Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Friday, September 23, 2016

தி லாஸ்ட் ஆங்க்லெட்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.



காலப் புத்தகத்தில் பக்கங்களைப் பின்னோக்கிப் புரட்டி, ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்பு சென்று பார்ப்போம். 1910 ஆம் வருடம். நெட்ஃப்ளிக்ஸ் இல்லா காலம். சினிமா என்றொரு பதமே, அப்பொழுது தான் உருவாகி இருந்தது. அனைத்துலக மக்களின் பொது மொழியான மௌன மொழியில் படங்கள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். அப்போது இந்தியாவின் முதல் சினிமா வெளியாகி இருக்கவில்லை. அச்சமயம், மினியாபோலிஸில் சதர்ன் தியேட்டர் திறக்கப்பட்டு, மௌனப் படங்கள் திரையிடப்பட்டுக்கொண்டு இருந்தது.
இன்னும் பல பக்கங்கள் பின்னோக்கிப் புரட்டி, மின்சாரமில்லா காலத்திற்குச் செல்லலாம். தமிழ் மக்கள் வாழ்வில், அப்பொழுதே பழங்கலைகளில் ஒன்றான தெருக்கூத்து இருந்தது. தெருக்கூத்து, கோவிலில், ஊர்த் திடலில், தெருமுனையில் நடந்திட, அது எளிய மக்களுக்கான கலையாக இருந்தது. மக்களுக்குத் தேவையான கருத்துகள், கதையாக, பாட்டுடன், ஆடலுடன், வசனத்துடன் நாடகமாகப் பரப்பப்பட்டது.
சரி, இப்போது வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி தற்காலத்திற்கு வரலாம்.
பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழின் பழமையான கலை, மினியாபோலிஸின் பழமையான அரங்கான சதர்ன் தியேட்டரில், ஆகஸ்ட் ஐந்தாம் தேதி, ஆங்கில வசனத்துடன், தமிழிசைப் பாடல் கலந்த புது வடிவத்தில் அரங்கேற்றப்பட்டது. ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தால், ‘தி லாஸ்ட் ஆங்க்லெட்’ (The Lost Anklet) என்னும் தெருக்கூத்து மேடையேற்றப்பட்டு, மினசோட்டா மக்களுக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுத்தது எனலாம்.
தலைப்பே, இந்தத் தெருக்கூத்தின் கதையைச் சொல்லிவிடுமே!! ஆம், சிலப்பதிகாரத்தின் கதையே, இந்தத் தெருக்கூத்தின் கதை. மகிழ்வாகச் சென்று கொண்டிருக்கும் கண்ணகி-கோவலன் கதையில் தொடங்கும் தெருக்கூத்தை, கதை ஓட்டத்திற்கு ஏற்ற உணர்வுகளுடன் விவரித்துச் செல்கிறார் கட்டியங்காரன். சேரன் செங்குட்டுவன், கரிகாலச்சோழன், நெடுஞ்செழிய பாண்டியன் எனத் தமிழ் மண்ணை ஆண்ட மூன்று மன்னர்களுக்கும் இந்தக் கதையில் பங்குண்டு. மாதவியின் அழகிலும், நடனத்திலும் மயங்கிய கோவலன், கண்ணகியை மறந்து சில காலம் மாதவியுடன் தங்க, பிறிதொரு சந்தர்ப்பத்தில், மாதவியுடன் மனஸ்தாபம் ஏற்பட, கண்ணகியின் நினைவு வர, கண்ணகியுடன் திரும்பிச் சென்று சேருகிறார். தான் சேர்த்த பொருட்களை இழந்த காரணத்தால், கண்ணகியும், கோவலனும், கௌந்தி அடிகள் துணையுடன் பொருள் தேடி மதுரை வருகிறார்கள். வந்த இடத்தில் கோவலன் சிலம்பை விற்கச் செல்ல, அங்கு, பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு, அவையில் பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பால் உயிரிழக்க நேரிடுகிறது. அதனால் சோகம் கொண்டு ஆத்திரமுற்ற கண்ணகி, அவையில் மன்னனுடன் வாக்குவாதம் புரிந்து, தன் சிலம்பை எறிந்து, மன்னனின் தவறை நிரூபித்து, மதுரையை எரிக்கிறார்.
