Monday, December 6, 2010

ரத்த சரித்திரம்

என்னுடன் முன்பு நிறைய ஆந்திர நண்பர்கள் வேலைப் பார்த்தார்கள். அடிக்கடி பரிதாலாரவி பற்றிப் பேசிக் கொள்வார்கள். நானும் என்ன எதுவென்று கேட்டிருக்கிறேன். இவர் அவரைக் கொல்ல, அவர் இவரைக் கொல்ல என ஒரேக் கதையை திருப்பி திருப்பி சொன்னது போல் இருக்கும். அதைத்தான் ராம் கோபால் வர்மா படமாக எடுத்திருக்கிறார்.

கதையின் களமான ஆனந்தப்பூருக்கு, ஒரு ஆந்திர நண்பரின் கல்யாணத்திற்கு சென்று வந்திருக்கிறேன். இப்போதுதான் தெரிகிறது, நான் சென்று வந்தது ரத்த பூமியென்று.

நம்மூரிலும் இதைப்போல், இதைவிட சூடான பழிவாங்கும் கதைகளைக் கேட்டு இருக்கிறேன். சொன்னால், சாதிப்பிரச்சினைத்தான் வரும். சரி, இந்த படத்தைப் பற்றி பார்ப்போம்.

ரங்கீலா மட்டும்தான் நான் பார்த்த ஒரே ராம்கோபால் வர்மா படம். அவருடைய படங்களைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம், பார்க்க தோன்றும். ஆனால், பார்த்ததில்லை. இப்ப, சூர்யா உபயத்தில் பார்க்க நேர்ந்தது.

‘நான் மகான் அல்ல’ படத்தின் விளம்பரம் பார்த்து சென்றவர்களுக்கு, படம் அதிர்ச்சியளித்திருக்கும். அழகான காதல் படம் போல் காட்டி, வன்முறையை அள்ளி தெளித்திருப்பார்கள். இதில் விளம்பரத்திலேயே ரத்தத்தை அள்ளி தெளித்திருந்ததால், அங்கு சென்று துடைத்துக்கொள்ள வசதியாக இருந்தது.

காந்தி சிலைக்கு முன்பு நடக்கும் கொலை, சிவன் படத்திற்கு முன்பு நடக்கும் கத்திகுத்து என வன்முறைக்காட்சியில் கூட யோசிக்க வைத்திருக்கிறார்கள். ரொம்ப ப்ளேயினான பழிவாங்கல் கதையாக இருந்தாலும், ராம்கோபால் வர்மாவின் படத்தை முதல்முறையாகப் பார்ப்பதால், எனக்கு சலிப்பு வரவில்லை.

ராம் கோபால் வர்மாவின் 360 டிகிரி கேமரா கோணம் பற்றி பலர் புகழ்ந்திருந்த காரணத்தால், ஏதேதோ கற்பனை செய்துக்கொண்டு அதைக் காண ஆர்வமாக இருந்தது. பார்க்கும்போது, இதுதானா அது என்று சப்பென்றாகிவிட்டது. கவனத்தை கலைப்பதால், சீக்கிரம் ஜீரோ டிகிரிக்கு கொண்டு வாங்கப்பா என்று தோன்றியது. கலர்புல்லாக படங்களைப் பார்த்துவிட்டு, இந்த டோனில் படம் பார்க்க, வித்தியாசமாகவும் அதே சமயம் கொஞ்சம் பழையப்படம் பார்ப்பது போலவும் இருந்தது.

ஹிந்திப்படங்களில் நடிக்கும் தமிழ் நடிகர்களுக்கு பெரிய கேரக்டர்கள் எதுவும் வந்து சேராது. தென்னிந்திய ஹீரோக்கள் என்றுக்கூட சொல்லலாம். கன்னட ஸ்டார் சுதீப் (இவர் இயக்குனரும் கூட), இந்த படத்தில் ஒரு சின்னக் கேரக்டரில் ஆனால் சிறப்பான நடிப்பில் வந்து செல்கிறார். சூர்யா போய் கொஞ்சம் வெயிட்டான கேரக்டர் வாங்கி வந்திருக்கிறார். சூர்யாவினால், வர்மாவின் சமீபகாலப்படங்களை விட இது கொஞ்சம் அதிகம் சம்பாதிக்கும் என நினைக்கிறேன். எக்ஸ்ட்ராவாக இந்த படத்திற்கு தமிழ்நாடு மார்க்கெட் கிடைத்திருக்கிறதே? (ஆனால், படம் லாஸ் என்று சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்பதாக, இப்போதே ஒரு நியூஸ் கேள்விப்படுகிறேன்)

சூர்யா நடிப்பு எப்படி? கடைசியில் சொல்கிறேன்.

