Wednesday, September 30, 2009

என்ன இது? சிறுபிள்ளைத்தனமா...



நான் முன்பு ஒரு கார்ட்டூன் கண்காட்சிக்கு போனதாக சொல்லியிருந்தேனே? அவர்கள் ஒரு கேலிச்சித்திரப்போட்டி நடத்துகிறார்கள்.

முதல் பரிசு - 1 லட்ச ரூபாய்.

போட்டி?

சோனியா, மன்மோகன் சிங்கை வைத்து கேலிச்சித்திரம் வரைய வேண்டுமாம்!

போட்டி நடத்துபவர்களுக்கு இவர்கள் மேல் என்ன கோபமோ?

---

நேற்று நடந்தது இது.

குஜராத் முதல்வர் மீட்டிங் ஹாலை விட்டு வெளியே வருகிறார். காத்திருந்த நிருபர் கூட்டம் ஓடி வருகிறது.

நிருபர்கள்: எங்களுக்காக இரு நிமிடங்கள் ஒதுக்க முடியுமா?

அங்கு வைத்திருந்த மைக்குகளுக்கு முன்னால் வந்து நிற்கிறார். ஒன்றும் பேசவில்லை.

நிருபர்கள்: எதுக்கு அமைதியா இருக்கீங்க?

மோடி: நீங்க தானே இரு நிமிடங்கள் கேட்டீங்க?

நிருபர்கள்: எங்க கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

அதற்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை. சிரித்தபடியே இரண்டு நிமிடங்கள் நிற்கிறார். இரண்டு நிமிடங்கள் கழித்து, ஒன்று கூறாமல் நகர்கிறார்.

---

டெய்லர் ப்ரான்ச் என்பவர் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனுடன் நடத்திய உரையாடல்களை வைத்து வெளியிட்டு இருக்கும் ’The Clinton Tapes: Wrestling History with the President' என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கார்கில் யுத்தத்தின் போது இந்திய - பாகிஸ்தான் தலைமைகள் இப்படி கேஷுவலாக பேசிக்கொண்டதாக கிளிண்டன் கூறினாராம்.

இந்தியா - ”பாகிஸ்தான் தோற்கும் நிலையில் இருக்கிறார்கள். அடுத்தக்கட்டமா, அவுங்கக்கிட்ட இருக்கிற அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், நம்ம ஆளுக 30-50 கோடி வரைக்கும் சாவாங்க. நாம பதிலுக்கு, நம்மக்கிட்ட இருக்கிற அணு ஆயுதத்தை பயன்படுத்தினா, மொத்த 12 கோடி பாகிஸ்தானியர்களையும் சாகடிச்சிடலாம். போர்லயும் ஜெயிச்சிடலாம்.”

பாகிஸ்தான் - “நமக்கு பிரச்சினையில்லைப்பா... மலைகள் தடுப்பா இருக்குது. இந்தியாவுக்கு தான் கஷ்டம். சமவெளியா இருக்குது”

இப்படித்தான் நானும் குழந்தையா இருக்கும் போது பேசிட்டு இருந்தேன்.

.

Tuesday, September 29, 2009

கலை வாரிசுகள்

ரஜினியும் கமலும் இன்னும் யூத்துகளாவே நடிப்பதற்கு அவர்கள் தான் காரணம். அதாவது, கமலுக்கு காரணம் ரஜினி. ரஜினிக்கு காரணம் கமல். ஒருவர் இளமையாக நடித்துக்கொண்டிருக்க, மற்றொருவரால் வயதானராக நடிக்க முடியாதே! அவர்களின் வெற்றிக்கு எப்படி அவர்களுக்கிடையேயான ஒப்பீடும், போட்டியும் உதவியாக இருக்கிறதோ, மற்ற விஷயங்களுக்கும் இவை காரணமாக இருக்கிறது.

பிரமாண்டமாக படமெடுப்பதாகட்டும், வெற்றிகள் கொடுப்பதாகட்டும், ரசிகர்களை திருப்திப்படுத்துவதில் ஆகட்டும் - ஒருவரை மற்றொருவர் பெஞ்ச்மார்க்காக வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் இருவருக்கும் பசங்க இருந்திருந்தால், இந்நேரம் அவர்கள் ஹீரோவாக, இவர்கள் கொஞ்சமாவது பிள்ளை பாசத்தால் இறங்கி வந்திருப்பார்கள். (எனக்கு இவர்கள் யூத்துகளாக நடிப்பதில், எந்த ஆட்சேபனையும் இல்லை. நிஜத்தில் இல்லாததை பார்க்கவும் தானே, சினிமாவுக்கு போகிறோம்?)



உன்னைப்போல் ஒருவன் தீம் பாடலுக்கான வீடியோ ப்ரமோவை டிவியில் பார்த்தவர்கள், தியேட்டரில் அதை கட் செய்து விட்டதாக புலம்ப, அது படத்தில் இடம்பெறுவதற்காக எடுக்கப்பட்டதில்லை என்றிருக்கிறார்கள். அப்புறம் எதுக்கு எடுத்தீங்க? என்று கேட்க, இப்ப அதை படம் ஆரம்பிக்கும் முன்பு போடுகிறார்கள். பிள்ளை பாசம் என்றாலும் சும்மா சொல்ல கூடாது. பொண்ணும் நல்லா மியூசிக் போட்டு இருக்குது. நல்லா பாடி இருக்காங்க. ஆடி இருக்காங்க. பாடலை நல்லா இயக்கி இருக்குறாங்க. இவ்வளவு திறமைகளுக்கு கமல் காரணம் என்பதுபோல், இவ்வளவு வாய்ப்புகளுக்கும் கமல் காரணம்.

ஆனா, கமல் தன் பிள்ளைக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்து இருக்காரு’ன்னு சொல்லிட்டு போயிட கூடாது. இந்த படத்துல, பலருக்கு வாய்ப்பு கொடுத்துருக்காரு. சதி லீலாவதில கமல் பையனா வருகிறவர், இந்த படத்தில் ஹாக்கர நடிக்க மட்டுமில்லை. படத்தில் ஒலிப்பதிவும் அவர்தான்.

விஜய் பையன், வேட்டைக்காரனில் ஆட்டம் போட்டு இருக்கானாமே? இன்னும் சில வருடங்களில், ஹீரோவாக்கிவிட்டு விடுவார்கள். அப்புறம் யாத்ரா? இப்பொழுதே, சினிமாவில் பிரபு, கார்த்திக், விஜய், பிரசாந்த், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, யுவன் சங்கர்ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, விஜய் ஜேசுதாஸ், வெங்கட் பிரபு என்று லேயர்லிலும் வாரிசுகள் இருக்கிறார்கள். வருங்காலத்தில், வாரிசு கலைஞர்கள் என்பவர்கள் தான் மெஜாரிட்டியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அவரவர் சார்ந்திருக்கும் துறையின் நெளிவு சுளிவுகள் தெரிந்திருப்பதால், வாரிசுகளும் சுலபமாக தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. வாய்ப்பும் சுலபமாக கிடைக்கிறது.

வாரிசு அறிமுகம் என்பது இன்று எல்லாத்துறைகளிலும் வந்து விட்டது. டாக்டர்கள் வாரிசுகள், பெரும்பாலும் டாக்டர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசியல் என்பது தொழிலில்லை என்பதால், அதில் மட்டும் அவ்வப்போது எதிர்ப்பு குரல் ஒலிக்கிறது. ஆனால், அதையும் தொழிலாய் நினைப்பவர்கள் வாரிசுகளை இறக்கிவிட்டு கொண்டிருக்கிறார்கள். வாரிசுகளால், வாய்ப்பை இழந்தவர்கள் தான் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். பிறகு, அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து ஒரு இடத்தை அடைந்து விட்டால், அவர்களது வாரிசுகளுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை.

நம்மை அறியாமலே, குலத்தொழில் காலத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறோமோ?

கட்டாய குலத்தொழில் என்றபோது எதிர்ப்பு வந்தது. இப்பொழுது, அவர்கள் விருப்பத்தோடு குலத்தொழில் என்றாகிவிட்டது. பிடித்த தொழில், கவுரவமான தொழில் எனும்போது, யாருக்கு விருப்பமில்லாமல் போகும்?

.

Thursday, September 24, 2009

உ.போ.ஒ. வசனங்களும் வசனகர்த்தா இரா.முருகனும்

உன்னைப்போல் ஒருவன் விமர்சனத்தில் அதிகம் பாராட்டைப்பெற்றதும், சர்ச்சைக்குள்ளானதும் இரா. முருகனின் வசனங்கள். ஆனால், அதிகம் தேடிப் படித்திருக்காவிட்டால், யார் வசனம் என்று தெரிந்திருக்காது. ஏனெனில், பட போஸ்டர் டிசைனிங்கிலும் வசனகர்த்தா பெயர் இல்லை. படத்தின் ஆரம்ப டைட்டிலிலும் வசனகர்த்தா பெயர் இல்லை. (நல்லாத்தான் கவனிச்சேன். மிஸ் பண்ணியிருந்தா சொல்லுங்க.) படம் முடிந்தபின் வரும் டைட்டிலில், இவர் பெயர் வருகிறது. எத்தனை பேர் இதை நின்று கவனிப்பார்கள்? எத்தனை தியேட்டர்களில் இதை முழுவதுமாக போடுகிறார்கள்? சரி, விடுங்க. தேவைன்னா தேடி தெரிஞ்சுக்க போறாங்க...



இரா.முருகன், கணினித்துறையில் பணியாற்றும் எழுத்தாளர். சுஜாதாவிற்கு பிறகு, தமிழில் அறிவியல் புனைவுகளை எழுத இவர்தான் இருக்கிறார் என்கிறார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்பு, இவர் எழுதிய 'ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்' என்ற கவிதையை சுட்டிக்காட்டி சுஜாதா சாவி இதழில் எழுதியிருந்தாராம். முன்பின் தெரியாத முருகனை, சுஜாதா முதலில் அறிமுகப்படுத்தியது அதில்தானாம்.

இப்ப, படத்தின் வசனங்களை கேட்கும்போதும், சுஜாதா சாயல் தெரிகிறது.

“மன்னிக்குறோமா, இல்ல... மறந்துடுறோம்... மறதி ஒரு தேசிய வியாதி”

பல இடங்களில் தியேட்டரில், இவர் வசனங்கள் கலகலப்புக்குள்ளாக்கியது.

நடிகரிடம், கமிஷனர் - இவங்கல்லாம் யாரு?
நடிகர் - இவுங்கெல்லாம் என் உயிர்.
கமிஷனர் - உயிர் எல்லாம் கொஞ்சம் வெளியே நிக்கட்டும்.