இந்தக் கதையை, ஒரு மணி நேர தெருக்கூத்தாக அழகாகச் சுருக்கி, அருமையான நடனத்துடன், தொன்மையான பாடல், இசையுடன் வழங்கினார்கள் இந்தக் கலைஞர்கள்.
கண்ணகியாக லக்சண்யா
கோவலனாக குமரகுரு
மாதவியாக மீனாக்ஷி
கௌந்தி அடிகளாக ஜானிஸ்
நெடுஞ்செழியனாக நாகச் சாய்
கோப்பெருந்தேவியாக யாமினி
செங்குட்டுவனாக வேல்முருகன்
கரிகாலனாக முகமது ஆசிஃப்
பொற்கொல்லனாக சுரேஷ்
கட்டியங்காரனாக ஹனிபால்
ஆகியோர் தாங்கள் ஏற்றிருந்த வேடங்களுக்கு உயிருட்டினர்.
நாடகக் கலையில் நெடிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் வாய்ப்பில்லா விட்டாலும், ஒவ்வொருவரும் தங்கள் தேர்ந்த திறமையை இந்தத் தெருக்கூத்தில் காட்டினர். 165 பேர் உட்காரக்கூடிய இந்த அரங்கில், கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகருக்கும் கேட்கும் வகையில், மைக் இல்லாமல் வசனம் பேச வேண்டும். அதற்கேற்ற வகையில், உணர்வுகளை முகத்தில் கொஞ்சம் மிகையாக வெளிப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும், நமது கலைஞர்கள் சிறப்பாகச் செய்தார்கள்.
இது தவிர, வந்திருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் சிலப்பதிகாரக் கதை புரியும் வண்ணம் வசனம் ஆங்கிலத்திலும், நமது பாட்டிசை தெரிந்திடும் வண்ணம் பாடல்கள் தமிழிலும் அமைத்து, இந்தத் தெருக்கூத்து ஒரு நவீன ஃப்யூஷன் வடிவத்தில் அமைந்திருந்தது ஒரு சிறப்பு. இந்த வடிவத்திற்குள் தங்களை அழகாகப் புகுத்திக்கொண்ட இந்தக் கலைஞர்கள், பார்வையாளர்களின் கவனத்திற்கு எவ்விதக் குழப்பமும் ஏற்பட்டு விடாதவாறு, தங்களது நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, சிலரது பங்களிப்பைப் பாராட்டிவிட வேண்டும். இறுதிக் காட்சியில், லக்ஷண்யாவின் ஆவேச நடிப்பு, வரும் காட்சிகள் எங்கும் குமரகுருவின் நளினமான உடல்மொழி, நடனக் கலைஞர் மீனாக்ஷியின் நவரச முகபாவங்களுடன் கூடிய நாட்டியம், சுரேஷின் கணீர் குரல் மற்றும் ஹனிபாலின் நகைச்சுவை கலந்த வர்ணனைகள் வேடிக்கை நடிப்பு ஆகிய அனைத்தும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. இவை தவிர, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, இசை, பாடல்கள், ஒலி, ஒளி அமைப்புகள், கலை இயக்கம் என இந்தத் தெருக்கூத்துக்காக, மேடையின் பின்னால் இருந்து பங்களித்தவர்களும் தங்கள் பணியினைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இந்தத் தெருக்கூத்து முடிந்த பின்பு, வந்திருந்த பார்வையாளர்கள் அங்கிருந்த கலைஞர்களைப் பாராட்டியபடி, கை தட்டிக் கொண்டு அரங்கை விட்டுக் கலைந்தனர். முழு வண்ணமயமான ஒப்பனையுடன் இருந்த இந்தக் கலைஞர்களுடன், சிலர் ஆர்வத்துடன் இணைந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றனர். பிற மக்களும், ஒப்பனையுடன் சாலையில் நடந்து சென்ற நமது கலைஞர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டே சென்றதைக் காண சுவாரஸ்யமாக இருந்தது.
