Thursday, July 9, 2009

நெஞ்சை பிழிந்த வாணி ஜெயராம் குரல்

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ராஜாவின் பாடல்களை பற்றிய பதிவு. விஸ்வநாதன் மேல் மிகப்பெரிய அபிமானம் கொண்ட ராஜா, அவர் பாணியிலேயே ஒவ்வொரு படங்களிலும் பெண்குரல் தனிப்பாடலை (female solo) அமைப்பதை தொடர்ந்தார். விஸ்வநாதன் எப்படி சுசீலாவை அதிகபட்சம் தனிப்பாடல்களில் பயன்படுத்திக்கொண்டாரோ அதைப்போல நம் ராஜாவுக்கு ஜானகி. ராஜாவின் முதல் பாடல் பதிவே ஜானகியின் தனிப்பாடலாகத்தானே அமைந்தது. அன்னக்கிளிக்காக "மச்சான பாத்திங்களா?.." (1975). அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்த இது ஜானகியின் முதல் தேசிய விருதுக்கும் வழிசொன்னது. (16 வயதினிலே - செந்தூரப்பூவே).

இவ்வரிசையில் அதிகம் கவனிக்கப்படாமல் போன ஒரு பாடகி வாணிஜெயராம். மிக அற்புதமானதொரு குரல் கொண்ட பாடகி. துவக்கத்தில் ஜேசுதாசுடன் ஜோடிப்பாடல்களுக்கான ஏற்ற குரலாக அமைந்தார். அவர் ராஜா கையில் கிடைத்தபிறகு, அவருக்கென்றே ராஜா அமைத்ததோ எனும்படியான பாடல்கள் நமக்கு கிடைத்தன. அவற்றில் எப்போது நினைத்தாலும் உடனே கேட்க வேண்டுமென வேட்க்கையைத்தூண்டும் பாடல்களிரண்டு..

பெண்குரலில் தனிப்பாடல்களுக்கென ஒரு பிரத்யேக வாசம் உண்டு. அது நிஜமாகவே மனதை இளகச்செய்யும் திறனுடையது. இல்லையென்று சொல்பவர்கள் ஒரு நிசப்தம் சூழ்ந்த இரவில் ராஜாவின் இசையில் வாணிஜெயராம் குரலில் "நானே நானா யாரோ தானா.. மெல்ல மெல்ல மாறினேனா.." ஒருமுறை கேட்டுவிட்டு சொல்லுங்கள்.. விரகம் பொதிந்தும் அதை வெளிப்படுத்த முடியாத கட்டுப்பாடுகள் நிறைந்த வலியை உணர்த்தும் பாடலது. ’அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்துக்காக ராஜாவால் போடப்பட்டது. (1979)




இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில், ராஜாவின் மெட்டுக்கு வாலி அமைத்த வரிகள். எத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் எல்லாமே உடலுக்குதானே தவிர, மனதை யார் என்ன செய்துவிட முடியும்? என் மனதின் ஆசைகள், தேவைகள், இயலாமைகளை என்னைத்தவிர யாருணர முடியும்?.. எப்போதேனும் வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் நேர்கையில் அதை யாரால் கட்டுக்குள் வைக்க இயலும்? எத்தனை கேள்விகள்.. இதே ஒரு பெண்ணின் நிலையில் இன்னும் வலியதாய் இருக்கக்கூடும்.. ஏனெனில் தளைகள் அதிகமாகும்போது கேள்விகளும் அதிகமாகுமல்லவா?..

விரகத்தை தன்னுள் தேக்கி வைத்திருக்கும் நாயகி, ஒரு அசந்தர்ப்பத்தில் மது அருந்த நேரிடுகிறது.. ஏக்கம் பாடலாக வெளிப்படுகிறது. இதைக்கேட்கும் நேரம், எங்கேனும் ஒரு வலியுணரும் கண்ணில் ஈரம் கசியக்கூடும். ராஜாவே, தேக்கிவைத்த தன் ஏக்கத்தை எல்லாம் வெளிப்படுத்தியது போன்றதொரு பிரவாகம்..

என்னை நோகடிக்கும் இந்த விரகத்தை எல்லாம் இன்றே வடித்து வெளியேற்றி விடவேண்டும் என்பதாக வெளிப்படும் வார்த்தைகள்.. அவற்றுக்கு உறுதியளிக்கும் பின்னணி இசை. பாடலின் துவக்கத்தில் மெலிதாய், கீழஸ்தாயியில் துவங்கும் குழலின் ஓசை. அதிலிருந்து துவங்கும் குரலிசை.. மேற்கத்திய பாணி (பெண் மது அருந்துவதும் கூட) என்பதால் பாடல் முழுக்க கிடார் பின்னணி. சந்தர்ப்பம் நேர்கையில் கேட்டுப்பாருங்கள்.

என்னில் தோன்றிய மாற்றங்களுக்கு நான் யாரைப்போய் காரணம் கேட்பது? என்னை நானே கேட்டுக்கொள்வது தானே சரி..?!!