கமலிடம் மோகன்லால் - தீவிரவாதிகளை விட்டுட்டா, பாம்களை எடுத்துடுவே’ன்னு என்ன கியாரண்டி?
கமல் - கியாரண்டி வாரண்டி எல்லாம் தர, நான் என்ன பிரஷர் குக்கரா விக்குறேன்?


முதல்வர் குரலுக்கு, முதல்வர் குணாதிசயங்களோடு கூடிய வசனங்கள்.

முதல்வர் - நிலைமை எப்படியிருக்கு மாரார்?
கமிஷனர் - இட்ஸ் ஆல் இன் காட்ஸ் கேண்ட்.
முதல்வர் - அய்யய்யோ... அது சிக்கலான கையாச்சே!

கமிஷனர் - எண்ட குருவாயூரப்பா!
முதல்வர் - கேரள கடவுளா? தமிழ் கடவுள்கள் நிறைய இருக்க, அவ்வளவு தூரம் போகணுமா?


பிறகு, தலைமை செயலரிடம்,

“தேர்தல் வெற்றிக்கு பாதிப்பு வருமா?”

“எல்லாத்தையும் நீங்களே ஹேண்டில் பண்ணுங்கம்மா!”

“ஒவ்வொரு கட்சிக்கும் டிவி இருக்கே?”

“எதிர்க்கட்சிக்காரன் அறிக்கை விட்டுடப் போறான்!”


நாட்டு நிலவரத்தையும் வசனத்தில் கொண்டு வந்திருந்தார்.

டிவி ரிப்போர்ட்டரிடம் கமல்,

”நியூஸ்க்காக மைக்கும் கையுமாக அலையும் ஆயிரம் ரிப்போர்ட்டர்ஸ் இருக்கிறார்கள்.. செய்திகளை உருவாக்குகிற நியூஸ் மேக்கர்ஸுக்குத் தான் இப்போது பஞ்சம்”

தீவிரவாதி பேசும் அரசியல் டபுள் மீனிங் வசனம்.

”குஜராத்ல மோதிப்பார். மோதிப்பார்த்தா தெரியும். தீர்ந்துடுவ”

இந்த படத்தின் திரைக்கதை வடிவம் புத்தகவடிவில் வந்தால், நன்றாக விற்கும் என்று தோன்றுகிறது. இரா.முருகனின் பிற புத்தகங்களுக்கும் இனி மவுசு கூடக்கூடும். நான் இதுவரை எதுவும் படித்தத்தில்லை. இனி படிக்க வேண்டும்.

அந்த கவிதை.

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்

மூடுவண்டித் திரைக்குப் பின்
முனகிநீ புரண்டிருக்கக்
காற்றணைக்கும் லாந்தர்
கைப்பிடித்துக் கூட வந்து
ஊர் உறங்கும் வேளை
பேர்தெரியா மருத்துவச்சி
வாசலிலே நின்றபோது
பேச்சுக் குரலெழுந்து
நித்திரை கலைந்த
நாய்கள் அதட்டும்.

பின்னிரவுப் பனியும்
பீடிப் புகையுமாய்
வாசலிலே நின்று
வானம் வெறித்திருக்க,
வெள்ளம் அழித்த அறுவடையை,
வீட்டுச்சுவர்கள் விழுந்ததை,
நீல மூக்குத்தி கடன்
நிலுவையில் மூழ்கியதை,

பால் மரத்த பசுமாட்டை,
பஸ் அடித்த வெள்ளாட்டை,
ஆயிக்குத் திவசம் தர
அய்யருக்கு அலைந்ததை,
காளிக்குத் தரவேண்டிய
கழுத்தறுத்த சேவல்களை,
ஆசையாய் நீ கேட்டு,
வாங்காதுபோன வட்டுக் கருப்பட்டியைச்
சுற்றும் நினைவுகள்
சூழ்ந்து குழம்ப,
நேரம் மறந்து நின்றபோது
ஆரோ வந்து சொன்னார்
அழகான குழந்தையென்று.

ஆற்றுச் சலசலப்பில்
காலை விடிந்தபோது
உலகம் புதுசாச்சு
உள்ளமும் நேராச்சு.

.

Friday, September 18, 2009

உன்னைப்போல் ஒருவன்



கஜினி, போக்கிரி என்று ஆக்‌ஷன் மசாலாக்கள் இங்கே இருந்து ஹிந்திக்கு செல்ல, அங்கேயிருந்து ஒரு நல்லப்படத்தை தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார் கமல். வெட்னஸ்டே வந்தப்போது, இம்மாதிரி படங்கள் தமிழில் வருவதில்லையே என்று கவலை தெரிவித்திருந்தார் ஞாநி. இதோ, கமல் தயவில் உன்னைப்போல் ஒருவன். ஐம்பது ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் இருக்கும் கமல், பொறுப்புடன் செய்திருக்கும் ரீ-மேக்.

இந்த கதையில் உள்ள ஒரு சஸ்பென்ஸ், கமல் நடிக்கிறார் என்ற போதே உடைந்து விட்டது. இருந்தாலும் சுவாரஸ்யம் குறையாமல், வேக வேகமாக ஓடி இரண்டே மணி நேரத்தில் முடிகிறது படம்.

கமல், மோகன்லால் என்று இருபெரும் தலைகள் இருந்தாலும். அவர்கள் மட்டும் அதிகம் ஆடாமல், எல்லாரையும் அடித்து ஆடவிட்டு இருக்கிறார்கள். கதைக்கு தேவையான காட்சிகள் மட்டும், படத்தில். எப்படி இருக்கணுமோ, அப்படி இருக்கிறதே, வித்தியாசமாக இருக்கிறது.

விருமாண்டியில் மரண தண்டனையே கூடாது என்று சொன்ன கமல், இதில் தீவிரவாதத்திற்கு பதிலடி தீவிரவாதம் தான் என்கிறார். சரி, விடுங்க... இரா.முருகன் சொல்கிறார்.

இரண்டு போலீஸ் சூரப்புலிகள் வருகிறார்கள். அசத்தலாக இருக்கிறார்கள். முக்கியமாக, கணேஷ். அபியும் நானும்’இல் சிங்காக வருபவர்தானே? ஆளும், குரலும் சூப்பர் ஹீரோ போல் இருக்கிறார். இது போல் ஒரு கதை ஹிந்தியில் வராமல், கமலுக்கோ வேறு யாருக்கோ இங்கே தோன்றியிருந்தால், இந்த வேடத்திலும் கமலை நடிக்க சொல்லி, அவரும் நடித்திருப்பார்.

அய்யா சாமி! கமல் படம்’னா சந்தானபாரதி இருக்கணுமா? அதுவும் அவர் ஒரு தீவிரவாதியா? முடியல... அவருக்கு ஊரு பண்ணையார், கற்பழிப்பு சீன் இதுக்குத்தான் பொருத்தமா இருப்பாரு.

மத்தப்படி எல்லா நடிகர் தேர்வும் பொருத்தம். மோகன்லால்கிட்ட பாதுகாப்பு கேட்டு ஒரு நடிகர் வாராரு. அதுக்கு செம பொருத்தம் - ஸ்ரீமன். எனக்கு எப்பவும் அவர பார்த்தா, விஜய் ஞாபகம் தான் வரும். இந்த கேரக்டருக்கு, சொல்லவே வேண்டாம்.

ஏறத்தாழ எல்லா விஷயங்களையும் நேரடியாகவே சொல்கிறார்கள். முதல்வர் என்றால் கலைஞர் குரல், முதல்வர் வீட்டில் திமுக கொடி பறக்கிறது, பெஸ்ட் பேக்கிரி என்கிறார்கள். இன்னும் பல.

இயக்குனர் சக்ரி, இந்த களத்தில் பயங்கர அறிவாளியாக இருக்கிறார். தீவிரவாதி, பாம், போலீஸ், அதிகாரிகள், மீடியா என்று அவர் காட்டியிருக்கும் நுணுக்கங்கள் அபாரம். அவரவர் தரப்பின் யதார்த்த நியாயத்தையும் எடுத்து வைக்கிறார்.

ஸ்ருதி பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி நன்றாகவே இருந்தது. அவருடைய திறமை, கமல் அல்லாத மற்றவர்களின் படங்களில் தான் தெரியும். கமல் எப்போதும் முகத்தில் போடும் வேஷத்தை, இதில் ஒரு பாடலில் குரலுக்கும் போடுகிறார். நல்லவேளை, பாடல்களை தனியாக படத்தில் சேர்க்கவில்லை.

என்ன தான் பார்த்து, பார்த்து தமிழுக்கு ஏற்றாற்போல் படத்தை எடுத்து இருந்தாலும், என்.டி.டி.வி பொம்மலாட்டம், தம்மடிக்கும் காம்பியர், கோத்ரா வசனங்கள் போன்றவற்றால் ஒரு அந்நிய உணர்வை தவிர்க்கமுடியவில்லை.

காமன் மேன், காமன் மேன் என்று தன்னை கமல் சொன்னாலும், நம்மூர் காமன் மேன் சுப்பனும் குப்பனும் தானே? இவர் உயர் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த காமன் மேன் போலும்! விலைவாசி பற்றிய கவலை இருந்தாலும், கூடை நிறைய தளும்ப தளும்ப தக்காளி வாங்கி செல்கிறார். கவனிக்க, பசிக்கும்போது பிரெட் சாப்பிடுகிறார். இட்லி சாப்பிட வேண்டாம்? :-)

.

தமிழக அரசியல், சினிமா - கூகிள் மாபெரும் கருத்துக்கணிப்பு

யாரையும் யாருக்கூடவும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க. கூகிள் ஒப்பிட்டு பாருங்க’ன்னு சொல்றாங்க. அதாவது, தேடுதல் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்’ன்னு சொல்லி கூகிள் ட்ரெண்ட்ஸ் பக்கம் வச்சிருக்காங்க. நானும் பொழுதுபோகாம தேடிப்பார்த்ததன் பலன், இந்த பதிவு.

தலைப்ப பார்த்து, டிவில எலக்‌ஷன் ரிசல்ட் பார்க்குற மனநிலைக்கு போகாதீங்க. இது கூகிளை வச்சு, நான் பண்ணின ஆய்வு. ஆராய்ச்சி முடிவுகள் கீழே.

---

ஆப்பிளை ஆப்பிள் கூடத்தான் ஒப்பிடணும். ஆரஞ்ச ஆரஞ்சுக்கூடத்தான் ஒப்பிடணும். அதனால, ஜோடி ஜோடியா போட்டி.