நிறைய முக்கியமான காட்சிகள், ஸ்லோமோஷனில் வருகிறது. ஸ்லோமோஷனில் வருவதால், முக்கியமான காட்சி என்றுக்கூட தோன்றியிருக்கலாம்.

அதில் கோர்ட்டுக்கு சூர்யாவை கொண்டு வரும் சீன் நன்றாக இருந்தது. கோர்ட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் மீதும், படம் பார்க்கும் நமக்கே சந்தேகம் வரும்படி அமைத்திருந்தார்கள்.



படத்தில் சூர்யா நடித்திருக்கும் கதாபாத்திரம் ‘சூரி’. இந்த சூரி தற்போது ஹைதராபாத்தில் இருக்கிறார். அவர் சிறையில் இருந்தப்போதுதான், ராம் கோபால் வர்மா அவரை இந்த படத்திற்காக சந்தித்திருக்கிறார்.

இப்படத்தின் முதல் பாகம் பார்த்தப்பிறகே, சூரி சில ஆட்சேபனைகளை ராம் கோபால் வர்மாவிடம் சொல்லியிருக்கிறார். ராம்கோபால் வர்மாவோ, அடுத்த பாகம் வரும்வரை பொறுத்திருக்க சொல்லிருக்கிறார். பொறுத்திருந்து தற்போது இந்த படத்தைப் பார்க்க, ஹைதராபாத்தில் இருந்து சனிக்கிழமை பெங்களூரில் வந்திருக்கிறார். பாதுகாப்பு கருதி, ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் வந்து படம் பார்த்திருக்கிறார்.

டிவி பாம் சம்பவம், பரிதாலா ரவிக்கு சாதகமாக படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறியவர், ராம் கோபால் வர்மாவுக்கு அங்கிருந்தே போன் போட, அவர் எடுக்கவில்லையாம்.

சூரி, இப்ப சூர்யாவின் ரசிகராகிவிட்டாராம். சில காட்சிகளின்போது கண்ணீர் விட்டவர், தன்னுடைய அம்மா, தங்கை, அண்ணன் இறந்தக்காட்சியில் தான் பட்ட வேதனையை, சூர்யா சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சூர்யாவை பாராட்டியிருக்கிறார் சூரி.

நிழலை நிஜம் பாராட்டியிருப்பது, நிழலுக்கு பெருமைதானே!

.

8 comments:

pichaikaaran said...

வன்முறையை ரசிக்கும் ஒரு சமுதாயம் ...

யாரையும் குறை சொல்லவில்லை... இதை தவிர்க்கவும் முடியாது..

இதற்கான பின்விளைவுகளை நாம் சந்திப்பதை விட எதிர்கால சந்ததியினர் சந்திப்பதே அதிகமாக இருக்கும் என்பதை புரிந்து வைத்து கொண்டால் போதும்..

Anonymous said...

உண்மைத்தமிழன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதையும் படித்து விடுங்கள். இந்த முழுக்கதையையும் சொல்லி இருக்கிறார்.

pichaikaaran said...

boss..

Its me who gave minus vote..

I dont like wat the movie says..

But I like u and ur writings...

I hope u understand me....

Unknown said...

worst film.........cannoy justify..

சரவணகுமரன் said...

பார்வையாளன்,

நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால், இம்மாதிரி படங்கள் சில வன்முறையாளர்களையாவது கொஞ்சமாவது யோசிக்க வைக்கும் அல்லவா?

சரவணகுமரன் said...

பார்வையாளன்,

உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்குது.

சரவணகுமரன் said...

உங்களின் கருத்திற்கு நன்றி ஸ்ரீவித்யா

Anonymous said...

suri killed by his driver 3 months ago...i think it is march 2011..;still vengeance continues