Monday, November 9, 2009

மழை பயணம்

சென்ற வார நடுவில் இருந்து இறுதி வரை ஒரு திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எதற்கும் முன்பதிவு செய்யவில்லை. மகேந்திரன் போட்டுக்கொடுத்த திட்டத்தின் படி, மாலை ஆறு மணிக்கு ஓசூரில் கிளம்பி இரவு ஒன்பதே காலுக்கு சேலம் சென்றடைய முடிந்தது. ஒன்பதே முக்காலுக்குள் ஒரு கொத்து புரோட்டாவும் செல்வி மெஸ்ஸில் சாப்பிட முடிந்தது.

எப்ப பேஸஞ்சரில் போய் நொந்தேன் என்று நினைவில்லை. பேஸஞ்சர் என்றாலே கசக்கும். அதற்கு, பஸ்ஸில் சென்று விடலாமே? என்று மனம் கணக்கு போடும். எப்படியோ, மகேந்திரன் கொடுத்த ஊக்கத்தாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் ரயிலை தேர்ந்தெடுத்தேன். ரயில்வே இல்லையில்லை, மகேந்திரன் சொன்ன நேரத்திற்கு சேலம் சென்றேன். ஏதோ அவருடைய சொந்த கம்பெனி போல், இந்த ரயிலுக்கு அவ்வளவு சப்போர்ட்டு.

போன புதன் அன்று கிளம்பும் போது, தொடங்கிய மழை... இன்னமும் அப்படியே பார்த்துக்கொண்டிருக்கேன். தொடர்ந்து ஒரு வாரமாக, ஈரம் எபக்ட். படத்தை இப்ப ரிலீஸ் செய்திருந்தால், அப்ப அப்படி கேட்டு இருக்க மாட்டேன்.

---

கவர்மெண்ட் பஸ்ஸில் அழகர் மலை பார்த்தேன். அரைகுறையாகத்தான். ஹீரோ ஆர்.கே. ஆனால், அவர் ஹீரோவாக நம்பியிருப்பது வடிவேலுவை. படத்திற்கு மட்டுமில்லை... சென்ற வாரம் சென்னையில் அவர் திறந்த ஓட்டலுக்கும் அவரைத்தான் நம்பியிருக்கிறார். ஊர் முழுக்க, அரசியல்வாதி ரேஞ்சுக்கு வடிவேலு போஸ்டர்கள்.

படத்திற்கு இசை - இளையராஜா. அடுத்த வருடம், இளையராஜாவிற்கு யாராவது விருது கொடுக்க வேண்டுமென்றால், இந்த படத்திற்கு கொடுக்கலாம்.

வில்லனும் அவன் தங்கையும் ஹீரோவை வம்பில் மாட்டிவிட துடிக்கிறார்கள். அதையும் மீறி, ஹீரோ தன் லட்சியத்தை எப்படி அடைகிறார் என்பது தான் கதை என்று நான் நினைக்கிறேன். அப்படியென்ன லட்சியம்? ஹீரோயினை கல்யாணம் பண்ணுவது தான். இதுவல்லவா லட்சியம்?’ன்னு கவுண்டமணி மாதிரி கேட்கக்கூடாது. முடிவு என்னன்னு தெரியல்லை. சுவாரஸ்யத்தில் தூங்கிவிட்டேன்!

---

Boom TV என்றொரு சானல், கவர்மெண்ட் பஸ்களில் (மட்டும்) வருகிறது. ப்ளாட் டிவியில் படங்கள், பாடல்கள் - விளம்பர இடைவேளையுடன் வருகிறது. அடிக்கடி ”உள்ளத்தை அள்ளித்தா” போடுவார்கள் என்று நினைக்கிறேன். நான் இரண்டு பஸ்களில் பார்த்தேன். ரிதமையும் பொம்முக்குட்டி அம்மாவையும் கலந்து பாட்டு போட்டார்கள்.

ரோடெல்லாம் ஒரளவுக்கு ஒழுங்காக போட்டுவிட்டார்கள். ஆனா, இந்த கவர்மெண்ட் பஸ்கள்தான், அதில் போகக்கூடாத வேகத்தில் ஓட்டுகிறார்கள். மரண உருட்டு. எப்படி டிவி வைக்கலாம், என்ன படம் போடலாம் என்று யோசிப்பதற்கு பதில், பஸ் கொஞ்சம் வேகமா போக ஏதாச்சும் பண்ணலாம்.