எம்ஜிஆர் Vs சிவாஜி

எம்ஜியாரை தேடுனதுல பாதி அளவுக்கு தான் சிவாஜியை தேடி இருக்காங்க. அதுவும், ரஜினியோட சிவாஜிப்படத்தை தேடுனதுனாலத்தான் இந்த அளவும்.



ரஜினி Vs கமல்

ரஜினி, கமல்’ன்னு பார்த்தா, கமல் முன்னணி. ரஜினிகாந்த், கமல்ஹாசன்’ன்னு பார்த்தா, ரஜினிகாந்த் முன்னணி. அப்பாடி, ரெண்டு பேரும் சமம்’ன்னு சொல்லிக்கலாம்.





விஜய் Vs அஜித்

விஜய் முன்னணியில் இருப்பதற்கு, அவருடைய பொதுவான பெயரும் ஒரு காரணம். இன்னொரு காரணம், மக்கள் இண்டர்நெட்டில் நிறைய நகைச்சுவை தேடுவதும் ஆகும்.



சிம்பு Vs தனுஷ்

தனுஷுக்கு இந்த ஏரியா கொஞ்சம் வீக் தான்.



இளையராஜா Vs ரஹ்மான்

ஒண்ணும் சொல்றதுக்கில்லை.



வடிவேலு Vs விவேக்

இங்க விவேக் முந்திக்கிட்டதுக்கு காரணம், ஊரு உலகத்துல ஏகப்பட்ட விவேக்குகள்.



த்ரிஷா Vs நயன்தாரா

த்ரிஷாவை கண்டிப்பா நிறையப்பேரு தேடியிருப்பாங்க. மொள்ளமாறிங்க.



திமுக Vs அதிமுக

இந்த எலெக்‌ஷனிலும் திமுக தான் முன்னணி. அம்மாக்கிட்ட கேட்டா, ஓட்டுப்பெட்டியில் கோளாறு என்பதுபோல் கூகிளில் கோளாறு என்பார்.



கருணாநிதி Vs ஜெயலலிதா

ஆனா, தனிப்பட்ட முறையில் அம்மா தான் முன்னணி. அதுதானே, அவுங்களுக்கும் வேணும்.



ஸ்டாலின் Vs அழகிரி

இது கொஞ்சம் அபாயகரமான ஒப்பீடு. இப்படி ஒப்பிட்டுத்தான், தமிழ்நாட்டுல பெரிய சமூக மாற்றமே வந்துச்சு. பயமாத்தான் இருக்குது. இருந்தாலும்...



சாரு Vs ஜெயமோகன்

இது ஒரு ஆச்சரியமான முடிவு மாதிரி தெரியும். ஆனா சாரு சர்மா, சாரு சேகல் என்று வேறுபல சாருக்கள் இருக்கிறார்கள்.



மணிரத்னம் Vs ஷங்கர்

இந்த கன்னாபின்னா முன்னணிக்கும் காரணம், பொதுப்பெயர்.



---

இந்த முடிவை வச்சு, என்ன சொல்றது? அதிகம் தேடப்பட்டு முன்னணியில் வந்தவர், அதிகம் பிரபலமானவர் என்று சொல்வதா? செல்வாக்கானவர் என்பதா? விசிறிகள் அதிகம் உடையவர் என்பதா? அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் உண்டாக்கியவர் என்பதா? தெரியவில்லை.

எப்படியோ? உபயோகமான அறிவியல் முன்னேற்றத்தை, வெட்டியாக பயன்படுத்துவோர் ஏராளம் என்று சொல்லலாம். என்னைப்போல.

நீங்களும் வெட்டி ஆராய்ச்சி செய்ய, இவரை அணுகவும்.

.

Wednesday, September 16, 2009

நாட்டு சரக்கு - திருப்பதி லட்டு

அண்ணா நூற்றாண்டையொட்டி நடந்த கருத்தரங்க விழா இது. எத்தனை அண்ணா, எத்தனை கலைஞர் பாருங்க?

அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்பட்டதற்கு காரணம் எது?

கலைஞரின் பகுத்தறிவு கொள்கை!
ஏழைகளுக்காக கலைஞர் உழைப்பது!
கலைஞரின் பேச்சாற்றல்!
கலைஞரின் எழுத்தாற்றல்!
கட்சியை கலைஞர் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது!
கலைஞரின் அரசியல் நாகரீகம்!

கட்சியை இந்த அளவுக்கு செல்வாக்காக வளர்த்தது என்று ஒரு தலைப்பு வைத்திருக்கலாம். தனி திராவிட நாடு என்ற கோரிக்கையை ஆரம்பத்தில் வைத்த அண்ணாவுக்கு, இந்திய அரசின் சார்பில் நாணயம் வெளியிட வைத்ததற்கு, கட்சியின் இந்த வளர்ச்சிதானே காரணம்?

---

அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு, கே டிவியில் இரவு சிறப்பு திரைப்படம். குஷி. அண்ணாவுக்காகவோ இல்லையோ, கலைஞரில் அஞ்சாதே ஓடிக்கொண்டிருந்தது. டிஆர்பி விட்டுட கூடாதே?

அண்ணாவுக்கும் குஷிக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்க வேண்டாம். குஷி, தமிழ் வார்த்தைகளில் அர்த்த புரட்சி பண்ணியவரின் படமாச்சே!

---

நாங்கள் கல்லூரியில் படித்தப்போது, ஒரு மினி எலக்ட்ரானிக்ஸ் ப்ராஜக்ட் போட்டி நடந்தது. அதில் என் நண்பனின் டீம் செய்தது - ஆட்டோமேடிக் மோட்டார் கண்ட்ரோலர். இப்ப, கமர்ஷியலாகவே கிடைக்கிறது. இது கிணறு மற்றும் தொட்டியின் தண்ணீர் அளவை பொறுத்து, மோட்டரை தானாகவே ஆன்/ஆப் செய்யும். ஹாஸ்டலில் ரூமில் இருந்து செய்தது. டெஸ்ட் செய்தபோது ஒழுங்காக வேலை செய்தது.

கல்லூரியில் டெமொ காட்டும் அன்று, பிரச்சினை செய்து விட்டது. என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை. அப்ப, என் நண்பன் சீரியஸாக கேட்டான்.

“டேய்! ஹாஸ்டல் தண்ணி கொண்டு வந்து பாப்போமா?”

---

போன சனி முழுவதும், சன் டிவியில் கீழே ஓடிக்கொண்டிருந்தது - நாளை தினகரனில் எந்திரன் ஸ்டில்ஸ் உடன் கூடிய சிறப்பு பக்கங்கள். ஆஹா, ஆரம்பிச்சுட்டாய்ங்களா? ஸ்டில்ஸ்க்கே இப்படியா? என்று நினைத்துக்கொண்டேன்.

எதிர்பார்த்ததைப் போல ஞாயிறு அன்று தினகரன் விற்பனையும் அதிகமாம். பெட்டிக்கடையில் மக்கள் முண்டியடித்து பேப்பர் வாங்கியதை, சன் நியூஸில் காட்டினார்களா என்று தெரியவில்லை.

---

போஸ்டர் ஒட்டியதால் மாட்டிக்கொண்டார் நடிகர் அர்ஜீன்.

அர்ஜீன் கன்னடத்தில் அவர் சொந்தக்கார பையனை வைத்து ஒரு படம் தயாரித்திருந்தார். அந்த படத்தின் போஸ்டர் பெங்களூர் நகர சாலைகளில் உள்ள பொது சுவர்களில் ஒட்டப்பட்டதற்காக, அவர் மீது கார்ப்பரேஷன் கேஸ் போட்டுள்ளது.

ஏதாவது ஒரு இங்கிலிஷ் பட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தால், அந்த படத்தை தயாரித்த வார்னர் ப்ரதர்ஸ் அல்லது செஞ்சுரி பாக்ஸ் மீது கேஸ் போட்டு இருப்பார்களோ?

---



இனி திருப்பதி லட்டு என்ற பெயரில் வேறு யாரும் லட்டு செய்ய முடியாது. இதற்கும் பேடண்ட் வாங்கிவிட்டார்கள். திருப்பதி லட்டு, திருப்பதிக்கே.

லட்டு - சில தகவல்கள்.

* 17ஆம் நூற்றாண்டில் இருந்து இந்த லட்டு இருக்கிறதாம்.
* ஒரு நாளைக்கு 1.5 லட்சம் லட்டுகள் செய்யப்படுகிறது.
* தினசரி 10000 கிலோ சர்க்கரை, 1000 கிலோ முந்திரி, 500 கிலோ நெய் போட்டு் செய்யப்படுகிறது.
* ஒரு லட்டின் தற்போதைய விலை - ரூ. 25.
* ஒரு வருட லட்டு வருவாய் - ரூ. 2 கோடி

லட்டு’னா, சும்மா இல்லை.

.

Tuesday, September 15, 2009

கடலை வித் கிழவி



நாகராஜுக்கு தெரிந்த ஒரே வேலை, வண்டி ஓட்டுவது. ரொம்ப ஸ்டைலாக ஓட்டுவான். கியரானாலும் சரி, ப்ரேக்கானாலும் சரி, வேகமாகத்தான் போடுவான். ஏனெனில், அவன் வயது அப்படி. வாடகை வேன் ஓட்ட வந்ததற்கு காரணம், அவன் முதலாளி சொன்ன ஒரு விஷயம் தான். அவர் சொன்னது உண்மையா, பொய்யா என்று தெரியவில்லை. நடப்பதைப் பார்த்தால், பொய்யாகத்தான் இருக்கும்.

திண்டுக்கல்லில் உள்ள ஒரு மில்லுக்கு வேலைக்கு செல்லும் பெண்களை காலையிலும் மாலையிலும் அழைத்து செல்ல வேண்டும் என்று ஆரம்பத்தில் கூறினார். யாரையாவது ஒருத்தியையோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களையோ பிக்கப் செய்து விடலாம் என்ற பேராசையுடன் சேர்ந்தான். ஆனால், இப்போது செய்துக்கொண்டிருக்கும் வேலையோ, வத்தலக்குண்டுவை சுற்றி இருக்கும் கிராமங்களில் இருந்து கிழவன், கிழவிகளை அழைத்துக்கொண்டு, வத்தலக்குண்டுவில் நடக்கும் முதியோர் கல்வி மையத்திற்கு அழைத்து செல்வதுதான்.

