Monday, March 8, 2010

விமர்சனஃபோபியாவும் வி.தா.வ.’வும்

(கடந்த சில நாட்களாக இணைய இணைப்பில் கோளாறு. இது போன வியாழக்கிழமை எழுதிய பதிவு. இப்ப, ஊசி போய்விட்டது. குப்பையில் போடலாமா அல்லது என் ப்ளாக்கில் போடலாமா என்று யோசித்து, பிறகு இரண்டும் ஒன்றுதானே என்று சமாதானமாகி பதிவிடுகிறேன்.)

பெரும்பாலும் பொழுதுபோகாமல் தான் படம் பார்ப்பேன். பொழுதுபோகாமல் பார்க்கும் படங்கள், பார்ப்பது என்று முடிவாகிவிட்ட படங்கள். அப்படி பார்க்கும் படங்கள், எப்படி இருக்கும் என்று விமர்சனம் படித்துவிட்டெல்லாம் செல்ல மாட்டேன். எவ்வித அனுமானமும் இல்லாமல் படம் பார்ப்பதுதான் ஒரு முழுமையான அனுபவத்தை கொடுக்கும் படியாக இருக்கும் என்பது என் எண்ணம்.

விமர்சனம் படித்துவிட்டு, ஒரு படம் மோசம் என்று தெரிந்து போகாமல் இருந்தால், ஒரு ஐம்பது ரூபாய் தப்பும். ஆனால், அதுவே படம் நல்லபடமாக இருந்தால்? சாறு பிழிந்த சக்கை போல் தான் உணருவேன். அப்போதும் ஐம்பது ரூபாய் வேஸ்ட்தான். இதற்காக ஒரு படம் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், எந்த விமர்சனமும் படிக்காமல் போவேன்.

முன்பாவது பரவாயில்லை. ஒருவாரம் கழித்துதான் விகடன், குமுதத்தில் விமர்சனம் வரும். படம் பார்த்துவிட்டு நண்பர்கள் கூறுவதும் அதிகபட்சம் - மோசம், சுமார், பரவாயில்லை, நல்லாயிருக்கு போன்றவைகளாகத்தான் இருக்கும்.

ஆனால், இப்பொழுது? படம் இந்தியாவில் ரிலீஸாவதற்கு முன்பு, வெளிநாட்டிலோ, ப்ரிவ்யூ ஷோவோ பார்த்துவிட்டு முந்தைய நாளே விமர்சன பதிவு போடுகிறார்கள். அடுத்து ரிலீஸ் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் ஜெட்லியின் (!) குங்பூ வேகத்தில் இன்னொரு விமர்சனம் வரும். சிறிது நேரத்தில் எங்கு பார்த்தாலும் விமர்சனமாகத்தான் இருக்கும். வெட்டிபசங்களில் இருந்து புரட்சிகாரர்கள் வரை (இரண்டும் ஒண்ணுதானோ!) எல்லாரும் விமர்சனம் செய்கிறார்கள்.

ரொம்ப நல்ல விஷயமாக இருந்தாலும், என் அணுகுமுறைக்கு இடைஞ்சலாக இருக்கும். இதற்காகவே, ஒன்று படத்தை சீக்கிரம் பார்க்கவேண்டும். அல்லது, அவ்வகை பதிவுகளை சீண்டாமல் இருக்க வேண்டும்.

---

சில பல காரணங்களால், போன வாரம் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வை உடனே பார்க்க முடியவில்லை. ரஹ்மான் இசை என்பதற்காக ’என் சுவாச காற்றே’, ’பார்த்தாலே பரவசம்’ போன்ற படங்களையெல்லாம் கடைசி வரை உட்கார்ந்து பார்த்தவன். இதை விட முடியுமா?



எந்த விமர்சனமும் படிக்கக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டு, ‘வி.தா.வ.’ என்று தலைப்பு இருந்தாலே பதிவுகளை மூடிக்கொண்டு இருந்தேன். இந்த பதிவுலகம் தான் இப்படி இருக்கிறதென்றால், வெளியில் நடமாடும் மக்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தால், பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களும் இதைத்தான் பேசுகிறார்கள். தெரியாதவர்களிடம் போய் ‘கொஞ்சம் சும்மா இருங்க’ என்றோ, ‘அமைதியா சாப்பிட்டுட்டு போங்க’ என்றா சொல்ல முடியும்? கையை வேறு சாப்பாட்டில் வைத்தாச்சு. காதை மூடிக்கொள்ளவும் முடியாது!

ஒருவழியா விமர்சனங்களிடமிருந்தும், கதை சொல்லிகளிடமிருந்தும் தப்பித்து, படம் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்து படம் பார்த்தாயிற்று.

---

காதலின் துள்ளல், கிளுகிளுப்பு, கிறுகிறுப்பு, முட்டாள்தனம், வலி எல்லாம் பொங்க பொங்க படமெடுத்திருக்கிறார் கௌதம். இப்படித்தான் எடுக்கணும் என்று எந்த பார்முலாவிலும் சிக்காமல், தனக்கு தோன்றியதை அப்படியே எடுத்திருக்கிறார். ஆங்கிலம் மட்டுமில்லாமல், இதில் மலையாளத்திலும் பாதி படம் ஓடுகிறது. சப்-டைட்டிலில் தமிழ் பிழையாக வேறு ஓடுகிறது.

கோவாவில் இருந்து வந்த சிம்பு, கேட் வாசலில் நின்று த்ரிஷாவுடன் சண்டை போடும் காட்சி, நான் ரசித்ததில் ஒன்று. வசனங்கள், எக்ஸ்ப்ரஷன்ஸ் என இயக்குனர், நடிகர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தார்கள்.

