Wednesday, December 30, 2009

விஷ்ணு’ன்னு ஒருத்தர் - இனி இல்லை

என் சிறு வயதில் அண்ணனுடன் திரையரங்கில் செகண்ட் ரிலீஸில் ‘விடுதலை’ படம் பார்த்தேன். ரஜினி சிவாஜியுடன் செய்யும் குறும்புத்தனங்களுக்காக எனக்கு பிடித்த படம். ரஜினியுடன் நடித்த ஹீரோ யாரென்று அண்ணனிடம் கேட்டபோது, விஷ்ணு’ன்னு ஒருத்தன் என என் காதில் விழுந்தது. கன்னடத்தின் சூப்பர் ஸ்டார் என்பது உபத்தகவல். ரஜினி, சிரஞ்சிவி, மம்மூட்டி என்ற சூப்பர் ஸ்டார் லிஸ்டில் இவரை சேர்த்துக்கொண்டேன்.



எப்ப இவரை பற்றி பேசும் போதும், எதற்கு அண்ணன் ”விஷ்ணு’ன்னு ஒருத்தன்” என்றே சொல்கிறார்? என்பது ஒரு கேள்வியாகவே இருந்தது. அண்ணன் மட்டுமல்ல, எல்லோருமே அப்படித்தான் சொன்னார்கள். ரொம்ப நாள் கழித்து தான், அவருடைய பெயர் ”விஷ்ணுவர்தன்” என்று தெரிந்தது. அது என் காதில் விஷ்ணு’ன்னு ஒருத்தன் என விழுந்திருக்கிறது.

இன்று காலை, விஷ்ணுவர்த்தன் என்கிற இந்த ஒருவர் இறந்த செய்தியைக் கேட்டப்போது, யாரோ ஒருவர் என்று தோணவில்லை. நம்பவும் முடியவில்லை.

அந்த படத்தில் ஆரம்பத்தில் ரஜினியின் ஜோடி மாதுரியை இவர் டாவடித்ததால், எனக்கு இவரை அப்போது பிடிக்கவில்லை. கடைசியில், பேபி ஷாலினியுடன் தனியாகவே சென்று விட்டதால், சமாதானமானேன். இவரை எப்போது பார்க்கும்போதும், பரிதாபமாக இருக்கும். இந்த படத்தை பார்த்து ரொம்ப நாள் ஆனதாலும், டிவியில் எதிலும் போடாததாலும், ரொம்பவும் தேடி, டிவிடி வாங்கி வைத்துள்ளேன். கடைசியில் போராக இருக்கும். இருந்தாலும், இன்னோரு முறை பார்க்க வேண்டும்.

---

சந்திரமுகியின் கன்னட ஒரிஜினலான ஆப்தமித்ரா வெளியான சமயம், அதன் ஹீரோயின் சௌந்தர்யா மரணமடைந்தார். தற்போது, அதன் இரண்டாம் பாகம் எடுத்துவருகிறார்கள். ஹீரோ இறந்துவிட்டார்.

---

கன்னட ரசிகர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ராஜ்குமார் இறந்தபோது நடந்தது போல், இன்றும் ரகளை, கலாட்டாக்கள் நடந்துள்ளது. பல அலுவலகங்களில், மதியமே வீட்டுக்கு போக சொல்லிவிட்டார்கள். நிறைய கடைகள் பூட்டி கிடந்தன. பஸ், கார், வேன்களில் விஷ்ணுவர்தன் படம் தற்காப்பிற்காக ஒட்டப்பட்டிருந்தது. ப்ளேக்ஸ் போர்டுகளில் சிரித்த முகத்துடன் இருந்தவருக்கு மாலை போட்டு அனுதாபம் தெரிவித்திருந்தனர்.

---

கன்னட சேனல்கள் அனைத்திலும் விஷ்ணுவர்தன் தான். மியூசிக் சேனல்களில் அவருடைய பாடல்களும், மூவி சேனல்களில் அவருடைய படங்களும் ஓடிக்கொண்டிருந்தது. உதயாவில் கன்னட ரமணா ஒடிக்கொண்டிருந்தது. நியூஸ் சேனல்களிலும் முழுக்க அவரை பற்றிய செய்திகளே. பிரபலங்கள் அவரை பற்றி கருத்து சொன்னார்கள். ரஜினி உருக்கமாக பேசினார். அவருடைய உடலுக்கு பக்கத்தில் அம்பரிஷ், அர்ஜுன், சுஹாசினி போன்றோர் அழுதுக்கொண்டு இருந்தார்கள்.

---

நடிகர்கள் தான் எவ்வளவு நெருக்கமாக மக்களுடன் கலந்துவிடுகிறார்கள். இது எல்லோருக்கும் அமைவது இல்லை. ஒரு சிலருக்கே.

முன்பின் சந்தித்திருக்காதபோதும், நடிகர்கள் திருமணத்தின் போது, தங்கள் வீட்டு திருமணம் போன்றே மகிழ்வதும், அவர்கள் இறப்பின் போது உணர்ச்சிவயப்பட்டு அழுவதும், வேறெந்த துறையினருக்கும் கிடைப்பதில்லை. தினம் தினம் அல்லது அடிக்கடி பார்ப்பதால், தங்களுக்கு பிடித்தவராக இருப்பதால், இனி அவர்களுடைய படைப்பு இல்லை எனும் நிலை ஏற்படும்போது, அவர்களின் இழப்பு கஷ்டமானதாக ஆகிறது.

ஒரு கலைஞனிடம் அவனுடைய படைப்பை மட்டுமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரசிகனுக்கே இப்படியென்றால், அவன் குடும்பத்தினருக்கு?

ஆழ்ந்த அனுதாபங்கள்.

.

4 comments:

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

30-12-2009) மாரடைப்பால் காலமான நடிகர் விஷ்ணுவர்த்தனுக்கு அஞ்சலி.

நடிகர் விஷ்ணுவர்த்தன் - கலைக்குடும்ப படங்கள் : விஷ்ணுவர்த்தன் தன் மனைவி பாரதியுடன்

ethavuthu Irukkum said...

// ரஜினியின் ஜோடி மாதுரியை இவர் டாவடித்ததால், //

மாதுரி அல்ல மாதவி.

ARV Loshan said...

விஷ்ணுவர்த்தன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

//கன்னட ரசிகர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ராஜ்குமார் இறந்தபோது நடந்தது போல், இன்றும் ரகளை, கலாட்டாக்கள் நடந்துள்ளது. பல அலுவலகங்களில், மதியமே வீட்டுக்கு போக சொல்லிவிட்டார்கள்//

இதை நானும் யோசித்துள்ளேன்.. என் இவர்கள் மட்டும் இப்படி உணர்ச்சி வசப்படுகிறார்கள்?

ஜமீல் said...

விஷ்ணு வர்தனை, "விஷ்ணு ஒருத்தன்" என புரிந்து கொண்டது,
"விஷ்ணு’ன்னு ஒருத்தர் - இனி இல்லை" என்று தலைப்பிட்டது என ....ஒரே.. உணர்ச்சிமயம் .

கன்னட பத்திரிகைகள் கூட இவ்ளோ உணர்ச்சிமயமாய் அஞ்சலி செய்திருக்கமா என்பது ஐயமே.

//ஒரு கலைஞனிடம் அவனுடைய படைப்பை மட்டுமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரசிகனுக்கே இப்படியென்றால், அவன் குடும்பத்தினருக்கு? //

உள்ளதை என்னவோ செய்து விட்டன இந்த வரிகள்.