கலர்ல சினிமாஸ்கோப் படம் பார்க்க சென்றவனை, பழைய பிளாக் அண்ட் ஒயிட் படம் பார்க்க சொன்னால் என்ன செய்வான்? கோபத்துடனே வேலைக்கு சென்றான். படிக்க வந்த கிழவிகளை, “இந்த வயசில் இது தேவையா?” என்று எரிந்து கொட்டி கொண்டு இருப்பான். அன்றும் அப்படித்தான் திட்டிக்கொண்டு இருந்தான்.

அது மாலை ட்ரிப். டிரைவர் சீட்டுக்கு பின்னால் இருந்த ஒரு கிழவி, தோளைத் தொட்டு கூப்பிட்டாள்.

“என்னா?”

“இந்தா”

கடலை. நன்றாக உரித்த கடலைகளை கொடுத்தாள்.

’என் நேரம். நான் யாருக்கூட கடலைப் போட நினைத்தேன். இப்ப பாரு? இந்த கிழவிக எனக்கு கடலை கொடுக்குது’ என்று நினைத்துக்கொண்டே கடலையை வாங்கி வாயில் போட்டான்.

கொஞ்சம் தூரம் போனதும், அப்படியே கைமாறி மாறி இன்னும் கொஞ்சம் வந்து சேர்ந்தது.

’எதுக்கு இந்த கிழவிக எனக்கு கடலை கொடுக்குதுக? இதுகள திட்டாம இருக்குறதுக்கா? ஓ! கடலை கொடுத்து கரெக்ட் பண்ணுதோ?’ என்று நினைத்தவன், பின்னால் இருந்த கிழவியிடம் கேட்டான்.

”ஏன் கிழவி, எனக்கு கடலை கொடுக்குற?”

“பின்ன, இந்த பாழாப்போன வயசுல, பல்லு இல்லாத இந்த கிழவிக எப்படி இதை சாப்பிடும்?”

“அப்புறம் எதுக்கு நீ கடலை வாங்குற? உன்னாலத்தான் சாப்பிட முடியலையே?”

“ராசா, உனக்கு தெரியுது. அந்த எடுப்பட்ட பயலுகளுக்கு தெரியலையே!”

“யாரு?”

“அதான். அந்த பாடம் சொல்லு கொடுக்குற வாத்திமாருக. நாங்களெல்லாம் ஒழுங்கா பாடம் படிக்க வருறதால, எங்களுக்கு கடலை முட்டாய் கொடுத்தாக. அதை கடிச்சு சாப்பிட பல்லு எங்க? அதான் மென்னுட்டு, உனக்கு...”

“ஏய்! கிழவி...” கத்தியவாறு ப்ரேக்கை மிதித்தான்.

.

Saturday, September 12, 2009

ஈரம்

ஷங்கர் இயக்கும்போது இருப்பது போல் அல்லாமல், புதுப் புது களங்களுடன், கருவுடன் படங்களை தயாரிக்கிறார். இந்த முறை த்ரில்லர். ஆனால் எனக்கென்னமோ, இந்த முறை ஷங்கருக்கு முழு திருப்தி இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.



முதல் பாதியில் செம க்ரிப்புடன் சென்ற படம், இரண்டாம் பாதியில் கட்டு குலைகிறது. அமானுஷ்ய காட்சிகள் கிறு கிறு... விறு விறு... இந்த சங்கதியை கடைசி வரை கொண்டு வந்திருந்தால் பரபரவென இருந்திருக்கும். பிற்பாதியில், அமானுஷ்யம் தொலைந்து போய், பேசி பேசி அவர்களுடன் சேர்த்து நம்மையும் டயர்ட் ஆக்குகிறார்கள்.

மிருகமாக வந்த ஆதி, ஹீரோ. அப்பிராணியாக வரும் நந்தா, வில்லன். ரீ-எண்ட்ரியில் ஆன்ட்டியாக வருவார் என்று நான் நினைத்திருந்த சிந்து, கல்லூரி மாணவியாக அதிர்ச்சியை அழகாக கொடுத்தார். காமெடி கதாபாத்திரங்கள் பண்ணியவர், குணசித்திர கதாபாத்திரங்கள் பண்ணியவர் என எல்லாரும் வில்லத்தனம் செய்திருக்கிறார்கள். சரண்யா மேனன், இதே சைஸ்ல தான் இருப்பாங்களா?

படத்தின் எல்லா ப்ரேமில் ஏதோ ஒரு திரவம், ஈரம் இருக்கிறது. சென்னையில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் மப்பும் மந்தாரமுமாகவே இருக்கிறது. அவ்ளோ குளிர்ச்சியாகவா சென்னை இருக்கிறது? எங்கும் ஈரம், எதிலும் ஈரம்... நண்பன் கைத் தவறி, பெப்சியைக் கொட்டி என் மேலும் ஈரம்.

ஒளிப்பதிவு அழகாக, இதமாக இருந்தது. இசை - பாடல்களில் யுவன் போலவும், பின்னணியில் ஹாரிஸ் போலவும் இருந்தது. நல்லவேளை, மூணே பாடல்கள். அதையும், அரைகுறையாக முடித்துகொண்டார்கள்.

படத்தின் டைட்டிலில் போடும் டிஸ்கி - இந்த கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் ‘வழக்கம் போல’ கற்பனையே. என்னடா, சிம்புதேவன் பீவர் இன்னும் தொடருதோ என்று நினைத்தேன். அதேப்போல், ஆங்கில படங்களில் வருவது போல், ப்ரொடக்‌ஷன் பேனரின் டிசைன் படத்தின் தீமிற்கு ஏற்றாற்போல் வருகிறது.

வசனம் ஷார்ப். (வீரப்பனை சுட்டோம்ன்னு சொன்னீங்க. நம்பினோம்ல, வந்து பார்க்கவா செய்தோம்?) நாயகி படத்தில் ஆங்காங்கே சுஜாதா புத்தகங்கள் படிக்கிறார். தங்கை - சிட்னி ஷெல்டன். முதல் பாதியில் ஒவ்வொரு காட்சியையும் சுவாரஸ்யமாக இணைத்திருந்தார்கள். படம் முழுக்க டைரக்டர் டச் என்று சொல்லும் வண்ணம் காட்சிகள்.

ஸ்ரீநாத்தின் குழந்தை மாஸ்க் போட்டுக்கொண்டு வரும் காட்சியில், தியேட்டர் டெரர்ராகி பிறகு கலகலப்பானது. அதேப்போல், தியேட்டர் டாய்லெட்டில் சாகுபவனின் தலை அந்த வாஷ்பேசின் திண்டில் அடிக்கும் போதும், குடை அந்த ஓல்ட் மேனின் கழுத்தில் குத்தும் போதும், தியேட்டர் ஜெர்க் ஆனது.

கிளைமாக்ஸ் நெருங்கிறது. ஒரு மெசெஜ் ரெடி பண்ணிருவோம்ன்னு ஒண்ணு சொல்றாங்க. அதாவது, காலம் மாறி போச்சு. காதல் எப்பனாலும் யாருக்குனாலும் வரும். உங்க வாழ்க்கைத்துணை கல்யாணத்திற்கு முன்பு காதலித்திருக்கலாம். பிரச்சினையில்லை. கல்யாணத்திற்கு பிறகு ஒழுங்கா இருந்தா போதும்.

படத்தில் ஆவி ஏற்றிய கிலியை விட கூடுதலாக இது ஏற்றியது.

---

என்னடா இது? வார வாரம் படம் பார்க்க வேண்டி இருக்கிறதே என்று அடுத்த வாரம் பார்க்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டு தியேட்டரில் சென்றால்,

உன்னைப்போல் ஒருவன் - அடுத்த வாரம்.

.

Friday, September 11, 2009

கூகிள் வழி உலகம்

இனி வருங்காலத்தில் உலகத்தை இந்த கூகிளின் மாயக்கண்ணாடி மூலம் தான் பார்ப்போம் என்று இணையத்தில் ஒரு செய்தி வந்திருந்தது. ரொம்ப பழைய செய்திதான்.

இந்த கண்ணாடி போன்ற சாதனத்தால், எந்த ஒரு விஷயத்தையும் பார்க்கும் போது, அது சம்பந்தமான தகவல்கள் இதில் ஒளிரும்.

ஒரு கட்டிடத்தை பார்த்தால், அது பற்றிய தகவல்கள் இப்படி வரும்.



வீடுகளைப் பார்த்தால் எந்த பேங்கில் கடன் வாங்கி கட்டியது? இதுவரை எவ்வளவு கட்டப்பட்டுள்ளது போன்ற தகவல்கள் வருமோ?

கரகாட்டக்காரனில் செந்தில் கேட்ட கேள்விக்கு, இது பதில் சொல்லுமா? இந்த காரை இதுக்கு முன்னாடி...

ஏதாவது ஒரு மாடி மீது தொட்டால், அதில் யார் இருந்தார்கள். எப்ப வரை இருந்தார்கள் போன்ற தகவல்கள் வரும். இதை நீங்கள் குடும்பத்துடன் டாஸ்மாக்கை கடந்து செல்லும்போது பார்த்துவிடாதீர்கள். நீங்கள் அங்கே சென்ற வரலாறு முழுவதும் வந்துவிட போகிறது.



மீட்டிங் நடக்கும் அறையை சுலபமாக கண்டுப்பிடிக்கலாம். கவனம். ரெய்டுல மாட்டிக்க போறீங்க.



பத்திரிக்கை மீது வைத்து பார்த்தால், டிஜிட்டல் டிக்‌ஷனரியாக உருவெடுக்கும்.



புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லி கொடுக்கும். இதை வைத்து பார்த்தாவது, பின்நவீனத்துவ படைப்புகள் புரியுமா? இந்த சாதனம் ஹேங் ஆகிவிட கூடாது.



தெரியாத மொழியில் உள்ளதை, மொழிமாற்றம் செய்து படித்து கொள்ளலாம். சென்னை பாஷையை கண்டுக்கொள்ளுமா?



புத்தகத்திலும் தேடுதல் வசதி. இந்த வார ஆனந்த விகடனில் நம்ம படைப்பு வந்திருக்கிறதா? என்று பதிவர்கள் வாங்கியவுடன் தேடி கொள்ளலாம்.



ஒரு ஆப்பிளை பார்த்தால், அதில் என்னன்ன, எவ்வவ்ளவு உள்ளது என்று காட்டும். கூடவே ‘என் செல்ல பேரு ஆப்பிள்... நீ சைஸா கடிச்சிக்கோ”ன்னு பாட்டும் பாடும். நல்லா கவனிச்சிங்கன்னா, ஆப்பிள்க்குள்ள முமைத்கான் கூட தெரிவாங்க.