மொத்தத்தில், இந்தத் தெருக்கூத்தைக் கண்ட பார்வையாளர்களுக்கு, இது ஒரு புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும். இந்தக் காலத்தில், இந்த ஊரில், இப்படி ஒரு அனுபவத்தை அளித்த, இந்தத் தெருக்கூத்தை இயக்கிய சச்சிதானந்தம், வசனமெழுதிய சரவணன், இதற்கு உறுதுணையாக இருந்த மினசோட்டாத் தமிழ்ச் சங்கத் தன்னார்வலர்கள், மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் தன்னார்வலர்கள், பழமையான அமைப்புடன் சதர்ன் தியேட்டரைப் பராமரித்து வரும் நிர்வாகிகள் அனைவருக்கும் பனிப்பூக்கள் சார்பில் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

.

பேஸுபான் – பாலிவுட் டான்ஸ்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.



மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில் பாலிவுட் டான்ஸ் குழுவின் பேஸுபான் (Bezubaan) என்னும் நடன நாடகக் காட்சியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.
Bezubaan என்றால் குரலற்றவன். இந்தத் தலைப்பைக் கேட்டால், ஏதோ ஒரு சீரியஸான ஃபீல் கிடைக்கிறதல்லவா? ஆனால், இது ஒரு வண்ணமயமான, ஆடல், பாடல், ஜாலி, ஃபீல் குட் நாடகம். ஒரு சீரியஸான மையக் கருத்துடன்.
பாலிவுட் டான்ஸ் சீன் - மினசோட்டாவின் ஃபேமஸ் இந்திய நடனக்குழு. நடனம் தான் இந்தியத் தன்மை கொண்டது. மற்றபடி, அனைத்து நாட்டினரும் ஆடுவார்கள். பாலிவுட் டான்ஸ் என்று சொல்லிக் கொண்டாலும், க்ளாசிக் முதல் டப்பாங்கூத்து வரை அனைத்தையும் ஆடுவார்கள். ஆனால், எதை ஆடினாலும், உயர் தரத்துடன், தேர்ந்த நிபுணவத்துவத்துடன் ஆடுவார்கள்.
நம்மூர் பாலிவுட் பட அமைப்பைப் போன்றே கொஞ்சம் ட்ராமா, அடிக்கடி நகைச்சுவை, அவ்வப்போது செண்டிமெண்ட், நிறைய டான்ஸ் என வரிசையாகத் தொடர்ந்து வைத்து, கவனத்தை எங்கும் சிதறவிடாமல் மேடையை மட்டுமே கவனிக்க வைக்கிறார்கள். ஆக்ஷன் ப்ளாக் தான் இல்லை!!
கதை - மினசோட்டா இண்டர்நேஷனல் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் அப்பா என்னும் அப்பு மேனனையும், அவரது குடும்பத்தாரையும் சுற்றிச் சுழலுகிறது. பிற சமூகங்கள் மீதான சகிப்புத்தன்மையை மையமாகக் கொண்ட கதை. அப்புமேனனுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். முதல் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. பையன், அமெரிக்கக் கலாச்சாரத்தில் ‘Dude’ ஆக வாழ்கிறான்!! இளைய பெண், தந்தையின் கடைக்குப் பக்கத்தில் புதிதாகத் தரைவிரிப்புக் கடை திறந்திருக்கும் ஒரு முசல்மானைக் காதலிக்கிறாள். Dude பையன், ஒரு அமெரிக்கப் பெண்ணைக் காதலிக்கிறான். அந்த அமெரிக்கப் பெண், முசல்மான் நடத்தும் டான்ஸ் பள்ளியில் டான்ஸ் கற்றுக்கொண்டு இருக்கிறாள். அவளைக் கவர, அதாவது கவர் செய்ய, Dude பையனும் அந்த நடனப்பள்ளிக்குச் செல்கிறான். அமெரிக்கப் பெண்ணைக்கூட மருமகளாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கும் அப்பா, ஒரு முஸ்லிமை மருமகனாக ஏற்க மறுக்கிறார். காரணம் - அவருடைய ஃப்ளாஷ்பேக் மற்றும் பொதுவான சமூகப் பார்வை. பிறகு, அப்பாமனம் திருந்துகிறாரா? இந்த ஜோடிகள் இணைகிறார்களா? என்பது கண்டே பிடிக்க முடியாத (!!!) இந்தக் கதையின் முடிவு. இந்தக் கதையின் சுவாரஸ்யமான ஓட்டத்தைத் தள்ளிவிட, நடு நடுவே இரு தொகுப்பாளர்கள் மேடையேறி நமக்குக் கதையை விளக்குகிறார்கள். ஒரு கட்டத்தில், இந்தத் தொகுப்பாளர்களும் கதைக்குள் குதித்துவிடுகிறார்கள்.
எவ்விதக் குழப்பங்களும் இல்லாத சிம்பிள் கதை. அதை அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களுக்கும், ஆடும் நடனத்திற்கும் தொடர்ந்து அரங்கத்தில் கரவொலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வசனமெழுதிய ஹிமான்ஷு அகர்வாலும், வர்கீஸ் அலெக்சாண்டரும் இதற்காகப் பாராட்டுக்குரியவர்கள். பாடல்களுக்கு நடனம் அமைத்த அனைத்து பயிற்சியாளர்களுமே கலக்கியிருக்கிறார்கள்.
வசனங்களில் எங்கும் எள்ளலும், சுய பகடியும், சமூகச் சாடலும் பரவியுள்ளன. வசனகர்த்தாவுக்குத் தமிழுக்கும் மலையாளத்துக்கும் வித்தியாசம் தெரியாது எனத் தங்களைத் தாங்களே நக்கல் அடித்துக் கொள்கிறார்கள். மொழி தெரியாதவர்களும், ஹிந்தி பாடலுக்கு வாயசைத்து ஆடிக் கொள்ளலாம் என்று பாலிவுட்டையும் வாருகிறார்கள். அப்படியே சென்று, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்பவர்களையும் ஒரு குத்து விடுகிறார்கள். நாடகம் முழுக்கக் கொண்டாட்ட மனநிலை தான். ஏதோ வடக்கத்திய கல்யாண வீட்டுக்குச் சென்று வரும் உணர்வு கிடைக்கிறது.
மொத்தம் எட்டுப் பாடல்கள். அதில் ஒன்று மலையாளப்பாடல். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். விதவிதமான உடைகள். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என அனைவரும் சிறப்பாக ஆட்டம் போடுகிறார்கள். ஆவெனப் பார்வையாளர்கள் வாயைப் பிளக்கும் வகையில் மேடையில் சுழலுகிறார்கள். அனாயசமாக ஜிம்னாஸ்டிக் செய்கிறார்கள். இன்னொரு பக்கம், அனைவரும் நடிப்பிலும் சிக்ஸர் அடிக்கிறார்கள்.
சென்ற ஆண்டு ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில், அதிகப் பார்வையாளர்கள் பார்த்தது - இவர்களுடைய ஸ்பைசி மசாலா சாய் நாடகம் தானாம். இந்த வருடமும் அரங்கம் நிறைந்தே இருந்தது. கடந்த மே மாதத்தில் இருந்து தயாராகி, கடும் பயிற்சி எடுத்து மேடைக்கு வந்திருக்கிறார்கள். அது மேடையில் நன்றாகவே தெரிகிறது. நடப்புக் காலத்திற்கு ஏற்ற, தேவையான கருத்தை, அனைவரையும் மகிழ வைத்து, சிரிப்புடன் சேர்த்து, புகட்டி விடுகிறார்கள்.