ஆஹா... சூப்பரா ரோடு போட்டுருக்காங்க என்று சந்தோஷப்படுவதற்குள், சாலையெங்கும் டொல் கேட் திறந்து பணம் பிடுங்குகிறார்கள். காரில் பெங்களூரில் இருந்து கோவை போவதற்குள், நூறு-நூத்தியம்பது ரூபாய் வசூல் பண்ணிவிடுகிறார்கள். புதிது புதிதாக டொல் கேட்டுகள் வந்துக்கொண்டே இருக்கிறது. எத்தனை வருஷம் வசூலிப்பாங்களோ?

கோயமுத்தூர்ல இருக்குற ஆத்துப்பாலத்தை கடக்க இன்னும் வசூல் பண்ணிக்கிட்டே இருக்காங்க. அது ஒரு குட்டியூண்டு பாலம். அதுக்கே அப்படின்னா, இதுக்கெல்லாம் கேட்கவே வேண்டாம்.

---

பெங்களூர் ஓசூர் ரோட்டுல, வண்டியில பெட்ரோல் இல்லாம, நைட் பதினொரு மணிக்கு மேல போயிடாதீங்க. சிங்கி அடிக்கவேண்டி வரும். இப்படித்தான், கொஞ்ச நாள் முன்னாடி நண்பர்களுடன் ஒரு குவாலீஸில் தெரியாம போயிட்டோம். பெட்ரோல் பங்க் தேடி தேடி, ஒரு கட்டத்தில் வண்டி பாதியில் நின்று விட்டது.

டிரைவர் அங்கிருந்த ஒரு சரக்கு லாரிக்காரரிடம் பெட்ரோல் கேட்டார். அவரும் தருகிறேன், கேன் கொண்டுவா என்றிருக்கிறார். இவரிடம் கேன் இல்லை. அங்கு ஒரு கடையை தட்டி திறந்து, செல்போனை அடகு வைத்து, கேன் வாங்கி வருவதற்குள், லாரிக்காரர் எஸ்ஸாகிவிட்டார். பிறகு, டிரைவரும் நானும் நடந்து, பஸ்ஸில் சென்று, காரில், வேனில் லிப்ட் ஏறி, லாரியில் தொத்திக்கொண்டு, ஒரு வழியா மழையில் ஓசூருக்கே போயி பெட்ரோல் வாங்கி வந்தோம்.

கையில் ஒரு காசு இல்லனாலும், ஒரு கேன் இருந்தா எந்த ஊருக்குனாலும் போயிடலாம்’ன்னு ஒரு நம்பிக்கை வந்தது. போயி வருவதற்கு, மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. அதுவரைக்கும், ஓரமாக நின்ற வண்டியில் நண்பர்கள் நான்கு பேர் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஹைவே போலீஸ் வந்து விசாரித்திருக்கிறார்கள்.

“அப்புறம் என்னடா ஆச்சு? ஒண்ணும் கேட்கலீயா?”

“இன்னும் கொஞ்சம் நேரம் நின்னா, நம்மக்கிட்டயே பெட்ரோல் கேட்பானுங்க’ன்னு போயிட்டாங்க!”

---

போன வாரம், திரும்ப வருவதற்கும் முன்பதிவு செய்யவில்லை. அன்-ரிசர்வ்டு கோச்சில் வந்தேன். சைடு ஜன்னல் சீட்டில் இருந்து வந்ததால், தொந்தரவு ஏதும் இல்லை. எதிரில் இருந்தவருடன் போட்டுக்கொண்ட பரஸ்பர ஒப்பந்தத்தின் படி, என் இருக்கையில் அவரும், அவர் இருக்கையில் நானும் கால் நீட்டியப்படி தூங்கிக்கொண்டே வந்தோம்.

என்ன, நடுவில் டாய்லெட் போகத்தான், விசேஷ பயிற்சிகள் தேவைப்படுகிறது. சும்மா, ஏர்ல பறந்து பறந்து போக வேண்டியிருக்கு. ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப் எல்லாம் பண்ணினேன். ஒருவர் ஒரு நீள ப்ளைவுட் கொண்டு வந்திருந்தார். கீழே படுக்கவைத்திருந்த அதில், மக்கள் ஏறி உக்கார்ந்து விட்டார்கள். ஒரு சாமியாரும் கூட. நான் கடந்து செல்லும்போது, அது தொடர்பாக சண்டை போய்கொண்டு இருந்தது.

அன்-ரிசர்வ்டு கோச்சில், சுவாரஸ்யத்திற்கு குறைவேயில்லை.