ஏதாவது உணவை பார்த்தால், அதில் உள்ள சத்துக்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். உங்க தெரு முனையில் உள்ள டீக்கடை மாஸ்டர் போட்ட உளுந்த வடையை பார்த்தீங்கன்னா, அது ரீபைண்ட் ஆயிலில் செய்ததா, இல்ல லாரி இன்ஜின் ஆயிலில் செய்ததா என்று தெரிந்து விடும்.



கூடவே கூகிளிடம் சில எதிர்பார்ப்புகள்.

1) அரசியல்வாதிகளை பார்த்தால் சொத்து மதிப்பு தெரியணும்.
2) நடிகர்களை பார்த்தால் வயசு தெரியணும்.
3) நடிகைகளை பார்க்கும்போது, மேக்கப் இல்லாத ஒரிஜினல் முகத்தை காட்டணும்.
4) டாக்டரை பார்க்கும்போது, அவரோட ஒரிஜினல் சர்டிபிகேட், மார்க் ஷீட் காட்டணும்.
5) ஜெட் ஏர்வேஸ் பைலட்டுக்கு உண்மையிலேயே வயித்த வலியா தெரிஞ்சுக்கணும்.

உங்க ஆசையை சொல்லுங்க...

.

உயிரெழுத்து கேள்விகள்

நம் படத்தை யார் பார்ப்பார்கள் என்று திரையுலகினர் யோசிக்கவே முடியாதபடி செயல்பட்டு வரும் ஜெட்லி, என்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார்.



ஆங்கில & தமிழ் எழுத்து வரிசைகளின்படி அமைந்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். என்ன நோக்கத்தில் ஆரம்பித்து இருப்பார்கள் என்று பின்னோக்கி பார்த்தால், ஆங்கில பதிவுகளில் நூறு ஆங்கில கேள்விகள் என்று ஆரம்பித்தது, பிறகு மருவி மருவி ஆங்கில எழுத்துக்களின் படி 26 ஆக குறைந்து, பிறகு தமிழும் இணைக்கப்பட்டு (தமிழ்படுத்தியது சுமஜ்லா?), தற்போதைய நிலைக்கு வந்துள்ளது. கொக்கி போடுவதற்காக ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இப்ப, தமிழில் மட்டும் தொடராமா? (சுலபமாக்கிக்குவோம்!)

1. அன்புக்குரியவர்கள் : கடன் கொடுத்தவர்கள்.
2. ஆசைக்குரியவர் : கடன் வாங்கியவர்.
3. இலவசமாய் கிடைப்பது : இப்போதைக்கு ஸ்வைன் ப்ளு.
4. ஈதலில் சிறந்தது : எதிர்பார்ப்பில்லாத எதுவும். தேவையானபோது.
5. உலகத்தில் பயப்படுவது : உயரம்.
6. ஊக்கமளிப்பவர்கள் : குறை சொல்பவர்கள்.
7. எப்போதும் உடனிருப்பது : ச்சீய்...
8. ஏன் இந்த பதிவு : சும்மா (இந்த பதிவுன்னு இல்ல...)
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : ஐஸ்தான் (ஸ்டே கூல்)
10.ஒரு ரகசியம் : காத கொண்டாங்க. ஒண்ணு போதுமா?
11.ஓசையில் பிடித்தது : மழலை சிரிப்பு.
12.ஔவை மொழி ஒன்று : ஓதுவது ஒழியேல்.
13.(அ)ஃறிணையில் பிடித்தது: க்ரெடிட் கார்ட்.

நான் அழைக்கும் நால்வர்.
கார்த்திக் பிரபு
Jawarlal
தமிழ்ப்பறவை
ரமேஷ்

எப்படி வேண்டுமானாலும் தொடரலாம். :-)

.

Wednesday, September 9, 2009

'தில்லாலங்கடி' சோ

சோ பத்திரிக்கை தொடங்குவதற்கு முன், சினிமாவில் நடிப்பதற்கு முன், நாடகம் நடத்துவதற்கு முன், வக்கீலாக இருந்தார். டி.டி.கே. நிறுவனத்திற்கு அவர் தான் சட்ட ஆலோசகர்.



ஒருமுறை அந்த நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த ஒரு மேனேஜரின் செயல்பாடு சரியில்லாததால், அவரை நீக்கி விடலாமா என்று நிர்வாகம் யோசித்து, சோவிடம் ஆலோசனை கேட்டது. அவரும் மேனேஜர் வேலைக்கான சட்டத்திட்டப்படி, ஒரு மாத நோட்டீஸ் அல்லது சம்பளத்துடன் வேலையை விட்டு தூக்கி விடலாம் என்று ஐடியா கொடுத்தார். நிர்வாகமும் அவரை பணி நீக்கம் செய்தது.

பணி நீக்கம் செய்யப்பட்டவர், இதை சும்மா விடவில்லை. கோர்ட்டுக்கு சென்றார். தான் மேனேஜராக வேலை பார்க்கவில்லை என்றும், குமாஸ்தாவாக வேலை செய்த தன்னை இப்படி விசாரணையில்லாமல் வேலையை விட்டு நீக்கியது சட்டப்படி செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார். பணி நீக்கம் செய்தவர்கள் சோவிடம், “ஏன்ப்பா, நீ அப்படி சொன்னியே? இவரு இப்படி சொல்றாரே?” என்று கேட்டார்கள்.

சோவும் அவர் மேனேஜர்தான் என்று காட்டுவதற்கு, ஆதாரங்களை அலுவலகத்தில் தேடினார். அவருடைய நேரத்திற்கு, அவர் மேலாளர் என்று குறிப்பிட்டு எந்த காகிதமும் சிக்கவில்லை. இதையெல்லாம் கவனிக்காமலே, நீக்கலாம் என்று சொல்லியாச்சே? இப்ப, ஆதாரமில்லாமல் எப்படி நிருபிப்பது?

பத்திரிக்கையில் ஒரு விளம்பரம் கொடுத்தார். எந்த பத்திரிக்கையாக இருக்கும்? ஹிந்துவாகத்தான் இருக்கும். இப்படி, இந்திந்ந மாதிரி தகுதிகளோடு, எங்களுடைய டேக்ரான் மேக்ரான் கம்பெனிக்கு ஆள் தேவை என்று வந்தது விளம்பரம். குறிப்பிட்டு இருந்தது எல்லாம், அந்த வழக்கு தொடர்ந்தவர் கொண்டிருந்த தகுதிகள். முக்கியமாக, ’மேனேஜர்’.

நம்மாளும், நமக்கே தைச்ச சட்டை மாதிரி ஒரு வேலை வந்திருக்கே என்று நினைத்துக்கொண்டு, அதில் சொல்லியிருந்த தபால் பெட்டி எண்ணிற்கு அவருடைய ’கரிக்குலம் விட்டே’யே தட்டி விட்டார். அதில், தான் டிடிகே கம்பெனியில் மேனேஜராக சிறப்பாக செயல்பட்டு வந்ததாக குறிப்பிட்டு விண்ணப்பித்திருந்தார். அது அவருடைய விண்ணப்பம் அல்ல. Own ஆப்பம்.

விசாரணை நாளன்று, கோர்ட்டில் சோ அந்த நபரை குறுக்கு விசாரணை செய்யும்போது என்ன கேட்டும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. சரி என்று முடிவில் அவருடைய விண்ணப்பத்தை காட்டினார். கூண்டில் நின்றவரால், வேறு என்ன செய்ய முடியும்? அது தான் கைப்பட வாக்குமூலமே எழுதியாச்சே!

’அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ புத்தகத்திலிருந்து

---

இது, இந்த பதிவின் ரெபரென்ஸ்க்காக

.

Tuesday, September 8, 2009

நாட்டு சரக்கு - ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் பெருமாளா?

போன வாரம் ஆந்திரா முதல்வர் இறந்த ஹெலிகாப்டர் விபத்திற்கான விசாரணையை சிபிஐ நடத்த போகிறது. விசாரணை முடிவில் என்ன சொல்ல போகிறார்களோ? ஆனால், ஆந்திராவில் சிலர் காரணத்தைக் இப்போதே கண்டுப்பிடித்துவிட்டார்கள். ஹெலிகாப்டர் பழுதோ, மோசமான வானிலையோ இல்லையாம் அது. திருப்பதி வெங்கடாஜலபதி தானாம்.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, மதம் மாறிய கிருஸ்துவக் குடும்பத்தை சார்ந்தவர். இவர் பதவியேற்றதில் இருந்து கிருஸ்துவ அமைப்புகளுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. திருப்பதி தேவஸ்தான விவகாரங்களிலும் தலையீடு இருந்ததாகவும், தேவஸ்தான போர்டை பலவீனமாக்கி, பெருமாளை சுற்றி இருக்கிற ஏழு மலைகளில் சிலவற்றில் தேவாலயம் கட்ட முயற்சி செய்ததாகவும் செய்திகள் வந்தது.

தற்போது, அவர் சென்ற ஹெலிகாப்டர் மலையில் முட்டி விபத்துக்குள்ளானத்திற்கு இதுதான் காரணம் என்று கடவுள் பக்தி அதிகம் உள்ள ஆந்திராவில் கிளப்பி விட்டு இருக்கிறார்கள்.

இது கோடி ராமகிருஷ்ணா கதை.

---

அடுத்தது ராம் கோபால் வர்மா படம்.

ராஜசேகர ரெட்டியின் தந்தை, ஒரு ரவுடி கும்பலால் கொலை செய்யப்பட்டாராம். இவர் முதல்வரானதும், அவர்களை பழி வாங்கிவிட்டாராம்.

உண்மையா,கதையா? எனக்கு தெரியாது. ஆனா, இது தான் ராம் கோபால்வர்மாவின் அடுத்த படக்கதையாம். முன்னாடியே சொன்னாரு. என்ன ஆச்சோ?

யாருய்யா சொன்னது? தெலுங்கு படத்துல யதார்த்தம் இல்லன்னு.

---

ராஜசேகர ரெட்டி இறந்த அன்று அதிர்ச்சியில் இறந்தவர்கள் என்று வந்த எண்ணிக்கை இன்னமும் அதிர்ச்சியளித்தது. நல்லவேளை, இந்த அதிர்ச்சியில் யாரும் இறக்கவில்லை.

சாவை கண்டுக்கூட பயமில்லை. யாராவது அரசியல்வாதியோ, நடிகரோ இறந்த நாளில் செத்து, அவர்களின் தொண்டராகவோ, ரசிகராகவோ ஆக்கப்பட்டு விடக் கூடாது என்று தான் பயமாக உள்ளது.