எக்கச்சக்கமான கலைஞர்களின் பங்களிப்பை அருமையாக ஒருங்கிணைத்து, ஒரு பிரமாண்ட சினிமாவின் கனவுப் பாடல் காட்சியைப் போல், எந்த வி.எப்.எக்ஸும் இல்லாமல், அழகான அந்த எஃபெக்டை, இந்தச் சிறு மேடையிலேயே கொண்டு வந்து விடுகிறார்கள். படங்களில் காட்டுவது போல், பல வயது அப்புமேனனை, ஒரே சமயத்தில் மேடையில் காட்டுகிறார்கள். இப்படி வியப்பளிக்கும் பலவற்றை, இந்த ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் மேடையில் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இந்த நாடகத்தின் இயக்குனர்களான ஸ்டீஃபன் அலெக்சாண்டரும், மது பெங்களூரும்.

நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான திவ்யா, இறுதியில் கிட்டத்தட்ட இதில் பங்கேற்ற நூறு கலைஞர்களையும் ஒரு சேர மேடையில் கொண்டு வந்து, வந்திருந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, விருப்பமுள்ளவர்களைத் தங்கள் குழுவில் சேர அழைப்பு விடுத்தார். அடுத்த வருடம், இருநூறு பேரை மேடையில் ஏற்றி விடுவாரோ? இதற்காகவே, மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் அமைப்பு, இவர்களுக்கு இன்னும் பெரிய மேடை அமைத்துத் தரவேண்டும்!! இப்படி ஒரு பிரமாண்டமான, வண்ணமயமான நிகழ்வை விருந்தளித்த மினசோட்டாவின் பாலிவுட் டான்ஸ் சீன் குழுவிற்கு, நமது அன்பான சியர்ஸ்!!

.

மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்

பனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.





டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்
“இயல், இசை, நாடகத்தில் ஆர்வம் கொண்ட பெருமக்களே!! உங்களுக்கு ஒரு நற்செய்தி. வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி முதல் பதினான்காம் தேதி வரை, மினியாபோலிஸில் ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் (Fringe Festival) நடக்கப் போகிறது. அதிலும், மிக முக்கியமாக, தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தெருக்கூத்தாக மேடையேறப் போகிறது. மதுரையை எரித்த கண்ணகியை, மினசோட்டாவில் காண வாய்ப்பு.
அது போலவே, சென்ற வருடம், சாதனை படைத்த நிகழ்ச்சியை அளித்த பாலிவுட் டான்ஸ் சீன் குழுவும் தங்கள் பங்குக்கு, தங்களது பிரத்யேக நகைச்சுவை, நடன, நாடகத்துடன் கலக்க இருக்கிறார்கள். தவற விடாதீர்கள்!!...”
டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்
----
மேலே போவதற்கு முன், லைட்டாக ஃப்ரிஞ்ச் வரலாற்றைப் பார்த்து விடலாம். 1947 ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்து நாட்டின் தலைநகரான எடின்பராவில் இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் தொடங்கப்பட்டது. அதுவரை, இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்டு, களைத்துப் போன மக்களுக்கு, புத்துயிர் ஊட்டும் விதமாகவும், ஐரோப்பிய கலை வடிவங்களை மேடையில் அரங்கேற்றும் விதமாகவும், இந்த எடின்பரா இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் ஆரம்பிக்கப்பட்டது. அதில் கலந்து கொள்ளச் சென்ற எட்டுக் குழுக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த எட்டுக் குழுக்களும், இதனால் சோர்ந்து வீடு திரும்பிவிடவில்லை. நகரின் முக்கிய அரங்கங்களில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நடக்க, இன்னொரு பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட குழுவினர், நகரின் சுற்று வட்டாரப் பகுதிகளில், தங்களின் படைப்புகளை மேடையேற்றினார்கள். அதற்குக் கிடைத்த வரவேற்பு தான், ‘எடின்பரா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்’ என்று வருடந்தோறும் பெரும் வரவேற்புடன் தொடரத் தொடங்கியது. எடின்பராவில் தொடங்கிய இந்தப் பயணம் இன்று உலகம் முழுக்கப் பிரபலமாகி, பல நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ஃப்ரிஞ்ச் என்றால் குஞ்சம், ஜரிகை போல் ஓரத்தில் செய்யப்பட்ட அலங்காரங்கள். அதிகாரப்பூர்வ விழா, ஒரு பக்கம் நடக்க, இன்னொரு ஓரத்தில் நடத்தப்பட்ட, இந்தச் சிறு, குறு நிகழ்ச்சிகளும், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க, ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் இந்த விழாக்கள் பிரபலம் அடையத் தொடங்கின.