இனி பாடல்..

நானே நானா யாரோதானா?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே..
என்னைநானே கேட்கிறேன்..

ஒருவன் மடியிலே உருகும் இதயமே இதோ துடிக்க..
உலர்ந்த உதடுகள் தனிமைக்கவிதைகள் ஏதோ படிக்க..
மதுவின் மயக்கமே உனதுமடியில் இனிமேல் இவள்தான்,
சரணம்..சரணம்..

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு..
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது..
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்.. விரகம்..
நரகம்..நரகம்..

நானே நானா யாரோதானா?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே..
என்னைநானே கேட்கிறேன்..


அடுத்த பாடல்..

இதுவும் கூட அப்பட்டமான ஏக்கத்தின் வெளிப்பாடு.. தேவராஜ்-மோகன் இயக்கத்தில் ரோசாப்பூ ரவிக்கைக்கைக்காரி (1979) படத்துக்காக ராஜாவின் இசையில் கங்கை அமரனின் வரிகள்.. இதுவும் கூட வாணிஜெயராமின் குரலில் கிறங்கடிக்கும் பாடல்.




மிகுந்த நாகரீகம் கொண்ட நாசூக்கான பெண்ணொருத்திக்கு, ரவிக்கை கூட அணியாத பின்தங்கிய மக்களடங்கிய ஒரு கிராமத்தில் வாழ்க்கைப்பட நேர்ந்தால்?? அவள் கணவன் இன்னும் கட்டுக்குடுமியுடனிருக்க, பட்டணத்து நாகரீகத்தை பிரதிபலிக்கும், இஸ்திரி செய்த சட்டையும், பெல் பாட்டம் பேண்ட்டும் அணிந்த ஒரு வாலிபனின் சிநேகம் அவளுக்கு கிடைத்தால்?.. அவனுடன் அவன் புல்லட் வண்டியில், மலைப்பாதையில் ஒரு நெடும்பயணம் செய்ய நேர்ந்தால்.. கீழே விழாமலிருக்க வேண்டி அவன் இடுப்பை வளைக்கும் கைகளினூடாக மோகத்தின் வெப்பம் பரிமாறப்படுகிறது..

இருவரும் தம்போக்கிலிருக்க, மிக அழகாக பின்னணியில் ஒலிக்கும் பாடல்... இசைக்கருவிகளின் ராணி வயலின் என்பதை இந்தப்பாடல் கேட்ட பிறகு
ஒப்புக்கொள்வீர்கள். மதுவந்தி (பெயரே எவ்வளவு அழகு..!!) என்ற ராகத்திலமைந்த ராஜாவின் பாடல்.. பாடல் முழுக்க சீரான தொனியில் தொடரும் தபேலாவின் இசை. சரணத்தில் துவங்கும் வாணியின் ஆலாபனை மீண்டும் தாளகதியில் வந்து சேர்ந்து கொள்ளுவது கொள்ளை அழகு.. அது ஒன்றே சத்தியம் செய்யும், நான் ராஜாவின் குழந்தையென்று..

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது?.. ஏன் வாட்டுது?..
ஆனால் அதுவும் ஆனந்தம்..

என் மனகங்கையில் சங்கமிக்க..
சங்கமிக்க பங்குவைக்க..
பொங்கிடும் பூம்புனலில்..
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலில்,
போதையிலே மனம் தங்கிநிற்க பொங்கிநிற்க..
காலம் இன்றே கூடாதோ..

மஞ்சளைப்பூசிய மேகங்களே..
மேகங்களே.. மோகங்களே..
மல்லிகை மாலைகளே..
மல்லிகை முல்லையின் மாலைகளே..
மார்கழி மாதத்து காலைகளே..
என்றும் என்னை சேராயோ..

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது?.. ஏன் வாட்டுது?..
ஆனால் அதுவும் ஆனந்தம்...


இதைக்கேட்க நேர்வது நமக்கும் கூட ஆனந்தம் தானே? அதுவும் உங்கள் மனைவியோ, கணவனோ ஊருக்கு போயிருக்கும் குளிர்காலத்தில் தனிமையான ஒரு நாளின், ஊரடங்கியப்பொழுதில் எங்கோ அடுத்த தெருவிலிருக்குமொரு இசை ரசிகரின் வானொலியில் ஒலிக்கும் இப்பாடல்கள் காற்றில் பயணித்து மிக மெலிதாக உங்கள் காதுகளை அடையும் பொழுதுகள் அறிவிக்கும்.. சொர்க்கம் என்றால் என்னவென்று..!!

-மகேந்திரன்

---

ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தை பற்றிய ஒரு ஆழ்ந்த பார்வை... பின்குறிப்புகள்...

28 comments:

நாடோடி இலக்கியன் said...