---



சாவு என்ற சொல்லே செண்டிமெண்ட்டா ஒரு நெகடிவ்வான விஷயம். ஆனா, பேயை இவ்வளவு நாளா பிராண்ட் அம்பாஸிடரா வச்சிருந்தது ஒனிடா. அதாங்க, ஒரு கொம்பு வச்ச மொட்டை வந்து “கொண்டவரின் பெருமை... பக்கத்து வீட்டுக்காரரின் பொறாமை...”ன்னு சொல்லுமே!

அந்த காலத்துல டிவி வச்சிருக்கிறது பொறாமைக்கொள்ளும் அளவுக்கு பெரிய விஷயம். இன்னிக்கு அப்படி இல்லையே? ப்ரியா கிடைக்குதே!

அதனால அந்த மொட்டை பேயை ஓடவிட்டுட்டு, வேற எதையாவது கொண்டு வர போறாங்களாம்? வேற என்ன கொண்டு வருவாங்க? ஏதாவது ஒரு கான், இல்ல கபூர் வருவாங்க. அதுக்கு பேயே பரவாயில்லைன்னு சொல்றீங்களா?

----

கடந்த இருபத்தைந்து வருடங்களில், இதுவரை இருபத்தைந்து மில்லியன் மக்கள் உலகில் எய்ட்ஸால் இறந்திருக்கிறார்கள். இப்போது, எய்ட்ஸ் மருந்து கண்டுப்பிடிப்பில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எய்ட்ஸ் கிருமிக்கு எதிராய் போரிட ரெண்டு ஆண்டி-பாடிஸ் கண்டுபிடிச்சிருக்காங்களாம். ஆண்டி-பாடிஸ்’ன்னா, நோய்களை எதிர்க்க நமது உடலில் உருவாகும் ஒரு வகையான ப்ரோட்டீன். எய்ட்ஸ்க்கு எதிரான ஆண்டி-பாடிஸ், ஆப்பிரிக்காவுல இருக்குற ஒரு சமூகத்தை சேர்ந்த மக்களின் உடலில் காணப்படுகின்றதாம். அவர்களுக்கு எய்ட்ஸ் தாக்கினாலும், எந்த அறிகுறியும் இல்லையாம். உடல் நலக் குறையும் இல்லையாம்.

அதனால, கூடிய சீக்கிரம் எய்ட்ஸ்க்கு மருந்து வருது. மேட் இன் ஆப்பிரிக்கா.

---

நாட்டில் ஸ்வைன் ப்ளுவால் இறந்தவர்கள் பெங்களூரில் தான்... இன்னொரு மரண செய்தியா? வேண்டாம். அதுக்கு பதில் இன்னொரு பரிதாப நியூஸ்.

பெங்களூர்ல இருக்குற சிஎம்எஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர், நாகராஜ். இந்த நிறுவனம் தான், ஏடிஎம்களுக்கு பாதுகாப்புடன் பணம் பட்டுவாடா செய்யும் நிறுவனம். இவர் போன மாசம், கிட்டத்தட்ட 26 லட்ச ரூபாய் பணம் எடுத்துக்கிட்டு, ஏடிஎம் மெஷின்களை நிரப்ப சென்றிருக்கிறார்.

இப்படி நம்ம கையில, தற்காலிகமாத்தான் பணம் புரளுதே! நிரந்தரமா இருந்தா எப்படி இருக்கும்?’ன்னு நினைச்சுக்கிட்டு, 15 லட்சத்தை மட்டும் மெஷினுக்குள்ள இறக்கிட்டு, மிச்சத்தை இவரு இறக்கிக்கிட்டாரு.

கூட வந்தவங்களை, ஆபிஸ் போக சொல்லிட்டு இவரு அவரோட சொந்த ஊருக்கு எஸ்ஸாயிட்டாரு. அப்புறம்தான் ஆபிஸ்ல தெரிஞ்சிருக்கு இவரோட திருவிளையாடல். போலீஸ் வந்து விசாரிச்சிட்டு, அவரோட ஊருக்கு போயி பதினைஞ்சு நாள்ல அவரை பிடிச்சிட்டாங்க. அப்பவும், அவரு கையில பதினொரு லட்சம் வைச்சிருக்காரு. 15 நாள்ல அவரு செலவழிச்ச பணம், 30 ஆயிரம் தான். அதுவும், 5000க்கு ஒரு மொபைலும், மிச்ச பணத்தை ஓட்டல்ல தங்கியும், சாப்பிட்டும் செலவிட்டு இருக்காரு.

பாருங்க, எவ்ளோ வெகுளியா இருக்காரு? நாகராஜ், நீங்க நல்லவரா? கெட்டவரா?

---

மனிதர்களுக்கு வர வர சோம்பேறித்தனம் அதிகமாகிக்கிட்டே வருது. விஞ்ஞானம் இதுக்கு ரொம்ப உதவிக்கிட்டு இருக்குது.

நடக்குறதுக்கு தேவையே இல்லாம, பக்கத்துல இருந்தாலும் சரி.. தூரத்துல இருந்தாலும் சரி.. பைக், இல்ல கார் எடுத்துட்டு போறோம். சரி. பில்டிங் உள்ளயாவது நடக்குறோமான்னு பார்த்தா, அதுவும் இல்ல. லிப்ட்ல போறோம். இல்ல, எஸ்கலேட்டர்ல போறோம். சரி, ஹோட்டல்ல சாப்டுட்டு கை கழுவவாவது நடந்து வாஷ்பேஷின் போறோமா? இல்ல, அதுக்கு டேபிள்லயே பிங்கர் பவுல் கொண்டு வந்து வச்சிடுறாங்க.

வீட்டுக்கு வந்து டிவி போட்டாக்கூட வசதிக்கேற்ப நூத்துக்கணக்குல சேனல்கள். அதையும் மாத்த கையில் ரிமோட். இனி ரிமோட்ட அழுத்தவும், நாம சோம்பல் பட தேவையில்லை. நாம நினைச்சாலே போதும், சேனல் மாறிடும்.

இங்கிலாந்து விஞ்ஞானி ஜான் ஸ்ப்ராட்லி, இப்படி ஒரு டெலிபதி மைக்ரோ சிப்ப கண்டுப்பிடிச்சிருக்காரு. மூளையில் எண்ணங்களால் உதிக்கும் சிக்னல்களை இந்த சிப், எலக்ட்ரானிக் சிக்னலாக மாற்றி, வயர்லெஸ் சிக்னலாக அனுப்புமாம். அதற்கேற்றப்படி, டிவியோ, கம்யூட்டரோ எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியுமாம்.

இது உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவ கண்டுப்பிடித்ததாக அவர் கூறியுள்ளார். பார்ப்போம், யாருக்கு உதவுகிறது என்று?

.

Saturday, September 5, 2009

நினைத்தாலே இனிக்கும்

இந்த படத்தின் கதையையோ, விமர்சனத்தையோ படித்துவிட்டு படத்தை பார்க்க முடியாது. நன்றாக இருக்காது. (எல்லா படங்களும் அப்படித்தானோ?) முதல் பாதியில் அவ்வளவு ஈர்ப்பில்லை. மலையாள படங்களுக்கே உரிய ட்விஸ்டுகள், இடைவேளையில் இருந்து ஆரம்பிக்கிறது. முதல் பாதியில் விட்ட விறுவிறுப்பை, இரண்டாம் பாதியில் ஒரளவுக்கு பிடித்திருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரிஜினல் படத்தின் பெயர் போடுவதை, இதில்தான் பார்ப்பதாக ஞாபகம்.

யோசித்து பார்த்தால், மலையாள கதாசிரியர்களின் கதைகளில் சில ஒற்றுமைகள் உள்ளது. இதேப் போல் நாட் உள்ள மலையாள திரைப்படங்கள், ஏற்கனவே தமிழிலும் ரீமேக் ஆகியுள்ளது. என்னன்னு சொல்ல மாட்டேனே!

ப்ரித்விராஜ், ப்ரியாமணி ஸ்டுடண்ட்ஸா? என்ன ஒரு தைரியம் இந்த இயக்குனருக்கு?

ப்ரித்வி படம் முழுக்க முடியை முன்னாடி இழுத்து விட்டு கொண்டு வருகிறார். நெற்றியை சுருக்குகிறாராம். ஒரு சண்டைக்காட்சியில் கூட, தண்ணீரில் விழுந்தும் ப்ரித்வியின் முடி நனையவில்லை. இயக்குனர் ரொம்ப கவனமாக இருந்திருக்கிறார். ப்ரியாமணி லெக்சராக நடிக்க வேண்டியவர்.ஸ்டுடண்டாக ‘நடித்திருக்கிறார்’. குரலும் மேனரிசமும் டப்பாக இருக்கிறது.

சக்தியின் குரல் நன்றாக உள்ளது. அவரது இயல்பிற்கு ஏற்ற கேரக்டர் என்பதால் பொருத்தமாக இருந்தது. ‘பீல் குட்’ உணர்வை கொடுக்கிறார். கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல், இம்மாதிரி கதையில் கதையின் நாயகர்களில் ஒருவராக நடிக்க ஒத்துக்கொண்டதற்கு பாராட்டுக்கள்.

பண்பான தந்தையாக பாக்யராஜ். அவருடைய வழக்கமான நடிப்பு. அவர் கடைசியில் கையை மேலே எழுப்பி பேசுவதை பார்த்து, என் முன்னால் இருந்தவரும் அதேப்போல் கையை ஆட்டி மோனோ ஆக்டிங் செய்து கொண்டிருந்தார். பாக்யராஜ் அழுகிறாரா சிரிக்கிறாரா என்று இன்னொருவருக்கு குழப்பம் வந்தது.

சக்தியின் காதலியாக வருபவர், இறுதியில் காரில் தலையை வெளியே நீட்டி, கையசைத்து செல்வது சூப்பர்ப்.

காமெடிக்கு யாரும் பெரிதாய் கைக்கொடுக்கவில்லை. லொள்ளு சபா ஜீவாவும் கூட.



பாடல்களை பற்றி ஏற்கனவே சொல்லியாச்சு. பாடலுக்காகவே நிறைய பேர் வந்திருப்பதை தியேட்டரில் காண முடிந்தது. படம் முழுக்கவே அழகாக படம் பிடித்திருக்கிறார்கள். பாடல்கள் இன்னும் அழகாக.