இந்த ஃப்ரிஞ்ச் விழாவில் கலந்து கொள்வதற்கு எவ்வித அதிகாரப்பூர்வ விதிமுறைகளும் கிடையாது. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அனுபவம், குறிப்பிட்ட கலை வகை, பிரபலம் என்று எந்தத் தகுதியும் தேவையில்லை. இங்குக் கலைக்குத் தணிக்கை கிடையாது. உண்மையான ஜனநாயகம். அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அந்தந்தச் சமூகத்தின் பக்குவத்தைப் பொறுத்தது. அனைவருக்கும் மேடை கிடைப்பது மூலம், தகுதி படைத்தவர்கள் வளருவார்கள். திறமை கொண்டவர்கள் பாராட்டுப் பெறுவார்கள், சமூகப் படைப்பாளிகள் சிந்தனையைத் தூண்டுவார்கள்.
---
1994இல் இருந்து மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில், முதலில் வருபவர்களுக்கு வாய்ப்பு என்ற முறையில், பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். 2004இல் இருந்து, அந்த முறை மாற்றப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்வு என்ற நடைமுறை வந்தது. அமெரிக்காவின் மிகப் பெரிய ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்களில் ஒன்று, மினசோட்டா ஃபெஸ்டிவல்.
இந்தாண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை, நகரின் பல்வேறு அரங்கங்களில் நடைபெறுகிறது. சில நிகழ்ச்சிகள், காட்சியின் தேவைக்கேற்ப வெளிப்புறங்களில், பிற இடங்களிலும் நடக்கும்.
இந்தாண்டு ஃப்ரிஞ்ச் திருவிழாவில், இந்தியக் கலைஞர்களின் பங்களிப்பில், இரு நாட்டிய நாடகங்கள் மேடையில் அரங்கேறுகிறது. மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில், 'The lost anklet’ என்ற தெருக் கூத்தும், பாலிவுட் டான்ஸ் சீன் குழுவின் சார்பில் 'Bezubaan - The Voiceless’ என்ற நடனத்துடன் கூடிய நாடகமும் மினசோட்டா ஃப்ரிஞ்ச் ரசிகர்களின் முன் மேடையேறுகின்றன.
---
தமிழர்களுக்குத் தொலைந்த சிலம்பைத் தெரிந்திருக்கும். இந்த ஃப்ரிஞ்ச் திருவிழாவில், தொலைந்த சிலம்பைப் பற்றியும், அதன் பின்னால் இருக்கும் காதல், பிரிவு, வலி, சோகம், கோபம் ஆகிய அனைத்தைப் பற்றியும் பிற மாநிலத்தவரும், நாட்டினரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ‘The lost anklet’ தெருக்கூத்தின் மூலம் உருவாகியுள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன், தமிழ் மண்ணில் இளங்கோவடிகள் எழுதிய காப்பியம், இன்றும் உலகின் வேறொரு பகுதியில் தமிழர்களால் மேடையேறும் சிறப்பை என்னவென்று கூற?

மாதவியின் நவரசம் கூடிய நடனம், கண்ணகியின் உணர்வு கலந்த ராகங்கள், மதுரைத் தமிழ் மண்ணின் சிறப்பிற்குரிய இசை எனக் கிட்டத்தட்ட 25 கலைஞர்களின் பங்களிப்பில், கீழே குறிப்பிடப்பட்ட தினங்களில் சதர்ன் தியேட்டரில் இந்தத் தெருக்கூத்து மேடையேறுகிறது. வண்ண மயமான ஒளி மற்றும் இனிமையான ஒலியுடன் கூடிய கலைப்படைப்பாக அரங்கேறுகிறது.