'நானே நானா' பாடலைப் பற்றி படித்துக் கொண்டிருந்தபோதே 'என்னுள்ளில் எங்கோ' பாடலின் நினைவும் வந்தது.
'கவிதை கேளுங்கள்','யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது' போன்று எத்தனையோ சோலோ சாங்ஸ் வாணிஜியின் வசீகரக் குரலில் கேட்டு கிறங்கியதுண்டு.

M.Thevesh said...

உங்கள் லிங் வேலை செய்யவில்லை
பாடலை கெட்டு ரசிக்கமுடியவில்லை

Anonymous said...

another song is like that ..

யாரது sollamal நெஞ்சள்ளி போவது

pls write about this super song.

Raj said...

படிக்கும்போதே உள்ளுக்குள்ளாற பாட்ட அப்படியே ரீவைண்ட் பண்ணி கேட்ட மாதிரி feel பண்ண வைக்குது உங்க எழுத்து....இந்த மாதிரி தொடர்ந்து ராஜா சாரோட நல்ல பல பாடல்களை விவரங்களோட சொல்லுங்க சார்

உண்மைத்தமிழன் said...

இரண்டு பாடல்களுமே உள்ளத்தை கொள்ளும் பாடல்கள்..!

எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றிகள் ஸார்..!

Anonymous said...

யாரது sollamal நெஞ்சள்ளி போவது//

ஆமாம் இந்த பாடலை விட்டு விட்டீர்களே...
வாணி ஜெயராம் போல இன்னும் சில பாடகிகள் ஜென்சி,எஸ்.பி.சைலஜா போன்றோர்கள்.

நரேஷ் said...

பொறாமையாக இருக்கிறது இந்த வர்ணனைகளைக் கேட்டு!!!

மிக அருமையாக வர்ணித்திருக்கிறார்...

மகேந்திரனின் ரசனை இந்தப் பாடல்களைப் பற்றிய புதிய பரிணாமத்தை எனக்கு எடுத்துரைக்கிறது!!!

பள்ளிகூடம் போவலாமா போட்டாச்சு....அழைப்பிற்கு நன்றி!!!

ரவி said...

நல்லா இருக்கு...ப்ளேயரும் சூப்பர்...

Unknown said...

மகேந்திரன்,

ராஜாவின் soul stirring (ஆதமாவை
ஊடுருவும்) பாடல்.அதே மாதிரி ”வாழ்க்கை ஓடம் செல்ல”(அவள் அப்படித்தான்)தர்மவதி ராகம். இதில் வரும் ஒரு வயலின் இழுப்பு oh! it is divine!சோகம் வயலினில் வழியும்.

பார்க்க:-

http://raviaditya.blogspot.com/2009/07/blog-post_05.html

நன்றி.

வம்பளந்தான்முக்கு said...

மிகவும் அருமையான பதிவு. பாலைவனசோலை-யின் மேகமே..,மேகமே... விடுபட்டுவிட்டதே........

கிரி said...

இசையில் ரொம்ப விருப்பம் தான் உங்களுக்கு :-)

Unknown said...

உண்மைலே சொல்லனும்னா இளையராஜா இசை தெய்வம். அவரோட ஒவ்வொரு பாட்டும் என்னை சொர்கத்துக்கு கொண்டு போறாப்ல தோணும். நம்மை சொர்கத்துக்கு கொண்டு போறது தெய்வம் தானே?

மகேந்திரன் said...

நன்றி நாடோடி இலக்கியன்

சரவணகுமரன் said...

Thevesh,

Flash இருக்கிறதா? மற்றவர்களால் கேட்க முடிகிறது.

மகேந்திரன் said...

எழுதுகிறேன், அனானி

மகேந்திரன் said...

நன்றி ராஜ்

மகேந்திரன் said...

நன்றி உண்மைத் தமிழன்

மகேந்திரன் said...

ஆமாம் இங்கிலீஷ்காரன்

மகேந்திரன் said...

நன்றி நரேஷ்

மகேந்திரன் said...

நன்றி செந்தழல் ரவி

மகேந்திரன் said...

நன்றி ரவிஷங்கர்

மகேந்திரன் said...

நன்றி ajithsivaraja

மகேந்திரன் said...

கண்டிப்பாக கிரி

மகேந்திரன் said...

ஆமாம் ராஜா

எம்.எம்.அப்துல்லா said...

சந்தேகமேயின்றி அவர் ஒரு தென்னிந்திய நைட்டிங்கேல்.

மகேந்திரன் said...

ஆமாம் அப்துல்லா

செந்தில் said...

Please try "Barathi kannamaa neeyadi chinamma."
Its one of the best of Vani

M.Rishan Shareef said...

இன்னுமொரு அருமையான பாடலிருக்கிறது.
"யாரது..சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது..."

இலங்கை வானொலியில் இவரது, ஜென்சி, சசிரேகா பாடல்களெல்லாம் அடிக்கடி ஒலிபரப்பப்படுகிறது. நிலவிரவில் காற்றில் அவை மெல்லிசையாகத் தவழ்ந்துவருகையில் சொல்லமுடியாப் பேரானந்தம் மனமெங்கும் அலைமோதும்.