---

காலையில் ஓசூர் ரயில்வே ஸ்டேசனில் இறங்கும்போது, ‘என்னடா, ப்ளாட்பாரத்தில் கார் பார்க்கிங் பண்ணியிருக்காங்க’ன்னு ஆச்சரியம். அப்புறம், உத்துப்பார்த்தா, நானோ கார்கள். வரிசையா நிறுத்தி வச்சிருந்தாங்க. பக்கத்தில் இருந்த சரக்கு ரயிலில் இருந்து, இறக்கி வைத்திருப்பார்கள் போல.

இப்ப, டவுட் வருது. அது கார்தானா? இல்லை, தூக்க கலக்கத்துல வேற எதையாச்சும் பார்த்திட்டேனா?

---

மழை பெஞ்சா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம்.

முந்தா நாள் காயப்போட்ட உள்ளாடைகள், இன்னும் காயவில்லை. வேறு வழியில்லாமல், அயர்ன் பண்ணி போட வேண்டியிருக்கிறது. ஊட்டி, கொடைக்கானலில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்?

மக்களே, ஐடியா கொடுங்க!

.

10 comments:

கணேஷ் said...

முந்தா நாள் காயப்போட்ட உள்ளாடைகள், இன்னும் காயவில்லை. வேறு வழியில்லாமல், அயர்ன் பண்ணி போட வேண்டியிருக்கிறது.//

Same blood :) Non-sense things :)))

Anonymous said...

//முந்தா நாள் காயப்போட்ட உள்ளாடைகள், இன்னும் காயவில்லை. வேறு வழியில்லாமல், அயர்ன் பண்ணி போட வேண்டியிருக்கிறது. ஊட்டி, கொடைக்கானலில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்?

Go commando style :)

சிங்கை நாதன்/SingaiNathan said...

//கொத்து புரோட்டாவும் செல்வி மெஸ்ஸில் //
Hmm missing Selvi Mess

//பெட்ரோல் இல்லாம, நைட் பதினொரு மணிக்கு மேல போயிடாதீங்க. சிங்கி அடிக்கவேண்டி வரும். இப்படித்தான், கொஞ்ச நாள் முன்னாடி நண்பர்களுடன் ஒரு குவாலீஸில் தெரியாம போயிட்டோம்//
//ஒரு சரக்கு லாரிக்காரரிடம் பெட்ரோல் கேட்டார். அவரும் தருகிறேன், கேன் கொண்டுவா என்றிருக்கிறார்.//

The Qualis you went and the Lorry runs on petrol is it ? :)

Regards
Singai Nathan

சரவணகுமரன் said...

வாங்க கணேஷ்... பல பேர் கஷ்டமும் அதுதான்...

சரவணகுமரன் said...

நல்லா சொல்றாங்கையா ஐடியா!

சரவணகுமரன் said...

சிங்கை நாதன்,

பாயிண்ட நல்லா பிடிச்சிங்க...

ஸாரி... அது பெட்ரோல் இல்லை... டீசல். ஓகே'வா?

Karthick said...

every one blame about unreserved journey...but you enjoyed that...that s the way of living...

Good Yaar

நரேஷ் said...

ஹா ஹா ஹா

சுவராஸ்யத்தில் தூங்கிவிட்டேன், அன் ரிசர்வ்டு கோச்சில் சுவராஸ்யத்திற்கு குறைவில்லை போன்ற வார்த்தைப் பிரயோகங்கள்...குட்டிக் கவிதைகள்....

நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் பகலில் செல்லும் எந்த அதிவிரைவுப் பேருந்தும், மித விரைவுப் பேருந்துதான் போலிருக்கிறது....(சேலத்திலிருந்து பல முறை சென்னை பகலில் வர 10.30 மணி நேரம் பண்ணாங்க....)

sampath said...

கோயமுத்தூர் ஜனங்க மாதிரி இளிச்ச வாயனுக எங்க இருப்பாங்க?. சென்னையில் வாரம் ஒரு பாலம் கட்டும் அரசு இங்க ஒரு தம்மதுண்டு பாலம் கட்டி அதுக்கு 10 வருஷமா வரி எவன் கட்டுவான்? தமிழ் மாநாடு நடத்த கூட ஓசியில் மண்டபம் கட்டி வச்சு இருக்கோம். வந்து தமிழ வாழ வையுங்க!!! ஆனா எங்க ஊருக்கு ஒண்ணும் செய்ய மாட்டாரு நம்ம தமிழ் இன காவலர்...

சரவணகுமரன் said...

சம்பத்,

கூல்...