வெள்ளிக்கிழமை, 8/5 - 5:30pm
சனிக்கிழமை, 8/6 - 8:30pm
ஞாயிற்றுக்கிழமை, 8/7 - 5:30pm
வியாழக்கிழமை, 8/11 - 10:00pm
சனிக்கிழமை, 8/13 - 4:00pm
இந்தத் தெருக்கூத்து, ஏற்கனவே ‘சிலம்பின் கதை’ என்ற பெயரில் 2014 ஆம் ஆண்டு தமிழில் அரங்கேற்றப்பட்டு, மினசோட்டாத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இம்முறை பாடல்கள் தமிழிலும், வசனங்கள் ஆங்கிலத்திலும் அமைத்திருப்பது, இந்தக் காவியத்தின் அருமையையும், தமிழின் பெருமையையும் பிற மொழியினருடன் கொண்டு செல்லும் என்கிறார் இந்தத் தெருக்கூத்தின் இயக்குனர் சச்சிதானந்தன்.
---
பாலிவுட் டான்ஸ் சீன் என்னும் மினசோட்டாவைச் சேர்ந்த நடனக்குழு, கடந்த சில வருடங்களாகவே, மினசோட்டா ஃப்ரிஞ்ச் பெஸ்டிவலில் கலந்துக்கொண்டு கலக்கி வருகிறார்கள். சென்ற வருடம், அதிகப் பார்வைகள் கிடைத்த நிகழ்ச்சி, இவர்கள் நடனத்தில் உருவாக்கிய ‘Spicy Masala Chai’ என்ற நடன நாடக நிகழ்ச்சியாகும். மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் வரலாற்றில், அதிக டிக்கெட் விற்பனையைக் கண்ட நிகழ்ச்சி இதுதான் என்பது இந்தியர்களுக்குப் பெருமையளிக்கக்கூடிய தகவல்.
இது பற்றிய கட்டுரையை இங்கே காணலாம்.
இந்தக் குழு ‘Bezubaan: Voiceless’ என்னும் நடனத்துடன் கூடிய நாடகத்தை இம்முறை அரங்கேற்றுகிறார்கள். புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வு, மக்களிடம் தேவைப்படும் மதச் சகிப்புத்தன்மை, பன்முகச் சமுதாயங்களிடையே உருவாகும் சமத்துவம் போன்ற கருத்துகளைப் பேசும் நாடகம் இது. கருத்து பேசினாலும், நகைச்சுவையும் நடனமும் இவர்களது முக்கிய பலம். பாலிவுட் மற்றும் பிறமொழித் திரைப்படப் பாடல்களின் கண்கவரும் நளின நடனம், பார்வையாளர்களின் கரவொலியைச் சந்தேகமில்லாமல் எழுப்பும் எனலாம். இந்த நாடகம், இண்டர்நேஷனல் மார்க்கெட் பின்னணியில் நடக்கும் கதை என்கிறார் பாலிவுட் டான்ஸ் சீன் குழுவின் அமைப்பாளர் திவ்யா.
இந்த நிகழ்ச்சி நடைபெறும் தினங்கள்,
வெள்ளிக்கிழமை, 8/5 - 5:30 pm
சனிக்கிழமை, 8/6 - 2:30 pm
ஞாயிற்றுக்கிழமை, 8/7 - 5:30 pm
புதன்கிழமை, 8/10 - 7:00 pm
சனிக்கிழமை, 8/13 - 2:30 pm
நிகழ்ச்சி நடைபெறும் இடம் - U of M Rarig Center Thrust
நடனம், நாடகத்தில் ஆர்வம் கொண்டவர்கள், மிஸ் செய்துவிடக் கூடாத நிகழ்வு - மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல். இதில் உங்கள் பங்கேற்பை உறுதி செய்து, நம்மவர்களுக்கு உங்களது ஆதரவை அளிக்கவும்.
மேலும் தகவலுக்கு,


.