Monday, December 24, 2007

வாத்தியார் நினைவு நாள் - ஒரு ப்ளாஷ்பேக்

இன்று எம். ஜி. ஆர். (மருதூர் கோபால இராமச்சந்திரன்) உயிர் நீத்த தினம். டிசம்பர் 24, 1987. உடல் நிலை சரியில்லாததால் 1984 ஆண்டு அமெரிக்கா கொண்டு செல்ல பட்டு பின்பு 1987 இல் இறந்தார். இவரது மரணத்தால் தமிழகமெங்கும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. கடைகள், திரையரங்குகள், பேருந்துகள் யாவும் சூறையாடப்பட்டன. இறுதி சடங்கின் போது ஏற்பட்ட வன்முறையால் 23 பேர் இறந்தனர். 47 போலீசார் காயமடைந்தனர். எம். ஜி. ஆரின் மரணத்தால் தமிழகத்தில் இயல்பு நிலை ஒரு மாதகாலம் பாதிக்கப்பட்டது. 30 தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

எம். ஜி. ஆர். 1917 இல் இலங்கை, கண்டியில் பிறந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த எம். ஜி. ஆர். வறுமையின் காரணமாக சினிமா துறையில் சேர்ந்தார். திரைத்துறையில் மிக பெரிய இடத்தை பிடித்த எம். ஜி. ஆர். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்து பிறகு தி. மு. க. வில் இணைந்தார்.

பின்பு 1974 இல் லஞ்சத்தை முக்கிய காரணமாக கொண்டு திமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி (அதிமுக) தொடங்கினார். கருணாநிதி தனது மகன் முத்துவை எம். ஜி. ஆருக்கு எதிராக சினிமா நட்சத்திரமாக்க முயற்சி எடுத்ததும் ஒரு காரணமாக கூறப்பட்டது.

1977 இல் ஆட்சியை பிடித்த எம். ஜி. ஆர். தனது இறப்பு வரை நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று முதலயமைச்சராக ஆட்சியில் நீடித்தார். முதல் காங்கிரஸ் அல்லாத திராவிட மத்திய அமைச்சர்கள், இவரின் கட்சியில் இருந்து வெற்றி பெற்று டெல்லி சென்றவர்களே.

இவரது 11 ஆண்டு கால ஆட்சி, மீண்டும் கொண்டு வரப்பட்ட "இலவச மதிய உணவு" போன்ற திட்டத்தால் புகழப்பட்டாலும், பெருவாரியான நடுநிலை விமர்சகர்களால் " திறமையற்ற நிர்வாகம், மோசமான ஆட்சி" என்றே விமர்சிக்கப்பட்டது.

ஆனாலும் இவர் மேல் உள்ள அபிமானத்தால் இன்றும் இவரை கடவுளாக வழிப்படும் மக்கள் தமிழகத்தில் உண்டு.

No comments: