Saturday, June 27, 2009

நாடோடிகள் - பாதி வேகம் மீதி சோகம்

ஒரு நண்பனின் காதலை சேர்த்து வைத்து, அதனால் மூன்று நண்பர்களுக்கு ஏற்படும் பாதிப்பும், சேர்த்த வைத்த காதல் தோற்கும்போது, அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது தான் கதை. கதையாக முழு திருப்தி இருந்தாலும், படமாக பாதி திருப்தி தான். முதல் பாதி ஏற்படுத்தும் எதிர்ப்பார்ப்பை, இரண்டாம் பாதி பூர்த்தி செய்யவில்லை. அட்லீஸ்ட் எனக்கு.

முதல் பாதியில் வரும் மாமன் மகள் காதல், அப்பா அட்வைஸ் காதல் ஸ்வீட். இரண்டாம் பாதியில் வரும் பின்விளைவுகள், கஷ்டம்மப்பா... பின்விளைவுகள், கொஞ்சம் அதிகம்.

படத்தின் முக்கிய காட்சியான, அந்த நாமக்கல் கடத்தல் கல்யாணம் காட்சி, எக்ஸ்பிரஸ். குழாயை எடுத்து காதில் அடித்தது, ஒரு நொடி தியேட்டரில் இருக்கும் அனைவரையும் செவிடாக்கி இருக்கும். சம்போ சிவ சம்போ பாடல் விறுவிறுப்பை கூட்டுகிறது. நேற்று கலைஞர் டிவியில் 'அஞ்சாதே' படத்தின் பின்னணி இசையை கேட்டப்போது, சுந்தர் சி. பாபுவை ஏன் இன்னும் நிறைய படங்களில் காணவில்லை என்று எண்ணியிருந்தேன். இந்த படத்திலும் பின்னணியில் கலக்கியிருந்தார். சில சப்பை சீன்களுக்கு கூட அதிர வைத்திருந்தார். பாடல்களில் ஒன்றும் விசேஷம் இல்லை. ஒன்று தேவையில்லாதது கூட. சம்போ, ஸ்டார் ”தோம் கருவில் இருந்தோம்”யை நினைவுப்படுத்தியது.

சசிக்குமார் ஆக்ரோஷ காட்சிகளில் கலக்குவார் என்பது தெரிந்தது தான். இதில் எக்ஸ்ட்ராவாக காதலிலும், காமெடியிலும் இறங்கியிருக்கிறார். டான்ஸ் வேறு. இருந்தாலும் சண்டைக்காட்சிகளிலும், சோகக்காட்சிகளிலும் தான் பின்னுகிறார். தாடி இல்லாத காட்சி, இவரது யூத் இமேஜிற்கு டேமெஜ் பண்ணும். இந்த படம் வெற்றி பெற்று, இவரும் நடிக்கிறேன்னு, இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தாமல் போயிடுவாரோ என்று பயமாக இருக்கிறது.

ரெண்டு ஹீரோயின்கள். ரெண்டு பேரும் சூப்பர். அதிலும், ஒருவர் ஜோதிகாவின் கலை வாரிசாக எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இதற்கு நேர்மாறாக ஏதாவது உடையணிந்து வந்து அதிர்ச்சி கொடுக்காமல் இருக்க வேண்டும். மன்சூர் அலிகான் மாதிரி ஒருத்தர் வருகிறார். கஞ்சா கருப்பு செய்ய வேண்டிய வேலையை, இவர் செய்திருக்கிறார்.

நிறைய புதுமுகங்கள். எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கல்லூரியில் நடித்தவர்களில் தமன்னாவை தவிர மற்றவர்களை காணோமே என்றிருந்தேன். இதில் ஒருவர் நடித்திருக்கிறார். கல்லூரி ஹீரோ நடித்த வால்மீகி, இந்த படத்துடன் ரிலீஸ் ஆகியுள்ளது.

தமிழ் சினிமா காதல், நட்பு என்று இத்தனை நாள் கற்று கொடுத்து, அதற்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம், உயிரை கொடுக்கலாம் என்று சொல்லிக்கொடுத்து, அதில் நாசமாக போனவர்கள் எத்தனை பேரோ? இதில் இயக்குனர் சமுத்திரகனி, அதற்கு பிராயச்சித்தம் செய்திருக்கிறார். சொல்லப்படாத கதை. சொல்ல வேண்டிய கதை. சொல்லிவிட்டார். பாராட்டுக்கள்.

----

இயக்குனரிடம் படப்பெயரை பற்றி கேட்டபோது, இதில் நண்பர்கள் ராஜபாளையம், நாமக்கல், கன்னியாக்குமரி என்று பல ஊர்களுக்கு செல்கிறார்கள். அதனால், இந்த பெயர் என்றார். நான் கூடத்தான் இங்கே எல்லாம் சென்றிருக்கிறேன்.







2 comments:

முகில் said...

///இந்த படம் வெற்றி பெற்று, இவரும் நடிக்கிறேன்னு, இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தாமல் போயிடுவாரோ என்று பயமாக இருக்கிறது. ////

இல்ல குமரன், நான் விசாரித்ததில் சசிகுமார் அடுத்து படம் இயக்கத்தான் போகிறார். சொந்த பேனர். மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.

சரவணகுமரன் said...

முகில்,

அப்ப சரி... :-)