Wednesday, December 16, 2009

சொத்து வாங்க ஒரு செக்லிஸ்ட்

"சம்பாதிக்கிற பணத்தை ஏதாவது ஒரு நிலத்துல போடு. அது உனக்கு பின்னால நிலையான வருமானத்தைக் கொடுக்கும்"

இது ரஜினிக்கு அவரோட அப்பா சொன்ன அறிவுரை. நல்ல அட்வைஸ் தான். உண்மையான அட்வைஸ் தான்.



சரி... இப்ப, போன வருஷம் சரிஞ்ச ரியல் எஸ்டேட் மார்க்கெட் விலை திரும்பவும் உயர தொடங்கியுள்ளதாக செய்திகள் வருகிறது. அப்படியே, பிடிச்ச இடத்தில் மனை வாங்கினாலும், பிரச்சினை இல்லாமல் வாங்குவது எப்படி? வாங்குபவர்களுக்கு உதவ, சில டிப்ஸ். செக்லிஸ்டாகவும் பயன்படுத்தலாம்.

இந்த பதிவு இப்போது தேவையில்லை என்றாலும், பின்னால் உதவும். புக்மார்க் செய்துக்கொள்ளவும்.

முழுமையாக இருக்கும் என்று உறுதியாக சொல்லமுடியாது. ஏனெனில், முழுமைக்கு முடிவில்லை.

- நிலத்தின் உரிமையாளர் உயிரோடு இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்தோடு நிலம் விற்கபடுகிறதா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான விஷயம், யாரெல்லாம் வாரிசுதாரர்கள் என்று வாரிசு சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்வது.

- உரிமையுள்ள வாரிசுகளில் யாரேனும் மைனராக இருந்தால், உயர்நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் (Guardian) மூலம்தான் சொத்து விற்கப்படவேண்டும்.

- மனநலம் பாதிக்கப்பட்டவரின் சொத்தை வாங்குவதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும்.

- அதிகாரம் பெற்ற முகவர் (Power of Attorney Holder) மூலம் சொத்து வாங்கும்போது, முகவருக்கு சொத்தை விற்கும் அதிகாரம் இருக்கிறதா என்பதை அதிகார ஆவணத்தை தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், விற்பனை ஒப்பந்தம் செய்வதற்கு மட்டும் கூட அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படிபட்டவரிடம் இருந்து விற்பனை ஆவணம் பதிவு செய்துக்கொள்ள முடியாது.

- அதிகாரம் கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா? என்று தெரிந்துக்கொள்ளவும். இல்லையென்றால், அதிகாரமும் இல்லை.

- உங்களிடம் கொடுக்கப்பட்ட விற்பனை ஆவணம், மூல ஆவணமா (Original Deed) அல்லது படி ஆவணமா (Duplicate copy) என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். மூல ஆவணம் தான் தேவை.

- முன்பணம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மூல ஆவணத்தை பார்க்க வேண்டும். மூல ஆவணம் இல்லையென்றால், சொத்து அடமானத்தில் இருக்கலாம்.

- 13 ஆண்டுகள் வில்லங்க சான்றிதழ் போதும். 30 ஆண்டுகள் ரொம்ப நல்லது.

- சொத்தின் உரிமையை (Ownership) ஆராய்ந்து தெரிந்துக்கொள்வது போல், உடமை (Possession) பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும். பட்டா பார்த்து, உடமையை தெரிந்துக்கொள்ளலாம். விவசாய நிலமென்றால், சிட்டா.

- மூல ஆவணம் நமக்கென்று கிடைக்க வாய்ப்பில்லாத அபார்ட்மெண்ட் ப்ளாட் விற்பனையின் போது, மூல ஆவணத்தை பார்வையிடுவது அவசியம்.

- அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கும் போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும், நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

- அபார்ட்மெண்ட் கட்ட அனுமதி, திட்டத்தின் அனுமதி, வரைபடத்தின் அனுமதி என்று அனைத்து அனுமதியையும் பார்க்க வேண்டும்.

- அனுமதி பெற்ற வரைப்படத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்க கூடாது.

- விற்பனை ஆவண பதிவிற்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்துக்கொள்வது நல்லது.

- விற்பனை ஒப்பந்தத்தில், முன்பணம், விற்பனைத் தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

- நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் போது, உரிமை, உடமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

- பொதுவாக ஒரு சொத்து வாங்குவதற்கு முன், அதன் உரிமையாளரிடம் வாங்க வேண்டியவை,
* விற்பனை ஆவணம்
* தாய் ஆவணங்கள்
* வில்லங்க சான்றிதழ்
* பட்டா, சொத்து வரி ரசீதுகள்


நிலத்தை பொறுத்து, உரிமையாளரை பொறுத்து இது மாறுபடும். தேவைப்படும் ஆவணங்கள் கூடும்.

ஹாப்பி ப்ராபர்டி பர்சேஸ்!

நன்றி - வழக்கறிஞர் த.இராமலிங்கத்தின் ‘தைரியமாக சொத்து வாங்குங்கள்’
விகடன் பிரசுரம்.


.

9 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

உப‌யோக‌மான த‌க‌வ‌ல் ந‌ன்றி

sathishsangkavi.blogspot.com said...

நல்ல தகவல்.......

palani.s said...

useful news thks

palani.s

சரவணகுமரன் said...

நன்றி கரிசல்காரன்

சரவணகுமரன் said...

நன்றி Sangkavi

சரவணகுமரன் said...

நன்றி பழனி

பிரேம்குமார் அசோகன் said...

வீடு கட்ட இடம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சரியான நேரத்தில் அவசியமான குறிப்புகள் கிடைத்தன உங்களிடமிருந்து. நன்றிகள்!!
வாழ்த்துக்கள்!!

சரவணகுமரன் said...

நன்றி பிரேம்குமார்

வடுவூர் குமார் said...

அபார்ட்மெண்ட் கட்ட அனுமதி, திட்டத்தின் அனுமதி, வரைபடத்தின் அனுமதி என்று அனைத்து அனுமதியையும் பார்க்க வேண்டும்.
சமீபத்தில் ஒரு வீடு வாங்கப்போய் வக்கீலிடம் ஆவணங்களை கொடுத்து சரி பார்த்த போது உள்ளே இருந்த வில்லங்கம் வெளியே வந்தது.இப்படிப் பட்ட இடத்தில் வீடு கட்ட ஒரு தேசிய வங்கி கடன் கொடுத்துள்ளது.எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.கடைசியில் வீடு வாங்கவில்லை.