'பியா பியா' பாடலின் இடையே கிராமத்து மக்கள் வரும் சிறு சிறு காட்சிகள் நன்றாக இருந்தது. 'அழகாய் பூக்குதே' பாடலில் ஒளிப்பதிவும், லொக்கேஷனும், கலர் டோனும் வேறு உலகிற்கு அழைத்து செல்கிறது. பாடலுக்கு விசில் பறந்தது. பாடல்களை அழகாய் படம் பிடிக்க, இன்னுமொரு இயக்குனர் கிடைத்திருக்கிறார்.



எந்த கல்லூரி அது? ஒளிப்பதிவோடு வேலையை முடிக்காமல், பிற சேர்க்கையாக வண்ணங்களால் படத்தை இன்னமும் மெருக்கேற்றியிருக்கிறார்கள்.

நினைத்தாலே இனிக்கும் - வண்ணமயமான நினைவுகள்.

படங்களில் இருப்பவர்கள் - பாராட்டிற்குரிய படத்தின் தொழில்நுட்ப ஹீரோக்கள் - இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும், ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியனும்.

.

Friday, September 4, 2009

இந்திய அரசியலில் ஆய்த எழுத்து

ஆந்திராவில் கடந்த இரு நாட்களில் நடந்த சம்பவம் சினிமாவில் வந்திருந்தால், நம்பாமல் ‘லாஜிக்கே இல்லை’ என்று சொல்லியிருப்போம். ஆனால், நிஜத்திலேயே அப்படி நடந்துள்ளது. ஹெலிகாப்டரில் சென்ற ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜ சேகர ரெட்டியை காணாமல் தேடி, 24 மணி நேரங்களுக்கு பிறகு உடலை கண்டுபிடித்திருக்கிறார். மக்களுக்கு நல்ல விஷயங்கள் நிறைய செய்துள்ள முதல்வருக்கு நேர்ந்துள்ள கதி, வருந்த வைக்கிறது.

முதல்வருக்கே இந்த கதியா என்று சிலர் கேட்கிறார்கள். சாதாரண மக்களுக்கு பஸ்ஸே கிடைப்பதில்லை என்பதால், இப்படியெல்லாம் நேர போவதில்லை. மக்களுக்கு, இந்தியாவின் தேடுதல் வேட்டையின் திறன், இந்நிகழ்வின் மூலம் தெரியவந்துள்ளது. உலகத்திற்கும் சேர்த்து.

ஆங்கில சேனல்கள் இரு நாட்கள் தொடர்ச்சியாக இதை கவர் செய்தார்கள். இன்னும் வரும் நாட்களிலும் விஐபிகளின் வாகன சோதனை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பி இதை தொடர்வார்கள். என்.டி.டி.வியில் காணாமல் போய் எவ்வளவு நேரம் ஆகியுள்ளது என்று ஒரு ஓடும் கடிகாரத்தை திரையின் ஓரத்தில் வைத்திருந்தார்கள். எனக்கு தெரிந்து நிறைய ஆந்திர மக்கள், இரவு முழுவதும் கண் முழித்து தொலைக்காட்சியைப் பார்த்து கொண்டிருந்தார்கள்.

இவர்கள் கட்சி பாகுபாடு இல்லாமல், தங்கள் மாநில முதல்வர் மேல் அக்கறை கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம், இணையங்களில், பின்னூட்டங்களில், சிலர் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல், அரசியல்வாதி என்ற ஒரே காரணத்தில் மோசமான கமெண்ட்களை வீசிக்கொண்டிருந்தார்கள்.

இன்று தமிழ்நாடு, கர்நாடக போன்ற பிற மாநிலங்களிலும் அரசு விடுமுறை விட்டிருக்கிறார்கள். தமிழ் சேனல்களில், இதற்கும் சிறப்பு நிகழ்ச்சிக்களை போட்டு விட கூடாதென்று வேண்டி கொள்கிறேன்.

---

இனி தலைப்பு மேட்டர்...

அரசியலுக்கு மாணவர்கள் வர வேண்டும். வந்தாத்தான் நாடு முன்னேறும். அப்படின்னு எப்பவும் ஒரு பேச்சு இருக்கும். ஆய்த எழுத்து படத்தில் வருவது போல், சட்டசபை முழுக்க இளைஞர்கள் இருந்தா, எப்படி இருக்கும்’ங்கிறது கனவு மட்டும் இல்லை. நிஜத்தில் அப்படி நடந்திருக்கிறது. அதுவும், இந்தியாவில்.

---

பங்களாதேஷ் உருவானபோது நடந்த போரில், கிழக்கு பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு, அஸ்ஸாமுக்கு வந்தனர். வந்தவர்கள், போர் முடிந்தபின்பும், சொந்த ஊர் திரும்பாமல் இங்கேயே தங்கி விட, பின்னால் இவர்களால் கலாச்சார ரீதியாக, சமூக ரீதியாக, முக்கியமாக பொருளாதார ரீதியாக, வேலை வாய்ப்பு விஷயத்தில் தாங்கள் பாதிக்கப்படுவதாக, அஸ்ஸாமில் ஒரு கடுப்பு நிலவி வந்தது.

அகதிகளை அவர்கள் ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று சொல்லி அஸ்ஸாம் மாநிலம் முழுக்க போராட்டம் வெடித்தது. அதில், தீவிரமாக இருந்தவர்கள் அம்மாநில மாணவர்கள். அமைதியாக நடந்த போராட்டம் என்றாலும், கண்ணில் பட்ட வங்க மக்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் உண்டு. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள், பள்ளி, கல்லூரிகள் மூடி கிடந்தன.




நிலைமை கட்டுக்கடங்காமல் போக, மாநிலத்தை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் வந்திறங்கியது.

1983 ஆம் ஆண்டு. சட்டசபைக்கு தேர்தல் நடத்த வேண்டும். ”அகதிகளை அனுப்பி விட்டு, தேர்தலை நடத்துங்கள்” என்றது அஸ்ஸாம் மாணவர் அமைப்பு. பாகிஸ்தானை பிரித்து வங்காளம் உருவாக காரணமாக இருந்த இந்திரா காந்தி, இந்த கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. விடாப்பிடியாக தேர்தலை நடத்த முயன்றார்.

”எவனாவது நின்னீங்க” என்ற மாணவர்களது எச்சரிக்கைக்கு பயந்து, காங்கிரஸைத் தவிர எந்த கட்சியும் தேர்தலில் நிற்கவில்லை. ஒரு சில இடங்களில், கம்யூனிஸ்ட் கட்சிகள் நின்றன. மற்ற இடத்தில், காங்கிரஸை எதிர்த்து நின்றது சுயேட்சைகளே.

தேர்தலில் 32 சதவித ஓட்டுக்கள்தான் பதிவாகியிருந்தது. பல இடங்களில், சுயேட்சை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. தரம்பூர் என்ற தொகுதியில் மொத்தம் பதிவான ஓட்டுகள் - 267. 266 ஓட்டுகள் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் அங்கு வெற்றி பெற்றார். அந்த இன்னொரு ஓட்டை பெற்றவர், விஜயகாந்த் போல் இரண்டாம் இடத்தை சுலபமாக பெற்றார்.

விழுந்த வரைக்கும் பெற்ற ஓட்டுக்களைப் வைத்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. மாணவர்களது போராட்டம் இன்னும் தீவிரமானது.

அதற்கு பிறகு, இந்திரா சுட்டு கொல்லப்பட, பிரதமரான ராஜீவ், அஸ்ஸாம் விஷயத்தில் கொஞ்சம் இறங்கி வந்தார். 10 லட்சம் ஓட்டுரிமை, 10 ஆண்டுகளுக்கு பறிக்கப்பட்டது. ஆட்சியை முடித்துக்கொண்டு, மீண்டும் தேர்தல் நடத்த பிரதமர் முன்வந்தார்.

85இல் தேர்தல் நடத்தப்பட்டது. மாணவர் இயக்கம், அஸாம் கண பரிஷத் ஆக உருவெடுத்து, தேர்தலில் குதித்தது. 126 தொகுதிகளில், 67 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. கட்சியின் தலைவராக இருந்த பிரபுல்ல குமார் மொகந்தா, முதல்வராக பதவியேற்றார். அப்போது அவருக்கு வயது 31. நாட்டின் இளம் முதல்வர் என்ற பெருமையை பெற்றார். மற்ற சட்டசபை உறுப்பினர்கள், அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். திருமணம் ஆகாதவர்கள். முதல்வர் மட்டும் தன்னுடன் பயின்ற மாணவியை திருமணம் செய்திருந்தார். மாணவர் புரட்சி, இப்படி ஆட்சி வரை வந்தது - இந்தியாவின் முக்கிய நிகழ்வாகும்.

அதற்காக ஆட்சியில் பாலும் தேனும் ஓடியதென்று சொல்ல முடியாது. அதற்கடுத்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடுங்கி கொள்ள, பின்னர் நடந்த தேர்தலில் அஸ்ஸாம் கண பரிஷத்தே மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இம்முறை முதல்வர் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள். ஊழல், ரகசிய கொலைகள், இன்னொரு பெண்ணுடன் ரகசிய திருமணம் என்று பல விஷயங்களில் மாட்டி, கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அப்புறம் என்ன? இன்னொரு கட்சியின் பிறப்பு, வேறு கூட்டணி, கடைசியில் தாய் கட்சியுடன் மீண்டும் இணைப்பு.

அரசியலில்ல இதெல்லாம் சகஜமப்பா!

நீதி - எல்லோருக்கும் தெரிந்ததுதான். ‘அரசியல் ஒரு சாக்கடை. யார் இறங்கினாலும், சட்டையில இருந்து கோவணம் வரைக்கும் கலிஜ்ஜாகும்.’

.

Thursday, September 3, 2009

கதாபாத்திரத்திற்குள் ஒளிந்த இயக்குனர்கள்

சினிமாவுக்கான கதையும் கதாபாத்திரங்களும் நிஜ வாழ்வில் இருந்து எடுக்கப்படுபவை தான். இயக்குனர்கள், தாங்கள் பார்ப்பதிலிருந்து மட்டுமில்லாமல் தங்கள் வாழ்க்கையில் இருந்தும் படத்திற்காக முழுதாகவோ, அல்லது தேவைக்கு ஏற்பவோ கை வைப்பார்கள்.

இப்படி செய்யும்போது, கதாபாத்திரத்திற்கான நடிகர் தேர்வும், ஒப்பனையும் தெரிந்தோ தெரியாமலோ இயக்குனர்களை போலவே வந்துவிடும்.

சமீபகாலமாக அப்படி வந்த சில கதாபாத்திரங்களின் வடிவமைப்பு பற்றிய பதிவு இது.