படத்தோடு இன்வால்வ் ஆன நண்பன் கேட்ட கேள்வி - த்ரிஷா படிச்சது பிஎஸ்சி, பிஇ ஆ? அல்லது எம்சிஏவா?

முன்னாள் காதலர்கள், இந்நாள் காதலர்கள் என எல்லோரையும் தங்கள் முதல் காதலை நினைத்து பார்க்க செய்திருக்கிறது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ எனலாம்.

குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும், காதலை ரசிப்பவர்கள் உடனே பார்த்துவிடுங்கள். நான் பார்த்த தியேட்டரில் நாளை முதல் சின்ன தளபதியின் ‘தம்பிக்கு இந்த ஊரு’!

.

11 comments:

DHANS said...

இருந்தாலும், காதலை ரசிப்பவர்கள் உடனே பார்த்துவிடுங்கள். நான் பார்த்த தியேட்டரில் நாளை முதல் சின்ன தளபதியின் ‘தம்பிக்கு இந்த ஊரு’!//

என் சுவாச காற்றே, பார்த்தாலே பரவசம் கதை தான் இந்த படத்துக்கும் என்று சொல்லாம சொல்லிடீங்க

VISA said...

//சின்ன தளபதியின் ‘தம்பிக்கு இந்த ஊரு’!
//

அப்போ நாளேலேருந்து நான் வெளியூரு.

sampath said...

கௌதம் மேனேன் எப்போதும் தான் ஒரு மலையாளி என்பதை காட்ட விரும்புகிறார். வாரணம் ஆயிரம் படத்திலும் சூரியாவுக்கு சந்தன பொட்டு வைத்தது மட்டும் அல்லாமல் நடன டிரூப்பிலும் எல்லாம் மலையாளிகள். இடையில் ஒரு சங்கர் மேனேன் வந்து சூரியாவை தைரியம் ஊட்டுவார்.

இதில் ஒரு படி மேலே போய் விட்டார். ஒரு அரை மணி நேரம் மலையாள படம் பார்த்த மாதிரி இருக்கு.
என்ன சொல்வது.. மலையாளிகளுக்கு மொழி பற்று அதிகம். ஒற்றுமை அதிகம். நாம் தமிழர்கள் அவர்களுக்கு நேர் எதிர்.

Karthick said...

you didnt mention anything about the BGM of ARR...i heard it was good...

Naresh said...

பதிவுலக விமர்சனம் பத்தி நான் என்ன நெனெச்சனோ அதேத்தான் நீங்களும் சொல்லியிருக்கீங்க...

படம் இன்னும் பாக்கலை!!! கவுதம் மேனன் படத்துல பன்னிக் குட்டியை காமிச்சா கூட அழகா காமிப்பாங்க...இதுல த்ரிஷா சொல்லனுமா!!! சிம்பு கையை ஆட்டாம இருக்க வெச்சதுக்கே நன்றி சொல்லனும்!!

நரேஷ்

சரவணகுமரன் said...

வாங்க DHANS

சரவணகுமரன் said...

விசா,

ஹி ஹி...

சரவணகுமரன் said...

சம்பத்,

எனக்கு இது தப்பாவோ, பெரிய விஷயமாவோ தெரியவில்லை. எல்லா இயக்குனர்களுமே தாங்கள் தங்கள் வாழ்க்கையில் கண்டதையே படத்திலும் காட்டுவார்கள். மெக்கானிக்கல் இன்ஜினியர் ஹீரோ, ஆங்கில வசனங்கள் போல இதையும் சகித்துக்கொள்வோம்.

சரவணகுமரன் said...

கார்த்திக்,

சூரியனுக்கு டார்ச் அடிக்கணுமா அதுவும் அடிக்கடி அடிக்கணும்மா?’ன்னு விட்டுட்டேன்.

கௌதமுக்கு ரஹ்மான் கிடைத்தாலும் கிடைத்தார். படம் முழுக்க இசையால் நிரப்பி இருக்கிறார்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஒரு வகையான இசை என்பது போல், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் ஒவ்வொரு உணர்வுக்கும் இதில் இசையமைத்திருக்கிறார்.

சிம்பு த்ரிஷாவுடன் கோபப்படும் போது ஒரு இசை, சிம்பு ஆழாப்புலாவுக்கு சென்றால் ஒரு இசை, சிம்பு-த்ரிஷா ரொமான்ஸிற்கு ஒரு இசை என ஆழ்ந்து கவனித்தால், ரஹ்மானின் இசை வெள்ளத்தில் முழ்கி எழலாம்.

சரவணகுமரன் said...

//பதிவுலக விமர்சனம் பத்தி நான் என்ன நெனெச்சனோ அதேத்தான் நீங்களும் சொல்லியிருக்கீங்க//

பதிவுலக விமர்சனம் என்பது நல்ல விஷயம் தான் நரேஷ். ஆனால், ஒரு படம் பார்க்க முடிவெடுத்துவிட்டால், பார்ப்பதற்கு முன்பு பதிவுலகம் பக்கம் வந்துவிடக்கூடாது என்பது போல உள்ளது நிலைமை.

//கவுதம் மேனன் படத்துல பன்னிக் குட்டியை காமிச்சா கூட அழகா காமிப்பாங்க...இதுல த்ரிஷா சொல்லனுமா//

:-)

என்ன நரேஷ், பதிவே எழுதுவது இல்லையா? உங்களது வேட்டைக்காரன் விமர்சனம் போல், பல பதிவுகள் எதிர்ப்பார்க்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ரஹ்மான் இசை என்பதற்காக ’என் சுவாச காற்றே’, ’பார்த்தாலே பரவசம்’ போன்ற படங்களையெல்லாம் கடைசி வரை உட்கார்ந்து பார்த்தவன். //

same blood