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக்கதையே...
முத்துமணியே... பட்டுத்துணியே...
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்துவந்த சித்திரமே...


-மகேந்திரன்.

---

பாடலைக் காண படத்தை க்ளிக் செய்யவும்.

.

16 comments:

sampath said...

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இப்பவும் என் போணில் பதிவு செய்து வைத்து இருக்கிறேன். எஸ் பி பியும் பின்னியிருப்பார். இந்த படத்தில் "மந்திரம் இது" , "அடுக்கு மல்லி", "ஆலோலம் பாடி" என எல்லா பாடலும் இனிமையாக இருக்கும்....

Harini said...

Very nice song and the way you explained is really good

Unknown said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... எதனை முறை கேட்டாலும் சலிக்காதது

Karthick said...

Intha Padalnu illa avaram poo pada padalgal anaithum nandraga irukkum.

Alolam paadi - Arumayana thaalattu..
Nathiyoram karyoram...
adukumalli - romantic melody

But now the recent illayaraja songs were not upto his mark...

Unknown said...

இந்த மாதிரி “ஜீவன்” உள்ள பாட்டு
ராஜாவைத்தவிர யாரால் போட முடியும்?
அடுத்து பாட்டை இசையால அழகு படுத்துவது.

ரெண்டு வெகுளி காதலர்கள் பாடுவது மாதிரி பாட்டின் அமைப்பு.

நன்றி.

மகேந்திரன் said...

மிக்க நன்றி சம்பத், ஹரிணி, பேனா மூடி, கார்த்திக் மற்றும் ரவிசங்கர்.

mani said...

ராஜாவைத்தவிர யாரால் போட முடியும்?உண்மை, உண்மை, உண்மை

Vijay said...

சார்
டிக் டிக் டிக் - ல வரும் "மலரே மலரே உல்லாசம் " - ஜானகி மேடம் பாடியது .. அத உங்க ஸ்டைல் -ல விமர்சனமா படிக்க ஆசை ...

நரேஷ்... said...

மிக அருமையான பாடலைப் பற்றிய அருமையான வர்ணனை....

மகேந்திரன் said...

வருகைக்கு நன்றி மணி, நன்றி நரேஷ்..
அருமையான பாடல் விஜய், ஆனால் பாடல் இடம் பெற்ற படம் டிக் டிக் டிக் அல்ல, ரஜினிகாந்த், மாதவி நடித்த "உன் கண்ணில் நீர் வழிந்தால்.." நன்றி விஜய்.

Anonymous said...

nan 14 vayathil muthal
thadavai ketta padal
indrum yen manathil
neengatha padal.yeththanai
murai kettu irrupen.
ungal pathivu arumai.
ipothum ketten.
nandri.
Abishek.Akilan...

ALAGUNAYAGAM said...

Naan Ippothuthan muthal muraiyaga oru valippathivil pinnoottam idugiran. ungal valippathivu migavum arumai. nandri.

தங்ஸ் said...

நன்றி மகேந்திரன்.. சாமி கிட்ட-வில் ஜானகியும், அடுக்குமல்லியில் எஸ்பிபி-யும் டாமினேட் பண்ணியிருப்பார்கள்..ராஜாவை உங்கள் பார்வையில் படிப்பது பரமசுகம்

கண்ணகி said...

மகேந்திரன் பாடலை பலதடவை ரசிதிருக்கிறேன். இன்மேல் உங்கள் வர்ணனையொடூ ரசிக்கத்தோனுகிறது.அழகு....அழகு..

tholkappian said...

வணக்கம்
என் பெயர் தொல்காப்பியன்.
படிக்கும் ஓவ்வரு முறையும் பாடல்களை புதிதாய் கேட்கிறேன். நன்றி நண்பரே..

tholkappian said...

வணக்கம்
என் பெயர். தொல்காப்பியன்
படிக்கும் ஓவ்வரு முறையும் பாடல்களை புதிதாய் கேட்கிறேன். நன்றி நண்பரே..