ஆனந்தம் - லிங்குசாமி



திருப்பதி ப்ரதர்ஸ் கதை, தன் சொந்த குடும்பக்கதையே எனறு அதன் இயக்குனர் லிங்குசாமியே சொல்லியிருக்கிறார். இதில் ஸ்யாம் கணேஷையும் லிங்குசாமியையும் பாருங்க. ஒரே மாதிரி இல்ல?

காதல் கொண்டேன் - செல்வராகவன்



செல்வராகவன் - தேனியில் பிறந்து வளர்ந்தவர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். 'காதல் கொண்டேன்' படத்தில் தனுஷ் கல்லூரியில் அனுபவிக்கும் கொடுமைகள், கிராமத்தில் படித்து, நகரத்தில் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் சந்திப்பவை. இவர் 7ஜி ரெயின்போ காலனியும், தன் சொந்த கதைதான் என்று சொல்லியிருக்கிறார்.

திமிரு - தருண் கோபி



கதையை இவர் கதை என்று சொல்ல முடியாது. இதற்கு முன் பல படங்களில் இதே போல் கதை, இதே போல் திரைக்கதையுடன் வந்துள்ளது. மதுரை பிண்ணனி, ஸ்ரேயா ரெட்டியின் கேரக்டர் போன்றவற்றால் வெற்றிப்பெற்ற படம். ஒருமுறை சன் டிவி பேட்டியில், விஷாலின் மேக்கப் தன்னைப்போல் வைத்தது தான் என்று சொல்லியிருக்கிறார்.

தமிழ் எம்.ஏ. - ராம்



இதிலும் இயக்குனர் தான் சந்தித்தவற்றைதான், படம் பிடித்துள்ளார். ஜீவா எப்படி இருக்கிறார்?

வாரணம் ஆயிரம் - கௌதம் மேனன்



கௌதம், தன் தந்தை இறந்த பாதிப்பில் எடுத்த படம். இவரும் இன்ஜினியரிங் படித்தவர். படத்தில் இரண்டாம் பாதியில் வரும் சூர்யாவின் ஹேர் கட்டிங், இவரைத்தான் எனக்கு நினைவுப்படுத்தியது.

என் ஞாபகத்தில் இருப்பவை இவை. வேறு உருவ ஒற்றுமைகள் படங்களில் வந்திருந்தால், பின்னூட்டத்தில் சொல்லவும். பதிவின் இரண்டாம் பாகம் வெளியிடுகிறேன். :-)

இதுவரை, இயக்குனர்கள் தன்னை போல் உருவாக்கிய கதாபாத்திரங்களை பார்த்தோம். இனி வருபவர் வித்தியாசமானவர். கதாபாத்திரத்திற்குக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டவர். எங்கே மாற்றிக்கொண்டார்? ஹீரோவால், வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டார்.



இயக்குனர்- முருகதாஸ்
படம் - கஜினி (ஹிந்தி)
ஹீரோ - அமீர்கான்

.

Wednesday, September 2, 2009

குபீர்’ன்னு சிரிக்கலாம், வாங்க



இன்னைக்கு மெயில்ல வந்த சில ஜோக்குகளைப் படிச்சதும், குபீர்’ன்னு சிரிப்பு வந்துச்சு. உங்களுக்கு வருதா, பாருங்க.

---

டேய் என் ஜாதகப்படி, எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு?

*

என்னங்க, ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகுறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார். அதான்.

*

நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்?

*

டாக்டர்! என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா...
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குறா!!!

*

சார்,
டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே? ஏன் மண்டைய போட மாட்டேங்கிறீங்க?...

*

நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும், எடுத்திட்டு போயிடறாங்க.
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்.

*

ஒரு காப்பி எவ்வளவு சார்?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!

*

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்! அது எப்படி பெயில் ஆகும்?

*

இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.
நீங்க கேட்டீங்களா?
இல்லை. அவங்களே சொன்னங்க...

---

உங்களுக்கு குபீர் வந்ததா? எத்தினி முறை?

---

கேரள சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் நல்வாழ்த்துக்கள்...

அப்புறம் இவுங்களுக்கும்...



.

Tuesday, September 1, 2009

நாட்டு சரக்கு - சினிமா ரசனை



ஜெயா டிவியில் ‘சினிமா டாக்ஸ்’ அப்படின்னு ஒரு நிகழ்ச்சியில சேரன் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஒரு புள்ளிவிவரம் சொன்னாரு. சினிமா ஒரு பொழுதுபோக்கு மீடியா மட்டுமே என்பவர்கள் 70% என்றும், இல்லை, அது ஒரு சமூக கருவி என்பது மீதி 30 சதவிகித்தினரின் எண்ணம் என்றும் கூறினார். எப்படி, எங்கே, இந்த சர்வே நடத்தினார் என்று தெரியவில்லை.

இவர் அந்த 30%க்காக படம் எடுக்கிறாராம். ஆட்டோகிராப், அழகி போன்ற படங்களெல்லாம் இந்த 30% த்தால் தான் ஓடியதாம். மற்றவர்கள் மாற வேண்டுமாம். கிட்டத்தட்ட, திருந்துங்க, மேலே ஏறி வாங்க என்ற ரேஞ்சில் பேசிக் கொண்டிருந்தார். (பள்ளிக்கூடத்தில் படம் பார்ப்பது எப்படி என்று க்ளாஸ் வைக்கலாமா? என்றெல்லாம் கேள்வி வந்தது)

எந்த படம் எடுத்தாலும், பார்க்கிற மாதிரி எடுத்தால் தான் பார்ப்பார்கள். இன்னாருக்கு இதுதான் பிடிக்கும் என்றும் சொல்ல முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ரசனை மாறுபடும். ஒவ்வொரு நேரத்திற்கும் மாறுபடும். எந்த படம், பெரும்பாலோனருக்கு பிடித்திருக்கிறதோ, அது வெற்றி பெறுகிறது.

ஒரு டவுட். எனக்கு அழகியும் பிடிக்கிறது. கில்லியும் பிடிக்கிறது. நான் எந்த கேட்டகிரி?

---

சக்கரக்கட்டி, கந்தசாமிக்கு முன் வந்த தாணுவின் படங்களைப் பற்றி சன் டிவியில் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். காட்சிகளையும் போடமாட்டார்கள். டாப் டென் லிஸ்ட்டிலும் இருக்காது.

அப்ப, ஏன்னு எனக்கு புரியலை.

இப்ப, கந்தசாமிக்கு சன் டிவியில் பலத்த ஆதரவு. படத்தின் டைட்டிலிலே, கலாநிதிமாறனுக்கு நன்றி சொல்கிறார்கள்.

இப்பவும், ஏன்னு எனக்கு புரியலை.

---

அடுத்தது ஜெயா டிவி.

ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியில், சுஹாசினி ’கந்தசாமி’ படத்தை விமர்சனம் செய்தார். கொஞ்சம் நேரம் பார்த்தேன். பார்த்தவரைக்கும் படத்தை பற்றி நல்லதாகவே சொன்னார். நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம் என்றார். விக்ரம், ஸ்ரேயா, பிரபு, சுசி. கணேசன் என்று எல்லோரையும் புகழ்ந்தார். சிவாஜியில் ஸ்ரேயாவை கொஞ்சம் காரமாக விமர்சித்து இருப்பார் போல. இதில் அதை குறிப்பிட்டே, அவரை புகழ்ந்தார்.

சுசி கணேசன், ஷங்கரை மாதிரி இல்லாமல் அவருக்கு மேல் என்று சொல்லும்படி படத்தை எடுத்து இருக்கிறாராம். ஆனால், ரசிகர்களை சஸ்பென்ஸில் வைக்கும் ஷங்கரின் திரைக்கதை போல் இல்லையாம். பின் எந்த விஷயத்தில், ஷங்கரை மிஞ்சினாரோ?

அவரிடம் பேசும்போது, கணேஷ் என்றே அவரை அழைத்தார். கவனிக்க, சுசி கணேசன் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

---

சுசி கணேசன் ரொம்ப சந்தோஷமாக இருந்தார். ஒரு தினசரி பத்திரிக்கையை கொண்டு வந்திருந்தார். அதில், ஸ்விஸ் பேங்க்கில் இருந்து இந்திய பணத்தை பற்றிய தகவலை தர முடியாது என்று சொல்லி விட்டார்கள் என்று செய்தி வந்திருந்தது.

தான் இந்த ஸ்கிரிப்டை மூன்று வருடம் முன்பே எழுதிவிட்டதாகவும், தற்போது இது பற்றிய விழிப்புணர்வு வந்திருப்பதாகவும், ஒரு படைப்பாளியாக தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

கடந்த தேர்தலில், அத்வானி வெளிநாட்டில் இருக்கும் இந்திய பணத்தை கொண்டு வருவதை பற்றி வாக்குறுதி கொடுத்திருந்தார். ஒருவேளை, அவர் படத்தோட ஷுட்டிங் பார்த்திருப்பாரோ?

---

சிலர், தங்களுக்கு பிடித்தவாறு படம் எடுப்பார்கள். சிலர், ரசிகர்களுக்கு பிடித்தவாறு படம் எடுப்பார்கள்.

இப்ப, ட்ரெண்ட் - சன் டிவிக்கு பிடித்தவாறு படம் எடுப்பது. விஜயின் வேட்டைக்காரனும் சன் டிவியின் வெளியீடு.

சுதந்திர தினத்தன்று, சன் டிவியில் வந்த நகுலின் பேட்டியில், யாரெல்லாம் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று கேள்விக்கு, அவர் ரசிகர்களுடன் சேர்த்து சன் பிக்சர்ஸ் என்று சொன்னது பரிதாபமாக இருந்தது.

---

இந்த வாரம் ’நினைத்தாலே இனிக்கும்’ வெளிவருகிறது. பட பாடல்களை பற்றி சொன்னபோது, ஒரு குற்றம் செய்துவிட்டேன். அழகாய் பூக்குதே பாடலை பற்றி சொல்லிவிட்டு, பாடிய பிரசன்னா, ஜானகி ஐயர் (பெயர் குழப்பம் வரும் என்பதால், முழுதாய் சொல்ல வேண்டி இருக்கிறது) பற்றி சொல்லாமல் விட்டு விட்டேன். குறிப்பாய், ஜானகி உணர்வுகளை கொட்டி பாடியிருக்கிறார்.

”சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன்
உன்னாலே.....”

இந்த இடத்தை அவர் குரலில் கேட்டு பாருங்கள்.

அம்மணி, பாதி ஜோலியை முடிச்சிட்டாங்க...

.